Followers

Tuesday, August 18, 2026

போபாலில் விரைத் திருட்டுக் கும்பல் தீவிரமாகச் செயல்படுகிறதா?


 



போபாலில் விரைத் திருட்டுக் கும்பல் தீவிரமாகச் செயல்படுகிறதா?

 

போபாலைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகஸ்ட் 6 அன்று காணாமல் போனான். காணாமல் போனவர் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

 

ஐந்து நாட்களுக்குப் பிறகு, ஆகஸ்ட் 11 அன்று, சோட்டா தலாப்பில் அவனது உடல் கண்டெடுக்கப்பட்டது. ஆகஸ்ட் 14 அன்று, அவனது உடைகள் மற்றும் செருப்புகளை வைத்து குடும்பத்தினர் உடலை அடையாளம் கண்டனர்.

 

விசாரணைக்காக சுமார் 13 சந்தேக நபர்களை போலீசார் காவலில் எடுத்துள்ளனர். மேலும்,

 

முதற்கட்ட விசாரணையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் இறந்த இளைஞனின் விரைகளை விற்பதற்காக ₹2 கோடி தருவதாக ஆசை காட்டி அவனை ஏமாற்றியது தெரியவந்தது. அவற்றை வெளிநாட்டிற்கு அனுப்புவதே அவர்களின் திட்டமாக இருந்தது.

 

பிரேதப் பரிசோதனையின் போது, ​​அவனது உடலில் விரைகள் கண்டறியப்படவில்லை.

 

தற்போது, ​​இந்த ஒப்பந்தத்தின் பின்னணியில் உள்ள நபர்கள் மற்றும் அவற்றை வெளிநாட்டிற்கு அனுப்பும் முழுத் திட்டம் குறித்தும் போலீசார் முழுமையான விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

முன்னதாக, மற்றொரு சடலமும் விரைகள் இல்லாமல் கண்டெடுக்கப்பட்டது.

 

செய்தி: சைலேந்திர சிங் சௌஹான், கூடுதல் டிசிபி, போபால்

 

நம் நாட்டில் வெகு தூரம் பயணிப்பவர்கள் தக்க துணைகளோடு பயணிக்கவும். விரைத் திருட்டு கும்பல் தனியாக செல்பவர்களை இலக்காக்குகிறது.

Monday, August 17, 2026

எம்முடைய போராட்டம் ஏன் தோற்றது? ஏன் எம்மை எந்த நாடும் ஆதரிக்கவில்லை?

 


எம்முடைய போராட்டம் ஏன் தோற்றது?

ஏன் எம்மை எந்த நாடும் ஆதரிக்கவில்லை?

ஏன் எங்கள் போராட்டம் அநியாயமாக அழிக்கப்பட்டது?" என்பனவற்றிற்கு இன்னும் பலர் விடை காணாமல் சிந்தித்திருப்பீர்கள்.

 

நானும் அப்படிச் சிந்தித்துண்டு; காரணம், எங்கள் விடுதலைக்கெனப் புறப்பட்ட எம் தமிழ் இளைஞர்கள் இன்னொரு தமிழ் பேசும் சிறுபான்மையினர் மீது கட்டவிழ்த்துவிட்ட வன்முறைகளே!

 

கர்மா என்றுமே வலியது. நாம் எம்மவர்களைப் புனிதர்களாகக் காட்டிக் கொண்டிருக்கிறோம்.

 

ஆனால், நாம் செய்த அநியாயங்களை விட எதிரி ஒன்றும் பெரிதாகச் செய்துவிடவில்லை.

 

இந்தச் சந்தர்ப்பத்தில், நாம் நீதியை எதிர்பார்க்கத் தகுதியுள்ள இனமா என நம்மைச் சுயபரிசோதனை செய்து பார்க்க வேண்டும்.

 

நாம் இன்று போராட்டத்தின் வீர வரலாற்றுப் பெருமைகளைப் பேசுகிறோம்.

ஆனால், நம் வரலாற்றின் பக்கங்களில் ஒட்டிக்கொண்டிருக்கும் ஒரு பெரும் கறையைப் பற்றி, நாம் இழைத்த அநீதியைப் பற்றிப் பேச மறுத்தால் நாம் மனிதர்களே இல்லை.

1990-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23-ஆம் தேதி வீரச்சோலை கிராமத்து மண்ணில் சிந்திய அந்த அப்பாவி முஸ்லிம்களின் ரத்தம் இன்றும் அந்த மண்ணை விட்டு அகலாத கறையாக அனைவர் மனங்களிலும் இருக்கின்றது.

 

அன்று விடிந்த அந்த காலைப் பொழுது, நம் சகோதர உறவுகளான அந்த எட்டு முஸ்லிம் ஆண்களுக்கு ஒரு மீளா நரகமாக மாறும் என்று யாரும் நினைத்துப் பார்க்கவில்லை.

 

அவர்கள் யார்? அவர்கள் நமக்கு எதிரிகள் அல்ல. கைகளில் ஆயுதம் ஏந்தத் தெரியாத, வன்முறையை விரும்பாத எளிய மனிதர்கள்.

 

தங்களின் பிள்ளைகளின் பசியைத் தீர்ப்பதற்காக, நெற்றியில் வியர்வை சிந்த வயல்வெளிகளை நோக்கி, கதிர் அறுக்கவும் மாடுகளை மேய்க்கவும் சென்ற சாதாரண விவசாயிகள் மற்றும் தினக்கூலித் தொழிலாளர்கள்.

 

அன்று காலையில், மாலையில் சீக்கிரம் வந்துவிடுகிறேன் என்று தங்களின் மனைவிகளிடமும், குழந்தைகளிடமும் கூறிவிட்டுச் சென்ற அந்த மனிதர்கள், மீண்டும் உயிரோடு திரும்பப் போவதில்லை என்பதை அந்தப் பாவப்பட்ட குடும்பங்கள் அறிந்திருக்கவில்லை.

 

நடுவழியில், யாரும் எதிர்பாராத நேரத்தில், புலிகள் அமைப்பைச் சேர்ந்த ஆயுதம் தாங்கிய கொடூரக் கரங்கள் அவர்களைச் சூழ்ந்துகொண்டன.

 

அந்தக் கொடூரர்கள் இந்த எளிய மனிதர்களைப் பலவந்தமாக இழுத்துச் சென்றனர்.

காடுகளின் மறைவிடத்திற்குள் அவர்கள் இழுத்துச் செல்லப்பட்டபோது, அந்த அப்பாவி மனிதர்களின் நெஞ்சில் எழுந்த மரண பயத்தை உங்களால் கற்பனை செய்யமுடிகிறதா?

"நாங்கள் ஏழைகள், எங்களை நம்பி வீட்டில் குழந்தைகள் இருக்கிறார்கள், எங்களை விட்டுவிடுங்கள்" என்று அவர்கள் கைகூப்பி கதறியிருக்கக்கூடும்.

 

ஆனால், விடுதலை என்ற பெயரில் ஆயுதம் ஏந்திய அந்த மனிதர்களின் இதயங்களில் மனிதாபிமானம் துளியும் இருக்கவில்லை.

 

அப்பாவிகள் என்று தெரிந்தும், அவர்களை மிகக் கொடூரமான முறையில் சித்திரவதைக்கு உள்ளாக்கினார்கள்.

 

கைகளைக் கட்டி, கூர்மையான ஆயுதங்களால் உடல்களைக் கிழித்து, அவர்களின் ஒவ்வொரு சொட்டு ரத்தமும் மண்ணில் வீணாக ஓடியபோது அந்த அரக்கர்கள் வேடிக்கை பார்த்தார்கள்.

 

தங்களின் இறுதி மூச்சு பிரியும் அந்த கொடூரமான நொடிகள் வரை, அந்த எட்டு மனிதர்களும் தங்களின் பிள்ளைகளின் முகத்தை நினைத்து, எவ்வளவு வேதனையை அணு அணுவாக அனுபவித்திருப்பார்கள்?

 

மரணத்திற்குப் பிறகாவது அந்த உடல்களுக்கு மரியாதை கிடைத்ததா? இல்லை.

மனித குலமே வெட்கித் தலைகுனியும் வகையில், அவர்களின் உயிரற்ற உடல்களை எடுத்து, அந்த கிராமத்து வீதியில் இருந்த மரங்களின் கிளைகளில் தூக்கிலிட்டுத் தொங்கவிட்டார்கள்.

 

ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையே அச்சத்தில் ஆழ்த்தவும், தங்களின் எல்லையைக் காட்டி மிரட்டவும், புலிகள் இயக்கத்தின் தலைமை திட்டமிட்டு நடத்திய மிக மோசமான உளவியல் யுத்தம் இது.

 

மாலை நேரத்தில், வயல் வேலைக்குச் சென்றவர்கள் இன்னும் வரவில்லையே என்று தேடி ஓடிய அந்த கிராமத்து மக்கள், தூரத்தே இருந்த மரங்களைப் பார்த்தபோது அவர்களின் கைகால்கள் நடுங்கின.

 

நிழல் தரும் என்று நம்பிய மரங்களின் கிளைகளில், தங்களின் சொந்த பந்தங்கள், தங்களின் உடன்பிறப்புகள், ரத்தம் சொட்டச் சொட்ட, கண்கள் செருகி, உயிரற்ற பிணங்களாகத் தொங்கிக் கொண்டிருந்த அந்த காட்சியை முதலில் பார்த்த தாயின், மனைவியின் அலறல் சத்தம் அன்று ஆகாயத்தையே உலுக்கியிருக்கும்.

 

சமையல் செய்துவிட்டு கணவனுக்காகக் காத்திருந்த பெண்களும், தந்தையின் விரல் பிடித்து நடக்கக் காத்திருந்த பிஞ்சுக் குழந்தைகளின் எதிர்காலமும் அந்த மரங்களின் கிளைகளிலேயே கருகிப்போயின.

 

அடுத்ததாக 1992 ஆம் ஆண்டு ஜூலை 21 அன்று மட்டக்களப்பு பரங்கியமடுப் பகுதியில் அரங்கேறிய புகையிரதத் தாக்குதல்.

 

வழக்கமான ஒரு விடியலில், இரும்புக் தண்டவாளங்களின் வழியே நகர்ந்த அந்தப் புகையிரதம், வெறும் பயணிகளை மட்டும் ஏற்றிச் செல்லவில்லை.

 

காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த எளிய உழைப்பாளிகளின் வாழ்வாதாரக் கனவுகளையும், குடும்பங்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்புகளையும் சுமந்து சென்றது.

 

அன்றைய தினம் கொழும்பு நோக்கிப் பயணித்த அந்த மனிதர்கள், தங்களின் வாழ்நாளின் கடைசிப் பயணம் இதுவென்று கொஞ்சமும் அறிந்திருக்கவில்லை.

பரங்கியாமடுவின் அடர்ந்த காட்டுப் பகுதியை நெருங்கியபோது, புகையிரதம் திடீரென வன்முறைக் கும்பலால் மறிக்கப்பட்டது.

 

ஆயுதங்களுடன் நுழைந்தவர்கள், பயணிகளை மிரட்டி தண்டவாளத்திற்குப் பக்கத்திலிருந்த கரடுமுரடான பாதையில் இறங்கக் கட்டளையிட்டனர்.

 

அங்கு அரங்கேறியது சாதாரண வன்முறை அல்ல; துல்லியமான இன அடையாளச் சோதனை.

 

பயணிகளின் அடையாள அட்டைகள் பரிசோதிக்கப்பட்டு, அவர்கள் தமிழ் பேசும் முஸ்லிம்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்ட கணமே, மட்டக்களப்பின் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த அப்பாவி மனிதர்கள் தனியாகப் பிரித்து நிறுத்தப்பட்டனர்.

எங்களை விட்டுவிடுங்கள்... வீட்டில் சிறிய பிள்ளைகள் காத்திருக்கிறார்கள்" என்ற கதறல்கள் எதையுமே அந்த ஆயுததாரிகள் செவிமடுக்கவில்லை.

 

மிக நெருக்கமாக நின்று நடத்தப்பட்ட சரமாரியான துப்பாக்கிச் சூட்டில், 7 அப்பாவி முஸ்லிம்கள் அந்த இடத்திலேயே உடல் சிதறித் துடிக்கத் துடிக்கக் கொல்லப்பட்டனர்; மேலும் பல பேர் படுகாயமடைந்தனர்.

 

அன்று குண்டுக் காயங்களுடன், பிணங்களுக்கு நடுவே மறைந்திருந்து உயிர் தப்பிய ஒரு சாட்சியின் பதிவு நெஞ்சைப் பிளப்பதாக உள்ளது:

 

புகையிரதத்தை நிப்பாட்டி எங்களை கீழே இறக்கினப்பவே எங்க உசுரு போயிருச்சு. ஐடி கார்டைப் பார்த்துட்டு முஸ்லிம்னு தெரிஞ்சதும் தனியா பிரிச்சு நிக்க வச்சாங்க. என் கண் முன்னாடியே பக்கத்துல நின்னவங்களை சுட்டுத் தள்ளினாங்க. அலறிக்கிட்டே விழுந்த மனிதர்களோட இரத்தம் என் உடம்பெல்லாம் நனைச்சது. பயத்துல நான் கீழே விழுந்தப்ப, எனக்கு மேல ரெண்டு மூணு பிணங்கள் விழுந்து விட்டதால் அவங்க என்னை விட்டுவிட்டுப் போயிட்டார்கள். அந்த தண்டவாளத்துல ஓடின இரத்தம் இத்தனை ஆண்டுகள் கடந்தும் என் கண்ணுலயே நிக்குது..."

 

அதிகாரப்பூர்வ வரலாற்றின் சில பக்கங்களில் இந்தச் சம்பவம் வெறும் "7 பலி" என்ற எண்களுக்குள் சுருங்கிப் போய்விட்டிருக்கலாம். ஆனால், அந்த எண்களுக்குப் பின்னால் இருந்தவர்கள் சாதாரண மனிதர்கள் அல்ல:

 

குடும்பத்தைக் காப்பாற்ற நினைத்த எளிய நெசவாளர்கள் மற்றும் சிறு வியாபாரிகள்.

மாலையில் பிள்ளைகளுக்குப் பண்டங்கள் வாங்கி வருவதாகக் கூறிவிட்டுச் சென்ற பாசமுள்ள தந்தையர்கள்.

 

வயோதிபப் பெற்றோரின் பசி போக்கப் பயணித்த வாலிபப் பிள்ளைகள்.

அன்று தங்களின் குடும்பத் தலைவர்களையும் பிள்ளைகளையும் இழந்த தாய்களின் கண்ணீர் இன்னும் காயவில்லை.

 

தந்தையின் முகம் அறியாமல் வளர்ந்த குழந்தைகள் இன்று வடுக்களுடன் வாழ்ந்து வருகின்றனர்.

 

இத்தனை ஆண்டுகள் கடந்தும், இந்தக் குடும்பங்களுக்கு முறையான நீதியோ பரிகாரமோ கிடைக்கவில்லை என்பதே கசப்பான உண்மையாகும்.

 

ஒரு தமிழனாக இன்று நான் கேட்கிறேன்...

 

எதற்காக இந்த கொடூரம்?

 

நாம் தேடிய விடுதலை என்பது நம்முடன் வாழ்ந்த இஸ்லாமிய சகோதரர்களின் ரத்தத்தின் மீதுதான் கட்டப்பட வேண்டுமா?

 

நாம் இன்று இந்த வரலாற்றைப் பேசுவது, யாருக்கும் எதிராக மீண்டும் ஒரு வன்மத்தை தூண்டுவதற்காக அல்ல.

 

ஆனால், புலிகள் இயக்கம் நம் சமூகத்தின் பெயரால் நம் முஸ்லிம் சகோதரர்களுக்குச் செய்த இந்த மாபெரும் அநீதியை கட்டாயம் பேசியே ஆகவேண்டும்.

 

அவர்களின் மரணம் நமக்கு ஒரு பாடத்தைக் கற்றுத் தந்திருக்கிறது:

 

ஆயுதங்களும் வன்முறையும் ஒருபோதும் விடியலைத் தராது, அவை வடுக்களையும் இன வெறுப்புக்களை மட்டுமே மிச்சப்படுத்தும்.

 

எங்கள் சமூகத்தின் பெயரில் நடந்த எந்த அநீதியையும் மறைக்க நான் தயாராக இல்லை.

 

ஏனென்றால் இந்த உண்மையைச் சொல்லுவதால் எம்முள் இருக்கும் இனவெறித் தமிழர்கள் என்றைக்கும் சிறிதளவேனும் மாறப்போவதில்லை.

 

மாறாக… உண்மையின் முன் தன் சொந்த வரலாற்றையும் கேள்வி கேட்கத் துணியும் நாளில்தான் ஒரு சமூகம் உண்மையில் உயர்ந்து நிற்கும்.

 

எம் போராட்டம் தோற்றதற்கு இவ்வாறான கர்மாக்களே காரணம்!

 

எமக்காகப் போராடப் புறப்பட்ட இளைஞர்கள் கொலைவெறி மிருகங்களாக மாறித் தேடிக்கொண்ட அந்தக் கர்மாதான், கடைசியில் எம்மினத்தை முள்ளிவாய்க்காலில் வைத்துத் துடிதுடிக்கக் காவு வாங்கியது.

 

நாம் விதைத்த வினையே இன்று எங்களை அறுவடை செய்ய வைத்துள்ளது என்பதை உணர்ந்து, இனியாவது நாம் சுயபரிசோதனை செய்து எமக்கான விடுதலையை ஏனைய சிறுபான்மை மக்களுடன் சேர்ந்து போராடிப் பெறவேண்டும்.

 

Mukinthan thurairajasingam