தமுமுக வளர்ச்சியுறுவதற்காக அரும்பாடு பட்டவர்களுள் நானும் ஒருவன். கடந்த 20 வருடங்களுக்கு முன்பு பிஜேயையும், பாக்கரையும் வைத்து பல எதிர்ப்புகளுக்கிடையே வரதட்சணை ஒழிப்பு கூட்டத்தை பிரம்மாண்டமான மாநாட்டைப் போல இளைஞர்களாகிய நாங்கள் நடத்திக் காட்டினோம். பெரும் கூட்டம் கூடுவதைப் பார்த்தவுடன் அரசியல் ஆசை ஒரு சிலருக்கு வர ஆரம்பித்தது.
தஞ்சை பேரணியில் ஒரு சிலர் என் காது படவே 'இந்த தவ்ஹீத் காரர்களை வெளியாக்கியதால்தான் நாம் அரசியலில் பிரகாசிக்க முடியும், ஓட்டும் நமக்கு விழும்' என்று ஒருவர் ஆக்ரோஷமாக கத்திக் கொண்டிருந்தார்.
அன்று தமுமுகவை ஊர் ஊராக கொண்டு சென்று அறிமுகப்படுத்தியது தவ்ஹீத் வாதிகள்தான். பேராசிரியர் ஜவாஹிருல்லாவோ அல்லது தமீமுன் அன்சாரியோ அன்று தமிழகத்தில் அந்த அளவு இஸ்லாமியர் மத்தியில் பிரபலமாகியிருக்கவில்லை. இவர்களை மக்கள் மன்றத்தில் கொண்டு சென்று பிரபலப்படுத்தியது ஏகத்துவ வாதிகள்தான்.
ஏறி வந்த ஏணியை எட்டி உதைப்பதுபோல் அன்று தமுமுகவுக்காக உழைத்த ஏகத்துவ வாதிகளை வெளியேற்றினர். அரசியலில் நுழைந்து பெரும் புரட்சியை செய்து விடலாம் என்று நினைத்தனர். ஆனால் இன்று பத்தோடு பதினொன்றாக தமுமுகவும் கால ஓட்டத்தில் கரைந்து விட்டது.
அன்று தமுமுக உடையாமல் இருந்திருந்தால் இன்று முழு இந்தியாவுக்கும் முன்னோடி மாநிலமாக தமிழகம் இருந்திருக்கும். அதனை கெடுத்தார்கள் அரசியல் ஆசை பிடித்தவர்கள். இரண்டு எம்எல்ஏ சீட்டை வைத்துக் கொண்டு இந்த நான்கு வருடத்தில் தமுமுக சாதித்ததைக் காட்டிலும் தேர்தலில் நிற்காத 'தவ்ஹீத் ஜமாத்' சாதித்து காட்டியுள்ளது. மக்களின் அதரவும் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போகிறது. ஒரு தெருக் கூட்டம் ஏற்பாடு செய்தாலும் மாநாட்டைப் போல மக்கள் கூடி விடுகின்றனர். அந்த அளவு மக்களின் நம்பிக்கை பெற்ற இயக்கமாக தவ்ஹீத் ஜமாத் பெயர் பெற்றுள்ளது.
கேரளாவைப் போன்று முஸ்லிம்கள் தனித்து வெற்றி பெறக் கூடிய வகையில் தொகுதிகள் அமைந்திருந்தால் தான் நம்மால் அரிசியலில் கேரள மக்களைப் போன்று ஏதும் சாதிக்க முடியும். 232 எம் எல் ஏக்கள் போடும் கூச்சலில் ஜவாஹிருல்லாவின் குரலும் தமீமுன் அன்சாரியின் குரலும் சபை ஏறாது. இதை எல்லாம் முன்பே அறிந்ததால்தான் தேர்தலில் நிற்கக் கூடாது என்பதில் பிஜே இன்று வரை பிடிவாதமாக நிற்கிறார்.
தற்போது அன்சாரியை நீக்கியுள்ளதாக செய்தி வருகிறது. வருத்தத்திற்குரிய செய்தி. இவரும் ஒரு புது கட்சி தொடங்கலாம். இது நம்மை மேலும் பலவினப்படுத்தும்.
பிரிந்து சென்ற பழைய நண்பர்கள் மீண்டும் தவ்ஹீத் ஜமாத்தில் இணைந்து ஏகத்துவ புரட்சி வீறு கொண்டு எழ ஒன்றிணைவார்களாக!
இந்துத்வா சக்திகள் இந்த நாட்டை கூறு போடும் வேளையில் இறங்கியிருக்கும் இந்த நேரத்தில்தான் ஏகத்துவத்தின் பணி முக்கியமாகிறது. தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை ஒதுக்கி விட்டு இஸ்லாமியர்களின் கல்வி வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீட்டை மேலும் அதிகரிக்க மூடப் பழக்கங்களை நம் மக்களிடமிருந்தும் விரட்ட தமுமுக, மமக உறவுகள் 'தவ்ஹீத் ஜமாத்தில்' மீண்டும் இணைவார்களாக!