Followers

Wednesday, July 04, 2012

என் இனிய தமிழ் மொழியே!

வெளிநாடுகளுக்கு வந்தவுடன்தான் நமது தாய் மொழியின் அருமையும் அதன் வளமையும் தெரிய வரும். நான் சவுதி வந்த புதிதில் அரபியும் தெரியாது: ஹிந்தியும் தெரியாது: ஓரளவு ஆங்கிலத்தை வைத்து சமாளித்தேன். அந்த நாட்களில் யாராவது தமிழில் பேசிக் கொண்டு சென்றால் அவரிடம் வலிய சென்று நீங்கள் எந்த ஊர்? நான் இந்த ஊர். நீங்கள் எந்த கம்பெனி? என்று ஏதாவது அவர்களிடம் பேசி நமது தாய் மொழி ஆர்வத்தை தீர்த்துக் கொண்ட நாட்களும் உண்டு. இன்று போல் அன்று செயற்கைக் கோள் தொலைக்காட்சிகள் இல்லாததும் எஃப் எம் ரேடியோக்கள் இல்லாததும் மொழி ஆர்வத்தை இன்னும் அதிகமாக்கி வந்தன. இன்று இணைய தொடர்பு இருப்பதால் தமிழ் ஆர்வத்துக்கு ஓரளவு தீனி கிடைத்துக் கொண்டிருக்கிறது. பதிவுகள் எழுவதின் வாயிலாகவும் பின்னூட்டங்களின் வாயிலாகவும் தமிழ் மொழி இன்று வாழ்வில் இரண்டற கலந்து விட்டது. வெளி நாடுகளில் இருந்தாலும் தமிழ் ஆர்வத்துக்கு தீனி போட பல துறைகள் வந்தவண்ணமே உள்ளன.

அடுத்து மொழி ஆர்வம் இருக்கலாம். அது வெறியாக மாறி விடாமல் பார்த்து கொள்ள வேண்டும். நம் மொழி வளர வேண்டும் என்பதற்காக மற்ற மொழிகளை கற்காமல் தூரமாக்குவது எனப்தும் அந்த மொழி பேசுபவர்களை வெறுப்புடன் நோக்குவதும்தான் வெறியாக மாற்றப்படுகிறது. அரசியல்வாதிகள் தங்களை வளர்த்துக் கொள்ள இந்தி எதிர்ப்பு என்ற அஸ்திரத்தை எடுத்து தமிழர்களை முன்னேற விடாமல் தடுத்து விட்டனர். தங்களது பேரப் பிள்ளைகளை மிகவும் கவனமாக பல மொழிகளை கற்கவும் வைக்கின்றனர். இந்தி, ஆங்கிலம், அரபி என்று எந்த மொழிகளானாலும் அனைத்தும் இறைவன் படைத்த மொழிகளே! மூல மொழிகள் அனைத்தையையும் மனிதனுக்கு இறைவனே கற்றுக் கொடுத்தாக இறை வேதங்கள் கூறுகின்றன. எனவே தாய் மொழியை நேசிப்போம். உலக மொழிகளையும் நம் அறிவை வளர்த்துக் கொள்ள ஆர்வமுடன் கற்போம்.

பாட்டிமார்கள் ஒவ்வொரு பேச்சிலும் ஏதாவது ஒரு பழமொழியை கலந்து பேசுவதை கேட்கவே ஆசையாக இருக்கும். அந்த வகையில் நண்பர் பொறியாளர் சுல்தான் அனுப்பிய மின்னஞசலில் சில புதிய பழமொழிகளும் இருந்தது. அதனை பகிர்கிறேன். பழமொழிகளில் சில தவறுகள் வந்தாலும் சந்தத்திற்காக இந்த பழமொழிகளை சற்று அசை போடுவோம்.



கங்கையில் மூழ்கினாலும் காக்கை அன்னம் ஆகுமா?
கசடறக் கல்லார்க்கு இசை உறல் இல்லை.
கடலுக்குக் கரை போடுவார் உண்டா?
கடலைத் தாண்ட ஆசையுண்டு கால்வாயைத் தாண்டக் கால் இல்லை.
கடல் கொதித்தால் விளாவ நீர் ஏது?
கடல் திடலாகும், திடல் கடலாகும்.
கடல் மீனுக்கு நீச்சுப் பழக்க வேண்டுமா?
கடல் வற்றினால் கருவாடு தின்னலாம் என்று உடல் வற்றி செத்ததாம் கொக்கு!
கடவுளை நம்பினோர் கைவிடப் படார்.
கடன் இல்லா கஞ்சி கால் வயிறு.
கடன் வாங்கிக் கான் கொடுத்தவனும் கெட்டான்; மரம் ஏறிக் கைவிட்டனும் கெட்டான்.
கடன் வாங்கியும் பட்டினி, கல்யாணம் பண்ணியும் சந்நியாசி.
கடித்த சொல்லினும் கனிந்த சொல்லே நன்மை.
கடுகத்தனை நெருப்பானாலும் போரைக் கொளுத்திவிடும்.
கடுகு சிறுத்தாலும் காரம் போகுமா?
கடுகு போன இடம் ஆராய்வார், பூசணிக்காய் போன இடம் தெரியாது.
கடுகு களவும் களவுதான், கற்பூரம் களவும் களவு தான்.
கடுங்காற்று மழை கூட்டும் கடுஞ் சிநேகம் பகை கூட்டும்.
கடுஞ் சொல் தயவைக் கெடுக்கும்.

கடை காத்தவனும் காடு காத்தவனும் பலன் அடைவான்.

கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைப்பது போல.
கடைந்த மோரிலே குடைந்து வெண்ணெய் எடுக்கிறது.
கட்டக் கரிய இல்லாமற் போனாலும் பேர் பொன்னம்மாள்.
கட்டிக்கொடுத்த சோறும் கற்றுக்கொடுத்த சொல்லும் எத்தனை நாள் நிற்கும்.
கட்டினவனுக்கு ஒரு வீடானால் கட்டாதவனுக்கு பல வீடு.
கட்டின வீட்டுக்கு எட்டு வக்கனை.
கணக்கன் கணக்கறிவான் தன் கணக்கைத் தான் அறியான்.
கணக்கன் கணக்கைத் தின்னாவிடில், கணக்கனை கணக்கு தின்று விடும்.
கணக்கைப் பார்த்தால் பிணக்கு வரும்.
கண் உள்ள போதே காட்சி; கரும்பு உள்ள போதே ஆலை!
கண் கண்டது கை செய்யும்.
கண் குருடு ஆனாலும் நித்திரையில் குறையுமா?
கண்டதே காட்சி கொண்டதே கோலம்.
கண்டது சொன்னால் கொண்டிடும் பகை.
கண்டால் ஒரு பேச்சு, காணாவிட்டால் ஒரு பேச்சு.
கண்ணிலே குத்தின விரலைக் கண்டிப்பார் உண்டோ?
கண்ணிற் பட்டால் கரிக்குமா, புருவத்திற் பட்டால் கரிக்குமா?
கண்ணிற் புண் வந்தால் கண்ணாடி பார்த்தல் ஆகாது.
கண்ணு சிறுசு, காண்பதெல்லாம் பெரிசு.
கத்தரிக்காய் சொத்தை என்றால் அரிவாள்மணை குற்றம் என்கிறாள்.

கத்தரிக்காய் முற்றினால் கடைத் தெருவுக்கு வந்துதானே ஆக வேண்டும்.
கதிரவன் சிலரை காயேன் என்குமோ?
கந்தனுக்குப் புத்தி கவட்டுக்குள்ளே
கப்பல் ஏறிப் பட்ட கடன் கொட்டை நூற்றா விடியும்.
கப்பற்காரன் பெண்டாட்டி தொப்பைக்காரி, கப்பல் உடைந்தால் பிச்சைக்காரி.
கப்பற்காரன் வாழ்வு காற்று அடித்தால் போச்சு.
கம்பால் சாய்க்காதவனைக் கயிற்றால் சாய்த்த கதையாக.
கரணம் தப்பினால் மரணம்.
கரிவிற்ற பணம் கறுப்பாய் இருக்குமா?
கருமத்தை முடிக்கிறவன் கட்டத்தைப் பாரான்.
கரும்பு கசக்கிறது வாய்க் குற்றம்
கரும்பு விரும்ப அது வேம்பாயிற்று.
கரும்பு ருசி என்று வேரோடு பிடுங்கலாம்?
கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும்.

கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடி தமிழ்க்குடி!
கல்லடிச் சித்தன் போனவழி, காடுமேடெல்லாம் தவிடுபொடி.
கல்லாடம் [ ஒரு நூல்] படித்தவனோடு மல் ஆடாதே.
கல்லாதவரே கண்ணில்லாதவர்.
கல்லாதார் செல்வத்திலும் கற்றார் வறுமை நலம்.
கல்வி அழகே அழகு.
கல்வி இல்லாச் செல்வம் கற்பில்லா அழகு.
கல்விக்கு இருவர், களவுக்கு ஒருவர்.
கவலை உடையோர்க்குக் கண்ணுறக்கம் வராது.

கழுவுகிற நீரில் நழுவுகிற மீன் போல.
களவும் கற்று மர
இது 'களவும் கத்தும் மற' என்பதன் திரிந்த பழமொழி
களவும் கத்தும் மற
களவையும் சூதாட்டத்தையும் மற
களை பிடுங்காப் பயிர் காற்பயிர்.
கள் விற்றுக் கலப்பணம் சம்பாதிப்பதைவிடக் கற்பூரம் விற்றுக் காற்பணம் சம்பாதிப்பது மேல்.
கள்ள மனம் துள்ளும்.
கள்ளனும் தோட்டக்காரனும் ஒன்று கூடினால் விடியு மட்டும் திருடலாம்.
கள்ளம் பெரிதோ? காப்பு பெரிதோ!
கள்ளிக்கு முள்வேலி இடுவானேன்!
கள்ளைக் குடித்தால் உள்ளதைச் சொல்லுவான்.
கறையான் புற்று பாம்புக்கு உதவுகிறது.
கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு.
கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாஞ் சிறப்பு.
கன்றுக்குட்டிக்குத் தெரியுமா, கவணையுடைய உயரம்?
கனவில் கண்ட பணம் செலவிற்கு உதவுமா?
கனிந்த பழம் தானே விழும்.
கற்கையில் கல்வி கசப்பு, கற்றபின் அதுவே இனிப்பு.
கற்பில்லாத அழகு, வாசனை இல்லாத பூ.

கா

காசுக்கு ஒரு குதிரையும் வேண்டும் காற்றைப் போலப் பறக்கவும் வேண்டும்.
காடு காத்தவனும் கச்சேரி காத்தவனும் பலன் அடைவான்.
காட்டுக்கு எறித்த நிலாவும் கானலுக்குப் பெய்த மழையும்.
காட்டு வாழை வந்தால் வீட்டு வாழ்வு போகும்.
காட்டை வெட்டிச் சாய்த்தவனுக்குக் கம்பு பிடுங்கப் பயமா?
காண ஒரு தரம் கும்பிட ஒரு தரமா?
காணி ஆசை கோடி கேடு.
காணிக்குச் சோம்பல் கோடிக்கு வருத்தம்
காற்ற ஊசியும் வாராது காணுங் கடைவழிக்கே.
காப்பு சொல்லும் கை மெலிவை.
காமாலைக் கண்ணுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள் நிறம்.
காய்த்த மரம் கல் அடிபடும்.
காய்ந்தும் கெடுத்தது பெய்தும் கெடுத்தது.
காரண குருவே காரிய குரு!
காரியமாகும் வரையில் கழுதையையும் காலைப்பிடி.
காரியம் பெரிதோ வீரியம் பெரிதோ?
கார்த்திகை பின் மழையும் இல்லை, கர்ணனுக்குப்பின் கொடையும் இல்லை
காலம் செய்கிறது ஞாலம் செய்யாது.
காலம் போம் வார்த்தை நிற்கும், கப்பல் போம் துறை நிற்கும்
காலத்துக்கு ஏற்றபடி பெருச்சாளி காவடி எடுத்து ஆடிற்றாம்!
காலளவே ஆகுமாம் கப்பலின் ஓட்டம், நூலளவே ஆகுமாநுண்சீலை.
காலுக்குதக்க செருப்பும்,கூலிக்குத் தக்க உழைப்பும்.
காலைக் கல்; மாலைப் புல்
காவடிப் பாரம் சுமக்கிறவனுக்குத் தெரியும்
காவலுக்கு பொம்மை இருக்கேன்னு நம்பி களம் நிறைய நெல்லு காய வச்சாங்களாம்!
காற்றில்லாமல் தூசி பறக்குமா?
காற்று உள்ளபோதே தூற்றிக்கொள்.
காற்றுக்கு எதிர்லே துப்பினால் முகத்தில் விழும்.

கி, கீ
கிடந்த கிடைக்கு நடந்த நடை மேல்!
கிட்டாதாயின் வெட்டென மற
கிணற்றுக்குத் தப்பித் தீயிலே பாய்ந்தான்.
கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பம் ஏன்?
கிரீடத்தை பிடிக்க, கிராமத்தை பிடி
கீர்த்தியால் பசி தீருமா?
கீறி ஆற்றினால் புண் ஆறும்.
கு, கூ
குங்குமம் சுமந்த கழுதை மணம் அறியுமா?
குசவனுக்கு ஆறுமாதம் தடிகாரனுக்கு அரை நாழிகை.
குடல் காய்ந்தால் குதிரையும் வைக்கோல் தின்னும்.
குடி, சூது, விபசாரம் குடியைக் கெடுக்கும்.
குடி வைத்த வீட்டிலே கொள்ளி வைக்கலாமா?
குடும்பத்தில் இளையவனும் கூத்தாடியில் கோமாளியும் ஆகாது.
குட்டுப் பட்டாலும் மோதுகிற கையால் குட்டுப்படவேண்டும்.
குணத்தை மாற்றக் குருவில்லை.
குணம் இல்லா வித்தை எல்லாம் அவித்தை.
குணம் பெரிதேயன்றிக் குலம் பெரியதன்று.
குதிரை இருப்பு அறியும், கொண்ட பெண்டாட்டி குணம் அறிவாள்.
குதிரை ஏறாமல் கெட்டது, கடன் கேளாமல் கெட்டது.
குதிரை குணமறிந்தல்லவோ தம்பிரான் கொம்பு கொடுக்கவில்லை.
குந்தி இருந்து தின்றால் குன்றும் மாளும்.
குப்பை உயரும் கோபுரம் தாழும்.
குப்பையிற் கிடந்தாலும் குன்றிமணி நிறம் போகுமா?
கும்பிடு கொடுத்துக் கும்பிடு வாங்கு.
குமரி ஒற்றையில் போனாலும் கொட்டாவி ஒற்றையில் போகாது.
குரங்கின் கைப் பூமாலை.
குரங்குக்குப் புத்திசொல்லித் தூக்கணாங்குருவி கூண்டு இழந்தது.
குரங்கிடம் மூத்திரம் கேட்டால் அது கொப்புக்கு கொப்புத் தாவுமாம்
குரு இல்லார்க்கு வித்தையுமில்லை முதல் இல்லார்க்கு ஊதியமில்லை.
குருட்டுக் கண்ணுக்குக் குறுணி மையிட்டுமென்ன?
குரு மொழி மறந்தோன் திருவழிந்து அழிவான்.
குருவிக்கேத்த ராமேஸ்வரம்
இது 'குறி வைக்க ஏற்ற ராம சரம்' என்பதன் திரிந்த வழக்கு
குரைக்கிற நாய் வேட்டை பிடிக்குமா?
குரைக்கிற நாய் கடிக்காது; கடிக்கிற நாய் குரைக்காது.
பணம் பந்தியிலே, குணம் குப்பையிலே
குலவித்தை கற்றுப் பாதி கல்லாமற் பாதி.
குல வழக்கம் இடை வழக்கும் கொஞ்சத்தில் தீராது.
குலத்தைக்கெடுக்கவந்த கோடாலிக்காம்புபோல
குழந்தையும் தெய்வமும் கொண்டாடின இடத்திலே.
குறி வைக்க ஏற்ற ராம சரம்
குறைகுடம் தளும்பும், நிறைகுடம் தளும்பாது.
குற்றமுள்ள நெஞ்சு குறுகுறு என்றும், குறும்பியுள்ள காது தினவு கொள்ளும்
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
கூத்தாடி கிழக்கே பார்த்தான் , கூலிக்காரன் மேற்கே பார்த்தான்.
கூரைமேலே சோறு போட்டால் ஆயிரம் காகம்.
கூலியைக் குறைக்காதே வேலையைக் கெடுக்காதே?
கூழுக்கு மாங்காய் கொண்டாட்டம், குரங்குத் தேங்காய் கொண்டாட்டம்.
கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை.
கூழும் சிந்தல, கோப்பையும் உடையல
கெ
கெடுக்கினும் கல்வி கேடுபடாது
கெடுமதி கண்ணுக்குத் தோன்றாது
கெடுவான் கேடு நினைப்பான்
கெட்டாலும் செட்டி செட்டியே,
கிழிந்தாலும் பட்டு பட்டே.
கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளையில் தெரியும்.
கெட்டும் பட்டணம் சேர்
கெண்டையைப் போட்டு வராலை இழு.
கெரடி கற்றவன் இடறி விழுந்தால் அதுவும் ஒரு வித்தை என்பான்.
கெலிப்பும் தோற்பும் ஒருவர் பங்கல்ல.
கே
கேடு வரும் பின்னே, மதி கெட்டுவரும் முன்னே.
கேட்டதெல்லாம் நம்பாதே! நம்பியதெல்லாம் சொல்லாதே!
கேழ்வரகில் நெய் வடிகிறதென்றால் கேட்பவனுக்கு மதி வேண்டாவா?
கேளும் கிளையுங் கெட்டோர்க்கு இல்லை.
கேள்விப் பேச்சில் பாதிதான் நிசம்.
கேள்விப் பேச்சு மூளா நெருப்பு
கை
கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லை.
கைக்கோளனுக்குக் காற்புண்ணும் நாய்க்குத் தலைப்புண்ணும் ஆறா
கைத் துப்பைக் கொண்டு காரியம் இல்லை; வாய்த் துப்பைக் கொண்டு வாழ வந்தேன்
கைப்புண்ணுக்குக் கண்ணாடி வேண்டுமா?
இது 'கைப்பூணுக்குக் கண்ணாடி வேண்டுமா?' என்பதன் திரிந்த வழக்கு
கைப்பூணுக்குக் கண்ணாடி வேண்டுமா?
கையில் உள்ள பூண் அல்லது காப்பைப் பார்க்கக் கண்ணாடி தேவையில்லை
கைப்பொருளற்றால் கட்டினவளும் பாராள்
கையாளத ஆயுதம் துருப்பிடிக்கும்
கையிலே காசு வாயிலே தோசை
கையில் உண்டானால் காத்திருப்பார் ஆயிரம் பேர்.
கையூன்றிக் கரணம் போடவேண்டும்.
கையில் பிடிப்பது துளசி மாலை, கக்கத்தில் இடுக்குவது கன்னக்கோலாம்
கொ
கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா?
கொஞ்சம் கொஞ்சமாக் குடைஞ்சா குடகு மலையையும் குடைஞ்சிடலாம்
கொடிக்கு காய் கனமா?
கொடுக்கிறவனைக் கண்டால் வாங்குகிறவனுக்கு இளக்காரம்.
கொடுங்கோல் அரசு நெடுங்காலம் நில்லாது.
கொடுத்தைக் கேட்டால் அடுத்த தாம் பகை.
கொட்டினால் தேள், கொட்டாவிட்டால் பிள்ளைப் பூச்சியா?
கொண்டானும் கொடுத்தானும் ஒன்று,கலியாணத்தைக் கூட்டி வைத்தவன் வேறு.
கொலைக்கு அஞ்சாதவன் பழிக்கு அஞ்சான்.
கொல்லன் தெருவில் ஊசி விலைபோமா?
கொல்லைக் காட்டு நரி சலசலப்புக் அஞ்சுமா?
கொள்ளிக்கு எதிர்போனாலும், வெள்ளிக்கு எதிர்போகலாது.
கொள்ளும் வரைக்கும் கொண்டாட்டம் , கொண்ட பிறகு திண்டாட்டம் .
கொற்றவன் தன்னிலும் கற்றவன் மிக்கோன்.
கோ
கோள் சொல்பவைக் கொடுந்தேள் என நினை.
கோள் சொல்லும் வாய் காற்றுடன் நெருப்பு.
கோடாலிக்காம்பு குலத்துக்கு ஈனம்
கோடி வித்தையும் கூழுக்குத்தான்
கோணிகோடி கொடுப்பதிலும் கோணாமற் காணி கொடுப்பது நல்லது.
கோத்திரமறிந்து பெண்ணைக்கொடு, பாத்திரமறிந்து பிச்சையிடு.
கோபம் உள்ள இடத்தில் குணம் உண்டு.
கோபம் சண்டாளம்.
கோபுரம் தாண்டுகிற குரங்குக்கு குட்டிச் சுவர் என்ன பிரமாதம்!
கோபுர தரிசனம் கோடி புண்ணியம்
கோயிற் பூனை தேவர்க்கு அஞ்சுமா?
கோழி மிதித்துக் குஞ்சு முடம் ஆகுமா?
கோளுஞ் சொல்லி கும்பிடுவானேன்?
கோடானுகோடி கொடுப்பினும் தன்னுடைய நாக்கு கோடாமை கோடி பெறும்
கோடானுகோடி கொடுத்தாலும் நாவினால் தவறு சொல்லாதது கோடி பெறும்.
கோடி கொடுப்பினும் குடில் பிறந்தார் தம்மோடு கூடுவதே கோடி பெறும்.
கோழிக்கு வேலை கூவுறது, கொழுக்கட்டைக்கு வேலை வேகறது


மேலும் புதிய பழமொழிகள் இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.

அப்துல் காதருக்கும் அமாவாசைக்கும் என்ன தொடர்பு?

ஆடத் தெரியாதவள் வாசல் கோணல் என்றாளாம்

செட்டி திண்டு கெட்டான்:
பாப்பான் உடுத்தி கெட்டான்:
துலுக்கன் ரெண்டும் கெட்டான்:

யாதும் ஊரே யாவரும் கேளீர்:

ஒன்றே குலம் ஒருவனே தேவன்.

"ஒருவர் தன் சமுதாயத்தை நேசிப்பது இனவாதமாகுமா?" என்று நபியவர்களிடம் தோழர்கள் கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் "இல்லை, தனது சமுதாயம் புரியும் கொடுமைகளுக்குத் துணைபோவதுதான் இனவாதம் ஆகும்" என்றார்கள். (நூல்: மிஸ்காத்).

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு, நீதிக்குச் சாட்சிகளாக ஆகிவிடுங்கள்!. ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை, நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க, உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள்!. அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்!. அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவன். (அல்குர்ஆன் 5:8)

ஒவ்வொரு தூதரையும் அவருடைய சமூகத்தாருக்கு அவர் விளக்கிக் கூறுவதற்காக அவர்களுடைய மொழியிலேயே (போதிக்கும் படி) நாம் அனுப்பிவைத்தோம்; அல்லாஹ் தான் நாடியோரை வழிதவறச் செய்கின்றான், தான் நாடியோருக்கு நேர்வழியையும் காண்பிக்கின்றான்; அவன் மிகைத்தவனாகவும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். அல்குர்ஆன் 14:4.

17 comments:

ஹுஸைனம்மா said...

//துலுக்கன் ரெண்டும் கெட்டான்//

வேதனையான உண்மை!! :-((

திருவாளப்புத்தூர் முஸ்லீம் said...

தலைப்பை பார்த்ததும் என்ன சகோ.தமிழ பத்தி எழுதுராரோனு நினைச்சேன் ..நீங்க சொல்லுறது உண்மை தான் சகோ.நிழலின் அருமை வெயிலில் தெரியும்.......

என்ன சகோ.நம்ம தளத்துல இன்னும் நீங்க follower ஆகல போலிருக்கே....

புதிய வரவு:7 வயதில் முஸ்லிம் தீவிரவாதியான சிறுவன்-(photo gallery)

suvanappiriyan said...

சகோ ஹூசைனம்மா!

//வேதனையான உண்மை!! :-(( //

ஆனால் தற்போது நிலைமை சீரடைந்து வருகிறது. படிப்பதில் அதிகம் இந்த சமூகம் அக்கறை காட்டுவது மகிழ்ச்சி அளிக்கக் கூடியதாக உள்ளது.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

சகோ திருவாளப்புத்தூர்!

//என்ன சகோ.நம்ம தளத்துல இன்னும் நீங்க follower ஆகல போலிருக்கே..//

இல்லையே! முன்பே ஃபாலோயர் ஆகி விட்டேனே! உங்கள் பதிவுகள் எனது டேஸ் போர்டில் வந்து கொண்டிருக்கிறது. நன்றாக எழுதுகிறீர்கள்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

திருவாளப்புத்தூர் முஸ்லீம் said...

தங்கள் ID யோ அல்லது படமோ எதையும் FOLLOWER விட்ஜெட்டில் காணவில்லையே..என்ன பெயரில் இருக்கும் உங்கள் ID ....சுவனப்பிரியன் என்று ஏதும் இல்லை....

Flavour Studio Team said...

//வெளிநாடுகளுக்கு வந்தவுடன்தான் நமது தாய் மொழியின் அருமையும் அதன் வளமையும் தெரிய வரும். ////


அஸ்ஸலாமு அழைக்கும் சகோ....

உண்மையிலும் உண்மை.. நான் மலேசியா வந்த புதிதில் மலாய் மொழி தெரியாமல்.. அரைகுறை ஆங்கிலத்துடன்.. தமிழ் முகங்களை பார்த்தாலே ஓடி சென்று பேசிய ஞாபகங்கள் கண்முன் நிழலாடுகிறது...!

நல்லதொரு பதிவுக்கு நன்றி சகோ..

வஸ்ஸலாம்

அதிரை சித்திக் said...

தமிழ் ஊற்று நீங்கள்தான் சுவன பிரியன் ....

'கடை காரன் வீட்டில் கல்யாணமாம் ..

அத போல இல்ல அநியாயமாம் ...

ஐந்தில் வளையாதது ..ஐம்பதில் வளையுமா

டில்லிக்கு ராஜாவானாலும் ..பள்ளிக்கு பிள்ளைதான் ,

இரப்பானுக்கு வெண்சோறு ..பஞ்சமா..

முயற்சி உடையான் இகழ்ச்சி அடையான்

தாயை போல் பிள்ளை நூலை போல் சேலை

தடி எடுத்தவன் எல்லாம் தண்டல் காரன்

சட்டி சடக்குனா சாட நமக்கு

ஆறு நிறைய தண்ணி போனாலும் நாயி நக்கி தான் குடிக்கும்

பாக்கியை அப்புறமா யோசித்து சொல்கிறேன் ..நன்றி

suvanappiriyan said...

சகோ திருவாளப்புத்தூர்!


//தங்கள் ID யோ அல்லது படமோ எதையும் FOLLOWER விட்ஜெட்டில் காணவில்லையே..என்ன பெயரில் இருக்கும் உங்கள் ID ....சுவனப்பிரியன் என்று ஏதும் இல்லை.... //

ஆரம்ப காலங்களில் உங்களின் அறிமுகம் இல்லாததால் பப்ளிக்காக ஃபாலோ பண்ணவில்லை. எனவே எனது பெயர் தெரியாது. ஆனால் உங்கள் பதிவு எனக்கு வந்து கொண்டிருக்கும்.

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம் சகோ ஷர்மிளா ஹமீத்!

//உண்மையிலும் உண்மை.. நான் மலேசியா வந்த புதிதில் மலாய் மொழி தெரியாமல்.. அரைகுறை ஆங்கிலத்துடன்.. தமிழ் முகங்களை பார்த்தாலே ஓடி சென்று பேசிய ஞாபகங்கள் கண்முன் நிழலாடுகிறது...!//

ஆரம்ப காலங்களில் தமிழர்கள் இல்லாத சூழலில் சாப்பாடு கூட வட நாட்டு காரர்களோடுதான். அவர்கள் ஹிந்தியில் பேசிக் கொண்டால் தலையில் ஏதோ சம்மட்டியால் அடிப்பது பொல் இருக்கும். புரிய ஆரம்பித்த பிறகுதான் இந்த தொல்லை விட்டது. வெளி நாடு வந்தவுடன்தான் தாய் மொழியின் அருமையும் தெரிந்தது.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

suvanappiriyan said...

சகோ அதிரை சித்திக்!

//கடை காரன் வீட்டில் கல்யாணமாம் ..

அத போல இல்ல அநியாயமாம் ...

சட்டி சடக்குனா சாட நமக்கு

இரப்பானுக்கு வெண்சோறு ..பஞ்சமா.. //

இவை எல்லாம் நான் கேள்விப்படாத புதிய பழமொழிகள்.

வேறு பழமொழிகள் ஞாபகம் வந்தாலும் பகிருங்கள்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

enrenrum16 said...

/அந்த நாட்களில் யாராவது தமிழில் பேசிக் கொண்டு சென்றால் அவரிடம் வலிய சென்று நீங்கள் எந்த ஊர்? / முன்பு நானும் இப்படித்தான்...ஆனால் இப்போவெல்லாம் எங்கு சென்றாலும் தமிழர்களை சர்வசாதாரணமாகக் காணமுடிகிறது.

அடேங்கப்பா..இத்தனை பழமொழிகளா?! பழமொழிகளுக்குப் பஞ்சமேயில்லை நம் மொழியில் :))

ஷர்புதீன் said...

உருது கஸல் கேட்டதுண்டா., எனது கருத்தில் இசையில் உருது மொழி மிக அழகாக , இனிமையாக ( தமிழை விட) இருக்கின்றது ?
( யாருப்பா அங்கே கம்பை எடுக்குறது )

suvanappiriyan said...

சகோ ஷர்புதீன்!

//உருது கஸல் கேட்டதுண்டா., எனது கருத்தில் இசையில் உருது மொழி மிக அழகாக , இனிமையாக ( தமிழை விட) இருக்கின்றது ?
( யாருப்பா அங்கே கம்பை எடுக்குறது ) //

கஸல் பாடல்கள் நிறைய கேட்டிருக்கிறேன். உருது மொழி இனிமையாக இருக்க காரணம் பல மொழிகளின் சொற்களை கடன் வாங்கி உருவாக்கப் பட்டதால்தான். மொகலாயர் காலத்தில்தான் இந்த மொழியே உருவாக்கப்பட்டது. அரபி, புஸ்து, சமஸ்கிரதம், பார்சி, கிரேக்கம், தமிழ் என்று அனைத்து மொழிகளின் அழகிய சொற்களை கடன் வாங்கி உருவாக்கியதால் உங்களுக்கு அப்படி தோன்றுகிறது. ஆனால் தமிழ் மொழி போல் பழமையானதும் எந்த மொழி கலப்பும் இல்லாமல் மூல மொழியாக உள்ளதும் தமிழுக்குரிய சிறப்புகள் பலவற்றில் ஒன்று.

suvanappiriyan said...

சகோ என்றென்றும் பதினாறு!

//அடேங்கப்பா..இத்தனை பழமொழிகளா?! பழமொழிகளுக்குப் பஞ்சமேயில்லை நம் மொழியில் :))//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

இராஜகிரியார் said...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரரே...

சமீப காலமாக தான் தங்களது பதிவுகளை படித்துக் கொண்டு வருகிறேன். மிகவும் நன்றாகவும், தர்க்க ரீதியாகவும், ஆதாரத்தோடும் எழுதி வருகிறீர்கள். அல்லாஹ் உங்களுக்கு ஈருலகிலும் வெற்றியை தந்தருள்வானாக.
ஆனால் இந்த பதிவில் ஒரு சிறிய சந்தேகம்.
//அரசியல்வாதிகள் தங்களை வளர்த்துக் கொள்ள இந்தி எதிர்ப்பு என்ற அஸ்திரத்தை எடுத்து//
ஏற்று கொள்கின்றேன். ஆனால் ஒரு சிறிய திருத்தம். அது தற்கால அரசியல்வாதிகள் என்று இருக்க வேண்டும். மேலும் அந்த எதிர்ப்பில் சில பல நன்மைகளும் உண்டு என்பது எனது கருத்து.
//தமிழர்களை முன்னேற விடாமல் தடுத்து விட்டனர்//
எந்த வகையில் என்று விளக்க முடியுமா? கேட்டு கேட்டு புளித்துப் போன அதே கோயபல்ஸ் தத்துவம்.
//அவர்கள் ஹிந்தியில் பேசிக் கொண்டால் தலையில் ஏதோ சம்மட்டியால் அடிப்பது போல் இருக்கும்.//
ஏன் சம்மட்டியால் அடித்தது போலிருக்க வேண்டும். மற்ற மொழியினரும் அவர்கள் மொழியில் பேசிக் கொள்ளும் போது தங்களுக்கு எதுவால் அடித்தது போலிருக்கும்?
சரி போகட்டும். இதேபோல் நாம் தமிழில் பேசிக் கொள்ளும் போது இந்தி காரர்களுக்கு சம்மட்டியால் வேண்டாம்-சிறிய சுத்தியலால் அடித்தது போலவாவது இருக்குமா?
ஒரு வாதத்திற்காக வைத்து கொள்வோம். ஒருவேளை தமிழர்களை அரசியல்வாதிகள் கெடுக்காமல்(!) அனைவரும் இந்தி படித்திருந்தால், தமிழர்கள் இந்த உலகை ஆண்டு கொண்டிருந்திப்பார்களோ? அல்லது குறைந்த பட்சம் இந்தியாவையாவது ஆண்டு கொண்டிருந்திப்பார்களா?
தற்போது இந்தி படிக்காததால் தமிழர்கள் பிச்சையா எடுத்து கொண்டிருக்கிறார்கள்?
ஒன்று தெரியுமா தங்களுக்கு? தமிழர்கள் ஆங்கிலம் படிப்பதில் ஆர்வம் காட்டாமல் (தங்களை போன்றவர்களின் தவறான வழிகாட்டலால்-தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு) இந்தி காரன் பின்னால் சுற்றி கொண்டிருப்பதால் தான் தமிழர்களில் ஒரு சாரார் முன்னேறாமல் போய் விட்டார்கள். தயவு செய்து பொத்தாம் பொதுவாக போகிற போக்கில் எதையாவது எழுதிவிட்டு போகாதீர்கள்
இறுதியாக தங்களின் இந்த பதிவிற்கு தாங்கள் குறிப்பிட்டுள்ள .
”ஆடத் தெரியாதவள் வாசல் கோணல் என்றாளாம்” என்ற பழமொழியையே பதிலாக தருகின்றேன்.

suvanappiriyan said...

சலாம் இராஜகிரியார். (பாபநாசம் ராஜகிரியா?)

//இறுதியாக தங்களின் இந்த பதிவிற்கு தாங்கள் குறிப்பிட்டுள்ள .
”ஆடத் தெரியாதவள் வாசல் கோணல் என்றாளாம்” என்ற பழமொழியையே பதிலாக தருகின்றேன//

இராஜகிரியார் சொன்னால் தவறாகாது. ஒத்துக் கொள்கிறேன்.

இராஜகிரியார் said...

//(பாபநாசம் ராஜகிரியா?)//

ஆம் சகோதரரே...

//இராஜகிரியார் சொன்னால் தவறாகாது//

இதெல்லாம் ரொம்ப அதிகம்...ஹா... ஹா... ஹா...