Followers

Tuesday, February 10, 2015

கிரண்பேடி அவர்களுக்கு ஷப்னம் ஆஷ்மி எழுதும் திறந்தமடல்!



கிரண்பேடி அவர்களுக்கு ஷப்னம் ஆஷ்மி எழுதும் திறந்தமடல்!

உங்களுடைய சர்வாதிகாரம் மற்றும் ஆணவத்தனம் அடங்கிய சமூக சேவையின் போக்குகளின் மீது கடுமையான அதிருப்தியடைந்த காரணத்தால் எப்போதுமே உங்களின் ரசிகையாக இருந்ததில்லை என்று கூறிக்கொண்டே ஆரம்பம் செய்கிறேன்.

உங்களுக்கு தற்போது போதிய நேரம் கிடைக்கும்போது சாவகாசமாக அசைவு நாற்காலியில் உட்கார்ந்து காபி குடித்துக் கொண்டும் களைப்படைந்திருக்கும் உங்களின் பாதங்களை இளம் வெந்நீரில் வைத்து இளைப்பாரிக்கொண்டும் உங்களை சுயபரிசீலனை செய்துகொள்ள வேண்டுகோள் விடுக்கிறேன்.

தயவுகூர்ந்து உங்களுக்கு நீங்களே இழைத்துக் கொண்டதை யோசித்துப் பாருங்கள்.

நான் தங்களுடைய ரசிகையாக இருந்ததில்லை ஆனால் தாங்கள் மிகவும் தன்னம்பிக்கையுள்ள திறமை வாய்ந்த பெண்மணியாக இருந்துள்ளீர்கள். ஒவ்வொரு மனிதருக்கும் சிறிய குறைபாடுகள் உள்ளன அதை தொடர்ச்சியாகப் போராடி சீர்செய்து கொள்கிறோம் ஆனால் ஒருவரின் குறைபாட்டை பகிரங்கமாக விமர்சிப்பது பெருத்த அவமானகரமான செயல்.

நீங்கள் நரேந்திர மோடிக்கு முன் கூனிகுறுகி நின்று எதையோ கே ட்பது போன்ற புகைப்படத்தை சமீபத்தில் பார்த்தேன். உங்களது முகபாவனை மோடியிடம் கையாலாகாதத் தனத்துடன் அனுமதி வேண்டுவது போல் இருந்தது.

இது எனக்குள் மிகுந்த வலியை ஏற்படுத்தியது. எனக்கு உங்களுடன் கருத்து வேறுபாடுகள் உண்டு ஆனால் ஒரு மனிதராகவும் ஒரு ஆர்வலராகவும் உங்களை மட்டுமின்றி எந்தவோரு திறமைவாய்ந்த பெண்மணியும் இந்த சூழ்நிலையில் ஒருபோதும் பார்க்க விரும்பவில்லை.

திரு பேடி அவர்களே, 2002ம் ஆண்டு குஜராத் மதக் கலவரத்தால் எரிந்து கொண்டிருந்தபோது கூட்டு பாலியல் வன்புணர்வால் பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்களை நான் பதிவுசெய்து வெளியிட்டதை நீங்கள் அறிந்திருக்கலாம். நான் அங்கு கிட்டத்தட்ட பத்து மாவட்டங்களிலுள்ள ஐம்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பயணம் செய்தேன். அங்கு குக்கிராமங்களிலுள்ள மருந்தகங்களில் பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்களை சந்தித்தபோது அங்கு வயிறு கிழிக்கப்பட்டதற்குப் பின்னர் எரிக்கப்பட்ட பெண்களின் சடலங்கள் மற்றும் இறந்த கருக்கள் அந்த சடலங்களின் மீது ஒட்டியிருந்த நிலையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களைப் பார்த்தேன். அங்கு ஒரு வெளியுலகம் அறிந்த ஒரு கவுஸர் பானு மட்டுமில்லை இன்னும் இவ்வுலகுக்கு தெரியாத சிதைக்கப்பட்டு இறந்த பல கவுஸர் பானுகள் இருந்தனர். மேலும் அங்கு 15 முதல் 20 பேர்கள் அடங்கிய கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு அவர்களின் மர்மஉறுப்புகள் முற்றிலும் சிதைக்கப்பட்டதால் பல மாதங்கள் படுத்த படுக்கையாக இருந்த பல பெண்களை சந்தித்தேன் திரு பேடி அவர்களே.

திரு பேடி அவர்களே, 2002ம் ஆண்டு குஜராத் படுகொலைக்குப் பிறகு மோடி 'கவுரவ் யாத்ரா' (மரியாதைப் பயணம்) பயணத்தின்போது அங்கு அனைத்தையும் இழந்த மக்கள் வசிக்கும் நிவாரண முகாம்களை மனித்தன்மை இல்லாமல் “குழந்தைகள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை” என வர்ணித்தார். கடந்த இரண்டு வருடங்களாக மோடி பேசிய விஷமத்தனமான மற்றும் இழிவான பேச்சுகள் பல யூட்யூப் இணையத்தை அலங்கரித்தன. தற்போது விஷத்தை உமிழ்ந்து வரும் ஷாக்ஷி மகாராஜ் மற்றும் சாத்வி ப்ராச்சி கூட மோடிக்கு நிகர் கிடையாது. மோடி பேசிய பேசுக்கள் அனைத்தும் இதைவிட பன்மடங்கு விஷம் தோய்ந்தவை.

திரு பேடி அவர்களே, பில்கிஸ் என்ற பெண்மணி கூட்டு வன்புணர்வுக்கு இரையாகிக் கொண்டிருக்கும்போது அவருடைய பிஞ்சு மகளின் தலையை கல்லின்மீது ஓங்கி அடித்து அந்த இடத்திலேயே துடிக்க துடிக்கக் கொன்றனர். மெதினா என்ற மற்றொரு பெண்மணி அவரது கண்ணெதிரிலேயே மகள் மற்றும் மருமகள் பாலியல் பலாத்காரம் செய்ப்பப்படுவதை பார்க்கும் நிலைமைக்கு வற்புறுத்தப் பட்டார்.

திரு பேடி அவர்களே, நீங்கள் இந்த அக்கிரமங்களுக்கு காரணகர்த்தாவான மோடியின் முன் கூனிகுறுகி நிற்பதைப் பார்க்கும் பொழுது எனக்கு மனது வலித்தது.

அவர் குற்றமற்றவர் என்று நற்சான்று பெற்றதை நீங்கள் சுட்டிக்காட்டலாம். எனக்கு இதுபோன்ற நற்சான்றுகளின் வரலாற்றைப் பற்றி கொஞ்சம் அதிகமாகவே தெரியும்.

திரு பேடி அவர்களே, இந்த மனிதர் மோசடியாக பிரதமாராக முயற்சித்த போதே நான் என்னுடைய பாதுகாப்பில் கவனமாக இருக்க அறிவுறுத்தப்பட்டேன். எனக்கு அறிவுரைகூறிய நண்பர்களிடம் அதிகபட்சம் என்னை அவதூறு சொல்லி கைது செய்யமுடியும் அல்லது கொலை செய்யமுடியும். என்னுடைய உடல் கொலை செய்யப்படுவது மனவேதனையால் உள்ளூர கொல்லப் படுவதைவிட மேலானது.

திரு பேடி அவர்களே, தனிமையில் இருக்கும்போது உங்கள் சுயமரியாதைக்கு நீங்கள் இழைத்துக் கொண்டதை நீங்களே சுயபரிசீலனை செய்து பாருங்கள். ஒரு பெண்ணாக ஒரு தாயாக யோசித்துப்பாருங்கள். மிகவும் கம்பீரத்துடன் உயர்ந்து வாழ்ந்த திறமையான பெண்ணாக யோசித்துப்பாருங்கள்.

நீங்கள் தயவுதாட்சண்யமின்றி உண்மைகளைக் கொண்டு உங்களை சுயபரிசீலனை செய்யும் தைரியத்தைப் பெறுவது மிகவும் கடினம். ஆனால் உங்களது நன்மைக்காக தயவுகூர்ந்து அதைச் செய்யவும்.

உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

ஷப்னம் ஆஷ்மி

தமிழில் மொழிபெயர்த்தது: Mohamed Hussain

அனைவரும் படித்து விட்டு பகிர்ந்துகொள்ளுங்கள்.

http://www.indiaresists.com/an-open-letter-to-ms-kiran-bedi-from-shabnam-hashmi/

No comments: