Followers

Monday, March 31, 2014

சாதி வெறியில் மற்றொரு கர்ப்பிணி பெண் கொலை!



ஜாதி வெறியால் 'கர்ப்பிணி பெண்' கவுரவக்கொலை : தாய், தம்பி உள்ளிட்ட 4 பேர் கைது!

ராமநாதபுரத்தில் பரபரப்பு !!

வேறு ஜாதியைச் சேர்ந்த நபரை திருமணம் செய்து கர்ப்பிணியான இளம்பெண்ணை, பெற்றோர்களும், உறவினர்களும் கவுரவக்கொலை செய்து புதைத்த சம்பவம் ராமநாதபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொலை செய்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இது குறித்து போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது:

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி கிராமத்தில், வைதேகி, சுரேஷ்குமாரின் குடும்பத்தினர் பக்கத்துப்பக்கத்து வீடுகளில் குடியிருந்து வந்துள்ளனர்.

சிறுவயது முதலே வைதேகிக்கும், சுரேஷ்குமாருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.

கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம், மதுரை சார்பதிவாளர் அலுவலகத்தில் இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டனர். இதன்பின் மதுரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

பின்னர் கேரளாவுக்குச் சென்று அங்கு குடும்பம் நடத்தி வந்தனர்.



இவர்களது காதல் விவகாரம் வைதேகியின் குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை. இந்த நிலையில் வைதேகி 5 மாத கர்ப்பிணியானார். இதுபற்றி அறிந்த அவரது குடும்பத்தினர் 2 பேரையும் குடும்பத்தில் சேர்த்துக்கொள்வதாக கூறி நம்ப வைத்து நாடகமாடியுள்ளனர்.

இருவரையும் தேனி வீரபாண்டி கோவிலுக்கு வருமாறு அழைத்துள்ளார். இதை நம்பிய சுரேஷ்குமார் தனது கர்ப்பிணி மனைவி வைதேகியை அழைத்துக்கொண்டு தேனிக்கு வந்துள்ளார்.

வைதேகியை வீட்டுக்கு அழைத்து வந்தபின் அவரை தாயார் வெங்கடேஸ்வரி, தம்பி விமல்ராஜ் மற்றும் மாமன்கள் பாக்கியராஜ், அழகர்சாமி, ஜானகிராமன் உள்ளிட்டோர்,

சுரேஷ்குமார் வேறு சாதி என்பதால் கருவை கலைத்து விடு. வேறு ஒரு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைப்பதாகவும் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

இதற்கு மறுத்ததால் வைதேகியை கொலை செய்ய அவர்கள் திட்டம் தீட்டி உள்ளனர்.

இந்த கொலை திட்டத்தை நிறைவேற்ற கடந்த 17-ந் தேதி வீட்டில் வைதேகியை தனியாக விட்டுவிட்டு வெளியே சென்றுவிட்டனர்.

அப்போது வைதேகியின் மாமன்கள் அவர்களது நண்பர்களுடன் வீட்டுக்கு வந்து வைதேகியை கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளனர். பின்னர் உடலை சாக்கில் வைத்து மூட்டையாக கட்டி குயவன்குடி சுனாமி குடியிருப்புக்கு பின்புறம் உள்ள வைகை ஆற்றங்கரையில் குழிதோண்டி புதைத்து விட்டுச் சென்று விட்டனர்.

இதன்பிறகு ஒன்றுமே தெரியாததுபோல் வைதேகியின் தாயார் வெங்கடேசுவரி, தம்பி விமல்ராஜ் மற்றும் மாமன்கள் இருந்து வந்துள்ளனர். இந்த நிலையில் சந்தேகம் ஏற்பட்டு சுரேஷ்குமார் விசாரித்துள்ளார்.

மனைவி குறித்து சரியான பதில் கிடைக்காததால் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க ராமநாதபுரம் மாவட்ட போலீசாருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி உத்தரவிட்டார்.

இதையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் முன்னுக்குப்பின் முரணாக தகவல்கள் கிடைத்தன. இதையடுத்து வைதேகியின் தாயார் வெங்கடேஸ்வரி, தம்பி விமல்ராஜ், மாமன்கள் பாக்கியராஜ், ஜானகிராம் ஆகியோரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

வைதேகி கொலை செய்யப்பட்ட விவரம் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து வைதேகியின் உடல் புதைக்கப்பட்ட இடத்தை அவரது தாய் மாமன் பாக்யராஜ், தம்பி விமல்ராஜ் ஆகிய 2 பேரும் அடையாளம் காட்டினர்.

அந்த இடத்தை போலீசார் தோண்டிப்பார்த்தனர். அப்போது சாக்கில் அழுகிய நிலையில் வைதேகியின் உடல் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கேயே டாக்டர் பழனிக்குமார் பிரேத பரிசோதனை செய்தார். இதன்பின் அதே இடத்தில் உடல் புதைக்கப்பட்டது.

இதுதொடர்பாக கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து வைதேகியின் தாயார் வெங்கடேஸ்வரி, தம்பி விமல்ராஜ், மாமன்கள் பாக்கியராஜ், ஜானகிராம் ஆகிய 4 பேரை கைது செய்தனர். இந்த கொடூரக் கொலை தொடர்பாக மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

நன்றி: தினத் தந்தி

பெற்ற தாயும் உடன் பிறந்த சகோதரனும் அந்த கர்ப்பிணியை கொன்று புதைத்துள்ளார்கள் என்றால் சாதி வெறி நமது சமூகத்தில் எந்த அளவு புரையோடிப் போயுள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.

ஒரு முறை புசைலா என்ற பெண்மணி நபி அவர்களிடம் வந்து “இறைத்தூதரே நான் என் சமூகத்தை நேசிப்பது இன வெறியா” என்று கேட்டார்கள். அதற்கு நபி அவர்கள் “தன் சமூகத்தை ஒருவன் நேசிப்பது இனவெறி அல்ல. மாறாக தன் சமூகத்தைச் சார்ந்தவன் வரம்பு மீறி அநீதியை செய்யும்போது அவன் செய்வது தவறு என்று தெரிந்தும் அவன் தன் சமூகத்தைச் சார்ந்தவன் என்பதற்காக அவனுக்கு உதவினால் அதுவே இனவெறி” என்றார்கள்.

- நூல்: அஹ்மத்

Sunday, March 30, 2014

ஒபாமாவிடம் விருது வாங்கிய சவுதி பெண்மணி!



மாஹா அல் முனீஃப் அமெரிக்க அதிபர் ஒபாமாவிடமிருந்து பொது சேவைக்கான நற்சான்றிதழ் பத்திரத்தை பெற்றுக் கொண்டார். நேற்று சனிக்கிழமை இந்த நிகழ்வு தலைநகர் ரியாத்தில் நடைபெற்றது. சவுதியின் உள்நாட்டு பிரச்னைகள், மற்றும் குழந்தைகள் பாலியல் தொந்தரவு போன்ற கொடுமைகளுக்கு எதிராக தொடர்ந்து போராடியதற்காக இந்த விருது அளித்து கௌரவப்படுத்தப்பட்டுள்ளார். பொது சேவைகளில் சவுதி பெண்கள் அதிகம் ஆர்வம் காட்டுவது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

பெண்களை வீட்டிலேயே அடைந்து கிடக்கச் சொல்லி இஸ்லாம் எங்கும் சொல்லவில்லை. பெண்களின் கண்ணியத்துக்கு குறைவு ஏற்படாமல் அவர்கள் தங்களின் உடற்கூறுக்கு ஏற்றவாறான வேலைகளை தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கு இஸ்லாம் என்றுமே தடை சொன்னதில்லை. இதனை பல சவுதி பெண்கள் தற்போது உணர ஆரம்பித்துள்ளனர். அனைத்து இஸ்லாமிய நாடுகளும் இதே போன்று பெண்கள் முன்னேற்றத்தில் அதிக கவனம் செலுத்த முயற்சிக்க வேண்டும்.

தகவல் உதவி
சவுதிகெஜட்
29-03-2014

Saturday, March 29, 2014

சவுதி மாணவியின் மற்றுமொரு கண்டுபிடிப்பு!



தாயிப் பெண்கள் பல்கலைக் கழகத்தில் நானோ துறையில் ஆராய்ச்சி படிப்பை மேற்கொண்டு வருபவர் ஹிந்த் அப்துல் கபார். சவுதி பெண்மணியான இவர் தீயணைப்பு, பாதுகாப்பு, மற்றும் ராணுவத்தினருக்கான ஒரு உடையை நானோ துறையை பயன்படுத்தி கண்டுபிடித்துள்ளார்.

உம்முல் குரா பல்கலைக் கழகத்தில் இவரின் கண்டு பிடிப்பை பாராட்டி இவருக்கு டாக்டரேட் பட்டமும் கொடுக்கப்பட்டது. இவரது கண்டு பிடிப்பு பற்றி விவரிக்கும் போது 'இந்த உடையின் மொத்த எடையே 2.9 கிராம் தான் இருக்கும். ராணுவ வீரர்களும், பாதுகாப்பு துறையைச் சார்ந்தவர்களும் மிக இலகுவாக அணிவதற்கும், அணிந்த உடையை மிக இலகுவாக கழட்டவும் தோதான முறையில் வடிவமைத்துள்ளேன். நானோ டெக்னாலஜியைப் பயன்படுத்தி இந்த உடையை தயாரித்துள்ளேன். அரபுலகுக்கு இது ஒரு புதிய முயற்சி என்றே நினைக்கிறேன்' என்கிறார் மாணவி ஹிந்த் அப்துல் கஃபார்.

விழாவில் பலரும் இவரின் முயற்சியை பாராட்டி பேசினர். விழாவின் முடிவில் இவருக்கு இந்த சாதனையை நினைவு கூர்ந்து டாக்டரேட் பட்டமும் வழங்கப்பட்டது.

இஸ்லாமிய சட்ட திட்டங்களோடு வாழ்ந்து வரும் ஒரு பெண்ணுக்கு அந்த சட்டங்கள் வாழ்வில் சாதிக்க எந்த தடையும் ஏற்படுத்தவில்லை என்பதை இந்த பெண்மணியின் கண்டு பிடிப்பு நமக்கு அறிவுரித்துக் கொண்டிருக்கிறது. இது தான் உண்மையான பெண் விடுதலை. உடையை குறைப்பது அல்ல பெண் விடுதலை.

தகவல் உதவி
சவுதிகெஜட்
27-03-2014

Friday, March 28, 2014

வன்புணர்வு செய்து விட்டு சாதித் திமிரை காட்டுகிறார்கள்!



அந்தச் சிறுமியை நினைவிருக்கிறதா? சேலம் மாவட்டம் வாழப்பாடிக்கு அருகேயுள்ள சென்றாம்பாளையத்தில் 5 பேரால் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட பத்து வயது சிறுமி மறைந்து வெகுநாட்கள் ஆகிவிடவில்லை. பிப்ரவரி 14 அன்று இரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த அந்த 5ம் வகுப்புச் சிறுமியை 5 பேர் கொண்ட கும்பல் கூட்டு வன்புணர்வு செய்ததில் அவள் இறந்துவிட அவளை மரத்தில் தொங்கவிட்டுச் சென்றது. விசாரணையில் 5 பேர் கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர்.

பெற்ற குழந்தையை கொடூரமான நிலையில் இழந்து நிற்கும் அவளுடைய குடும்பத்துக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. ஊரில் யாரும் இவர்களுடன் பேச்சுவார்த்தையில் இல்லை என்பதால் ஊரைவிட்டு வெளியேறி விட்டதாகக் கூறுகிறார் சிறுமியின் தந்தையும் தறித் தொழிலாளியுமான பரமசிவம். அதிர்ச்சியிலிருந்து மீளமுடியாத அக்குடும்பம் சொந்த ஊரில் வாழ வழியின்றி வேறொரு ஊரில் உள்ள உறவினர் வீட்டில் தற்போது தங்கியிருக்கிறது. சிறுமியுடன் கூடப் பிறந்த தங்கையும் அண்ணனும் உள்ளனர். இருவரும் சென்றாம்பாளையத்தில் உள்ள பள்ளியில் படிக்கின்றனர். “ஊரை விட்டு விலக்கி வைத்ததுபோல யாரும் எங்களுடன் பேசுவதில்லை. பிள்ளைகள் பள்ளிக்கூடத்துக்குச் செல்ல பயப்படுகிறார்கள். அங்கே போனால் கூட படிப்பவர்களும் பேசுவதில்லையாம். சின்னவள் ஒன்றாம் வகுப்பு படிக்கிறாள். அதே பள்ளிக்கூடத்தில் தன்னுடன் படித்த அக்காவைக் குறித்து பள்ளியில் மற்றவர்கள் கேட்டுக்கொண்டே இருப்பதால் பள்ளிக்கூடத்துக்குப் போவதில்லை. பையனும் இதே காரணத்துக்காக போகவில்லை. இருவரும் மனதளவில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதனால் ஊரைவிட்டு வெளியேறிவிட்டோம். பரீட்சை மட்டும் இந்த ஆண்டு எழுதவைத்து வேற பள்ளிக்கூடத்தில் சேர்க்கவேண்டும்” என்கிறார் தாய் பழனியம்மாள்.

சிறுமியை கூட்டு வன்புணர்வு செய்த 5 பேரும் அதே ஊரைச் சேர்ந்தவர்கள். ”காவல்துறைக்குப் போனது பலபேருக்குப் பிடிக்கவில்லை. கைது செய்யப்பட்டிருப்பவர்களின் குடும்பத்தினர் எங்களை ஏறெடுத்துப் பார்க்காமல் கட்ந்துபோய்விடுகிறார்கள். ஆனால் ஊருக்குள் பலர் சொந்த சாதிக்காரர்களை நாங்கள் காட்டிக்கொடுத்ததாக புகார் சொல்லுகின்றனர். இத்தனை பெரிய இழப்பை சந்தித்திருக்கிறோம். ஆனால் ஊரில் ஒருவர் என்னவென்று கேட்பதில்லை. துக்கத்துக்கு வெளியூரிலிருந்து வந்தவர்களெல்லாம் போய்விட்டபின்னால் அனாதை போல அந்த ஊரில் நான்கு பேரும் இருந்தோம். பேச்சுவார்த்தையே இல்லை. அங்கிருக்கமுடியவில்லை. அதனால் என் வேறொரு ஊரில் எங்கள் சின்ன மாமியர் வீட்டில் இருக்கிறோம்.” என்று கூறும் பரமசிவத்துக்கு மீண்டும் சென்றாம்பாளையம் செல்வது குறித்து யோசிக்கவே முடியவில்லை என்கிறார். தும்பல் என்ற அருகிலுள்ள கிராமத்திற்குச் செல்ல முடிவெடுத்திருப்பதாகக் கூறினார். சென்றாம்பாளையத்தில் வீட்டிலேயே தறி வைத்திருக்கிறார். “அதை தும்பலுக்கு எடுத்துவந்து பொருத்த ஒன்றரை லட்சம் செலவாகும். அவ்வளவு பணம் இல்லை. என்ன செய்வதென்று தெரியவில்லை. கூலிவேலைக்குப் போயாவது குடும்பத்தைக் காப்பாற்றவேண்டும்” என்கிறார்.

பாலியல் வன்கொடுமைக்கு பிள்ளையை பறிகொடுத்துவிட்டு சொந்த ஊர் மக்களின் புறக்கணிப்பையும் தாங்கிக்கொள்ள முடியாமல் ஊரைவிட்டு வெளியேறும் அவல நிலைக்கு இன்று ஒரு குடும்பம் தள்ளப்பட்டிருக்கிறது. இவர்களுக்குத் ஆதரவாக உள்ள வழக்கறிஞர் ரத்தினம் “புதிய விசைத்தறி அமைக்க பரமசிவத்துக்கு வட்டியில்லாத கடன் வழங்க அரசு ஏற்பாடு செய்யவேண்டும். முதல்வர் அறிவித்த 3 லட்ச ரூபாயை உடனடியாக அக்குடும்பத்துக்கு வழங்கவேண்டும். முக்கியமாக அவரக்ளுக்கு பாதுகாப்பு அளிக்கவேண்டும். பிள்ளைகளின் படிப்பைத் தொடர அரசு உதவவேண்டும்” என்றார்.

(நன்றி : இந்தியா டுடே)

பூங்கொடியின் சடலம் கிடந்த இடத்தில் மது புட்டிகளும், போதைப் பாக்குகளும் இருந்ததாகவும், அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பதாகவும் அந்தப் பகுதியைச் சேர்ந்த வைரமணி தெரிவித்தார்.

அதேபோல, பூங்கொடியின் முகத்தில் வாசனை பவுடர் அதிகளவில் பூசப்பட்டிருந்தது. அத்துடன் மஞ்சள், குங்குமமும், இருந்தது. இதனால், அவரை மர்ம நபர்கள் யாரேனும் நரபலி கொடுத்திருக்கக் கூடுமா என்ற சந்தேகமும் பொதுமக்களுக்கு எழுந்துள்ளது. உயிரிழந்த பூங்கொடி பள்ளியில் நன்றாகப் படிக்கும் மாணவியாகத் திகழ்ந்ததாகவும், அவர் படுகொலை செய்யப்பட்டிருப்பது ஊரையே சோகத்தில் ஆழ்த்தியிருப்பதாகவும் மாணவியின் உறவினர் மு.பூமாலை தெரிவித்தார்.

இதற்கிடையே, மாணவியின் சாவில் மர்மங்கள் இருப்பதால், பிரேத பரிசோதனையை விடியோவில் பதிவு செய்ய வேண்டும் என்று சேலத்தைச் சேர்ந்த மக்கள் உரிமை இயக்கத் தலைவர் பூமொழி, காவல் துறைக்கு வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து, பிரேத பரிசோதனை நிகழ்வுகள் விடியோவில் பதிவு செய்யப்பட்டன.

Thursday, March 27, 2014

வெளிநாட்டில் வசிப்பவர்களும் வாக்களிக்கலாம்!

வெளிநாட்டில் வசிப்பவர்களும் வாக்களிக்கலாம்!

பணி நிமித்தமாகவோ, படிப்பு காரணமாகவோ வெளிநாடுகளில் வசிப்பவர்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றமுடியாமல் அவதிப்பட்டுக் கொண்டிருந்தனர். இனி அவர்களும் தங்கள் சொந்த தொகுதியில் நிற்கும், தனக்கு பிடித்த வேட்பாளருக்கு வாக்களிக்க முடியும்.

என்.ஆர்.ஐ-கள் (வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்) வாக்களிக்கக்கூடிய முறை பற்றிய விவரங்களை தேர்தல் கமிஷனின் இந்த இணைப்பில் காணலாம் :

http://eci.nic.in/eci_main/nri/regelectors.pdf


வாக்குரிமை கோரும் 6ஏ படிவத்தை இந்த இணைப்பில் இருந்து தரவிறக்கிக் கொள்ளலாம் :

http://eci.nic.in/eci_main/forms/Form-6A.pdf

வெளிநாடுகளில் வசிப்பவர்கள் இந்த 6ஏ படிவத்தை தரவிறக்கி, பூர்த்தி செய்யவேண்டும். பின்னர் அவர் வசிக்கும் நாட்டிலிருக்கும் தூதரக அதிகாரி ஒப்பமிட வேண்டும். பின்னர் இந்த படிவத்தை தன்னுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கும் சட்டமன்ற தொகுதியின் தேர்தல் அதிகாரிக்கு அனுப்பி வைக்கவேண்டும். தேர்தல் அதிகாரிகள் சான்றுகளை சரிபார்த்து, விண்ணப்பித்த வெளிநாடுவாழ் இந்தியர் வாக்களிக்க அனுமதி அளிப்பார்.

ஒரு கோடிக்கும் மேற்பட்ட இந்தியர்கள் வெளிநாடுகளில் வசிக்கும் நிலையில், என்.ஆர்.ஐ.களுக்கான வாக்களிக்கும் வசதி இந்திய ஜனநாயகத்தின் மாண்பை மேலும் வலுவாக்குகிறது.

உங்கள் உறவினர்கள் யாராவது வெளிநாட்டில் இருந்தால், இத்தகவலை அவர்களோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

நன்றி
தகவல் தந்தவர் யுவகிருஷ்ணா

பண்டிட் ரவி சங்கர் முகமது நபியைப் பற்றி கூறுகிறார்!



பவிஷ்ய புராணா

வேற்று நாட்டைச் சேர்ந்த வேற்று மொழி பேசக் கூடிய ஆன்மீகவாதி தன் தோழர்களோடு தோன்றுவார்.அவர் பெயர் முகமத். இவர்கள் அனைவரும் பாலைவனப் பிரதேசத்தில் தோன்றுவார்கள். இவர் மனிதருக்கெல்லாம் முன் மாதிரியாக திகழ்வார்.

- பவிஷ்ய புராணா - ப்ரதி சரக் பர்வ் - காண்டம் 3 - அத்தியாயம் 3 - சுலோகம் அய்ந்திலிருந்து எட்டு வரை.

மிகத் தெளிவாக முகமது நபி வருகையைப் பற்றி இங்கு சொல்லப் படுகிறது.

பவிஸ்ய புராணம்

'இந்த வேற்று நாட்டுத் தூதர் அரபுலகம் அனைத்தையும் தமது ஆளுகையின் கீழ்க் கொண்டு வருவார். ஆரிய தர்மம் அவரது நாட்டில் காணப்படாது.பல தெய்வ வணக்கம் ஒழிக்கப்படும்அவருக்கு பல எதிரிகள் உண்டாவார்கள்.அனைவரையும் வெற்றிக் கொண்டு உண்மையை நிலை நாட்டுவார்.அவர்கள் தாடி வைத்திருப்பார்கள்.மாமிசத்தை சாப்பிடுவார்கள்.பன்றிக் கறியை சாப்பிட மாட்டார்கள். வேதம் அனுமதித்த அனைத்தையும் சாப்பிடுவார்கள். பிரார்த்தனைக்காக அழைப்பும்(பாஙகு) கொடுப்பார்கள். அவர்கள் முசல்மான் என்று அழைக்கப் படுவார்கள்.

பவிஸ்ய புராணா - பிரதி சரக் பர்வ் - காண்டம் 3 - அத்தியாயம் 3 - ஸ்லோகம் பத்திலிருந்து இருபத்தி ஏழுவரை.

அது எப்படி இவ்வளவு துல்லியமாக பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே சொல்ல முடியும் என்ற கேள்வி நமக்கெல்லாம் வரும். அதற்கு இறைவன் குர்ஆனிலேயே பதிலும் அளிக்கிறான்.

'பூமியிலும் வானத்திலும் அணு அளவோ அதை விடச் சிறியதோ அதை விடப் பெரியதோ உனது இறைவனை விட்டும் மறையாது. அவை தெளிவான பதிவேட்டில் பதியப்பட்டிருக்கிறது.

- குர்ஆன் 10 :61

இந்த வசனத்தின் மூலம் எத்தனை நபி வருவார். எங்கெங்கெல்லாம் வருவார் அவர்களின் சட்டங்கள் என்பன போன்ற விபரங்களை ஏற்கெனவே எழுதி வைக்கப்பட்டுள்ள பதிவேட்டிலிருந்து எடுத்து இறைவன் கொடுத்திருக்கிறான் என்று விளங்க முடிகிறது. இந்து மத வேதங்கள் முன்பு இறைவனால் மனிதனுக்கு அருளப்பட்டவையே! ஆனால் வாய் வழியாகவே நீண்ட காலம் வந்ததால் அந்த வேதங்களில் பல இடைச் செருகல்கள் ஏற்பட்டு அதன் உண்மைத்துவத்தை இழந்து விட்டன. அந்த இறைச் செய்திகளில் ஒன்றிரண்டு இன்றும் இந்து கிறித்தவ வேதங்களில் உள்ளது. அதைத்தான் பண்டிட் ரவி சங்கரும் உறுதி செய்கிறார்.

Wednesday, March 26, 2014

மோடியின் ராமராஜ்யம் எப்படி இருக்கும்?



யோகா கேம்பில் மாணவர்களின் மேல் நடந்து சென்ற பிஜேபியின் வேட்பாளர். ஆட்சிக்கு வருவதற்கு முன்பே வளரும் மாணவ செல்வங்ளை கேவலப்படுத்தும் இவரெல்லாம் இந்திய தேசத்தின் அவமானங்கள் இல்லையா?

மாணவர்களின் தோளில் சவாரி செய்து முடித்து விட்டு அதன் பிறகு பொது மக்களிடம் மன்னிப்பும் கேட்கும் இந்த ஜென்மங்களை என்னவென்பது? குஜராத்தின் ராஜ்கோட்டிலிருந்து போட்டியிடும் மோகன் கண்டாரியா என்ற பிஜேபி வேட்பாளர்தான் இந்த அரிய செயலை செய்தது!

மோடியின் ராமராஜ்யத்தில் இன்னும் என்னவெல்லாம் தமாஷாக்கள் அரங்கேறப் போகிறதோ!

Monday, March 24, 2014

முஸ்லிமாக மதம் மாறுகிறேன் என்ற அரசர்!

முஸ்லிமாக மதம் மாறுகிறேன் என்ற அரசர்!

விஜய நகர அரச சாம்ராஜ்ஜியத்தின் கடைசி அரசர் ஸ்ரீரங்க ராயலு பிஜப்பூர் காரர்கள் கர்நாடகத்தை வென்று தெற்கிலிருந்து முன்னேறி வருவதையும் கோல்கொண்டா தளபதிகள் வடக்கிலிருந்து முன்னேறி வருவதையும் கண்டு தன்னுடைய ராஜ்ஜியம் தனது கரங்களிலிருந்து நழவிக் கொண்டிருப்பதை அவர் உணர்ந்தார். எனவே தக்காண சுல்தான்களிடமிருந்து தனக்குப் பாதுகாப்பு அளிக்கும் படி வேண்டி ராமராவ் என்ற பிரதிநிதியை ஒளரங்கஜேப்பிடம் அனுப்பி வைத்தார். ஆனால் இதில் தலையிட ஒளரங்கஜேப் விரும்பவில்லை.

ரங்கராயலுக்கு போர் நெருக்கடிகள் இன்னும் அதிகமானபோது ஸ்ரீனிவாஸ் என்ற பிராமணத் தூதுவரை ஒளரங்கஜேப்பிடம் அனுப்பி வைத்தார். 'இரண்டரை கோடி ரூபாயும், இருநூறு யானைகளும், தன்னிடமுள்ள ஆபரணங்களையும் தருவதுடன் வருடாந்திர வரியைத் தொடர்ந்து கட்டிடவும் தனது ராஜ்ஜியத்தை முகலாய சாம்ராஜ்ஜியத்துடன் இணைத்து விட்டு பின் தனது பகுதியை ஒரு ஜாகீராகத் தனக்குத் திரும்பக் கொடுப்பதற்கும் சம்மதம்' என்று ஸ்ரீரங்க ராயலு தெரிவித்தார்.

மேலும் 'தானும் தனது உற்றார் உறவினர்களும் குடிமக்களும் முஸ்லிமாக மதம் மாறுவதற்கு சம்மதிப்பதாகவும்' சொல்லி அனுப்பியவர் ஸ்ரீரங்கராயலு.

“….the Raja promised tp turn Muslim with all his relatives and dependents!……”

உள்ளத்தில் மாற்றம் ஏற்படாமல் ஆட்சி போகிறதே என்ற பயத்தினால் இஸ்லாமாவதை தாம் விரும்பவில்லை என்று கூறிய ஒளரங்கஜேப் அந்த அரசரின் கோரிக்கையை நிராகரித்தார்.

Sir Jadunath Sarkar, History Of Aurangzib, Calcutta, 1912 vol. 1, Page 248, 249

இந்த சம்பவத்தைப் பற்றி சொல்லும் போது 'இந்தக் கோரிக்கையின் பெயரில் எடுக்கப்பட்ட நடவடிக்கை இந்தியாவில் முகலாயர்கால ஆட்சியின் பண்பைப்பற்றி நல்ல விளக்கத்தைத் தருகிறது.'என்கிறார் ஜாதுநாத் சர்க்கார்.

History Of Aurangzeb, Page 249.

மாயா கோட்னானியின் இன்றைய நிலை!

மாயா கோட்னானியின் இன்றைய நிலை!



2002 குஜராத் கலவரத்தில் நரோடா பாட்டியா என்ற இடத்தில் நடந்த கூட்டு படுகொலையை அவ்வளவு சீக்கிரத்தில் நாம் மறந்து விட முடியாது. அந்த படுகொலைகளை முன்னின்று நடத்திய பிஜேபியின் எம்எல்ஏவும் நரேந்திர மோடி அமைச்சரவையில் அமைச்சராகவும் பணி புரிந்த 58 வயதான மாயா கோட்னானி என்ற மருத்துவரின் நிலை மிக பரிதாபகரமாக உள்ளது.

தற்போது டிபி நோயும் மன அழுத்தமும் ஏகத்துக்கு அவரை வாட்டி எடுக்கிறது. 28 வருடம் சிறை தண்டனையை பெற்றுள்ள அவர் இடையில் சிறிது காலம் பெயிலில் வந்தார். தற்போது திரும்பவும் சிறைக் கம்பிகளை எண்ணிக் கொண்டிருக்கிறார். நரேந்திர மோடி நம்மை காப்பாற்றி விடுவார் என்ற நம்பிக்கையில் அப்பாவி பொது மக்களை தீயில் பொசுக்கினார். ஒரு பெண்ணாகவும் மருத்துவராகவும் இந்த சமூகத்துக்கு செய்ய வேண்டிய பணிகள் இந்துத்வா கொள்கைகளால் அவரது ஞாபகத்துக்கு அன்று வரவில்லை. நரேந்திர பாய் நம்மை காப்பாற்றி விடுவார் என்று எண்ணியிருந்தார். இன்று நரேந்திர மோடியின் பிரதமர் கனவே ஆட்டத்தில் இருக்கிறது. டெல்லியில் பாராளுமன்றம் போவதற்கு பதில் டெல்லி திஹார் சிறையை நோக்கி அவரது பயணம் சென்று கொண்டிருக்கிறது.

மாயா கோட்னானியின் கணவர் சுரேந்திரா கோட்னானி கூறுகிறார்: 'பல நோய்கள் தற்போது மாயாவை தாக்கியுள்ளது. டிபி மற்றும் மன அழுத்தம் போன்றவற்றின் தாக்கத்தினால் அவரது எலும்புகள் மிகவும் பலவீனமடைந்து விட்டன. கோவிலின் விளக்கு ஒன்று தவறுதலாக அவர் மேல் விழுந்ததில் முகத்தில் தீப்புண்கள் வேறு ஏற்பட்டுள்ளன. எனது மனைவியின் நிலை எனக்கு மிகுந்த மன வேதனையை தருகிறது. அவர் பெயிலில் வந்த மூன்று மாதத்தில் 25 மருத்துவ மனைகளில் அவரின் உடலை காட்டியுள்ளோம். பல தனியார் மருத்துவ மனைகளிலும் வைத்து வைத்தியம் செய்தோம். எந்த முன்னேற்றமும் இல்லை.'

தலைமை மருத்துவர் டாக்டர் எம்எம் பிரபாகர் கூறுகிறார்: 'மாயா கோட்னானி அதிகமான மன அழுத்தத்துக்கு ஆளாகியுள்ளார். இது அதிகரித்தால் அது இவரை தற்கொலைக்கும் தூண்டும்'

இந்த ஆர்டிக்கிள் வந்த பக்கத்தில் ஒரு இந்து நண்பர் பின்னூட்டம் இட்டிருந்தார். அதனையும் பார்ப்போம்.

UMESH MEHTA SAID......

(Reply to sampat kotiyan/ahmedabad)Rather We should say to all those Hindu communal provoked by Narendra Modi and Pravin Togadia including SINGHAL that all of these killers of RSS/BJP/VHP/BAJARANGDAL/SHIVSENA/ABHINAVBHARAT too will face the severe consequences much more greater than MAYA KODNANI,see how she is being treated by LAW and SUPREME LAW being ALMIGHTY for her wrong doings against innocents to whom she had got killed via communal Hindus of RSS/BJP/VHP/BAJARANGDAL/SHIVSENA/ABHINAV BHARAT, so now it will be a direct justice from BHAGWAN THE LORD RAMA to punish severely these Hindu communal outlawed who were instrumental in killing innocent Indians in Gujarat that includes Hindu Dalit Karsevaks too,who were killed at the provocation of Narendra Modi by these out lawed of Hindu communal political out fits of within Gujarat and imported from out side of Gujarat.They all will face GRAVEST OF THE GRAVE PUNISHMENT much more severe then MAYA KODNANI, as THERE IS NO SOUND IN WHIP OF A BHAGWAN!!!

'நரேந்திர மோடிக்கும், அமீத் ஷாவுக்கும், பிரவீன் தொகாடியாவுக்கும், அசோக் சிங்கலுக்கும் இதை விட பெரும் கொடுமையான தண்டனைகளை இறைவன் கொடுப்பான். இறைவனின் தண்டனை எந்த சத்தமும் இல்லாமல் திடீரென்று அவர்களை பிடிக்கும்'

ஆம். கண்டிப்பாக! ஏனெனில் பாதிக்கப்பட்ட மக்களின் பிரார்த்தனைக்கு உடன் பதிலளிப்பதாக இறைவன் கூறுகிறான். சில நேரங்களில் தண்டனை தாமதப்படுத்துவது இதை விட மோசமான ஒரு அழிவைக் கொடுப்பதற்காகவே.

எனவே இந்துமதத்தை வளர்க்கும் எண்ணமுள்ளவர்கள் அதன் கொள்கைகளை சொல்லி தாராளமாக இந்து மதத்தை வளர்க்கலாம். இந்து மதம் திரும்ப விருப்பப்படும் இஸ்லாமியர்களையும் கிறித்தவர்களையும் அவர்கள் விருப்ப்பட்டால் தாராளமாக கொண்டு செல்லட்டும். ஆனால் இந்துத்வ வெறி தலைக்கேறி சிறுபான்மையினரை மிரட்டி கொலை செய்து கொள்ளையடித்து இந்து தர்மாவை காக்க புறப்பட்டீர்கள் என்றால் மாயா கோட்னானிக்கு நிகழ்ந்த இந்த துயரத்தையே நீங்களும் அனுபவிப்பீர்கள். நீங்கள் துன்பப்படும் போது உங்களை கொம்பு சீவி விட்ட நரேந்திர மோடியோ, அமீத் ஷாவோ தமிழகத்தின் எச்.ராஜாவோ அன்று உங்களுக்கு எந்த உதவியும் செய்ய முடியாத நிலையைத்தான் நாம் பார்த்து வருகிறோம்.

இன்னும் சில மாதங்களில் மாயா கோட்னானியை விட இழிவான நிலையை நரேந்திர மோடி அடையும் நாள் வெகு தொலைவில் இல்லை.

தகவல் உதவி

டைம்ஸ் ஆஃப் இந்தியா
12-02-2014

Sunday, March 23, 2014

திக்குத் தெரியாத காட்டில் காங்கிரஸ் கட்சி!



வாய்ப்பிருந்தும் அதனை சரி வர பயன்படுத்தாத கூமுட்டைகள் என்றால் அது இந்த காங்கிரஸ் கட்சிதான். இன்று தமிழகத்தில் இலங்கை பிரச்னையை வைத்து காங்கிரஸை வறுத்தெடுக்கின்றனர் தமிழ் ஆர்வலர்கள். ஆனால் உண்மையில் இலங்கை தமிழர்களுடன் நான் பேசிய வகையில் காங்கிரஸை பலர் பாராட்டவே செய்கின்றனர். தற்போது யாழ்பாணம் பழைய நிலைக்கு திரும்பியுள்ளது. முன்பு விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டில் எதற்கெடுத்தாலும் வரி கட்ட வேண்டும். இன்று அது போன்ற நிலை இல்லை. இலங்கை முழுவதும் சுதந்திரமாக எங்களால் செல்ல முடிகிறது. முன்பு காலையில் எனது பிள்ளை வீட்டை விட்டு வெளியேறினால் இரவு வீடு திரும்புவானா என்ற பயத்தில் வாழ்ந்தோம். இன்று அந்த பயம் இல்லை. ஆனால் போரின் கடைசியில் அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்டது ரணத்தை ஏற்படுத்தக் கூடியது. அது கூட வன்னி மக்களை விடுதலைப் புலிகள் மனித கேடயமாக பயன்படுத்தியதே என்று பலர் கூறுவதை நான் கேட்டேன்.

இலங்கை ராணுவத்தையும் ராஜபக்ஷேயையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. தவறு செய்தவர்கள் தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும். ஆனால் அதனை வைத்து வைகோ, நெடுமாறன் போன்றவர்கள் அரசியல் பண்ணி அந்த மக்களுக்கு மேலும் துன்பத்தைத்தான் தந்து கொண்டிருக்கிறார்கள். இன்று ராஜபக்ஷேயின் ஆதரவாளரான மோடியோடு கை கோர்த்து விட்டார் வைகோ. அவரது அரசியல் மறு வாழ்வுக்காக ஈழத் தமிழர் பிரச்னை சற்று மூட்டை கட்டி வைக்கப்பட்டுள்ளது.

ஈழத் தமிழர்களைப் பொறுத்த வரை தற்போது நிம்மதியாக உள்ளனர். இந்திய அரசின் செலவில் பல கோடி ரூபாய் செலவில் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த வீடுகளையும் அந்த மக்களையும் சோனியாவும் ராகுலும் சென்று சந்தித்து மற்ற அடிப்படை வசதிகளையும் பெருக்கிக் கொடுத்திருந்தால் காங்கிரஸின் மேலுள்ள கோபம் சற்றே தணிந்திருக்கும்.

மோடி வைகோ போன்றவர்களெல்லாம் வெறும் வாயால் முழம் போட்டுக் கொண்டிருக்கின்றனர். இன்று விடுதலைபலிகள் ஒழிக்கப்படாமல் இருந்திருந்தால் இலங்கை பிரச்னை இன்னும் 20 ஆண்டுகள் ஆனாலும் தீரப் போவதில்லை. ஐநாவின் அச்சுறுத்தலுக்கு பயந்தாவது ராஜபக்ஷே தமிழர்களுக்கு ஏதாவது செய்தாக வேண்டும் என்ற நிர்பந்தத்தில் உள்ளார். சோனியா காந்தி ராஜபக்ஷேயிடம் மேலும் பல நெருக்கங்களை கொடுத்து தமிழர்களின் வாழ்வுரிமைக்கு கோரிக்கை வைத்து அதனை தமிழ் மக்களையும் சென்றடையுமாறு பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். காங்கிரஸூக்கு விடுதலைப்புலிகள் தான் எதிரிகளே யொழிய அப்பாவி இலங்கை தமிழ் மக்கள் அல்ல.

ப.சிதம்பரம் போன்றவர்கள் இதனை அழகாக சோனியாவிடம் எடுத்துரைத்து தமிழர்களின் நலனுக்கு ஏற்றவாறு காரியமாற்ற அறிவுரை வழங்க வேண்டும். இலங்கை தமிழர்களுக்காக காங்கிரஸ் செய்து வரும் நலத் திட்டங்களை தமிழக மக்களை சென்றடையுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். கல்விக் கடன் பெறாத குடும்பங்களே தமிழகத்தில் இல்லை எனும் அளவுக்கு ஏழை மக்களும் இன்று டாக்டராகவும் இன்ஜினியராகவும் பரிணமிக்க முடிகிறது என்றால் அதற்கும் காங்கிரஸே காரணம். இவை எல்லாம் மக்களிடம் சரியாக சென்றடையவில்லை.

மோடியின் தலைமையில் ஆட்சி அமையாமல் தடுக்கும் சக்தி ஆம் ஆத்மிக்கும் காங்கிரஸூக்கும் உண்டு. ஏனெனில் தேர்தலுக்கு பிறகு திமுகவும் அதிமுகவும் மோடிக்கு அதரவு தருவதில் எந்த வெட்கமும் பட மாட்டார்கள் என்பது நமக்கு தெரிந்ததே!

காங்கிரஸை ஆதரிப்பது ஒன்றுதான் முஸ்லிம்களுக்கு உள்ள ஒரே வழி என்ற மமதையில் இஸ்லாமியர்களின் இட ஒதுக்கீட்டில் அசட்டையாக இருந்தது காங்கிரஸ். ஆனால் இன்று மாற்று சக்தியாக ஆத் ஆத்மி விசுவரூபம் எடுத்துள்ளது. மோடியின் பிரதமர் கனவை கிட்டத்தட்ட தூரமாக்கி விட்டார் அரவிந்த் கெஜ்ரிவால். இதிலிருந்து பாடம் படித்து காங்கிரஸ் வருங்காலங்களில் இஸ்லாமியரின் இட ஒதுக்கீட்டில் கவனம் செலுத்த வேண்டும். காங்கிரஸின் ஒட்டு மொத்த முஸ்லிம்களின் வாக்கும் தற்போது ஆம் ஆத்மியின் பக்கம் திரும்பியுள்ளதை நோக்க வேண்டும். தமிழகத்தில் பாரம்பரிய காங்கிரஸ் வாக்கு வங்கி எப்போதும் உண்டு. இஸ்லாமியரின் வாக்கும் கணிசமாக காங்கிரஸூக்கு வரும். மோடியை ஆட்சிக் கட்டில் ஏற விடாமல் தடுக்கும் எண்ணம் உடையவர்களின் வாக்கும் காங்கிரஸூக்கு செல்லும்.

எனது கணிப்பின்படி காங்கிரஸ் 150 இடங்களிலும், பிஜேபி 100 இடங்களிலும், ஆம் ஆத்மி 100 இடங்களிலும் மற்ற பிராந்திய கட்சிகள் 150 இடங்களிலும் வரும் என்று நினைக்கிறேன். எனது கணிப்பு சரியாக இருந்தால் ஆம் ஆத்மி துணையோடு காங்கிரஸ் ஆட்சிக் கட்டில் ஏறும் என்றே நினைக்கிறேன். முடிவை பொறுத்திருந்து பார்ப்போம்.

Saturday, March 22, 2014

இனிப்பு நீர், இரத்த அழுத்தம் அறியும் கைக்கடிகாரம்!



மன்னர் காலித் பல்கலைக் கழகத்தில் பாடம் பயிலும் சவுதி மாணவி காதா அல் கஹ்தானி. இவர் ஒரு புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். இனிப்பு நீர், இரத்த அழுத்தம், இதய துடிப்பு, உடலின் உஷ்ண நிலை போன்றவற்றை துல்லியமாக கணக்கிட்டு நமக்கு அடிக்கடி அறிவுரித்துக் கொண்டிருக்கும் ஒரு கைக்கடிகாரத்தை உருவாக்கியுள்ளார்.

இது பற்றி இவர் கூறும் போது 'எனது பாட்டிக்கு இனிப்பு நீர், இரத்த அழுத்தம், இதய துடிப்பு சீரின்மை போன்றவைகளால் படுக்கையில் இருக்கும் போது அவருக்கு துணையாக நான் இருந்தேன். பாட்டி படும் சிரமத்தையும் பார்த்தேன். இது போன்ற நோயாளிகளுக்காக ஒரு சாதனம் இருந்தால் எவ்வளவு வசதியாக இருக்கும் என்று என்னுள் ஒரு உத்வேகம் பிறந்தது. அதன் அடிப்படையில் இந்த கடிகாரத்தை வடிவமைத்துள்ளேன். இதனால் எனது பாட்டியை போன்ற பல நோயாளிகளின் சிரமம் குறையும்' என்கிறார்.

ஆடை குறைப்பும் ஆண்களோடு ஒட்டி உரசி செல்வதும்தான் பெண்களின் முன்னேற்றம் என்று பலர் நினைத்து வருகின்றனர். பெண்களின் கண்ணியம் குறையாமல் அவர்களின் கற்புக்கு பாதகம் ஏற்படாமல் அவர்களின் முன்னேற்றத்தை இஸ்லாம் வரவேற்கவே செய்கிறது. ஹிஜாப் அல்லது புர்கா இந்த பெண்ணின் அறிவை மட்டுப்படுத்தவில்லை.

தகவல் உதவி
சவுதி கெஜட்
21-03-2014

ஜம்ஜம் நீர் இனி உங்களைத் தேடி வரும்!



மெக்காவில் கஃபாவை சுற்றி வரும் போது பலருக்கும் தண்ணீர் தாகம் எடுக்கும். அருகிலேயே குளிரூட்டப்பட்ட ஜம்ஜம் நீர் கேண்களில் வரிசையாக வைக்கப்பட்டிருக்கும். கஃபாவை சுற்றி வரும் நபர்களுக்கு சிரமம் ஏற்படக் கூடாது என்பதற்காக அவர்களைத் தேடியே இனி குளிர்ந்த ஜம்ஜம் நீர் வரும். அதற்கான ஏற்பாட்டை சவுதி அரசு செய்துள்ளது. இனி கஃபாவை சுற்றுபவர்கள் தாகத்தில் நீரை தேடி அலைய வேண்டியதில்லை. உங்களைத் தேடியே நீர் வரும்.

எல்லா புகழும் இறைவனுக்கே!

தகவல் உதவி
சவுதி கெஜட்
21-03-2014

Thursday, March 20, 2014

'மோடி விகாஸ் புருஷ் அல்ல வினாஷ் புருஷ்' உமாபாரதி!



'நரேந்திர மோடியை இந்த இந்திய ஊடகங்கள் ஊதி பெரிதாக்கி ஒரு பொய்யான தோற்றத்தைக் கொடுத்து வருகின்றன. ஊதிய அந்த பலூனின் காற்றை அதே பத்திரிக்கைகளே வெளியாக்க வேண்டும். இந்துக்களும் முஸ்லிம்களும் குஜராத்தில் ஒரு வித அச்ச உணர்வுடன் வாழ்ந்து வருகின்றனர். 'மோட்டா பாய்' என்று தான் அவரை நான் அழைப்பேன். இந்த மோடியை 17 வருடங்களாக எனக்குத் தெரியும். இவர் யார் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். இந்த ஐந்து வருடங்களில் குஜராத் மிக பின்னோக்கி சென்று விட்டது. இதை உணராத பலரும் இவரை 'விகாஸ் புருஷ்' என்று அழைக்கின்றனர். இவர் விகாஸ் புருஷ் அல்ல இந்த நாட்டை அழிக்க வந்த 'வினாஸ் புருஷ்' என்று சொல்லிக் கொள்கிறேன்.'

இவ்வளவு காட்டமாக மோடியை விமரிசிக்கும் உமாபாரதி இந்துத்வாவின் மற்றும் பிஜேபியின் முக்கிய தலைவர்களில் ஒருவராவார். பாம்பின் கால் பாம்பறியும் என்பது போல் மோடியை மிக நன்றாகவே கணித்து வைத்துள்ளார் உமாபாரதி. ஆனால் இந்த ஏமாற்றுக் காரனை பிரதமராக்க ஒரு பெரும் சதியே இந்தியா முழுக்க நடந்து வருகிறது. இதற்கு நமது பத்திரிக்கைகளும், படித்தவர்களில் ஒரு பிரிவினரும் முழு மூச்சாக வேலை செய்வதைப் பார்த்து சிரிக்காமல் இருக்க முடியவில்லை. இவர்கள் என்னதான் முயற்சித்தாலும் மோடி என்றுமே இந்நாட்டு பிரதமராக முடியாது. நமது நாட்டு மக்கள் மிக திறமைசாலிகள். யாரை எங்கே வைக்க வேண்டும் என்பது நன்றாகவே அவர்களுக்குத் தெரியும்.

Tuesday, March 18, 2014

வெட்கம் கெட்ட மனிதர்கள் இவர்கள்தானோ!



நரேந்திர மோடிக்கு அமெரிக்கா கிளீன் ஷீட் வழங்கி விட்டது. மோடியின் மீதிருந்த களங்கம் துடைக்கப்பட்டு விட்டது என்று பிஜேபி சில ஆண்டுகளுக்கு முன்பு கூறியது நினைவிருக்கலாம். இந்தியன் எக்ஸ்பிரஸும் மற்றும் நமது ஊடகங்களும் இது சம்பந்தமாக ஒரு ஆர்டிகிளை எழுதி மோடி புராணம் பாடியன. நமது தமிழ் பத்திரிக்கைகளும் 'ஆஹா மோடி கேடி அல்ல: அவர் புனிதர்' என்று வழக்கமான பல்லவியைப் பாடின.

ஆனால் சமீபத்தில் விக்கி லீக்ஸ் தனது அறிக்கையில் மோடியைப் பற்றி அவ்வாறான நிலைப்பாடு அமெரிக்காவுக்கு இல்லை என்றும் இந்த தகவல் தவறாக பரப்பப்பட்ட ஒன்று என்றும் கூறுகிறது. வழக்கமாக பொய்களையே கூறி வரும் பிஜேபியினர் இந்த விஷயத்திலும் தங்களின் திறமையைக் காட்டியுள்ளனர்.



பல கூட்டங்களில் மோடியே தனக்கு கிளீன் ஷீட் கிடைத்து விட்டதாக புளுகியிருக்கிறார். "Bayiyo baheno....see amrika saying i am incorruptible.." :-).

பொய்...பொய்...பொய் என்று எங்கு திரும்பினாலும் தனது பெயரை முன்னிறுத்த அனைத்து விதமான பிராடு வேலைகளையும் செய்து வரும் இவரிடம் நமது நாடு சென்றால் விளங்குமா?

இது பற்றி பிஜேபியின் செய்தி தொடர்பாளர் ஷாநவாஸ் ஹூசைனிடம் பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு 'விக்கி லீக்ஸிலிருந்தோ அல்லது அதன் உரிமையாளர் ஜூலியன் அசாஞ்ஜேயிடமிருந்தோ எங்களுக்கு எந்த நற்சான்று பத்திரமும் தேவையில்லை' என்று கோபமாக பதிலளித்துள்ளார். தங்களது பொய்களை விக்கி லீக்ஸ் இவ்வாறு அதுவும் தேர்தல் நேரத்தில் வெளியிட்டது பிஜேபியினரை பெரும் தர்ம சங்கடத்துக்குள்ளாக்கியுள்ளது.

"The nation does not need a certificate from Julian Assange or Wikileaks about Modi, and neither does Modi to win the elections. What the people want is just good governance,"

வெட்கம் கெட்ட ஜென்மங்கள்! தங்களுக்கு ஆதரவாக அமெரிக்காவும் விக்கி லீக்ஸூம் நடந்தால் புகழ்வதும், தங்களுக்கு எதிராக பேசினால் அதையே திருப்பிப் போடுவதும் இவர்களுக்கு கை வந்த கலை என்பதை அறியாதவர்களா நாம்!

http://www.wikileaks.org/plusd/cables/06MUMBAI1986_a.html

http://www.truthofgujarat.com/narendra-modis-lie-america-admitting-hes-incorruptible-trashed-wikileaks/





.

Monday, March 17, 2014

நேற்று பெங்களூரில் கெஜ்ரிவாலுக்கு கூடிய கூட்டம்!



நேற்று பெங்களூரில் நடந்த கெஜ்ரிவாலின் கூட்டத்துக்கு திரண்ட மக்கள் கூட்டத்தின் ஒரு பகுதி!



நம்ம மோடி அண்ணாச்சிக்கு வட மாநிலங்களில் உள்ள ஆதரவு எத்தகையது என்பதை இந்த கூட்டத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். :-)

Sunday, March 16, 2014

கல்லடி படுவதால் மரம் காய்க்காமல் போவதில்லை!

கல்லடி படுவதால் மரம் காய்க்காமல் போவதில்லை!

எம்ஜிஆர் முதல்வராக பதவி ஏற்றவுடன் கருணாநிதிக்கு அரசியல் எதிர்காலம் அவ்வளவுதான் என்று தவறாக கணித்துக் கூறியவர்கள் பலர். குடும்ப அரசியலாலும், ஊழல் குற்றச்சாட்டுகளாலும், எம்ஜிஆரின் சினிமா கவர்ச்சியினாலும் திமுக அன்று சீந்துவாரின்றி கிடந்தது. எல்லோரும் ஒதுக்கித் தள்ளிய கலைஞரை இஸ்லாமிய சமூகம் மட்டும் உதறித் தள்ளவில்லை. அன்போடு அரவணைத்தது. முஸ்லிம்கள் அதிகம் உள்ள இடங்களில் திமுகவின் வாக்கு வங்கி என்றுமே குறையாமல் இருந்தது. காயல்பட்டினத்தில் ஒரு பிரசார கூட்டத்தில் திமுக அனுதாபிகளான சில முஸ்லிம்கள் எம்ஜிஆரின் வாகனத்தையும் சேதப்படுத்தி, அவரது தொப்பியே கீழே நழுவும் அளவுக்கு தீவிரமாக செயல்பட்டனர். அந்த அவமானத்துக்குப் பிறகுதான் 'முஸ்லிம்களுக்கு முஸ்லிம் லீக் இருக்கும் போது இந்துக்களுக்கு இந்து முண்ணனி இருப்பதில் என்ன தவறு' என்று அறிக்கை விட்டு எம்ஜிஆர் இந்துத்வா வளருவதற்கு ஆசி வழங்கினார். ஆக தமிழகத்தில் இந்துத்வாவின் பக்கம் எம்ஜிஆரை சாய்த்ததில் கலைஞர் அபிமானிகளான அனைத்து முஸ்லிம்களுக்கும் பங்கு உண்டு.

அடுத்து முகமது நபியவர்களை புகழ்ந்து மீலாது மேடைகளில் கலைஞர் பேசுவார். காயிதே மில்லத்துக்கு மணி மண்டபம் கட்டுவார். மீலாது நபிக்கு விடுமுறை விடுவார். நோன்பு கஞ்சி குடிப்பார். அவ்வப்போது இந்து மத மூடப்பழக்கங்களை சாடி அறிக்கை விடுவார். இதுவே எங்களுக்கு போதும் என்று முஸ்லிம்கள் தங்களின் வாக்குகளை சில ஆண்டுகள் முன்பு வரை தொடர்ந்து செலுத்தி வந்தனர். எல்லா இடத்திலும் எம்ஜிஆர் வெற்றிபெற்றாலும் சென்னை மாநகரம் மட்டும் திமுகவின் பிடியில் இருக்கும். அதற்கு காரணம் ஒட்டு மொத்த முஸ்லிம்களின் வாக்கு. நானே கூட பத்தாம் வகுப்பு பாடப் புத்தகத்தில் 'எம்ஜிஆர் ரசிகன்: கலைஞரின் தொண்டன்' என்று எழுதி ஆசிரியரிடம் குட்டு வாங்கிய அனுபவம் உண்டு. 

எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு திரும்பவும் கலைஞர் முதல்வராகிறார். அப்போதுதான் தவ்ஹீத் ஜமாத்தும் தமிழகத்தில் வேரூன்ற ஆரம்பிக்கிறது. இளைஞர்கள் பெரும்பாலானவர்கள் தவ்ஹீத் ஜமாத்தின் பிஜேயின் பேச்சால் கவரப்பட்டு குர்ஆனையும் ஹதீஸையும் கையில் எடுக்கிறார்கள். அப்போதுதான் முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு கொடுத்தால்தான் நமது பாதுகாப்புக்கு உத்தரவாதம்: கல்வி அரசு வேலைகளில் முஸ்லிம்கள் அமர வேண்டும்: என்ற கோரிக்கையை பிஜே வைக்கிறார். திமுக அபிமானிகளான முஸ்லிம் லீக் ஏன் முதல்வரிடம் இஸ்லாமியரின் தனி இட ஒதுக்கீடு பற்றி பேசுவதில்லை என்று கூட்டங்களில் கேள்வி எழுப்பினார் பிஜே. அப்துல் சமது சாஹிபும், அப்துல் லத்தீப் சாஹிபும் பிஜேயிடம் 'இந்தியாவில் முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு கிடைத்து விடும் என்று நம்புகிறீர்களா?' என்று சற்று கிண்டலோடு கேட்டார்கள். கண்டிப்பாக கிடைக்காது என்றுதான் அவர்களும் நம்பியிருந்தார்கள். பரவலாக தவ்ஹீத் ஜமாத் தமிழகமெங்கும் வைத்த தனி இட ஒதுக்கீடு கோரிக்கையை பரிசீலித்த அப்துல் லத்தீப் ஒரு முறை இது சம்பந்தமாக சட்டமன்றத்தில் பேசவும் ஆரம்பித்தார். அதற்கு பதிலளித்த கலைஞர் கோபமாக 'தமிழகத்தில் கலவரத்தை தூண்ட முயற்சிக்கிறீர்களா' என்று சொல்லி அன்றே அவரது வாயை அடைத்தார் கலைஞர்.

ஆனால் பிஜே அசரவில்லை. தனது அனைத்து கூட்டத்திலும் 'கருணாநிதிக்கு இனி முஸ்லிம்களின் ஓட்டு தேவை என்றால் தனி இட ஒதுக்கீடு தந்தாலே சாத்தியம்' என்று கோரிக்கை வைக்க ஆரம்பித்தார். அந்த நேரத்தில் பலரின் சூழ்ச்சிகளால் தமுமுக தனியாக பிரிகிறது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் உதயமாகிறது. முன்பை விட மிக வீரியமாக இட ஒதுக்கீட்டுக்கான கோரிக்கை வைக்கப்படுகிறது. எம்பி சீட்டோ, எம்எல்ஏ சீட்டோ இவர்கள் கேட்பதில்லை. ஒட்டு மொத்த இஸ்லாமியருக்கும் இட ஒதுக்கீட்டைத்தானே கேட்கிறார்கள் என்பதால் தவ்ஹீத் ஜமாத்தின் கோரிக்கையை ஜெயலலிதாவும் ஏற்கிறார். ஆணையம் அமைக்கிறார். பிறகு வந்த கலைஞர் அந்த ஆணையத்தின் வழி காட்டுதலின் படி 3.5 சதவீதம் இட ஒதுக்கீட்டைத் தருகிறார்.

தற்போது கல்வி வேலை வாய்ப்புகளில் முஸ்லிம்கள் கணிசமாக சிரமமின்றி உள்ளே நுழைய இந்த இட ஒதுக்கீடு மிக உதவியாக உள்ளதாக பலரும் சொல்கின்றனர். முன்பு ஆளும் வர்க்கத்தினால் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டோம். அது தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழகத்தில் பெரும் மதக் கலவரங்கள் நடைபெறாமல் இருக்க இங்கு தவ்ஹீத் ஜமாத், தமுமுக, எஸ்டிபி போன்ற இயக்கங்கள் வலுவாக இருப்பதும் ஒரு காரணம். சிறிய தவறு நடந்தாலும் 1000, 2000 பேர் என்று உடன் கூடி நியாயத்துக்காக போராடும் வழி முறையையும் நாம் அனைவரும் கடைபிடிப்பதும் ஒரு காரணம். முன்பெல்லாம் பஸ்ஸை உடைப்போம், பொதுச் சொத்துக்களை சேதப்படுத்துவோம், காவலர்களை தாக்குவோம். இது சரியான வழி முறை அல்ல. ஜனநாயக நாட்டில் போராட்டத்தின் மூலம் பலதையும் வென்றெடுக்கலாம் என்று தவ்ஹீத் ஜமாத் இளைஞர்களையும் பெண்களையும் களத்தில் இறக்கியது.

தவ்ஹீத் ஜமாத் பெற்ற வெற்றியைப் பார்த்து மற்ற இயக்கங்களும் இதே போராட்ட முறையை கையிலெடுத்தன. அவர்களும் பல கோரிக்கைகளில் வெற்றியைப் பெற்றுள்ளனர். தமிழ்நாடு மற்றொரு குஜராத்தாக மாறாமல் இருப்பதற்கு இந்த போராட்ட முறை மிகச் சிறந்த வழியாக உருவெடுத்துள்ளது.

தற்போது தேர்தல் நெருங்கியுள்ளது. இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் எதற்காக அதிமுகவை ஆதரித்தோம் என்பதற்கு விளக்கத்தை கொடுத்துள்ளார்கள். அவர்களின் முடிவு தவறாகவும் இருக்கலாம்: சரியாகவும் இருக்கலாம். இறைவனே உண்மையை அறிந்தவன். இந்த தேர்தல் முடிவை காரணமாக வைத்து தவ்ஹித் ஜமாத்தை வசை பாடுவதையே குறிக்கோளாக கொண்டு சிலர் தினம் பதிவுகளை இடுகின்றனர். தேர்தல் இன்று வரும்: நாளை சென்று விடும். ஆனால் தவ்ஹீத் ஜமாத்தின் பணிகள் இதனால் எந்த விதத்திலும் தொய்வடைந்து விடாது. இறைவன் நாடினால் தொய்வடைய விடவும் மாட்டோம்.

இந்த தவ்ஹீத் ஜமாத்தை எதிர்ப்பவர்களின் வாரிசுகளுக்காகவும் நாங்கள் தொடர்ந்து பாடுபட்டு வருவோம் என்றும் சொல்லிக் கொள்கிறோம்.

கல்லடி படுவதால் மரம் காய்க்காமல் போவதில்லை!


Saturday, March 15, 2014

மோடியின் குஜராத்தில் மட்டுமே இது சாத்தியம்!



1. மோடியின் குஜராத்தில் மட்டுமே கோழிகள் பெரும் பெரும் முட்டைகளை இடுகின்றன.

இதைக் கொண்டு இனி முழு இந்தியாவுக்கும் சப்ளை செய்து ராம ராஜ்யம் அமைப்போம்.

2. மோடியின் குஜராத்தில் மட்டுமே இது போன்ற தேங்காய்களை பார்க்க முடியும்.

இதைக் கொண்டு இனி முழு இந்தியாவுக்கும் ஏன் முழு உலகுக்குமே தேங்காய்களை நாங்கள் சப்ளை செய்வோம்.

3. மோடியின் குஜராத்தில் மட்டுமே இது போன்ற செங்கல் சூளைகளை பார்க்க முடியும்.

இதைக் கொண்டு இனி முழு இந்தியாவுக்கும் செங்கல் சப்ளை செய்வோம். ராமர் கோயில் கட்ட இங்கிருந்து செங்கல்லை அனுப்புவோம்.

4. மோடியின் குஜராத்தில் மட்டுமே கட்டப்பட்டுள்ள உலக பெருஞ்சுவர்.

இதைக் கொண்டு இனி எந்த பாகிஸ்தானிகளும் பங்களாதேசிகளும் குஜராத்தில் நுழையாமல் பார்த்துக் கொள்வோம்.

5. மோடியின் குஜராத்தில் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட மின்சார கோபுரங்கள்.

இதைக் கொண்டு இனி முழு இந்தியாவுக்கும் தேர்தலுக்கு பிறகு குஜராத் மின்சார சப்ளை செய்யும்.

டிஸ்கி: இப்படியான ஒரு செய்தியை பணத்தை வாங்கிக் கொண்டு நமது இந்திய ஊடகங்கள் செய்தியாக வெளியிடலாம். இது வரை மோடியைப் பற்றி இவ்வாறான செய்திகளைத்தான் ஒட்டு மொத்த ஊடகங்களும் தந்து வருகினறன. தேர்தல் தேதி வேறு அறிவிக்கப்பட்டு விட்டன. இது போன்ற செய்திகள் இனி நிறைய வரும். வருங்காலங்களில் யாரும் அதிர்ச்சியடைந்து விடாமல் இருக்க முன் கூட்டியே அந்த செய்திகளை தற்போது நாம் தந்து விட்டோம். :-)

Friday, March 14, 2014

மோடிக்கு அடுத்த அடி குஜராத்தில்!



மோடிக்கு அடுத்த அடி குஜராத்தில்!

திரு குல்திப் சர்மா (முன்னால் ஐபிஎஸ் ஆபிஸர்) ஆம் ஆத்மி பார்ட்டியில் இணைந்துள்ளார். குஜராத்தில் காவல் துறையில் நீண்ட காலமாக பல பதவிகளை திறம்பட வகித்தவர். இது போன்ற ஒரு முக்கியஸ்தர் மோடியை எதிர்த்து ஆம் ஆத்மி பார்டியில் இணைந்திருப்பது பிஜேபி வட்டாரத்தில் திகைப்பை ஏற்படுத்தியுள்ளது. இனி மோடியின் மறைக்கப்பட்ட மேலும் பல கொலைகளும், கொள்ளைகளும் வெளிச்சத்துக்கு வரலாம்.

பணி செய்து வந்த ஆரம்பத்திலிருந்தே மோடியோடும் அமித்ஷாவோடும் மோதிக் கொண்டிருப்பவர். இவரது சகோதரர் பிரதிப் சர்மாவையும் இவர்கள் விட்டு வைக்கவில்லை. ஊழல் குற்றச்சாட்டை சுமத்தி சஸ்பெண்ட செய்தனர். ஆனால் தீர்ப்பு ஐஏஎஸ் ஆபிஸருக்கு சாதகமாக வரவே பதவி உயர்வு பெற்று பணிக்கு திரும்பினார். குஜராத்தில் தற்போது மோடிக்கு திரும்பிய இடமெல்லாம் எதிரிகளாக மாறி வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட மக்களின் பிரார்த்தனை வீண் போகாது அல்லவா!

வழக்கம் போல் இந்த செய்தியையும் 'உண்மையின் உரை கல்லான' தின மலர் வெளியிடாது. அதனாலென்ன நாம் வெளியிட்டு விடுவோம். :-)


தகவல் உதவி
ஆம் ஆத்மி

ஒட்டிப் பிறந்த குழந்தைகள் பிரிக்கப்படுகின்றனர்!



இரு தலைகளும் ஒட்டிப் பிறந்த இந்த சிரிய பெண் குழந்தைகளுக்கு தற்போது ஒரு வருடமும் எட்டு மாதமும் ஆகிறது.. தாகி, யாகின் என்பது இந்த இரு சிறுமிகளின் பெயர். இந்த இரு குழந்தைகளின் மூளைப் பகுதி தனித் தனியாக இருப்பதால் பிரிக்கும் சாத்தியக் கூறுகள் உள்ளதாக மருத்துவ அறிக்கை கூறுகிறது. வசதியற்ற இந்த இரு சிறுமிகளின் பெற்றோர் சவுதி மன்னர் அப்துல்லாவிடம் குழந்தைகளின் அறுவை சிகிச்சைக்கான உதவியை நாடினர்.

இந்த பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்ற மன்னர் இரு குழந்தைகளையும் பிரிக்கும் உத்தரவை மருத்துவ குழுவுக்கு இட்டுள்ளார். இந்த குழந்தையின் உறவினர்கள் மன்னரின் இந்த தயாள குணத்தை வெகுவாக பாராட்டினர். சுகாதார அமைச்சர் அப்துல்லா அல் ரபியாவுக்கும் தங்கள் நனறிகளை தெரிவித்துக் கொண்டனர். இறைவன் நாடினால் இந்த குழந்தைகள் இருவரும் தனித் தனியே பிரித்தெடுக்கப்பட்டு சுகமான வாழ்வு வாழ்வர். இந்த சிறுமிகளை பிரித்தெடுக்கும் பணி வெற்றிகரமாக நடைபெற நாமும் நமது பிரார்த்தனையை இறைவனிடம் வைப்போம்.

தகவல் உதவி
அரப் நியூஸ்
12:03:2014

மலேசிய விமானத்தை மை போட்டு பார்க்கும் மூடர்கள்!



மாயமான விமானத்தைத் தேடும் பணியில் பல நாட்டு கப்பல்களும், விமானங்களும் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள மலேசிய அரசு மந்திரவாதிகளின் உதவியை நாடியுள்ளது.

இப்ராஹிம் மத் ஸின் என்ற புகழ்பெற்ற மந்திரவாதி, கோலாலம்பூர் விமான நிலையத்துக்கு வரவழைத்த மலேசிய அரசு, கடந்த சனிக்கிழமை காலை காணாமல் போன விமானம் தற்போது எங்கிருக்கிறது என்பதை அறிந்து சொல்லுமாறு கூறியது. :-)

பல்வேறு மந்திரப் பொருட்களை வைத்து, மாயாமான விமானம் குறித்து இப்ராஹிம் மத் ஸின் கூறியதாவது, தற்போது அந்த விமானம் வானத்தில் பறந்து கொண்டிருக்க வேண்டும். இல்லையேல் நிச்சயம் அது விபத்துக்குள்ளாகி, நீருக்கடியில் இருக்கும் என்று கூறியுள்ளார்.

இந்த தகவல் அறிந்ததும், பொதுமக்கள் பலரும், ஆதரவாகவும், எதிர்த்தும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

-தினமணி 13-03-2014

“சூனியக்காரன் எங்கு சென்றாலும் ஒரு போதும் வெற்றி பெறமாட்டான்” (20:69)

‘எவன் ஜோதிடம் அல்லது குறிகாரனிடம் சென்று அவன் சொல்வதை நம்புகிறானோ அவன் முஹம்மதுக்கு இறக்கி அருளப்பட்ட வேதத்தை நிராகரித்தவன் ஆவான். (அஹ்மத்)

இவ்வளவு தெளிவாக இஸ்லாமிய சட்டங்கள் இருக்க இந்த கேடுகெட்ட அயோக்கியர்களை மார்க்க அறிஞர்கள் என்று நம்பி ஒரு கூட்டம் காணாமல் போன விமானத்தை கண்டுபிடித்து தரச் சொல்கிறது.

விமானத்தை கண்டு பிடிக்க பல நாட்டு விமானங்களும் கப்பல்களும் முயற்சியை மேற் கொண்டுள்ளன. விபத்தா அல்லது தீவிரவாதிகள் செயலா? அல்லது அமெரிக்க ரஷ்ய இஸ்ரேலின் அரசியல் விளையாட்டா என்பது சில நாட்களில் தெரிந்து விடும். சொந்தங்களை பிரிந்து வாடும் உறவினர்களுக்கு நமது ஆழ்ந்த அனுதாபங்கள். அதே சமயம் இது போன்று ஏய்த்து பிழைக்கும் மத குருமார்களையும் நாம் கண்டிக்க வேண்டும். தமிழகத்தில் ஓரளவு இந்த புரட்டர்களை அடையாளம் காட்டி விட்டோம். மலேசியாவில் இது போன்ற தவ்ஹீத் இஸ்லாமிய அமைப்புகள் உண்மையை மக்களுக்கு விளக்க முயற்சிக்க வேண்டும்.


Wednesday, March 12, 2014

புர்ஹாவை விரும்பும் மேற்கத்திய பெண்கள்!



சவுதியில் பணிபுரியும் வெளிநாட்டு மாற்று மத சகோதரர்கள் பலர் தங்கள் குடும்பத்துடன் பல வருடங்களாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் பெண்கள் வெளியில் வரும் போது அபாயா எனும் கருப்பு அங்கியை அதாவது புர்காவை போட்டுக் கொண்டு வெளியில் வருவர். பல ஐரோப்பியர்களும் அமெரிக்கர்களும் இந்தியர்களும் இவ்வாறு கடைவீதிகளுக்கு வருவதை சர்வ சாதாரணமாக பார்க்கலாம்.

சவுதி அரேபிய சட்டம் மாற்றுமத பெண்களும் கண்ணியம் கருதி இவ்வாறு உடலை மறைக்க வேண்டும் என்று கட்டளையிடுகிறது. கோடை காலங்களில் வெயிலின் தாக்கத்தால் சிலருக்கு உடல் எரிச்சல் ஏற்படுவதும் சகஜம்.

ஷெர்ரி என்ற பிரிட்டிஷ் பிரஜை கூறுகிறார் 'கோடை காலங்களில் கருப்பு உடையான இந்த அபாயாவை அணிவது பல சிரமங்களை எனக்கு கொடுத்தது. இந்த உடையை எவ்வாறு உடுத்துவது என்பதும் எனக்கு அவ்வளவாக தெரியாது. ஒரு சமயம் நான் ஷாப்பிங் மாலுக்குள் வண்டியை தள்ளிக் கொண்டு போகும் போது எனது அபாயா வண்டியின் சக்கரத்தில் சிக்கிக் கொண்டது. அங்குள்ள பலராலும் நான் நோட்டமிடப்பட்டேன். இந்த சம்பவம் எனக்குள் வெட்கத்தை வரவழைத்து விட்டது. :-) இந்த சம்பவத்திலிருந்து பாடங்களைக் கற்றுக் கொண்டேன். இன்று என்னிடம் மூன்று அபாயாக்கள் உள்ளது. மூன்றுமே கருப்பு நிறத்தினால் ஆனது. சவுதி பெண்கள் அதிகம் கருப்பு அபாயாக்களையே விரும்புவதால் நானும் கருப்பு கலரையே தேர்ந்தெடுத்தன்.' என்று மகிழ்வுடன் தெரிவிக்கிறார்.

ஃப்ரெஞ்ச் நாட்டைச் சேர்ந்த புஷ்ரா எனும் பெண்மணி சொல்கிறார்: 'புர்கா எவ்வாறு உடுத்திக் கொள்வது என்பதை கற்பதற்கு எனக்கு ஐந்து மாதம் பிடித்தது. ஆனால் கற்றுக் கொண்டு அதனை உடுத்தி வெளியில் செல்லும் போதுதான் பெண்மைக்கே ஒரு அழகு கிடைப்பதாக நான் உணர்கிறேன். கருப்பு புர்காவானது பெண்மைக்கு ஒரு கவர்ச்சியை தருவதையும் உணர்ந்தேன். பெண்மைக்கு ஒரு பாதுகாப்பையும் இந்த புர்கா தருகிறது.'

ஆங்கில ஆசிரியராக பள்ளியில் பணி புரியும் கென்யாவைச் சேர்ந்த ஜார்ஜெட் மெடின்ஸ் கூறுகிறார்: 'ஆரம்பத்தில் அபாயா உடுத்துவதை வெறுத்தேன். ஒரு கயிற்றைக் கொண்டு எனது உடலோடு கட்டப்பட்டுள்ளதாக அபாயாவை நினைத்தேன். சுதந்திரமாக நடந்து செல்ல அபாயா ஒரு தடையாக உள்ளதாக உணர்ந்தேன். பொதுவாக வெளிநாட்டுப் பெண்கள் இவ்வாறு அபாயா உடுத்துவது மிகுந்த சிரமத்தை கொடுக்கும் என்பதையும் நான் அறிவேன்.

இந்த நாட்டு சட்டத்தின் படியும், இந்த மக்களின் பழக்கத்துக்கு மதிப்பு கொடுத்தும் உடுத்திய அபாயா இன்று எனக்கு பழக்கப்பட்ட ஒன்றாக ஆகி விட்டது. பல வண்ணங்களில் அபாயாக்கள் இருந்தாலும் கருப்பு கலரே அதற்கு மேலும் மதிப்பைப் பெற்றுத் தருகிறது.'

பிரிட்டிஷ் பிரஜையான கேதி மார்க்ஸ் கூறுகிறார்:'இந்த நாட்டு சட்டத்துக்கு கட்டுப்பட்டு அபாயா உடுத்த தொடங்கினேன். ஆனால் தற்போது அது எனது வாழ்வின் ஒரு அங்கமாகவே மாறி விட்டது. கருப்பிலும் மற்ற பிற வண்ணங்களிலும் நான் அபாயாவை உடுத்துகிறேன். கருப்பு நிறம் துக்ககரமானது என்று சிலர் நினைத்து பல வண்ணங்களில் அபாயாவை உடுத்துகிறார்களோ என்று நான் எண்ணுவேன். எப்படியோ பலருக்கும் இந்த அபாயா ஒரு மாற்றத்தையும் கண்ணியத்தையும் கொடுக்கிறது என்றால் அது மிகையில்லை'

கவர்ச்சி உகைளில் தங்கள் நாடுகளில் வலம் வந்த இந்த மேற்கத்திய பெண்கள் சவுதி வந்து அபாயா, புர்கா போன்ற உடைகளின் அவசியத்தையும், அது கொடுக்கும் கண்ணியத்தையும் பாதுகாப்பையும் பற்றி அழகாக விளக்குகின்றனர். ஆனால் நம் நாட்டில் இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்த ஒரு சில மாணவிகள் புர்காவை ஏதோ வேண்டாத பொருளைப் போல பார்ப்பதை நான் கவனித்திருப்போம். பாலியல் குற்றங்கள் குறைவதற்கு புர்கா மிகச் சிறந்த சாதனம் என்பதை ஏனோ இவர்கள் உணர்வதில்லை. இஸ்லாம் பெண்களுக்கு கொடுத்த இந்த கண்ணியத்தை நமது பெண்கள் பேண நாம் அறிவுறுத்துவோம். அதன் நன்மைகளை விளக்கிச் சொல்வோம்.

தகவல் உதவி
சவுதி கெஜட்
07-03-2014

Tuesday, March 11, 2014

நாய்களை வீட்டில் வளர்க்கக் கூடாது ஏன்?

லண்டன் : லண்டனை சேர்ந்த, பெண், தான் வளர்த்த நாயை திருமணம் செய்து கொண்டுள்ளார்.லண்டனை சேர்ந்தவர், அமண்டா ரோட்ஜர்ஸ், 47. இவர், 20 ஆண்டுகளுக்கு முன், ஒருவரை திருமணம் செய்தார்.

ஆனால், சில மாதங்களிலேயே, பல பிரச்னைகளால், இருவரும், பிரிந்தனர். அன்று முதல் தனிமையில் வாழ்ந்து வந்த அமண்டா, 'ஷீபா' என்ற, செல்ல நாயை வளர்த்து வருகிறார். குரோஷியா நாட்டின், ஸ்ப்லிட் நகரத்தில், 200 பேரின் முன்னிலையில், அமண்டாவுக்கும், மணப்பெண் உடையில் வந்த, ஷீபாவுக்கும் திருமணம் நடந்தது.

இதுகுறித்து, அமண்டா கூறியதாவது:ஷீபாவிடம், நான் முட்டிப்போட்டு, காதலை தெரிவித்தேன்; வாலாட்டி, என் காதலை, அது ஏற்றுக் கொண்டது. நான் கவலையாக இருக்கும் போதெல்லாம், ஷீபா, என்னை சிரிக்க வைத்து, எனக்கு ஆறுதல் கூறும்; ஒரு கணவருக்கு இருக்க வேண்டிய குணங்களும் அதனிடம் இருக்கிறது. இந்த திருமணம் சட்ட ரீதியாக செல்லாது என்றாலும், ஷீபா எனக்கு முக்கியம்.இவ்வாறு அமண்டா கூறினார்.

-தின மலர் செய்தி 11-03-2014

"எந்த வீட்டார் (தமது இல்லத்தில்) நாய் வளர்க்கின்றனரோ அவர்களுடைய நற்செயல்களின் நன்மையிலிருந்து ஒவ்வொரு நாளும் இரண்டு கணிசமான அளவுக்குக் குறைந்துவிடும்; கால்நடைகளைக் காவல் காக்கும் நாயையும் வேட்டை நாயையும் தவிர". என்று அல்லாஹ்வின் தூதர் நபிகள் நாயகம் அவர்கள் கூறினார்கள்.

(அறிவிப்பாளர்கள்: அபூஹுரைரா (ரலி) இப்னு உமர் (ரலி) வழியாக புகாரி, முஸ்லிம், திர்மிதீ, நஸயீ. அஹ்மத், முவத்தா மாலிக், தாரிமீ ஆகிய நூல்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளன).

கால்நடைகளையும் தோட்டங்களையும் காவல் காக்க நாய்களை வளர்க்கலாம்: அதே சமயம் செல்லப் பிராணிகளாக நாயை படுக்கை அறை வரை கொண்டு வருவதை நபிகள் நாயகம் தடுத்துள்ளார்கள். எத்தனையோ வீட்டுப் பிராணிகள் இருக்க நாய்களை வீட்டுக்குள் தடுத்ததன் காரணத்தை இங்கிலாந்து பெண்ணின் செய்கையின் மூலம் தெரிந்து கொண்டோம். நபி அவர்களின் ஆதாரபூர்வமான எந்த சொல்லும் செயலுக்குப் பின்னால் ஒரு உண்மை மறைந்துள்ளதை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக் காட்டுகிறது. முகமது நபி இறைத் தூதர்தான் என்பதற்கு இந்த ஹதீதும் நமக்கு சான்று பகர்ந்து கொண்டிருக்கிறது.




பாரத் மாதா கீ ஜே!



டெல்லி ஜந்தர் மந்தரில் பெண்கள் தினத்திற்காக ஆம் ஆத்மி பார்ட்டி ஒரு கூட்டத்தை நடத்தியது. ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் யோகேந்திர யாதவ் கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தார். அவர் பேசிக் கொண்டிருக்கும் போது உடன் அவருக்கு பின்னிருந்து வந்த 38 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் 'பாரத் மாதா கீ ஜே! பாரத் மாதா கீ ஜே!' என்று கோஷத்தை எழுப்பியவாறு யோகேந்திர யாதவ்வின் முகத்தில் கரியை பூச ஆரம்பித்தார். இதனை எவரும் எதிர் பார்க்கவில்லை. அருகில் இருந்த ஆம் ஆதிமி தொண்டர்கள் உடன் அவனை பிடித்து பாதுகாப்பான பகுதிக்கு கொண்டு சென்றனர். இதனை சற்றும் எதிர்பார்க்காத யோகேந்திர யாதவ் பிறகு சுதாரித்துக் கொண்டார்.

ஆம் ஆத்மி வழக்கமாக அணியும் தொப்பியை அணிந்து கொண்டு யாரும் சந்தேகப்படாத அளவு முன்னேறி தனது காரியத்தை இந்த இளைஞன் செய்து முடித்துள்ளான். அவன் தனது செயலை செய்யும் போது 'பாரத் மாதா கீ ஜே' என்று கூப்பாடு போடுவதையும் பார்க்கிறோம்.

பாரத் மாதா யார்? இவருக்கு என்ன உருவம்? இவரால் இந்த நாட்டுக்கு என்ன நன்மை? ஒன்றும் இல்லை. பிஜேபியும் இந்துத்வாவும் தனது வாக்கு வங்கியை தக்க வைத்துக் கொள்ள ஏற்படுத்தப்பட்ட ஒரு கற்பனை பாத்திரம் தான் இந்த 'பாரத் மாதா'.

பிறந்த தாய் நாட்டை மதிக்க வேண்டும்: பிறந்த தாய் நாடு முன்னேற நம்மால் ஆன அனைத்து முயற்சிகளையும் செய்ய வேண்டும்: இதில் மாற்றுக் கருத்து இல்லை. இது ஒவ்வொரு குடிமகனுக்கும் இயற்கையாகவே வரக் கூடிய உணர்வு. ஆனால் 'பாரத் மாதா' என்ற போலியான ஒரு பிம்பத்தை உண்டாக்கி அதன் மூலம் தனது ஓட்டு அறுவடை செய்ய முனையும் பிஜேபியின் கீழ்தரமான அரசியல் விளையாட்டைத்தான் நாம் இங்கு கண்டிக்கிறோம்.

குஜராத்தில் நடந்த கலவரமாகட்டும், வேறு எந்த இடங்களிலும் இந்துத்வாவினர் தங்களின் வன்முறையை நிகழ்த்த கையில் எடுக்கும் ஆயுதம்தான் இந்த 'பாரத் மாதா'. ஆம் ஆத்மி வைக்கும் கேள்விகளுக்கு எந்த பதிலும் பிஜேபியிடம் இல்லை. மோடி அரவிந்த் கெஜ்ரிவாலை பார்த்து ஓட்டமெடுக்கிறார். கடந்த இரண்டு மாதங்களில் ஒட்டு மொத்த இந்தியாவில் அரவிந்த் கெஜ்ரிவாலின் செல்வாக்கு கணிசமாக உயர்ந்துள்ளதாகவும் அதே சமயம் நரேந்திர மோடியின் செல்வாக்கு அதே அளவு கீழிறங்கி உள்ளதாகவும் கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. குஜராத்தில் கெஜ்ரிவாலுக்கு கூடும் கூட்டம் மோடியின் பிரதமர் கனவை ஏறத்தாழ களைத்து விட்டது என்றே கூறலாம்.

Monday, March 10, 2014

இந்திய கல்லூரிக்கு மன்னர் அப்துல்லாவின் உதவி!



டெல்லியில் உள்ள ஜாமியா ஹம்தர்த் பல்கலைக் கழகத்திற்கு ஐந்து மில்லியன் டாலருக்கான உதவியை சவுதி மன்னர் அப்துல்லா வழங்கியுள்ளார். இந்நிகழ்ச்சி சென்ற புதன் கிழமை டெல்லியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முஹம்மது பின் சவுத் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் சுலைமான் அபா அல் ஹைல், இந்தியாவுக்கான சவுதி தூதர் சவுத் அல் சாதி போன்ற முக்கிய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்த உதவியால் பல ஆயிரம் மாணவர்கள் கல்வி சம்பந்தமான உதவிகளை பெற்றுக் கொள்வார்கள். சமீப காலமாக இந்தியாவோடு நெருங்கிய உறவுகளை பேண மன்னர் அப்துல்லா பல முயற்சிகளை எடுத்து வருகிறார். உலக அளவில் நமது நாடு மிக முக்கியத்துவம் பெறுகிறது என்பதனையே இவை எடுத்துக் காட்டுகின்றன.

வழக்கம் போல் ஜனநாயகத்தின் முக்கிய தூணான இந்திய ஊடகத் துறை இந்த செய்தியை மறைத்து தனது ஊடக நடுநிலையை வெளிச்சம் போட்டு காட்டிக் கொண்டது. :-(

தகவல் உதவி
சவுதி கெஜட்
10-03-2014

Sunday, March 09, 2014

"அனைத்துலக பாசிஸ்டுகளே ஒன்று சேருங்கள்"



ஹிட்லரும், முசோலினியும் மரணமடையும் தறுவாயில், "அனைத்துலக பாசிஸ்டுகளே ஒன்று சேருங்கள்" என்று அறைகூவல் விடுத்ததாக தெரியவில்லை. ஆனால், 21 ம் நூற்றாண்டில் உலகம் முழுவதும் உள்ள பாசிஸ்டுகள், மொழி வேற்றுமை கடந்து ஒன்று சேர்ந்து வருகின்றனர். இலங்கையிலும், மியான்மரிலும் உள்ள, பௌத்த மத பாசிஸ்டுகள் மட்டும் சும்மா இருப்பார்களா?

இலங்கையின் பாசிச பொது பல சேனா செயலதிபர் ஞானசரா தேரோ, இன்னும் சில பிக்குகளுடன் மியான்மருக்கு விஜயம் செய்துள்ளார். அங்கு அவர் மியான்மர் பாசிச 969 அமைப்பின் தலைவர் விராதுவை சந்தித்துள்ளார். மியான்மரில் தனது 39 வது பிறந்த நாளை மியான்மரில் கொண்டாடிய ஞானசரா தேரோவுக்கு, விராது பிறந்தநாள் பரிசளிப்பதை இந்தப் படத்தில் பார்க்கலாம்.

இலங்கையை சேர்ந்த பௌத்த-சிங்கள பாசிச அமைப்பான பொதுபல சேனாவுக்கும், மியான்மரை சேர்ந்த பௌத்த- பர்மிய பாசிச அமைப்பான 969 க்கும் இடையில் கொள்கை ரீதியாக எந்த வித்தியாசமும் இல்லை. மியான்மரில் விராது மீது, ரோஹிங்கியா முஸ்லிம் மக்களை இனப் படுகொலை, இனச் சுத்திகரிப்பு செய்த குற்றச் சாட்டுகள் சுமத்தப் பட்டுள்ளன. முஸ்லிம்கள் மீதான இனத் துவேஷ தாக்குதல்களுக்கு தூண்டி விட்டதை, விராது என்றைக்குமே மறுக்கவில்லை. டைம் சஞ்சிகை தனது ஆசிரியர் தலையங்கத்தில், "மியான்மரில் விராது ஒரு பௌத்த பின்லாடன்" என்று அழைக்கப் படுவதாக குறிப்பிட்டு எழுதியது.

இலங்கையின் ஞானசார தேரோவும், பிற பொதுபல சேனா பிக்குகளும், மியான்மரில் "கல்விச் சுற்றுலா" ஒன்றை மேற்கொண்டுள்ளனர். அப்படி என்ன கல்வியோ? "முஸ்லிம்கள் மீதான துவேஷத்தை வளர்ப்பது எப்படி? இனப்படுகொலை, இனச்சுத்திகரிப்பு செய்வது எப்படி?" என்று, பர்மியர்களிடம் கேட்டுப் படிக்கப் போயிருப்பார்கள். கூடவே, இலங்கையில் நடந்த, தமிழ் இனப் படுகொலையில் கிடைத்த அனுபவக் கதைகளையும் பகிர்ந்து கொண்டிருப்பார்கள்.

அடுத்த தடவை, பொதுபல சேனா பிக்குகள், இன்னொரு கல்விச் சுற்றுலாவில், குஜராத்திற்கும் சென்று வரலாம். அங்கே நரேந்திர மோடி, அவர்களுக்கு பாடம் நடத்த காத்திருக்கிறார். எது எப்படியோ, உலகம் முழுவதும் பாசிஸ்டுகள் ஒற்றுமையாக செயற்பட்டு வருகின்றனர். பாஸிசத்தை எதிர்த்துப் போராட வேண்டிய மக்கள் தான் தமக்குள் பிரிந்து நிற்கின்றனர்.

நன்றி: கலையரசன்

வரவிருக்கும் லோக்சபா தேர்தலில் நவநிர்மாண் கட்சி போட்டியிடும் என்றும், வெற்றி பெற்று வரும் எம்.பி.,க்கள் மோடி பிரதமராக ஆதரிப்பார்கள் என்றும் ராஜ்தாக்ரே வெளிப்படையாக அறிவித்துள்ளார். ஆக மற்றொரு ஃபாஸிஸ்டும் மோடியை ஆதரிக்க ஆரம்பித்துள்ளார். உலக ஃபாஸிஸ்டுகள் ஒன்றாகும் போது வழக்கம் போல் பாதிக்கப்பட்டவர்கள் மேலும் பிளவுகளை சந்தித்து வருவது வேதனைக்குரிய விஷயமே! 

எனக்கு பிடித்த இணையத்தில் சுட்ட கவிதைகள்!

காவிரி

காவிரியைக் கடக்க

ஓடம் தேவையிலலை...- இனி

ஒட்டகம் போதும்

-------------------------------

கால காலமாய.....

காலிலே சலங்கை பூட்டி
கோவிலிலே ஆட விட்டீர்கள்

முதுகிலே சூடு வைத்து
அந்தப் புரத்திற்குள்
அனுப்பினீர்கள்!

உப்பில்லா உணவு கொடுத்து
மூலையிலே அமர்த்தினீர்கள்

சந்தேகம் வந்தபோதெல்லாம்
நெருப்பிலே இறக்கினீர்கள்

இப்போது.....
வேலைக்கு அனுப்பிவிட்டு
வேவு பார்க்கிறீர்கள்!

--------------------------------

பல்லவி

குடிப்பதற்கு தண்ணீர் தேடி
இரவெல்லாம் கண் விழித்து
வீதி வீதியாய்
குடங்களோடு அலைந்தோம்...

எங்கள் துயரம் தீர்க்க
எம்.எல.ஏ வைத் தேடினோம்

தொலை பேசியில்
எப்போது கேட்டாலும்
கிடைத்த பதில்...

'தூங்குகிறார்...'
'குளித்துக் கொண்டிருக்கிறார்....'

----------------------------------

மாற்று

கிராமத்து
வீடுகளில் கூட
ஹார்லிக்ஸ்,
காம்ப்ளான்
பாட்டில்கள்...

ஒன்றில் உப்பும்
இன்னொன்றில்
ஊறுகாயுமாக!

-----------------------------

அவதாரம்

வேலு நாச்சியாராய்
குதிரை மீது ஏறி வந்தேன்

இராணி மங்கம்மாளாய்
வீரவாள் சுழற்றினேன்

ஜான்ஸி ராணியாய்
எதிரிகளைப் பந்தாடினேன்...

குக்கர் சத்தம் கேட்டது
சமயலறைக்குள்
ஓடினேன்!

---------------------------

நன்றி

பேருந்து நெரிசலில்
சிக்கித் தவித்த அந்த
தாயிடமிருந்து
குழந்தையை வாங்கினேன்.

இறங்கிச் செல்கையில்
நன்றியோடு பார்த்தாள்...
கைப்பிள்ளையின்
கால் கொலுசை
தடவியபடி!

-------------------------

விநாயகர்

வங்கியின் முன்னால்
செல்வ விநாயகர்

நீதிமன்ற வளாகத்தில்
நீதி தரும் விநாயகர்

மருத்துவ மனையில்
வினை தீர்க்கும் விநாயகர்

வழியோரங்களில்
வழிவிடும் பிள்ளையார்

குளத்தங்கரையில்
அரச மரத்துப் பிள்ளையார்

அவரவர் இடத்தில்
அகலாமல் இருந்தனர்

நேற்று
ஆயுதப் படை சூழ
ஊர்வலமாக வந்து
கடலிலே கரைந்தார்
அரசியல் பிள்ளையார்!

Saturday, March 08, 2014

பெண் கொடுமை நம் நாட்டில் என்று தீரும்!



"...என் முகத்தில் ஆசிட் வீசிய போது சிதைந்து போனது என் முகம் மட்டுமல்ல, என் கனவுகளும்தான், இனிமேலாவது காதலிப்பவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் இதயத்தை அன்பால் நிரப்ப பாருங்கள், ஆசிட்டால் அல்ல... "என்று அந்த இளம் பெண் தனது உருக்குலைந்த முகத்துடனும், உருக்கமான வார்த்தைகளாலும் பேசியதை கேட்ட போது மேடையில் இருந்த அனைவரின் கண்களிலும் கண்ணீர்.

'இந்த உலகத்தில் முடியாதது என்று ஒன்றும் இல்லை. உன்னால் முடியும். நீ சாதித்து காட்டுவாய். உனது பழைய அழகை நீ திரும்பவும் பெறுவாய்' என்று எனது தந்தை எனக்கு ஆர்வமூட்டினார். அந்த ஆர்வம்தான் என்னை இங்கு வந்து நிறுத்தியுள்ளது' என்கிறார் லஷ்மி!

டில்லியை சேர்ந்தவர் பள்ளிக்கு துள்ளியபடி சென்று வந்தவர் படிப்பில், விளையாட்டில் இன்ன பிற துறைகளிலும் ஆர்வமும் திறமையும் கொண்டவர் கூடுதலாக அழகும் மிக்கவர்.

ஒரு சின்ன நந்தவனம் போல இருந்தவரை, தந்தையின் ஸ்தானத்தில் இருந்து பார்த்து பெருமைப்பட வேண்டிய வயதைக்கொண்ட உறவினர் ஒருவர் வயதையும், தகுதியையும் மீறி லட்சுமியிடம் மோகம் கொள்ள லட்சுமி மிரட்டி, விரட்டி இருக்கிறார்.

அப்படியே போயிருக்க வேண்டிய அந்த ஆண் என்ற நாகம் உடம்பெல்லாம் பொறாமை தீ பற்றி எரிய விஷத்தை கக்க, தக்க தருணத்தை எதிர்பார்த்து காத்திருந்தது.அந்த நாளும் வந்தது அனைவருக்கும் அது வியாழன் என்றால் லட்சுமிக்கு மட்டும் மறக்கமுடியாத நாள் அது. கல்விக்கூடம் செல்வதற்காக பேருந்து நிறுத்தத்தில் நின்று இருந்தவரை விசாரிப்பது போல நெருங்கிவந்த அந்த உறவுக்கார மிருகம் கண்ணிமைக்கும் நேரத்தில் பாட்டிலில் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை லட்சுமியின் முகத்தில் வீசிவிட்டு ஓடிவிட்டது. இந்த சம்பவம் நடந்த ஆண்டு 2005 ஆகும், அப்போது லட்சுமிக்கு வயது 16. முகமும், உடலும் பற்றி எரிய வேதனையால் துடிதுடித்து உருண்டு புரண்ட அந்த பதினாறு வயது சின்னஞ்சிறுமியை மருத்துவமனைக்கு தூக்கிக்கொண்டு ஓடிய போது அங்கே உயிரைக் காப்பாற்ற முடிந்தது ஆனால் அழகான முகத்தை காப்பாற்ற முடியாமல் போனது.

காதல் தினம் கொண்டாடிக் கொண்டு பூங்காக்களிலும், கல்லூரிகளிலும், கடற்கரைகளிலும் சுற்றித் திரியும் பெண்கள் சற்று இந்த பெண்ணின் நிலையையும் நினைத்துப் பாருங்கள்.

பெல்ஜியத்தையும் விடவில்லை இஸ்லாம்!



பெல்ஜியத்தின் ஜென்ட் நகரில் இயங்கி வரும் இஸ்லாமிய கலாசார கழகம் 25 வருடம் தனது சேவையை பூர்த்தி செய்ததை விமரிசையாக கொண்டாடியது. இந்நகரமானது பிரஸ்ஸில்ஸ் நகரத்திலிருந்து 60 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இங்கு 25000 முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர்.

1989ல் இந்த அமைப்பு தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் இஸ்லாமிய முறைப்படி எவ்வாறு இறைச்சிகளை கையாள்வது என்பதில் தொடங்கி பின்னாளில் அவ்வாறு அறுக்கப்படுபவைகளுக்கு சான்றிதழ் தரும் அமைப்பாகவும் பரிணமித்தது. அதன் பிறகு அரபு மொழியை பயிற்றுவிப்பதில் முக்கிய பங்கை இந்த அமைப்பு ஆற்றியது. குர்ஆனின் கட்டளைகள் அந்த மக்களின் வாழ்வில் வருவதற்காக பல பாடங்களை இந்த அமைப்பு எடுத்தது. மிக சிறிய அளவில் தொடங்கப்பட்ட இந்த முயற்சியானது தற்போது 200 மாணவர்களையும் தாண்டி வெற்றி நடை போடுகிறது. குர்ஆனை மட்டும் சொல்லாது அந்த மாணவர்கள் தங்களின் வாழ்வை எவ்வாறு இஸ்லாமாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதையும் அழகிய முறையில் விளக்குகிறது. மொராக்கோவிலிருந்து வருகை புரிந்த முஸ்தபா அல் திவானி 1975 லிருந்து மாணவர்களுக்கு பாடங்களை எடுக்கிறார்.

பெல்ஜியத்தையே பூர்வீகமாக கொண்டு அந்த மொழியில் பாண்டித்தியம் பெற்ற பல மாணவர்களை இமாம்களாக இந்த அமைப்பு மாற்றியுள்ளது. பெல்ஜியத்தின் கலாசாரத்தில் மயங்காது இவ்வாறு இஸ்லாத்தை வாழ்வியலாக அவர்கள் கொள்வது பார்வையாளர்களை ஆச்சரியத்துக்கு உள்ளாக்குகிறது. பதினேழு வயதையே உடைய அனஸ் என்ற இளைஞன் இன்று குர்ஆனை மனனமிட்டு ஓதக்கூடிய ஹாஃபீஸாக தேர்வு பெற்றுள்ளான். இந்த இளைஞர்கள் பகுதி நேரமாக இஸ்லாமிய படிப்பை படித்துக் கொண்டே பெல்ஜிய அரசின் படிப்பையும் தொடர்கின்றனர்.. ஒரே நேரத்தில் இரண்டு வேலையும் நடக்கிறது. இஸ்லாமிய கல்வியை பொருள் ஈட்ட பயன்படுத்தாமல் அதற்கென தனியாக படிப்பது உண்மையிலேயே வரவேற்கத்தக்கது. இதைத்தான் இஸ்லாமும் எதிர்பார்க்கிறது. (இவ்வாறு தமிழகத்தின் பெரும்பாலான மதரஸாக்களில் தொழிற் கல்வியும் பயிற்றுவிக்கப்பட்டு அந்த மாணவர்களை சுய மரியாதையோடு வெளியாக்க வேண்டியது நமது கடமை)

கம்யூனிஸம் வளர்ந்த இந்த நாட்டில் முற்போக்கு சிந்தனைகளால் இஸ்லாத்தை முஸ்லிம்கள் விட்டு விடக் கூடாது என்பதில் மிகக் கவனமாக இருக்கிறது இந்த அமைப்பு. நாத்திகத் தன்மை இவர்களை ஆட்கொண்டு விடாமல் இருக்க இறைவனைப் பற்றிய உண்மைகள், குர்ஆனும் அறிவியலும் எந்த வகையிலெல்லாம் ஒத்துப் போகின்றன என்பதற்காகவும் பல சிறந்த பாடங்களை சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு நடத்தப்படுகிறது.

ஐரோப்பிய யூனியனில் பெல்ஜியமும் நெதர்லாந்தும் அதிக எண்ணிக்கையிலான முஸ்லிம்களைக் கொண்டிருப்பதாக ஜெடோஸ்டோன் இன்ஸ்டிட்யூட் தெரிவிக்கிறது. துருக்கி, மொராக்கோ போன்ற நாடுகளின் முஸ்லிம்கள் நிறைந்து காணப்படுகின்றனர். கம்யூனிஸத்தை வெறுத்து புதிதாக இஸ்லாத்தை ஏற்கும் பெல்ஜியர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. (நமது தமிழகத்திலும் இதே நிலைதானே) :-)

பெல்ஜியத்தில் உள்ள மொத்த முஸ்லிம்களின் எண்ணிக்கை 650000 ஆகும். இது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இன்னும் சில ஆண்டுகளில் அரசியலிலும் மிகப் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் சக்தியாக பெல்ஜிய முஸ்லிம்கள் திகழ்வார்கள் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

(அட...இதிலும் நம் தமிழகத்தை ஒத்தே பெல்ஜியர்கள் உள்ளனரே!...:-))

தகவல் உதவி

அமல் அல் சிபாய்
சவுதி கெஜட்
28-02-2014

Friday, March 07, 2014

நாங்கள் எல்லாம் தமிழர்கள் இல்லையா?

ஸ்ரீபெரும்புதூர் பிரசாரத்தின்போது ராஜீவ் அருகில் இருந்த காங்கிரஸ் பிரமுகர் லீக் முனுசாமி, எஸ்.பி-யான முகமது இக்பால், டெல்லியில் இருந்து பாதுகாப்புக்காக வந்த குப்தா, இன்ஸ்பெக்டர் ராஜகுரு, இன்ஸ்பெக்டர் எட்வர்டு ஜோசப், சப் இன்ஸ்பெக்டர் எத்திராஜூ, கான்ஸ்டபிள் முருகன், கான்ஸ்டபிள் தர்மன், பெண் கான்ஸ்டபிள் சந்திரா, கமாண்டோ வீரர் ரவிச்சந்திரன், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களான லதா கண்ணன், (அவருடைய மகள்) கோகில வாணி, சந்தானி பேகம், சரோஜா தேவி, டேனியல் பீட்டர் ஆகியோர் அந்தச் சம்பவத்தில் இறந்தனர்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, ஜெயலலிதா அறிவித்த விடுதலை போன்ற பரபரப்பான சூழலில் அவர்கள் குடும்பத்தினரைச் சந்தித்தோம்.

காங்கிரஸைச் சேர்ந்த சந்தானி பேகத்தின் மகன் அப்பாஸ், ''எங்க அம்மா அந்த சமயத்தில காங்கிரஸ் தென் செங்கை மாவட்ட தலைவியா இருந்தாங்க. காங்கிரஸ் மீதும் ராஜீவ் காந்தி மீதும் அதிகப் பற்று வெச்சிருந்தாங்க. நான்கு பையன், மூணு பொண்ணுங்க, எங்கம்மாவுக்கு. நான் கடைசி பையன். எங்களுடைய அப்பா எனக்கு எட்டு வயசா இருக்கும்போதே இறந்துட்டார். எனக்கு 10 வயசா இருக்கும்போது அம்மாவும் அந்தக் குண்டு வெடிப்பில் உடல் சிதறி இறந்தாங்க. அதன் பிறகு எங்க வாழ்க்கையே திசை மாறி போயிடுச்சு. நாங்க பட்ட கஷ்டங்களை வார்த்தைகளால் சொல்ல முடியாதுங்க. அப்பா, அம்மா இல்லாம அநாதைகள் போல வளர்ந்தோம். ஏழ்மையின் காரணமா நான் 10-வது வரைக்கும்தான் படிக்க முடிஞ்சுது. ஏதோ பிழைப்பு நடத்தி வருகிறோம். இதுவே எங்க அம்மா உயிருடன் இருந்து இருந்தால், எங்களை இந்த நிலைக்கு விட்டு இருப்பாரா? இதுவரைக்கும் எங்களுக்கு ஆதரவா யாராவது ஒரு வார்த்தை சொல்லி இருப்பாங்களா? தப்பு செஞ்சவங்களுக்காகப் பெரிய பெரிய வக்கீல்களைக் கூப்பிட்டு வாதாடுகிறாங்க. அவங்களுக்கு நிறைய தலைவருங்க குரல் கொடுக்கறாங்க. ஆனா, இந்த அப்பாவி உயிர்களுக்காக இதுவரை யாராவது குரல் கொடுத்தாங்களா? மூன்று பேரும் இத்தனை ஆண்டுகளா ஜெயிலில் தண்டனை அனுபவிச்சாங்கன்னு சொல்லுறாங்க. இத்தனை வருடங்களா தாய், தந்தை இல்லாம எவ்வளவு துடிச்சிருப்போம். கொலைகாரர்களுக்குக் காட்டும் கருணையை எங்களுக்கு யாருமே காட்டலையே... எங்க அம்மா திரும்பவும் வரமாட்டாங்கன்னு தெரியும். ஆனா, அவர்களைக் கொன்ற படுபாவிகளுக்குக் குறைந்தபட்ச தண்டனையாவது தர வேணாமா? இவர்களைத் தூக்குல போடுங்கன்னு சொல்லலை. இவர்களை விடுதலை செய்யக் கூடாது. ராகுலுக்கும் பிரியங்காவுக்கும்தான் எங்களது வேதனை புரியும். நாங்க அவர்களைச் சந்திக்கத் திட்டமிட்டு இருக்கிறோம்'' என்றார் கோபமாக.



சரோஜா தேவியின் அக்கா சாந்தா குமாரி, ''சரோஜா தேவி, அந்த சமயத்துல தனியார் ஸ்கூல்ல டீச்சரா வேலை செஞ்சுட்டு இருந்தா. அவளுக்கு அப்ப 20 வயசு. நல்ல அழகு. துறுதுறுன்னு இருப்பா. நான் தமிழ்நாட்டின் மகிளா காங்கிரஸ்ல இணை செயலாளரா இருந்தேன். காங்கிரஸ் பஞ்சாயத்து போர்டுலயும் உறுப்பினரா இருந்தேன். தேர்தல் பிரசாரத்துக்காக ஸ்ரீபெரும்புதூருக்கு ராஜீவ் வந்தபோது என் தங்கை சரோஜா தேவி, 'நானும் உன்கூட வர்றேன். ராஜீவ் காந்தியைப் பார்க்கணும்’னு ஆசையா சொன்னா. நானும் அவளும் மீட்டிங் நடக்கும் இடத்துக்குப் போனோம். என் தங்கை அவரைப் பக்கத்துல பார்க்கணும்னு போனா. திடீர்னு ஒரு பெரிய சத்தம் கேட்டது. என்னனு புரியவே கொஞ்ச நேரம் ஆச்சு. நானும் அந்த கிரவுண்ட்ல இருந்து தூக்கி வீசப்பட்டேன். என் தங்கை இறந்துட்டான்னு அப்புறம்தான் தெரிஞ்சது. அதற்குப் பிறகு என் வாழ்க்கையே திசை மாறிடுச்சு. அந்த விபத்துனால எனக்குக் கல்யாணமே நடக்கல. இன்னமும் அதில் இருந்து மீள முடியாத துயரத்தில்தான் நான் இருக்கிறேன். எனக்கு ஒரு வேலை தேடிக்கொண்டேன். வீடு விட்டால் வேலை... வேலை விட்டால் வீடு என்று இருக்கிறேன். வேறு எங்குமே இதுவரை செல்லவில்லை. அந்த சில நொடிகளால் எங்கள் வாழ்க்கையே மாறிவிட்டது. பாதிக்கப்பட்ட எங்களுக்கு இதுவரை அரசாங்கம் என்ன செய்தது? ராஜீவ் கொலையில் குற்றம்சாட்டபட்டவர்களின் தீர்ப்பை நான் மனிதாபிமான அடிப்படையில பார்க்கிறேன். ஆனா, அந்தக் கோர விபத்தில் என் தங்கை உட்பட 15 பேர் குடும்பத்தினரை யார் மனிதாபிமான அடிப்படையில் பார்க்கிறார்கள்?' என்று கேள்வியுடன் முடித்தார் ஆவேசமாக.



முகமது இக்பாலின் மகன் ஜாவித் இக்பால், ''அப்பா காஞ்சிபுரம் எஸ்.பி-யாக இருந்தாங்க. நான் பிறக்கும்போதே எங்க அப்பா டி.எஸ்.பி. அதற்கு முன்னாடி மிலிட்டரியில இருந்தாங்க. அவர் இறக்கும்போது எனக்கு 17 வயசு. எனக்கு ஒரு அக்காவும் இருக்காங்க. அப்பா இறந்ததற்குப் பிறகு சொல்ல முடியாத கஷ்டங்களை அனுபவிச்சோம். அதன் பிறகு மூப்பனார் எங்களைப் பார்த்து சோனியா மேடத்திடம் சொல்லி காஸ் ஏஜென்சி வெச்சுக் கொடுத்தார். அதை வைத்துதான் நாங்க வாழ்க்கை நடத்தி வர்றோம். அப்பா இறந்துபோனதற்கு பிறகு ரம்ஜான், பக்ரீத் எதுவுமே கொண்டாடுவது இல்லை. எங்க அப்பா உயிருடன் இருந்து இருந்தா எங்களை இப்படியா வைத்து இருப்பாரு? அந்தப் படுபாவிகளைத் தூக்குல போடச் சொல்லி ரெண்டு ஆண்டுகளுக்கு முன்பு மவுண்ட் ரோட்ல என் தலைமையில் 6,000 பேர் உண்ணாவிரதம் இருந்தோம். ஆனால், இப்ப உச்ச நீதிமன்றம் தூக்குத் தண்டனை இல்லேன்னு தீர்ப்பு வழங்கி இருக்காங்க. இது தர்மமா?

மனிதாபிமான அடிப்படையில் அவர்களுக்குத் தூக்கு வேண்டாம் என்றாலும், அவர்களை வெளியேவிடக் கூடாது. அவர்கள் செய்தது மன்னிக்கவே முடியாத ரொம்ப பெரிய தவறு. 15 அப்பாவிகளைக் கொன்றிருக்கிறார்கள். அவங்கபாட்டுக்கு நாளைக்கு வெளியில நடந்து வந்தால், இந்த நாட்டில் என்ன சட்டம் ஒழுங்கு இருக்கு? தமிழன்... தமிழன்னு எல்லோரும் பேசிட்டு கொலையாளிகளுக்காகப் பேசுகிறார்கள். இறந்துபோன எங்க எல்லோருடைய குடும்பத்தினரின் கோரிக்கை... நாங்க ராகுலைச் சந்திக்கணும். ஏன்னா, அவர் ஒருத்தருக்குத்தான் நாங்க அனுபவிக்கும் கஷ்டம் புரியும்'' என்றார் காட்டமாக.

தியாகி லீக் முனுசாமி மகன் லீக் மோகன், ''தமிழ்நாடு தாழ்த்தப்பட்டோர் லீக்னு ஒரு அமைப்பு அப்போது இருந்தது. அதில் அப்பா ஜெனரல் செகரட்டரியாக இருந்தாரு. அதில் இருந்து அப்பாவை 'லீக்’னு கூப்பிட ஆரம்பிச்சாங்க. அந்த சமயத்துல மரகதம் சந்திரசேகர் எம்.பி-யாகத் தேர்தலில் நிற்க இருந்ததால், அப்பா அவருடன்தான் இருந்தார். அப்போதுதான் அந்த விபத்து நடந்து இருக்கிறது. அப்பாவும் அதில் இருந்து தூக்கி வீசப்பட்டார். கை பிய்ந்து தொங்கிக்கொண்டிருந்தது. அப்போது கூட அப்பா 'படுபாவிங்க தலைவர் ராஜீவை இப்படி பண்ணிட்டாங்களே’னு வேதனையில அழுதார். ஒரு சேர்ல வந்து உட்கார்ந்தாரு. அங்க அப்படியே இறந்துட்டார். இப்படி ஒரு தீர்ப்பு வந்தது எங்களால் ஜீரணித்துக்கொள்ளவே முடியாதது. ஒரு தவறான முன் உதாரணத்தை உச்ச நீதிமன்றம் வழங்கி இருக்கிறது. 'எதிர்காலத்தில் நம் நாட்டில் பிரதமரையும் கொலை செய்யலாம், முதல்வரையும் கொலை செய்யலாம். 20 ஆண்டுகள் தண்டனை வழங்கிவிட்டு விட்டுவிடுவார்கள்’ என்ற எண்ணம் தீவிரவாதிகளுக்கு ஏற்பட்டுவிடும். ஜெயலலிதா தேர்தல் வாக்குக்காக இப்படி அறிவித்து இருக்கிறார். ஆனால், அவர் நினைப்பது ஒருபோதும் நடக்காது. தமிழக மக்களுக்கு உண்மை என்னன்னு தெரியும். ஒருபோதும் ராஜீவ் காந்தியைக் கொன்றவர்களை மறக்க மாட்டாங்க, மன்னிக்கவும் மாட்டாங்க'' என்றார்.

போலீஸ் எஸ்.ஐ-.யான எட்வார்ட் ஜோசப்பின் தம்பி ஜான் ஜோசப், ''எங்க அண்ணன் புத்திசாலித்தனமானவர். எம்.ஜி.ஆரின் ஸ்பெஷல் பாதுகாப்பு அதிகாரியாக ரொம்ப நாள் இருந்தார். தமிழகத்தில் வரும் வி.ஜ.பி-க்கு எல்லாம் பாதுகாப்பு அதிகாரியா இருந்தவர். அந்தச் சம்பவத்தன்று டியூட்டி போய்ட்டு அப்பதான் வீட்டுக்கு வந்தார். உடனே அண்ணனைக் கூப்பிட்டாங்க. 'ராஜீவ் காந்தி விமானநிலையம் வருகிறார். உடனே அங்கு செல்லவும்’னு உத்தரவு. உடனே புல்லட்டை எடுத்துக்கிட்டுப் போனார். அப்பதான் நாங்க அவரைக் கடைசியா பார்த்தோம். அன்று இரவு 12.30 மணிக்கு சிலபேர் வீட்டுக்கு வந்து, 'சின்ன விபத்து வாங்க’ன்னு சொன்னாங்க. அப்பகூட ராஜீவ் காந்தி இறந்தது தெரியாது. அண்ணன் உடல் சிதறிக் கிடந்தாரு. அப்ப நான் கதறியது இன்னும் நினைவில அப்படியே இருக்கு.

எங்கள் குடும்பமே ஆடிபோய்விட்டது. அதில் இருந்து மீண்டு வரவே ரொம்ப காலம் ஆனது. அவருக்கு இரண்டு பொண்ணுங்க. அப்ப ஒரு பொண்ணுக்கு ஒன்பது வயது. இன்னொரு பொண்ணுக்கு ஆறு வயசு. பள்ளிக்கூடம் வரைக்கும் அவர்களுக்குப் பணம் கட்டினாங்க. அதன் பிறகு நாங்கதான் பணம் கட்டிப் படிக்க வெச்சோம். உச்ச நீதிமன்றத் தீர்ப்பை யாரும் விமர்சிக்கக் கூடாது. ஆனால், அவர்கள் திட்டமிட்டுப் படுகொலை நடத்தி இருக்காங்க. இவங்க இங்க தப்பிடலாம். ஆனா, அனைத்தையும் கடவுள் பார்த்து கொண்டுதான் இருக்கிறார். அவரது கோர்ட்டில் கண்டிப்பா இவர்களுக்குத் தண்டனை உண்டு'' என்றார்.

எத்திராஜூவின் சகோதரர் கோவிந்தராஜூலு, ''அண்ணனுக்கு அப்ப 36 வயசு. கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு பொண்ணு தேடிக்கிட்டு இருந்தாங்க. ராஜீவ் பாதுகாப்புக்குப் போனவர் குண்டு அடிப்பட்டு இறந்தார். நாட்டுக்காகத் தியாகம் பண்ணி இருக்கிறார். தமிழ்நாட்டுல ஏண்டா பிறந்தோம்னு வருத்தமா இருக்கு. ஒரு பரம்பரையையே அழிச்சுட்டுப் போய்ட்டாங்க. பாதுகாப்புக்குப் போய் அவருடன் இறந்த குடும்பத்தினர் எல்லோரும் என்ன ஆனார்கள்னு இதுவரை யாராவது யோசித்து இருப்பாங்களா? அப்ப அவர்கள் எல்லோரும் மனித உயிர்கள் கிடையாதா? கொலை செய்தவர்களுக்கு அவரது கூட்டாளிகளுக்கு விடுதலை வாங்கி கொடுக்க வேண்டும் என்ற ஒரே முயற்சிதான் இங்கே இருக்கிறது.

கருணாநிதியையே கருணாநிதின்னு சொல்லும் முதலமைச்சர் ஜெயலலிதா, கொலை செய்தவர்களைத் திருவாளர்கள்னு சொல்லுறாங்க. என்னங்கடா நாடு இது? இந்த நாட்டுல தியாகம் செய்தவர்களுக்கு அவ்வளவுதான் மரியாதைன்னு நினைச்சுக்க வேண்டியதுதான். கட்சிக்காரங்களுக்கு எல்லாம் ஒண்ணு சொல்லிக்கறேன். அற்ப வாக்குக்காக இப்படி செய்யறீங்களே... ராஜீவ் ஆத்மா உங்களை மன்னிக்காது'' என்றார் கடும்கோபத்தில்.

இவர்களின் கேள்விகளுக்கு யார் பதில் சொல்வது?

- நா.சிபிச்சக்கரவர்த்தி

படங்கள்: எஸ்.கேசவசுதன்

ராஜீவ் காந்தி கொலையில் பலியான இந்தக் குடும்பங்களை ஒன்று திரட்டியவர் ஜோதி ராமலிங்கம். அவர், ''ராஜீவ் காந்தி நம் தமிழ் மக்களை ரொம்ப நேசித்தார். 9.9.2011 அன்று மூவருக்கும் தூக்குத் தண்டனையைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்தார்கள். அதை என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. அதேநாள் ராஜீவ் காந்தி படுகொலையில் பாதிக்கப்பட்ட குடும்பங்களைக் கண்டுபிடித்து ஒன்று சேர்த்து பெரிய அளவில் உண்ணாவிரதம் இருந்தோம். அதன்பின் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலைச் சந்தித்து மனு கொடுத்தோம். இந்தக் குடும்பங்களுக்குப் பாதுகாப்பு வேண்டும். நீதி வேண்டும். தமிழன் என்று சொல்லி மார்தட்டிக்கொள்ளும் தமிழகத் தலைவர்கள் இதுவரை ராஜீவுடன் இறந்த தமிழ்க் குடும்பங்களைச் சந்தித்து ஆறுதல் சொன்னார்களா?'' என்றார்.

http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=92554

நன்றி விகடன்

ராஜீவ் காந்தி குண்டு வெடிப்பில் கைதாகியுள்ள தமிழர்கள் நிரபராதிகள் என்றால் வழக்காடி வெளி வரட்டும். தமிழர்கள் என்ற ஒரே காரணத்துக்காக விசாரணையின்றி வெளியில் விட்டால் அது மேலும் பல குற்றவாளிகள் உருவாக காரணமாகி விடும். எனவே உணர்ச்சிக்கு இடம் கொடுக்காமல் உண்மைக்கு இடம் கொடுத்து சம்பந்தப்பட்டவர்களின் மேல் முறையீட்டு வழக்கை மிக விரைவில் முடித்து குற்றமற்றவர்களாக வெளி வர என்ன செய்ய வேண்டுமோ அதைத்தான் நாம் முன்னெடுக்க வேண்டும்.

Wednesday, March 05, 2014

நரேந்திர மோடியின் சுயரூபம் வெளி வந்தது!



நேற்று குஜராத்தில் நடந்த வன்முறையை நாம் அனைவரும் பார்த்திருப்போம். ஆம் ஆத்மி தொண்டர்கள் தாக்கப்பட்டுள்ளனர். அரவிந்த் கெஜ்ரிவாலின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது. எந்த காரணமும் இன்றி அரவிந்த் கெஜ்ரிவாலின் பயணம் நிறுத்தப்பட்டது. ஆம் ஆத்மி, பிஜேபி இரு கட்சி ஆட்களும் தற்போது மோதலில் உள்ளனர்.



மோடிக்கு உண்மையிலேயே பயம் வந்து விட்டது. ஏனெனில் உண்மையில் குஜராத்தில் முன்னேற்றம் என்பது மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் மிகச் சொற்பமே! இது வரை ஊடகங்களுக்கு கோடிக் கணக்கில் பணம் கொடுத்து மோடி என்ற நச்சுக் கிருமியை பூதாகரமாக்கிக் காட்டினர். கெஜ்ரிவால் என்ன முன்னேற்றம் என்பதை நான் பார்க்கப் போகிறேன் என்று சொன்னதும் மோடிக்கு வியர்க்க ஆரம்பித்து விட்டது. கண்டிப்பாக உண்மைகளை கெஜ்ரிவால் வெளிக் கொண்டு வந்து விடுவார் என்பது மோடிக்கு நன்றாகவே தெரியும்.

எனவே தனது கட்சி குண்டர்களை விட்டு கெஜ்ரிவாலின் காரின் கண்ணாடிகளை உடைத்து பல ஆம் ஆத்மி தொண்டர்களை வன்முறையாக தாக்கியும் உள்ளனர். இந்த தாக்குதல் டெல்லி வரை சென்றுள்ளது என்றால் இவர்களின் நெட்வொர்க் எப்படி எல்லாம் வேலை செய்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம். தனது மாநிலத்தை சுற்றிப் பார்க்க வரும் ஒரு அரசியல் தலைவரையே அனுமதிக்க முடியாத துர்பாக்கிய நிலையில் தற்போது மோடி உள்ளார். இவர் கையில் இந்த நாட்டை கொடுக்க துடிக்கும் மேல் சாதி பார்பனர்கள் சற்று சிந்தித்து பார்க்க வேண்டும்.

இந்த தாக்குதலுக்குப் பிறகு தனது குஜராத் பயணம் இன்னும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளதாகவும், தாம் எதிர்பார்த்ததை விட குஜராத்தின் நிலை மிக மோசமாக இருப்பதாகவும் பத்திரிக்கையாளர்களிடம் கெஜ்ரிவால் கூறியுள்ளார். "சமி மருத்துவமனை மிகப் பெரிய ஒன்று. அங்கு நான் பார்வையிட சென்றேன். நான் எங்கெல்லாம் செல்கிறோனோ அத்தனை இடங்களையும் செல் போனில் ஒரு அதிகாரி மேலிடத்துக்கு தகவல் சொல்லிக் கொண்டே இருந்தார். மருத்துவமனை சுகாதாரமற்று 31 பெட்களோடு எந்த நோயாளிகளும் இல்லாமல் இரண்டு டாக்டர்களை கொண்டு மட்டும் நடத்தப்டுகிறது. சுகாதாரம் மோசமாக அந்த பகுதியில் இருந்ததை பார்வையிட்டேன். திடீரென்று போலீஸார் அங்கிருந்து அகன்று விட்டனர். இதற்கு மேல் எனக்கு அவர்கள் அனுமதி தர முடியாது என்று தடுத்தனர். தாக்குதலும் ஆரம்பமானது. இதை நான் விடப் போவதில்லை. 25 இடங்களில் ஆத் ஆத்மி தொண்டர் படை குஜராத் முழுக்க ஆய்வுகளை மேற் கொள்கின்றனர். உண்மையை மக்கள் மன்றத்தில் நாங்கள் கொண்டு வந்தே தீருவோம்" என்றும் சொல்லியிருப்பது அரசியல் நோக்கர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

குஜராத் பல்கலைக்கழக மாணவர் சங்கத்தேர்தலில் பாஜகவின் 'ABVP' சங்கத்துக்கும் காங்கிரஸ் கட்சியின் 'NSUI' மாணவர் அமைப்புக்குமிடையில் 10 இடங்களில் நடந்த தேர்தலில் 6 இடங்களில் ABVP படுதோல்வி அடைந்து விட்டது. நான்கு இடங்களில் மட்டுமே பிஜேபி வெற்றி பெற்று மற்ற ஆறில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியானது பாராளுமன்ற தேர்தலிலும் கண்டிப்பாக எதிரொலிக்கும் என்கின்றனர் நோக்கர்கள். இது மற்றொரு பெரும் பின்னடைவை மோடிக்கு ஏற்படுத்தியுள்ளது.

"கற்களால் அடி வாங்கினாலும், லத்திகளால் தாக்கப் பட்டாலும், இந்த போராட்டத்தில் நமது உயிரே போனாலும் எதற்கும் கவலைப்படாத தன்னலமற்ற தொண்டர்கள் மட்டும் என்னோடு வாருங்கள்." என்று குஜராத்தை ஆய்வு செய்ய அழைப்பு விடுத்துள்ளார். மோடி மிக பயங்கரமான கிரிமினல். அமீத்ஷாவின் யோசனையில் எதையும் செய்யத் துணியலாம். எனவே அரவிந்த் கெஜ்ரிவால் மிகவும் பாதுகாப்போடு இருக்க வேண்டியது அவசியம்.

நாடு முழுக்க நூறு எம்பி சீட்டுகளையாவது ஆம் ஆத்மி கைப்பற்ற வேண்டும் என்பது எனது ஆசை. தமிழகத்தில் ஐந்து சீட்டுகளாவது இவர்களுக்கு கிடைக்க வேண்டும். ஆளும் காங்கிரஸூம், அதிமுகவும் தவ்ஹீத் ஜமாத்தின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்க வில்லையாதலால் தவ்ஹீத் ஜமாத் ஆம் ஆத்மியை ஆதரிக்க முன் வரலாம் என்பது எனது விருப்பம். நரேந்திர மோடி இந்த நாட்டின் சாபக்கேடு என்றால் அது மிகையில்லை. மோடி என்ற இந்த தீய சக்தியின் கடைசி அரசியல் அத்தியாயமாக இந்த தேர்தல் அமைய வேண்டும். பிறபடுத்தப்பட்ட மக்களும், தலித்களும், சிறுபான்மையினரும், கம்யூனிஸ்டுகளும் ஒரு அணியில் நின்று பொது எதிரி நரேந்திர மோடியை வீழ்த்த வேண்டும். நமது நாடு அமைதி பூங்காவாக தொடர இதனை நாம் அவசியம் செய்தே ஆக வெண்டும்.

Tuesday, March 04, 2014

அசோக் மோஷியும், அன்சாரியும் நண்பர்களானார்கள்!



இந்த இரண்டு படங்களையும் மனிதாபிமானம் உள்ள எவரும் அவ்வளவு சீக்கிரம் மறந்து விட முடியாது. முதல் படம் பிப்ரவரி 28 2002 ம் ஆண்டு மோடி மற்றும் அவரது ஆட்சியாளர்களால் வெறியூட்டப்பட்ட இந்துத்வாவாதிகளில் ஒருவனான அசோக் மோச்சி வெறிகொண்டு முஸ்லிம்களை அழிக்க புறப்பட்ட போது எடுத்த புகைப்படம்.

அடுத்த படம் குத்புதீன் அன்சாரியினுடையது. தன்னை இந்துத்வா வெறியர்களிடமிருந்து காப்பாற்றும் படி பாதுகாப்பு படைகளிடம் அதே நாளில் கெஞ்சுகிறார். மோடியின் அரசாங்கம் எந்த அளவு அன்று வெறி ஆட்டம் ஆடியது என்பதை இந்த இரண்டு படங்களுமே விளக்கும்.

காலங்கள் இப்படியே வெறுப்பில் சென்று விடுவதில்லை. இந்த இரண்டு நபர்களையும் கேரளா மாநிலம் கண்ணூரில் ஒரு விழாவில் நாட்டு நலனில் அக்கறையுள்ளோர் சந்திக்க வைத்தனர். பழம் பெருமை வாய்ந்த இந்த பாரத நாட்டை இந்துத்வாவாதிகளால் அழிக்க இடம் தந்து விட மாட்டோம் என்று சொல்வது போல் மத ஒற்றுமைக்கு சான்றாக அமைந்தது இந்த நிகழ்ச்சி.



அசோக் மோஷி தனது உரையில் 'நான் முன்பு மிகப் பெரும் தவறு செய்து விட்டேன். மனிதத் தன்மை என்ன என்பதை தற்போது கற்றுக் கொண்டுள்ளேன். குஜராத்தில் வளர்ச்சி எங்கு இருக்கிறது? மாநிலம் முன்னேறி விட்டது என்று சொல்பவர்கள் வெட்கப்பட வேண்டும். லால்தர்வாஜாவில் உள்ள நடைபாதையில்தான் நான் இன்றும் வாழ்ந்து வருகிறேன். எனக்கு 39 வயதாகிறது. இன்று வரை தனிமையில்தான் உள்ளேன். திருமணம் முடிக்க என்னிடம் வசதி இல்லை.' என்று கூறினார்.

அன்சாரி தனது உரையில் 'அனந்த் ஷ்ரோப் என்ற ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி இந்துத்வாவாதிகளால் இஸ்லாமியருக்கு ஏற்பட்ட இன்னல்களுக்காக என்னிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். நானும் அசோக் மோஷியும் குஜராத்திகள். மேடையில் இங்கு அருகருகே அமர்ந்துள்ளோம். ஆனால் இவ்வளவு நெருக்கமாக அருகருகே குஜராத்தில் உட்கார முடியாது. மோடியின் ஆட்சியில் இதுதான் தற்போதய நிலை. சமூகங்கள் பல துண்டுகளாக சிதறிக் கிடக்கிறது. இன்று அசோக் மோஷி தனது தவறுக்காக வருத்தம் தெரிவித்தார். இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. நமது நாட்டு மனிதத் தன்மையின் புதிய அத்தியாயம் இன்று தொடங்கியுள்ளதாக எண்ணுகிறேன்.' என்றார்.

மனோஜ் குமாரின் புகழ் பெற்ற பாடலான 'ஹே...ப்ரீத் ஜஹாங்கி ரீத் சதா' என்ற பாடலை அசோக் மோஷி பாடினார். பாடி முடிந்தவுடன் மிக பலமான கைதட்டல்களால் அந்த இடமே அதிர்ந்தது. கேரளாவில் மொழி கடந்து நாட்டு பற்றினை அனைவரும் வெளிக்காட்டினர்.

அன்சாரி எழுதிய ‘Njan Qutubuddin Ansari’ (I am Qutubuddin Ansari) என்ற புத்தகமும் இந்த விழாவில் வெளியிடப்பட்டது.




அசோக் மோஷி தனது கைகளால் அன்சாரிக்கு பூச்செண்டு கொடுத்து தனது அன்பை வெளிப்படுத்தினார். மோடியின் பிரித்தாளும் சூழ்ச்சி நமது பாரத தேசத்தில் அரங்கேற எந்நாளும் வாய்ப்பில்லை என்பதை இந்நிகழ்ச்சி நமக்கு அழகாக உணர்த்தியது.

தகவல் உதவி

மாத்ரு பூமி
கண்ணூர்

கால்களை இழந்த பவாஜிர் என்ற சாதனையாளன்!



அப்துல்லா பவாஜிர் என்ற இந்த சிறுவன் பிறக்கும் போதே கைகளை இழந்து பிறந்தான். இதற்காக மனம் வருந்தி மூளையில் முடங்கி விடவில்லை. இதே போல் கைகளையும் கால்களையும் இழந்து பிறந்த ஆஸ்திரேலிய இளைஞன் நிகோலஸ் ஜேம்ஸின் அமெரிக்க தொலைக்காட்சி பேட்டியை பார்த்தான். அவனை ரோல் மாடலாக வைத்து நாமும் வாழ்க்கையில் சாதித்துக் காட்ட வேண்டும் என்ற உத்வேகத்தோடு தற்போது சிகரத்தை நோக்கி பயணிக்கிறான் அப்துல்லா பவாஜிர்.

சென்ற பிப்ரவரியில் மராத்தான் ஓட்டப்பந்தயம் உம்முல் குரா பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசையும் தட்டிச் சென்றார் பவாஜிர். பவாஜிர் ரியாத் நகரில் பிறந்தது 1992ல்.

'நான் வெளியிடங்களுக்கு சென்றால் பலரும் என்னை இரக்கத்தோடு பார்க்கின்றனர். இதை நான் விரும்பவில்லை. சிறு வயதில் இருந்தே இந்த குறை தெரியாமல் நான் வளர்க்கப்பட்டேன். எனது பெற்றோர் மிகுந்த தைரியம் கொடுத்து என்னை வளர்த்துள்ளார்கள். இடைநிலைக் கல்வியைத் தாண்டியபோது பொதுப் பள்ளிக் கூடத்துக்கு மாற்றப்பட்டேன். இது எனது வாழ்வில் மிக முக்கியமான தருணம். இங்கு நான் ஒரு குறையுடைவனாக பார்க்கப்படவில்லை. ஆனால் பொது இடங்களில் என்னை பரிதாபமாக பார்க்கும் நிலைதான் இன்னும் மாறவில்லை' என்கிறார்.

பவாஜிர் தனது பெற்றோருக்கு ஆறாவது மகனாக பிறந்தார். இமாம் முஹம்மது பின் சவுத் பல்கலைக் கழகத்தில் அரபி மொழிப் பாடத்தில் சிறந்த தேர்ச்சி பெற்றார். இடைநிலை மற்றும் உயர்நிலைப் படிப்புகளில் முக்கிய பாடமாக அரபியை தேர்ந்தெடுத்து மிகச் சிறந்த பேச்சாளராக உருவெடுததார். 2010 ஆம் ஆண்டு சமூக அறிவியல் சம்பந்தமாக மிகச் சிறந்த ஒரு சொற்பொழிவை இமாம் பல்கலைக்கழகத்தில் நிகழ்த்தினார். சமுக அறிவியலில் அதிக கவனம் செலுத்துவதன் காரணம் இதன் மூலம் மக்களுக்கு பல சேவைகளை செய்ய முடியும் என்ற எண்ணத்தினால் என்று சொன்னபோது நாம் ஆச்சரியப் படுகிறோம்.

"உடல் ஊனமுற்றவர்களுக்காக ஒதுக்கப்பட்ட வாகன நிறுத்துமிடங்களில் சிலர் தங்கள் வாகனங்களை நிறுத்தி விட்டு சென்று விடுகின்றனர். இது பலருக்கு சிரமத்தைக் கொடுக்கும் என்று ஏனோ இவர்கள் உணருவதில்லை. எனது உடல் முழு ஆரோக்கியத்தோடு இருப்பதற்கு இறைவனுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன். உடல் ஆரோக்கியம் இல்லை என்றால் என்னால் இந்த சாதனைகளை செய்து முடித்திருக்க முடியாது" என்று நினைவு கூர்கிறார்.

இங்கு பள்ளியில் நான் தொழச் சென்றால் கை கால்கள் நன்றாக உள்ள சில இளைஞர்கள் ஒவ்வொரு தொழுகைக்கு பிறகும் எழுந்து ஏதாவது காரணங்களைச் சொல்லி பாதையில் அமர்ந்து பிச்சை எடுப்பதை பார்க்கிறேன். இப்படி பள்ளியில் பிச்சை எடுப்பதை அரசும் கண்டிக்கிறது. இவர்கள் பவாஜிரைப் பார்த்து வெட்கப்பட வேண்டும். உண்மையில் பிச்சை எடுக்க முழு தகுதியும் உடையவர் பவாஜிர். ஆனால் மற்றவர்கள் தன்னை இரக்கத்தோடு பார்ப்பதையே விரும்புவதில்லை என்ற தன்மான உணர்வு எல்லோரும் பின் பற்ற வேண்டிய உணர்வு. நமது தமிழகத்தில் சொல்லவே வேண்டாம். பிச்சைக்கார தொழில் முதலீடு இல்லாத முழு நேர தொழிலாகவே மாறி விட்டது. அரசாங்கமும் இலவசங்களை வாரி வழங்கி எல்லோரையும் ஏறத்தாழ பிச்சைக் காரர்களாகவே மாற்றி விட்டது. :-) காதல் தோல்விக்கும் பரீட்சையில் குறைந்த மார்க் எடுத்ததற்கும் தமிழகத்தில் பலர் தற்கொலைகளை நாடுவது சர்வ சாதாரணமாகி விட்டது. இது போன்றவர்கள் கைகளையும் கால்களையும் இழந்த இவர்களைப் பார்த்து மனம் உறுதி பெற வேண்டும்.

தகவல் உதவி

சவுதி கெஜட்
02-03-2014

இந்த காணொளியையும் இந்த அன்பர் கொடுத்த லெக்சரையும் அவசியம் அனைவரும் பொறுமையாக பாருங்கள். 'கால்களையும் கைளையும் இழந்த நான் சந்தோஷமாக வாழவில்லையா?' என்று நம் எல்லோரையும் பார்த்துக் கேட்கிறார் ஜேம்ஸ். என்னை மிகவும் உணர்ச்சி வசப்பட வைத்த காணொளி!





Sunday, March 02, 2014

காஃபாவில் மொழி மாற்றும் வசதி அறிமுகம்!



இனி மெக்கா காஃபாவில் தொழ வருபவர்கள் வெள்ளிக் கிழமை தொழுகைக்கு முன் நடத்தப்படும் உரையை ஆங்கிலத்திலும் உருது மொழியிலும் ஒரே நேரத்தில் கேட்கலாம். ஏர் ஃபோன் (INTRA -FM SERVICE) மூலமாக மொழி பெயர்க்கப்படும் இந்த சேவையை மெக்கா பள்ளியின் இமாம் சுதைஸ் தொடங்கி வைத்தார். வெள்ளிக் கிழமை தொழுகைக்கு முன் நடத்தப்படும் உரையானது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக முகமது நபி காலத்திலிருந்து இருந்து வருகிறது. அரசாங்கமே பள்ளியில் தான் பெரும்பாலும் நடத்தப்பட்டது. தொழுகைக்கு வரும் மக்களுக்கு சொற்பொழிவில் அந்த இமாம் என்ன சொல்கிறார் என்பது புரிய வெண்டும். அந்த சொற்பொழிவு தாய் மொழியில் இருந்தால்தான் அது சாத்தியப்படும். முதன் முதலாக உருதுவிலும் ஆங்கிலத்திலும் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது. மொழி மாற்றும் வசதி கொண்ட பூத்கள் நிறுவப்பட உள்ளன. இனி உலகின் பல மொழிகளிலும் மொழி மாற்றும் வசதிகள் செய்யப்படலாம் . தமிழும் மலையாளமும் கூடிய விரைவிலேயே வரலாம். இது வரவேற்கத்தக்க மாற்றம்.

உலகில் தேவ மொழி என்று எந்த மொழியையும் இஸ்லாம் காட்டவில்லை. உலகில் உள்ள மூல மொழிகள் எல்லாம் இறைவன் மனிதனுக்கு கற்றுக் கொடுத்தவையே. உலகில் உள்ள மொழிகள் எல்லாமே இறைவனால் மனிதனுக்கு அவனது அறிவை பெருக்கிக் கொள்ள வழங்கப்பட்டது.

ஆனால் நமது தமிழகத்தில் இன்றும் பல பள்ளிவாசல்களில் அரபி மொழியை தேவ மொழியாக நினைத்து வெள்ளிக்கிழமை பிரசங்கத்தை அரபியில் ஒரு சடங்காக ராகத்தோடு ஓதுவதைப் பார்க்கிறோம். புரியாத மொழி என்பதால் பலர் பிரசங்கம் முடியும் தருவாயில்தான் பள்ளிக்குள் நுழைகின்றனர். முன்பே பள்ளிக்கு வந்து விடுபவர்கள் கூட பிரசங்கம் புரியாததால் தூங்க ஆரம்பித்து விடுகின்றனர். வெள்ளிக் கிழமை பிரசங்கமானது வரக் கூடிய மக்களை தட்டி எழுப்பும் வகையில் கம்பீரமாக இருக்க வேண்டும். தாலாட்டி தூங்க வைக்கக் கூடாது. கஃபாவிலேயே உலக மொழிகள் வர ஆரம்பித்து விட்டது. எனவே நமது தமிழக பள்ளிவாசல்களிலும் பிரசங்கங்களை தாய் மொழியான தமிழிலேயே தர நிர்வாகிகள் முயற்சிக்கலாமே!

எங்கள் ஊரில் பெரிய பள்ளி, கீழப் பள்ளி என்று இரண்டு பள்ளிகள் உண்டு. பெரிய பள்ளியில் ஜூம்ஆ பிரசங்கம் அரபியில் நடைபெறும். கீழப் பள்ளியில் ஜூம்ஆ பிரசங்கம் தமிழில் நடைபெறும். 'அருகருகே இருக்கும் இரண்டு பள்ளியில் ஏன் இந்த வித்தியாசம்? இனிமேல் தமிழில் பிரசங்கம் பண்ணக் கூடாது.தமிழில் பிரசங்கம் பண்ணுவது நபி வழிக்கு மாற்றமானது' என்று ஒரு கூட்டம் 70 ஆண்டுகளுக்கு முன்பு பிரச்னை பண்ணியது. வழக்கும் தொடர்ந்தனர். அப்போது வெள்ளையரின் ஆட்சி. பெரும் பெரும் மார்க்க அறிஞர்கள் வந்து விவாதமும் நடைபெற்றது. இரு தரப்பும் தங்கள் வாதங்களில் பிடிவாதமாக இருக்கவே வெள்ளைக்கார நீதிபதி 'யாரும் யாரையும் வற்புறுத்தக் கூடாது. ஒருமித்த கருத்து ஏற்படும் வரை முன்பு எந்த வழக்கம் கடை பிடிக்கப்பட்டதோ அதுவே தொடர வேண்டும்' என்று தீர்ப்பளித்து சென்று விட்டார். இந்த வரலாற்றை எனது தாத்தா என்னிடம் சொல்லக் கேட்டுள்ளேன். அந்த காலத்திலிருந்தே இஸ்லாமிய சட்டங்களை சரிவர விளங்காத ஒரு கூட்டம் தொடர்ச்சியாக இருந்து கொண்டிருக்கிறது. தமிழில் குர்ஆனை மொழி பெயர்க்கக் கூடாது என்று ஒரு கூட்டம் பெரும் எதிர்ப்பை கொடுத்துக் கொண்டிருந்த கூத்தும் சில காலம் தமிழகத்தில் இருந்தது. முதலில் குர்ஆனை தமிழில் மொழி பெயர்த்த ஏ கே ஏ அப்துல் சமதின் தந்தையை சில மார்க்க அறிஞர்கள் 'இஸ்லாத்தை விட்டு வெளியேறி விட்டார்' என்று கூட ஃபத்வா கொடுத்தனர். :-) இது போன்றவர்களுக்கு அன்பாக உண்மையை புரிய வைக்க வேண்டியது நமது கடமை.

'எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கிக் கூறுவதற்காக அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம்'
-குர்ஆன் 14:4


இந்த வசனத்தின் மூலம் தமிழ் மொழிக்கு இறைத்தூதரும் இறை வேதமும் வந்துள்ளதை அறியலாம். முகமது நபி அரபியரக இருந்ததால் குர்ஆன் அரபி மொழியில் இறங்கியது. முகமது நபி தமிழராக இருந்திருந்தால் குர்ஆன் தமிழிலேயே இறங்கியிருக்கும்.

தகவல் உதவி
சவுதி கெஜட்
03-03-2014

முகமது நபிக்கு மட்டும் ஏன் விசேஷ சலுகை?

//33:49-51 - இது குரானிலிருந்து.. ஹத்தீசெல்லாம் இல்லை ... அதாவது கடவுள் நபிக்கு மட்டும் கொடுக்கும் “நன்கொடைகள்”!!!! நன்கொடைகளைக் கணக்கு வைக்க அடைப்பானுக்குள் எண்கள் கொடுத்துள்ளேன். //

இது மட்டும் அல்ல. இன்னும் சில விஷேஷ சட்டங்கள் நபிக்கு உண்டு.

1.ஜகாத் எனும் அரசுக் கருவூலத்திலிருந்து தாமும் தமது குடும்பத்தாரும் எதையும் பெறுவது ஹராம் என்று தடை போட்டது.

2. உலகம் உள்ள வரை எனது பரம்பரைக்கு இந்த விதி பொருந்தும் என்று கட்டளையிட்டது.

3. தனது இறப்புக்குப் பின் தமக்கு சொந்தமான உடமைகள் அனைத்துக்கும் தமது வாரிசுகள் உரிமைக் கொண்டாடக் கூடாது என்று அறிவித்து அரசாங்கத்தில் சேர்த்து விட்டுச் சென்றது. ஆனால் மற்றவர்களுக்கு இந்த சட்டம் கிடையாது.

4. தாமும் தமது குடும்பத்தவரும் யாரிடமும் எக்காலத்திலும் தர்மம் பெறக் கூடாது என்று சட்டம் போட்டது.

5. மற்றவர்கள் ஐந்து நேரம் தொழ வேண்டுமென்றால் தமக்கு மட்டும் நள்ளிரவில் தொழும் ஆறாவது தொழுகையை கடமையாக்கிக் கொண்டது.

6. இரவு பகல் 24 மணி நேரமும் மற்றவர்கள் நோன்பு நோற்கக் கூடாது என்று தடுத்து விட்டு அந்த சிரமத்தை தாம் மட்டும் மேற்கொண்டது.

இப்படி பல விஷயங்கள் முகமது நபிக்கு மட்டும் சிறப்பாக இருந்துள்ளது. இவை அனைத்தும் அவருக்கு மேலும் சிரமத்தைக் கொடுக்கும் சட்டங்கள். மேலும் இறைவன் முகமது நபியை கண்டித்த பல வசனங்களையும் ஒளிவு மறைவு இல்லாமல் உலகுக்கு அறிவித்து விட்டார்.

திருமணம் சம்பந்தமாக வரும் இந்த சலுகை ஒன்றுதான் அவருக்கு சாதகமான ஒன்று மற்ற அனைத்தும் அவருக்கு சிரமத்தைக் கொடுப்பவையே! முதல் திருமணம் 25 ஆம் வயதில் நடந்தது. அன்றிலிருந்து 25 ஆண்டுகள் ஒரு மனைவியுடனேயே வாழ்க்கை நடத்தியுள்ளார். 50 வயதுக்கு பிறகுதான் மற்ற பெண்களை திருமணம் முடிக்கிறார். உடல் பசிக்காக திருமணம் முடித்திருந்தால் இளமையிலேயே முடித்திருக்க வேண்டும்.

பிறகு எதற்கு இந்த திருமணங்கள் என்ற கேள்வி வரலாம்.

மனிதனின் வாழ்வில் குடும்பவியல் சட்டங்கள்தான் பெரும் பங்கு வகிக்கின்றன. தாம்பத்ய உறவு, குழந்தைகள் வளர்ப்பு, மனைவியின் தேவைகளை கவனித்தல், சுற்றத்தாரை கவனித்தல், மனைவி மகனுக்கான பாகப்பிரிவினை, என்று அனைத்து சட்டங்களும் மனித குலத்துக்கு கிடைக்க வெண்டும் என்றால் அது அவரின் மனைவிகள் மூலமாகத்தான் கிடைக்க முடியும். ஹதீதுகளை அறிவித்தவர்களில் அன்னை ஆயிஷா அவர்களின் ஹதீதுகள் அதிகமாக நாம் பார்க்க முடிகிறது. நபிகளின் மனைவிகளின் மூலம் இஸ்லாமிய சமூகத்துக்கு பல ஆயிரக்கணக்கான சட்டங்கள் கிடைத்துள்ளன. இந்த காரணத்துக்காகத்தான் இறைவன் முகமது நபிக்கு சில சலுகைகளை வழங்குகிறான். அந்த சலுகைகளால் பயன் பெற்றது முகமது நபியை விட இந்த மனித குலம்தான். எனது இந்து நண்பர் (வழக்கறிஞர்) பாகப்பிரிவினை சட்டங்களை படித்து விட்டு அசந்து விட்டார். இவ்வளவு தெளிவான சட்டங்களை எல்லா நாட்டு மக்களுக்கும் பொருந்தும் வகையில் கண்டிப்பாக ஒரு தனி மனிதனால் தரவே முடியாது என்று அடித்து சொல்கிறார்.

நமது இந்திய சட்டங்கள் சுதந்திரம் அடைந்ததிலிருந்து 50 முறைகளுக்கு மேல் திருத்தங்கள் பெற்று விட்டது. ஒரு நாட்டுக்கே இந்த நிலைமை. ஆனால் முகமது நபி வகுத்துத் தந்த சட்டங்கள் உலக முஸ்லிம்களால் எந்த மாற்றமும் இன்றி எந்த குழப்பமுமின்றி இன்று வரை செயல்படுத்தப்பட்டு வருவதிலிருந்து இந்த சட்டங்களின் மேன்மையை அறிந்து கொள்ளலாம்.

Saturday, March 01, 2014

தொழுகைக்காக கிரிக்கெட்டை நிறுத்திய ஆப்கன் அணியினர்!



சென்ற பிப்ரவரி 25 ஆம் தேதி முதல் ஆசிய கோப்பை தொடர் போட்டி வங்க தேசத்தில் நடைபெற்றது. மார்ச் ஒன்றாம் தேதி வங்க தேச அணியும் ஆப்கானிஸ்தான் அணியும் மோதின. போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது மாலை (மஹ்ரிப்) நேர தொழுகைக்கான நேரம் வந்தது. நடுவர்களிடம் தாங்கள் தொழுது கொள்ள ஐந்து நிமிட நேரம் ஒதுக்க வேண்டும் என்று ஆப்கன் அணியினர் கேட்டுக் கொண்டனர்.

இவர்களின் கோரிக்கையை ஏற்ற நடுவர்கள் தொழுவதற்கு அனுமதி வழங்கினர். மைதானத்திலேயே கூட்டாக அந்த வீரர்கள் தங்கள் தொழுகையை நிறைவேற்றியது பார்த்தவரை மெய்சிலிர்க்க வைத்தது. கிரிக்கெட் போட்டியில் தொழுகைக்காக நேரம் ஒதுக்கியது வரலாற்றில் இதுவே முதல்முறை. இந்த போட்டியில் ஆப்கன் அணியினர் வெற்றியும் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வீரர்களுக்கு கிடைத்த ஓய்வு நேரத்தில்தான் தொழுகையை நிறைவேற்றினர் என்ற செய்தியும் ஒரு இணைய தளத்தில் உள்ளது. எப்படியோ கிரிக்கெட் வரலாற்றில் இது போன்ற ஒரு நல்ல நிகழ்வு நடைபெற முன்னுதாரணமாக விளங்கும் ஆப்கான் கிரிக்கெட் டீமை பாராட்டுவோம்.

'நான் கிரிக்கெட்டை மிகவும் விரும்புபவன். ஆப்கன் அணி பல வெற்றிகளைப் பெற பிரார்த்திக்கிறேன்' என்று தாலிபான்களின் செய்தி தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். தற்போது தாலிபான்களிடம் அதிக மாற்றங்கள் தென்படுவதை இந்த பேட்டி உணர்த்துகிறது. துப்பாக்கிகளை தூரமாக்கி ஆப்கான் அரசியலில் தாலிபான்கள் தங்களின் முத்திரையை பதிப்பார்களாக!

நம்பிக்கை கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டனர். அவர்கள் எத்தகையோரென்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள்.

மேலும் அவர்கள் தம் தொழுகைகளைக் குறித்த காலத்தில் முறையோடு பேணுவார்கள்.

குர்ஆன்: 23:1,2 - 23:9


பெண்களை இதை விட அசிங்கப்படுத்த முடியாது!



கோவை பூச்சியூரில் வேட்டைக்கார சாமி ஊர்வலத்தில்தான் இந்த காட்சி. எந்த காலத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம்? பெண்களுக்கு இஸ்லாம் கண்ணியத்திற்காக சில கட்டுப்பாடுகளை விதித்தால் குய்யோ முறையோ என்று கூப்பாடு போடுபவர்கள் இந்த கொடுமையை வாயளவில் தட்டிக் கேட்கவும் தயங்குகிறார்கள். சுய மரியாதை உடைய எந்த பெண்ணாவது இவ்வாறு ஆண்களால் மிதி வாங்க விருப்பப் படுவாரா? இது போன்ற கொடுமைகள் தினமும் மதத்தின் பெயரால் அரங்கேறினால் இஸ்லாத்தை நோக்கி ஓடாமல் என்ன செய்வார்கள்?

சிந்திக்க மாட்டீர்களா?

--------------------------------------------------------

இறைவனை நெருங்க எளிய வழிகாட்டும் இஸ்லாம்‬!

ஊட்டி அருகே நஞ்சநாடு என்ற கிராமத்தில் உள்ள கோவிலில் இரு தரப்பினரில் யார் முதலில் வழிபாடு நடத்துவது என்று ஏற்பட்ட தகராறில் இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பல வீடுகள் தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளன.

கடவுளை வழிபடுவதில் யாருக்கு முன்னுரிமை என்ற போட்டியில் இரு உயிர்கள் பலியானது வேதனையான சம்பவம்.

மொழியால், குலத்தால், பணத்தால், நிறத்தால், தேசத்தால் பல பிரிவினையை ஏற்படுத்தி ஏற்றத்தாழ்வுகளை போதிப்பதுதான் கடவுளை வழிபட பெரும் தடையாக உள்ளது.

ஆனால் இந்த பிரச்சனைகள் அனைத்திற்கும் இஸ்லாம் அழகான தீர்வை சொல்லித்தருகின்றது.

வழிபாட்டுத்தலத்திற்குள் யார் முதலில் வருகின்றார்களோ அவர்களுக்கு முதல் வரிசையில் முன்னுரிமை. அவ்வாறு முதலில் வருபவர் ஆண்டியாக இருந்தாலும் சரி; அரசனாக இருந்தாலும் சரி! முதலில் வருபவருக்கே முன்னுரிமை; அப்படி வரிசையில் நின்று வணங்கும்போதும் கூட பின்னால் நிற்பதால் இறைவனை வணங்குவதில் பின்னாடி போய்விட்டோம் என்று அஞ்சத்தேவையில்லை.

தொழுகையின் போது இறைவனுக்காக நம்முடைய நெற்றியை நிலத்தில் வைத்து அவனுக்கு சிரம் பணிவதுதான் அவனை மிகமிக அருகில் நெருங்குவது என்று அழகான ஒரு வழிகாட்டுதலை இஸ்லாம் வழங்குகின்றது.

இவ்வாறு சிரம் பணிந்து இறைவனிடத்தில் மிக அருகில் நெருங்குவதற்கு
பணம் தேவையில்லை;
பட்டம் தேவையில்லை;
பதவி தேவையில்லை;
அந்தஸ்து தேவையில்லை;

பணக்காரனும் நெருங்கலாம்; ஏழையும் நெருங்கலாம்.
வெள்ளையறும் நெருங்கலாம்; கறுப்பரும் நெருங்கலாம்.
எந்த ‪#‎மொழி‬ பேசக்கூடியவரும் நெருங்கலாம்.

இப்படி இறைவனை மிக எளிய வழியில் நெருங்க இஸ்லாம் வழிகாட்டுகின்றது.

மற்ற மதங்களிலோ இத்தகைய வழிகாட்டுதல்கள் இல்லாமல் அமைதியை தொலைத்துவிட்டு ஆன்மீகத்தை தேடி வருகின்றனர்.
கடவுளைத் தேட புறப்பட்டு அமைதியை தொலைத்தவர்களுக்கு இந்த பதிவின் வாயிலாக அன்பான அழைப்பு விடுக்கின்றோம்.

வாருங்கள்... எளிய வழியில் இனிய முறையில் இறைவனை நெருங்கி அவனது அன்பைப்பெறுவோம் என்று அழைக்கின்றது இன்றைய தினம் ஒரு தகவல்

video : http://thowheedvideo.com/dinam_oru_thagaval_bayan/