Followers

Tuesday, September 08, 2026

சவ்வி வர்ஸ்னே - வயது 23 பிரபலமான யுட்யூபர்...

 






சவ்வி வர்ஸ்னே - வயது 23   பிரபலமான யுட்யூபர்...

 

யூட்யூபில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமாக பின் தொடர்கிறார்கள்... இன்ஸ்க்ராமில் இவரை பின் தொடர்பவர்கள் ஒரு லட்சத்துக்கும் மேல்..

 

அவ்வப்போது இவர் இஸ்லாமிய வெறுப்பை பதிவிடுவார். முஸ்லிம்கள் இந்தியாவில் இருக்கக் கூடாது என்றும் அவர்களை விரட்டி அடிக்க வேண்டும் என்றும் பதிவிடுவார். குர்ஆன் கூறும் சொர்க்க வாழ்வை கிண்டலடித்து பதிவிட்டிருந்தார். இதனால் இவரை பின்தொடர்பவர்கள் மேலும் அதிகமாயினர்.

 

போன வாரம் உஜ்ஜயின் நகருக்கு தனது குடும்பத்தோடு ஆன்மீக சுற்றுலா சென்றிருந்தார். அவ்வாறு செல்லும் போது ஒரு லாரியின் மீது இவர்கள் சென்ற கார் பயங்கரமாக மோதியது. சம்பவ இடத்திலேயே சவ்வியும் அவரது தாயாரும் உடல் நசுங்கி இறந்தனர். ஆழ்ந்த அனுதாபங்கள்... இது தான் உலக வாழ்க்கை..

 

நான் இதைச் சொல்வதன் ஒரே நோக்கம் இதுதான்: யார் மீதும் அளவுக்கு அதிகமாக வெறுப்பைக் கொள்ளாதீர்கள், எல்லோரும் இறக்கத்தான் வேண்டும்; இந்த உலகம் ஒரு தற்காலிகமான இடம், இங்கு வந்தவர்கள் திரும்பிச் சென்றே ஆக வேண்டும். நீங்கள் நன்மை செய்தால், உங்கள் நற்செயல்களுக்காக நினைவு கூரப்படுவீர்கள்.

நமக்கு கிடைக்கும் காலம் 50 ஆண்டுகளோ 60 ஆண்டுகளோ 70 ஆண்டுகளோ.. இறைவனே அறிவான்...

 

வாழும் காலங்களில் பிறருக்கு துன்பமிழைக்காது நல்லதை செய்து போகும் வழிக்கு புண்ணியம் தேடிக் கொள்வோம்.

 

சவ்வியின் குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.

Monday, September 07, 2026

பிரபல தீஸிஸ் (Thesis thief) திருடனின் பிறந்தநாள் ஆசிரியர்_தினமா.!? பதவி வகித்த சர்வபள்ளி இராதாகிருஷ்ணன்,



பிரபல தீஸிஸ் (Thesis thief) திருடனின் பிறந்தநாள்

ஆசிரியர்_தினமா.!?

 

ஜாதுநாத் சின்ஹா கல்கத்தா பல்கலைக்கழகத்தில் 1915ல் இளங்கலை தத்துவவியல் முடித்து, புகழ்பெற்ற ஃபிலிப் சேமுயல் ஸ்மித் மற்றும் க்ளின்ட் நினைவு பரிசுகளையும் வென்று, 1917ல் முதுகலையும் முடிக்கிறார். உடனடியாக கல்கத்தா ரிப்பன் கல்லூரியில் தத்துவவியல் துறை துணை பேராசிரியராக தேர்வாகி பணி செய்கிறார்

 

கல்கத்தா பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற பிரேம்சந்த் ராய்சந்த் மாணவர் கல்வி உதவித்தொகைக்காக 1922ம் ஆண்டு, “இந்திய உளவியல் ஞானம்” என்ற தலைப்பில் தொகுதி 1 மற்றும் 2 என்ற இரண்டு ஆராய்ச்சி ஆய்வறிக்கைகளை சமர்ப்பிக்க தொடங்குகிறார். அதற்கு தேர்வாளராக பேராசிரியர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் நியமிக்கப்படுகிறார். ஆராய்ச்சியின் ஒவ்வொரு வகுப்பீடும் தேர்வாளர் பேராசிரியர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனிடம் சமர்பிக்கப்படுகிறது. 1923ம் ஆண்டு ஜாதுநாத் சின்ஹாவுக்கு புகழ்பெற்ற க்ரிஃப்ஃபித் பரிசும் மௌஅத் பதக்கமும் வழங்கப்படுகிறது. 1925ல் ஆராய்ச்சியின் முழு அறிக்கையும் சமர்பிக்கப்படுகிறது. இதற்கிடையில் ஜாதுநாத் சின்ஹா தனது ஆராய்ச்சி ஆய்வறிக்கையின் சாறுகளை மீரட் கல்லூரி இதழில் 1924 மற்றும் 1926ம் ஆண்டுகளில் வெளியிடுகிறார்.

 

ஜாதுநாத் சின்ஹாவினுடைய ஆராய்ச்சி ஆய்வறிக்கையின் பெரும்பகுதியை திருடி சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் தனது இந்திய தத்துவம் புத்தகத்தின் இரண்டாம் தொகுதியில் பதிந்து வெளியிட்டிருப்பதை நவம்பர் 1928ல் கண்டுபிடிக்கப்பட்டது.

சர்வபள்ளி இராதாகிருஷ்ணனின் இந்த பதிப்புரிமை மீறல் தொடர்பாக, 20.12.1928 தேதியிட்ட புகார் கடிதம் ஒன்றை மாடர்ன் ரிவ்யூவ் இதழுக்கு அனுப்புகிறார் ஜாதுநாத். 1929 பிப்ரவரி மார்ச் ஏப்ரல் மாதங்களில் மீண்டும் புகார் கடிதங்களை அனுப்புகிறார். அவை அதே இதழில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இவை பலனிக்காதததால், 1929 ஆகஸ்ட் மாதம், சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் மீது தனது ஆராய்ச்சி ஆய்வறிக்கையை திருடிவிட்டதாக, கல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்குகிறார் ஜாதுநாத்.

 

சர்வபள்ளி இராதாகிருஷ்ணனின் நடவடிக்கையால் கல்கத்தா பல்கலைக்கழகத்தின் மானம் கப்பலேறுவதை சகிக்க முடியாமல், சக பேராசிரியர்களின் துணையோடு, நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வு பேச்சுவார்த்தை நடத்தி மே 1933ல் வழக்கு முடித்து வைக்கப்படுகிறது.

 

பிறகு 1952ல் துணை ஜனாதிபதியாக பதவி வகித்த சர்வபள்ளி இராதாகிருஷ்ணன், தனது பதவியின் அதிகாரத்தை பயன்படுத்தி, 1954ல் பாரத ரத்னா விருதையும் வாங்கிக் கொண்டார்.

 

பின்பு 13.05.1962ல் இந்திய ஜனாதிபதியாக பதவியேற்ற சர்வபள்ளி இராதாகிருஷ்ணன், அதன் பிறகு வந்த தனது பிறந்தநாளை ஆசிரியர் தினமாக கொண்டாட அவரே வற்புறுத்தினார். அதன் விளைவாக 05.09.1962ம் ஆண்டு முதன்முதலாக ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது.

 

இப்படி தனது மாணவனின் ஆராய்ச்சி அறிக்கையைத் திருடியதாக குற்றம்சாட்டப்பட்டு, பதவியின் அதிகாரத்தை பயன்படுத்தி பாரத ரத்னா விருது வாங்கிய சர்வபள்ளி இராதாகிருஷ்ணனின் பிறந்தநாளை ஆசிரியர் தினமாக கொண்டாடுவது வரலாற்றுப் பிழை

நியாயமாக பார்த்தால் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியை சாவித்திரிபாய் பூலேவின் பிறந்தநாளான ஜனவரி 3 தான் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட வேண்டும்.

 

- Adv Manoj Liyonzon

 

 

படித்ததில் பிடித்தது..

இசை அதிசயம் இசைமுரசு ஈ.எம். ஹனீஃபா





 (2015-ல் நண்பர் சாரு நிவேதிதா எழுதிய சிறப்பான பதிவு இது. ஏகத்துவத்துக்கு எதிராக ஒரு சில பாடல்கள் இவர் பாடியதை தவிர்த்து மற்ற பாடல்களை இன்றும் கேட்டு வருகிறேன். இனி சாரு நிவேதிதாவின் பதிவை படிப்போம்

இசை அதிசயம் இசைமுரசு ஈ.எம். ஹனீஃபா
=================================
சாரு நிவேதிதா
சில தினங்களுக்கு முன்னால் புதிய தலைமுறையில் எழுதிய ஒரு கட்டுரையை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இசைமுரசு ஈ.எம். ஹனீஃபா பற்றிய கட்டுரை அது. இந்தக் குறிப்பிட்ட கட்டுரை புதிய தலைமுறை இதழில் வெளிவந்த பதினெட்டாவது கட்டுரை. இந்த வாரத்தோடு அந்த இதழில் 20 கட்டுரைகள் எழுதியிருக்கிறேன்.
***
சில தினங்களுக்கு முன்பு காலமான இசை முரசு ஈ.எம். ஹனீஃபா பற்றி எத்தனை பேர் நினைவு கூர்ந்தார்கள் என்று தெரியவில்லை. பத்திரிகைகளிலும் அவருடைய பெருமைக்கேற்றபடி செய்திகள் வரவில்லை. எனக்கு இலக்கியத்தை விட அதிக விருப்பமானது இசை. என் இசை ரசனைக்கு வித்திட்டவர்களில் முதன்மையானவர் நாகூர் ஹனீஃபா. நினைவு தெரிந்த நாள் முதலாய் ஹனீஃபாவின் பாடல்களைக் கேட்டு வளர்ந்தவன் நான். ஹனீஃபாவின் குரல் வேறு யாராலும் பின்பற்ற முடியாத தனித்துவம் கொண்டது. அந்த வகையில் unique-ஆன பாடகர் அவர்.
இந்தி கிஷோர் குமாரின் குரலும் தனித்துவமானதுதான் என்றாலும் அவருடைய பாணியில் அவருக்கு முன்னதாக கே.எல். செய்கல் இருந்திருக்கிறார். இதை கிஷோர் குமாரே குறிப்பிட்டும் இருக்கிறார். கிஷோரைப் போல் யாரேனும் பாடி விடவும் கூடும். ஆனால் ஹனீஃபாவைப் போல் பாட அவரை விட்டால் வேறு யாருமே இல்லை. உலகிலேயே அவர் மட்டும்தான். இது பற்றி ஹனீஃபா, “இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது? கோடிக் கணக்கான மனிதர்கள் பிறந்து கொண்டு இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் தனித்தனி முகம் இருக்கிறதுதானே? ஒருவரைப் போல் இன்னொருவர் இல்லையே?” என்கிறார்.
தொடர்ந்து சொல்லும் போது, “என்னைப் போல் என் குரலில் பல இளைஞர்கள் பாடுவதைக் கேட்கிறேன். ஆனால் இரண்டு பாட்டுகளுக்கு மேல் அவர்களின் குரல் வேறு மாதிரி ஆகி விடுகிறது” என்கிறார். உண்மைதான். ஒலிபெருக்கி இல்லாமலேயே பல காத தூரம் கேட்கும் அளவுக்கு கனத்த குரல் ஹனீஃபாவினுடையது. அதே சமயம் தேனினும் இனிமையானது. இதையெல்லாம் விடப் பெரிய விஷயம், நான்கு ஐந்து மணி நேரத்துக்கு இடைவிடாமல் மழை போல் பொழியும் இசைக் கலைஞன் ஹனீஃபா. வேறு யாராலும் இவ்வளவு high pitch குரலில் நான்கு ஐந்து மணி நேரம் பாடுவதை யோசித்தும் பார்க்க முடியாது. அதிலும் பல பாடல்களில் சுவாசத்தில் இடைவெளியே கொடுக்காமல் பாடிக் கொண்டே போவார்.
உதாரணமாக, ”திக்குத் திகந்தமும் கொண்டாடியே” என்ற பனிரண்டு நிமிடப் பாடலில் முதல் ஆறு நிமிடம் ஹனீஃபாவின் குரல் இசையும் இறைமையும் கலந்து நிற்கும் உன்னத வெளிக்கு நம்மை அழைத்துச் செல்லும். ஆறு நிமிடம் கழிந்த பிறகே ”உம்மை ஒரு போதும் நான் மறவேன் மீரா” என்ற அற்புதப் பாடல் நிகழும். இந்தப் பாடலைக் கேட்டு கண்ணீர் விடாத மனிதரை நான் கண்டதில்லை. ஹனீஃபாவின் இசைமழையில் நனைந்து வளர்ந்த பயிர் நான். கந்தூரியின் போதும் மற்ற விசேஷங்களிலும் ஹனீஃபாவின் கச்சேரி இரவு முழுவதும் நடைபெறும். அவரது பாடல்கள் மதம், இனம் போன்ற பாகுபாடுகளைக் கடந்தவை என்றாலும் பல பாடல்கள் இஸ்லாமிய அறக் கோட்பாடுகளையும் வாழ்வியல் நெறிகளையும் விளக்குபவையாக இருக்கும்.
உ-ம். ”அதிகாலை நேரம் சுபுஹூக்குப் பின்னே அண்ணல் நபி வரும் போது இன்னல் செய்தாள் ஒரு மாது” என்ற பாடல் நபிகள் நாயகத்தின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வை விளக்குகிறது. இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல் என்ற குறளை நினைவூட்டும் சம்பவம் அது. இது போல் எண்ணற்ற ஹதீஸ்களைப் பாடலாகப் பாடியிருக்கிறார் ஹனீஃபா. நெஞ்சம் உருகுதம்மா என்ற பாடலில் தீனோர்களின் தியாக வரலாற்றைச் சொல்லுவார். ”ஐந்தாயிரம் ஆண்டுகள் முன்பே நடந்தது அரபு நாட்டிலே ஓர் தியாகம்” என்ற ஒரு பாடல். இடது காதை இடது கையால் பிடித்தபடி ஹனீஃபாவின் தனி முத்திரையான “ஓ…” என்று இழையும் குரலை இந்தப் பாடலில் கேட்கலாம்.
“கன்னியரே அன்னையரே கொஞ்சம் நில்லுங்கள்; கண்மணியாம் ஃபாத்திமாவின் சரிதம் கேளுங்கள்”, “ஃபாத்திமா வாழ்ந்த முறை உனக்குத் தெரியுமா?”, “தீன்குலக் கண்ணு…” போன்ற பாடல்கள் ஒரு இஸ்லாமியப் பெண் எப்படி இருக்க வேண்டும் என்பதைச் சொல்பவை. அது தவிர இந்தப் பாடல்களின் இனிமை கேட்பவரை இசைப் பேரின்பத்தில் ஆழ்த்துபவை. ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களைப் பாடியிருக்கும் இசைமுரசு ஈ.எம். ஹனீஃபாவின் மிக முக்கியமான பாடல்கள்: “கருணைக் கடலாம் காதர்வலியின் காரண சரிதம் கேளுங்கள்”, கரீப் நவாஸ் (ஏழைகளின் பங்காளன்) என்று அழைக்கப்படும் அஜ்மீர் ஔலியாவைப் பற்றிய பாடலான ”அஜ்மீர் ராஜாவே கருணை க்வாஜாவே”, “சொன்னால் முடிந்திடுமோ சொல்வதென்றால் இயன்றிடுமோ, என்னவென்பேன் என்னவென்பேன் ஏந்தலர் பெருமைகளை…”
ஹனீஃபாவின் பல நூறு பாடல்கள் குதூகலத்தையும் கொண்டாட்டத்தையும் தரக் கூடியவை. உதாரணங்கள்: ”அருள் மேவும் ஆண்டவனே அன்புடைய காவலனே”; ”மக்கத்து மலரே மாணிக்கச் சுடரே யார சூலல்லாஹ்”; ”மௌத்தையே நீ மறந்து இங்கு வாழலாகுமா?” (மௌத் = மரணம்); “தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு, எங்கள் திருநபியிடம் போய்ச் சொல்லு…”; “ஹஸ்பி ரப்பி ஜல்லல்லா”; “உலக மக்கள் யாவருக்கும் உரிமையானவர்.”
இந்தியாவின் சூஃபி பரம்பரையில் வந்த மாபெரும் இசைக் கலைஞனான இசைமுரசு ஈ.எம். ஹனீஃபா நவீன இசைக் கருவிகள் பழக்கத்துக்கு வரும் முன்பே நான்கே நான்கு கருவிகளோடு – தப்லா, ஹார்மோனியம், ஷெனாய், டேப் (ஃபக்கீர்கள் பயன்படுத்தும் இசைக்கருவி) – நான்கைந்து மணி நேரம் கச்சேரி செய்தவர். என்னுடைய வருத்தம் என்னவென்றால் தமிழ்நாடே கொண்டாட வேண்டிய இந்த இசைக் கலைஞனின் மீது சினிமாவின் நிழல் படாத காரணத்தால் அவரது மரணம் கவனிக்கப்படாமல் போயிற்றே என்பதுதான்.
ஹனீஃபா தன் வாழ்நாள் முழுவதும் சினிமாவை ஒதுக்கித் தள்ளினார். குலேபகாவலி, பாவ மன்னிப்பு போன்ற இரண்டு மூன்று படங்களில் தான் பாடினார். ஹனீஃபாவின் இன்னொரு சாதனை, திராவிட முன்னேற்றக் கழகம் மாபெரும் மக்கள் இயக்கமாகத் திரண்ட ஆரம்ப காலத்திலும் சரி, அதற்குப் பிறகு ஆட்சி அதிகாரத்துக்கு வந்த பிறகும் சரி, அந்தக் கட்சியை மக்களிடம் கொண்டு சென்றதில் ஹனீஃபாவின் பங்கு மகத்தானது. கருத்து உடன்பாடு இல்லாவிட்டாலும் கூட ”கல்லக்குடி கொண்ட கருணாநிதியே” என்ற பாடலைக் கேட்கும் போது நம் மனம் உருகி விடும்.
ஹனீஃபா தன்னுடைய பெரும்பான்மையான பாடல்களுக்குத் தானே இசை அமைத்தார். அவருடைய ஒரு பாடல் கூட கேட்பதற்கு அசுவாரசியமாக இருந்ததில்லை. இங்கே நான் குறிப்பிட வேண்டிய இன்னொரு விஷயம், அவருடைய பாடல்களை இயற்றிய புலவர் ஆபிதீன் மற்றும் நாகூர். இரண்டாமவர் ஆயிரக் கணக்கான பாடல்களை இயற்றியவர் சலீம். கவிஞர் கண்ணதாசன், வாலி ஆகியோருடன் இணையாகப் பேசப்பட வேண்டிய நாகூர் சலீமும் சினிமாவின் நிழல் படியாத இடத்தில் இருந்ததால் பிரபலமாக அறியப்படவில்லை. இந்த மகத்தான கலைஞர்களை இந்தத் தருணத்திலாவது நாம் நினைவு கூருவோம். அதன் பொருள், காலத்தால் அழியாத அவர்களின் பாடல்களைக் கேட்டு இன்புறுவோம்.
பின்குறிப்பு: ஏ.ஆர். ரஹ்மான் ஒருமுறை ஈ.எம். ஹனீஃபாவின் பாடல்களை ஒன்று திரட்டி டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் உதவியுடன் தொகுக்க வேண்டும் என்று சொன்னார். எப்போது அதைச் செயல்படுத்துவார் என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.
இசைமுரசு ஈ.எம். ஹனீஃபா பாடல்கள் இணைப்பு. இன்னொரு முக்கிய விஷயம். ஹனீஃபா தான் பாடிய ஒவ்வொரு பாடலையும் ஆயிரக் கணக்கான மேடைகளில் பாடினார். அதாவது, ஒவ்வொரு பாடலையும் பத்தாயிரம் இருபதாயிரம் தடவை பாடியிருப்பார். ஹனீஃபாவுக்கு பாடல் என்பது நமக்கு சுவாசத்தைப் போல. அதனால் எந்த இணைப்பில் மிகச் சரியான பதிவு இருக்கிறது என்று தெரியவில்லை. அதை நீங்கள்தான் யாரேனும் செய்ய வேண்டும்.
அருள்மழை பொழிவாய் ரஹ்மானே…
பின்வரும் இணைப்பில் ஈ.எம். ஹனீஃபாவின் சிறிய பேச்சையும் கேட்கலாம். நபிகள் நாயகத்தின் வாழ்வில் நடந்த ஒரு அற்புத சம்பவத்தை விவரிக்கிறார் ஹனீஃபா. ஒருநாள் மதீனா நகர்தனிலே…
ஐயாயிரம் ஆண்டுகள் முன்னே நடந்தது அரபு நாட்டில் ஒரு தியாகம் என்ற மகா அற்புதமான பாடல். இந்தப் பாடலில் ஈ.எம். ஹனீஃபாவுக்கு மட்டுமே உரிய தனித்துவமான விசேஷங்களைக் கேட்கலாம். இஸ்லாமிய நாடோடி இசையின் உச்சம் இந்தப் பாடல்.
மௌத்தையே நீ மறந்து வாழலாகுமா? ஈ.எம். ஹனீஃபாவின் இளைமையான குரல்..
எவ்வளவு தேடினாலும் அவருடைய சில பாடல்கள் எனக்குக் கிடைக்கவில்லை.
பின்குறிப்பு: மேடையில் தனக்குப் பக்க வாத்தியம் வாசிப்பவர்களை உற்சாகப்படுத்துவதற்காக ஹனீஃபா ஒலிபெருக்கியைக் கையால் மறைத்தபடி ஒரு காரியம் செய்வார். அந்த அட்டகாசத்தை நாகூர்வாசிகள் மட்டுமே அறிவோம். ஒரு மாபெரும் கலைஞனின் விளையாட்டு மனோபாவம் அது என்று சிரித்துக் கொள்வோம்.

Saturday, September 05, 2026

மரண தண்டனை விதிப்பதற்கு முன், இத்தாலிய நீதிபதி உமர் முக்தாரிடம் கேட்கிறார்:

 


மரண தண்டனை விதிப்பதற்கு முன், இத்தாலிய நீதிபதி உமர் முக்தாரிடம் கேட்கிறார்:

 

நீங்கள் இத்தாலிய அரசுக்கு எதிராகப் போரிட்டீர்களா?

 

உமர் முக்தார்: ஆம்.

 

இத்தாலிய அரசுக்கு எதிராகப் போரிடுமாறு மக்களைத் தூண்டினீர்களா?

 

உமர் முக்தார்: ஆம்.

 

நீங்கள் எத்தனை ஆண்டுகள் இத்தாலிக்கு எதிராகப் போரிட்டீர்கள்?

 

உமர் முக்தார்: சுமார் 20 ஆண்டுகள்.

 

நீங்கள் செய்த செயலுக்காக வருந்துகிறீர்களா?

 

உமர் முக்தார்: இல்லை.

 

உங்களுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்படும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

 

உமர் முக்தார்: ஆம்.

 

வியப்படைந்த நீதிபதி கூறுகிறார்:

 

உங்களைப் போன்ற ஒருவருக்கு, இத்தகைய முடிவு மிகவும் துயரமானது...

 

இதைக் கேட்ட உமர் முக்தார் பதிலளிக்கிறார்:

முற்றிலும் அதற்கு நேர்மாறாக! இது என் வாழ்வின் முடிவிற்கான மிக அழகான பாதை.

 

முஜாஹிதீன்கள் ஜிஹாதை நிறுத்தும்படி உத்தரவிட்டு அவர் ஒரு பிரகடனத்தை எழுதினால், அவரைக் குற்றமற்றவர் என விடுவித்து நாடு கடத்துவதாக நீதிபதி குறிப்பிடுகிறார். அதன்பின், உமர் முக்தார் அந்தப் புகழ்பெற்ற வார்த்தைகளை உரைக்கிறார்:

 

"அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும், முஹம்மது  அவர்கள் அவனுடைய தூதர் என்றும் ஒவ்வொரு தொழுகையிலும் சாட்சி பகரும் இந்த விரல்கள், ஒருபோதும் பொய்யை எழுதாது! நாங்கள் சரணடைவதில்லை; நாங்கள் ஒன்று வெல்வோம்: அல்லது மடிவோம். நாங்கள் இறந்தாலும், நாங்கள் வெல்வோம், நீங்கள் தோற்பீர்கள். ஆனால் வேதனையான விஷயம் இதுதான்: நீங்கள் இறந்த பிறகுதான் இதை உணர்வீர்கள், அதுவரை இது உங்களுக்கு எந்தப் பயனும் தராது!"

 

தண்டனை நிறைவேற்றப்படுகிறது. எந்த சலனமும் இல்லாமல் இறப்பை எதிர் கொண்டார் உமர் முக்தார்.

 

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் - இறைவனிடமிருந்தே வந்தோம்: அவனிடமே திரும்ப வேண்டியவர்கள் நாம்.

Thursday, September 03, 2026

'நாங்கள் அப்போ இந்து இல்லையா' - அப்பாவியாக கேட்கும் தலித் இளைஞர்

 


'நாங்கள் அப்போ இந்து இல்லையா' - அப்பாவியாக கேட்கும் தலித் இளைஞர்

 

இந்தியாவில் இஸ்லாம் வளர்கிறது என்றால் அதற்கு உண்மையான காரணம் இதுதான்.

 

இந்த ஆண்டு மே மாதம், ராஜஸ்தானின் பில்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த 40 வயதான தலித் இளைஞர் விஷ்ணு பாலாய், ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (RSS) தலைவர் மோகன் பகவத்துக்கு ஒரு கடிதம் எழுதினார். தனது கிராமத்தில் உள்ள ஒரு கோவிலில் பூசாரியாகப் பணியாற்றுவதைத் தடுக்க, தலித் விரோத நபர்களும் RSS உடன் தொடர்புடையவர்களும் முயற்சிப்பதாக பாலாய் கூறியிருந்தார். இதுகுறித்து பகவத்தின் உதவியை அவர் கோரியிருந்தார்.

 

 

"நீங்கள் ஒட்டுமொத்த இந்து சமூகத்தைப் பற்றியும் நல்லிணக்கத்தைப் பற்றியும் பேசுகிறீர்கள். நீங்கள் சாதிப் பாகுபாட்டிற்கு எதிரானவர். மேலும், ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் 'ஒரே கிணறு, ஒரே சுடுகாடு, ஒரே கோவில்' என்ற பிரச்சாரத்தை நடத்தி வருகிறது. ஆனால், சங்கத்தின் ஸ்வயம்சேவக்குகள், ஒரு தலித் பூசாரியான என்னிடமிருந்து எனது கோவிலை அபகரித்துவிட்டனர்..." என்று பாலாய் தனது கடிதத்தில் பகவத்திடம் எழுதியிருந்தார்.

 

 

"...இப்போது அவர்கள் என் மீதும் என் குடும்பத்தின் மீதும் பொய் வழக்குகளைச் சுமத்தி, எங்களைச் சிறைக்கு அனுப்பவும், எங்களைக் கொல்லவும் கூட விரும்புகிறார்கள். உங்கள் சுயம்சேவகர்கள் நீங்கள் சொல்வதற்கு நேர் எதிராக நடந்துகொள்கிறார்கள்," என்று அவர் மேலும் கூறினார்.

 

'தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவனே, உனக்கு அசுத்தமான சிறுநீரைக் குடிக்க வைப்போம்'

ஜூலை 16 அன்று, ககுல் தேவ் கோவிலுக்கு அருகில் பிரார்த்தனைகளை நடத்தத் தயாராகிக் கொண்டிருந்தபோது, ​​பாலாய் ஓராண்டுக்குள் இரண்டாவது முறையாகத் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

 

"...ஆயுதங்கள், இரும்புக் கம்பிகள், இரும்புக் குழாய்கள், மூங்கில் குச்சிகளுடன் வந்து சட்டவிரோதமாக ககுல் தேவ் கோவிலுக்குள் நுழைந்தனர். அவர்கள் என் கணவரிடம், 'தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவனே, உனக்கு அசுத்தமான சிறுநீரைக் குடிக்க வைத்து, கோவிலிலிருந்து வெளியே தூக்கி எறிவோம்' என்று கூறினர்," என பாலாயின் மனைவி சீதா தேவி அளித்த புகாரின் அடிப்படையில் ஜூலை 16 அன்று அசிந்த் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

தகவல் உதவி

 

The Wire

19-07-2026