Followers

Showing posts with label பெற்றோர். Show all posts
Showing posts with label பெற்றோர். Show all posts

Friday, December 12, 2014

எனது சிறிய தந்தையாரின் 'நிலையான தர்மம்'



எனது சிறிய தந்தையார் (அதாவது எனது தாயாரின் உடன் பிறந்த சகோதரியின் கணவன்) ஹாஜி ஏ.தாஜூதீன் அவர்கள் தனது தந்தை ஜனாப் அப்துல் ஹமீது அவர்களின் பெயரால் எங்கள் ஊர் கிரசண்ட் பள்ளிக்கு நன்கொடையாக கொடுத்துள்ள கட்டிடத்தைத்தான் நாம் பார்க்கிறோம்.

நபி அவர்கள் பின்வருமாறு நவின்றுள்ளார்கள். ஒரு மனிதன் மரணித்து விட்டால் அவனுடைய அனைத்துச் செயல்களும் துண்டிக்கப்பட்டு விடுகின்றன. ஆனால் மூன்று விஷயங்கள் மட்டுமே எஞ்சியிருக்கும்””.

நிலையான தான தர்மம் (ஸதகத்துல் ஜாரியா)
பயனளிக்கக் கூடிய அறிவு
தனக்காகப் பிரார்த்திக்கக் கூடிய சிறந்த பிள்ளை

ஆதாரம் : முஸ்லிம். (3:1631), அபூதாவூத் (3:2880), ஸுனன் அத்திர்மிதி (3:1376), ஸுனன் அந்நஸாயீ (6:3549), முஸ்னத் அஹ்மத் (2:316)

இந்த நபி மொழிதான் எனது சிறிய தந்தையாரால் இங்கு நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. இந்த கட்டிடம் மூலம் இனி வரும் காலமெல்லாம் எத்தனை மக்கள் கல்வி கற்கிறார்களோ அதன் நன்மைகள் அனைத்தும் எனது சிறிய தந்தையின் தகப்பனாருக்கு சென்று கொண்டே இருக்கும். இந்த வழிமுறையை நம்மில் எத்தனை பேர் பின்பற்றுகிறோம்? கோடீஸ்வரர்களும் செல்வந்தர்களும் நிறைந்த நமது இஸ்லாமிய ஜமாத்துகளில் உள்ள எத்தனை பேர் தனது பெற்றோருக்காக இது போன்ற நன்மையான செயல்களை செய்ய முன் வருகிறோம். அறியாத மக்களுக்கு இந்த செய்தியை எத்தனை பேர் எத்தி வைத்திருக்கிறோம்.

தமிழக கிராமங்களில் உள்ள அனைத்து செல்வந்தர்களும் இது போன்ற பயனுள்ள செலவினங்களை செய்தால் மிகப் பெரிய புரட்சியை நமது கிராமங்களில் ஏற்படுத்தி விட முடியாதா?

ஆனால் பெரும்பாலும் நடப்பதென்ன? இறந்தவுடன் பெரிய சட்டியை வீட்டில் வைத்து நெய் மணக்க நெய் சோறு ஆக்கி சந்தோஷமாக சாப்பிடுகிறோம். ஆனால் நபிகள் நாயகம் அவர்கள் இறந்த வீட்டில் சாப்பாடு சமைக்காமல் பக்கத்து வீட்டிலிருந்து சாப்பாட்டை வரவழைத்து 'சோகமாக இருக்கும் இறந்த அந்த குடும்பத்துக்கு இந்த உணவை கொண்டு செல்லுங்கள்' என்று கட்டளையிட்டதை பார்க்கிறோம். ஆனால் பெரும்பாலும் நாம் செய்வதோ நபி மொழிக்கு மாற்றமாக...

அடுத்து 3 ஆம் நாள், 7 ஆம் நாள், 40 ஆம் நாள், ஒரு வருடம் என்று கணக்கு வைத்து பணக்காரர்களையும் உறவினர்களையும் அழைத்து இறந்தவர் பெயரால் சாப்பாடு ஆக்கி உண்டு கழிக்கிறோம். இந்த பழக்கமானது மற்ற மதத்திலிருந்து நம்மவர்கள் கடன் வாங்கிக் கொண்ட பழக்கம். இது முற்றிலும் தடுக்கப்பட வேண்டிய பழக்கம்.

எனவே மாற்று மத கலாசாரங்களை ஒழித்து இஸ்லாம் நமக்கு காட்டித் தந்த நிலையான தர்மங்களான குளம் அல்லது கிணறு வெட்டுதல்: கல்வி சாலை அமைத்தல்: நூலகங்கள் அமைத்தல்: போன்ற நிலையான தர்மங்களை நமது சக்திக்கு ஏற்றவாறு நமது பெற்றோருக்கு செய்து அவர்களின் மறு உலக வாழ்வை சிறப்பாக்க முயற்சிப்போம்.

மகன் தந்தைக்கு ஆற்றும்உதவி இவன்தந்தை
என்னோற்றான் கொல்எனும் சொல்
-குறள் எண்:70

சிறந்த கல்வியை தன் மகனுக்கு கொடுத்த ஒரு தந்தைக்கு அந்த மகன் பிரதிபலனாக செய்யக் கூடியது என்னவென்றால்.....

'இவ்வளவு நல்லொழுக்கமுடைய ஒரு பிள்ளையை பெறுவதற்கு என்ன தவம் இறைவனிடம் செய்தாரோ இவரது தந்தை' என்று உலக மக்கள் வியக்கும் வண்ணம் தனது வாழ்வை சிறப்புற அமைத்துக் கொள்கிறாரே அத்தகைய மனிதனைப் போல் தனது வாழ்வையும் அமைத்துக் கொள்ள வேண்டும் என்கிறார் வள்ளுவர்.

Saturday, September 06, 2014

உயிரைப் பணயம் வைத்து பெற்றோரைக் காப்பாற்றிய இளைஞன்!



சவுதியின் ரியாத்திலிருந்து கிட்டத்தட்ட 250 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஹஃப்ரல்பாதின் என்ற ஊர். இங்கு சமீபத்தில் ஒரு நெகிழ்ச்சியான நிகழ்வு ஒன்று நடந்துள்ளது. துர்க்கி அல் துவாய்க் என்ற சவுதி இளைஞரைப் பற்றிய செய்தி இது.

இவரது வீட்டின் இரண்டாவது மாடியில் இந்த இளைஞரின் பெற்றோர்கள் வசித்து வந்தனர். மின் கசிவின் காரணமாக திடீரென்று பெற்றோர் இருந்த மேல் மாடி அறை தீப்பிடித்துக் கொண்டது. தீ வேகமாக அறை முழுவதும் பரவ ஆரம்பித்தது. கீழே இருந்த துர்க்கி வேகமாக மேல் தளத்துக்குச் சென்று தீப்பிடித்த அறையினுள் நுழைந்தார். தீயின் கோர பிடியில் சிக்கித் தவித்த தனது பெற்றோர் இருவரையும் தூக்கிக் கொண்டு வந்து அறையின் வெளியில் போட்டார். இவ்வளவு முயற்சி செய்தும் தீயின் கோரதாண்டவம் மூவரின் உடலையும் பதம் பார்த்தது. மகனையும் பெற்றோரையும் வேகமாக மருத்துவ மனைக்கு எடுத்துச் சென்று முதலுதவி செய்தனர். தீயின் தாக்கம் அதிகமாக தாக்கியிருந்ததால் இவர்களை ரியாத்துக்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். வயதான தாய் தந்தையர் தீயின் காயங்களால் அவதிப்பட்டு சில நாட்களுக்கு முன்பு இருவருமே இறந்து விட்டனர். மகன் காப்பாற்றியதால் ஏதோ கொஞ்ச காலம் இவர்களின் வாழ்வை உலகில் ஓட்ட முடிந்தது.

துர்க்கிக்கும் உடலில் பலத்த தீப்புண் காயங்கள் ஏற்பட்டுள்ளது. உடலின் 80 சதவீதமான பாகங்கள் தீயினால் பாதிக்கப்பட்டுள்ளன. தீவிர சிகிச்சைப் பிரிவில்தான் இன்றும் உள்ளார். இவரது இளைய சகோதரர் சுல்தான் செய்தியாளர்களிடம் 'எனது சகோதரன் இன்னும் அபாய கட்டத்தை தாண்டவில்லை. உடலில் 80 சதவீதம் காயம் ஏற்பட்டுள்ளது. தாய் தந்தையருக்காக தனது உயிரையும் பொருட்படுத்தாமல் தீயினுள் புகுந்த எனது சகோதரன் எங்கள் குடும்பத்தின் ஹீரோவாக பார்க்கப்படுகிறான். எனது சகோதரன் பிழைப்பது கஷ்டம் என்கின்றனர் மருத்துவர்கள். இறைவனின் நாட்டம் அவ்வாறு இருக்கும் போது நம்மால் என்ன செய்ய முடியும். எனது சகோதரனுக்காக பிரார்த்தியுங்கள்' என்று கண்ணீர் மல்க கூறினார்.

சாராயம் குடிக்க பணம் தராத தனது தாயை ஒரு மகன் வெட்டிக் கொன்றதை சில நாட்களுக்கு முன் பத்திரிக்கையில் படித்தோம். அதே வயதுடைய துர்க்கி தனது பெற்றோரைக் காப்பாற்ற தீயினுள் புகுந்து இன்று தனது உயிரையும் விடும் நிலைக்கு சென்றுள்ளார்.

மனிதர்களில்தான் எத்தனை நிறங்கள்!

குறள் 70:

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்.


"ஆகா! இவனைப் பிள்ளையாகப் பெற்றது இவன் தந்தை பெற்ற பெரும்பேறு" என்று ஒரு மகன் புகழப்படுவதுதான், அவன் தன்னுடைய தந்தைக்குச் செய்யக்கூடிய கைம்மாறு எனப்படும்.

-----------------------------------------------------

அவனையன்றி வேறு எவரையும் நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான்; அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால், அவர்களை உஃப் (ச்சீ...) என்று சடைந்தும் சொல்ல வேண்டாம் – அவ்விருவரையும் உம்மிடத்திலிருந்து விரட்ட வேண்டாம் – இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக! இன்னும், இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக; மேலும், ‘என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னைப் பரிவோடு அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக!’ என்று கூறிப் பிரார்த்திப்பீராக!

(அல்-குர்ஆன் 17:23-24)

தகவல் உதவி
சவுதிகெஜட்
06-09-2014