Followers

Thursday, April 07, 2022

"தில்லானா மோகனாம்பாள் படம் பார்த்திருக்கிறாயா..?"

 


தம்பி ஒருவர் மெசஞ்சரில் வந்து " திராவிட சித்தாந்தம் சித்தாந்தம் என்கிறீர்களே அதை ஏன் தெரிந்து கொள்ளவேண்டும் என்று நினைக்கிறீர்கள்?" என்று கேட்டார்.

 

"தில்லானா மோகனாம்பாள் படம் பார்த்திருக்கிறாயா..?"

 

"பார்த்திருக்கிறேன் அண்ணா"

 

"அதோட அடிப்படை கதைக்கரு என்ன?"

 

"நாதஸ்வாரத்திற்கும், பரத நாட்டியத்திற்குமான ஈகோ போட்டி"

 

"அது வெளிப்பார்வைக்கு. அவர்களுக்குள் காதல் தானே இருந்தது. உண்மையில் கதை திராவிட சித்தாந்தத்திற்கும் ஆரிய சித்தாந்ததிற்குமான முரண் பற்றியது. உண்மையான வில்லன் பாலாஜியோ, நம்பியாரோ இல்லை. காமெடியனாக, தரகராக வரும் நாகேஷ் தான். நாகேஷ் ஒரு பார்பனர்.

 

அவர் தனது நலனிற்காக ஆளும் வர்க்கமான பாலாஜியிடம் கொஞ்சி குலாவுவார். அவரின் ஆசையை தூண்டிவிடுவார். அவருக்கு தேவையான அனைத்து விசயங்களையும், ரகசியங்களையும் கூறி நம்பிக்கையை பெறுவார். ஒரு கட்டத்தில் அவர் திருந்திவிடும்போது நாகேஷ் அடுத்த ஆளும்வர்க்கமான நம்பியாரிடம் செல்வார்.

 

அவரிடம் பாலாஜியிடம் செய்த அதே ஆசை தூண்டல், போட்டு கொடுத்தல், மாமாவேலை பார்த்தல் என அனைத்தையும் செய்வார்.

 

நாகேஷ் நாதஸ்வர கலைஞரான, வயதில் மூத்தவரான சிவாஜியை மரியாதை இல்லாமல் விளிப்பார். அதே போல நாட்டிய கலைஞரான பத்மினியையும் மரியாதை இல்லாமல் விளிப்பார். அவரது குழுவினரையும் மரியாதையே காட்டமாட்டார். பத்மினியின் தாயாரை பேரை சொல்லி அழைப்பார். அவரிடம் நயவஞ்சகமாக பேசி நம்பியாரின் பெண்ணாசைக்கு இணங்க, அதாவது அடிமையாக இருக்க வற்புறுத்துவார்.

 

சிவாஜியும் சரி, பத்மினியும் சரி நாகேஷை அவரின் நயவஞ்சகம் புரிந்து விஷப்பூச்சி போல கையாளுவார்கள். தங்கள் சுயமரியாதையை ஒரு இடத்தில் கூட விட்டுக்கொடுக்க மாட்டார்கள். அந்த விஷப்பூச்சியின் அனைத்து தந்திரங்களையும் உடைத்து இறுதியில் தங்கள் அன்பால் காதலால் இணைவார்கள். இறுதியில் நம்பியார் திருந்திவிடுவதாக காட்சிவைப்பார் இயக்குனர். நம்பியார் ஆங்கிலேய ஆட்சியாளரின் நடை உடை பாவனையை பெற்றிருப்பார். அவரது மனைவி ஆங்கிலோ இந்திய பெண். அவர் பெரிய பிரச்சனை இல்லை. அவரை எப்போனாலும் எதிர்க்கலாம். உண்மையான பிரச்சனை உடனிருந்தே கவிழ்க்கும் வைத்தி என்கிற பார்பனர் தான். ஆளும்வர்க்கம் கூட திருந்திவிடுவார்கள்.

திருத்தமுடியாதவர்கள் ஆரிய சித்தாந்த கொள்கை கொண்ட வைத்திக்கள் தான். அவர்களிடம் தான் கவனமாக இருக்கவேண்டும் என்பது தான் கதை.

அந்த படம் மட்டுமல்ல ஏ.பி.நாகராஜனின் அனைத்து புராண படங்களும் வெளிப்பார்வைக்கு பக்தி படங்கள் போல தெரிந்தாலும் பார்ப்பனியத்தை ஊமைகுத்தாக குத்தியிருக்கும்.

 

நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் எல்லா இடத்திலும் சித்தாந்தம் தான் அரசியல் செய்கிறது. வர்க்க ரீதியான பிரச்சனை மேலெழுந்தபோது கம்யுனிஸ்ட் சித்தாந்தம் கிளர்ந்தெழுந்தது. முதலாளித்துவம் அரக்கத்தனமான வேலை வாங்கி சுரண்டல் செய்தபோது இது மட்டும் வரவில்லை என்றால் சனி,ஞாயிறு விடுமுறை தோன்றி இருக்காது.

 

எட்டு மணி நேர வேலை தோன்றியிருக்காது. மார்டின் லூதர்கிங், அம்பேத்கார் போன்றோர் இல்லாவிட்டால் நிறவெறி,சாதிவெறியால் மனிதர்களை மனிதர்கள் ஒடுக்கும் அவலம் குறைந்திருக்காது. திராவிட சித்தாந்தம் தோன்றியிராவிட்டால் மதவெறி, சாதிவெறி இரண்டினாலும் சுரண்டப்படும் அவலம் தமிழ்நாட்டில் குறைந்திருக்காது.

 

அன்று தில்லானா மோகனாம்பாள் படத்தில் வைத்தி செய்ததை தான் இன்று பிஜேபி செய்கிறது. அதிமுக என்ற நம்பியார் கூட்டத்தை முற்றிலுமாக கபளீகரம் செய்து தானே நம்பியாராகவும் நாகேஷாகவும் மாறிவிட்டது. இதில் திமுக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட்டுகள் எப்போதும் உஷாராகவே இருந்திருக்கிறார்கள்.

 

ஆகவே தான் சித்தாந்தத்தை புரிந்துகொள். எது அனைத்து மக்களுக்கான சித்தாந்தமாக இருக்கிறதோ அதை ஏற்றுக்கொள். அதன்படியே உன்னை சுற்றி நிகழும் அனைத்து அரசியல், கலை, சமூகம், பொருளாதார நிகழ்வுகளை பார். நிறைய விஷயங்கள் புரியும். சரியான நிலைபாட்டை எடுக்க முடியும்." என்று சொல்லி முடித்தேன்.

 

நன்றி: Karthikeyan Fastura

 

No comments: