Saturday, May 05, 2012

இறைவா!...என் மாமியாரை மன்னிப்பாயா!(சிறுகதை)

இறைவா!...என் மாமியாரை மன்னிப்பாயா!(சிறுகதை)

ஓரளவு வசதியான வீடுதான். ரஹீம்: அவன் மனைவி ஆயிஷா: மற்றும் அவனது வயதான தாய் மர்யம்:. இந்த மூன்று பேரையும் சேர்த்து ஆயிஷாவின் வயிற்றில் வளரும் ஆறு மாத குழந்தை. இந்த நான்கு பேர் வசதியாக வாழ இந்த வீடு போதும்தான். ரஹீமுக்கு திருமண மாகி 6 வருடங்கள் ஆகி விட்டது. இந்த வருடம் தான் அவனது மனைவி உண்டாகி இருப்பது அவனுள் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு புறம் மகிழ்ச்சி: மறுபுறம் அவனது தாயார் ஒரு வாரம் முன்பு வாத நோயால் பாதிக்கப்பட்டு ஒரு கால் ஒரு கை விளங்காமல் போன சோகம். டாக்டரும் கையை விரித்து விட்டார். இனி படுக்கையில்தான் தனது வாழ்நாளை தனது தாயார் கழிக்க வேண்டுமாம். சிந்தனை வயப்பட்டவனாக தனது மளிகை கடையை திறக்க ரஹீம் சென்று கொண்டிருந்தான்.

ஆயிஷா தனது மாமியாருக்கு மருந்துகளை கலக்கி கொடுத்துக் கொண்டிருந்தாள். இரண்டு நாட்களாகி விட்டது. மாமியாரின் துணிகளையும் மாற்றியாக வேண்டும். தனது கணவன் வருவதற்குள் மதிய உணவையும் தயார் பண்ண வேண்டும்: என்று எண்ணியபடியே வேலைகளில் மும்முரமானாள் ஆயிஷா. 'ஆயிஷா..கொஞ்சம் இங்கே வாம்மா..' மாமியாரின் குரல் கேட்டு அடுப்பங்கரையிலிருந்து ஹாலுக்கு வந்தாள் ஆயிஷா. ஆயிஷாவின் முகத்தை பார்ப்பதற்கே வெட்கப்பட்டுக் கொண்டு தனது முகத்தை திருப்பிக் கொண்டார் மர்யம். நிலைமையை புரிந்து கொண்ட ஆயிஷா மாமியாரின் உடைகளை மாற்ற ஆயத்தமானாள். ஆம்...படுக்கையையே கழிவறையாக்கிய மாமியாரை பரிதாபமாக பார்த்துக் கொண்டே அவரை தூக்கி சுவற்றோடு சாய வைத்தாள். உடுத்திய துணிகள், விரிப்பு அனைத்தையும் ஒன்று விடாமல் எடுத்து துவைக்க போட்டாள் ஆயிஷா.. தனது மருமகள் தனக்காக செய்யும் அனைத்து வேலைகளையும் நோட்டம் விட்டுக் கொண்டே இருந்தார் மர்யம்....

வாளியில் உள்ள தண்ணீரில் டவளை நனைத்து தனது மாமியாரின் உடல் முழுக்க துடைத்து விட்டாள் ஆயிஷா. துவட்டி முடிந்தவுடன் புதிய துணிகளை எடுத்து மர்யமுக்கு அணிவிக்கும் பொழுது மரியமின் கண்களிலிருந்து கண்ணீர் பொல பொல வென்று கொட்ட ஆரம்பித்தது. அப்பொழுதுதான் இதை கவனித்த ஆயிஷா 'என்ன மாமி...ஏன் அழுகுறீங்க....உடல் ஏதும் வலிக்கிறதா?' என்று கேட்டாள்.

'இது உடல் வலி இல்லம்மா..மனசு வலி...நான் முன்பு உங்க குடும்பத்துக்கு செய்த கொடுமைகளை நினைத்து பார்த்தேன். அழுகை வந்து விட்டது'

'அட...அது எப்பவோ நடந்த கதை..அதற்கென்ன இப்போ...கவலைபடாமல் தூங்குங்க..'

'இல்லம்மா...உன் கல்யாண நேரத்துல நான் கேட்ட 20 பவுன் வரதட்சணையினால தானே உன் வீட்டை உன் அப்பா விற்கும் நிலைக்கு ஆளானது. அந்த கவலையிலேயே உன் அப்பாவும் ஒரு வருடம் முன்பு இறக்கவில்லையா....அதற்கெல்லாம் காரணம் நான்தானேம்மா'

'அப்படீன்னு நான் நினைக்கல்ல மாமி...இறைவன் என் அப்பாவை அழைக்கும் நேரத்தில் அழைத்துக் கொண்டான். நான் உங்களை குறை சொல்லவில்லை.'

'அது உன் பெருந்தன்மையை காட்டுதும்மா!...என் மகனும் வரதட்சணை வாங்காதேன்னு பல தடவை படிச்சு படிச்சு சொன்னான். இந்த பாவி மனுஷி யார் பேச்சையும் கேட்காமல் பெட்ரூம் செட், 20 பவுன் நகை, விருந்து செலவு என்று ஏகத்துக்கும் உங்க அப்பாவை கொடுமை படுத்திட்டேம்மா…..அவர் இப்போ உயிரோட இல்லே ...அதனால நான் உன்கிட்டே மன்னிப்பு கேட்டுக்கறேன் ஆயிஷா... என்னை மன்னிப்பாயா...' மர்யமின் குரல் சன்னமாகி விம்மத் தொடங்கினார்.

'என்ன மாமி! சின்ன பிள்ளை மாதிரி அழுகிறீங்க...இப்போ இருக்கிற நிலைமையிலே நீங்க டென்ஷன் ஆனா அது உங்க உடம்பை மேலும் பாதிக்கும். பேசாம தூங்குங்க..'

'எப்படிம்மா தூக்கம் வரும். இறைவன் தனக்கு செய்த பாவங்களையாவது மன்னித்து விடுவதாகவும் மனிதர்களுக்கு செய்த பாவத்தை அந்த மனிதன் மன்னிக்காத வரையில் நான் மன்னிக்க மாட்டேன் என்று இறைவன் கூறுவதை நீ படிக்கவில்லையா...எனக்கோ இறப்பு நெருங்கிக் கொண்டு வருகிறது. என் மனது அமைதியின்றி தவிக்கிறது. மன்னிக்க வேண்டிய உன் தகப்பனாரும் உயிரோடு இல்லை...நான் என்ன செய்வேன் இறைவா...நான் என்ன செய்வேன் இறைவா...' என்று முனகிக் கொண்டே மர்யம் தூங்கிப் போனார்.

தனது மாமியாரை பரிதாபத்தோடு பார்க்கத் தொடங்கினாள் ஆயிஷா..பழைய நினைவுகள் எல்லாம் கண் முன் நிழலாடியது...திருமணத்தில் தனது மாமியார் ஆடிய ஆட்டமும், தனது தகப்பனாரிடம் திருமண நாளன்று பேசிய தொகைக்கு அதிகமாகவே வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தியதும் வேறு வழி இன்றி வட்டிக்கு பணத்தை வாங்கி திருமணத்தை முடித்ததும் ஒரு கணம் நினைத்துப் பார்த்தாள் ஆயிஷா. வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாமல் இருந்த வீட்டையும் விற்று வாடகை வீட்டில் சில காலம் வசித்து வந்ததையும் சொந்த வீடு போன ஏக்கத்தில் சில நாட்களுக்குப் பிறகு மாரடைப்பு வந்து இறந்த செய்தியும் ஞாபகத்துக்கு வரவே ஆயிஷாவின் கண்களிலிருந்து கண்ணீர் உருண்டு வழிந்தோடி தரையை தொட்டது…..
எனது மாமியார் ஏன் இப்படி நடந்து கொண்டார்? இவர்களிடம் சொத்து இல்லையா? சாப்பாட்டுக்கு சிரமப்பட்டவர்களா? எதுவும் இல்லை. இறைவன் கொடுத்த வசதியான வீடு. தினமும் பல ஆயிரங்களை கொட்டிக் கொடுக்கும் மளிகைக்கடை. ஒரே ஆண் வாரிசு. பரம்பரை சொத்து: இவ்வளவு இருந்தும் பாழாய்ப் போன இந்த வரதட்சணையை அவசியம் கேட்டுத்தான் இருக்க வேண்டுமா! அதுவும் கல்யாண நேரத்தில் ஈவு இரக்கமின்றி அப்படி பேசி எனது தகப்பனாரிடம் இருந்து அந்த பணத்தை வாங்கத்தான் வேண்டுமா...இன்று அந்த பணம் எங்கே! கழிவறைக்கு போகக் கூட முடியாமல் தினம் செத்து பிழைக்கிறார்களே! இவர்கள்' படும் கஷ்டம் என் மாமியார் சொன்னது போல் எனது தகப்பனாரின் வயிறெரிந்து கேட்ட பிரார்த்தனைகளோ. அப்படி இருந்தால் இறைவா! தற்போது எனது மாமியார் தவறை உணர்ந்து விட்டார். என் பொருட்டும் என் தகப்பனாரின் பொருட்டும் எனது மாமியாரை பிழை பொறுத்தருள்வாயாக! என்று மனதுக்குள் கூறிக் கொண்டு மதிய தொழுகைக்காக கை கால்களை கழுவ பாத்ரூமுக்குள் சென்றாள் ஆயிஷா...

29 comments:

  1. //எனது மாமியார் ஏன் இப்படி நடந்து கொண்டார்? இவர்களிடம் சொத்து இல்லையா? சாப்பாட்டுக்கு சிரமப்பட்டவர்களா? எதுவும் இல்லை. இறைவன் கொடுத்த வசதியான வீடு. தினமும் பல ஆயிரங்களை கொட்டிக் கொடுக்கும் மளிகைக்கடை. ஒரே ஆண் வாரிசு. பரம்பரை சொத்து: இவ்வளவு இருந்தும் பாழாய்ப் போன இந்த வரதட்சணையை அவசியம் கேட்டுத்தான் இருக்க வேண்டுமா! அதுவும் கல்யாண நேரத்தில் ஈவு இரக்கமின்றி அப்படி பேசி எனது தகப்பனாரிடம் இருந்து அந்த பணத்தை வாங்கத்தான் வேண்டுமா.//

    மாஷா அல்லாஹ் ..!! அனைவரும் யோசிகக வேண்டிய கேள்வி :-(

    ReplyDelete
  2. சலாம்! சகோ ஜெய்லானி!


    //மாஷா அல்லாஹ் ..!! அனைவரும் யோசிகக வேண்டிய கேள்வி :-(//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  3. மாஷா அல்லாஹ்,

    நல்ல பதிவு பாய்..எக்காரணத்தை கொண்டும் பெண் வீட்டாரிடம் இருந்து வாங்குவதை இஸ்லாம் தடை செய்கின்றது. இன்று பலவேறு திருமணங்கள் இஸ்லாம் காட்டிய வழிப்படி நடப்பது நிறைவை தருகின்றது.

    அல்ஹம்துலில்லாஹ்

    வஸ்ஸலாம்..

    ReplyDelete
  4. சலாம் சகோ ஆஷிக்!

    //நல்ல பதிவு பாய்..எக்காரணத்தை கொண்டும் பெண் வீட்டாரிடம் இருந்து வாங்குவதை இஸ்லாம் தடை செய்கின்றது. இன்று பலவேறு திருமணங்கள் இஸ்லாம் காட்டிய வழிப்படி நடப்பது நிறைவை தருகின்றது.//

    எதற்குமே தாய் தகப்பனின் வார்த்தையை மீறாத இளைஞர்கள் இன்று வரதட்சணைக்கு எதிராக பெற்றோரையே எதிர்த்து நிற்கும் பல காட்சிகளை சமீப காலமாக தமிழகத்தில் பார்த்து வருகிறோம். இது கடந்த 20 வருடங்களாக அதிகரித்து வருகிறது. உங்கள் திருமணமும் இறைத் தூதர் காட்டிய வழியில் நடக்க நானும் பிரார்த்திக்ககிறேன்.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  5. ஸலாம் சகோ சுவனப்பிரியன்..

    மாஷா அல்லாஹ். அருமையான கதை... சொல்லவருவதை எளிதாகக் கொண்டுசேர்க்க கதை ஒரு சிறந்த களம்..

    எழுத்து நடை அருமை..

    அன்புடன்
    ரஜின்

    ReplyDelete
  6. சலாம் சகோ ரஜின்!

    //மாஷா அல்லாஹ். அருமையான கதை... சொல்லவருவதை எளிதாகக் கொண்டுசேர்க்க கதை ஒரு சிறந்த களம்..

    எழுத்து நடை அருமை..//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  7. அழகான கதை.. ரொம்ப நல்லாருக்கு.. வரதட்சணை பேய் எப்போதுதான் ஒழியுமோ.. தெரியல.

    ReplyDelete
  8. சகோ ஸ்டார்ஜான்!

    //அழகான கதை.. ரொம்ப நல்லாருக்கு.. வரதட்சணை பேய் எப்போதுதான் ஒழியுமோ.. தெரியல.//

    இந்து முஸலிம் கிறித்தவம் என்று எந்த மதத்தையும் விட்டு வைக்காது பீடித்திருக்கும் கொடூரமான வழக்கம் இந்த வரதட்சணை. ஊர் பெரியவர்கள் முன்னிலையில் அரங்கேறும் இந்த கேவலத்தை எப்பாடுபட்டாவது தடுக்க வேண்டும்.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  9. நல்ல கதை, வரதட்சனை பின் குடும்பம் எவ்வளவு பதிக்கபடுகிறது. வாங்கியவர் உணர்வது சொல்லியவிதம் அருமை, நாளைய மாமியாரக வராவிருக்கும் பெண்கள் உணர்ந்தால் நல்லது.

    ReplyDelete
  10. சுவனப்பிரியரே !!!!

    வரதட்சணையா ??? அன்பளிப்பா ????

    மணமகன் வீட்டார் கேட்டு வாங்கினால் தான் வரதட்சணை ......

    விரும்பி கொடுத்தால் வரதச்சனை இல்லை .. அன்பளிப்பு அன்பளிப்பு அன்பளிப்பு தான் !!!

    தந்தை தன் மகளுக்கு தாராளமாக அன்பளிப்பு கொடுக்கலாம் ...

    நபியே தன் மகளுக்கு அன்பளிப்பு தரும் போது ...

    அதை தடுக்க நீங்கள் யார் ???

    நபிகள் நாயகம் மகளுக்கு சீதனம் கொடுத்தார்களா ??? ஆம் .....

    நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது மகள் ஃபாத்திமாவை திருமணம் முடித்துக் கொடுத்த போது ஒரு கனமான போர்வை, (தண்ணீர் பிடித்து வைத்துக் கொள்ளும்) ஒரு தோல் துருத்தி, இத்கிர் என்ற புல் சருகு அடைக்கப்பட்ட ஒரு தலையனை ஆகியவற்றைக் கொடுத்து அனுப்பினார்கள் என்று அலி ரலி அறிவிக்கிறார்கள்.

    நஸாயீ 3331 மற்றும் இப்னுமாஜா அஹ்மத்

    பெற்ற மகளுக்கு நாமாக விரும்பி சில பொருட்களைக் கொடுக்கலாம் என்பது இதில் இருந்து தெரிகிறது.

    ஜசகல்லாஹ் க்ஹைர் .. onlinepj

    ReplyDelete
  11. சலாம் சகோ நிஜாம்!

    //நல்ல கதை, வரதட்சனை பின் குடும்பம் எவ்வளவு பதிக்கபடுகிறது. வாங்கியவர் உணர்வது சொல்லியவிதம் அருமை, நாளைய மாமியாரக வராவிருக்கும் பெண்கள் உணர்ந்தால் நல்லது.//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  12. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ
    மணமகன் வைராக்கியத்துடன் இருந்தாலே போதும் இந்த வரதட்சணையை முற்றிலுமாக அகற்றிவிடலாம்.வரதட்சணை பெரும் அளவு ஒழிந்தாலும் மஹ‌ர் கொடுத்து பெண்ணை மணமுடிக்க ஆண்கள் தயாராக இருந்தும் மஹ‌ர்தொகையை நிர்நயிக்க பெண்கள் வெட்கப்படுகின்றார்கள்.இந்த நிலையும் மாறவேண்டும்.இன்ஷா அல்லாஹ்.....
    சிறுகதை அருமை.

    ReplyDelete
  13. சகோ இஸ்லாமிய மாணவர்!

    //தந்தை தன் மகளுக்கு தாராளமாக அன்பளிப்பு கொடுக்கலாம் ...

    நபியே தன் மகளுக்கு அன்பளிப்பு தரும் போது ...

    அதை தடுக்க நீங்கள் யார் ???//

    இந்த கதையில் சொல்லப்பட்டது மர்யம் தனது சம்பந்தரிடம் அநியாயமாக வரதட்சணை கேட்டு அதை தர முடியாமல் வட்டியில் மூழ்கியதாகத்தான் சொல்லியிருக்கிறேன். வசதியில்லாத மணமகள் வீட்டை அறிந்து கொண்டும் அவர்களிடம் 'கொடுத்தாலே போச்சு...இல்லை என்றால் திருமணத்தையே நிறுத்தி விடுவோம்' என்று மிரட்டும் மாப்பிள்ளை வீட்டாரை பார்த்ததில்லையா? கௌரவமாக வாழ்ந்த பல பெண்ணின் தகப்பனார் பல பள்ளிகளிலும் ஓரமாக நின்று கூனி குறுகி பிச்சை எடுப்பதை பார்த்ததில்லையா? இறைவனின் கோபம் அளவிட முடியாதது. கல்யாண விருந்திலிருந்து சகல செலவுகளையும் பெண்ணின் தகப்பனார் தலையில் கட்டுவது நபி காட்டித் தந்த வழியா? இஸ்லாமிய மாணவர் என்று வேறு சொல்லுகிறீர்கள். இறைவனுக்கு பயந்து கொள்ளுங்கள்.

    ReplyDelete
  14. இஸ்லாமிய மாணவன்3:22 AM

    //அதை தடுக்க நீங்கள் யார் ???//

    என்ற இந்த வார்த்தை தேவை இல்லாதது தான் .. மற்ற படி ....

    ஒரு சிலர் அன்பளிப்பை வரதட்சணையாக நினைகின்றனர்..

    அதுமட்டுமிலாமல் தந்தை தன் மகளுக்கு அன்பளிப்பாக கொடுப்பதை கூட வரதட்சணை என்று எண்ணி அன்பளிப்பை மறுக்கின்றனர்.... பேணுதல் என்ற முறையில் அதை இஸ்லாத்தில் இல்லாதது போல் காட்டுகின்றனர்...


    இதனால் தான் நீங்கள் நினைக்கும் வரதட்சனையை [அன்பளிப்பை ] தடுக்க நீங்கள் யார் ??? என்று கேள்வி கேட்டேன் ..

    நான் சொல்லும் இந்த கருத்து பதிவுக்கு சம்பந்தம் இல்லாவிட்டாலும் அன்பளிப்பை கூட வரதட்சணை என்று தவறாக நினைத்து வாங்க மறுக்கிறார்களே !!!! அதை நினைத்து தான் வருத்தம் ...



    என்னுடைய ஆதங்கம் உங்களுக்கு புரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன் ...

    ஒருவருக்கு அவரது சகோதரர்களிடமிருந்து நல்ல பொருள் ஏதேனும் அவர் கேட்காமலும்,
    எதிர்பார்க்காமலும்
    கிடைக்குமேயானால்
    அதை மறுக்காமல் ஏற்றுக் கொள்ளவும்.
    ஏனெனில் அது அல்லாஹ் அவருக்கு வழங்கிய பாக்கியமாகும்
    என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
    கூறினார்கள்.

    அறிவிப்பவர்: காலித் பின் அதீ (ரலி)

    நூல்: புகாரி 1380, 6630


    நபிகள் நாயகம் மகளுக்கு சீதனம் கொடுத்தார்களா ??? ஆம் .....

    நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது மகள் ஃபாத்திமாவை திருமணம் முடித்துக் கொடுத்த போது ஒரு கனமான போர்வை, (தண்ணீர் பிடித்து வைத்துக் கொள்ளும்) ஒரு தோல் துருத்தி, இத்கிர் என்ற புல் சருகு அடைக்கப்பட்ட ஒரு தலையனை ஆகியவற்றைக் கொடுத்து அனுப்பினார்கள் என்று அலி ரலி அறிவிக்கிறார்கள்.

    நஸாயீ 3331 மற்றும் இப்னுமாஜா அஹ்மத்

    பெற்ற மகளுக்கு நாமாக விரும்பி சில பொருட்களைக் கொடுக்கலாம் என்பது இதில் இருந்து தெரிகிறது.


    வரதட்சனையை ஒழிப்போம் .. அன்பளிப்பை பெறுவோம் ...அன்பை பரிமாறுவோம் ...

    இறையச்சத்துடன் .........

    ReplyDelete
  15. சலாம் சகோ முஹம்மது ஷஃபி!

    //மணமகன் வைராக்கியத்துடன் இருந்தாலே போதும் இந்த வரதட்சணையை முற்றிலுமாக அகற்றிவிடலாம்.வரதட்சணை பெரும் அளவு ஒழிந்தாலும் மஹ‌ர் கொடுத்து பெண்ணை மணமுடிக்க ஆண்கள் தயாராக இருந்தும் மஹ‌ர்தொகையை நிர்நயிக்க பெண்கள் வெட்கப்படுகின்றார்கள்.இந்த நிலையும் மாறவேண்டும்.இன்ஷா அல்லாஹ்.....//

    உங்கள் கூற்று முற்றிலும் உண்மை. வரதட்சணை இந்த அளவு வேறூன்றுவதற்கு முக்கிய காரணம் நமது தாய்குலங்களே! பெண்கள் மனது வைத்தால் கூடிய சீக்கிரமே வரதட்சணை என்ற இந்த அரக்கனை ஒழித்து விடலாம். மஹர் கொடுத்து திருமணம் முடிக்கும் மணமகனைத்தான் நான் திருமணம் செய்து கொள்வேன் என்று ஒவ்வொரு பெண்ணும் முடிவெடுத்து விட்டால் ஆண்கள் இறங்கி வருவதைத் தவிர வேறு வழியில்லை.

    தங்களுக்கு லாபம் வருகிறது என்று தெரிந்து கொண்டு 'கல்யாண விஷயத்திலெல்லாம் நான் தலையிட மாட்டேங்க...அதெல்லாம எங்க வீட்டுக்காரங்க பார்த்துக்குவாங்க'...அல்லது 'எனது தாயார் பார்த்துக்குவாங்க..' என்று ஒதுங்குவதாலேயே பல சம்பவங்கள் திருமணத்தில் அரங்கேறுகிறது. குடும்பத்தின் நிர்வாகத்தை அதாவது வரவு செலவுகளை ஆண்கள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விட்டாலே பல குழப்பங்கள் தீர வழியுண்டு.

    ReplyDelete
  16. தம்பிக்கோட்டை நம்பிராஜன்5:59 AM

    //மஹ‌ர் கொடுத்து பெண்ணை மணமுடிக்க ஆண்கள் தயாராக இருந்தும் மஹ‌ர்தொகையை நிர்நயிக்க பெண்கள் வெட்கப்படுகின்றார்கள்.இந்த நிலையும் மாறவேண்டும்.இன்ஷா அல்லாஹ்.....//

    உங்கள் கூற்று முற்றிலும் உண்மை. வரதட்சணை இந்த அளவு வேறூன்றுவதற்கு முக்கிய காரணம் நமது தாய்குலங்களே! //

    ஆனாப் பாருங்க. அரபு நாட்டுப் பெண்களெல்லாம் கட் அண்டு ரைட்டாப் பேசி மஹர் தொகைய கறந்திடுறாங்க போல. இந்திய ஆண்கள் அவர்களை (அல்லது அவர்கள் இந்தியர்களை) விரும்பினாலும் இன்னும் எட்டாக் கனியாகவே இருக்கிறார்கள்.

    ReplyDelete
  17. சகோ.சுவனப்பிரியன்! திடிரென சுஜாதா ஆகி விட்டீங்க போல தெரியுதே!

    மதங்கள் கடந்து வரதட்சணையெல்லாம் ஒழிக்க இயலாத படியே சமூக கட்டமைப்பு இருக்கிறது.எவ்வளவோ விழிப்புணர்வு கருத்துக்களை சொல்லியும் கூட வளர்கிறதே தவிர குறைவதாக இல்லை.பணம்,பொருள் மீதான அதீத ஆசையே காரணம்.

    ReplyDelete
  18. சகோ ராஜ நடராஜன்!

    //சகோ.சுவனப்பிரியன்! திடிரென சுஜாதா ஆகி விட்டீங்க போல தெரியுதே!//

    ஹா..ஹா...சுஜாதா கதைகளை படிக்கும் காலங்களில் தொடர்கதைகள் நிறைய படித்திருக்கிறேன். கரையெல்லாம் செண்பகப்பூ, கனவுத் தொழிற்சாலை போன்ற அவரின் படைப்புகள் இன்றும் என் மனதில் நிற்கிறது.

    //மதங்கள் கடந்து வரதட்சணையெல்லாம் ஒழிக்க இயலாத படியே சமூக கட்டமைப்பு இருக்கிறது.எவ்வளவோ விழிப்புணர்வு கருத்துக்களை சொல்லியும் கூட வளர்கிறதே தவிர குறைவதாக இல்லை.பணம்,பொருள் மீதான அதீத ஆசையே காரணம்.//

    அது குறைய வேண்டும் என்பதற்காகத்தான் பாடுபட்டு வருகிறோம். ஓரளவு வெற்றியும் கிடைத்திருக்கிறது.

    ReplyDelete
  19. தம்பிக் கோட்டை நம்பிராஜன்!

    //ஆனாப் பாருங்க. அரபு நாட்டுப் பெண்களெல்லாம் கட் அண்டு ரைட்டாப் பேசி மஹர் தொகைய கறந்திடுறாங்க போல. இந்திய ஆண்கள் அவர்களை (அல்லது அவர்கள் இந்தியர்களை) விரும்பினாலும் இன்னும் எட்டாக் கனியாகவே இருக்கிறார்கள்.//

    எனக்கு தெரிந்து இரண்டு இந்தியர்கள் சவுதி பெண்களை மணந்துள்ளனர். நீங்கள் சொல்வது போல் மஹர் தொகையை முழுவதும் வாங்கிக் கொண்டு தான் திருமணமே நடக்கிறது. சவுதி ஆண்களே பெண்கள் கேட்கும் தொகையை கட்ட திண்டாடும் போது 1500, 2000 ரியால்களில் பெரும்பாலும் வேலை பார்த்து வரும் இந்தியர்கள் அவ்வளவு பணத்துக்கு எங்கு செல்வார்கள்? வெளி நாட்டவரை மணப்பதில் இருந்த சட்ட சிக்கலும் தீரப் போகிறது. இனி வெளி நாட்டவரை மணப்பது சவுதியில் அதிகரிக்கலாம்.

    ReplyDelete
  20. nalla kathai!

    nalla karu kalam!

    ReplyDelete
  21. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

    மாஷா அல்லாஹ்
    சுருக்கமாக இருந்தாலும் தெளிவான கருத்து.

    இதைப்போல் சில ஆயிஷாக்கள் பல மர்யம்களின் மனங்களை அங்காங்கே மாற்றிக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

    வரதட்சணை வாங்குவோருக்கு இந்த சிறுகதை ஒரு நல்ல படிப்பினை.

    ReplyDelete
  22. சலாம் சகோ சீனி!

    //nalla kathai!

    nalla karu kalam!//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  23. சலாம் சகோ குலாம்!

    //இதைப்போல் சில ஆயிஷாக்கள் பல மர்யம்களின் மனங்களை அங்காங்கே மாற்றிக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

    வரதட்சணை வாங்குவோருக்கு இந்த சிறுகதை ஒரு நல்ல படிப்பினை. //

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  24. பெண் வீட்டாரை இப்படி பேயாய்

    பிராண்டுவது இன்னும் நடந்து கொண்டுதான்

    இருக்கிறது ..,வீண் பெருமைக்காக ஊரை கூட்டி விருந்து வைப்பது

    ஒரு வாரத்திற்குள் ஆட வேண்டிய ஆட்டமெல்லாம்

    ஆடி விட்டு அதோடு பிள்ளைகளின் வெறுப்பையும்

    வாங்கிகொண்டு வாழ்க்கையையே நரகமாகி கொள்வதுதான்

    கல்யாண சடங்குகள் ..நல்ல படிப்பினை ஊட்டும் கதை

    ReplyDelete
  25. பெண் வீட்டாரை இப்படி பேயாய்

    பிராண்டுவது இன்னும் நடந்து கொண்டுதான்

    இருக்கிறது ..,வீண் பெருமைக்காக ஊரை கூட்டி விருந்து வைப்பது

    ஒரு வாரத்திற்குள் ஆட வேண்டிய ஆட்டமெல்லாம்

    ஆடி விட்டு அதோடு பிள்ளைகளின் வெறுப்பையும்

    வாங்கிகொண்டு வாழ்க்கையையே நரகமாகி கொள்வதுதான்

    கல்யாண சடங்குகள் ..நல்ல படிப்பினை ஊட்டும் கதை

    ReplyDelete
  26. சலாம் சகோ அதிரை சித்திக்!

    //பெண் வீட்டாரை இப்படி பேயாய்

    பிராண்டுவது இன்னும் நடந்து கொண்டுதான்

    இருக்கிறது ..,வீண் பெருமைக்காக ஊரை கூட்டி விருந்து வைப்பது //

    முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  27. Anonymous12:05 PM

    அஸ்ஸலாமு அலைக்கும்,
    எப்பொழுதும் எங்கேயும் மாமியாரையே கெட்டவராக அனைவரும் காட்டுராங்க கெட்ட மருமகள்களும் இப்ப அதிகமாகியிருறார்கள் அதை ஏன் யாரும் சொல்லமாட்ராங்க புரியவில்லை அட்லீஸ்ட் நீங்களாவது நல்ல மாமியார்களுக்கு சப்போர்ட் பண்ணி எழுதக்கூடாதா சகோதரரே எத்தனை மாமியார்கள் கொடுமைக்கார மருமகள்களால் வேதனைப் பட்டுகொண்டிருக்கிறார்கள் தெரியுமா?இப்பொழுதும் கூட உடல் உருப்புக்களை இழந்து,உயிரை இழந்து,உறவை இழந்து அனாதையாக்கப்பட்டு அதை யாராவது எழுதுங்கய்யா.

    ReplyDelete
  28. அஸ்ஸலாமு அலைக்கும்,
    எப்பொழுதும் எங்கேயும் மாமியாரையே கெட்டவராக அனைவரும் காட்டுராங்க கெட்ட மருமகள்களும் இப்ப அதிகமாகியிருறார்கள் அதை ஏன் யாரும் சொல்லமாட்ராங்க புரியவில்லை அட்லீஸ்ட் நீங்களாவது நல்ல மாமியார்களுக்கு சப்போர்ட் பண்ணி எழுதக்கூடாதா சகோதரரே எத்தனை மாமியார்கள் கொடுமைக்கார மருமகள்களால் வேதனைப் பட்டுகொண்டிருக்கிறார்கள் தெரியுமா?இப்பொழுதும் கூட உடல் உருப்புக்களை இழந்து,உயிரை இழந்து,உறவை இழந்து அனாதையாக்கப்பட்டு அதை யாராவது எழுதுங்கய்யா.

    ReplyDelete
  29. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ சுவனப்பிரியன்

    அழகாக சொல்ல வந்த விஷயத்தை நச்சென்று சொல்லி இருக்கிறிர்கள்.

    சகோ இஸ்லாமிய மாணவனுக்கு

    // வரதட்சணையா ??? அன்பளிப்பா ????

    மணமகன் வீட்டார் கேட்டு வாங்கினால் தான் வரதட்சணை ......

    விரும்பி கொடுத்தால் வரதச்சனை இல்லை .. அன்பளிப்பு அன்பளிப்பு அன்பளிப்பு தான் !!!

    தந்தை தன் மகளுக்கு தாராளமாக அன்பளிப்பு கொடுக்கலாம் ... //

    விரும்பி கொடுத்தால் அன்பளிப்பு தான். ஆனால் அதில் சில கட்டுப்பாடுகளும் உண்டு. அதாவது ஒரு மகளுக்கு தன் தந்தை 1௦௦ பவுன் நகை போடுகிறார் என்றால், அதை அந்த பெண்ணை மணக்கும் கணவர் தடை சொல்லக் கூடாது, ஏனெனில் அது அந்த பெண்ணுக்கு அவளுடைய தந்தையின் அன்பளிப்பு, அதே பெண் தனக்கு கொடுத்த 1௦௦ பவுனில் 50 பவுனை தன் தந்தைக்கோ அல்லது வேறு யாருக்கேனும் கொடுத்தால் அல்லது 100 பவுனையும் தன் தந்தைக்கோ அல்லது வேறு யாருக்கேனும் கொடுத்தால் அதை கணவரோ அல்லது கணவர் விட்டாரோ தடுக்க கூடாது. அப்படி இருந்தால் தான் அது அன்பளிப்பு. அப்படி இல்லாமல் கணவரோ அல்லது கணவர் விட்டாரோ அந்த பெண்ணுக்கு அன்பளிப்பாக கொடுத்த நகைக்காகவோ அல்லது வேறு பொருட்களுக்காவோ உரிமை கொண்டாடுவார்களேயானால் அது வரதட்சணையில் வந்து விடும். ஆக அன்பளிப்பு என்பதன் அர்த்தம் விளங்கி அனைவரும் வாழ வல்ல இறைவன் அருள் புரிவானாக. அந்த பெண் அனுமதியளிக்கும் பட்சத்தில் அந்த பெண்ணின் பொருட்களை உபயோகப்படுத்துவதில் தவறில்லை.

    நான் நகை என்பதை உதாரணத்திற்காக சொன்னேன். அது காராக இருந்தாலும், பணமாக இருந்தாலும் பெண்ணுக்கு கொடுக்கப்பட்ட ஏனைய அன்பளிப்புகளாக இருந்தாலும் இந்த சட்டம் செல்லும்.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)