Followers

Saturday, September 16, 2006

பீட்டர் அல்போன்ஸீம் இஸ்லாமும்!

பீட்டர் அல்போன்ஸீம் இஸ்லாமும்!

திருமறையைப் பற்றி பேசுவதும் திருத் தூதரைப் பற்றி பேசுவதும் இறைவனை நான் புகழ்வதற்கு சமம் என்றே எண்ணுகிறேன். எனவே தான் இன்று இறைவனுடைய கருணையை நினைத்து நனறி சொல்கிறேன்.

திருக் குர்ஆனைப் பற்றி யார் தெரிந்து கொள்ள வேண்டுமோ,யார் புரிந்து கொள்ள வேண்டுமோ அவர்களுக்கான செய்திகளைத் தர இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளனர். எனக்கு ஒர சந்தேகமுண்டு. நம்முடைய மார்க்க அறிஞர்கள் தான்அதனை எனக்கு விளக்க வேண்டும். திருக் குர்ஆனை முஸ்லிம் அல்லாதவர்கள் புரிந்து கொள்ளாதது ஒரு விஷயம். அது இயற்கையும் கூட. ஆனால் முஸ்லிம்களே சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறார்களா என்று எனக்கு ஒரு சந்தேகம் இருக்கிறது. முதல் பணி திருக்குர்ஆனை நாம் உண்மையாக புரிந்து கொள்ள வேண்டும். அப்படிச் செய்தால் நமக்கு இருக்கின்ற மன சஞ்சலங்கள் சந்தேகங்கள் எல்லாம் அறுந்து போய் விடும்.

உலகத்திலே பயப்படுவதற்கு ஒன்றுமேயில்லை. புரிந்து கொண்டால் பயமில்லை. இந்த உலகிலே தவறாக புரிந்து கொள்ளப் பட்டிருக்கிற மதம் இஸ்லாம். இன்று யாரிடமும் போய்க் கேளுங்கள். இஸ்லாம் என்றால் என்ன?சாதாரணமாக இன்று என்ன நினைக்கிறார்கள்? அது தீவிரவாதிகளின் மதம்: அடிப்படை வாதிகளின் மதம். முன்னேற்றத்திற்கு விரோதமான மதம். ஜனநாயகத்துக்கு விரோதமான மதம். வாழ்க்கையிலே விஞ்ஞான வளர்ச்சி, அறிவியல் முன்னேற்றம், கல்வி இவற்றுக்கு எல்லாம் விரோதமான மதம் பெண்ணடிமைத் தனத்தை சாஸ்வாதமாக தனக்குள் எடுத்துக் கொண்டுள்ள மதம் - இப்படித்தானே இஸ்லாமை நிறைய பேர் புரிந்து கொண்டிருக்கிறோம்.இஸ்லாமை நாம் சரியாக புரிந்து கொண்டிருந்தால் நமக்கு அந்த பயம் இருந்திருக்காது. நாம் தைரியமாக சொல்ல முடியும் இது உண்மையிலேயே இறைவன் அருளிய மதம் என்ற யாரும் சொல்ல முடியும்.

நம் நாட்டிற்கு மிகப் பெரிய தேவை என்னவென்றால் நாம் ஒவ்வொருவரும் நாம் சார்ந்திருக்கின்ற மதங்களின் ஆழமான தத்துவங்களைப் புரிந்து கொள்ள வேண்டும்.இதில் ஒருவர் மட்டும் புரிந்து கொண்டால் போதாது. நான் மட்டும் திருக் குர்ஆனைப் புரிந்து கொண்டால் போதுமா? நீங்கள் பைபிளையும் புரிந்து கொள்ள வேண்டும். பகவத் கீதையையும்் புரிந்து கொள்ள வேண்டும்.

நான் திருக் குர்ஆனைப் படிக்கின்ற போது எனக்கு பைபிளைப் படிக்கும் தோற்றமே வரும். பெயர்களை மட்டும் அல்ல வாசகங்களையும் சொல்லுகிறேன். இயேசு நாதர் உபவாசத்தை முடித்து விட்டு வரும் போது சாத்தான் அவரை சொதனைக்கு உட் படுத்துவான். விவிலியம் படித்தோருக்கு தெரியும். ஒர பெரிய மலை உச்சிக்குப் போய் அவரை நிறுத்தி, 'பார்: இது முழுவதையும் பார்.நிலப் பரப்புகளைப் பார். அங்கு இருக்கும் சுரங்கங்கள், வளங்கள், நிலங்கள், பழங்கள் எல்லாம் உனக்குத் தான் நீ என்ன செய்ய வேண்டும்? நீ என் காலில் விழுந்து வணங்க வேண்டும். அப்பொழுது ஏசு நாதர் சொல்வார் 'உலகமெல்லாம் எனக்கு கொடுத்தால் கூட இறைவனுடைய கால்களைத் தவிர வேறு கால்களை நான் வணங்க மாட்டேன்' என்று சொல்வார். அதே தான் முகமது நபிக்கும் நடக்கிறது. அவரைப் பார்த்து சொல்லுகிறார்கள் 'உங்களுக்கு பணம் வேண்டுமா? எத்தனைக் கோடி வேண்டுமானாலும் தருகிறோம். நீங்கள் ராஜாவாக முடி சூட்டிக் கொள்ள விரும்ர்கிறீர்களா? ராஜாவாகவே முடி சூட்டி வைக்கிறோம். ஆனால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்? இந்த ஏக இறைவனை மறுக்க வேண்டும்.'

முகமது நபி என்ன பதில் சொல்கிறார்? மிக அற்புதமாக சொல்கிறார். 'ஒரு கையில் சந்திரனையும், இன்னொரு கையில் சூரியனையும் கொடுத்து இதை நீர் செய்ய சொன்னால் கூட என் உயிருக்கு பொறுப்பானவன் மீது ஆணையாக் சொல்கிறேன். இந்தப் பணியில் நான் வெற்றி பெறுவேன்.இல்லையேல் வீர மரணம் அடைவேன்.'

இயேசு நாதர் நபிகள் நாயகம் இரண்டு பேர்வாழ்க்கையிலும் ஒரேமாதிரி சம்பவம் தானே நடந்துள்ளது.சிலர் திருக்குர்ஆனைப் படித்து விடுவதோடு அதைப் புரிந்து கொண்டதாக நினைத்துக் கொள்கிறார்கள். அங்கு தான் தவறு ஆரம்பிக்கிறது என்று நினைக்கிறேன்.

நபிகள் மிக அருமையாகச் சொல்கிறார். 'நான் இரண்டை உங்களிடம் விட்டு விட்டுச் செல்கிறேன் ஒன்று திருக்குர்ஆன் இரண்டு என்னுடைய வாழ்க்கை.

நபியுடைய வாழ்க்கை என்பது குர்ஆனைப் புரிந்து கொள்வதற்கான வழி. அது மொழி என்றால் இது அகராதி.

குர்ஆனின் ஒவ்வொரு வாசகத்தையும் நபிகளுடைய வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.எங்கெல்லாம் நமக்கு சந்தேகம் வருகிறதோ, இது அப்படி இருக்குமோ இப்படி இருக்குமோ என எப்பொழுதெல்லாம் தடுமாற்றம் வருகிறதோ அப்பொழுதெல்லாம் நபிகளுடைய வாழ்க்கையோடு அதை நாம் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். அப்பொழுதுதான் அதனுடைய உண்மையான கருத்து நமக்குத் தெரியும்.

திருக்குர்ஆன் இறைவனுடைய நூல் என்ற நான் மழுமையாக நம்புகிறேன். இறைவன் தான் இதனை அருளியிருக்க முடியும் என்பதை நான் ஏதோ மேடைப் பேச்சுக்காக ஒப்புக்காக சொல்லவில்லை. நான் இதை உள்ளபடியே நம்புகிறேன். ஏன்? நபியவர்கள் நல்லவர்கள். கருணையுள்ளவர்கள், தயாள குணமுள்ளவரே ஒழிய அவருக்கு எழுதப் படிக்கத் தெரியாது.

குர்ஆன் ஒரு கடல் போல..... அதில் இல்லாத பொருளே கிடையாது. மெரீனா கடற்கரையில் நின்று கொண்டு நான் கடலையும் வானையும் அளந்து விட்டேன் என்று சொல்வது எவ்வாறு அறியாமையோ அது போல குர்ஆனுடைய அகலத்தையும் அளவையும் இன்னும் அளந்து முடிக்கவில்லை. அதில் சொல்லாத விஷயங்கள் என்ன இருக்கின்றன? ஒரு தாய் தன் பிள்ளைக்கு எத்தனை ஆண்டுகள் பாலூட்ட வேண்டும் என்றும் அதில் சொல்லப் பட்டுள்ளது. சூரியன், சந்திரன், கோள்கள், நட்சத்திரம், அனைத்தைப் பற்றியும் உலகிலுள்ள அரசாங்கங்கள் கடை பிடிக்க வேண்டிய தர்மங்கள் பற்றியும் தனி மனித வாழ்க்கையில் கடை பிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள் பற்றியும் கல்வி - அறிவியலைப் பற்றியும் இப்படி சகல செய்திகளையும் படிக்காத ஒருவர் எப்படி சொல்ல முடியும்? ஆகவே அவருக்கு எப்பொழுதோ யாரோ ஒருவர் அருளியிருக்க வேண்டும். அருளியவர் யார்? அருளியவன் இறைவன் என்பதில் நமக்கு எவ்வித சந்தேகமும் இல்லை. அவர் எழுதப் படிக்கத் தெரியாதவர் என்பது உனக்கு எப்படி தெரியும் என்று சிலர் கேட்கலாம்?

எதிரிகளுக்கும் நபிகளாருக்கும் இடையே உடன் படிக்கை ஏற்படுகிறது. உடன்படிக்கை யாருக்கும் யாருக்கும் என்று கேட்ட பொழுது 'ரசூலுல்லாஹ்' அதாவது இறைவனின் தூதருக்கும் எதிர்த் தரப்பினருக்கும் என்று எழுதுகிறார்கள். உடனே எதிரிகள் ஆட்சேபிக்கிறார்கள். உங்களை இறைத் தூதர் என்று நாங்கள் ஒப்புக் கொள்ளவில்லை. ஆகவே 'இறைவனின் தூதர்' எனும் வார்த்தையை நீக்கும் படிச் சொல்கிறார்கள். உடன் படிக்கையில் ரசூலுல்லாஹ் எனும் வார்த்தை எங்கே இருக்கிறது என்று கேட்டுத் தெரிந்து கொண்டு நபிகளாரே தம் கைப்பட அதை அழித்து விட்டு 'முஹம்மது என்றே போடுங்கள்' என்று கூறினார்.

அதே போல் எகிப்தில் உள்ள அரசருக்கு இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுமாறு கடிதம் எழுதுகிறார் அதிலும் கூட கையெழுத்து இல்லை. முத்திரை தான் பதித்திருந்தார்கள்.அக்கடிதம் இன்று கூட உள்ளது.


எழுதப் படிக்கத் தெரியாத பள்ளிக் கூடம் போகாத ஒருவருக்கு ஈரேழு உலகத்தில் உள்ள அற்புதங்கள், அதிசயங்கள், உலக வரலாறு, அரசியல் சாணக்கியம், இவை அத்தனையும் ஒரு புத்தகத்தில் வருகிறது என்றால் அது இறைவனால் அருளப்பட்ட புத்தகமாகவே இருக்க முடியும்.அதில் மூன்றே விஷயங்கள் தான் முக்கியமானவை. The most simple pure religion இஸ்லாம் தான். அதில் பெரிய ஆசார சடங்குகள் எதுவும் இல்லை.

யாரெல்லாம் ஒரே இறைவனை ஏற்றுக் கொள்கிறார்களோ, அவனுக்கு இணை கற்ப்பிக்காமல் வணங்குகிறார்களோ, மறுமையை நம்புகிறார்களோ அவர்கள் எல்லோரும் இஸ்லாமியர்கள்.

அரபு மொழியில் சொல்வதை தமிழில் சொல்லுங்கள். எதிர்ப்பெ இருக்காது. 'பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் னிர்ரஹீம்' என்று நீங்கள் சொன்னால் அரபி அறியாதோர், இவர் ஆதோ நம்மை திட்டுகிறார் என்று நினைப்பார். 'அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய இறைவனின் திருப் பெயரால்' என்று சொன்னால் யாருக்குஇங்கே கோபம் வரப் போகிறது?

கம்ப்யூட்டர் என்ற விஷேஷமான கருவி இன்று உலகின் முகவரியையே மாற்றி வைத்திருக்கிறது. இன்று இண்டர் நெட், இ மெயில் பல்லாயிரக் கணக்கான மைல்களுக்கு அப்பால் இருந்து வந்துநமது வீட்டுக் கதவைத் தட்டுகிறது.

இதில் நாம் செய்ய வேண்டியது என்ன? நம்முன் மிகப் பெரிய கேள்விக் குறி உள்ளது.

மதம் தேவையா?

மதம் தேவையெனில் எந்த மதம்?

மதம் தேவையா என்ற கேள்விக்கு நாம் வாழும் காலத்திலேயே பதிலைப் பார்த்து விட்டோம். எழுபது ஆண்டுகள் மதமே இல்லாமல் இருந்த ரஷ்யாவும் சினாவுமம் இன்று என்ன ஆனது? அவர்களால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. ஆன்மீக வாசல்களைத் திறந்து விட்டிருக்கிறார்கள்.

ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் ஓரினச் சேர்க்கை இன்று சர்வ சாதாரணமாகி விட்டது. டெல்லியிலும்Gay community உருவாகி விட்டது. ஓரினச் சேர்க்கை ஒப்பந்தங்களை சட்டப் பூர்வமாக்கக் கோரி நீதி மன்றங்களில் வழக்குகள் உள்ளன. இது தற்போது நமது தலை நகரிலும் வந்து விட்டது. கடந்த ஒரு வார காலமாக டைம்ஸ் ஆப் இந்தியா, இந்தஸ்தான் டைம்ஸ், இந்த போன்ற பிரபல நாளிதழ்களில் கூட இது சரிதானே என்று தோற்றமளிப்பது போன்ற கட்டுரைகள் வருவதைப் பார்க்கிறோம்.

ஆன்மீகம்,இறை நம்பிக்கை, இறையச்சம் இல்லை என்றால் இதுவரை நாம் ஏற்றுக் கொண்டிருக்கின்ற மனித உறவுக்கான நிறுவனங்கள் - திருமணம், குடும்பம், குழந்தை, தாய், தநதை, மகள், மகன், சகொதரி இது போன்ற உறவுகளெல்லாம் அழிந்து விடக் கூடிய அபாயம் இருக்கிறது. முதியவர்களுக்கு மரியாதை, நல்லெழுக்கம், மதிப்பிடுகள் இவை எல்லாம் தகர்ந்து போகும் இறையச்சம் இல்லை எனில்.

எப்படிப்பட்டமதம் தேவை?

நமக்கு சாந்தியும் சமாதானமும் தருகின்ற மதம் தேவை. இந்தியாவைப் போன்ற நாடுகளிலே பல்வேறு கலாச்சார அமைப்புகளைச் சார்ந்தவர்கள் எப்படி சமாதானமாக வாழ்வது என்று கற்றுத் தருகின்ற மதம்தான் நமக்கு வேண்டும்.

நம்மை பிரிக்கின்றவற்றை மதமாக ஏற்றுக் கொள்ள முடியாது.

இந்த உரை கல்லை வைத்துப் பார்த்தால் இஸ்லாம் இதற்கு நூற்றுக்கு நூறு பொருந்தும்.

நபிகள் ஒரு போதும் சொன்னதில்லை, எல்லோரும் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று! இன்னும் சொல்கிறார்,'இஸ்லாத்தை நிர்பந்திக்காதீர்கள்!' திருக்குர்ஆனை யார் மேலும் நிர்பந்திக்காதீர்கள்.

அது மட்டும் அல்ல இதர மதத்தைச் சார்ந்தவர்களைப் பழிக்காதீர்கள். மற்ற மதக் கருத்துக்களை விமர்சனத்திற்கு உள்ளாக்காதீர்கள். இதர மத சகோதரர்களை அன்போடு எற்றுக் கொள்ளுங்கள். இது நபிகளின் வாக்கு.

நபிகளின் வழியைப் புறக்கணித்து விட்டு வெறும் தாடியும், தொப்பியும் மட்டும் வைத்துக் கொண்டால் மட்டும் இஸ்லாமியர்கள் ஆகி விட முடியாது. இப்படிச் சொல்வதற்காக யாரும் கோபப் படக் கூடாது.

நபிகள் வாழ்ந்து காண்பித்தார். மதினாவில் வாழ்ந்த யூதர்களுக்கு முகமது நபி பாதுகாப்பு தருகிறார். இப்படி ஒவ்வொரு கட்டத்திலும் நபிகள் வாழ்ந்து காட்டினார்கள்.

நபிகளார் காலத்தில் உயர்குலத்தைச் சேர்ந்த ஒரு பெண் திருடி விட்டாள். குற்றம் நிரூபிக்கப் படுகிறது. நபிகளிடம் சிலர் வந்து அப் பெண்ணை தண்டிக்கக் கூடாது எனப் பரிந்துரைக்கின்றனர்.

'என் மகள் பாத்திமா இதைச் செய்திருந்தாலும் அவள் கையை வெட்டியிருப்பேன்' என்று நபிகள் கூறினார்கள். இங்கே தான் இந்த நூற்றாண்டுக்கு நபிகள் எப்படி பொருந்துகிறார் என்று பார்க்க வேண்டும்.

நபிகளார் இறக்கும் போது அவர் ஆட்சி செய்த சமஸ்தானம் பெரிய சமஸ்தானம். அரபு நாடு முழுவதும் அவரைத் தட்டிக் கேட்க ஆளே இல்லை. அவர் குரலை எதிர்த்துப் பேச ஆளில்லை. திருத்தூதரின் வார்த்தைதான் சட்டம். அவரின் வாழ்க்கைதான் ஏற்றுக் கொள்ளப்பட்ட அரசியல் சாசனமாக இருந்தது. அந்த கடைசி நாட்களிலே ஈச்சம் பாயிலே படுத்திருந்தார். கிழிந்த அங்கியைப் போட்டிருந்தார். நாளையோ நாளை மறுநாளோ மரணம். அப்பொழுது பக்கத்தில் இருப்பவரிடம் கேட்கிறார் 'நான் யாருக்காவது கடன் கொடுக்க வேண்டி இருக்கிறதா?'. பக்கத்திலிருப்பவர் சொவ்கிறார் 'ஒருவருக்கு மூன்று திர்ஹம் கொடுக்க வேண்டியுள்ளது.' அதற்கு முகமது நபி, 'உடனே அவரைக் கூப்பிட்டுக் கொடுத்து விடு. நான் நானை இறைவன் முன் கடனாளியாக நிற்க விரும்பவில்லை'.

இதுதான் நண்பர்களே திருக்குர்ஆனுடைய முழுச் செய்தி.

நாம் ஒவ்வொருவரும் கடன் வாங்கி இருக்கிறோம்.வசதியானவர்கள், படித்தவர்கள், திறமைகளைப் பெற்றவர்கள், நல்ல குடும்பங்களைப் பெற்றவர்கள், நிம்மதியாக வாழ்கிறவர்கள், பசியில்லாமல் வாழ்கிறவர்கள், தேவைக்கு உடுத்துகின்றவர்கள், அத்தனையும் நாம் இறைவனிடம் வாங்கிய கடன். இந்தக் கடனை நாம் திருப்பிக் கொடுக்கவில்லை என்று சொன்னால் இறைவன் முன் கடனாளியாகத் தான் நிற்போம்.

போர்க் கைதிகள் வந்து நிறுத்தப் பட்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில் நபிகளாரின் அருமை மகள் பாத்திமா வருகிறார். உழைத்துக் காய்த்த தன் கைகளைக் காண்பிக்கிறார். நபிகளிடம், ' என் தந்தையே கைதிகளில் ஒருவரை என் வேலையாளாக அனுப்புங்கள்' என்று கேட்கிறார்.

நபிகள் கூறுகிறார், 'போரில் தந்தையை, தலைவனை இழந்தவர்கள் இருக்கிறார்கள். அவர்களது வீட்டுக்குத்தான் இந்தக் கைதிகளை அனுப்புவேன். உன்னை இறைவன் பார்த்துக் கொள்வான்'

கடின உழைப்பு. இரக்கம், மனித நேயம், சமத்துவம்- இதுதான் இறைவன் தரும் செய்தி!

அரேபிய சமூகம் தமது சமூகத்தை விட நான்கைந்து மடங்கு பூர்ஷ்வா குணம் கொண்ட சமூகம்! கருப்பன், அடிமை என்று பேதம் காட்டிய சமூகத்தில் பிலாலைக் கொண்டு வந்து 'பாங்கு' சொல்ல வைக்கிறார் நபிகளார்.

அதுதான் முதல் இட ஒதுக்கீடு! அப்படித்தான் நாம் அதைப் பார்க்க வேண்டும்.

நாம் எப்படிப் பட்ட சமூக அமைப்பை அமைத்துக் கொள்ள வேண்டும்? அந்த அமைப்பில் ஒடுக்கப் பட்ட மக்களுக்கு, தாழ்த்தப் பட்டவர்களுக்கு, நலிந்தவர்களுக்கு முதலிடம் கொடுக்க வேண்டும் எனபதை நபிகள் நாயகம் செயல்படுத்திக் காட்டியிருக்கிறார்.

இதுதான் இந்த நூற்றாண்டிற்க்குப் பொருத்தமானது.

நான் மன நிறைவோடு விடை பெற ஆசைப் படுகிறேன். திருக்குர்ஆனுடைய செய்திகளைச் சொல்லும் போது திரு நபியின் வாழ்க்கையையும் நீங்கள் சேர்த்தே சொல்ல வேண்டும் என்பது மிக மக்கியம்.

ஓர் அற்புதமான வாக்கியம் உள்ளது.

'நான் கேட்டேன் -மறந்து விட்டேன்
நான் பார்த்தேன் - ஞாபகத்தில் வைத்திருந்தேன்
நான் செய்து பார்த்தேன் - புரிந்து கொண்டேன்'

I heard – I forgotten
I saw – I remember
I did it – I understood it

ஆகவே நபியின் வாழ்க்கைச் சம்பவங்களைச் சொல்லும் போதுதான் திருக் குர்ஆனின் செய்திகள் மனதில் பதியும்.

குர்ஆனைப் புரிய வைப்பது பிரச்சாரம் செய்வது எப்படி என்றால் குர்ஆனைப் பேசுவதாலோ கருத்தரங்கம் நடத்துவதாலோ அல்ல.

குர்ஆனைப் போல் வாழ்வதால் மட்டுமே அந்த குர்ஆனைப் பிரபலப் படுத்த முடியும்.

குர்ஆனின் படி வாழ்ந்து காட்டுங்கள் எனக் கூறி விடை பெறுகிறேன்.

- சென்னை சூளைமேடு பகுதியில் 'ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த்' சார்பாக நடைபெற்ற 'குர்ஆன் அறிமுக விழாவில்' காங்கிரஸ் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ஆற்றிய உரை.

10 comments:

suvanappiriyan said...

அசலமோன்!

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Unknown said...

//குர்ஆனைப் போல் வாழ்வதால் மட்டுமே அந்த குர்ஆனைப் பிரபலப் படுத்த முடியும்.
குர்ஆனின் படி வாழ்ந்து காட்டுங்கள்//
இஸ்லாமிய சமூகத்துக்குத் தேவையான சீரிய கருத்துக்கள்.
மற்றவர்கள் நம் நடத்தையைப் பார்த்து, இவர்களை இப்படி நடத்துவது எது என்று தெரிந்து கொள்ள முற்பட வேண்டும். இதுதான் இந்தியாவில் முதலில் கால் பதித்த முஸ்லீம்கள் செய்தது.
எல்லோருக்கும் நேர்வழி இன்னதென்று புரிய வைக்க என்றும் உயிரோடுள்ள இறைவன் போதுமானவன்.
பதிவுக்கு நன்றி.

Anonymous said...

இறைவனுக்கே புகழ் அனைத்தும்.

மனதில் உற்சாகத்தையும் செயல்களில் உறுதியையும் தரும் விதத்தில் சகோதரர் பீட்டர் அல்போன்ஸின் அறிவுரையை அறியத் தந்த சகோதரர் சுவனப்பிரியனுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

நேர் வழியில் பயணம் செய்ய விழைவோர்க்கு வழிகாட்டியாகவும் உற்சாகத்தையும் ஏற்படுத்தும் உங்களின் செய்தி.

இறைவழியில் உங்கள் செயல்பாட்டை தொடருங்கள். இறைவன் உங்களுக்கு துணையிருப்பான்.

அன்புடன்
இறை நேசன்

suvanappiriyan said...

அசலமோன்!

மாற்று மதத்தவரான பீட்டர் அல்போன்ஸின் பேச்சை கேட்டு ஆச்சரியப் பட்டு எழுதியிருக்கிறீர்'கள். பரம்பரை முஸ்லிம்கள் என்று பீற்றிக் கொள்ளும் நம்மில் எத்தனை பேரிடம் குர்ஆனின் மொழி பெயர்ப்பு இருக்கிறது. இறைவன் குர்ஆனில் நம்மோடு எதை பேசுகிறான் என்று எத்தனை பேர் ஆராய்கிறோம். கேடு கெட்ட சினிமாவிலும: சீரியல்களிலும் தாய், தகப்பன்,மகள்,மகன் என்று எந்த வித்தியாசமும் இல்லாமல் ஒன்றாக அமர்ந்து பல மணி நேரம் பார்க்க நேரமிருக்கிறது. ஆனால் குர்ஆனை திறப்பதற்கு நமக்கு நேரம் இல்லை. பீட்டர் சொல்வது போல் தாடியும், தொப்பியும் வைத்துக் கொள்வதால் மட்டும் முஸ்லிமாகி விட முடியாது. குர்ஆனின் கட்டளையின் படி முடிந்தவரை நாம் வாழ முயற்ச்சிக்க வேண்டும். அப்படி நம் சமுதாயம் மாற நானும், நீங்களும், நம்மைப் போன்ற நண்பர்களும் அயராது பாடு பட வேண்டும்.

suvanappiriyan said...

Irai Nesan!

உங்களின் ஆக்கங்களும் நன்றாகவும் சிந்திக்கத்தக்கதாகவும் உள்ளது. நேரமின்மையால் பலரது பதிவுகளை படிப்பதோடு சென்று விடுகிறேன். நேரம் கிடைக்கும் போது உங்கள் பதிவுகளுக்கும் வந்து பின்னூட்டமிடுகிறேன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

suvanappiriyan said...

//இவர்களை இப்படி நடத்துவது எது என்று தெரிந்து கொள்ள முற்பட வேண்டும். இதுதான் இந்தியாவில் முதலில் கால் பதித்த முஸ்லீம்கள் செய்தது.
எல்லோருக்கும் நேர்வழி இன்னதென்று புரிய வைக்க என்றும் உயிரோடுள்ள இறைவன் போதுமானவன். //

Thanks for your comments Mr Sultan

இறையடியான் said...

அஸ்ஸாமு அலைக்கும்,

எல்லாப் புகழும் இறைவணுக்கே

மிகச் சிறந்த பதிவு. இறைவன் தங்களுக்கு அனைத்து நற்பாக்கியங்களும் தருவானாக

suvanappiriyan said...

//எல்லாப் புகழும் இறைவணுக்கே

மிகச் சிறந்த பதிவு. இறைவன் தங்களுக்கு அனைத்து நற்பாக்கியங்களும் தருவானாக //

Thanks for your comments Mr Irai Adiyan.

Dr.Anburaj said...

பிற்றா் அல்போன்ஸ் ஒரு கிறிஸ்தவா்.கிறிஸ்தவா்களின் நலனை ஆதிக்கத்தை காக்கவே இவா் அரசியலில் இருக்கின்றாா்.
அவரது கருத்துக்கள்
01.அது தீவிரவாதிகளின் மதம்: அடிப்படை வாதிகளின் மதம். முன்னேற்றத்திற்கு விரோதமான மதம். ஜனநாயகத்துக்கு விரோதமான மதம். வாழ்க்கையிலே விஞ்ஞான வளர்ச்சி, அறிவியல் முன்னேற்றம், கல்வி இவற்றுக்கு எல்லாம் விரோதமான மதம் பெண்ணடிமைத் தனத்தை சாஸ்வாதமாக தனக்குள் எடுத்துக் கொண்டுள்ள மதம் - இப்படித்தானே இஸ்லாமை நிறைய பேர் புரிந்து கொண்டிருக்கிறோம்.

உண்மை அதுதான். எனவே உண்மையை உலக மக்கள் புரிந்து கொண்டுள்ளாா்கள்.குதிரையை குதிரை என்று சொல்வது தவறா ?
02.நம் நாட்டிற்கு மிகப் பெரிய தேவை என்னவென்றால் நாம் ஒவ்வொருவரும் நாம் சார்ந்திருக்கின்ற மதங்களின் ஆழமான தத்துவங்களைப் புரிந்து கொள்ள வேண்டும்.இதில் ஒருவர் மட்டும் புரிந்து கொண்டால் போதாது. நான் மட்டும் திருக் குர்ஆனைப் புரிந்து கொண்டால் போதுமா? நீங்கள் பைபிளையும் புரிந்து கொள்ள வேண்டும். பகவத் கீதையையும்் புரிந்து கொள்ள வேண்டும்.
வினா பகவத்கீதையை இவா் படித்துள்ளாரா ? அதற்கான அடையாளம் எதாவது அவரது பேச்சில் உள்ளதா ? பகவத்கீதை ஒரு காபிர்்களின் புத்தகம் என்பது முஸ்லீம்களின் கொள்கை.எனவே எந்த முஸ்லீமும் அதைக் தொட மாட்டான்.குரானில் கதீஸ்களை படிக்காமல் இருப்பதுதான் நல்லது.

Dr.Anburaj said...

நபிகள் ஒரு போதும் சொன்னதில்லை, எல்லோரும் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று! இன்னும் சொல்கிறார்,'இஸ்லாத்தை நிர்பந்திக்காதீர்கள்!' திருக்குர்ஆனை யார் மேலும் நிர்பந்திக்காதீர்கள்.

அது மட்டும் அல்ல இதர மதத்தைச் சார்ந்தவர்களைப் பழிக்காதீர்கள். மற்ற மதக் கருத்துக்களை விமர்சனத்திற்கு உள்ளாக்காதீர்கள். இதர மத சகோதரர்களை அன்போடு எற்றுக் கொள்ளுங்கள். இது நபிகளின் வாக்கு.

அப்போன்ஸ் ஒரு விபரம் தெரியாதவா்.