Followers

Monday, June 20, 2011

இஸ்லாத்தில் பெண்களின் நிலை -மலேசியா!


இஸ்லாத்தில் பெண்களின் நிலை - மலேசியா!

கோலாலம்பூர்: வரும் காலங்களில் மலேசிய தொலைக்காட்சிகளில் இஸ்லாமிக் ரியாலிட்டி ஷோக்களை பார்க்கலாம். 13 பகுதிகளாக ஒலி,ஒளி பரப்பாகப் போகும் இந்நிகழ்ச்சிக்கு 'சுலேஹா' என்று பெயரிட்டிருக்கின்றனர். அரபு வார்த்தையான இதன் அர்த்தம் 'பக்தியுள்ள பெண்மணி'. மிகச் சிறந்த நடுவர்களைக் கொண்டு பெண்களின் இஸ்லாமிய அறிவை வெளிக் காட்டும் தளமாக இந்நிகழ்ச்சி அமையும்.

அமெரிக்க, பிரிட்டிஷ் டிவி ஷோக்களைப் பார்த்து தவறான வாழ்க்கை முறையின் பால் செல்லும் நமது இளைய தலைமுறையை வென்றெடுப்பதே இந்நிகழ்ச்சியின் நோக்கம் என்கிறார் ஜூல்கமான் முக்தார். இவர் இந்நிகழ்ச்சியின் டைரக்டராவார்.

'நமது இஸ்லாமிய பெண்களை மிகச்சிறந்த அழைப்புப் பணியாற்றும் துறைக்கு கொண்டு செல்வதும் எங்களின் நோக்கம். குறிப்பிட்ட தலைப்பில் எவ்வாறு நாம் இஸ்லாத்தை எடுத்துரைப்பது என்பதை இந்நிகழ்ச்சியின் மூலம் டீன் ஏஜ் பெண்களுக்கு பயிற்சி அளிப்போம். இஸ்லாத்தின் வளர்ச்சியில் பெண்களின் பங்கு என்ன என்பதை இனி நீங்கள் எங்கள் நிகழ்ச்சியில் பார்க்கலாம்' என்கிறார் முக்தார்.

சோபியா அஹமது என்ற எகிப்திய பெண்மணி குர்ஆனை தவறில்லாமல் எப்படி ஓதுவது என்ற வகுப்பை இந்நிகழ்ச்சியில் எடுக்கிறார். 'இன்றைய நவீன உலகில் தொலைக்காட்சி ஒரு முக்கிய அங்கமாகிறது. இதை ஏன் நாம் பயனுள்ள வகையில் பயன் படுத்தக் கூடாது?' என்று கேள்வி எழுப்புகிறார்.

20 லிருந்து 30 வயது வயதுக்குட்பட்ட பல முஸ்லிம் பெண்கள் இந்நிகழ்ச்சியில் தலையில் முக்காடிட்டு ஆர்வமுடன் கலந்து கொண்டனர். சிலர் தங்களின் பெற்றோரையும் துணைக்கு அழைத்து வந்திருந்தனர்.

போட்டியின் முடிவில் பல சிறந்த பரிசுகளும் காத்திருக்கிறது. கார், வேலைவாய்ப்பு, மதினா யுனிவர்சிடியில் நான்கு ஆண்டு படிக்க ஸ்காலர்ஷிப் போன்றவை ஆண்கள் பரிவில் அளிக்கப்பட்டன. இனி இப்பரிசுகள் பெண்கள் பிரிவுக்கும் கிடைக்கும்.

தகவல் உதவி: அரப் நியூஸ்

இன்று தமிழ் இணைய உலகிலும் அழைப்புப் பணியை முஸ்லிம் பெண்கள் சிறப்பாக செய்து வருகின்றனர். சகோ. அன்னு, சகோ ஹூசைனம்மா, சகோ. சினேகிதி, சகோ. மலிக்கா, சகோ. ஜலீலா, சகோ. ஆயிஷா என்று ஒரு பெரிய பட்டியலே பெண் பதிவர்கள் உள்ளனர். பல பெயர்கள் ஞாபகத்திலும் வரவில்லை. இது ஒரு சிறந்த மாற்றம்.

ஏனெனில் முகமது நபியின் பல ஹதீதுகளை அவரின் மனைவிகளே அறிவித்துள்ளனர். அன்னை ஆயிஷாவின் பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஒரு போருக்கு தலைமையேற்றே சென்றிருக்கிறார்கள். போர்க்கலங்களில் மருத்துவர்களாகவும் பல பெண்கள் பணியாற்றியுள்ளனர். முகமது நபியிடம் ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் தொடர்ந்து கேள்வி கேட்ட வண்ணமாகவே பல பெண்கள் இருந்திருக்கிறார்கள்.

இஸ்லாமிய வாழ்வு முறையில் அவரவர்களின் உடல் கூற்றின் அடிப்படையில் ஆண்களும் பெண்களும் தங்கள் வேலைகளை எந்த வொரு சிரமமும் இல்லாமல் செவ்வனே செய்து வருகின்றனர். இதுவரை எந்த குழப்பமும் இல்லை.

தற்போது பள்ளி கல்லூரிகளில் அட்மிஷன் நடந்து வருகிறது. சில பெற்றோர் தங்களின் பெண் பிள்ளைகளை இன்ஜினியரிங் படிப்பில் சேர்க்க ஆசைப்படுகின்றனர். சேர்ப்பதற்கு முன்பு அந்த பெண் படித்து முடித்து இஸ்லாம் வழங்கும் கட்டுப்பாடுகளோடு வேலைக்கு செல்ல முடியுமா என்று முன் கூட்டியே யோசிப்பது நல்லது. அவர்களின் உடற்கூற்றுக்கு எற்றவாறு ஆசிரியர் தொழில், கணிணித் துறை, மருத்துவத்துறை, போன்ற துறைகளை எடுப்பதே நல்லது. சிவில், மெக்கானிக், போன்ற துறைகளை இஸ்லாமிய பெண்கள் தவிர்த்துக் கொள்வது நல்லது. எனது உறவு முறை பெண் ஒருவர் படித்து முடித்து விட்டு ஹவுஸ் வொய்ஃபாக இருக்கிறார். வேலைக்கு செல்ல கணவன் அனுமதிப்பதில்லை. இஸ்லாம் இதை பெண்கள் மீது கடமையாக்கவும் இல்லை. விரும்பியவர்கள் வேலை செய்யலாம்.

'சிலரை மற்றும் சிலரை விட இறைவன் மேன்மைபடுத்தியுள்ளதில் பேராசை கொள்ளாதீர்கள்.ஆண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. பெண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு'-குர்ஆன் 4:32

சமத்துவம் என்ற பெயரில் ஆண் பெண் அனைவரையும் இஸ்லாம் ஒன்றாக பார்க்கவில்லை. உடற்கூறின் அடிப்படையில் சில சலுகைகளை ஆண்களுக்கும் சில சலுகைகளை பெண்களுக்கும் வழங்குகிறது.

1.குடும்பத்துக்கான மொத்த செலவுகளையும் ஆண்களே சுமக்க வேண்டும் என்பது இஸ்லாம் இடும் கட்டளை. பெண்கள் விரும்பினால் அவர்களும் பொருள் ஈட்டலாம்.

2.எதிரிகள் தாக்க வந்தால் போரிடுவது இஸ்லாமிய ஆணுக்கு கடமை. இதில் பெண்கள் விரும்பினால் கலந்து கொள்ளலாம்.

3.ஐந்து வேளை தொழுகைக்கும் ஆண்கள் அவசியம் பள்ளியில் சென்று கூட்டாக தொழுக வேண்டும் என்பது கட்டாய கடமை. ஆனால் பெண்கள் விரும்பினால் பள்ளிக்கு செல்லலாம். விரும்பாவிட்டால் வீட்டிலேயே தொழுது கொள்ளலாம்.

4.தாய்மை என்ற மிகப்பெரிய பதவியை பெண்களுக்கு கொடுத்த இறைவன் ஆண்களுக்கு அத்தகைய பெருமையை கொடுக்கவில்லை. ஆண்கள் விரும்பினாலும் நடக்காது.

5.திருமணம் என்ற பந்தத்தில் நுழையும் போது மணப்பெண் மஹராக கேட்கும் ஒரு பெரும் தொகையை ஆண் கொடுக்க வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிடுகிறது. சவுதியில் மணமகனுக்கு உதவித் தொகை சவுதி அரசால் வழங்கப்படுகிறது என்பதிலிருந்து இதன் முக்கியத்துவத்தையும், இதன் பெறுமதியையும் அறிந்து கொள்ளலாம். வீடு, நகை, ரொக்கம், துணிமணிகள் அனைத்தும் மணமகன் தனது சம்பாத்தியத்தின் மூலம் மணமகளுக்கு அளிக்க வேண்டும். மணநாள் அன்று உடுத்தும் உடை கூட மணமகன் கொடுக்க வேண்டும்.

மணமகளோ எந்த டென்ஷனும் இல்லாமல் கையை வீசிக் கொண்டு மணமகன் வீட்டுக்கு வரலாம்.

'பெண்களுக்கு அவர்களின் மணக் கொடைகளை கட்டாயமாகக் கொடுத்து விடுங்கள். அவர்களாக மனமுவந்து அதில் எதையேனும் விட்டுக் கொடுத்தால் மன நிறைவுடனும் மகிழ்ச்சியுடனும் அதை உண்ணுங்கள்.'-4:4

'சரி பொழச்சுப் போ' என்று பெருந்தன்மையாக விட்டுக் கொடுப்பதும் பெண்ணின் உரிமையாக இங்கு குர்ஆன் குறிப்பிடுகிறது.

இங்கு நம்நாட்டை ஒப்பிடக் கூடாது. எல்லாம் தலைகீழ். :-(

கட்டாயமாக வேலைக்கு செல்லும் பெண்கள்:

சில குடும்பங்களில் வறுமையின் காரணமாக பெண்களை வேலைக்கு அனுப்புகிறார்கள். அதில் தவறில்லை. ஆனால் வசதியானவர்கள் கூட காலத்தின் கட்டாயம் என்று பெண்களை வேலைக்கு அனுப்புகிறோம். இதனால் எழும் பிரச்னைகளைப் பற்றி யாருமே சிந்திப்பதில்லை. தினத் தந்தியில் வந்த செய்தியை படித்துப் பார்த்தால் அதன் விபரீதம் புரியும்.

31
டிசம்பர் 2009
வீட்டில் கணவரின் சந்தேகப் பார்வை; பஸ்சில் இடிமன்னர்களின் குறும்பு; அலுவலகத்தில் உயர்
அதிகாரிகளின் காமப் பார்வை!

வேலைக்கு போகும் பெண்கள் சந்திக்கும் `செக்ஸ்' கொடுமைகள்!

போலீஸ் கமிஷனர் முன்னிலையில் பெண்கள் பரபரப்பு பேச்சு

சென்னை, டிச.31-

வேலைக்குப் போகும் பெண்கள், தாங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைகள், `செக்ஸ்' கொடுமைகள் பற்றி நேற்று சென்னையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் போலீஸ் கமிஷனர் முன்னிலையில் பரபரப்பான தகவல்களை வெளியிட்டனர்.

பெண்களின் பாதுகாப்பு

`
பாதுகாப்பான சென்னை' என்ற இயக்கத்தை கமிஷனர் ராஜேந்திரன் தொடங்கி உள்ளார். அதன் அடிப்படையில் சென்னை நகரில் வசிக்கும் பலதரப்பட்ட மக்களையும் தனது அலுவலகத்துக்கு வரவழைத்து ஆலோசனைக் கூட்டங்களை கமிஷனர் ராஜேந்திரன் நடத்தி வருகிறார். வேலைக்குப் போகும் பெண்களின் பாதுகாப்பு தொடர்பாக நேற்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்திற்கு கமிஷனர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். வேலைக்குப் போகும் பலதரப்பட்ட பெண்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அரசு அலுவலகங்கள், வங்கிகள், கல்வி நிறுவனங்கள், ஆஸ்பத்திரிகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலைக்குப் போகும் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு, வேலைக்குப் போகும் பெண்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்தும், அவர்களுக்கு ஏற்படும் `செக்ஸ்'
தொல்லைகள் குறித்தும் இவற்றையெல்லாம் தீர்க்க போலீசார் என்னென்ன பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் ஆவேசமாகவும், நகைச்சுவையாகவும், உணர்ச்சிகரமாகவும் தங்கள் கருத்துக்களையும், உள்ளக் குமுறல்களையும் கொட்டினார்கள்.

மூன்று விதம்

கமிஷனர் முன்னிலையில் இந்த பெண்கள் கொட்டிய உள்ளக்குமுறல்கள் வருமாறு:-

வேலைக்குப் போகும் பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகளை மூன்று விதமாகச் சொல்லலாம். வீட்டில் சந்திக்கும் பிரச்சினை, அலுவலகத்துக்குச் செல்லும் வழியில் ரோட்டில் நடந்து செல்லும் போது, பஸ் ஏற காத்திருக்கும் போது, பஸ்களில், ரெயில்களில் பயணம் செய்யும் போது ஏற்படும் உடல், உள்ள ரீதியான மற்றும் பாலியல் ரீதியான தொல்லைகள், அலுவலகத்தில் தனக்கு மேலும், கீழும் வேலை பார்க்கும் ஆண் அதிகாரிகள் கொடுக்கும் `செக்ஸ்' தொல்லைகள் என்று மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

வேலைக்கு பெண்கள் புறப்படும் போது நன்றாக ஆடை அணிந்து, அலங்காரம் செய்து சென்றால் சில கணவர்கள் பொறாமையோடு பார்க்கிறார்கள். இன்னும் சில கணவர்கள் சந்தேகப் பார்வை பார்க்கிறார்கள். இதனால் கணவர்களோடு வீட்டில் கடும் பிரச்சினைகளைச் சந்திக்கும் நிலை ஏற்படுகிறது. பையைத் தோளில் தொங்கப் போட்டுக் கொண்டு வீட்டுக்கு வெளியே வந்துவிட்டால் பலரும் ஒவ்வொரு விதமாகப் பார்க்கிறார்கள். ரோட்டில் தனியாக நடந்து செல்லும் போது எதிரில் வருபவர் சேட்டை பார்வை வீசுவார். பஸ் ஏற பஸ் நிலையத்தில் காத்திருக்கும் போது, வயதானவர்கள் முதல் இளைஞர்கள் வரை கிண்டல் பாட்டு பாடுகிறார்கள். பஸ்சில் ஏறிவிட்டால் போதும் இடிமன்னர்களின் தொல்லை தாங்க முடியவில்லை. பஸ் டிரைவர் `பிரேக்' போட மாட்டாரா என்று பல காமுகர்கள் ஏக்கத்தோடு நிற்கிறார்கள்.

`
பிரேக்' அடித்தால் போதும் அந்தச் சாக்கில் பெண்கள் மீது சாய்ந்து அற்ப சுகம் காண்கிறார்கள்.

வெட்கத்தை விட்டுச் சொல்கிறோம், அவ்வாறு சாய்கிறவர்கள் முதலில் மார்பை குறி வைத்துத் தான் பிடிக்கிறார்கள். நாங்கள் அவர்களோடு சண்டை போடுவதா, எச்சரிக்கை செய்வதா, கன்னத்தில் அறைவதா என்பது புரியாமல் சில நேரங்களில் இடி மன்னர்களின் தாக்குதலைத் தாங்கிக் கொண்டு மவுனமாக அழுதுவிட்டுத் தான் வருகிறோம்.

மிரட்டல்

ஒரு வேளை எதிர்த்துச் சண்டை போட்டால், சிலர் பிளேடால் கீறி விட்டு ஓடிவிடுகிறார்கள்.
இன்னும் சிலர் கேவலமாகத் திட்டுகிறார்கள். இதையெல்லாம் சந்திக்க முடியாமல் நாங்கள் தவிக்கிறோம்.

அலுவலகத்துக்குச் சென்று விட்டால் உயர் அதிகாரிகளும், கீழ் அதிகாரிகளும் செய்யும் பாலியல் தொல்லைகள் சொல்லிமாளாது. இப்போது காணாத குறைக்கு செல்போனில் வேறு `ஓடிப் போகலாம் வர்றீயா' என்று கூப்பிடுகிறார்கள். செல்போன்களில் ஆபாசப் படங்களையும் அனுப்புகிறார்கள். எம்.ஜி.ஆர். ஒரு சினிமா படத்தில் `இப்படித் தான் இருக்க வேண்டும் பொம்பளை' என்ற பாடலை பாடினார். அந்தக் காலம் எல்லாம் இப்போது மலை ஏறிவிட்டது.

பெண்களாகிய நாங்கள் எங்களைப் பாதுகாத்துக் கொள்ள ஏதாவது செய்ய வேண்டிய நிலையில் உள்ளோம். போலீசார் எங்களுக்கு உற்ற துணையாக இருந்து பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.

இருட்டான இடங்களில்...

பெண்கள் சில நேரங்களில் வேலைக்குப் போய்விட்டு இரவு வெகு நேரம் கழித்து வீடு திரும்ப
வேண்டிய நிலை உள்ளது. அப்போது அவர்கள் ரோடுகளில் தனியாக நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இவ்வாறு பெண்கள் தனியாக நடந்து செல்லும் இருட்டான பகுதிகளில் போலீசாரை ரோந்து பணியில் ஈடுபடுத்த வேண்டும். சுப்ரீம் கோர்ட்டு சொல்லியபடி, பெண்களின் சுய பாதுகாப்புக்காக `விசாகா' கமிட்டிகளை அனைத்து பகுதிகளிலும் பலமாக நிறுவுவதற்கு போலீசார் உரிய ஏற்பாடு செய்ய வேண்டும்.

போலீஸ் நிலையத்துக்குப் புகார் கொடுக்க சென்றால் புகார்களை வாங்காமல் இழுத்தடிப்பார்கள்,
உடனடியாக எப்.ஐ.ஆர். போட மாட்டார்கள் என்ற தவறான எண்ணம் பெண்கள் மத்தியில் உள்ளது. அதைப் போக்கும் வகையில் பெண்கள் கொடுக்கும் புகார்கள் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க ஆவன செய்யவேண்டும்.

பஸ்களில்

தற்போது பெண்கள் செல்லுவதற்கு தனி ரெயில் விடப்பட்டுள்ளது. அது போல, பெண்கள் பயணம் செய்வதற்காக அதிகளவில் மகளிர் பஸ்களை விட வேண்டும். பொதுவான பஸ்களில் பெண்களை முன்பக்கத்தில் ஏறுவதற்கும், ஆண்களை பின்பக்கத்தில் ஏறுவதற்கும் விசேஷ ஏற்பாடு செய்ய வேண்டும். அதோடு பொதுவான பஸ்களில் பெண் கண்டக்டர், ஆண் கண்டக்டர் என்று இரண்டு கண்டக்டர்களை நியமிக்க வேண்டும். தைரியமாக புகார் கொடுக்க வருவதற்கு பெண்கள் மத்தியில் இது போன்ற கூட்டங்களை நடத்தி போலீசார் விழிப்புணர்வு பிரசாரம் செய்ய வேண்டும்.

அலுவலகங்களில், பெண்களுக்கு `செக்ஸ்' தொல்லை கொடுப்பவர்களுக்கு என்ன தண்டனை வழங்கப்படும் என்பதையும், பாலியல் தொல்லைக்கு ஆளாகும் பெண்கள் தைரியமாக புகார் கொடுக்க முன் வர வேண்டும் என்ற வாசகத்தையும் எழுதி போட வேண்டும்.

நாங்கள் பஸ்சில் பயணம் செய்யும் போது பல்வேறு தந்திரங்களைக் கையாண்டு தான்
இடிமன்னர்களிடமிருந்து எங்களைக் காப்பாற்றிக் கொள்கிறோம். சில நேரங்களில் முக்கியமான
போலீஸ் அதிகாரிகளின் பெயரைச் சொல்லி, அவர்கள் எங்கள் உறவினர்கள் என்று சொல்லி இடிமன்னர்களை மறைமுகமாகப் பயமுறுத்துகிறோம்.

பெங்களூரில் ஆட்டோ டிரைவர்கள் தங்களது பேட்ஜ், உடை போன்றவற்றை அணிந்துகொண்டு நாகரிகமாக நடந்து கொள்கிறார்கள். ஆட்டோவிப் போட்டு இருக்கிறார்கள். சென்னை நகரிலும் ஆட்டோ டிரைவர்களை இது போல் நடப்பதற்கு போலீசார் அறிவுறுத்த வேண்டும்.

இவ்வாறு பெண்கள் தங்களது உள்ளக் குமுறல்களை கொட்டி பேசினார்கள்.
-31
டிசம்பர் 2009

'தமது பார்வைகளை தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளை பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்கு கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும்.......அவர்கள் மறைந்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்க்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம்.'-குர்ஆன் 24:31

'சிலரை மற்றும் சிலரை விட இறைவன் மேன்மைபடுத்தியுள்ளதில் பேராசை கொள்ளாதீர்கள்.ஆண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. பெண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு'-குர்ஆன் 4:32

8 comments:

naren said...

சகோ. எனக்கு சில கேள்விகள்.
ஒரு நாட்டில் பேர் முஸ்லிம் அல்லாத நூறு விழுக்காடு உண்மையான முஸ்லிம்கள் என்று வைத்துக்கொள்வோம்.

1.அப்பொழுது நீங்கள் கூறிப்பிட்ட பெண்களுக்கான நெறிகள் அமுல்படுத்தப் படுமா. அப்படி அமல் படுத்தினால் முழுமையாக இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட ஆண்கள்,நீங்கள் சொல்லும் தவறுகளை செய்வார்கள் என்றாகி விடுமே.
அப்படி என்றால் தனி மனித ஒழுக்கத்திற்க்கு இஸ்லாம் சம்பந்தமில்லை மனிதனின் சுய முடிவே காரணம் என்றாகிவிடுமே.

24:31 வரும் “ ஆண்களில்(பெண்கள் மீது)ஆசையில்லாப் பணியாளர்கள்” விளக்கம் தேவை.

suvanappiriyan said...

சகோ. நரேன்!

//அப்படி என்றால் தனி மனித ஒழுக்கத்திற்க்கு இஸ்லாம் சம்பந்தமில்லை மனிதனின் சுய முடிவே காரணம் என்றாகிவிடுமே.//

உதாரணத்திற்கு சவூதி அரேபியாவை எடுத்துக் கொள்வோம். பெண்களுக்கு எதிராக கற்பழிப்பு, ராகிங் போன்ற கொடுமைகளுக்கு இங்கு கடுமையான தண்டனை உண்டு. அழகிய பெண்கள் நம்மை கடந்து சென்றாலும் சட்டத்தை கருத்தில் கொண்டு ஆண்கள் தாங்கள் பாட்டுக்கு தங்கள் வழியில் செல்வதைப் பார்க்கிறோம். இதே சட்டம் இந்தியாவைப் போல் தளர்த்தப்பட்டால் பாலியல் கொடுமைகள் கணக்கற்று இங்கும் பெருகி விடும்.

உலகம் முழுவதும் மனிதன் ஒரே உணர்வாலேயே படைக்கப்பட்டுள்ளான். சிலர் தங்களின் உணர்வுகளை அடக்கிக் கொளவர். சிலரால் முடியாது. முடியாத சிலருக்காகத்தான் இந்த சட்டம்.

சவுதியை பொறுத்தவரை ஒரு பெண் விரும்பினால்தான் ஏதும் தவறுகள் செய்ய முடியும்.

இந்தியாவில் பெண் விரும்பா விட்டாலும் வலுக்கட்டாயப் படுத்தப் படுகிறாள். இதைத்தான் தினத் தந்தியின் செய்திகள் நமக்கு உணர்த்துகிறது.

//24:31 வரும் “ ஆண்களில்(பெண்கள் மீது)ஆசையில்லாப் பணியாளர்கள்” விளக்கம் தேவை.//

வயது முதிர்ந்த முதியவர்கள். கிழப் பருவம் அடைந்து பெண்களின் மீது நாட்டமில்லாது போகும் வயதிலுள்ள பணியாளர்களின் முன்பாக பெண்கள் சாதாரணமாக வருவதும் பேசுவதும் தடை செய்யப்படவில்லை என்று அறியலாம். வழக்கத்தில் இந்த முறை அனைவராலும் கடைபிடிக்கப்படுகிறது.

suvanappiriyan said...

சகோ. திராவிடன்!

//பெண்ணடிமையா ? பெண்ணுரிமையா ?//

வருகைக்கும் சுட்டிக்கும் நன்றி!

rabbani said...

அஸ்ஸலாமு அலைக்கும்
நல்ல பதிவு

ஷர்புதீன் said...

\\இஸ்லாமிய வாழ்வு முறையில் அவரவர்களின் உடல் கூற்றின் அடிப்படையில் ஆண்களும் பெண்களும் தங்கள் வேலைகளை எந்த வொரு சிரமமும் இல்லாமல் செவ்வனே செய்து வருகின்றனர். இதுவரை எந்த குழப்பமும் இல்லை.//

பெண்கள் குறித்த எனது பார்வைக்கும் இதற்கும் ஒரு சதவீதம் கூட வித்தியாசம் இல்லை., எனது பதிவில் இடுவதற்காக வைத்திருந்த விஷயங்கள் இதோடு 90 % உடன்படுகிறது ., மீதியை நான்தான் இப்பொழுது திருத்தபோகிறேன்

suvanappiriyan said...

சகோ. ஷர்புதீன்!

//பெண்கள் குறித்த எனது பார்வைக்கும் இதற்கும் ஒரு சதவீதம் கூட வித்தியாசம் இல்லை., எனது பதிவில் இடுவதற்காக வைத்திருந்த விஷயங்கள் இதோடு 90 % உடன்படுகிறது ., மீதியை நான்தான் இப்பொழுது திருத்தபோகிறேன்//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம் சகோ. ரப்பானி!

//அஸ்ஸலாமு அலைக்கும்
நல்ல பதிவு//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

naren said...

சகோ.விளக்கத்திற்கு நன்றி. உங்கள் விளக்கத்திலிருந்து எனக்கு புரிவது, தனிமனித ஒழுக்கம் என்பது, அந்த தனிமனிதனின் சுய கட்டுப்பாடும் ஒரு தேசத்தின் சட்டதிட்டங்களே தீர்மானிக்கின்றன. தனிமனித ஒழுக்கத்துற்கும் மததிற்கும் சம்பந்தமில்லை.