13-12-2022
எங்களது அலுவலகத்துக்கு அருகில் உள்ள பள்ளிக்கு இன்று மதிய நேர (லுஹர்) தொழுகைக்கு சென்றேன். தொழுகை முடிந்து விட்டது. தாமதமாக வந்தவர்கள் தனியாக தொழ முற்பட்டார்கள். அப்போது எங்கள் பகுதியில் தினமும் குப்பைகளை அள்ளும் ஒரு தொழிலாளியை தலைவராக நிற்க வைத்து தொழுதனர். அவர் ஒரு பங்களாதேஷத்தவர். பின்னால் தொழுதவர்கள் எகிப்து, எமன், சிரியா, பாகிஸ்தான் என்று பல நாடுகளைச் சேர்ந்தவர்கள். நமது ஊரில் 'தோட்டி' என்று ஒதுக்கப்படும் ஒருவர் கோவிலுக்குள் நுழைய முடியுமா? அங்கு பிராரத்தனைக்கு தலைமை ஏற்கத்தான் முடியுமா? இப்படிப்பட்ட மிகப் பெரும் புரட்சி தினமும் சர்வ சாதாரணமாக நடைபெறுகிறது. இது எப்படி சாத்தியப் படுகிறது? பல சட்டங்கள் இயற்றியும் நமது நாட்டில் தீண்டாமை ஒழிந்தபாடில்லை. இங்கு மட்டும் எப்படி இது சாத்தியப்படுகிறது?
நபிகள் நாயகம் அவர்கள் சொன்னார்கள்
‘உலர்ந்த திராட்சை போன்ற சுருங்கிய தலையுடைய அபிசீனிய கருப்பு நிற அடிமையொருவர் உங்களுக்குத் தலைவராக ஆக்கப்பட்டாலும் அவரின் சொல்லைக் கேளுங்கள்; அவருக்குக் கீழ்ப்படியுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி)
ஒரு பொறுப்புக்குத் தலைமை தாங்குபவர் அவர் பெரிய மனிதராக இருக்க வேண்டிய அவசியமில்லை. சொல்வாக்கு, செல்வாக்கு, பணபலம், மக்கள் பலம் பெற்று விளங்கியவராக இருக்க வேண்டிய கட்டாயமும் கிடையாது. இங்கு அவருடைய தொழிலோ தோற்றமோ பார்க்கப்படவில்லை. அந்த பங்காளியின் இறை நம்பிக்கைத்தான் பார்க்கப்படுகிறது.


No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)