Followers

Thursday, June 30, 2011

யார் இந்த பிரவீன் சுவாமி?





யார் இந்த பிரவீன் சுவாமி?

தரமான செய்திகளை தருபவர் என்று பலராலும் நம்பப்படுபவர். தி ஹிந்துவிலும், ஃப்ரண்ட்லைனிலும் பல காலமாக எழுதி வருபவர். சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்ற பத்திரிக்கையாளர். சாதனையாளர் விருதுகள் பல பெற்றவர்.

இந்தியாவில் எங்கு குண்டு வெடிப்பு நிகழ்ந்தாலும் ஹிந்துவிலும், ஃபிரண்ட் லைனிலும் தவறாமல் இவரது கட்டுரை இடம்பெறும். சொல்லி வைத்தாற்போல் நடந்த அத்தனை குண்டு வெடிப்புகளுக்கும் ஏதாவது ஒரு காரணததை இவராகவே கற்பனை செய்து கொண்டு கண் காது மூக்கு எல்லாம் வைத்து படிப்பதற்கு சுவாரஸ்யமாக செய்திகளை தருவதில் கில்லாடி.

1.)2007 பிப்ரவரி 20ல் சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயிலில் இரண்டு கோச்சுகளில் குண்டு வெடித்து 66 முஸ்லிம்கள் இறந்தனர். புலனய்வின் அறிக்கை வருவதற்கு முன் இவர் ஃப்ரண்ட்லைனில் எழுதிய கட்டுரையின் தலைப்பு 'அமைதிக்கு எதிரான சதி'. 'இந்தியா பாகிஸ்தான் நட்புறவை விரும்பாத பாகிஸ்தானிய இஸ்லாமியவாதிகள்தான் இந்த குண்டு வெடிப்பை நடத்தியுள்ளனர்' என்பது அவர் எழுதிய கட்டுரையின் சாராம்சம். இதற்கு ஆதாரமாக இவராக சுயமாக சில சம்பவங்களை முடிச்சுப் போட்டு தனது கைவரிசையை காட்டியிருந்தார்.

முடிவில் என்ன ஆயிற்று? அந்த குண்டு வெடிப்பை நிகழ்த்தியது நாங்கள்தான் என்று சுவாமி அசிமானந்தா ஆசி வழங்கியுள்ளார்.

2.) 2007 மே 19ல் மக்கா மஸ்ஜிதில் குண்டு வெடிக்கின்றது. வெள்ளிக் கிழமை தொழுகைக்கு வந்த 9 முஸ்லிம்கள் அநியாயமாகக் கொல்லப்படுகின்றனர். அந்த சம்பவத்தை எதிர்த்துக் கண்டனப் போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மேலும் 5 முஸ்லிம்கள் கொல்லப்பட்டது அதை விடக் கொடுமை. இப்படி முஸ்லிம்கள் உயிர் அங்கு பலியாகியிருக்க நான்கு நாட்கள் கழித்து 2007 மே 23 அன்று தி ஹிந்து நாளிதழில் பிரவீன் சுவாமி ஒரு செய்திக் கட்டுரை எழுதுகிறார்.

தலைப்பு: 'மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பிற்கு பின்னால்'

துணை தலைப்பு: 'வகுப்பு வாத வன்முறை, ஒழுங்குபடுத்தப்பட்ட குற்றம், உலக அளவிலான ஜிஹாத், ஆந்திர பிரதேச தலைநகரை உலுக்குகிறது'

இந்தியாவின் நகரங்களுக்கு இஸ்லாமிய தீவிரவாதிகள் வைத்த குறி அப்படியே இருப்பதாகவும் அதன் ஒரு முன்மாதிரிதான் மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு என்றும் திருவாய் மலர்ந்துள்ளார். இதற்கு காரணம் லஸ்கர் இ தொய்பா என்றும் கண்டுபிடித்திருந்தார்.

ஆனால் இன்று என்ன ஆயிற்று? மக்கா மஸ்ஜிதில் நாங்கள்தான் குண்டு வைத்தோம் என்று நீதி மன்றத்தில் அடித்துச் சொல்கிறார் அசீமானந்தா.

3.) 2007 அக்டோபர் 12 ந்தேதி அஜ்மீர் தர்ஹாவில் குண்டு வெடிக்கிறது. புனித ரமலான் நோன்பு துறக்க வந்த நோன்பாளிகள் 3 பேர் தங்கள் நோன்புகளைத் துறக்காமலேயே கொல்லப்பட்டனர். 28 நோன்பாளிகள் படுகாயமுற்றனர்.

மறுநாள் வழக்கம் போல் தி ஹிந்து பத்திரிக்கையில் பிரவீன் சுவாமி ஒரு கட்டுரை எழுதுகிறார்.

தலைப்பு: 'பாப்புலர் இஸ்லாமுக்கு எதிரான போர்'

'பாப்புலர் இஸ்லாம்' என்று இவர் கூறுவது பெரும்பாலான முஸ்லிம்கள் பின்பற்றப்படும் நடைமுறைகள் என்பதாகும்.அதாவது தர்ஹா வழிபாட்டை பிடிக்காத இஸ்லாமிய தீவிரவாதிகள் அஜ்மீர் தர்ஹாவில் குண்டு வெடிக்கச் செய்துள்ளார்கள் என்கிறார். 2006 ஆம் ஆண்டு மாலேகானில் ஒரு தர்ஹாவில் நடந்த குண்டு வெடிப்பிற்கும் முஸ்லிம்கள்தான் காரணம் என்கிறார்.

ஆனால் அசீமானந்தாவோ ' அஜ்மீர் குண்டு வெடிப்பை நடத்த திட்டமிட்டது இந்திரேஷ் குமாரும், சுனில் ஜோஷியும் என்கிறார். இவர்கள் இருவரும் ஆர்.எஸ்.எஸின் முக்கிய புள்ளிகள். 'தர்ஹாவை ஏன் குண்டு வெடிப்புக்கு தேர்ந்தெடுத்தீர்கள்' என்று கேட்டதற்கு 'இந்துக்கள் அஜ்மீர் தர்ஹாவுக்கு செல்வதை தடுக்கவும், முஸ்லிம்களை பழி வாங்கவும்' என்கின்றனர் இந்த மாபாதகர்கள்.

அசிமானந்தா ஏன் இந்த உண்மைகளை எல்லாம் கோர்ட்டில் போட்டு உடைத்தார் என்பதன் பிண்ணனியையும் பார்த்து விடுவோம். தெரிந்த விபரம்தான் ஆனாலும் புதிதாக படிப்பவர்களுக்கு:

நவம்பர் 19, 2010 அன்று கைது செய்யப்பட்ட அசிமானந்தா ஹைதரபாத் மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு சம்பந்தமாக விசாரிக்கப்பட்டு ஹைதராபாத்தின் சன்கால்குடா மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அப்போது அவருடன் 21 வயதான அப்துல் கலீம் என்ற முஸ்லிம் இளைஞனும் அடைக்கப்பட்டிருந்தார்.அசிமானந்தாவுக்கு உணவு பானங்களை எடுததுச் செல்வது. பணிவிடைகள் செய்வது என அனைத்து உதவிகளையும் அப்துல் கலீம் செய்துள்ளார். இந்த இளைஞனின் செயல்களால் கவரப்பட்ட அசிமானந்தா அவனின் வாழ்க்கை குறித்து விசாரித்துள்ளார். மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களில் அப்துல் கலீமும் ஒருவர். கடுமையான சித்தரவதைகளுக்கும் மன உளைச்சலுக்கும் உள்ளாக்கப்பட்ட பிறகு ஒன்றரை வருடங்கள் கழித்து தான் குற்றமற்றவன் என்று விடுதலை செய்யப்பட்டதை அப்துல் கலீம் விவரித்துள்ளார். டாக்டருக்கு படிக்க வேண்டும் என்ற ஆசைகளோடு சிரகடித்து பறந்து கொண்டிருந்த தன்னுடைய வாழ்க்கை எவ்வாறு திசை மாறிப் போனது என்று கண்ணீர் மல்க கூறியிருக்கிறார்.

மர்ம உறுப்புகளில் மின்சாரம் பாய்ச்சி நிர்வாணமாக ஐஸ் கட்டிகளில் படுக்க வைத்து தனக்கு இழைக்கப்பட்ட சித்ரவதைகளை அப்துல் கலீம் விவரித்த போது கண்கலங்கிப் போனார் அசிமானந்தா. இந்த இளைஙனைப் போன்று பலரின் வாழ்க்கை நிர்மூலமாவதற்கு தானும் ஒரு காரணம் என்பதை நினைத்து வெட்கி வேதனைப்பட்டு தனது தவறுக்கு பிராயச்சித்தமாக கோர்ட்டில் அனைத்து உண்மைகளையும் போட்டு உடைத்திருக்கிறார் அசிமானந்தா.

இனி பிரவீன் சுவாமியின் மேட்டருக்கு வருவோம்......

'ரிப்போர்டிங் என்னும் செய்திகளைக் கொடுப்பதில் பிரவீன் சுவாமி ஒரு பொழுதும் நெறிமுறைகளைக் கடைபிடிப்பது கிடையாது' என்று டெல்லியை மையமாகக் கொண்டு புலனாய்வு ஆவணப்படங்களைத் தயாரிப்பவரும், குஜராத் இனப்படுகொலைகளைப் பற்றிய ஆவணப் படத்தைத் தயாரித்தவருமான சுப்ரதீப் சக்ரவர்த்தி கூறுகிறார். 'பிரவீன் கூறும் செய்திகளுக்கு அவர் ஒரு பொழுதும் ஆதாரங்களைக் குறிப்பிட மாட்டார். புலனாய்வுத் துறையினர் இப்படி நம்புகிறார்கள் என்பதுதான் அவரின் முக்கிய ஆதாரமாக இருக்கும்' என்கிறார் சக்ரவர்த்தி.

இஸலாமிய பயங்கர வாதத்தைப் பற்றி பக்கம் பக்கமாக எழுதத் தயாராகும் இந்தப் பத்திரிக்கையாளர்கள் ஹிந்துத்வ பயங்கர வாதம் குறித்தும் ஆய்வு செய்வதற்கோ எழுதுவதற்கோ எந்த ஆர்வமும் காட்டுவதில்லை.

பிரவீன் சுவாமியைப் போன்று நாக்கிலும் தங்களின் எழுத்திலும் விஷத்தைக் கக்கி இந்தியர்களின் ரத்தத்தில் தங்கள் உடம்பை வளர்த்து வரும் கருங்காலிகளை இனம் கண்டு ஒதுக்கினாலே இந்தியா தலைநிமிரும். அந்த காலம் வெகு தொலைவில் இல்லை.

இவர்கள் ஏன் முஸ்லிம்களை மட்டும் குறி வைக்கிறார்கள் என்பது நடுநிலையாளர்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். இன்று இந்தியாவில் வர்ணாசிரிமத்துக்கு பெரும் சவாலாக இருப்பது இஸ்லாமே! யூதர்களுக்கு பெரும் சவாலாக இருப்பதும் இஸ்லாமே! ஏனெனில் கிறித்தவமும் அதன் பொலிவை இழந்து வெகு நாட்களாகிறது. புத்த மதத்தையும் ஓரம் கட்டியாகி விட்டது, பூர்வீக மார்க்கமான சமணத்தையும் துடைத்தெறிந்தாகி விட்டது. இஸ்லாத்தையும் அதே போன்று ஒரு வழி பண்ணி விட்டால் வர்ணாசிரமத்துக்கு எந்த பாதிப்பும் வராது என்று நினைத்து இவர்கள் காய்களை நகர்த்துகின்றார்கள். இவர்களின் இந்த திட்டம் 10 சதவீதம் கூட வெற்றி பெறப் போவதில்லை. ஏனெனில் பெரும் பெரும் வல்லரசுகளையே மண்டியிட வைத்த இஸ்லாம் அசிமானந்தாவைப் போல் தவறை உணர்ந்து இஸ்லாத்தை அரவணைக்கும் காலம் வரும். அதுவரை பொறுப்போம்.

சமீபத்தில் நண்பர் சார்வாகன் இந்தியாவின் ஆட்சி இந்துத்வாவின் ஆட்சியாக மலர பலர் தற்போது ஆசைப்படுவதாக தனது பதிவில் கூறியிருந்தார். தாராளமாக வரட்டும். இந்துத்வா ஆட்சி வந்தால் வர்ணாசிரமம் தலை தூக்கும். சாதிக் கொடுமைகள் மீண்டும் தலை எடுக்கும். தற்போது முன்னேற்றத்தில் செல்லும் நமது நாடு பின்னோக்கி செல்லத் தொடங்கும். இந்த அநியாயங்களை எல்லாம் பார்த்து இந்துத்வ வாதிகளே நடுநிலையாளர்களாக அசிமானந்தாவைப் போல் மாற வாய்ப்பு உண்டு. எனவே சார்வாகன் இனி இந்துத்வாவை வளர்க்க தாராளமாக பாடுபடலாம். வாழ்த்துக்கள். :-)


'தவறையோ பாவத்தையோ செய்து சம்பந்தமில்லாதவன் மீது அதைச் சுமத்துபவன் அவதூறையும் பகிரங்கமான பாவத்தையும் சுமந்து விட்டான்'
-குர்ஆன் 4:112

'யாரேனும் தீமையைச் செய்து அல்லது தமக்குத் தாமே தீங்கிழைத்து பின்னர் இறைவனிடம் பாவ மன்னிப்புத் தேடினால் இறைவனை மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனுமாக அவர் காண்பார்'
-குர்ஆன் 4:110

Tuesday, June 28, 2011

அவன் இவன் - விமர்சனம்!

பாலா முன்பு எடுத்த படங்களின் தரத்தோடு இதை ஒப்பிட முடியாதுதான். ஆனால் இவருக்கென்று சில ரசிகர்கள் இன்று தமிழ்த் திரையுலகில் உருவாகியிருக்கிறார்கள். எப்படி பாலச்சந்தருக்கென்று ஒரு ரசிகர் கூட்டம் உண்டோ அது போல் பாலாவுக்கும் ஒரு கூட்டம் உருவாகி வருகிறது.

இவரைப் போன்ற இளம் டைரக்டர்கள் சமூகத்தில் உள்ள தீயவைகளை களையும் வண்ணம் கதைக் கருவை உண்டாக்க வேண்டும். அதை விடுத்து ஒரு சிறுவனை தீய காரியங்களுக்கு ஊன்று கோலாக இருப்பது போல் காட்டுகிறார். படம் பார்க்கும் சிறுவர்கள் கெடுவதைப் பற்றி கொஞ்சம் கூட கவலையில்லை இவர்களுக்கு! அதிலும் கதாநாயகர்கள் விஷாலும், ஆர்யாவும் எந்த நேரமும் சாராயமும் கையுமாக அலைய விடுவதால் டாஸ்மார்க் கடைகளின் வருமானத்தை இன்னும் அதிகமாக்குகிறார் பாலா! இதனால் இன்னும் பல இலவச திட்டங்களை ஜெயலலிதா அறிவிக்கலாம்! :-)

அடுத்து கொலை செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டவரை பாடையில் கொண்டு செல்லும் போது அங்கும் சாராயத்தோடு விஷாலும் ஆர்யாவும் போடும் குத்தாட்டம் பார்க்க சகிக்கவில்லை. துன்பத்தில் உள்ள ஒருவன் அமைதியாக கண்களில் இருந்து கண்ணீரை சொரிவதில் இன்னும் ஆழமாக காட்டியிருக்கலாம். ஆனால் சமூகத்தில் இப்படிப்பட்ட பழக்கம் உள்ளதால் தனது படத்திலும் அதே காட்சியை கொண்டு வருகிறார். பஸ்களில் செல்லும் போது தண்ணி அடித்துக் கொண்டு ஆட்டமும்பாட்டமுமாக பாடையோடு செல்லும் உறவினர்களைப் பார்த்து ஆச்சரியத்தோடு செல்வேன். எப்படி இவர்களுக்கு ஆட்டம் போட மனது வருகிறது என்று நினைத்துக் கொள்வேன்.

3850. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
பிறர் வமிசத்தைக் குறை கூறுவதும் ஒப்பாரி வைத்து அழுவதும் அறியாமைக் காலத்துப் பண்புகளாகும்.
அறிவிப்பாளர் உபைதுல்லாஹ் இப்னு அபீ யஸீத்(ரஹ்) மூன்றாவது பண்பொன்றை மறந்துவிட்டார்கள்.
"
சந்திரனின் இன்னின்ன ராசிகளால் தான் எங்களுக்கு மழை பெய்தது என்று சொல்லுவதே (இறைவனுக்கு இணை கற்பிக்கும்) அந்த மூன்றாவது பண்பாகும்" என சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) கூறினார்.
Volume :4 Book :63

1304. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
ஸஅத் இப்னு உபாதா(ரலி) நோயுற்றபோது நபி(ஸல்) அவர்கள், அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி), ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி), அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) ஆகியோரோடு நோய் விசாரிக்கச் சென்றார்கள். வீட்டில் நுழைந்தபோது (ஸஅத் இப்னு உபாதாவின்) குடும்பத்தினர் அவரைச் சூழ்ந்திருப்பதைக் கண்டதும், 'என்ன? இறந்துவிட்டாரா?' எனக் கேட்டார்கள். 'இல்லை; இறைத்தூதர் அவர்களே!' என்றனர். நபி(ஸல்) அவர்கள் அழலானார்கள். அவர்களின் அழுகையைக் கண்ட மக்களும் அழத் தொடங்கினர். பின் நபி(ஸல்) அவர்கள், '(மக்களே!) நீங்கள் (செவி சாய்த்துக்) கேட்க மாட்டீர்களா? நிச்சயமாகக் கண்கள் அழுவதாலும் உள்ளம் கவலை கொள்வதாலும் அல்லாஹ் தண்டிப்பதில்லை - பின்பு, தம் நாவின் பால் சைகை செய்து எனினும் இதன் காரணமாகத்தான் தண்டனையோ அருளோ வழங்குகிறான். நிச்சயமாகக் குடும்பத்தினர் ஒப்பாரி வைத்து அழுவதால் இறந்த உடல் வேதனை செய்யப்படுகிறது" என்று கூறினார்கள்.
ஒப்பாரி வைத்து அழுவதை உமர்(ரலி) கண்டால் கம்பினால் அடிப்பார்; கல்லெறிவார். இன்னும் மண்வாரி வீசவும் செய்வார்.
Volume :2 Book :23

அடுத்து ஆர்யாவுக்கும் விஷாலுக்கும் தாய்க் குலங்களாக வரும் அம்பிகா போன்றவர்களை புகை பிடிப்பது போல் காட்டியும் நரக நடையில் பேசுவதுபோல் காட்டுவதும் நகைச்சுவையாகவும் வேதனையாகவும் இருக்கிறது. தாயும் மகனும் சேர்ந்து போடும் ஆட்டம் பார்க்க சகிக்கவில்லை. பத்து வருடங்களுக்கு முன்பு கமலஹாசனோடு 'வானிலே தேனிலா...' என்று ஆட்டம் போட்ட அம்பிகாவா இது என்று ஆச்சரியப்பட வைக்கிறது. ஹீரோவாக நடித்த கமலஹாசன் இன்றும் புது புது நடிகைகளோடு முண்ணனி கதாநாயகனாக வலம் வருகிறார். கூட நடித்த அம்பிகாவுக்கு இன்று அம்மா வேஷம். கதாநாயகிகள் அனைவருக்குமே கிட்டத்தட்ட இதே அளவுகோல்தான். ஆணும் பெண்ணும் எல்லா விஷயங்களிலும் சமமே என்று வாதிடுபவர்கள் இங்குள்ள வித்தியாசத்தை வசதியாக மறந்து விடுவார்கள்.

அடுத்து சாப்பாட்டுக்கு ஊறுகாயைப் போல் பட விளம்பரத்துக்காக குர்பானி கொடுப்பதையும் போகிற போக்கில் சொல்லிவிட்டுப் போகிறார் பாலா. பாலும் கறக்காத, வேறு எந்த வேலைக்கும் உதவாத மாடுகளை அதுவும் விலைக்கு வாங்கப்பட்ட மாடுகளை அறுத்து சாப்பிடுவதில் யாருக்கு என்ன நஷ்டம் வந்து விடப் போகிறது? வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதாலும் நமது நாட்டு பொருளாதாரமும் உயருகிறது. மேலும் தமிழக முஸ்லிம்கள் மாட்டுக் கறியை அதிகம் விரும்புவதில்லை. ஆட்டுக் கறியைத்தான் விரும்பி சாப்பிடுவார்கள். கேரள நாட்டவரே மாட்டுக்கறியை அதுவும் மூன்று மதத்தவரும் விரும்பி சாப்பிடுவர். மாடடின் மேல் இவ்வளவு பிரியம் உள்ளவர்கள் அவர்களிடம் விற்பவர்களை தடுத்து தங்கள் பொறுப்பிலேயே பராமரிக்க வேண்டும். பணம் கொடுத்து வாங்கி வியாபாரம் செய்யும் ஒருவனை புனிதம் என்ற பெயரில் தடுப்பது என்ன நியாயம்?

மொத்தத்தில் சமூக நடப்புகளை அப்படியே படம் பிடித்து காட்டியிருக்கிறார் டைரக்டர். சமூக அவலங்களை எடுத்துப் போடுவதோடு, அதை மாற்றுவதற்கு என்ன தீர்வு என்ற படிப்பினையையும் சேர்த்து சொல்லியிருந்தால் படம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

இதை அடுத்த படத்தில் எதிர்பார்ப்போம்!

Saturday, June 25, 2011

பரிணாமவியலில் மேலும் சந்தேகங்கள்!




பரிணாமத்தின் அடிப்படை நியதியே ஒரு உயிரினம் மாற்றங்களை உள்வாங்கி அதனை அடுத்த தலைமுறைக்கு கடத்துவதே, அந்த மாற்றங்கள் உயிரினத்தின் தக்க வைத்தலுக்கு நன்மை பயக்கும் போது அது தொடரும், அதே போல மாற்றங்கள் தேவை இல்லாத போது அது நீக்கப்படும். அதே போல மாற்றங்களை நிகழ்த்துவதாலும், மாற்றங்களை உள்வாங்குவதாலுமே இனம் விருத்தியடைந்து வருகின்றது எனலாம். பரிணாமத்தை தூக்கிப் பிடிப்போர் வைக்கும் வாதங்களே இது.

நாம் கேட்பது ஒரு உயிரினத்திலிருந்து மற்ற உயிரனமாக மாற புறத் தோற்றத்தில் அந்த விலங்கு 1,2,3,4 என்று பல நிலைகளை அடைந்து தற்போதய நிலையை அடைந்திருக்க வேண்டும். இதற்கு பல மில்லியன் வருடங்கள் ஆனதாக பரிணாமத் தத்துவம் கூறுகிறது. ஒரு இனம் ஒன்றாவது நிலையிலிருந்து நான்காவது நிலையை அடைவதாகக் கொள்வோம். இதற்கு இடைப்பட்ட இரண்டு நிலைகளை அந்த உயிர் பரிணாமத்தால் அடைந்திருக்க வேண்டும். இப்பொழுது நாம் பார்க்கும் காணொளியில் அனைத்து தாவரங்களும் விலங்குகளும் இன்று நாம் எப்படி பார்க்கிறோமோ அதே போன்ற நிலையில்தான் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பும் பல லட்ச வருடங்களுக்கு முன்பும் இருந்துள்ளன என்பதை விளங்குகிறோம். இதற்கு இடைப்பட்ட இனமான இரண்டாம் நிலையும், மூன்றாம் நிலையும் இதுவரை நமக்கு கிடைக்கவில்லை.

ஜீன்களின் மாற்றத்தினால் உயரத்திலும் பருமனிலும் பல வித்தியாசங்கள் நடந்துள்ளது. இதை அனைவரும் ஒத்துக் கொள்கிறோம். தண்ணீரில் நீந்தியது ஊர்வனவாக மாறியதற்கும், ஊர்வன பிறகு பறப்பனவாக மாறியதற்கும் படிம ஆதாரங்கள் எதுவும் சமர்ப்பிக்கப் படவில்லை.

மேலும் மனிதன் முன்பு நம்மைவிட உயரமாக இருந்ததற்கும் மனிதனின் கால் எலும்பு கிடைத்துள்ளது. அந்த எலும்பும் இப்போது நமக்குள்ள அதே அமைப்பில்தான் உள்ளது. பரிணாம மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை. அளவில் தான் சிறிதாகி இருக்கிறது.

இவை எல்லாம் என்னுடைய சந்தேகங்களே! பரிணாவியலை கரைத்துக் குடித்தவர்கள் இதற்கான விளக்கத்தைத் தருவார்கள் என்று நினைக்கிறேன்.

Wednesday, June 22, 2011

குழந்தைத் திருமணமும் சில அறியாமைகளும்!


//இஸ்லாமிய மத நிறுவனரான முகமதுவும் கூட தனது சகோதர முறையினன் ஆன அபு பக்கரின் மகளை சிறுக் குழந்தை ( 6 வயதில் ) என்றும் எண்ணாமல் திருமணம் செய்தக் குறிப்புகளையும் ( Volume 7, Book 62, Number 64:, Volume 7, Book 62, Number 15, Sahih Bukhari ). அதே போல மகன் முறையினன் ஆன சயதின் மனைவியும், மருமகளான ஜைனாப்பை முகமது மணந்துள்ளார் ( Sura al-Ahzab 33:37 ). இதுவும் ஒருவகையில் INCEST உறவு மனநிலையின் பிரதிப்பலிப்பே ஆகும். சொல்லப் போனால் அந்தக் கால அரபு சமூகத்தில் மருமகள் முறையினளை மணப்பது தடுக்கப்பட்டு இருந்த போதிலும், ஆங்காங்கே INCEST உறவுகள் நடந்தே வந்துள்ளன அதற்கு ஒரு உதாரணம் தான் முகமதுவின் செயல்பாடுகள் கூட.//

சமீபத்தில் ஒரு பதிவில் அல்ல இரண்டு பதிவில் முகமது நபி சகோதர உறவான அபுபக்கரின் மகள் ஆயிஷாவை மணந்தது INCEST போன்ற தகாத உறவு முறையே என்று ஒரு பதிவர் பதிவிட்டிருந்தார். இந்த மறுப்பு அவருக்கில்லை. அவர் பதிவை படிப்பவர்களுக்காக!

முகமது நபி வாழ்ந்த காலத்தில் 6 வயது 9 வயது போன்ற பெண்களை மணப்பது வழக்கமாக இருந்தது. ஆனால் அவர்கள் பூப்பெய்த உடன்தான் கணவனின் வீட்டுக்கு குடும்பம் நடத்த செல்வார்கள். ஏன் இன்றைய இந்தியாவில் இன்றும் கூட இந்த திருமணங்கள் பல கிராமங்களில் சர்வசாதாரணமாக இந்த விஞ்ஞான யுகத்திலும் நடந்து வருகிறது.

நமது முண்டாசு கவிஞன் பாரதியாரும் 6 வயது பெண்ணை மணந்தவர்தான். பெண் உரிமைக்கு பாடுபடும் ஆர்வலர்கள் இதை கண்டு கொள்ள மாட்டார்கள்.

கலைஞர் முரசொலியில் 'உடன் பிறப்பே' என்று தினமும் கடிதம் எழுதுகிறார். உடன் திமுக தொண்டர்களை எல்லாம் 'ஸ்பெக்ட்ரம் ஊழலில் உங்களுக்கும் பங்கிருக்கு' என்று சி.பி.ஐ கைது செய்தால் எந்த அளவு அறிவீனமோ அதைத்தான் சம்பந்தப்பட்ட பதிவரும் செய்திருக்கிறார்.

முஸ்லிம்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் சகோதரர்கள் ஆவார்கள் என்று திருக்குர்ஆன் (003:103, 049:010) வசனங்கள் கூறுகிறது. இனம், நிறம், மொழி, நாடு என்று பகுப்பில்லாமல் முஸ்லிம்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் மார்க்க சகோதரர்கள் என்று இஸ்லாம் பிரகடனம் செய்கிறது.

இந்த சகோதரத்துவம் இரத்தம் பந்தம், அல்லது பால்குடி சம்பந்தமான உறவு முறைகள் அல்ல. ஒரே மார்க்கத்தை ஏற்றுக் கொண்டவர்கள் என்ற அடிப்படையில் உலக முஸ்லிம்கள் அனைவரும் சகோதரர்கள். இஸ்லாம் யார் யாருக்கிடையில் திருமண உறவை தடை செய்திருக்கிறதோ அந்த உறவுகள் தவிர, மார்க்க சகோதரர்கள் என்பது திருமணத்திற்கு ஒரு தடை இல்லை. ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமிற்கு பெண் கொடுப்பதோ, பெண் எடுப்பதோ தடை செய்யப்பட்டதல்ல. என்பதை புரிந்து கொண்டிருந்தால், அறியாமல் தவறாக விளங்கிய இரு நபிமொழிகளிலும் ஏற்படுத்திய முரண்பாடு அடிபட்டுப் போகும். நண்பர் இரண்டு நபிமொழிகளை புரிவதில் இயலாமையை வெளிப்படுத்தியிருக்கிறார். அந்த நபிமொழிகளைப் பார்ப்போம்.

நபி(ஸல்) அவர்கள் அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் (அவர்களின் புதல்வியும் சிறு வயதினருமான) ஆயிஷா(ரலி) அவர்களைப் பெண் கேட்டார்கள். அதற்கு அபூ பக்ர்(ரலி) ''நான் தங்களின் சகோதரன் ஆயிற்றே!'' என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வின் மார்க்கத்தின் அடிப்படையிலும் வேதத்தின் அடிப்படையிலுமே நீங்கள் எனக்கு சகோதரர் ஆவீர்கள். உங்களுடைய புதல்வி எனக்கு மணமுடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளவர் தாம்'' என்று கூறினார்கள். (புகாரி,5081)

நபி (ஸல்) அவர்கள், தமது தோழர் அபூ பக்ர் (ரலி) அவர்களின் மகள் ஆயிஷா (ரலி) அவர்களை பெண் கேட்கிறார்கள். மார்க்க ரீதியாக சகோதரர்களாகி விட்டதால் ''நான் தங்களின் சகோதரன் ஆயிற்றே!'' என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். அதாவது, நபி (ஸல்) அவர்களும், அபூ பக்ர் (ரலி) அவர்களும் மார்க்க சகோதரர்களாகி விட்டதால் தமது மகள் ஆயிஷாவை நபி (ஸல்) அவர்கள் திருமணம் செய்வது தடை செய்யப்பட்டது என்று கருதியிருந்த அபூ பக்ர் (ரலி) அவர்கள் இங்கே தமது கருத்தைத் தெரிவிக்கிறார்.

நபி (ஸல்) அவர்கள் ''அல்லாஹ்வின் மார்க்கத்தின் அடிப்படையிலும் வேதத்தின் அடிப்படையிலுமே நீங்கள் எனக்கு சகோதரர் ஆவீர்கள்'' என்று கூறுகிறார்கள். நபி (ஸல்) அவர்கள், அபூ பக்ர் (ரலி) அவர்கள் இருவருக்கும் இரத்த பந்த உறவு இல்லை. பால்குடி உறவும் இல்லை என்பதால் மார்க்க சகோதரர்கள் என்ற சகோதரத்துவம் திருமண உறவுக்குத் தடை இல்லை என்று அபூ பக்ர் (ரலி) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் விளக்கம் தருகிறார்கள். இதிலிருந்து ஒரு மார்க்க சட்ட விளக்கம் முஸ்லிம்களுக்குக் கிடைக்கிறது.

இனி அன்னை ஜைதைப் பற்றிய அவதூறுக்கு வருவோம்.

அவர்களை அவர்களின் தந்தையர் பெயராலே குறிப்பிடுங்கள்’ (அல்குர்ஆன் 33:5) என்ற வசனம் அருளப்படும் வரை முஹம்மதின் மகன் ஜைத்என்றே அவரைக் குறிப்பிட்டு வந்தோம்என்று இப்னு உமர் (ரலி) அறிவிக்கும் செய்தி புஹாரி, முஸ்லீம் என்ற நபிமொழிக் கிரந்தங்களில் காணப்படுகின்றது.

முதலில் ஜைது என்பவர் முகமது நபியின் சொந்த மகன் அல்ல. அவர் அன்னை கதீஜாவால் அடிமையாக நபியவர்களிடத்தில் வருகிறார். அடிமையாய் இருந்த அவரை தனது வளர்ப்பு மகனாக அறிவிக்கிறார் முகமது நபி. அதன் பிறகு தனது மாமி மகளை ஜைதுக்கு திருமணம் முடித்து வைக்கிறார். ஒரு வருடத்துக்குப் பிறகு மனத்தாங்கலால் இருவரும் பிரிகின்றனர். அதன் பிறகே தனது மாமி மகளை திருமணம் செய்கிறார் முகமது நபி. மருமகளை திருமணம் செய்ததாக ஒரு பொய்யை தனது பதிவில் பதிக்கிறார் சம்பந்தப்பட்ட பதிவர்.

என்னதான் ஒருவனை தத்து எடுத்து கொண்டாலும் பெற்ற மகனுக்கு ஈடாக முடியாது என்ற சட்டத்தை மனிதர்களுக்கு விளக்கும் முகமாகவே இறைவன் இத்தகைய சம்பவத்தை நமக்கு எடுத்துக் காட்டுகிறான்.

எல்லாவற்றிலும் அரைகுறையாக இருந்து கொண்டு தன்னை மெத்த படித்த அறிவு ஜீவியாக கருதிக் கொண்டு பதிவு எழுதுபவரை என்னவென்பது.

ஓரினப்புணர்ச்சி ஒரு மனிதனின் விருப்பம் என்பதால் அதை குறை சொல்லக் கூடாதாம். மருத்துவமும் மறுக்கவில்லையாம். சொல்கிறார். எய்ட்ஸ் என்ற உயிர்க் கொல்லி நோய் பரவ முக்கிய காரணமே ஓரினப் புணர்ச்சி என்கிறது மருத்துவம்.

//நெருங்கிய உறவோடு உறவாடுதல் என்பதை கடவுள் தடுத்தார் எனக் கூறுவோருக்கு கடவுள் ஏன் அதனைப் படைத்தார் என்பதற்கு பதில் தெரியாது.//

//திரு. bat-ன் கேள்விகளுக்கு பதில்கள் :

நாத்திகர்கள் ஓரினச் சேர்க்கையை ஏன் ஏற்கின்றார்கள் ?

***
ஏனெனில் அறிவியல் அதனை இயற்கைப் பாலுணர்வு எனக் கூறிவிட்டது.

நாத்திகர்கள் தகாப் பாலுறைவை ஏன் ஏற்பதில்லை ?

***
ஏனெனில் அறிவியல் அதனால் பிறக்கும் குழந்தைகள் நோய்நொடியோடு பிறக்கும் எனக் கூறிவிட்டது. //

திருடுவதும் கொலை செய்வதும் தவறுதான். இவர்களை ஏன் கடவுள் படைத்தார் என்று கேட்டால் அவரின் அறிவின் முதிர்ச்சியை எப்படி மதிப்பீர்கள்?

அடுத்து தகப்பன் மகளிடம் உறவு வைப்பது, அண்ணன் தங்கையிடம் உறவு வைப்பது போன்ற தகாத உறவுகளில் குழந்தை குறையுடன் பிறக்கும் என்பதால் அறிவியல் தடுக்கிறது. எனவே அதை நானும் தடுக்கிறேன் என்கிறார். குறையுள்ள குழந்தைகள் பிறக்காமல் இருந்தால் இது போன்ற தகாத உறவுகளையும் ஆதரிப்பார் போல் இருக்கிறது. இவருக்கு அறிவியல் மதம். அறிவியல் அறிஞர்கள் தூதர்கள். அவ்வளவே!

//அமெரிக்காவில் ஒன்றுவிட்ட சகோதரங்கள் ( மாமன், அத்தையின் பிள்ளைகள் உட்பட ) மணந்துக் கொள்வதை சட்டம் தடை செய்துள்ளது. //

இடையில் இப்படி ஒரு காமெடி! யாரும் யாருடன் வேண்டுமானாலும் சேரலாம் என்று தறி கெட்டு செல்லும் ஒரு சமூகத்தில் நெருங்கிய உறவுகளுக்கும் நடக்கும் சட்ட பூர்வ திருமணத்துக்கு தடையாம்!

//ஆனால் உண்மையில் மதங்களோ, சட்டங்களோ இவற்றைத் தடை செய்யாவிட்டால் என்னவாகும் என யோசித்துப் பார்த்தேன்.

பதில் என்னத் தெரியுமா ? ஒன்றும் ஆகாது. இவற்றைத் தடை செய்யாவிட்டாலும் 99 சதவீதமான மனிதர்கள் இந்த மாதிரி உறவுகளில் ஈடுபட மாட்டார்கள். இயற்கையிலேயே இப்படியான உறவில் ஈடுபடக் கூடாது என்பது நமக்குள் பதிவாகியுள்ளது.//-Aaronan

காலங்காலமாக ஒரு பழக்கம் இருந்து வந்தால் அது மரபு வழியாக பல தலமுறைக்கும் கடத்தப்படும். உலகில் உள்ள வேதங்கள் அனைத்துக்கும் மூலம் ஒருவனே என்பதால் இந்த கருத்துக்கள் பல தலைமுறைகளாக வழி வழியாக நமது முன்னோர்களால் பின்பற்றப்படுகிறது. இந்த எண்ணங்களுக்கும் மூலம் வேத நூல்களே!


சமூகத்தில் எங்கெல்லாம் வக்கிரமான எண்ணங்களும் செயல்களும் நடைபெறுகிறதோ அதை எல்லாம் எடுத்துப் போட்டு நீங்களும் இதே போன்று கெட்டு குட்டிச்சுவராகுங்கள் என்று வரிந்து கட்டிக் கொண்டு இந்த அதி மேதாவிகள்அதனை ஆதரித்து பதிவு எழுதிக் கொண்டிருக்கிறர்ர்கள். பாவம். அவர்கள் வழியிலேயே விட்டு விடுவோம்.

Tuesday, June 21, 2011

சிறுமியின் கற்பை காப்பாற்றிய குர்ஆன் வசனங்கள்!


ஜெத்தா: சவுதி அரேபியாவின் ஜெத்தா நகரில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் நடந்தேறியுள்ளது. இங்கு அதிகமாக திருமணங்கள் பெரும் ஹால்களில் வாடகைக்கு பிடித்து நடத்தப்படும். அது போல் ஒரு திருமண வைபவத்தில் பெண்கள் பகுதிக்கு ஒரு சவுதி காமுகன் வந்துள்ளான். 10 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் தனியாக நிற்கவும் 'என் காரில் மாப்பிள்ளைக்கு அன்பளிப்பு உள்ளது. எனது கார் வரை வர முடியுமா பெண்ணே!' என்று அவன் கேட்டுள்ளான். திருமணத்துக்கு வந்த உறவினர் என்று நினைத்து அவனுடன் உதவி செய்ய அந்த பெண் சென்றுள்ளாள். வாகனத்துக்கு பக்கத்தில் சென்றவுடன் 'காரில் ஏறு! பரிசுப் பொருள் வீட்டில் இருக்கிறது. எடுத்துக் கொண்டு வந்து விடலாம்' என்று சொல்லிக் கொண்டே பின் சீட்டில் அந்த பெண்ணை தள்ளி, வண்டியையும் எடுத்து விட்டான். சாப்பாடு பரிமாறப்பட்டுக் கொண்டிருந்ததால் இங்கு நடந்த இந்த களேபரங்கள் பெண்ணின் குடும்பத்தின் கவனத்துக்கு வரவில்லை.

வெளியேற முயற்ச்சித்த அந்த பெண்ணை 'சத்தம் போடாதே!' என்று மிரட்டவும் செய்துள்ளான். 'உனது தகப்பனாரை எனக்குத் தெரியும். நான் போனில் பேசிக் கொள்கிறேன்' என்று சொல்லவும் சற்று அமைதியாகியிருக்கிறாள் அந்த பெண். அவனின் வீடும் வருகிறது. வீட்டினுள் வந்த அவன் அந்த பெண்ணை அழைத்து சென்று ஒரு அறையில் பூட்டியிருக்கிறான். 10 வயதே ஆன அந்த பெண் என்ன நடக்கிறது என்பதை யூகிப்பதற்குள் எல்லாம் நடந்திருக்கிறது.

பிறகு ஹாலில் அமர்ந்த அவன் சீசா குடிக்க ஆரம்பித்துள்ளான். அரபுகள் நீண்ட குழாய் மூலமாக புகையை இழுத்து விடுவது ஒரு வழக்கம். இதற்கு சீசா குடித்தல் என்று சொல்வார்கள். படங்களில் கூட பார்த்திருக்கலாம். சிலர் இதில் போதை மருந்துகளையும் கலந்து குடிப்பது உண்டு. அரசுக்கு தெரிந்தால் கம்பி எண்ண வேண்டியதுதான்.

வீட்டில் யாரும் இல்லாததும் அவனுக்கு மிகவும் வசதியாக போய் விட்டது. சீசா குடித்து முடிந்தவுடன் அந்த பெண்ணின் அருகே நெருங்கி வந்துள்ளான். நடக்கப் போவதை உணர்ந்து கொண்ட அந்த பெண் தனக்கு தெரிந்த குர்ஆன் வசனங்களை மளமளவென்று வேகமாக ஓத ஆரம்பிக்கிறாள். இதனால் கோபம் உண்டான அவன் 'குர்ஆன் ஓதுவதை நிறுத்து' என்று கூறி முகத்தில் அடித்திருக்கிறான். இதே போல் பலமுறை முயற்சி செய்தும் ஒவ்வொரு முறையும் அந்த பெண் குர்ஆனை ஓதுவதும் அவன் அடிப்பதுமாக இரவு முழுதும் நடந்திருக்கிறது.

“Every time he came closer to me, I started reciting Quran and he would withdraw” she said.

அவனும் அரபி மொழி பேசுபவன். அந்த வசனங்கள் என்ன சொல்கிறது என்பது விளங்கியதால் அந்த பெண்ணிடம் அவன் நெருங்க மனது இடம் தரவில்லை. இதுபோல் பலமுறை முயற்ச்சித்தும் முடியாமல் போக முடிவில் தனது தவறை உணருகிறான். காலையும் நெருங்கியது. அந்த பெண்ணை அழைத்துக் கொண்டு எங்கு பிடித்தானோ அந்த இடத்திலேயே அந்த பெண்ணை இறக்கி விட்டு தலைமறைவாகியிருக்கிறான்.

திருமண மண்டபத்தில் காலை நேரமாகையால் யாரும் இல்லை. பிறகு வழியில் சென்ற ஒருவரை நிறுத்தி தனது தகப்பனின் செல் நம்பரை அந்த பெண் கொடுத்துள்ளாள். அந்த நல்ல மனிதர் அந்த பெண்ணின் தகப்பனோடு பேசி அவரை வரவழைத்தார். தனது மகளை கண்டவுடன் தந்தை அழுதது நெகிழ்ச்சியாக இருந்தது.

-நன்றி: அரப் நியூஸ்

21-06-2011

இங்கு நாம் ஒன்றை யோசிக்க வேண்டும். நமது நாட்டை விட இது போன்ற தவறுகளுக்கு கடுமையான தண்டனை கொடுக்கக் கூடிய நாடுதான் சவுதி. இருந்தும் துணிந்து ஒரு பெண்ணை கடத்தி சென்றவனை சமயோஜிதமாக குர்ஆன் வசனங்களை கொண்டு அவனை ஒரு வழிக்கு கொண்டு வந்துள்ளாள் அந்த பெண். இத்தகைய மன உறுதி ஒரு சில பேருக்குத்தான் வரும். அது இறைவனின் வார்த்தை என்பதை இருவரும் உணர்ந்ததால்தான் ஒரு பெரும் தவறு நடக்கவிருந்தது தவிர்க்கப்பட்டது.

எல்லாப் புகழும் இறைவனுக்கே!

இந்த சம்பவத்தை இன்று நான் படித்த போது முகமது நபி முன்னொரு காலத்தில் நடந்த ஒரு சமபவத்தை சொன்னது உடன் ஞாபகம் வந்தது. அதையும் பகிருகிறேன்.

2272. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:


உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களில் மூன்று பேர் (ஒன்றாக) நடந்து சென்றனர். இறுதியில் (மலையில் இருந்த) குகையொன்றில் இரவைக் கழிப்பதற்காக தஞ்சம் புகுந்தனர். அதில் அவர்கள் நுழைந்தவுடன் மலையிலிருந்து பெரும் பாறையொன்று உருண்டு வந்து குகைவாசலை அடைத்துவிட்டது. அப்போது அவர்கள் 'நீங்கள் செய்த நற்செயலைக் கூறி அல்லாஹ்விடம் பிரார்த்தித்தால் தவிர நீங்கள் தப்ப முடியாது!" என்று தமக்குள் கூறினர்.
அவர்களில் ஒருவர் 'இறைவா! எனக்கு வயது முதிர்ந்த பெற்றோர் இருந்தனர். நான் அவர்களுக்குப் பால் (கறந்து) கொடுப்பதற்கு முன் என் குடும்பத்தினருக்கோ குழந்தைகளுக்கோ பால் கொடுப்பதில்லை! ஒரு நாள் எதையோ தேடிச் சென்றதால் தாமதமாக வந்தேன். என்னுடைய தாயும் தந்தையும் (முன்பே) உறங்கிவிட்டிருக்க கண்டேன். அவர்களுக்குப் பால் கொடுப்பதற்கு முன், என் குடும்பத்தினருக்கோ என் அடிமைகளுக்கோ பால் கொடுப்பதை நான் விரும்பாததால் அவர்கள் விழிப்பதை எதிர்பார்த்து என் கைகளில் பாத்திரத்தை வைத்துக் கொண்டு காத்திருந்தேன். ஃபஜ்ர் நேரம் வந்ததும் அவ்விருவரும் விழித்துத் தமக்குரிய பாலைக் குடித்தனர். எனவே இறைவா! நான் இதை உன்னுடைய திருப்தியை நாடிச் செய்திருந்தால் நாங்கள் சிக்கிக் கொண்டிருக்கும் இந்தப் பாறையை எங்களைவிட்டு அகற்று!' எனக் கூறினார். உடனே, அவர்கள் வெளியேற முடியாத அளவிற்குப் பாறை சற்று விலகியது!


மற்றொருவர், 'இறைவா! என் தந்தையின் சகோதரரின் மகள் ஒருத்தி இருந்தாள்; அவள் எனக்கு மிகவும் விருப்பமானவளாக இருந்தாள். நான் அவளை அடைய விரும்பினேன்; அவள் என்னிடமிருந்து விலகிச் சென்றாள். அவளுக்குப் பஞ்சம் நிறைந்த ஆண்டு ஒன்று வந்தபோது (பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு) என்னிடம் வந்தாள்; நான் அவளை அடைந்திட அவள் எனக்கு வழிவிட வேண்டும் என்ற நிபந்தனையில் பேரில் நூற்றி இருபது தங்கக்காசுகளை அவளுக்குக் கொடுத்தேன். அவளை என் வசப்படுத்தி (உறவு கொள்ள முனைந்து)விட்டபோது, 'முத்திரையை அதற்கான (மணபந்தத்தின்) உரிமையின்றி உடைப்பதற்கு உனக்கு நான் அனுமதி தரமாட்டேன்!" என்று அவள் கூறினாள். உடனே, அவளுடன் உறவு கொள்ளும் பாவத்(தைச் செய்வ)திலிருந்து விலகிக் கொண்டேன்; அவள் எனக்கு மிகவும் விருப்பமானவளாக இருந்தும் அவளைவிட்டுத் திரும்பி விட்டேன்; நான் அவளுக்குக் கொடுத்த தங்க நாணயத்தை அவளிடமேவிட்டு விட்டேன். இதை உன்னுடைய திருப்தியை நாடி நான் செய்திருந்தால் நாங்கள் சிக்கிக் கொண்டிருக்கும் இந்தப் பாறையை எங்களைவிட்டு அகற்று!' எனக் கூறினார். பாறை விலகியது: ஆயினும் அவர்களால் வெளியேற முடியவில்லை.


மூன்றாமவர், 'இறைவா! நான் சில ஆட்களைக் கூலிக்கு அமர்த்தி அவர்களின் கூலியையும் கொடுத்தேன். ஒரே ஒருவர் மட்டும் தம் கூலியைவிட்டுவிட்டுச் சென்றார். அவரின் கூலியை நான் முதலீடு செய்து அதனால் செல்வம் பெருகியிருந்த நிலையில் சிறிது காலத்திற்குப் பின் அவர் என்னிடம் வந்தார். 'அல்லாஹ்வின் அடியாரே! என்னுடைய கூலியை எனக்குக் கொடுத்துவிடும்!" என்று கூறினார். 'நீர் பார்க்கிற இந்த ஒட்டகங்கள், மாடுகள், ஆடுகள், அடிமைகள் எல்லாம் உம் கூலியிலிருந்து கிடைத்தவைதாம்!" என்று கூறினேன். அதற்கவர் 'அல்லாஹ்வின் அடியாரே! என்னை கேலி செய்யாதீர்!" என்றார். 'நான் உம்மை கேலி செய்யவில்லை!" என்று கூறினேன். அவர் அனைத்தையும் ஒன்றுவிடாமல் ஓட்டிச் சென்றார். 'இறைவா! இதை நான் உன்னுடைய திருப்தியை நாடிச் செய்திருந்தால் நாங்கள் சிக்கிக் கொண்டிருக்கும் இந்தப் பாறையை எங்களைவிட்டு அகற்று!' எனக் கூறினார். பாறை முழுமையாக விலகியது. உடனே, அவர்கள் வெளியேறிச் சென்றுவிட்டனர்!"
என அப்துல்லாஹ்வின் உமர்(ரலி) அறிவித்தார்.
Volume :2 Book :37

டிஸ்கி: முன்பொரு முறை ஒரு இந்து நண்பர் பின்னூட்டத்தில் 'இந்த பாய்ங்க பச்சை அட்டை போட்ட இந்த புத்தகத்தை வைத்துக் கொண்டு பண்ணுகிற ரவுசு தாங்க முடியலடா சாமி....' என்று ஹாஸ்யமாக எழுதியிருந்தார். அவரைப் பொறுத்த வரையில் அது குமுதம், விகடன் போன்ற ஒரு புத்தகமே! உலக முஸ்லிம்களைப் பொறுத்த வரையில் குர்ஆனின் ஒவ்வொரு வரியும் இறைவன் சொன்னவையே என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டுள்ளார்கள் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு எடுத்துக் காட்டு.