Followers

Sunday, November 30, 2014

நேபாளத்தில் ஒரே நேரத்தில் 5000 மாடுகள் பலி கொடுக்கப்பட்டுள்ளன!





காத்மாண்டு: நேபாளம், பாரா மாவட்டத்தில் உள்ள பரியார்பூர் என்ற கிராமம். இங்குள்ள காதிமை கோவிலில், ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை எருமைகளை பலியிடுவது வழக்கம். இந்த ஆண்டு, 5 ஆயிரத்திற்கும் அதிகமான எருமை மாடுகள் ஒரே நேரத்தில் பலி கொடுக்கப்பட்டன. இவ்வாறு விலங்குகளை பலி கொடுப்பதால், தங்களுக்கு நல்ல வசதியாக வாழ்க்கை கிடைக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து ஏராளமானோர் வந்திருந்தனர். எருமை மாடுகளை பலி கொடுப்பதற்காக 400 பேர் பணியில் இருந்தனர். எருமை மாடுகள் தவிர ஆயிரக்கணக்கான ஆடுகளும், பன்றி மற்றும் கோழிகளும் இந்த விழாவில் பலி கொடுக்கப்பட்டன. விலங்குகள் பாதுகாப்பு ஆர்வலர்கள் இதில் தலையிட்டு, தடுக்க முயற்சி மேற்கொண்டனர். ஆனால், பராம்பரியமாக இந்த விழா நடத்தப்பட்டு வருவதாகவும், அதனால் நிறுத்த முடியாது என்றும் விழா ஏற்பாட்டாளர்கள் கூறி உள்ளனர். இந்த விழாவில் கலந்து கொண்ட ஒரு குழந்தை குளிர் தாங்காமல் இறந்துவிட்டது. கூட்ட நெரிசலில் சிக்கி, மூதாட்டி ஒருவர் இறந்தார்.

தினமலர்
30-11-2014

மாடுகளை தனது வயிற்றுப் பசிக்காக அறுத்து புசித்த நான்கு தலித்களை அடித்தே கொன்றது மேல் சாதி வர்க்கம். சில ஆண்டுகளுக்கு முன் வட இந்தியாவில் நடந்த இந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது ஞாபகம் இருக்கலாம். மாட்டுக் கறியில் புரதச் சத்து அதிகம் உள்ளது. விலையும் குறைவு. உடல் உழைப்பு சார்ந்த தொழில் செய்யும் தலித் மக்களுக்கு இந்த புரதம் அவசியம். அலுவலக வேலை மட்டுமே செய்து பழக்கப்பட்ட பார்பனர்களுக்கு இந்த புரதச் சத்தெல்லாம் தேவைப்படாது. தேவைப்படுபவர்கள் தங்களின் பொருளாதாரத்தை செலவு செய்து பெற்றுக் கொள்வதில் இவர்களுக்கு என்ன பிரச்னை என்று தெரியவில்லை.

ஒருவருக்கு மாடு தெய்வம் என்றால் அதனை அவரது வீட்டில் வைத்து அதற்கு மரியாதை செய்து கொள்வதை யாரும் தடுக்கவில்லை. பொது வெளியில் மொத்த மக்கள் தொகையில் இரண்டு சதவீதமே இருக்கும் பார்பனர்கள் 'எனது நம்பிக்கைப்படி மற்ற 98 சதமான இந்தியர்களும் மாற வேண்டும்' என்று அடம் பிடிப்பது சர்வாதிகாரம் இல்லையா?

இவர்களுக்கு அவசியம் என்றால் ஒரே இடத்தில் 5000 மாடுகளை வெட்டி யாருக்கும் பயன் படாமல் அழுக விடுவார்கள். சுற்றுப் புற சூழலை மாசுபடுத்துவார்கள் பக்தியின் பெயரால். ஆனால் வயிற்றுப் பசிக்காக அறுத்து எவரேனும் புசித்தால் அதனை பிரச்னையாக்குகிறார்கள். இதனை அறிவு ஜீவிகள் என்று சொல்லிக் கொள்வோரும் ஆதரிப்பதுதான் விந்தை.

இனி இந்து மதம் பசு பற்றி என்ன கூறுகிறது என்றும் பார்போம்.

யாதொரு மனிதன் கிரயத்திற்காவது, இலவசமாகவாவது பசுமாமிசத்தை வாங்கி தேவர் களுக்காவது அல்லது ஆத்மாக்களுக்காவது ஸ்தோத்திரம் செய்த பிறகு அம் மாமிசத்தைச் சாப்பிடுவதில் எத்தகைய பிணியும் கிடையாது. (மனு 235)

முள்ளெலி, பெருச்சாளி, ஆமை, முயல் ஆகியவைகளை இந்து மத நிபுணர்கள் உண்ணலாமென வைத்திருக்கின்றார்கள். நான்கு கால் மிருகங்களில் ஒட்டகம் ஒன்று மட்டும் நீங்கலாக ஒரு பக்கத்தில் மட்டும் பல்லிருக்கக் கூடிய மிருகங்கள் எதானாலும் சாப்பிடலாம். (மனு 185)

பசு குர்பானியின் முறை ஓர் விதமாகக் கூறப் பட்டிருக்கிறது. அதற்கு சுடப்பட்ட பசு மாமிசம் உப்புக் கண்டம் எனக் கூறப்படுகிறது. அதற்காக வேண்டி பசுக்களில் நல்ல பசுவாகவும், கொழுத்த தாகவும் இருப்பதுடன் பாதரம் நிறமாகவும் இருக்கக் கூடாது. இவ்வாறு இந்தப் பசுவுக்கு பல நிபந்தனைகளுண்டு. அவ்வாறு குர்பானி செய்யப்படும் பசுவிற்கு எத்தனை நிபந்தனைகளிட்டிருக்கின்றார்களோ அத்தனை நிபந்தனைகளும் பொருந்திய ஓர் பசுங்கன்று கிடைத்தால் வெந்நீர் கொண்டு குளிப்பாட்டி அதை ரூரா (சுவாமி)வுக்கு வேண்டுதலைசெய்து கட்டிவைத்து வளர்த்து வருகின்றார்கள். அந்தக் கன்றுக்குப் பற்கள் பூராவும் முளைத்து குறிப்பிட்ட தவணை வந்தவுடன் குர்பானியின் மந்திரம் கிரிவுக்கள் தெரிந்த புர்ஹத் பிராமணனை அழைத்து அவர் படிக்க வேண்டிய மந்திரங்களைப் படித்து நெருப்பில் போட வேண்டிய வஸ்துக்களைப் போட்டு செய்ய வேண்டிய கிரியைகள் பூராவையும் செய்து முடித்துவிட்டு புது நூதனமாக தயார் செய்யப்பட்ட ஓர் இடத்திற்கு அந்தப் பசுவைக் கொண்டுபோய் பொதுவான சட்டப்படி அறுத்து அதன் ஈரலை எடுத்து ஓர் தட்டில் வைத்து 12 தேவதைகளின் நாமங்களைச் சொல்லிக்கொண்டே அந்தத் தட்டை நெருப்பில் வைத்து விடுகிறார்! அதன் பிறகு வைக்கோல் புற்களை விரித்து கொஞ்சம் அரிசிப் பொத்தலையும் பசு மாமிசத்தையும் வைத்து ரூரோவுக்கு பூஜை செய்கின்றார்கள். பூர்வீக காலத்தில் அவ்வாறு குர்பானி செய்யப்பட்ட பசுவின் எலும்பு, ஜவ்வு, தோல் இவைகளை நெருப்பில் போட்டு எரித்து சாம்பலாக்கப்பட்டு வந்தது.

-குர்ஹீயா சூத்திரம்

தாவரங்களை கொன்று திண்பவர்கள் அது உயிர் வதையில் சேராது என்று வாதிப்பார்கலானால் அது முற்றிலும் தவறு. தாவரங்களும் உணர்கின்றன, வலியையும் உணர்கின்றன, தாவரங்களுக்கு rudimentary nerve structure என்று உள்ளது, அது தான் வலியை உணரக்கூடியதாக உள்ளது. ஒரு இலையை அதிலிருந்து எடுத்தாலோ அல்லது அதை தொட்டால் கூட அது உணரக்கூடியதாக உள்ளது. மேலும் மற்ற தாவரங்களோடு பேசுவதாக உள்ளது என்பது மேலும் ஆச்சர்யமான விஷயம்.

அது பற்றி மேலும் அறிய கீழ உள்ள சுட்டியை பார்க்கலாம்:

http://www.viewzone.com/plants.html

என் மகனுக்கு பேய் புடிச்சிருக்கு (சிறுகதை)

என் மகனுக்கு பேய் புடிச்சிருக்கு(சிறுகதை)



எல்லோர் முகத்திலும் சோகம்! இறப்பு என்பது எத்தகைய சோகத்தை கொடுக்கும் என்பதை அந்த வீடு உணர்த்திக் கொண்டிருந்தது. இப்றாகிம் பாய் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டவர் இன்று இறந்த சடலமாக கட்டிலில் படுக்க வைக்கப்பட்டிருந்தார். வயதும் ஐம்பத்தைந்தை தாண்டியிருந்தது. சில காலம் நோய்வாய்பட்டிருந்தவர் நேற்று இரவு இந்த உலகுக்கு விடை கூறி விட்டு மறு உலக பயணத்துக்கு ஆயத்தமாகி விட்டார்.

எல்லோரும் சவுதியில் இருக்கும் இவரது மகன் ரஹீமின் வரவுக்காக காத்திருந்தனர். வந்தவுடன் உடலை அடக்கம் செய்ய தூக்க வேண்டியதுதான். சொந்தங்கள் ஒவ்வொருவராக வந்து துக்கம் விசாரித்துக் கொண்டிருந்தனர். இப்றாகிம் பாயின் மனைவி ஜீனத் சோகமே உருவாகி கணவனின் தலைமாட்டில் அமர்ந்திருந்தார். இறந்தவுடன் அந்த உடலை தண்ணீரால் கழுவி கட்டிலில் வைத்திருந்தனர். மறு குளிப்பாட்டு பையன் வந்தவுடன் வைத்துக் கொள்ளலாம் என்று சொந்தங்கள் சொல்லவே மகன் ரஹீமின் வரவை எதிர் நோக்கி அனைவரும் காத்திருந்தனர்.

இப்றாகிம் பாய்க்கு ஒரே பையன். பையனை நன்கு படிக்க வைத்திருந்தார். ரஹீம் துடிப்பான இளைஞன். கல்லூரி படிப்பை முடித்த கையோடு தாய் நாட்டிலேயே வேலை செய்ய விருப்பப்பட்டு பல இடங்கள் ஏறி இறங்கியும் ஒன்றும் சரிபட்டு வராததால் இணைய தொடர்பு மூலம் சவுதியில் வேலை கிடைத்து தற்போது மாதம் 50000 அனுப்பி வருகிறான். ஊருக்கு வந்து திருமணம் முடிக்கும் எண்ணத்தில் வர இருந்தவனுக்கு தகப்பனாரின் இறப்பு செய்தி இடியாக வந்திறங்கியது. கம்பெனியில் நிலைமையை விளக்கிச் சொல்லி தற்போது 15 நாள் விடுப்பில் தாயகம் திரும்பிக் கொண்டிருக்கிறான் ரஹீம்.

இதோ ஊருக்குள் வாகனம் நுழைந்து விட்டது. தனது வீட்டின் முன் சொந்தங்கள் அனைவரும் குழுமியிருப்பதை தூரத்திலிருந்தே பார்த்த ரஹீமுக்கு துக்கம் தொண்டையை அடைக்க மௌனமாக அழுதான். வீட்டின் முன் வாகனம் நின்றது.

சொந்தங்கள் சோகத்தோடு ரஹீமை வீட்டிற்குள் அழைத்துச் சென்றனர். அதுவரை துக்கத்தை அடக்கி வைத்திருந்த ஜீனத் மகனைப் பார்த்தவுடன் 'அப்பா போய்ட்டாருப்பா...' என்று மகனை கட்டி அணைத்து அழத் தொடங்கினார். ரஹீமும் தாயாரோடு சேர்ந்து சிறிது நேரம் அழுது விட்டு தகப்பனாரின் முகத்தை பார்த்தான். அமைதி தவழும் முகம். ஒரு வேளை தொழுகையைக் கூட பிறபடுத்தாதவர். நல்ல உழைப்பாளி. இறைவன் சற்று சீக்கிரமே அழைத்துக் கொண்டு விட்டான் என்று நினைத்தவனாக தகப்பனாரை குளிப்பாட்ட ஆயத்தமானான்.

இறந்தவரை குளிப்பாட்டுதல் என்பது ஹஜ்ரத் என்று சொல்லப்படும் மார்க்க அறிஞரை அழைத்து செய்வதுதான் ஊர் வழக்கம். அதன்படி அவரின் வருகைக்காக பலரும் காத்திருந்தனர். ரஹீம் தனது மாமாவிடம் 'ஏன் ஹஜ்ரத்துக்காக காத்திருக்க வேண்டும். நான் இறந்தவரை குளிப்பாட்டுதலைப் பற்றிய செய்முறை விளக்கம் படித்திருக்கிறேன். எனது தகப்பனாருக்கு நானே கழுவதுதான் சிறந்தது' என்று பைப்பை திறந்து தண்ணீர் பிடிக்க ஆரம்பித்தான் ரஹீம்..

ரஹீமின் மாமா குத்தூஸ் வேகமாக வந்து 'தம்பி! அததற்கென்று ஆட்கள் இருக்கிறார்கள். நாமே செய்தால் பின்னால் அவரை பகைத்துக் கொண்டதாக ஆகும்' என்றார்.

'"என்ன மாமா! இறந்தவருக்கு குளிப்பாட்டும் உரிமை அவரது நெருங்கிய சொந்தத்துக்குத்தான் உண்டு என்ற ஹதீதை நீங்கள் பார்த்ததில்லையா? யார் தடுத்தாலும் நான்தான் குளிப்பாட்டுவேன்'". என்று கூறியவனாக பைப்பில் தண்ணீர் பிடிக்க ஆரம்பித்தான். உதவிக்கு ரஹீமின் நண்பர்களும் வந்தனர். வந்திருந்த பெரியவர்கள் ஆச்சரியத்தோடு ரஹீமை பார்த்துக் கொண்டு நின்றிருந்தனர்.

இறந்த உடலை சற்று சரிவாக உட்கார வைத்து தேங்கிய மலம் சிறுநீர் போன்றவை வெளியேற தோதுவாக வயிற்றை மெதுவாக அமுக்கினான். கையில் உறை இருந்ததால் அசுத்தங்களை எல்லாம் துடைத்து விட்டு பன்னீர் மற்றும் சோப்பு நுரை கலந்த தண்ணீரால் உடலை கழுவ ஆரம்பித்தான். அவனுக்கு உதவியாக இப்போது அவனது மாமாவும் வந்தார். அவனது நண்பர்களும் உதவினர். இறந்தவுடன் உடல் மிருதுவாகி விடும் ஆகையால் தோல்களுக்கு சிராய்ப்பு ஏற்படாமல் மிக மிருதுவாக தனது தந்தையை கழுவிக் கொண்டிருந்தான் ரஹீம்.

அடுத்தாக கற்பூரம் கலந்த தண்ணீரினால் இறந்த உடலை கழுவி விட்டனர். கழுவும் போது மூக்கிலும் வாயிலும் தண்ணீர் செல்லாமல் பார்த்துக் கொண்டனர். ஏனெனில் அந்த தண்ணீர் திரும்பவும் வயிற்றுக்குள் சென்றால் பிறகும் அசுத்தங்கள் வெளியாக வாய்ப்பிருக்கிறது. கழுவி முடிந்து ஒரு மெல்லிய துணியால் உடலை துடைக்க ஆரம்பித்தனர்.

அடுத்து அவனது மாமா வெள்ளை துணியை கொண்டு வந்தார். தலைப் பக்கமும் கால்பக்கமும் ஒரு அடி விட்டு இறந்த உடலின் மேல் போர்த்தினர். கால் பக்கமும், உடல் பக்கமும், தலைப் பக்கமும் துணியினால் முடிச்சு போட்டு நெருங்கியவர்கள் கடைசியாக பார்க்க அழைக்கப்பட்டனர். ஜீனத் கடைசி முறை தனது கணவனை பார்த்து விட்டு மகனைக் கட்டிக் கொண்டு சத்தம் போட்டு அழ ஆரம்பித்தார். 'வேண்டாம்மா! சத்தம் போட்டு அழாதீங்க...மனசுக்குள்ள அழுதுக்கோங்க...' என்று சொல்லி விட்டு வந்திருந்த அனைவரும் சேர்ந்து இறந்த உடலை தூக்க ஆயத்தமாகினர்.

சவப் பெட்டி வந்தது. உடலை அதனுள் பவ்யமாக வைத்து நான்கு பேர் சேர்ந்து தூக்க ஆரம்பித்தனர். பெண்கள் புறத்திலிருந்து அழுகுரல் அதிகமாகவே அவர்களை ரஹீம் ஆசூவாசப்படுத்தி தனது தந்தையின் உடலுக்கு தனது தோளையும் கொடுத்தான். இறந்த உடல் பள்ளிவாசலை நோக்கி சென்றது. இறந்தவருக்காக செய்யப்படும் பிரார்த்தனை என்ற ரீதியில் இந்த தொழுகை நடத்தப்படுகிறது. தொழுகை நடக்கும் இடத்தில் உடலை வைத்து விட்டு எல்லோரும் கை கால்களை அலம்பச் சென்றனர்.

எல்லோரும் இறந்த உடலுக்கு முன்னால் வரிசையாக நின்றனர். 'தொழ வைக்க ஹஜ்ரத் எங்கே?' என்ற கேள்வியை ஒரு சிலர் கேட்க ஆரம்பித்தனர். இறந்த உடலை கழுவ தன்னைக் கூப்பிடாமலும் பிறகு உடலை வீட்டிலிருந்து எடுத்து வரும் போது ஓத வேண்டிய பாத்திஹாவையும் ஓதாமல் எடுத்து வந்ததால் சற்றே கடுப்பான ஹஜ்ரத் 'ஏன் அதையும் அந்த பையனையே செய்ய சொல்லிடுங்களேன்' என்றார். கூட்டத்தில் சிறு சலசலப்பு.

"நான் அப்பவே சொன்னேன்பா...இப்போ பார் ஹஜ்ரத் கோபத்தில் இருக்கிறார்"

"இந்த பையனுக்கு ஏன் இந்த தேவையில்லாத வேலை. ஹஜ்ரத்தையே அனைத்து காரியத்தையும் செய்ய சொல்லியிருக்கலாம்ல. இப்ப பார் தொழுக வைப்பதிலும் பிரச்னை"


"சிறு பிள்ளை வெள்ளாமை வீடு வந்து சேராதுன்னு சும்மாவா சொன்னாங்க... அப்போ நம்ம அப்பன் பாட்டன் எல்லாம் செஞ்சது தப்பு. ரஹீம் சொல்றதுதான் சரியா!"

"எல்லாம் இந்த 25 வருஷமாத்தான்யா பிரச்னைக்ள். முன்னாடில்லாம் இது மாதிரி பள்ளி வாசலில் எந்த குழப்பமோ சண்டையோ வந்ததில்லை."

"நான் அப்பவே சொன்னேன்ல...இப்ப பார் யார் தொழ வைக்கிறது? போய் ஹஜ்ரத்திடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டு அவரை தொழ வைக்க கூப்பிடு" -ரஹீமின் மாமா.

பொறுமையாக எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த ரஹீம் தொழுகைக்காக நின்றவர்களைப் பார்த்து பேச ஆரம்பித்தான் : "அஸ்ஸலாமு அலைக்கும்! பாத்திஹா ஓதாததோ என் தந்தைக்கு நானே குளிப்பாட்டியதோ நானாக செய்ததல்ல. முகமது நபி நெருங்கிய உறவினர்கள்தான் குளிப்பாட்ட வேண்டும் என்று சொன்னதால்தான் நான் செய்தேன். பாத்திஹா ஓதுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை. எனவே நான் பாத்திஹாவும் ஓதவில்லை. இறந்தவருக்காக நடத்தப்படும் தொழுகையும் இமாமாக(தலைவராக) நிற்பதற்கு இறந்தவரின் உறவினர்களே முதல் தகுதியாக நான் ஹதீதுகளில் படித்துள்ளேன். எனவே நானே எனது தகப்பனாருக்காக தொழ வைக்கிறேன்."

என்று கூறியவனாக தொழுகைக்கு தலைவனாக நிற்க ஆரம்பித்தான். இதை சற்றும் எதிர்பாராத ஹஜ்ரத் 'தம்பி..எனக்கு கோபமெல்லாம் இல்லே! நானே தொழ வைக்கிறேன்.' என்றார்..

"இல்லை ஹஜ்ரத். பள்ளியில் மற்ற நேர தொழுகைகளை நீங்கள் தொழ வையுங்கள். இது எனது தகப்பனாரின் இறப்புக்காக நடத்தப்படும் தொழுகை. இதை நானே தொழ வைக்கிறேன்" என்று சொல்லிக் கொண்டே 'அல்லாஹூ அக்பர்' என்று சொல்லி நெஞ்சில் கையை கட்டிக் கொண்டான். பலர் அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கு முன்பே தொழுகை ஆரம்பமாகி விட்டது. வந்திருந்த பலரும் வேக வேகமாக வந்து வரிசையில் நின்று தொழ ஆரம்பித்தனர். ஹஜ்ரத்தும் வேறு வழி இல்லாமல் வரிசையில் நின்று ரஹீமை பின்பற்றி தொழ ஆரம்பித்தார்.

தொழுகை முடிந்தது. எப்போதும் தொழுகை முடிந்தவுடன் ஃபாத்திஹா ஓதுவது வழக்கம். ஆனால் அதற்கும் இடம் கொடுக்காமல் சவப் பெட்டியை தனது நண்பர்களின் உதவியோடு தூக்கிக் கொண்டு இறந்தவர்கள் அடக்கம் செய்யும் மைய வாடியை நோக்கி நடக்க ஆரம்பித்தான் ரஹீம். மக்களும் பின் தொடர்ந்தனர். தான் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதை உணர்ந்த ஹஜ்ரத் 'இதற்கு ஏதாவது செய்தாக வேண்டும்' என்று மனதுக்குள் நினைத்தவராக தனது வீட்டை நோக்கி நடந்தார்.

பள்ளி வாசலை ஒட்டியே அடக்கஸ்தலும் இருந்தது. உடலை குழிக்குப் பக்கத்தில் இறக்கினர். குழியினுள் முதல் ஆளாக ரஹீம் இறங்கி தனது தகப்பனாரின் உடலை நண்பர்கள் உதவியோடு வாங்கினான். உதவிக்கு அவனது நண்பர்களும் வந்தனர். மண் வெட்டியின் துணை கொண்டு மண்ணை சிறிது சிறிதாக இழுத்து உடலை மூட ஆரம்பித்தனர். அனைத்து வேலைகளையும் ரஹீமே செய்வதை அவனது கல்லூரி தோழன் ராகவன் தூரத்திலிருந்து ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

உடலை மூடியவுடன் அங்கு நின்ற ஏழைகளுக்கு சில பண முடிப்புகளை ரஹீம் கொடுத்துக் கொண்டிருந்தான். பிறகு அனைவரும் கலைந்து சென்றனர். ரஹீமும் அவனது நண்பர்களும் உறவினர்களும் வீட்டை நோக்கி நடந்தனர்.

ரஹீமின் மாமா "தம்பி! சாப்பாடு ஆக்குவதற்கு நெய் ஆடு முதலான அனைத்துக்கும் நீ வருவதற்கு முன்பே சொல்லி விட்டேன். இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்து விடும்" என்றார்.

"சாப்பாடு...ஆடா...என்ன மாமா கல்யாணமா நடக்குது. என் தகப்பனார் இறந்த இந்த நாளில் விருந்தா. எதுவும் வேண்டாம் எல்லாவற்றையும் கேன்சல் பண்ணுங்கள். எனது நண்பன் தாஹீர் வீட்டிலிருந்து சாப்பாடு ஆக்கி அம்மாவுக்கும் நம் குடும்பத்தவருக்கும் கொடுக்க சொல்லுகிறேன்"


"இங்க வந்திருக்கிறர்களுக்காவது சாப்பாடு கொடுக்க வேண்டும். தடுக்காதே ரஹீம்" - தாயார் ஜுனத்.

'"இல்லம்மா! நபிகள் இவ்வாறு இறந்த வீட்டில் சமைப்பதை தடுத்துள்ளார்கள். பக்கத்து வீடுகளிலிருந்து சாப்பாடு கொடுப்பதுதான் நபி வழி".

"என்னடா தம்பி! புதுசு புதுசா சொல்லுறே! இறந்த வீட்டில் அன்று சாப்பாடு ஆக்குவதும் ஏழாம் நாள் நாற்பதாம் நாள் வருடம் என்று நெய் சோறு ஆக்குவது நம் ஊர் பழக்கமாச்சே!"

"அம்மா! நம் ஊர் பழக்கத்தை நான் கேட்கவில்லை. முகமது நபி தடுத்ததனால் என்னால் செய்ய முடியாது. தயவு செய்து என்னை புரிந்து கொள்ளுங்கள்"

"ஏண்டா! என்னையே எதிர்த்து பேசிறியா"

"மார்க்கத்துக்கு முரணாக பேசினால் எதிர்க்கத்தான் செய்வேன் அம்மா! மன்னித்துக் கொள்ளுங்கள்"

"சவுதி போவதற்கு முன்னால் நல்லாதாணடா இருந்தே! பேய் கீய் புடுச்சுருச்சோ! ஹஜ்ரத்து கிட்டே சொல்லி உனக்கு நூல் முடிஞ்சு போடனும்" என்று சொல்லிக் கொண்டே வீட்டிற்குள் சென்றார் ஜீனத்..

தனது தாயார் இன்னும் இஸ்லாத்தின் அடிப்படையையே சரியாக விளங்க வில்லையே என்று தனக்குள் சிரித்துக் கொண்டவனாக நண்பர்கள் ராகவன் தாஹீரோடு வெளியில் சென்றான்.

ராகவன்: ஏண்டா...ரஹீம். புரோகிதர் செய்யற வேலையை எல்லாம் நீ ஏண்டா செய்யறே!

ரஹீம்: எங்கள் மார்க்கத்தில் அனைவருமே புரோகிதர்கள்தான். அனைத்து காரியங்களையும் அனைவரும் செய்ய வேண்டும். குறிப்பிட்ட நபர்கள்தான் செய்ய வேண்டும் என்று சம்பளத்துக்கு ஆட்களை நியமிப்பது முகமது நபி சொன்னதற்கு நேர்மாறான ஒன்று.

ராகவன்: என்னவோ போப்பா...நீ சொல்றது எல்லாம் நல்லாதான் இருக்கு. இப்படி பாத்திஹா எல்லாம் இல்லை என்றால் பாவம் அவர் குடும்பம் நடத்த பணத்துக்கு என்ன பண்ணுவார்?


ரஹீம்: அதற்கு அவரது சம்பளத்தை அதிகப்படுத்த வேண்டும். தொழுகை நேரம் போக மற்ற நேரங்களில் வேறு வேலைகள் செய்து தனது குடும்பத்தைக் காப்பாற்றலாமே!

ரஹீம் சொல்வதில் உள்ள நியாயத்தைப் புரிந்து கொண்டவர்களாக நண்பர்கள் கலைந்தனர்.


(தொடரும்)

ஜஃபர் பின் அபீதாலிப் (ரழி)அவர்கள் மரணித்தபோது ஜஃபருடைய குடும்பத்தாருக்கு உணவு தயார்செய்து கொடுங்கள் அவர்கள் கவலையில் இருக்கிறார்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்

(முஸ்லிம்).

இறந்தவர் வீட்டில் சாப்பாடு தயாரிக்கச் சொல்லி அங்கு சென்றவர்களெல்லாம் சாப்பிடுவதையும் அவர்களுக்கு ஆறுதல் சொல்கிறோம் என்ற பெயரில் அடிக்கடி அந்த வீட்டில் கூட்டம் கூடுவதையும் நாங்கள் மார்க்கத்தில் ஹராமாக்கப்பட்ட ஒப்பாரி யின் வகைகளில் ஒருவகையாகவே கருதினோம் என்று நபித்தோழர்கள் கூறுகின்றார்கள்

(அபூதாவூத்)

எனவே நபிவழியைப் பின்பற்றி மரணம் சம்பவித்த வீட்டாருக்கு சமைத்துக் கொடுக்க வேண்டுமே தவிர. அந்த வீட்டில் இறைச்சியும் சோறும் சமைப்பது வேதனைக்குரிய விஷயமாகும்.


Saturday, November 29, 2014

சவுதியில் கூலி வேலை செய்தவர் இன்று மோடி அமைச்சரவையில்!



'நான் பத்தாம் வகுப்பு வரையே படித்துள்ளேன். குடும்ப வறுமை காரணமாக சவுதிக்கு சென்றேன். அங்கு உதவியாளராக, பிளம்பராக பல்வேறு வேலைகளை செய்தேன். எனது உழைப்புக்கும் மீறி அதிகமான ஊதியம் சவுதியில் தம்மாம் நகரில் கிடைத்தது. அதன் மூலம் எனது குடும்ப சூழலும் தன்னிறைவு பெற்றதாக மாறியது. மேலும் நான் சவுதியில் பணியாற்றியபோது பல பாடங்களைப் பெற்றுக் கொண்டேன். நான் பிளம்பராக வந்தவன்: என்னை ஒரு நாள் எனது முதலாளி கழிவறையை சுத்தம் செய்யச் சொன்னார். நான் மறுத்து விட்டேன். உடன் எதுவும் சொல்லாமல் நான் வேலை செய்த பில்டிங்கின் உரிமையாளர் கையில் உறைகளை மாட்டிக் கொண்டு கழிவறையை சுத்தம் செய்தார். முழு பில்டிங்கையும் கூட்டி பெருக்குவார். இதுவெல்லாம் எனது மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. எந்த வேலையும் இழிவான வேலை அல்ல என்று அன்று நான் முடிவு செய்தேன். இவ்வாறு பல ஆண்டுகள் சவுதியில் உழைத்து எனது குடும்பத்தின் பொருளாதாரம் ஓரளவு நிமிர்ந்தவுடன் இந்தியா திரும்பி அரசியலில் ஈடுபட்டேன்.' என்று டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் மந்திரி விஜய் சாம்ளா கூறியுள்ளர்.

'நான் ஒரு தொழிலாளி: ஒரு விவசாயி: ஒரு பிளம்பர்: இதுதான் எனது நிலை. ஒரு நாள் திடீரென்று நரேந்திர மோடி அவர்களிடமிருந்து போன் வந்தது. என்னால் நம்ப முடியவில்லை. தனது அமைச்சரவையில் சேர முடியுமா என்று கேட்டார். உடன் ஒத்துக் கொண்டேன். டீ விற்றவரின் மகன் நாட்டின் பிரதமராகும் போது ஒரு பிளம்பர் மந்திரியாக மாறியதில் என்ன ஆச்சரியம்' என்று கேட்கிறார். 53 வயதாகும் இவர் பஞ்சாபிலிருந்து எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். தலித் சமூகத்தை சேர்ந்த இவரை வரும் 2017ல் பஞ்சாபில் நடக்கவிருக்கும் சட்ட மன்ற தேர்தலில் தலித் ஓட்டுக்களை பெறுவதற்காக மந்திரி சபையில் சேர்க்கப்பட்டுள்ளதாக விமரிசகர்கள் கூறுகின்றனர்.

சவுதியில் பல ஆண்டு காலம் பாடம் பயின்ற இந்த மந்திரி உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து தனது துறையில் சிறந்து விளங்க வாழ்த்துவோம்.

தகவல் உதவி:
சவுதி கெஜட்
29-11-2014
என்டிடிவி
டைம்ஸ் ஆஃப் இந்தியா
10-11-2014

விஜய் சாம்ளா மட்டுமல்ல.... இவரைப் போன்ற கோடிக்கணக்கான நடுத்தர வர்க்கத்து உழைக்கும் மக்களின் வாழ்வை உயர்த்தியது வளைகுடா வாழ்க்கை என்றால் மிகையாகாது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் படித்தவர்களுக்கு மட்டுமே சிறந்த வருவாயைக் கொடுக்கும். ஆனால் வளைகுடாக்களில் படிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அவனது கை வேலைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து கணிசமான சம்பளத்தையும் கொடுக்கிறது. இதனால் பல தமிழக கிராமங்கள் பல வசதிகளைப் பெற்றுள்ளன. மேலும் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் படித்தவர்கள் குடும்பத்தோடு தங்குவதால் பொருளாதாரத்தை அங்கேயே செலவழித்து விடுவார்கள். வளைகுடாவில் வேலை செய்யும் உழைக்கும் வர்க்கம் பெரும்பாலும் குடும்பம் இந்தியாவில் இருப்பதால் தனது செலவு போக ஒட்டு மொத்த சம்பளத்தையும் ஊருக்கு அனுப்பி விடும் காட்சியை தினமும் வளைகுடா வங்கிகளில் பார்க்கலாம். இதன் மூலம் நமது நாட்டு பொருளாதாரம் ஓரளவு ஸ்திரமாக இருக்க மறைமுகமாக வளைகுடா வாழ் இந்தியர்கள் காரணமாக இருக்கிறார்கள். முன்பு வளைகுடா யுத்தம் ஈராக்கில் நடந்து பல மாதங்கள் பண பட்டுவாடா இல்லாததால் நமது நாட்டின் பொருளாதாரமே சரிந்ததை இங்கு நினைவு கூறலாம்.

இஸ்லாத்தையும் இஸ்லாமியர்களையும் இந்துத்வாவாதிகள் வெறுத்தாலும் மறைமுகமாக அவர்களின் உயர்வுக்கு முஸ்லிம்களும் காரணமாகின்றனர் என்பதை இன்றில்லா விட்டாலும் என்றாவது உணர்வர்.

'ஜிஹாத்' - எனது மனம் கவர்ந்த குறும்படம்!



https://www.youtube.com/watch?v=xf-e4JLd2eo

ஜிஹாத் எனும் வார்த்தை ஜுஹ்த் எனும் வேர்ச் சொல்லிலிருந்து பிறந்ததாகும். ஜுஹ்த் எனும் அரபிச்சொல்லுக்கு, "கடுமையாக முயற்சி செய்தல்" அல்லது "வெற்றி கிடைக்கும் வரை கடுமையாக போராடுதல்" அல்லது "விடாப்பிடியான எதிர்ப்பு முயற்சி (Struggle)" என்று பொருள்.ஒருவர் தன்னுடைய இலட்சியத்தை அல்லது நோக்கத்தை அடைய தன்னால் இயன்ற எல்லா வழிகளிலும் முயற்சி செய்தல் என்பது தான் இதன் அர்த்தம்.

எடுத்துக்காட்டாக சுயவிருப்பங்கள், ஆசைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற மனத்தூண்டுதல்கள், சமுதாய மரபுகளால் ஏற்படும் நிர்பந்தங்கள், சொத்து செல்வம் மீது உண்டாகும் பற்று, தான் எனும் அகங்காரம் ஆகிய யாவும் நற்கிரியைகளைத் தடை செய்யக்கூடியவை, தீமைகளில் ஈடுபட வழி வகுப்பவை இவற்றிலிருந்து மனதைக் கட்டுபடுத்துவதும் ஜிஹாத் ஆகும்.

இறை நம்பிக்கையாளர்கள் தங்களுக்குக் கட்டளையிடப்பட்ட விஷயங்களில் எல்லா இடையூறுகளையும் எதிர்த்து பல வழிகளில் கடுமையாக போராடி வெற்றி கொள்வதை குறிக்கும் ஒரு சொல்லாகத்தான் இஸ்லாம் "ஜிஹாத்" என்ற சொல்லை பயன்படுத்துகின்றது. "புனிதப்போர்" என்ற சொல்லுக்கு அரபியில் "ஹர்ப் முகத்தஸா" என்று வழங்கப்பெறும். அதாவது அரபியில் "ஹர்ப் முகத்தஸா" என்றாலே "புனிதப்போர்" என்று பொருள் வரும். இது திருக்குர்ஆனில் எங்குமே காணக்கிடைக்காத ஒரு சொல்லாகும். போர் என்ற சொல்லுக்கு இணையான இன்னொரு அரபுப்பதம் "கித்தால்" என்று அர்த்தம். எனவே போர் என்றாலும் புனிதப்போர் என்றாலும் ஜிஹாத் என்று அர்த்தம் கொள்ள முடியாது.

ஆனால் அமெரிக்கா போன்ற வல்லரசுகளாலும் யூதர்களாலும் வார்த்தெடுக்கப்பட்ட ஒரு சில கள்ள முல்லாக்கள் ஜிஹாதுக்கு 'புனிதப் போர்' என்று தவறாக அர்த்தத்தை கற்பித்து படிப்பறிவில்லாத இளைஞர்களை மூளை சலவை செய்து அப்பாவிகளை இலக்காக்குகிறார்கள். இதன் மூலம் மக்கள் மனதில் இஸ்லாத்துக்கு எதிரான ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி இஸ்லாத்தின் வளர்ச்சியை தடுக்க முயற்சிக்கின்றனர். குர்ஆனை விளங்கிய ஒரு முஸ்லிம் எந்த காலத்திலும் ஆயுதம் தூக்க மாட்டான். தனது உயிருக்கு ஆபத்து வரும் போது தற்காப்புக்காக மட்டுமே ஆயுதம் ஏந்தலாம். அதை விடுத்து ஒரு குழுவாகவோ ஒரு இயக்கமாகவோ இயங்கி ஆயுதம் ஏந்தி மக்களை கொல்வது இஸ்லாமிய நடைமுறைக்கு நேர் மாற்றமாகும். அரசுக்கு எதிராக ஆயுதம் தூக்க இஸ்லாம் தடை விதிக்கிறது. ஷியாக்கள், காதியானிகள், இந்துத்வாவாதிகள், இஸ்ரேலியர்கள், இஸ்லாத்தை உண்மையாக விளங்காத ஒரு சில முஸ்லிம்கள் என்று பலரும் இன்று இஸ்லாமிய வேடமணிந்து தீவிரவாத செயல்களில் ஈடுபடுகின்றனர். இணையத்திலும் பொய்களைப் பரப்புகின்றனர். அதில் சில இடங்களில் வெற்றியும் பெற்றுள்ளனர். மக்கள் இவர்கள் விஷயத்தில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வெண்டும்.

இவ்வாறாக வழி நடத்தப்பட்ட இளைஞர்களை குர்ஆனின் உண்மையான போதனைகளை விளக்கி நேர் வழியின் பால் கொண்டு வருவது நம் அனைவரின் மீதும் கடமையாகும்.


Friday, November 28, 2014

யுவன் தனது பெயரை மாற்றத்தான் வேண்டுமா?

யுவன் தனது பெயரை மாற்றத்தான் வேண்டுமா?



யுவன் சங்கர் ராஜாவின் முகநூல் பக்கத்தில் அவரது ரசிகர் எழுதிய ஒரு பின்னூட்டம்.

// Dear yuvan sir,
I'm ur diehard fan... We have initiated a plan for all ur fans to message about their opinion about ur name change...pleasemy dear yuvan..ur name is really very very very cute....i say yuvan yuvan yuvan everyday...and I cannot say Abdul anymore...i don't want these name change as ur every diehard fan...please for us don't change ur name thalaiva...neenga illana nanga illa...yuvan is youth icon of Tamil music...it should stay as it is...please don't let it to change thalaiva....i know U r not going to change ur name...but some fake news are spreading about this...so please confirm soon about ur name change...thank you in advance thalaiva...as ur sister said U r gonna get married, I wish U from my heart to have a successful life thalaiva...go ahead...u r hearts winner...millions of ur fans are here to support U for any cause...once again a request from ur follower please don't change ur name...//
- Sãñdîàr Múthù Kúmãr

'ஆமா.... காலங் கெடக்கிற கெடப்புல உலகத்துக்கு இது ரொம்ப முக்கியம்' என்று நீங்க அலுத்துக்கிறது தெரிகிறது. இருந்தாலும் இதிலும் சில விளக்கங்கள் படிப்பினைகள் நம்மால் பெற முடியும். முதலில் சண்டியர் முத்துக் குமாருடைய பின்னூட்டத்தைப் படிக்கவும். யுவனுடைய முகநூல் பக்கத்தில் அவருக்கு எழுதியது இந்த பின்னூட்டம். ஒரு அளவுக்கு மீறி போனால் இசை ஒரு மனிதனை எந்த அளவு பைத்தியம் பிடிக்க வைக்கும் என்பதற்கு இந்த பின்னூட்டம் ஒரு சிறந்த உதாரணம். 'நீங்க இல்லேன்னா நாங்க இல்ல' என்று சொல்கிறார். யுவன் ஒரு மியூசிக் டைரக்டர். ஒவ்வொரு காலத்துக்கும் ஒவ்வொருவர் தங்கள் இசையால் மக்களை மகிழ்விப்பர். முன்பு எம்எஸ்வி, நேற்று இளைய ராஜா, இன்று ஏ ஆர் ரஹ்மான் நாளை அனிருத்தோ, யுவனோ யாராவது இருந்து விட்டுப் போகட்டும். அது அவர்கள் தொழில். அதை விடுத்து அவருக்கு ஆயிரம் பேர் என்றும் இவருக்கு ஆயிரம் பேர் என்றும் வரிந்து கட்டிக் கொண்டு பின்னூட்டத்தில் வசை மாறி பொழிந்து கொண்டிருப்பவர்களை நினைத்தால் பரிதாபமாக இருக்கும்.

அடுத்து யுவனின் தங்கை பவதாரிணி காட்டமாக ஒரு அறிக்கை விட்டுள்ளார். அவர் கூறுவதாவது 'என் சகோதரன் யுவன் சிகரெட் பிடித்தது கிடையாது. மது அருந்தியது கிடையாது. வேறு எந்த கெட்ட பழக்கங்களும் கிடையாது. சிறு வயது முதலே மிக நேர்மையாக வாழ்ந்து வருபவர். ஆம். அவர் இஸ்லாத்தை தனது வாழ்வியலாக ஏற்றுக் கொண்டுள்ளார். இதில் மற்றவர்களுக்கு என்ன பிரச்னை? இந்த வருட டிசம்பரில் அவருக்கு ஒரு இஸ்லாமிய பெண்ணோடு திருமணம் நடத்தி வைக்க முயற்சி செய்துள்ளோம். அவருடைய எந்த முடிவுக்கும் குடும்பத்தார் நாங்கள் உறுதுணையாக இருப்போம். ரசிகர்கள் என்ற பெயரில் அவருக்கு தயவு செய்து யாரும் தொந்தரவு கொடுக்காதீர்கள்' என்கிறார். அந்த அளவு அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டது மற்றவர்களுக்கு கசப்பாக இருக்கிறது. ஏன் இந்த நிலை? ஏனென்றால் மற்ற மதங்களுக்கு மாறினால் பெயர் மட்டுமே மாறும். கலாசாரம் மாறாது. இஸ்லாத்துக்கு மாறினால் பெயர் மட்டும் அல்ல. கலாசாரமும் வணக்க வழிபாடுகளும் முற்றிலும் மாறுபடும். பார்பனியத்தின் பிடி முற்றிலுமாக உடைத்தெறியப்படும். எனவே தான் பார்பனர்கள் ஏகத்துக்கும் குதிக்கிறார்கள். பல போலி பெயர்களில் வந்து இது போன்று இஸ்லாத்தை ஏற்றவர்களின் மனதை காயப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இஸ்லாமிய சட்டப்படி அவர் யுவனாகவே தொடரலாம். அரபியில்தான் பெயர் இருக்க வேண்டும் என்பது கட்டாயம் கிடையாது. ஆனால் சாதி வேரூன்றிய இந்த சமூகத்தில் அதே பெயரில் அவர் தொடர்ந்தால் 'அவர் சாதி எது?' என்ற கேள்வி வரும். எனவே தான் பழகிய தங்கள் பெயரை இஸ்லாத்தை ஏற்பவர்கள் முதலில் மாற்றி விடுகின்றனர். ஏ ஆர் ரஹ்மான் முன்பு எந்த சாதி என்பது 99 சதவீதமானவருக்கு தெரிந்திருக்காது. அடுத்த தலைமுறையில் அந்த சதமும் மாறி விடும். ஆனால் யுவன் தனது சொந்த பெயரிலேயே இருந்தால் அவரது சாதி மறைய வெகு காலம் ஆகும். எனவே பெயர் மாற்றம் என்பது அவரது சொந்த விருப்பம். அதில் ரசிகர்கள் என்ற பெயரில் பலர் மூக்கை நுழைத்து அவருக்கு ஆலோசனை வழங்குவது அதிகப்பிரசங்கித் தனம் இல்லையா? இதை ஏன் இவரது ரசிகர்கள் உணர மாட்டேன் என்கின்றனர்? இஸ்லாமிய பெயரை தேர்ந்தெடுப்பதால் அவரது இசைப்பிரியர்களுக்கு இசையை ரசிக்கும் தொனியில் ஏதாவது மாற்றத்தைக் கொண்டு வந்து விடுமா? எனக்கு விளங்கவில்லை!

தவறான சில புரிதல்கள்: அதற்கான எனது விளக்கங்கள்!

தவறான சில புரிதல்கள்: அதற்கான எனது விளக்கங்கள்!

திரு வேதம் கோபால்!

// திரு சுவனப்பிரியன்!
தினம் நீங்கள் நமாஸில் பாங்கில் சொல்லும் வாசகம்தான் என்ன ? சற்று தமிழில் விளக்கமுடியுமா?//

அல்லாஹு அக்பர் : இறைவன் மிகப்பெரியவன்
அஷ்ஹது அல்(ன்)லாயிலாஹ இல்லல்லாஹ் : ஏக இறைவனைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று உறுதி கூறுகிறேன்.
அஷ்ஹது அல்(ன்)லாயிலாஹ இல்லல்லாஹ் : ஏக இறைவனைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று உறுதி கூறுகிறேன்.
அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் :முஹம்மது அவர்கள் இறைவனின் தூதர் ஆவார்கள் என்று நான் உறுதி கூறுகிறேன்.
அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் : முஹம்மது அவர்கள் இறைவனின் தூதர் ஆவார்கள் என்று நான் உறுதி கூறுகிறேன்.
ஹய்ய அலஸ் ஸலா(த்), ஹய்ய அலஸ் ஸலா(த்) : தொழுகையின் பக்கம் வாருங்கள், தொழுகையின் பக்கம் வாருங்கள்
ஹய்ய அலல் ஃபலாஹ், ஹய்ய அலல் ஃபலாஹ் : வெற்றியின் பக்கம், வாருங்கள், வெற்றியின் பக்கம் வாருங்கள்
அல்லாஹு அக்பர் : இறைவன் மிகப்பெரியவன்
அல்லாஹு அக்பர் : இறைவன் மிகப்பெரியவன்
லா இலாஹ இல்லல்லாஹ் : ஏக இறைவனைத் தவிர வேறு இறைவனில்லை

//தமிழில் நமாமஸ் படிக்கலாமா கூடாதா. நேரான பதில் (படிக்கலாம் என்றால் ஏன் படிப்பதில்லை கூடாது என்றால் அதற்கான காரணம் என்ன)//

நமாஸ் படிக்கும் போது முடிவில் தொழக் கூடியவர் தொழுகையிலேயே அவருக்கான பிரார்த்தனையைச் செய்ய வேண்டும். அதை அவரவர் சொந்த மொழியிலேயே கேட்கிறார்கள். ஏனெனில் எல்லோருக்கும் அரபி தெரியாது. இறைவனுக்கோ எல்லா மொழிகளும் தெரியும். உலக ஒற்றுமைக்காக ஆரம்பத்தில் அரபியில் தொழ ஆரம்பிக்கும் ஒருவர் முடிக்கும் தருவாயில் தனது சொந்த மொழியில் நமாஸை முடிக்கிறார். இங்கு மொழிக்கு முக்கியத்துவம் இல்லை என்பதை நாம் விளங்குகிறோம்.

திரு மயில் வாகனன்!

//ஆனால் இந்தக் கருத்தை முன்மொழியும் தாங்கள், ‘தமிழ் அர்ச்சனை செய்ய வேண்டும்’ என்றும் கூறுவது சமஸ்கிருததத்தை மற்ற மொழிகளுக்குச் சமமாகத் தாங்கள் மதிக்காததாலா?//

நான் மதிக்காததால் அல்ல! தமிழ் நீச மொழி என்றும் சமஸ்கிரதமே தேவ மொழி என்றும் நமது சான்றோர்கள் கூறியதாலேயே இந்த கேள்வி வருகிறது.

திரு திராவிடன்!

//இரண்டாவதாக “லாஹிலாஹா ஹிள்ளல்லா” தமிழ்படுத்தி நீங்கள் பாங்கு கூற முடியுமா?இதுவே வேதம் கோபால் சாரின் கேள்வி?//

உலக ஒற்றுமைக்காக என்று முன்பே கூறியுள்ளேன். 'ஜன கன மன' என்று நமது தேசிய கீதத்தை ஒரு வங்காள மொழியில் பாட வேண்டிய அவசியம் என்ன? ஏன் அதை தமிழ்ப்படுத்தவில்லை என்று சிந்தித்தீர்கள் என்றால் உங்களின் கேள்விக்கு விடை கிடைக்கும். அடுத்து இங்கு சவுதியில் பள்ளிவாசலில் தொழுகைக்கு பிறகு விளக்க உரை 15 அல்லது 20 நிமிடம் நடைபெறும். பல மொழிகளை உடையவர்களும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தேமதுர தமிழில் பொழிப்புரை கூறப்படும். சவுதி பள்ளியிலேயே தமிழில் மொழி பெயர்த்து அதுவும் ஸ்பிக்கர் துணை கொண்டு பள்ளிக்கு வெளியிலும் சொல்லப்படுகிறது. இதிலிருந்தே அரபு மொழி தேவ மொழி இல்லை என்றும் தெரிந்து கொள்கிறோம். முகமது நபி தமிழராக இருந்திருந்தால் குர்ஆன் தமிழிலேயே இறங்கியிருக்கும்.

செவ்வாய் கிரகத்துக்கு ஒரு வழிப் பாதையாக போவது தடுக்கப்பட்டது!

செவ்வாய் கிரகத்துக்கு ஒரு வழிப் பாதையாக போவது தடுக்கப்பட்டது!




பூமியல் மனிதன் கால் தடம் பதிக்காத இன்னும் எத்தனையோ தரைப் பகுதி இருக்க செவ்வாய் கிரகத்தில் சென்று நிரந்தரமாக தங்கிக் கொள்ள பலரும் விருப்பப்படுவது ஆச்சரியமே! மனிதனுக்கு எதையாவது வித்தியாசமாக செய்து பார்ப்பதில் அலாதி பிரியம். :-) ஆராய்ச்சி முறையில் அங்கு சென்று ஆய்வுகள் மேற் கொள்வதை யாரும் தடுக்கவில்லை. ஆனால் ஒரு வழிப் பாதையாக உங்களை அழைத்து சென்று அங்கே இறக்கி விட்டு விடுவார்களாம். அப்போ சாப்பாட்டுக்கு என்ன செய்வதாம்? உணவை எத்தனை நாளுக்கு உங்களால் கெடாமல் காப்பாற்றி வைக்க முடியும்? விளை நிலங்களும் இல்லை. ஒரு வழிப் பாதையாக செல்வதற்கு டிக்கெட் விலையும் மிகக் குறைவு. எனவே இதற்கு பலரும் முயற்சிக்கின்றனர்.

ஐக்கிய அரபு எமிரேட்சிலிருந்து வெளிவரும் 'கலீஜ் டைம்ஸ்' என்ற பத்திரிக்கை இவ்வாறு ஒருவழிப் பாதையாக செல்வது கிட்டத்தட்ட தற்கொலைக்கு சமானம் என்றபடியால் இது இஸ்லாத்தில் தடுக்கப்பட்டது என்று மார்க்க அறிஞர்களின் 'ஃபத்வா' வை வெளியிட்டுள்ளது. இந்த முடிவுக்கு கீழ்க்கண்ட குர்ஆன் வசனத்தை ஆதாரமாக்கி இந்த மார்க்க தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

'நீங்களே உங்களை கொன்று விடாதீர்கள். இறைவன் உங்கள் மீது நிகரற்ற அன்புடையோனாக இருக்கிறான்.'

-குர்ஆன் 4:29


கிட்டத்தட்ட 2 இலட்சம் பேர் 400 நாடுகளிலிருந்து செவ்வாய் கிரகத்தில் தங்க விண்ணப்பங்களைக் கொடுத்துள்ளார்களாம். இதில் 500 சவுதி நாட்டவரும் அடக்கம். பூமியில் உள்ள மக்களின் வாழ்வு மேம்பட செவ்வாய் கிரகத்துக்கு ஆராய்ச்சியாளர்கள் செல்வதை எவரும் தடுக்கவில்லை. ஆனால் பணம் இருக்கிறது என்ற மமதையில் இது போல் ஆபத்தான ஒரு பயணத்தை சுற்றுலாவாக மேற்கொள்வது அதுவும் அதிக அனுபவம் இல்லாதவர்கள் இது போன்ற பயணங்கள் மேற்கொள்வதை இஸ்லாமிய அறிஞர்கள் தடுக்கின்றனர். இவர்களின் அறிவிப்பைத் தோடர்ந்து விண்ணப்பித்திருந்த பலரும் தங்களின் விண்ணப்பங்களை திரும்பப் பெற்றுள்ளனர்.

தகவல் உதவி

அல்அரபியா
20-02-2014

----------------------------------------------------------------

பூமியைத் தவிர உலகின் மற்ற எந்த கோள்களிலும் மனிதன் வாழ முடியாது: அதற்கான வசதிகள் இல்லை என்று குர்ஆன் அடித்து சொல்கிறது. இதைப்பற்றியும் பார்ப்போம்.

பூமியிலேயே வாழ்வீர்கள்! பூமியிலேயே மரணிப்பீர்கள்! அதிலிருந்தே பிறகு வெளிப் படுத்தப் படுவீர்கள்'

- குர்ஆன் 7;175

பூமியில் உங்களை நாம் வாழச் செய்திருக்கிறோம். உங்களுக்கு வசதி வாய்ப்புகளையும் ஏற்படுத்தி இருக்கிறோம். (ஆனால்) குறைவாகவே நன்றி செலுத்துகிறீர்கள்.

- குர்ஆன் 7;10


இது சம்பந்தமாக வரும் வேறு வசனங்கள் (2;36- 7;24- 30;25)பூமியில் மட்டுமே மனிதன் வாழ முடியும் என்று மேற் கண்ட வசனங்கள் நமக்கு தெளிவு படுத்துகிறது. வேற்று கிரகத்திலிருந்து மனிதர்கள் வந்தார்கள், பறக்கும் தட்டு வந்தது என்பதெல்லாம் நிரூபிக்கப் படாத செவி வழி செய்திகள். உயிர் வாழ தேவையான ஆக்சிஜன் பூமியில் தான் உள்ளது. சந்திரனுக்கு, செவ்வாய்க்கு மனிதன் சென்றாலும் நிரந்தர தங்குதல் என்பது பூமி மட்டுமே!மனிதனின் உடலுக்கு ஏற்றவாறு வெப்பமும் குளிரும் அளவோடு இருப்பது பூமியில் மட்டுமே!

சில கோள்களில் காணப்படும் குளிர் மனித இரத்தத்தை உறைந்து போகச் செய்து விடும். இன்னும் சில கோள்களில் காணப்படும் வெப்பம் மனிதனை சாம்பலாக்கி விடும்.மேலும் கவனிக்க வேண்டியது பூமி மட்டுமே சூரியனிலிருந்து 23 டிகிரி சாய்வாக சுழல்கிறது. இப்படி சாய்வாக சுழல்வதால் தான் கோடை, குளிர்,வசந்தம், மற்றும் இலையுதிர் காலங்கள் என்று கால மாற்றங்கள் ஏற்படுகின்றன. வருடம் எல்லாம் ஒரே சீரான வெப்பமோ, குளிரோ இருந்தால் அதுவும் வாழ்வதற்கு ஏற்றதாக இருக்காது. எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மது நபிக்கு 'இதில் தான் வாழ்வீர்கள்' என்று எவ்வாறு அடித்துக் கூற முடியும்? எல்லாக் கோள்களையும் படைத்த இறைவனால் மட்டுமே அன்றைய நிலையில் இதனைக் கூற முடியும். எனவே இந்த வசனமும் இது இறைவனின் சொல்தான் என்பதை நிரூபிக்கும் சான்றாக உள்ளது.

மேற்கண்ட இரண்டு குர்ஆன் வசனங்களிலிருந்தும் நமக்கு தெரிய வருவது மனித இனமும் மற்ற பூமியில் உள்ள உயிரினங்களும் பூமியில் மாத்திரமே உள்ளன. வேற்று கிரகங்களிலும் உயிரினங்கள் உள்ளன. ஆனால் அவை பூமியை ஒத்த உயிரினங்களாக இருக்க வாய்ப்பில்லை. அந்த கோள்களின் தட்ப வெப்ப நிலைக்கு ஏற்ப அங்குள்ள உயிர்களின் உடல்வாகு அமைக்கப்பட்டிருக்கும். இனி வருங்காலத்தில் செவ்வாயிலோ, புதனிலோ, வியாழனிலோ உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டால் அவை பூமியில் உள்ள உயிரினங்களை ஒத்து இருக்காது என்பது மட்டும் நிச்சயமாக தெரிகிறது. நம் காலத்திலேயே அந்த உயிரினங்கள் கண்டு பிடிக்கப்படலாம். இறைவன் நாடினால் நாமும் அந்த உயிரினங்களை பார்க்கலாம்.

'வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதும் உயிரினங்களை அவ்விரண்டிலும் பரவச் செய்திருப்பதும் அவனது சான்றுகளில் உள்ளவை.' - குர்ஆன் 42:29

Wednesday, November 26, 2014

ஒய்யாரக் கொண்டையின் உள்ளே ஈரும் பேனும்!



உசிலம்பட்டி தொடங்கி பெங்களூரு, அகமதாபாத், மஹாராஷ்டிரா என்று நாட்டின் குறுக்கும் நெடுக்குமாக கடந்த மூன்று மாதங்களுக்குள் அடுத்தடுத்து தாழ்த்தப்பட்டவர்களுக்கெதிராக ஆதிக்க சாதியினர் நிகழ்த்தியிருக்கும் வன்கொடுமைகளும் – கொலைகளும் வக்கிரம் நிறைந்தவை!

உசிலம்பட்டி – போலிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கள்ளர் சாதியைச் சேர்ந்த விமலாதேவி, தமது தந்தையிடம் வாகன ஓட்டுநராகப் பணிபுரிந்த பள்ளர் சாதியைச் சேர்ந்த திலீப்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டு கேரளாவில் வாழ்ந்து வந்தார். வயதுக்கு வந்த இருவர் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்துவந்த நிலையில், அவர்களை போலீசின் துணையோடு சட்டவிரோதமாகப் பிரித்தனர், கள்ளர் சாதிவெறியர்கள். உசிலம்பட்டி துணைக் கண்காணிப்பாளர் சரவணக்குமார் முன்னிலையில்தான் இந்த சாதிப் பஞ்சாயத்தே நடைபெற்றிருக்கிறது. அங்கே, பாரதிய பார்வர்டு பிளாக் தலைவர் முருகன்ஜி; உசிலை சட்டமன்ற உறுப்பினரும் பார்வர்டு பிளாக் தலைவருமான கதிரவன்; மார்க்சிஸ்டு கட்சியின் செல்லக்கண்ணு மற்றும் கள்ளர் சாதியைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட வழக்குரைஞர்கள் தாலியைக் கழட்டி எறியுமாறு விமலாதேவியை மிரட்டியும் அந்தப் பெண் பணியவில்லை. நீதிமன்றத்தில் விமலாதேவி ஆஜர் படுத்தபட்டபோதும், “என்னை யாரும் கடத்தவில்லை. நான் விரும்பித்தான் திலீப்குமாருடன் சென்று திருமணம் செய்து கொண்டு வாழ்ந்தேன்” என்று உறுதியாக அறிவித்தார். இருப்பினும் அவரைச் சட்டவிரோதமாக சாதிவெறிபிடித்த பெற்றோர்களிடமே ஒப்படைத்தது நீதிமன்றம்.

உடனே, விமலாதேவிக்கு கள்ளர் சாதியைச் சேர்ந்த சதிஷ்குமார் என்பவரோடுகட்டாயத் திருமணம் செய்துவைப்பதற்கான ஏற்பாடுகளை செய்தனர், அவரது பெற்றோர். அதனை உறுதியாக எதிர்த்து நின்ற விமலாதேவி, அக்-1 அன்று இரவு கள்ளர் சாதி சுடுகாட்டில் எரிந்து சாம்பலாகிக் கிடந்தார். விமலாதேவி தற்கொலை செய்துகொண்டதாகவும், பிணத்தை எரித்துவிட்டதாகவும் திமிராக அறிவித்தனர் கள்ளர் சாதிவெறியர்கள்.

“என் மீதும் என் குடும்பத்தினர் மீதும் கேசு போட்டுக்கோங்க. ஆனால், என் மகளைக் கொன்னதாகத்தான் கேசு இருக்கனும். அவன் (திலீப்குமார்) பொண்டாட்டினு இருக்கக்கூடாது” என்று கூறியிருக்கிறார், விமலாதேவியின் தந்தை. இக்கூற்று ஒன்றே போதும், சாதிவெறியர்களின் திமிரை நிரூபிப்பதற்கு!

-----------------------------------------------------



மகாராஷ்டிரா மாநிலம் அஹமத்நகர் மாவட்டத்திலுள்ள காசர்வாடி கிராமத்தில் தாழ்த்தப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த சஞ்சய் ஜாதவ், அவரது மனைவி ஜெயசிறீ மற்றும் அவர்களது மகன் சுனில் ஆகியோர் ஆதிக்க சாதி வெறியர்களால் அக்-21 அன்று நள்ளிரவில் படுகொலை செய்யப்பட்டார்கள். கண்டதுண்டமாக வெட்டப்பட்டு நாலாபுறமும் வீசியெறியப்பட்ட அவர்களது சிதைந்த உடல் பாகங்கள் விவசாயக் கிணற்றிலும், விவசாய நிலத்திலும் அழுகிய நிலையில் இரண்டு நாட்களுக்குப் பின்னர் கண்டெடுக்கப்பட்டது.

கொல்லப்பட்ட சஞ்சய் ஜாதவிற்கு மேல்சாதியை சேர்ந்த திருமணமான பெண்ணொருவருடன் கள்ள உறவு இருந்ததாக குற்றம் சாட்டி இப்படுகொலையை நிகழ்த்தியிருக்கிறார்கள் ஆதிக்க சாதிவெறியர்கள். இந்த மாவட்டத்தில் கடந்த ஆண்டில் நிகழ்ந்துள்ள மூன்றாவது தாழ்த்தப்பட்டோர் படுகொலை இது.

-----------------------------------------------------

பஞ்சாபின் லூதியானா மாவட்டம் ஜமால்பூர் கிராமம். தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த இளைஞர்களான ஹரிந்தர் சிங்கும் ஜதிந்தர் சிங்கும் தங்களுக்குச் சொந்தமான விளைநிலத்தை ஆக்கிரமித்து அனுபவித்து வரும் உள்ளூர் நிலப்பிரபுவுக்கு எதிராகத் தொடர்ந்து போராடி வந்தனர். நிலப்பிரபுவின் ஆக்கிரமிப்பை மீறி துணிவுடன் தங்களது நிலத்தில் இறங்கி விவசாயம் செய்ய முற்பட்டதற்காக அச்சகோதரர்கள் இருவரும் செப்.27 அன்று சுட்டுக் கொல்லப்பட்டனர். தங்களுடனான மோதலில் இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டதாக அறிவித்தது போலீசு. ஆனால் அந்த நிலப்பிரபு, தனது கைக்கூலியான அகாலி தளக் கட்சியின் பிரமுகரை வைத்து இந்தக் கொலையைச் செய்திருப்பதும், கொலைகாரர்களைக் காப்பாற்றும் பொருட்டு இதனை மோதல் கொலை என்று போலீசு சித்தரித்திருப்பதும் இப்போது அம்பலமாகியுள்ளது.

----------------------------------------------------

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் கிராமத்தில் உள்ள அரசுப்பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த மாணவன் பி.ரமேஷ். சற்றே விலை கூடிய கைக்கடிகாரத்தை அவர் அணிந்திருந்ததை ஆதிக்க சாதியைச் சேர்ந்த சக மாணவர்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை. அவரிடமிருந்து அதனைப் பிடுங்கி எறிய முயன்றுள்ளனர். ரமேஷ் அதனை எதிர்த்திருக்கிறார். கடந்த அக்-3 அன்று திருத்தங்கல் இரயில் நிலையம் அருகே ரமேஷை வழிமறித்த அந்த சாதிவெறி பிடித்த மாணவர்கள் கடிகாரம் கட்டிய மணிக்கட்டை வெட்டிச் சிதைத்தனர்.

-----------------------------------------------------

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகில் உள்ள கிராமம் செவ்வூர். இக்கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த இளைஞர்கள் பலர் சிங்கப்பூர் சென்று வேலை செய்வதால், எல்லோரிடமும் நிலம் இருக்கிறது. குடியிருப்புகளும் பெரும்பாலும் கான்கிரீட் வீடுகளாகியிருக்கின்றன. கல்வியிலும் பொருளாதாரத்திலும் ஓரளவு முன்னேறியிருக்கின்ற காரணத்தால், தப்படிப்பது, சாவுச்சேதி சொல்வது உள்ளிட்ட சாதி அடிப்படையிலான அடிமைத்தொழில்ளைச் செய்யமாட்டோம் என மறுத்திருக்கின்றனர். இதன் காரணமாக கடந்த மே மாதம் முதல் தாழ்த்தப்பட்ட குடும்பங்கள் அனைத்தையும் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்து சமூகப்புறக்கணிப்பை அறிவித்திருக்கிறார்கள் ஆதிக்க சாதிவெறியர்கள்.

-------------------------------------------------------

குஜராத்தின் அகமதாபாத் மாவட்டம், பாய்லா கிராமத்தைச் சேர்ந்த மெகுல் காபிரா, வால்மீகி என்ற தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த இளைஞர். தன்னைப் போலவே தனது பிள்ளையும் துப்புரவுப் பணியாளராக அடிமைத் தொழில் செய்யக்கூடாது என்றெண்ணிய அவரது தந்தை, கடன்பட்டு மகனுக்கு ஆட்டோ ஒன்றை வாங்கித் தருகிறார். “குப்பை அள்ளும் சாதிக்காரன், ஆட்டோ ஓட்டுவதா?” என்று கருவிக் கொண்டிருந்த ஆதிக்க சாதிக் கும்பல் ஒன்று அவரது ஆட்டோவை அடித்து நொறுக்கியதோடு, அவரையும் கண்மூடித்தனமாகத் தாக்கியது. கடந்த 2012-ம் ஆண்டு நடந்த இச்சம்பவத்திற்காக வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்ட போதிலும், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

------------------------------------------------------

பெங்களூரை அடுத்த நெலமங்களாவில் உள்ள ஜெயநகரை சேர்ந்த செருப்பு தைக்கும் தொழிலாளியான ராஜ்குமாரின் எட்டு வயது மகன் சந்தோஷ், கடந்த அக்-19 அன்று தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிவிட்டு, அருகிலுள்ள ருத்ரேஸ்வரா கோயிலுக்குள் தண்ணீர்க் குடிப்பதற்காகச் சென்றிருக்கிறான். அப்போது கோயிலில் பிரசாதம் வழங்கிக் கொண்டிருந்த கோயில் பூசாரி விஜயகுமாரிடம் தங்களுக்கும் பிரசாதம் வழங்குமாறு அச்சிறுவர்கள் கேட்டுள்ளனர். தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த சிறுவர்கள் கோயிலுக்குள் நுழைந்துவிட்டதைக் கண்டு ஆத்திரமுற்ற பூசாரி விஜயகுமார், சிறுவர்கள் சந்தோஷ் மற்றும் அவனது நண்பர்களான சேத்தன், கௌதம் ஆகியோரை தடியால் தாக்கியிருக்கிறான். நண்பர்கள் ஓடிவிட, சந்தோஷை மட்டும் பிடித்துக்கொண்ட பூசாரி விஜயகுமார், அவனை வெயிலில் முட்டி போடவைத்து சித்திரவதை செய்திருப்பதோடு, அச்சிறுவனது மண்டை உடைந்து இரத்தம் கொட்டுமளவிற்கு தாக்கியிருக்கிறான்.

-------------------------------------------------------

தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த சாமானியனுக்கு மட்டுமல்ல; மாநில முதல்வர் என்ற அந்தஸ்தில் இருந்தாலும் கூட, ஆதிக்க சாதியினரின் வன்கொடுமைகளிலிருந்து தப்பித்து விடமுடியாது என்பதற்கு பொருத்தமான உதாரணம், பீகார் முதல்வர் ஜிதன் ராம் மஞ்ஜிக்கு நேர்ந்த அவலம்.

பீகார் முன்னாள் முதல்வரான தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த போலோ பஸ்வான் சாஸ்திரி நினைவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டமொன்றில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் ஜிதன் ராம் மஞ்ஜி, “கடந்த ஆக-15-ம் தேதியன்று அப்பகுதி மக்களின் வேண்டுகோளுக்கினங்க மதுபானி மாவட்டத்திலுள்ள பகவதி பரமேசுவரி கோயிலுக்குச் சென்றிருந்தேன். நான் அக்கோயிலுக்கு சென்று திரும்பிய பிறகு, தீட்டுக்கழிப்பு சடங்குகள் நடத்தி, கோயில் கழுவப்பட்டிருக்கிறது” என தனக்கு நேர்ந்த வன்கொடுமையைச் சுட்டிக்காட்டி, சாதிவெறியர்களின் வக்கிரத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார்.

கடந்த ஓரிரு மாதங்களில் மட்டும் நாளேடுகளில் வெளிவந்துள்ள வன்கொடுமை பற்றிய செய்திகள் இவை. உசிலம்பட்டி சாதிவெறிக் கொலையாகட்டும், லூதியானாவில் நடத்தப்பட்டிருக்கும் கொலையாகட்டும் இரண்டிலுமே சாதிவெறியர்களும் போலீசும் ஓட்டுக் கட்சிகளும் கூட்டணியாகச் செயல்பட்டிருப்பதைப் பார்க்கிறோம். உசிலைக் கொலையில் நீதிமன்றமும் ஆதிக்க சாதிவெறிக்குத் துணை நின்றிருக்கிறது.

விருதுநகர் சம்பவம், மாணவர்கள் மத்தியில் வளர்ந்துவரும் சாதிவெறிக்கு அச்சுறுத்தும் சான்றாக இருக்கிறது. 50 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழகத்தைக் காட்டிலும் சமூகத்தின் பண்பாடு பின்னோக்கிச் செல்வதையும், தாழ்த்தப்பட்ட மக்கள் தம் வாழ்க்கையில் எட்டிப் பிடிக்கின்ற எளிய முன்னேற்றத்தைக்கூட சகித்துக் கொள்ள இயலாத அளவிற்கு ஆதிக்க சாதியினர் மத்தியில் சாதிவெறி கொழுந்து விட்டு எரிகிறது என்பதற்கு சிவகங்கை, அகமதாபாத் சம்பங்கள் எடுத்துக்காட்டாக இருக்கின்றன.

பெங்களூருவிலும் மகாராஷ்டிராவிலும் பீகாரிலும் நடைபெற்றுள்ள சம்பவங்கள் பிற்போக்கான காட்டுமிராண்டி நிலையிலேயே இந்தியச் சமூகத்தின் பல பகுதிகள் நீடிப்பதைக் காட்டுகின்றன. குறிப்பாக, தனக்கு நேர்ந்த தீண்டாமைக் கொடுமை பற்றி ஒரு மாநில முதலமைச்சரே வெளிப்படையாகத் தன் குமுறலை வெளியிட்ட பின்னரும், ஓட்டுக்கட்சிகளோ, ஊடகங்களோ அது பற்றிக் கண்டு கொள்ளவில்லை. அந்தக் குறிப்பிட்ட தொகுதியின் எம்.எல்.ஏ. வெளியிட்ட மறுப்புச் செய்தியோடு அப்பிரச்சினை அமுக்கப்பட்டுவிட்டது.

தருமபுரி இளவரசன் கொலைக்குப் பிறகு, தருமபுரி மாவட்டத்தில் ஒவ்வொரு வகுப்பறைக்குள்ளும் ஒரு சேரி உருவாக்கப்பட்டிருக்கிறது. வெறி பிடித்த வன்மத்தோடு தாழ்த்தப்பட்ட மக்கள் சமூக ரீதியாகப் பின்னோக்கித் தள்ளப்படுகின்றனர். நெல்லை மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு எதிராக வெளிப்படும் வன்முறை, இது ஒரு பொதுப்போக்காக வளர்ந்து வருவதைக் காட்டுகிறது.

நாடெங்கும் புதுப்புது வடிவத்திலான வன்கொடுமைகள் அதிகரித்து வருவதற்கும், கண்ணகி-முருகேசன் கொலை உள்ளிட்ட கொடிய வன்கொடுமைக் குற்றங்களில் கூட யாரும் தண்டிக்கப்படாத நிலையிலும், அச்சட்டதையே நீக்க வேண்டும் என்று ஆதிக்க சாதிவெறியர்கள் கூச்சலிடுவதற்கான அடிப்படை என்ன?

அதிகரித்து வரும் நகரமயமாக்கம், தவிர்க்கவியலாமல் காதல் திருமணங்களுக்கும் சாதிரீதியான ஒன்றுகலத்தலுக்கும் வழிவகுக்கிறது. தருமபுரி முதல் உசிலை வரையிலான பல நிகழ்வுகள் அதற்குச் சான்றாக உள்ளன. இந்த மாற்றத்தை கிராமப்புறத்தில் சாதியக் கலாச்சாரத்தில் ஊறியிருக்கும் பழமைவாதப் பெற்றோர்களால் ஒப்புக் கொள்ள முடிவதில்லை என்ற போதிலும், இந்த முரண்பாடு ஒரு கலவரமாக வெடிப்பதற்கு அப்பெற்றோர்கள் காரணமாக இருப்பதில்லை.
எல்லா சாதிகளிலும் தனியார்மய – தாராளமயக் கொள்கைகளின் விளைவாக உருவாகியிருக்கும் புதிய வகை தரகு வர்க்கங்களும், அரசியல் பிழைப்புவாதிகளும்தான் இந்த முரண்பாட்டைத் தீவிரப்படுத்துகிறார்கள். அது மட்டுமல்ல, சொல்லிக்கொள்ளப்படும் இந்த வளர்ச்சியாக இருக்கட்டும், கைபேசி முதல் இணையம் வரையிலான முன்னேற்றங்களாக இருக்கட்டும், இவை எதுவும் சமூகத்தில் ஒரு ஜனநாயகப் பண்பாட்டை உருவாக்கவில்லை; மாறாக, சீரழித்திருக்கிறது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான வன்கொடுமைகளைப் போலவே, பெண்களுக்கும், சிறுமியர்க்கும் எதிரான பாலியல் குற்றங்களின் அதிகரிப்பும், திருட்டு, ஆதாயத்துக்கான கொலைகள், மோசடிகள், முதியோர் கொலைகள் உள்ளிட்ட குற்றங்களின் அதிகரிப்பும் இந்த வளர்ச்சிப்பாதை தோற்றுவித்துள்ள கொடிய விளைவுகள் என்பதைக் கணக்கில் கொண்டு, இவற்றுக்கெதிரான போராட்டத்தை நடத்தவேண்டியிருக்கிறது.

- இளங்கதிர்
_______________________________
புதிய ஜனநாயகம், நவம்பர் 2014

மனித நேயத்துக்கு கிடைத்த பரிசு!



இது முஸ்லிம் இயக்கத்தின் மாநாடோ அல்லது ஆர்ப்பாட்டமோ அல்ல :அய்யம்பேட்டை டாக்டர் கோட்டை சாமி அவர்களின் இறுதி சடங்கு - மெய் சிலிர்த்தது தஞ்சை மாவட்டம்....!!

தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை,சக்கராப்பள்ளி முஸ்லிம்கள் நிறைந்து வாழக்கூடிய ஊராகும்.

இந்த ஊரில் டாக்டராக 40 ஆண்டுகளாக சிறப்பாக பணியாற்றியவர் டாக்டர் கோட்டை சாமி,

இவர் பணி புரிந்த காலத்தில் அய்யம்பேட்டை,சக்கராப்பள்ளி சுற்று வட்டார(வழுத்தூர், வடக்கு மாங்குடி, பசுபதி கோவில்) முஸ்லிம்களுடன் குடும்ப உறுப்பினரை போல உண்மையான தொப்புள் கொடி உறவாகவே பழகி வந்தார்.

பணத்தை மட்டுமே குறிக்கோளாய் வைத்து பணியாற்றிவரும் மருத்துவர்களுக்கு மத்தியில் ஏழைகளுக்கு குறைந்த பணம் பெற்று சேவை புரிந்த நல்ல மனிதர் டாக்டர் கோட்டை சாமி...

இந்நிலையில் நேற்று அவர் விபத்தில் எதிர்பாராத விதமாக உயிரிழந்தார், அவரது இழப்பு அவரது குடும்பத்தினரை மட்டுமின்றி அந்த ஊர் மக்களையே பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்நிலையில் அவரது உடலை பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது, அவரது உடலை காண பல்லாயிரக்கணக்கான முஸ்லிம் ஆண்களும் பெண்களும் திரண்டு வந்து பார்வையிட்டனர்.

அவரது ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம் ஆண்கள் கலந்து கொண்டனர்.

இப்படியொரு நிகழ்வை கண்டு தஞ்சை மாவட்ட மக்கள் மெய் சிலிர்த்து பேசி வருகின்றனர்.

நன்றி : முகநூல் முஸ்லிம் மீடியா,

இந்துவின் உயிர் காக்க தன் உயிர் விட்ட முஸ்லிம்கள்!



உபியில் அனைத்து மதத்தினரும் அண்ணன் தம்பிகளாக கலந்து வாழும் ஓர் ஊர் மொராதாபாத். இங்கு சுமன் என்ற பெண் திடீரென்று ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். இதனை தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த நுஃமான், தனீஷ் என்ற இரு இஸ்லாமிய இளைஞர்கள் தத்தளித்துக் கொண்டிருந்த அந்த பெண்ணை காப்பாற்ற அந்த வெள்ளத்தில் குதித்தனர். ஆனால் நீரின் வேகம் அதிகரிக்கவே அந்த இளைஞர்களால் அந்த பெண்ணைக் காப்பாற்ற முடியவில்லை. இவர்களாலும் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை. ஆம். இந்த இரு இளைஞர்களும் நீரால் அடித்துச் செல்லப்பட்டனர். 36 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு மூன்று உடல்களையும் ராணுவத்தினர் மீட்டனர்.

இரு இஸ்லாமிய இளைஞர்களின் சவ(ஜனாஜா) ஊர்வலத்தில் பல இந்துக்கள் தங்கள் தோள்களால் அந்த தியாகிகளை சுமந்து சென்றனர். வழி நெடுக இந்து பெண்கள் மலர்களை தூவி அந்த இளைஞர்களுக்கு தங்கள் அன்பை வெளிப்படுத்தினர். 'யாரோ சாலையில் இறந்து கிடந்தாலும் நமக்கென்ன என்று செல்பவர்களை பார்த்துள்ளோம். ஆனால் இந்த இளைஞர்கள் தங்கள் உயிரை விட மற்றவரின் உயிருக்கு மதிப்புக் கொடுத்த தன்மை எல்லோருக்கும் வந்து விடாது. இந்த இரு இளைஞர்களும் எங்கள் பார்வையில் உண்மையில் ஹீரோக்கள்' என்று புகழ்ந்தார் அந்த ஊரின் இந்துவான சக்தி மல்ஹோத்ரா.

'எங்கள் நகரம் சமூக ஒற்றுமையில் சிறந்து விளங்குவதை இந்த நிகழ்வு எடுத்துக் காட்டுகிறது' என்கிறார் உள்ளூர் வாசியான முஸ்லிம் இக்ராம் குரைஷி. இறந்த மூன்று குடும்பத்தினருக்கும் தலா ஐந்து லட்சம் அரசு தரப்பில் வழங்கப்படும். அரசு உத்தியோகமும் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆதாரம்:

-முஸ்லிம் மிர்ரர்
-ஹிந்துஸ்தான் டைம்ஸ்
24-09-2014



குஜராத்தில் அப்பாவியான ஒரு முஸ்லிம் கர்ப்பிணியின் வயிற்றைக் கிழித்து அந்த சிசுவையும் வெளியில் இழுத்து நெருப்பில் இட்டவர்களும் நமது நாட்டிலேதான் வாழ்கிறார்கள். தனது உயிரையும் துச்சமாக மதித்து ஒரு இந்து பெண்ணை காப்பாற்ற முயற்சித்து உயிர் விட்ட இந்த இரு இஸ்லாமிய இளைஞர்களும் நமது நாட்டில்தான் வாழ்கிறார்கள். மனிதரில்தான் எத்தனை நிறங்கள்!

'ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்'

-குர்ஆன் 5:32

நரேந்திர மோடி தனது மனைவியை மறக்கலாமா?



பிரதமரின் குடும்ப உறுப்பினர் அனைவர்க்கும் 24 மணி நேரப் பாதுகாப்பு வழங்குவது இந்திரா காந்தி காலத்தில் தொடங்கப்பெற்றது.

அது மறுபரிசீலனைக்கு உரியது. ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் பாதுகாப்பாக வாழும் உரிமை இருக்கின்றது. அதனை உறுதி செய்யாது சிலருக்கு மட்டும் மிதமிஞ்சிய பாதுகாப்பு அளிப்பது மக்கள் பணத்தை விரயமாக்குவதே. மோடி தனது மனைவியை ஏற்கவில்லை. இருவரும் தனித்தே வாழ்கிறார்கள். சமீபகாலம் வரை யசோதா பென் யாரென்றே தெரியாது.

மனைவி என்று ஏற்றுக்கொண்டால் தனது இல்லத்துக்கு மோடி அழைக்க வேண்டியதுதானே. இன்று அழைத்தாலும் நான் செல்வேன் என்று அவர் சொல்லிய பிறகும் மோடி எந்த எதிர்வினையும் எடுக்கவில்லை. இந்துத்துவா தத்துவத்தின்படி மோடி மனைவியோடு இணைந்து வாழ வேண்டுமல்லவா?

- ச.சீ. இராஜகோபாலன், சென்னை.

நன்றி: தமிழ் இந்து
26-11-2014

http://tamil.thehindu.com/opinion/letters/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE/article6635729.ece?homepage=true

ஒரு நாட்டின் முக்கிய பதவியில் இருக்கும் ஒருவர் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டாமா? இத்தனை காலம் இவருக்கு மனைவியாக இருந்து வேறு திருமணமும் செய்து கொள்ளாமல் தனது இளமையை தொலைத்த அந்த பெண்மணியை முறையாக அழைத்து கௌரவிக்க வேண்டாமா? நரேந்திர மோடியை ஆதரிப்பவர்கள்தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.

Tuesday, November 25, 2014

'தூக்கம் என் கண்களைத் தழுவட்டுமே' - குடி மகன்!



தூக்கம். பெரும் வரம். குடிநோயாளிகளுக்கோ இது பெரும் ஏக்கம். ஒருவர் தினசரி ஆறு முதல் எட்டு மணி நேரம் தூங்க வேண்டும். ஒருவர் நான்கு நாட்கள் தூங்கவில்லை என்றால் அவரது உயிரியல் கடிகாரம் உருக்குலைந்துவிடும். செரிமான உறுப்புகள் செயலிழந்துவிடும். மேலும் நான்கு நாட்கள் தூங்கவில்லை எனில் பாதி மனநோயாளியாகிவிடுவார். தூக்கமின்மை தொடர்ந்தால் நிச்சயம் அவர் ஒரு மனநோயாளிதான்.

குடிநோயாளிகள் பலரும், “தூக்கம் வரலைங்க, அதான், குடிக்கிறேன்” என்பார்கள். ஒருவர் ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து தினமும் மது அருந்துகிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர் தூங்கி ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டது என்று அர்த்தம். பத்து நாட்கள் தூக்க மின்மைக்கே ஒருவருக்குப் பைத்தியம் பிடிக்கும் என்றால் ஐந்து ஆண்டுகளாக ஒரு குடிநோயாளி தூங்கவில்லை என்றால் - நிச்சயமாக அவரும் ஒரு குடி மற்றும் மனநோயாளியே. என்ன, பலருக்கு வெளியே தெரிய வதில்லை.

உண்மையில், மது அருந்திவிட்டுப் படுக்கும்போது வருவது, தூக்கம் அல்ல; மயக்கம். மூளையைத் தவிர அவரது உடல் உறுப்புகள் அனைத்தும் மயங்கிக்கிடக்கும். உறக்கம் என்பது பூப்போல கண் இமைகள் அணைய வேண்டும், குழந்தையின் தூக்கத்தைப் போல. ஆனால், குடிநோயாளிகளின் மயக்கம் என்னும் தூக்கம் எருமை ஏறி மிதிப்பதற்கு ஒப்பானது. இந்த ஒப்பீட்டுக்குக் காரணம் இருக்கிறது. ஒருவர் மீது எருமை ஏறி மிதித்தால் உயிரிழக்கவும் வாய்ப்பிருக்கிறது இல்லையா? அப்படி மது அருந்திவிட்டு மயக்கத்தில் ஆழ்ந்திருக்கும்போது உயிர் பிரியும் அபாயங்கள் நிறையவே உண்டு. சரி, டாக்டர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

உறக்கத்தில் உயிர் பிரியும் அபாயம்!

“சுவாசத்தின் சூட்சுமம் பின்னந்தலையில் இருக்கிறது. அந்த நரம்பு மண்டலத்துக்குப் பெயர் ‘ரெஸ்பிரேட்டரி சென்டர்’ (Respiratory centre). நமது சுவாசத்தைக் கட்டுப் படுத்தும் உயிரியல் கருவி இது. பின்னந்தலையில் பலமாக அடித்தால் மயக்கம் அடைவார்களே, அதற்குக் காரணம் இந்த கருவி சேதம் அடைவதுதான். ஒருவர் தொடர்ந்து மது அருந்தும்போது இந்த உயிரியல் கருவி கடுமையாக பாதிக்கப்படும். ஒருவருக்கு ரத்தத்தில் ஆல்கஹாலின் அளவு 0.30 அளவுக்கு மேல் உயர்ந்துவிட்டாலே அவரது சுவாசம் சீராக இயங்காது. திடீரென்று உச்ச நிலைக்குச் செல்லும். திடீரென்று அபாயகரமான அளவுக்கு தாழும். மூச்சுத் திணறல் இது. ஒருகட்டத்தில் முச்சு விட முடியாமல் தன்னிச்சையாகத் தூக்கத்தில் வாயைத் திறந்து சுவாசத்துக்குத் துடியாய்த் துடித்து, அடங்கி, இறந்துபோவார். எனவே, ஒருவர் அதிக அளவு மது அருந்தி மயக்க நிலைக்குச் சென்று விட்டால் அவரை விட்டு விலகிச் சென்றுவிடக் கூடாது. அருகிலிருந்து கவனித்துக்கொள்ள வேண்டும். அவருக்கு எந்த நேரமும் மூச்சுத் திணறல் ஏற்படலாம்.

அடுத்து, ஒருவர் அதிக அளவு மது அருந்திவிட்டு எழுப்ப இயலாத அளவுக்கு மயக்கத்தில் ஆழ்ந் திருக்கும்போது பெரும்பாலும் மல்லாக்கப் படுத்திருப்பார். அதிகப்படியான மது, உணவு இரைப்பையை நிறைத்திருக்கும். அதிக அளவு மது அருந்திய நிலையில் உணவு செரிக்காது. மயக்க நிலையிலேயே வாந்தி எடுப்பார்கள். மதுக்கடை வாசலில் மயக்கிக்கிடக்கும் குடிநோயாளிகள் பலரும் மயக்கத்திலேயே வாந்தி எடுக்கும் காட்சிகளை நினைவுபடுத்திப் பாருங்கள். பக்கவாட்டில் சரிந்த நிலையில் அப்படி வாந்தி எடுத்தால் பெரியதாக அபாயம் இல்லை. மல்லாக்கப் படுத்த நிலையில் வேகமாக வாந்தி எடுக்கும்போது அது உணவுக் குழாய்க்கு மிக அருகில் இருக்கும் மூச்சுக் குழாய்க்குள் சென்றுவிட அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.

உதாரணத்துக்கு, புரையேறுவதை எடுத்துக்கொள்வோம். உண்ணும்போது லேசாக சிறு உணவுத் துகள் மூச்சுக் குழாய்க்குள் சென்றாலே தாங்க முடியாமல் இருமி, கண்ணில் நீர் வழியத் துடிக்கிறோம். தலையில் தட்டி, மெதுவாகத் தண்ணீர் குடித்த பின்பே ஆசுவாசம் அடைய முடிகிறது. அப்படி என்றால் ஏராளமான வாந்தி ஒருவரின் மூச்சுக்குழாய்க்குள் செல்லும்போது, அதுவும் அப்போது அவர் மயக்கம் நிலைக்கும்போது, என்ன நடக்கும்? மரணம் நிச்சயம்.

‘குடி’ நுரையீரலையும் கெடுக்கும்!

புகைபிடிப்பதால் நுரையீரல் கெடும் என்பது தெரியும். மதுவும் நுரையீரலை பாதிக்கும் என்பது தெரியுமா? பெரும்பாலான குடிநோயாளிகள் குறட்டை விடுவார்கள். குறட்டை என்பது ஒரு உடல் குறைபாடுதான். மது அருந்துவதால் குறட்டை நோய் அதிகரிக்கும். அதுவும் சில குடிநோயாளிகள் பயங்கரமாக வாயைத் திறந்து வைத்துக்கொண்டு சத்தமாகக் குறட்டை விடுவார்கள். குறட்டை சத்தம் உச்ச நிலையிலும் தாழ்ந்த நிலையிலும் ஏறி, இறங்கிப் பயணிக்கும். அப்போது அவர்களின் உடல் அதிர்ந்து அடங்கும். இது நகைப்புக்குரிய விஷயம் அல்ல. அபாயகரமானது. இதுபோன்ற குறட்டையின்போது புரை ஏறி உணவுத் துகள்கள் நுரையீரலுக்குள் சென்றுவிட வாய்ப்புகள் இருக்கின்றன. நுரையீரல் என்பது பாதுகாக்கப்பட்ட பகுதி. அங்கே காற்றைத் தவிர எதற்கும் அனுமதி இல்லை. அங்கே உணவுத் துகள் அல்லது சிறு இறைச்சி துகள் சென்றுவிட்டால் உடனே எதுவும் தெரியாது. ஒரு வாரத்துக்குள் அது அழுகி, நோய்க் கிருமிகள் பெருகி நுரையீரல் கடுமையாக பாதிக்கப்படும். மூச்சுத்திணறலுடன் கூடிய கடுமையான காய்ச்சல் ஏற்படும். இதன் பெயர் ‘ஆஸ்பிரேஷன் நிமோனியா’ (Aspiration pneumonia). உடனடியாகத் தகுந்த சிகிச்சை அளிக்கவில்லை என்றால் மரணமும் நேரலாம். எனவே, மதுவின் மயக்கம் என்பது மரணம் வரை அழைத்துச் செல்லும்.” என்றார்.

(தெளிவோம்)

- டி.எல். சஞ்சீவிகுமார்,

தொடர்புக்கு: sanjeevikumar.tl@thehindutamil.co.in
Keywords: மெல்லத் தமிழன் இனி, குடி நோயாளி, மன நோயாளி, தூக்கமின்மை, தூக்கம் இன்மை நோய், ‘ஆஸ்பிரேஷன் நிமோனியா’

நன்றி: தமிழ் இந்து நாளிதழ்
26-11-2014

“நபியே! மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; நீர் கூறும்; “அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது; மனிதர்களுக்கு அவற்றில் சில பலன்களுமுண்டு; ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது.”

(அல்குர்ஆன் 2: 219)

மது அருந்துதல் ஷைத்தானின் அருவக்கத்தக்க செயலாகும்: -

ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும்; ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் – அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள். நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடத்தான்; எனவே, அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா?

(அல்-குர்ஆன் 5:90-91)

மது அருந்துபவர், அதனை அருந்தச் செய்பவர், வாங்குபவர், விற்பவர், தயாரிப்பாளர், சுமப்பவர், இதன் மூலம் கிடைத்த வருவாயை சாப்பிடுபவர்கள் அனைவரையும் நபி அவர்கள் சபித்துள்ளார்கள்.

(ஆதாரங்கள் : அபூதாவுத், திர்மிதி, இப்னுமாஜா)

சவுதியின் பாஹா மாகாணத்தில் பெரும் தீ!



சவுதியின் பாஹா மாகாணத்தில் பெரும் தீ!

சவுதி அரேபிய மாகாணங்களில் ஒன்றான பாஹாவில் ஒரு வேர் ஹவுஸில் நேற்று திடீரென்று தீப்பிடித்தது. தீ மளமளவென்று பரவி மூன்று கொடவுன்களை நாசப்படுத்தியது. தீப்பிடித்ததற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. தீப்பிடித்த சில நிமிடங்களிலேயே இளவரசர் மிஸாரி பின் சவுத் (பாஹா மாகாணத்தின் கவர்னராகவும் உள்ளார்) சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். மூன்று கொடவுன்கள் ஒரே நேரத்தில் தீப்பிடித்ததால் அந்த இடமே பெரும் புகை மூட்டமாக இருந்தது. அதையும் பொருட்படுத்தாது தனது முகத்தை துணியால் மூடிக் கொண்டு அந்த இடத்தை அடைந்து காயமடைந்த நபர்களை உடன் மருத்துவ மனைக்கு அனுப்ப உத்தரவிட்டார். தீப்பிடித்ததற்கான உண்மையான காரணத்தை உடன் கண்டறியுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மீட்பு பணிகள் சிறப்பாக நடக்கிறதா என்று அதிகாரிகளோடு கலந்து ஆலோசித்தார்.

அரப் நியூஸ்
25-11-2014

மன்னராட்சி நடக்கும் சவுதியை பலர் ஏளனமாக பார்ப்பதுண்டு. தேர்தல் இல்லாத இந்த முறை சரியா என்று விவாதிப்பவர்களும் உண்டு. தேர்தலை முழுமையாக கடை பிடிக்கும் நமது நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு எந்த மாதிரி செயல்படுகிறது என்று நமக்கு நன்றாக தெரியும். எனவே மன்னராட்சியோ, மக்களாட்சியோ, அல்லது கம்யூனிஷ ஆட்சியோ எந்த வகை ஆட்சியாக இருந்தாலும் அது மக்களுக்கு நன்மை பயக்கும் ஆட்சியாக இருக்க வேண்டும் என்பதே நமது அவா!

மிக அழகிய முறையில் ஓதப்படும் குர்ஆன்!



அமைதியாக சொற்பொழிவை கேட்ட இந்து சகோதரர்கள்!


Monday, November 24, 2014

பழந் தமிழ் இலக்கியத்துக்குள் நுழைவோமா!



பழந்தமிழ் இலக்கியங்களில் காதலன், காதலியை ‘தலைவன், தலைவி’ என்றுதான் குறிப்பிடுகிறார்கள். தலைவியைப் பிரிந்து தலைவன் பொருள் தேடச் செல்வான். இதற்குப் ‘பொருள்வயிற் பிரிவு’ என்று பெயர். இந்தப் பிரிவுக் காலம் மூன்று மாதங்களைத் தாண்டக் கூடாது. ஆனால் தமிழர்களாகிய நாம் ஒரு ஆண்டும், பலர் இரண்டு ஆண்டுகளும் தலைவியை பிரிந்து வளைகுடாக்களில் வாழ்ந்து வருகிறோம். மனைவி குழந்தை பெற்றோர்களோடு வாழ்ந்து வருபவர்களை நான் குறிப்பிடவில்லை. பெரும்பாலான தமிழர்கள் தலைவியை பிரிந்தே வாழ்கின்றனர்.

இத்துறையில் செலவழுங்கல், பிரிவாற்றாமை, பருவ வரவு, தலைவன் வரவு ஆகிய சூழல்கள் சிறப்பாகப் பாடப்படுகின்றன.

பிரிவு என்பது இளம் காதலருக்கு உயிர்வாட்டம் தருவது. தலைவியின் ஒப்புதலின்றிப் பிரிதல் தலைவனுக்கு இயலாதது. தலைவியின் மெல்லிய உணர்வுகளை உணரும் தலைவன் பிரிவைக் குறிப்பாக உணர்த்துவான். தலைவியின் வாட்டம் கண்டு தன் பயணத்தை நிறுத்துவான். தோழி எடுத்துச் சொல்லவும் பயணத்தை நிறுத்துவான். இதுவே செலவழுங்கல் என்பது. கலித்தொகைப் பாடப் பகுதியில் இதனைக் காணலாம். பொருள் தேடப் புறப்பட்ட தலைவனைத் தடுத்த தோழி அச்செய்தியைத் தலைவியிடம் தெரிவிக்கிறாள்.

‘மரங்கள் பட்டுக்கிடக்கும் காட்டுவழியில் பொருள் தேடிவர நினைக்கின்றாய். இதனைத் தலைவி அறிந்தால் நெஞ்சழிவாள். உயிரை விட்டுவிடுவாள் என்று நான் சொல்லத் தலைவன் பயணத்தை நிறுத்திவிட்டான். எனவே தலைவியே மகிழ்ச்சிகொள்’


வினைவெஃகி நீ செலின் விடுமிவள் உயிரெனப்
புனையிழாய் நின்னிலை யான்கூறப் பையென
நிலவுவேன் நெடுந்தகை நீளிடைச்
செலவொழிந் தனனால் செறிகநின் வளையே.

(கலி. 10, 21-24)


என்று தோழி கூறுகிறாள்.

மரங்கள் பட்டுக் கிடக்கும் காட்டு வழியில் பொருள்தேட புறப்பட்டாலே கலித் தொகை தலைவிக்கு வருத்தம் மேலிடுகிறது. ஆனால் இந்த கால தலைவிகளோ தலைவன் பாலைவன சுடு மணலில் கிடந்து வெந்தாலும் மாதா மாதம் தனக்கு பணத்தை மட்டும் அனுப்பி விடு என்கிறாள். 800 ரியால் 1000 ரியால் என்று குறைந்த சம்பளத்துக்கு வந்து வெயிலிலும் பனியிலும் கஷ்டப்படும் தலைவனின் வலி உணர்ந்தால் ஆடம்பர செலவுகளை தலைவி செய்வாளா? ஒரு உண்மை சம்பவத்தை இனி பார்ப்போம்

ஒரு முறை சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் எனது தாத்தாவை கோலாலம்பூர் பயணம் ஏற்றி விட வந்திருந்தேன். தனது மகளையும் பேரப்பிள்ளைகளையும் பார்க்க ஆவலோடு இரண்டு மாதம் டூரிஸ்ட் விசாவில் செல்கிறார். அருகே வேறொரு வயதானவரும் அமர்ந்திருந்தார். சோகத்தோடு இருந்தார். அவரை வழியனுப்ப வந்த நபரிடம் 'பெரியவர் சோகமாக காணப்படுகிறாரே! ஏன்' என்று கேட்டேன்.

அதற்கு அவர் 'சோகக் கதைங்க. இவருக்கு சரியாக காது கேட்காது. வயதாகி விட்டதால் கண் பார்வையும் மங்குகிறது. பொருள் தேட மலேசியா இனியும் நான் போக மாட்டேன் என்று அடம் பிடித்தார். ஆனால் அவர் மனைவியோ எனக்கு 1000 ரூபாய் பணம் கொடுத்து 'எப்படியாவது இந்த மனுஷனை ஃபிளைட் ஏற்றி அனுப்பி விட்டு வா' என்று அனுப்பியுள்ளர்'

'பிரியமில்லாதவரை இந்த வயதில் அனுப்பலாமா? இது தவறில்லையா'

'தவறுதாங்க.... நானும் அந்த அம்மா கிட்டே சொன்னேன். எனக்கு புத்தி சொல்லாதே! சொன்ன வேலையை செய்' என்று சொல்பவரிடம் நான் என்ன சொல்ல?'

'எந்த ஊரு?'

'மதுரை'

தாத்தாவுக்கு இமிக்ரேஷன் எல்லாம் முடிந்து உள்ளே சென்று விட்டார். வயதானவர் என்பதால் தாத்தாவின் ஃபிளைட் கிளம்பும் வரை நான் காத்திருந்தேன்.

விமானமும் கிளம்பி விட்டது. அரை மணி நேரம் கழித்து அந்த வயதான பெரியவர் மட்டும் சோகத்தோடு வெளியே வந்தார். அழைத்து வந்த இளைஞர் பதற்றத்தோடு 'நீங்க ஃபிளைட் ஏறலையா?' என்று கேட்டார். பெருசு சரியான ஆள்தான். விமான நிலைய கழிவறைக்கு சென்றவர் அரை மணி நேரம் கழித்துதான் வெளியேறியிருக்கிறார். மூன்று முறை விமான நிலையத்தில் தொடர்ந்து இவர் பெயரை கூப்பிட்டுள்ளார்கள். நேரமாகி விட்டதால் இவரது இருக்கையை காலியாகவே வைத்து விமானம் புறப்பட்டு விட்டது. வேண்டுமென்றே இவர் கழிவறையிலேயே அமர்ந்து விட்டார்.

'என்னய்யா இப்படி பண்ணிட்டீங்க? உங்க மனைவி கிட்டே நான் என்ன சொல்லப் போறேன் என்று எனக்கு விளங்கவில்லை'

'நீ ஒன்னும் கவலைப்படாதே! அவளை நான் சமாளிச்சுக்கிறேன்' என்று சொல்லி மதுரைக்கு பஸ் பிடிக்க இருவரும் சென்றனர்.

கலித் தொகையில் வரும் தலைவி தலைவனை பிரிவதை சோகமாக எண்ணுகிறார். ஆனால் இருபதாம் நூற்றாண்டு தலைவியோ தலைவன் வயதான காலத்தில் அந்நிய தேசத்தில் செத்தாலும் பரவாயில்லை: தான் நிம்மதியாக வீட்டில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறாள். காலம்தான் மனிதர்களை எப்படி எல்லாம் மாற்றுகிறது?

மாற்றான் தோட்டத்து மல்லிகை!

மாற்றான் தோட்டத்து மல்லிகை!



சாமியார் ராம்பாலின் கைதும் பல கோடிக்கணக்கான ஆயுதங்கள் பறிமுதலைப் பற்றியும் தமிழ் இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் குமார் என்ற இந்து இளைஞர் தனது ஆதங்கத்தை பின்னுட்டமாக கொட்டித் தீர்த்துள்ளார். இனி அவரது பின்னூட்டம்.

காவல் துறையே? ராணுவமே உங்கள் மனசாட்சி எங்கே சென்றது? இந்த இரட்டை நிலை ஏன்? ஒரு முஸ்லிம் இளைஞன் சற்று அதிகமாக தாடிவைத்திருந்தாலே தீவிரவாத பட்டம் கட்ட துடிக்கும் பத்தி ரிக்கை மற்றும் மீடியாக்களை 12 ஏக்கர் பரப்பளவில் ராணுவம் நுழைய முடியாத அளவு ஆயுதங்களுடன் இந்திய ராணுவத்தின் மீது போர் தொடுக்கும் இவர்கள் உங்கள் பார்வையில் ஆதரவாளர்களா? இந்த பாரபட்சம் ஏன்? வெங்காய வியாபாரியை வெடிகுண்டு கடத்தல் மன் னனாக்கும் மீடியாக்க ளே இங்கு நடக்கும் அநியாத்தை வெளிக்கொணர காவி புழுதி கண்களை மறைத்துவிட்டதே ஏன்? குற்றம் நீருபிக்கபடாமல் 14 வருடங்களுக்கு மேலாக சிறைச்சாலைகளின் வாடும் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை பிணையில் விட ஆயிரம் முறை மன்றாடி கேட்டும் அனுமதிக்காத நீதி துறையே இது தான் சம நீதியா? இங்கு நீதி கேள்வி குறியாகிறதே ஏன்? ஒழுக்கமும், கண்ணியமும், சகோதரத்துவமும் பயிற்றுவிக்கப்படும் மதரசாக்களை தீவிரவாத கூடாரமாக சித்தரிக்க விரும்பும் பாசிச கூட்டமே! வெடிகுண்டுகளோடு, துப்பாக்கிகளுடன் ஆசிரமத்தில் ஒளிந்து கொண்டு தாக்கும் இவர்கள் உங்கள் கண்களுக்கு தென்படவில்லையா? இப்பொழுது உங்கள் தலைவர்கள் அனைவரும் வாய்பொத்தி மெளனம் சா திப்பது ஏன்?

-குமார்
23-11-2014
தமிழ் இந்து நாளிதழ்

-----------------------------------------------------


400 கமாண்டோ வீரர்கள்

வெளியில் செல்வதற்காக குண்டு துளைக்காத புல்லட் புரூப் கார்களை ராம்பால் பயன்படுத்தியுள்ளார். அவரின் பாதுகாப்புக்காக 400 பேர் கொண்ட சிறப்பு கமாண்டோ படை இருந்துள்ளது. ஆசிரமம் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. வெளி நபர்கள் ஆசிரமத்துக்குள் நுழைய முடியாத வகையில் 20 அடி உயரத்துக்கு சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டுள்ளது. அதில் ஆங்காங்கே கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆசிரம வாயிலில் 4 மெட்டல் டிடெக்டர் கதவுகள் உள்ளன. அதன்வழியாகவே பக்தர்கள் உள்ளே நுழைய அனுமதிக்கப்பட்டனர்.

ரகசிய ஆயுதக் கிடங்கு

ஆசிரமத்தின் இரண்டு ரகசிய அறைகளில் ஏராளமான துப்பாக்கிகள், பெட்ரோல் குண்டுகள், கையெறி குண்டுகள், ஆசிட் குப்பிகள் என சிறிய அளவிலான போரை நடத்துவதற்கு தேவையான ஆயுதங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன.
ஹெல்மெட், கைத்தடிகள், கருப்பு நிற சீருடைகள் அலமாரிகளில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அங்குள்ள 2 டேங்க்குகளில் 800 லிட்டர் டீசல் நிரப்பி வைக்கப்பட்டிருந்தது. துப்பாக்கிகள் அனைத்திலும் தோட்டாக் கள் நிரப்பப்பட்டு தயார் நிலையில் வைக்கப் பட்டுள்ளன. அங்கு சாமியாரின் கமாண்டோ படை வீரர்கள் தங்குவதற்காக தனி அறைகளும் உள்ளன.

போலீஸார் அதிர்ச்சி

சிறிய ராணுவத்துக்கு தேவையான வகையில் ஆயுதங்கள் குவித்து வைக்கப்பட்டிருப்பது பேரதிர்ச்சி அளிப்பதாக ஹரியாணா போலீஸார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீஸார் மேலும் கூறியபோது, சாமியாரை கைது செய்யவிடாமல் தடுத்து வன்முறையில் ஈடுபட்டதாக இதுவரை 865 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், அவர்களிடம் ரகசிய ஆயுதக் கிடங்கு குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம், இதன்மூலம் மேலும் பல்வேறு தகவல்கள் வெளிவரும் என்று தெரிவித்தனர். தற்போது சட்லக் ஆசிரமம் தற்போது பாலைவனம்போல் காட்சியளிக்கிறது.


பதிவை முழுவதுமாக படிக்க இந்த லிங்குக்குள் செல்லுங்கள்.

http://tamil.thehindu.com/india/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/article6625484.ece?homepage=true&ref=tnwn


Sunday, November 23, 2014

மதுவின் மயக்கத்தை தனக்கு சாதகமாக்கும் சாமியார்கள்!

மதுவின் மயக்கத்தை தனக்கு சாதகமாக்கும் சாமியார்கள்!



ஆந்திர மாநிலம் தடா அருகே இருக்கிறது அந்த கிராமத்தை ஒட்டிய வனப்பிரதேசம். அமாவாசையானால் அங்கு ஒரு கூட்டம் வந்துவிடுகிறது. புளிய மரத்தடியில் அமர்ந்திருந்தார் சாமியார். அங்கு வந்திருந்தவர்களைப் பார்த்தால் இயல்பானவர்களாகத் தெரியவில்லை. சிலர் தனக்குத் தானே பேசிக்கொண்டிருந்தார்கள். சிலர் ஆவேசமாக ஆடிக்கொண்டிருந்தார்கள். பெண்கள் சிலர் தலைவிரி கோலமாக ‘ம்... ம்... ம்...’ என்று பல்லைக் கடித்துக்கொண்டிருந்தார்கள். பேய் ஓட்டும் இடமாம் அது.
கண்ணாடியில் தெரியும் பிசாசு!

வயதான தம்பதியர் வாலிபர் ஒருவரை அழைத்து வந்திருந்தார்கள். அழைப்பு வந்ததும் சாமியாரிடம் சென்றார்கள். கட்டைப் பையிலிருந்து உயிருள்ள கோழி, வாழைப்பழம், பூ இவற்றுடன் சேர்த்து முகம் பார்க்கும் கண்ணாடி ஒன்றையும் சாமியாரிடம் கொடுத்தார்கள். பெற்றோரைக் கொஞ்சம் தள்ளி இருக்கச் சொல்லிவிட்டு அந்த வாலிபரிடம் பேச்சுக் கொடுத்தார் சாமியார். வாலிபர் சாந்தமாக, சில சமயம் சிரித்தும்கூட பேசிக்கொண்டிருந்தார். அவரைப் பார்த்தால் மனநலம் பாதிக்கப்பட்டவர் போலத் தெரியவில்லை. திடீரென்று சாமியார் கண்ணாடியை எடுத்து வாலிபரின் முகத்துக்கு முன்பாகப் பிடித்தார். அவ்வளவுதான். தனது முகத்தைப் பார்த்தவர், பயங்கரமாக அலறினார். கண்ணாடியை உடைக்கப் பார்த்தார். முகத்தைப் பொத்திக்கொண்டார். எழுந்து ஓட முயற்சித்தவரை சாமியாரின் உதவியாளர்கள் பிடித்துக்கொண்டார்கள். அவர்கள் கடுமையாக முயற்சித்து, கைகளை விலக்கி மீண்டும் கண்ணாடியில் முகம் பார்க்க வைத்தார்கள். ஒருகட்டத்தில் அவர் மயங்கிச் சரிந்தார். ஏதோ மந்திரம்போல உச்சரித்து, நெற்றில் குங்குமமிட்டு, உச்சந்தலையின் முடியைக் கொத்தாக வெடுக்கென்று பிடுங்கினார்கள். மீண்டும் அலறி எழுந்தார் அவர். பெற்றோரை அழைத்த சாமியார், “வொச்சே நெல அமாவாசைக்கு பிளிச்சிங்கின்னி ரா” என்று அனுப்பி வைத்தார். அவர்கள் அடுத்த மாதம் இதே அமாவாசை அன்று மீண்டும் இங்கு வர வேண்டுமாம். மயங்கிய வாலிபரின் முகத்தில் தண்ணீர் தெளித்துக் கைத்தாங்கலாக அழைத்துச் சென்றார்கள்.

சாமியாரின் உதவியாளரிடம் கேட்டேன். “ஆ மனுஷிக்கு அத்தம்ல மூத்தி ச்சூசா பிசாசு தெலுசாந்தி” என்றார். அந்த வாலிபர் கண்ணாடியில் முகத்தைப் பார்த்தால் அவர் உருவத்துக்குப் பதிலாக பிசாசு தெரிகிறதாம். டாக்டர் மோகன வெங்கடாசலபதியிடம் பேசினேன். “பேய் பிடித்திருக்கிறது என்பதெல்லாம் மூட நம்பிக்கை. அவற்றில் 80 சதவீதம் விதவிதமான குடிநோய்களே. மீதம் 20 சதவீதம் குடிநோய் அல்லாத மனநோய்கள். பேய் பிடித்ததாகச் சொல்லப்படும் பெரும்பான்மையோர் சாராயம், பிராந்தி, கோழிக்கறி கேட்பதன் சூட்சுமம் இதுதான். நீங்கள் குறிப்பிடும் அந்த வாலிபருக்கு தீவிரமான மனச்சிதைவு நோய் (Schizophrenia).இன்னும் சிலர் அடிக்கடி அருள் வந்ததுபோல சாமியாடுவார்கள். இதனை மனச்சிதைவு என்று சொல்ல முடியாது. குறிப்பிட்ட சூழல்களால் ஏற்படும் அதீத உத்வேகம் என்றும் கொள்ளலாம். இதனை மனநல மருத்துவம் பொசஷன் அட்டாக் (Possession attack) என்கிறது. மனச்சிதைவு நோய் கொண்டவர்களுக்கு விஷுவல் ஹாலுசினேஷன் (Visual hallucination) இருக்கக்கூடும். அதாவது கண் முன் தோன்றும் மாயத்தோற்றங்கள். கண்ணாடியில் முகம் பார்த்தால் அங்கு பிசாசு தெரிவதற்கு அதுவே காரணமாக இருக்கக் கூடும். இது பொதுவான கருத்து. அவரை மருத்துவச் சோதனை செய்தால் மட்டுமே அவரது பிரச்சினையை சரியாகச் சொல்ல முடியும்.

சிறு வயதிலிருந்தே ஒவ்வொருவருக்கும் ஒருசில விஷயங்கள் மீது பயம் இருக்கும். பெரும்பாலானோருக்குப் பேய், பிசாசு என்றால் அச்சம். சிலர் அந்த பயத்தினூடேயே அவை குறித்து அதீத ஆர்வம் காட்டுவார்கள். அவர்களின் பேச்சில் அமானுஷ்ய விஷயங்கள் ஆக்கிரமித்திருக்கும். இதுபோன்றவர்கள் குடிநோயில் சிக்கும்போது அவர்களின் மூளையை அது பெரிதும் பாதிக்கிறது. நீங்கள் குறிப்பிட்ட வாலிபரின் பிரச்சினையும் அதுதான். குடிநோயின் எதிர்மறையான எண்ணங்கள் அந்த வாலிபருக்குச் சுய வெறுப்பை உருவாக்கியிருக்கிறது. தன்னையே வெறுக்க தொடங்கும் அவர் நோயின் ஆரம்பக் கட்டத்தில் தன் உருவத்தைக் கண்ணாடியில் பார்க்கும்போதெல்லாம் பார்க்கச் சகிக்காமல் திட்டிக்கொள்வார். காலப்போக்கில் அவரது பிம்பமே அவருக்கு பிடிக்காத, அதேசமயம் அதீத ஆர்வம் கொண்ட பேய், பிசாசு போன்ற உருவங்களாக தோன்றியிருக்கலாம்.

உன்னைப் போல் ஒருவன்!

விஷுவல் ஹாலுசினேஷனில் நிறைய உட்பிரிவுகள் இருக்கின்றன. என்னிடம் வந்த ஒரு குடிநோயாளி படுக்கையில் எழுந்து அமர்ந்து அவருக்கு பக்கத்தில் ஒரு நாற்காலியை போட்டுக்கொள்வார். நாற்காலியுடன் தனியாகப் பேசுவார். ஒருகட்டத்தில் கடும் விவாதம் நடக்கும். பின்பு காற்றுடன் சண்டையிடுவார். அதாவது, அவரே அங்கு இரு நபர்களாக உருவெடுக்கிறார். நம் கண்ணுக்கு எதுவும் தெரியாது. ஆனால், அவரது கண்ணுக்கு அவரைப் போலவே உண்மையான நபர் தெரிவார். “நீ செய்வது எல்லாம் சரியா?” என்றரீதியில் அவரைப் போன்ற எதிராளி அவரிடம் பேச ஆரம்பித்துக் கடுமையாக வாக்குவாதம் புரிவார். சில நேரங்களில் இருவரும் பாசமழை பொழிவார்கள். அழுவார்கள், சிரிப்பார்கள். இப்படி ஒருவர் இருவராக உருவகமாவதை ‘ஆட்டோஸ்கோபி’ (Autoscopy) என்போம்.

இதுமட்டுமல்ல, தென் மாவட்டத்திலிருந்து சிகிச்சைக்கு வந்த ஓர் இளைஞர் அடிக்கடி தன் முன்பாகத் தோன்றும் காளை மாட்டுடன் சண்டையிட்டுக்கொண்டிருப்பார். ஜல்லிக்கட்டு வீரர் அவர். சிலருக்கு சிங்கம், புலி நேரில் வந்து பயமுறுத்தும். சிலருக்கு அவர்களுக்குப் பிடிக்காத நபர்கள், எதிரிகள் வந்து திட்டுவார்கள்; சண்டையிடுவார்கள். சிலருக்கு அவர்களுக்குப் பிடித்தமான கடவுள் தோன்றுவார். சிலருக்கு இவ்வாறான உருவங்களாக இல்லாமல் விதவிதமான ஒளிகள், கசாமுசாவென பிம்பங்கள் என்று வந்து பார்வையை மறைக்கும். சிலருக்கு வாகனம் ஓட்டும்போது, நடந்து செல்லும்போது இதுபோன்ற மாயத்தோற்றங்கள் கண்ணில் ஏற்பட்டு மயங்கிச் சரிவார்கள்.

பார்வையைப் பறிக்கும் மது!

தொடர்ந்த அதீத மதுப்பழக்கத்தால் மூளை - கண் பார்வை நரம்புகள் கடுமையாகச் சேதம் அடைவதே இதற்குக் காரணம். இவை மட்டுமில்லாமல் குடிப் பழக்கத்துக்கும் கண் பார்வைக் கோளாறுகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. இதனால்தான் கள்ளச்சாராயம் போன்ற எரிசாராய வகையறாக்களை சாப்பிடும் நபர்களுக்கு அடுத்த சில நிமிடங்களிலேயே பார்வை பறிபோகிறது. நிறையப் பேர் நினைப்பதுபோல் மதுப்பழக்கம் கல்லீரல், குடல், மூளையை மட்டும் பாதிப்பதில்லை. கண் பார்வையையும் நாளுக்கு நாள் மங்கச் செய்கிறது” என்றார்.
(தெளிவோம்)

-டி.எல். சஞ்சீவிகுமார்,
தொடர்புக்கு: sanjeevikumar.tl@thehindutamil.co.in


நன்றி: தமிழ் இந்து நாளிதழ்
24-11-2014

இதே போன்று முஸ்லிம்களிலும் ஒரு சில புரோகிதர்கள் நாகூர், ஏர்வாடி போன்ற தர்ஹாக்களில் மன நோயாளிகளை பேய் ஓட்டுகிறேன் என்று சொல்லி பணத்தை கறக்கும் பல நிகழ்வுகள் நடந்து வருகின்றன. இதனை இஸ்லாமியர்கள் கண்டித்து அந்த நபர்களை மனநல மருத்துவ மனையிவ் அனுமதிக்க ஆவண செய்ய வேண்டும். ஏனெனில் குர்ஆனும் நபி மொழிகளும் பேய் பிசாசுக்கு வாய்ப்பே இல்லை என்று கூறுகிறது. நாம் வாழும் உலகில் இறந்த மற்றவர்களின் ஆன்மா வாழும் ஒருவரின் ஆன்மாவில் புகுந்து கொள்ள சாத்தியமே இல்லை என்று தெளிவாக சொல்லி விடுகிறது. அறிவியலும் இதனையே மெய்ப்படுத்துகிறது. இதைக் கருத்தில் கொண்டு மூட புரோகிதர்களை இனம் கண்டு அவர்களை சமூகத்திலிருந்து ஒதுக்க முயற்சிப்போமாக!

அலைகடலென குழுமி விட்டார்!







எத்தனை எத்தனை அவதூறுகள்

அத்தனையும் தாண்டி இன்று

அரங்கத்துக்கும் வெளியே மக்கள்

அலைகடலென குழுமி விட்டார்.

எல்லா புகழும் அந்த படைத்த

ஒருவனுக்கே என்றும் உரித்தாகட்டும்!

இடம் : கோவை PVG மஹால் இனிய மார்க்கம் நிகழ்ச்சியில்
உரை :PJ
நாள் :23:11:2014

போங்கப்பூ.... போய் உங்க உங்க வேலையை பாருங்கப்பூ.....



'ஆடு மாடு மயிலு குயிலு இப்படி ஒன்னையும் விடாம கடவுளா முன்னாடி கும்பிட்டுக்கிட்டு இருந்தேன். அப்போ கூட இவ்வளவு டென்ஷனானது இல்ல..... அதெல்லாம் தப்புன்னு வெளங்கி ஏக இறைவனை இப்போ வணங்கிகிட்டு இருக்கேன். நானும் மனுஷந்தான் சில தவறுகள் நானும் பண்ணியிருக்கேன். அதற்கு இறைவனிடம் மன்னிப்பும் கேட்டுக்கிறேன். அதற்காக ஏம்பா என்னை இந்த கும்மு கும்முறீங்க....

நான் நேத்து இஸ்லாத்துக்கு வந்தவன்பா... பல பரம்பரையாக இஸ்லாத்துல இருக்கிறேன்னு வெத்து பெருமை பேசிக்கிட்டு திரியுற பல பதிவர்கள் 100 சதவீதம் இஸ்லாமியராக வாழுறீங்களாப்பா... அப்போ நான் மட்டும் 100 சதவீதம் உடன் மாறணும் என்று ஏம்பா வம்புக்கு வரிறீங்க....

போங்கப்பூ.... போய் உங்க உங்க வேலையை பாருங்கப்பூ.....

----------------------------------------------

இந்துவாக இருக்கட்டும் அல்லது முஸ்லிமாக இருக்கட்டும் அல்லது நாத்திகரகாவும் இருக்கட்டும். யாராக இருந்தாலும் ஒருவர் தவறு செய்தால் அதனை நளினமாக அவருக்கு எடுத்துக் கூறி அவரை நல் வழியின் பக்கம் கொண்டு வர முயற்சியுங்கள். அதைத்தான் இஸ்லாமும் விரும்புகிறது.

ஏமன் பிரதேசத்துக்கு தஃவாப் பணிக்காக முஆத் இப்னு ஜபல் (ரழி), அபூ மூஸா அல் அஷ்அரி (ரழி) ஆகிய இருவரையும் அனுப்பிய வேளையில் நபி (ஸல்) அவர்கள் இதனை ஞாபகமூட்டினார்கள். 'இலகுபடுத்துங்கள், சிரமப்படுத்தாதீர்கள்: ஆசையூட்டுங்கள், வெறுப்பூட்டாதீர்கள்.' (புகாரி, முஸ்லிம்)

அல்குர்ஆனும் இக்கருத்தை ஆங்காங்கே குறிப்பிட்டிருப்பதைக் காணலாம்.

'அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவையும் அதன் சக்திக்கு மேல் நிர்ப்பந்திப்பதில்லை.' (பகரா 286)

'அல்லாஹ் உங்களுக்கு இலகுவாக்க விரும்புகிறானே தவிர, கஷ்டத்தைக் கொடுக்க விரும்பவில்லை.' (பகரா 185)

'நபியே! நீர் மனிதர்களை நளினமாகவும், அழகான நல்லுபதேசத்தைக் கொண்டுமே உம் இறைவனின்பால் அழைப்பீராக! அன்றி, அவர்களுடன் தர்க்கிக்க நேரிட்டால் நீர் கண்ணியமான அழகான முறையில் தர்க்கஞ் செய்வீராக!'' (16:125)

மலைகளின் உயரம்: பூமியின் ஆழம் - குர்ஆன் பேசுகிறது



மலைகளின் உயரத்தை அடையவே முடியாது!

'பூமியில் கர்வத்துடன் நடக்காதே! நீ பூமியைப் பிளந்து, மலைகளின் உயரத்தின் அளவை அடையவே முடியாது.'

17 : 37 - குர்ஆன்


பூமியில் மனிதன் தான் என்ற அகங்காரத்துடன் நடக்கக் கூடாது என்று அறிவுரை சொல்ல வந்த இறைவன் அதற்கு ஒரு உதாரணத்தையும் கூறி விளக்குகிறான். நீ என்னதான் அறிவில் முதிர்ச்சி அடைந்தாலும். நீ வாழும் பூமியில் ஒரு குறிப்பிட்ட தூரத்துக்கு மேல் உன்னால் செல்ல முடியாது. இதுதான் உனது ஆற்றல். விண்வெளிக்கு நீ செல்ல முடியும். ஆனால் நீ வாழும் பூமியில் சில மைல் தூரத்துக்கு மேல் உன்னால் செல்ல முடியாது. இவ்வளவு தான் உனது ஆற்றல் என்கிறது குர்ஆன். அது பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

மனிதனின் அறிவு வளர்ச்சிக்கு ஒரு எல்லையே இல்லாமல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ராக்கெட் தொழில் நுட்பத்தால் பூமிக்கு அப்பாலும் மனிதனின் அறிவு விரிகிறது. இன்னும் ஒரு இருபது வருடங்களில் ஏற்படப் போகும் மாற்றங்களை இப்பொழுதே நம்மால் கணித்து விட முடிகிறது. ஆனால் சில விஷயங்களில் உன்னால் முடியாது என்று இறைவன் சவால் விட்டு சில விபரங்களை குர்ஆனில் ஆங்காங்கே கோடிட்டு காட்டுகிறான். அது போன்ற சவால் விடும் வசனங்களில் ஒன்று தான் நாம் மேலே பார்த்தது.

மனிதன் இன்று வரை பூமியின் கீழ் துளையிட்டு அதிக தூரம் செல்ல முடியவில்லை. அதிகபட்சமாக அவன் சென்ற தூரம் மூன்று கிலோ மீட்டர் மட்டுமே! இதற்கு மேலும் துளையிட்டு செல்ல முடியாது. சாத்தியமில்லை என்று விஞ்ஞானிகள் கைவிரித்துவிட்டனர்.


பூமியின் குறுக்களவு 12,756 கி.மீ. ஆகும். அதாவது பூமியின் ஒரு முனையிலிருந்து அதன் எதிர் முனை வரையுள்ள தூரம் (விட்டம்) 12,756 கி.மீ. ஆகும். இதில் மனிதன் சென்றடைந்துள்ள தூரம் 3.3 கி.மீ. மட்டுமே. தென் ஆப்பிரிக்காவில் உள்ள உலகின் மிக ஆழமான சுரங்கம் எனப்படும் டிரான்ஸ் வால் பாக்ஸ்பர்க் என்ற இடத்திலுள்ள சுரங்கத்தின் ஆழம் இது தான். உண்மையில் இது கூடச் சரியான அளவு என்று சொல்ல முடியாது. ஏனெனில் இந்தப் பகுதி கடல் மட்டத்திலிருந்து 1600 மீட்டர் உயரத்தில் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து அளவிட்டால் இந்தச் சுரங்கத்தின் ஆழம் 1700 மீட்டர் மட்டுமே! அதாவது 2 கி.மீ. கூட பூமியின் ஆழத்தில் மனிதன் செல்லவில்லை. உலகின் மிக உயரமான இமய மலையின் உயரம் 9 கி.மீ. ஆகும். இந்த 9 கி.மீ. ஆழத்திற்கு, அதாவது மலையின் உயரம் அளவுக்குப் பூமியில் மனிதன் செல்ல முடியாது என்பதை விஞ்ஞானிகள் ஒப்புக் கொள்கிறார்கள்.

தற்போது வரை புவியை மனிதனால் 8 கி.மீ ஆழத்திற்கு மேல் தோண்ட இயலவில்லை. காரணம் பூமிக்கு அடியில் போகப்போக வெப்பநிலை அதிகரித்துக்கொண்டே போவதால்தான். சராசரியாக புவியை அதன் மேற்பரப்பிலிருந்து 100 அடி ஆழம் தோண்டினால் வெப்பநிலை ஒரு டிகிரி சென்டிகிரேட் வரை அதிகரிக்கும். புவியின் மேற்பரப்பிலிருந்து நான்கு கி.மீ ஆழம் உள்ளே போனால் அங்கே வெப்பநிலை சுமார் 100 டிகிரி சென்டிகிரேட் இருக்கிறது. இது தண்ணீர் கொதிக்கும் வெப்பநிலை. இதுவே முப்பது கி.மீ உள்ளே போனால் அங்கே வெப்பநிலை 1200 டிகிரி சென்டிகிரேட் இருக்கிறது. இது பறைகளே உருகும் வெப்பநிலை. புவியின் மேற்பரப்பிலிருந்து சராசரியாக 4 கி.மீ ஆழம் வரை தான் மனிதனால் புவிக்குள் செல்ல இயலும் சராசரியாக 50 கி.மீ ஆழத்திற்க்கு கீழே புவி திடநிலையில் இருக்காது, திரவ நிலையில் (Liquid) தான் இருக்கும். சில இடங்களில் புவிக்குள் அழுத்தம் அதிகரித்து அந்த குழம்புகள் புவியை துளைத்துக்கொண்டு வெளியே வருவதைத்தான் நாம் எரிமலை (Volcano) என்று அழைக்கிறோம்.

பூமியின் ஆழத்திற்கு மனிதனால் செல்ல முடியாமை தொடர்பாக கடந்த 10.11.2014 அன்று தமிழ்நாட்டின் பிரபல செய்திச் சேவையான புதிய தலைமுறை தொலைக் காட்சியில் ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது. குறித்த நிகழ்ச்சியில் சொல்லப்பட்ட செய்திகளை இனி பார்போம்.

மனிதன் நிலவில் காலடி எடுத்து வைத்த பின் சூரியக் குடும்பத்தைத் தாண்டி பல கோடி மைல் தொலைவுக்கு வின்வெளியில் பயணம் செய்திருக்கின்றான். செவ்வாய் கிரகத்திலிருந்து பாறைகளை எடுத்து வந்து ஆய்வு செய்வதே தமது அடுத்த இலக்கு என்று அதை நோக்கி மனிதன் முன்னேறிக் கொண்டிருக்கின்றான். ஆனால் பூமியின் ஆலத்திற்கு செல்வதில் மனிதன் இதுவரை வெற்றி பெறவில்லை. விண்ணில் பல கோடி மைல் தொலைவுக்கு பரந்த மனிதன் பூமிக்குள் இது வரை சென்ற தூரம் வெரும் 2.2 கி.மீ மாத்திரம் தான். பூமியின் மேற்பரப்பை மாத்திரமே மனிதன் இதுவரைக்கும் சுரண்டிக் கொண்டிருக்கின்றான். பூமியின் மேல் அடுக்கைத் தாண்டி பூமியில் இரும்புகள் நிறைந்த “மூடக மையப் பகுதியான” “மேண்டில்” (Mantle) என்ற பகுதிக்கு செல்வதற்கு மனிதனால் இன்னும் இயலவில்லை. பூமியின் ஆழத்தைப் பற்றிய அனைத்து ஆய்வுகளும், உத்தேசமானவையாகவோ, அல்லது கணிப்புகளாகவோ மாத்திரம் தான் இதுவரைக்கும் இருந்து வருகின்றன. ஆனால் விஞ்ஞானிகள் பூமியைத் தோண்டி ஆய்வு செய்வதற்கு முயற்சிக்காமலும் இல்லை.


பூமியின் ஆழத்தை ஆய்வு செய்வதற்காக 1961 ம் ஆண்டு மோஹோல் (MOHOLE) என்ற திட்டத்தை அமெரிக்கா கொண்டு வந்தது. பசுபிக் பெருங் கடலில் ஆரம்பிக்கப்பட்ட தோண்டும் பணி 601 அடி ஆழம் வரைத் தான் நடைபெற்றது. அதன் பின்னால் இது போன்ற திட்டம் சாத்தியம் இல்லையென்று கைவிடப்பட்டது. இந்த ஆய்வை “ஐவோடிட்பி” என்ற ஆழ்கடல் துளையிடும் அமைப்பு தற்போது கையிலெடுத்துள்ளது. அமெரிக்கா, ஜப்பான், சீனா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் நிதியுதவியுடன் செயல்படும் இந்த அமைப்பு பூமியை துளையிடும் பணிக்காக சுமார் 6000 ம் கோடி (இந்திய) ரூபாய்களை ஒதுக்கியுள்ளது. பசுபிக் பெருங்கடலில் துளையிடுவதற்கான 03 இடங்களும் தேர்வு செய்யப்பட்டு விட்டன. சுமார் 30 செ.மீ விட்டத்தில் 10 கி.மீ வரை துளையிடுவதற்கான கருவிகளும் தயார் செய்யப்பட்டு வருகின்றன. பூமியின் 68 சதவீதமான நிறைக்குக் காரணமாக இருக்கும் “மேண்டில்” பகுதியில் இருந்து மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்வதின் மூலம் பூமியில் உயிர்கள் உருவான ரகசியத்திற்கு விடை கிடைக்கும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். ஆனால் தோண்டுவதற்கான இந்த முயற்ச்சியும் 2020 ம் ஆண்டுக்கு முன்னர் சாத்தியமில்லை.

நன்றி : புதிய தலைமுறை இரவுச் செய்திகள் – சர்வதேசம் (10.11.2014)

பெரியார் தாசனின் அழகிய கருத்துக்கள்!



ஒரு கருத்தை உண்மையாக இருந்தாலும் அதனை எவ்வளவு மென்மையாக சொல்ல வேண்டும் என்பது நேற்று இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பெரியார் தாசனுக்கு தெரிகிறது. காலா காலமாக இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்த பல முஸ்லிம்களுக்கு இன்னும் தெரியாதிருக்கிறது. வருத்தப்பட வேண்டிய விஷயம். ஆர்வ கோளாறால் பல இஸ்லாமியர்கள் தங்களின் பின்னூட்டங்களில் ஆபாச வார்த்தைகளால் மற்றவர்களை ஏசுவது தற்போது இணையத்தில் அதிகமாயுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் தங்களை திருத்திக் கொள்வார்களாக!

Saturday, November 22, 2014

ஏ ஆர் ரஹ்மானின் சூஃபி இசைக் கச்சேரி துபாயில்!



வரும் டிசம்பர் 18 அன்று துபாயில் ஏ ஆர் ரஹ்மானின் சூஃபி இசைக் கச்சேரி நடைபெறவுள்ளது. பாகிஸ்தான் பாடகர் ராஹத் ஃபதே அலி கான், சுனித் சௌஹானும் கலந்து கொள்கின்றனர். இந்திய பாகிஸ்தான் கலைஞர்கள் இணைந்து கலந்து கொள்ளும் நிகழ்ச்சி. இசையின் அடிப்படையில் சிறப்பாக இருக்கும் என்று நம்பலாம். ஆனால் இந்த இசையின் மூலமெல்லாம் இறைவனை அடைய முடியாது. தவறான நம்பிக்கையில் ஏ ஆர் ரஹ்மானும், ஃபதே அலி கானும் இருக்கிறார்கள். இறைவனும், நபிகளும் காட்டித் தராத எந்த வழி முறையும் நம்மை இறைவனுக்கருகில் கொண்டு செல்லாது. ஏ ஆர் ரஹ்மானின் முந்தய இசைக் கச்சேரிகளில் பெண்களை அரை குறை உடைகளை வலிந்து திணித்து ஆட விடுவதைப் பார்த்தோம்.. இசைக்கும் ஆடை குறைப்புக்கு என்ன சம்பந்தமோ தெரியவில்லை. எனவே இஸ்லாம் இசைக்கு எந்த அளவு முக்கியத்துவம் கொடுக்கிறதோ அதன் அளவை மீறாது இருப்போமாக! ஏ ஆர் ரஹ்மானும் தர்ஹாக்கள், இசை போன்ற போலிகளை விடுத்து உண்மையான ஆன்மீகத்தின் பக்கம் தனது கவனத்தைத் திருப்புவாராக!

195, 295, 395, 495, 750, 1000 திர்ஹம்கள் என்று டிக்கெட்டுகள் நவம்பர் 20லிருந்து விநியோகிக்கப்படுமாம். கஷ்டப்பட்டு உழைத்த காசை டிக்கெட் எடுத்து வீணாக்காமல் ஊருக்கு அனுப்பி விடுங்கள். ஆர்வமுள்ளவர்கள் ஒரு வாரம் கழித்து யுட்யூபில் இந்த நிகழ்ச்சியை பார்த்துக் கொள்ளலாம். :-)

ராஹத் ஃபதே அலி கானின் எனக்கு பிடித்த ஒரு பாடல்.

கழுவற மீனில் நழுவுற மீன் - அப்பாஸ் அலி



போன மாதம் நான் தபூக் சென்றிருந்த போது தற்போது தவ்ஹீத் ஜமாத்தை எதிர்ப்பவர்களால் பிரபலப்படுத்தப்பட்டிருக்கும் முன்னால் தவ்ஹீத் ஜமாத் தாயி சகோ அப்பாஸ் அலி அவர்களோடும் சகோ சங்கை அப்துல் அஜீஸ் அவர்களோடும் ஒரு நாள் முழுக்க சுற்றுப் பயணம் செய்யும் வாய்ப்பு கிட்டியது. இறைத் தூதர் சாலிஹ் நபியை பின்பற்றி வாழ்ந்து பின்னர் இறைவனால் தண்டனை கொடுக்கப்பட்டு அழிக்கப்பட்ட ஊரான மதாயீன் சாலிஹ் என்ற நகருக்கு சென்றோம். சகோ அப்பாஸ் அலியோடும் சகோ அப்துல் அஜீஸோடும் ஒரு நாள் முழுக்க அந்த வரலாற்று சிறப்பு மிக்க இடங்களை சுற்றிப் பார்க்க இறைவன் வாய்ப்பை வழங்கினான். தபூக்கில் வேலை முடிந்து ரியாத் வந்து ஒரு சில நாட்களில் இணையத்தில் சகோ அப்பாஸ் அலியின் கொள்கை மாற்றம் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். ஒரு மனிதன் இரண்டொரு நாளில் இந்த அளவு மாற்றங்களை பெற முடியுமா என்று ஆச்சரியப்பட்டேன்.

'குர்ஆனுக்கு எந்த ஹதீஸ்களும் முரண்படாது: அவ்வாறு முரண்படுகிறது என்று சொல்பவர்கள் அறியாமையில் இருக்கின்றனர்' என்று கூறி தவ்ஹீத் ஜமாத்தை விட்டு வெளியேறி இன்று பல ஊர்களில் (அறந்தாங்கி உட்பட) பேசி வருகிறார்.

குர்ஆன் மட்டும் போதுமா? என்ற தலைப்பில் சகோதரர் பிஜே அவர்கள் எழுதிய இந்த கட்டுரையை மேலதிக விபரத்திற்காக படித்துப் பாருங்கள்.

http://www.onlinepj.com/books/quran_natum_pothuma/#.VG8Me2f4bct

தவ்ஹீத் ஜமாத் நபிகள் நாயகம் அவர்களின் ஹதீஸ்களுக்கு எந்த அளவு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதை இந்த கட்டுரையைப் படித்து விளங்கிக் கொள்ளலாம்.

https://www.facebook.com/video.php?v=888967654455583

https://www.facebook.com/video.php?v=888977997787882

https://www.facebook.com/video.php?v=888985471120468

https://www.facebook.com/video.php?v=889832521035763

தனது நிலையில் எந்த அளவு தடுமாற்றத்தில் சகோ அப்பாஸ் அலி உள்ளார் என்பதில் இந்த மூன்று காணெளிகளையும் பார்த்து நாம் தெளிவடைந்து கொள்ளலாம். கழுவுற மீனில் நழுவுற மீன் என்று சொல்வார்களே அது இந்த காணொளிகளைப் பார்த்தால் தெரிந்து கொள்ளலாம். 'நபிகள் நாயகம் அவர்கள் பெயரால் சொல்லப்பட்டு வரும் எந்த ஆதாரபூர்வமான நபி மொழிகளும் குர்ஆனுக்கு முரண்படவே செய்யாது என்று நான் எங்குமே பேசவில்லை' என்றும் சொல்கிறார். ஆனால் எனது நிலைப்பாட்டை பிறகு அறிவிப்பேன் என்கிறார். ரொம்பவும் குழம்பியிருக்கிறார். மக்களையும் குழப்புகிறார்.

குர்ஆனுக்கு பல ஹதீஸ்கள் முரண்டுகிறது என்பது தனது ஆய்வில் இருக்கிறது என்பது உண்மையானால் அப்பாஸ் அலி அவர்கள் தவ்ஹீத் ஜமாத்தை விட்டு வெளியேற வேண்டிய அவசியமே இல்லை. ஏனெனில் உலக முடிவு நாள் வரையில் இந்த ஆய்வுகள் நடந்து கொண்டுதான் இருக்கும். தவ்ஹீத் ஜமாத்தில் இது போன்று மேலும் பல ஆய்வுகள் தினமும் நடந்துதான் வருகிறது. முன்பு எடுத்த முடிவுகளை வீம்புக்காக மறுக்காமல் ஆய்வுகளுக்குப் பிறகு மாற்றிக் கொண்டும் இருக்கிறார்கள். எனவே தவ்ஹீத் ஜமாத்தை விட்டு வெளியேறுவதற்கு ஏதாவது ஒரு காரணம் சொல்ல வேண்டும் என்ற ரீதியில் தான் இவரது நிலைப்பாடு இருந்துள்ளது என்பதனை இந்த மூன்று காணொளிகளைக் காண்பவர்களும் தெரிந்து கொள்ளலாம்.

தவ்ஹீத் ஜமாத்தில் இருந்தால் அதிக வருமானம் கிடைக்காது. அதே எதிர் தரப்பில் இருந்தால் சகட்டு மேனிக்கு பணம் வந்து கொண்டிருக்கும். தமிழகம் எங்கும் பிரபலமாகலாம். தவ்ஹீத் ஜமாத்தை எதிர்ப்பவர்கள் அனைவரும் இனி அப்பாஸ் அலியை தூக்கி வைத்து கொண்டாடலாம். இன்னும் வெளியில் சொல்லாத வேறு பல காரணங்களும் இருக்கலாம். இது தான் அப்பாஸ் அலி இன்று தவ்ஹீத் ஜமாத்தை விட்டு வெளியேறியதற்கான காரணமே யொழிய கொள்கை மாறுபாடு அல்ல என்பதை நாம் விளங்கிக் கொள்ளலாம். ஏனெனில் எந்த கொள்கையையும் எந்த இடத்திலும் விவாதிக்க தவ்ஹீத் ஜமாத் மறுத்ததே கிடையாது.

கடந்த இருபத்தைந்து வருடங்களாக நாம் பார்த்து வருவது என்ன? அபு அப்துல்லாஹ் இந்த ஜமாத்தை விமரிசித்தார்: அதன்பிறகு ஜவாஹிருல்லாஹ், பிறகு ஹைதர் அலி, அடுத்து முக்காடு சம்சுதீன் காசிமி, பிறகு எஸ் எம் பாக்கர், அதன் பிறகு அலீம் புகாரி தற்போது அப்பாஸ் அலி என்று வரிசையாக வருகிறார்கள். ஒவ்வொருவரும் ஒரு ஆறு மாதத்துக்கு தவ்ஹீத் ஜமாத்தின் எதிர் தரப்பினரால் கொண்டாடப்படுவார்கள். அவர்களின் வீடியோக்களை முடிந்த வரை ஷேர் பண்ணுவார்கள். தவ்ஹீத் ஜமாத்தின் வீரியத்தை முடிந்த வரை குறைக்க முயற்சிப்பார்கள். ஆனால் சில காலம் கழித்து உண்மைகள் வெளி வரும். பழையபடி தவ்ஹீத் ஜமாத்தின் உண்மை நிலை மக்களுக்கு தெரிய வரும். பழையபடி எதிர்த்தவர்கள் மக்களால் ஓரங்கட்டப்படுவார்கள். இறைவன் இது போன்ற விவாதங்களுக்குப் பிறகு தான் தவ்ஹீத் ஜமாத்தின் மேன்மையை மேலும் மேலும் மேலோங்கச் செய்கிறான். இன்றுள்ள தாயிக்களின் இறப்புக்கு பின்னாலும் இந்த ஜமாத் தொடர்ந்து தனது பணிகளை செய்து வரும். அது உலக முடிவு நாள் வரை இறைவன் உதவியால் தொடரும்.

பெங்காளியும், பிலிப்பைனியும் ஒரு அரபியும்!



பங்களா தேசத்து நாட்டவர் எப்பவுமே முன் கோபம் அதிகம் உள்ளவர்கள். எடுத்ததற்கெல்லாம் அடிதடியில் இறங்கி விடுவர். துபாயில் ஒரு கடையில் இந்த பெங்காளி ஒரு பிலிப்பைன் டெக்னீஷியனிடம் ஒரு டிவிடியை ரிப்பேருக்காக தருகிறார். மறுநாள் வந்து வாங்கிக் கொள்ளும்படி அந்த பிலிப்பைனி சொல்கிறான். அதன்படி மறுநாள் வருகிறார். அந்த கடையின் முதலாளியும் கடையில் இருக்கிறார்.

பெங்காளி: எனது டிவிடி வேலை முடிந்ததா?

அரபி: என்ன வேணும்?

பெங்காளி: நேற்று ரிப்பேர் பண்ண வேண்டி எனது டிவிடியை கொடுத்தேன். அதைத்தான் கேட்கிறேன்.

அரபி: அந்த பிலிப்பைனி உன்னைத் தெரியாது என்கிறானே? எப்படி உனக்கு டிவிடியை தருவது?

பெங்காளி: (பிலிப்பைனியை பார்த்து) ஏய் என்னைத் தெரியாது?

பிலிப்பைனி: ஊஹூம்..... உன்னை நான் பார்த்ததே இல்லை.

பெங்காளி: அந்த பிலிப்பைனி மிருகம்.... பொய் சொல்கிறான். (வேகமாக கத்துகிறார்)

அந்த அரபி ஒரு சிறிய ரிமோட்டை எடுத்து கொடுத்து 'இந்தா இதை வைத்துக் கொள்' என்று பெங்காளியின் சட்டைப் பையில் திணிக்கிறார். கோபத்தோடு வீசி எறிகிறான் அந்த பெங்காளி. அரபியை நோக்கி....

'உனக்கு என்ன பைத்தியமா? நான் கொடுத்தது பெரிய டிவிடி' கைகளால் காண்பிக்கிறார்.

அரபி: டிவிடி எவ்வளவு பெறும்?

பெங்காளி: 2000 திர்ஹம்

அரபி: 2000 திர்ஹம் ஒரு டிவிடியா... இந்த கடையில் உள்ள மொத்த சாமான்களும் 2000 திர்ஹம்தான் வரும்.

பெங்காளி: எனது டிவிடியை திரும்ப கொடுக்கிறாயா இல்லையா?

அரபி: இல்லை.... இந்த கடையில் உனது டிவிடி இல்லை.

பெங்காளி: ஹபீபி...(அன்பிற்குரியவரே)! நான் நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த உழைத்த காசில் வாங்கியது அந்த டிவிடி... தயவு செய்து கொடுத்து விடு...

அரபி: அதெல்லாம் எனக்கு தெரியாது... உன்னை தெரியாது என்கிறான் இந்த பிலிப்பைனி..

பெங்காளி: நான் போலீஸூக்கு போகட்டுமா?

அரபி: ஏய் உனக்கு இந்த ஆளை தெரியுமா?

பிலிப்பைனி: நான் இந்த ஆளை பார்த்ததே இல்லை.

பெங்காளி: அவன் ஒரு மிருகம்...ஊ..... ஆ...... (வேகமாக சத்தம் போட்டு மேசையை ஓங்கி அடிக்கிறார்) என்னை தெரியாது?

பிலிப்பைனி: MAD... பைத்தியம்... MAD..... பைத்தியம்.....

பெங்காளி: நானா பைத்தியம்.... உன்னை விட மாட்டேன்டா... (என்று சொல்லி பிலிப்பைனியை அடிக்க ஓடுகிறார். அரபி இருவரையும் தடுக்கிறார். பெங்காளி கோபத்தின் உச்சத்தில் இருக்கிறார்.)

அரபி: 2000 திர்ஹம் டிவிடிக்காக உயிரையே விட்டு விடுவாயா? பொறுமை... அமைதியாய் இரு.

அந்த பெங்காளியை அன்பாக பிடித்து கடையை சுற்றிக் காண்பிக்கிறார்.

பெங்காளி: என்னோடு என்ன விளையாடுகிறாயா?

அரபி: ஆம்... அதோ பார் கேமரா... இது கேண்டிட் கேமரா ஹாஸ்ய நிகழ்ச்சி. விளையாட்டுக்காக செய்தோம்.

பெங்காளிக்கு இப்போதுதான் உண்மை புரிந்தது. தன்னை மையமாக வைத்து நகைச்சுவை நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர் என்பதை புரிந்து கொண்டு தனது டிவிடியை வாங்கிக் கொண்டு வெளியேறுகிறார்.




Friday, November 21, 2014

இப்படியே போனால் வருங்கால இந்தியா எப்படி இருக்கும்?



நான் கடவுள்!

திண்டுக்கல் சுற்றுவட்டாரங்களில் மதுவுக்கு இணையாகத் தாராளமாகக் கிடைக்கிறது கஞ்சா. முள்ளிப்பாடி, மூணாண்டிப்பட்டி, வத்தலக்குண்டு, வடமதுரை ஆகிய இடங்களில் கணிசமான அளவு கல்லூரி மாணவர்களுக்கு இந்தப் பழக்கம் ஏற்பட்டிருப்பது கவலைக்குரியது. டாக்டர் ஷர்மிளா சொல்லும் விஷயங்கள் அதிர்ச்சிகரமானவை. “ஒட்டன்சத்திரம் அருகே விழுப்பாச்சி அருவியில் ஒரு கோயில் இருக்கிறது. காட்டுப் பகுதியான அங்கு நிறைய சாமியார்கள் உலவுகின்றனர். அவர்களிடையே கஞ்சா சர்வ சாதாரணமாகப் புழங்குகிறது. திண்டுக்கல்லில் ஒருசாரார் ஆன்மிகத்தையும் போதையையும் போட்டுக் குழப்பிக்கொண்டு இதற்கு அடிமையாகி விடுகின்றனர். அதுபோல நிறைய கேஸ்கள் எங்களிடம் வருகின்றன.

ஒரு கல்லூரி மாணவர் ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டு ஒரு சாமியாரிடம் சென்றிருக்கிறார். தன்னை மறந்தால்தான் கடவுளைக் காண முடியும் என்று மாணவரை சாமியார் கஞ்சாவுக்குப் பழக்கியிருக்கிறார். கூடவே, மதுவும். வீட்டை விட்டுச் சென்ற அந்த மாணவரை இரண்டு மாதங்கள் கழித்துத் தேடிக் கண்டுபிடித்துள்ளனர். அவரை இங்கு அழைத்து வந்தபோது ‘நானே கடவுள்! எனக்கே சிகிச்சை அளிக்கிறீர்களா? அற்ப மானிடப் பிறவிகளா...’ என்று வசனம் பேச ஆரம்பித்துவிட்டார். சுமார் ஒரு மாதம் கடவுளை வைத்திருந்து சிகிச்சை அளித்து மனிதனாக அனுப்பி வைத்தோம்” என்று சிரித்தார்.

(தெளிவோம்)

- டி.எல். சஞ்சீவிகுமார்,

தொடர்புக்கு: sanjeevikumar.tl@thehindutamil.co.in

நன்றி: தமிழ் இந்து நாளிதழ்

21-11-2014

-----------------------------------------------------

மசாஜ் படுக்கை...எல்.சி. டிவி...நீச்சல் குளம்: சாமியார் ராம்பாலின் அம்மாடியோவ் லைப் ஸ்டைல்!

ஆஸ்ரமத்தின் உள்ளே ஒரு சிறப்பு கிளினிக்,எக்ஸ்ரே வசதிகளுடன் உள்ளது. இங்கிருந்து ஏராளமான மருந்து பொருட்கள் மற்றும் மூட்டை மூட்டையாய் உணவுப் பொருட்கள் ஆகியவை தற்போது போலீசார் கைபற்றி உள்ளனர்.

அதைவிட அதிர்ச்சியடைய வைக்கும் தகவல் என்னவெனில், ஒரு மாநிலத்திற்கு எதிராக மினி யுத்தத்தையே நடத்திடக் கூடிய அளவிற்கு குவித்து வைக்கப்பட்டிருந்த சட்டவிரோத ஆயுதக்குவியல்கள்தான்.

சுமார் 350 க்கும் அதிகமான கைதுப்பாக்கிகள், ரைஃபிள்கள், கன்கள் மற்றும் ஏராளமான தோட்டாக்கள் என அங்கு கைப்பற்றப்பட்ட ஆயுதங்களை பார்த்து திகைத்துப்போய் உள்ளனர் போலீஸார். ஒருவருக்கு துப்பாக்கி லைசென்ஸ் இருந்தால் கூட இந்த அளவுக்கு ஆயுதங்களையோ அல்லது தோட்டாக்களையோ வைத்துக்கொள்ள அனுமதி இல்லை.

நன்றி:விகடன்...