Followers

Friday, October 12, 2012

மின்சாரம்.....மின்சாரம்......மின்சாரம்......



'என்ன ரொம்ப சந்தோஷமா வர்றே'

'உனக்கு விஷயம் தெரியாதா? 14 மணி நேர கரண்ட் கட் பண்ண சொல்லி உத்தரவு வந்திருக்காம்'

'நல்லதாப் போச்சு! இனி நாம் கொஞ்சம் ஓய்வு எடுத்துக்கலாம்'

-----------------------------------------

இன்று மனிதனின் அத்தியாவசிய தேவைகளில் மின்சாரமும் ஒன்றாகி விட்டது. முன்பெல்லாம் அதிகமான வீடுகள் ஓட்டு வீடுகளாகவே இருக்கும். அதை எல்லாம் இடித்து விட்டு வீடுகள் அனைத்தையும் கான்கிரீட் கட்டிடங்களாக மாற்றினோம். இது போன்ற கட்டிடங்களில் உங்களுக்கு மின் விசிறி ஓடினாலும் இரவில் இறங்கும் அனலானது உங்களை நிம்மதியாக தூங்க விடாது. இதை சரி பண்ண ஏர் கண்டிஷனை பொருத்தும் கட்டாயத்துக்கு உள்ளாகிறோம். துணி துவைக்கவும இயந்திரம். சமையல் செய்யும் அடுப்பும் இயந்திரம். வீடு பெருக்கவும் மின்சாரத் தேவை. தொலைக் காட்சியிலிருந்து அற்ப கொசுவை விரட்டும் மார்ட்டின் கொசுவர்த்தி வரை மின்சாரம் இல்லாமல் நடக்காது.

ஒரு திட்டமிடக் கூடிய அரசானது தற்போதய மின்சார இருப்பு எவ்வளவு? அடுத்த ஐந்தாண்டுகளில் மக்களின் இனப் பெருக்கம் எத்தனை சதவீதமாக இருக்கும்? அத்தனை பேருக்கும் வீடுகள் கட்டும் போது தொழிற்சாலைகள் பெருகும் போது மின்சாரத் தேவை அதிகரிக்குமே! அதற்கேற்ப மின் உற்பத்தியை நாம் அதிகரித்திருக்கிறோமா? என்ற தொலை நோக்கு பார்வை எல்லாம் இல்லாம் சகட்டு மேனிக்கு இணைப்புகளை வழங்கி விட்டு இன்று கையை பிசைந்து கொண்டிருக்கிறது அரசு நிர்வாகம்.

90 சதமான மக்களான நாமும் இந்த சப்பாணியைப் போல எந்த சூழ்நிலையிலும் வாழ பழகிக் கொண்டு விட்டோம்.



'ஆத்தா மிக்சி கொடுத்துச்சு:....

ஃபேன் கொடுத்துச்சு...

கிரைண்டர் கொடுத்துச்சு....

லாப் டாப் கொடுத்துச்சி.....

கரண்டை மட்டும் புடுங்கிடுச்சு....

என்ற ஜோக்தான் இப்போது ஞாபகத்துக்கு வருகிறது. இந்த முறை நான் வீட்டுக்கு சென்று வீடு முழுவதையுமே சூரிய ஒளி மின்சாரமாக மாற்றி விடலாம் என்றிருக்கிறேன். அரசு மான்யத்தோடு சேர்த்து 60000 நமக்கு செலவு வரும் என்று சொல்கின்றனர். இது எப்படி சாத்தியப்படும் என்பதை நேரில் சென்றுதான் பார்க்க வேண்டும்.

-----------------------------------------------

இப்படியும் மின்சாரம் தயாரிக்கலாம்!



சாலையில் போகும் வாகனங்களைக் கொண்டு, மின்சாரம் தயாரிக்கும் அஸ்லம்: கோவையில் பொறியியல் படிப்பை முடித்து, கப்பலில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். மின்வெட்டுப் பிரச்னை பற்றிப் பேச்சு வந்த போது, "என்ன செய்யலாம்...' என யோசித்தேன். காற்றாலை மின்சாரம் தயாரிக்க, காற்று தேவை; சோலார் மின்சாரம் தயாரிக்க, சூரிய ஒளி தேவை. ஆனால், இது எதுவுமே இல்லாமல், சாலையில் செல்லும் வாகனங்களை வைத்து, மின்சாரம் தயாரிக்கலாம் என நினைத்தேன். நான் படித்த மெக்கானிக்கல் படிப்பும், நண்பர்களும் உதவி செய்ய, கண்டுபிடிப்பில் இறங்கினேன். தினமும் சாலையில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. சுங்கச்சாவடி, வேகத் தடை உள்ள இடங்களில் நான் உருவாக்கியுள்ள கருவியைப் பொருத்த வேண்டும். அது கிட்டத்தட்ட உயரமான கார்ப்பெட் போன்று இருக்கும். பஸ் வரும் போது, அந்தக் கருவி, வாகன எடையை உள்வாங்கி அழுத்தமாக்கும். அதை, "ஆல்டர்னேட் டைனமோ' மின்சாரமாக மாற்றும். அதில் கிடைக்கும் அழுத்தம் மூலம், அரை மெகாவாட் மின்சாரம் உருவாக்கி சேமிக்கலாம். தேவையான போது அதிகமாகவும், தேவையில்லாத போது, குறைவாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம். இதனால், மாசு இல்லை; எந்த எரிபொருளும் தேவை இல்லை; அணுமின் நிலையம் போன்று, பாதுகாக்கத் தேவை இல்லை. ஒரு மணி நேரத்தில் இரண்டு மெகாவாட் மின்சாரம் கிடைத்தால், அதை, 15 வீடுகளுக்கு, 24 மணி நேரமும் பயன்படுத்தலாம். கனடா அரசு, எங்களின் செயல் திட்டத்தை ஆதரித்து, அனுமதி தந்துள்ளது. தமிழக அரசு இந்த செயல் திட்டத்திற்கு ஆதரவும், அங்கீகாரமும், அனுமதியும் தந்தால், பெரிய அளவில் இதைச் செயல்படுத்தலாம். அரசின் ஒத்துழைப்பு இல்லாமல், இதை நடைமுறைப்படுத்த முடியாது. எங்கள் செயல் திட்டத்தில், தமிழகத் திற்கு தேவையான, 12,500 மெகாவாட் மின் சாரத்தை தயாரிக்க முடியும்.

--------------------------------------------------------

நம் நாட்டின் மின்சார பகிர்வும் உற்பத்தியும் எந்த லட்சணத்தில் உள்ளது என்பதை நண்பர் அனுப்பிய மின்னஞ்சலில் இருந்து இனி பார்க்கலாம்.


இது 20 ஆண்டுகளுக்கு முன் நடந்த கதை. மகாராஷ்டிரத்தில் மின் உற்பத்தி நிலையம் அமைக்க அமெரிக்காவின் 'என்ரான்’ நிறுவனத்தைக் கொண்டுவந்தார் அன்றைய காங்கிரஸ் முதல்வர் சரத் பவார். மகாராஷ்டிரத்தின் மொத்தத் தேவையில் 18 சதவிகித மின்சாரத்தை 'என்ரான்’ கொடுத்தது. அதற்கு மகாராஷ்டிர மின் வாரியம் கொடுத்த விலை என்ன தெரியுமா? முழு திவால். தேசிய அனல் மின்சாரக் கழகம் ரூ.1.80-க்கு ஒரு யூனிட் மின்சாரத்தை விற்ற காலத்தில், 'என்ரான்’ நிறுவனத்திடம் ரூ.6.80 கொடுத்து வாங்கியது அரசு. தவிர, மகாராஷ்டிர மின் வாரியம் மின்சாரத்தை வாங்குகிறதோ, இல்லையோ... மின் கட்டணம் போக மாதம் ரூ.95 கோடியை நிலைக்கட்டணம் என்ற பெயரில் 'என்ரான்’ நிறுவனத்துக்குக் கொடுத்துவிட வேண்டும். அப்படி ஓர் ஒப்பந்தம். இந்திய மின் துறை வரலாற்றில் மறக்கவே முடியாத கொள்ளை அது. இப்படி எல்லாம் நடக்குமாஎன்று தானே கேட்க வருகிறீர்கள்? தமிழக அரசு 2005-06ல் 'அப்போலோ குழும’த்திடம் இருந்து வாங்கிய மின் சாரத்தின் விலை என்ன தெரியுமா? ஒரு யூனிட் ரூ. 17.78. ஒருகட்டத்தில் கட்டுப்படி ஆகாமல், மின்சாரம் வாங்குவதை நிறுத்தியதற்காக அதே ஆண்டில் 'அப்போலோ குழும’த்துக்குத் தமிழக அரசு கொடுத்த நிலைக்கட்டணம் ரூ.330 கோடி. இப்போதும்கூட தமிழகத்தில் உள்ள தனியார் மின் உற்பத்தி நிலையங்கள் வெளி மாநில நிறுவனங் களைவிடக் கூடுதலான விலையையே கேட்கின்றன.

மின்வெட்டு பிரச்னையைப் பற்றி எல்லோருமே பேசுகிறோம். ஆனால், அதன் பின்னணியில் இருப்பது வெறும் பற்றாக்குறை மட்டும் அல்ல; பல்லாயிரம் கோடிகள் புரளும் பன்னாட்டு அரசியல். நமக்கு மின்சாரம் என்பது வெறும் எரிபொருள். ஆட்சியாளர்களுக்கோ அள்ள அள்ள வரும் அரிய வளம். தாதுச் சுரங்கங்களை யும் அலைக்கற்றைகளையும் எப்படித் தனியாருக்கு விற்றுக் காசாக்கினார்களோ, அதேபோல, மின் வளத்தையும் விற்றுக் காசாக்குகிறார்கள். இதற்காகவே கொண்டுவரப்பட்ட அமைப்புதான் மின்சார ஒழுங்குமுறை ஆணையம். நாம் 14 மணி நேர மின்வெட்டைப் பற்றிய கவலையில் இருக்கும் இந்த நேரத்தில்கூட, இன்னொரு மின் கட்டண உயர்வுக்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. மாநில அரசுகள் விரும்பாவிட்டா லும், ஒழுங்குமுறை ஆணையத்தின் விருப்பப்படி கட்டண உயர்வு நடக்கும். 'மின்சாரச் சட்டம் 2003’ மின்சார ஒழுங்குமுறை ஆணையத்துக்கு அவ்வளவு அதிகாரங்களை அளிக்கிறது.

கடுமையான மின் பற்றாக்குறை நிலவிய மாதங்களில் ஒன்றாகக் கடந்த மாதத்தைக் குறிப்பிடுகிறது மத்திய மின் துறை. முரண்பாடாக, அதே காலகட்டத்தில்தான் பங்குச்சந்தையில், மின் உற்பத்தி நிறுவனப் பங்குகளின் விலை ஏழு சதவிகிதம் வரை அதிகரித்தது. எப்படி? நாட்டின் மின் உற்பத்தித் திறனை 1,22,000 மெகா வாட் ஆக அதிகரிக்க மன்மோகன் சிங் அரசு முடிவு எடுத்தது. பொதுத் துறை நிறுவனமான 'கோல் இந்தியா’ அரசு நிர்ணயித்த இலக்கில் பாதி மின்சாரத்துக்கான நிலக்கரியை மட்டுமே தர வல்லது. இதையே சாக்காகவைத்து, கூடுதல் தேவைக்காக இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி யின் விலைக்கு ஏற்ப, மின் கட்டணத்தை மாற்றி நிர்ணயித்துக்கொள்ள மின் உற்பத்தி நிறுவனங்களுக்குச் சமீபத்தில் அனுமதி அளித்தது அரசு. இதன் தொடர்ச்சியே பங்குகள் விலை எழுச்சி.

நாட்டின் மின் உற்பத்தியை நடப்பு ஐந்து ஆண்டுத் திட்டக் காலத்தில் 88,425 மெகா வாட் உயர்த்த அரசு இலக்கு நிர்ணயித்து இருக்கிறது; இதில் தனியார் பங்களிப்பு இலக்கு எவ்வளவு தெரியுமா? 52 சதவிகிதம்! முந்தைய ஐந்து ஆண்டுத் திட்டக் காலத்தில் தனியார் பங்களிப்பு 19 சதவிகிதமாக இருந்தது. இந்த ஐந்து ஆண்டுத் திட்டக் காலத்தில் 52 சதவிகிதம். எனில், அடுத்த ஐந்து ஆண்டுத் திட்டத்தில்?

புதிதாக மாநில அரசுகள் மின் உற்பத்தி நிலையங்கள் தொடங்குவதை மத்திய அரசு ஊக்குவிக்கவில்லை. மறுபுறம் ஏற்கெனவே தன்வசம் உள்ள பொதுத் துறை மின் உற்பத்தி நிலையங்களையும் படிப்படியாகத் தனியாருக்குத் தாரைவார்க்கிறது. சமீபத்திய உதாரணம், நெய்வேலி அனல் மின் நிலையத்தின் 8.33 கோடி பங்குகள் விற்பனைக்குக் கொண்டுவரும் அரசின் திட்டம். இதன் மூலம் அரசிடம் உள்ள பங்குகள் 93.56 சதவிகிதத்தில் இருந்து 88.56 சதவிகிதமாகக் குறையும். தனியார் கை ஓங்கும்.

ஒருபுறம் இப்படி மின்சார உற்பத்தி தனியாரிடம் சிக்க, மறுபுறம் உற்பத்தியாகி வரும் மின்சாரமும் பெருநிறுவனங்களுக்கே அர்ப்பணம் ஆகிறது.உள்ளூர் தொழில் நிறுவனங்கள் 14 மணி நேர மின்வெட்டில் சிக்கிச் சின்னாபின்னமாக, பன்னாட்டு நிறுவனங்களோ 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரத்தில் கிளைபரப்புகின்றன.

இந்தக் கொடுமை எல்லாம் கொசுக்களுக்குத் தெரிகிறதா என்ன? போர்வையைப் போர்த்தினால் வியர்க்கிறது; விலக்கினாலோ கொசு கடிக்கிறது!
________________________________________

காரணத்தைத் தேடுகிறது அரசு!

மின்சாரம் தனியார்மயமாக்கப்படுவதை எதிர்க்கும் சா.காந்தி, தமிழ்நாடு மின் துறைப் பொறியாளர்கள் அமைப்பின் தலைவர். மின் துறைச் சீர்கேடுகளைத் தொடர்ந்து அம்பலப்படுத்துபவர்.

''அரசு மின் வாரியங்கள் - ஊழியர்களின் திறமையற்ற செயல்பாடுகள் தானே மின் துறை தனியார்மயமாக்கப்படக் காரணம்?''

''இவ்வளவு பெரிய நாட்டில் வலு வான மின்சாரக் கட்டமைப்பை உருவாக்கியது யார்... அரசு மின் வாரியங்கள்தானே? தமிழகத்தையே எடுத்துக்கொண்டால், 1971-ம் ஆண்டிலேயே 99 சதவிகிதக் கிராமங்களுக்கு மின்சாரத்தைக் கொண்டுசென்றுவிட்டோம். 1992-2008-க்கு உட்பட்ட 16 ஆண்டுகள் மின்வெட்டே இல்லாத மாநிலம் இது. ஆனால், 1989-க்குப் பின் பெரிய மின் உற்பத்தித் திட்டங்கள் எதையுமே அரசு கொண்டுவரவில்லை. தவறான பாதையைத் தேர்ந்தெடுத்துவிட்டுக் காரணத்தைத் தேடுகிறது அரசு!''

''அப்படி என்றால் மின் வாரியங்களின் நஷ்டத்துக்கு என்னதான் காரணம்?''

''அரசின் நிர்வாகச் சீர்கேடுகள்தான் காரணம். பத்து ரூபாய்க்கு மின்சாரத்தை வாங்கி மூன்று ரூபாய்க்குக் கொடுக்க வேண்டும் என்றால், நஷ்டம் வராமல் என்ன செய்யும்? முதலில் இது லாப - நஷ்டக் கணக்கு பார்க்கும் வணிகத் துறை இல்லை. உலகம் முழுவதும் மக்கள் நல அரசுகள் மின்சாரத்தைச் சேவைத் துறையாகத்தான் வைத்திருக்கின்றன!''

''நவீன உலகின் உயிர்நாடியான மின் துறையை அரசு தனியார்மயமாக்க விரும்புகிறது என்று எப்படிச் சொல்கிறீர்கள்?''

''தனியார்மயத்தின் வருகைக்குப் பிறகுதானே 1.76 லட்சம் கோடி ஊழல், 1.86 லட்சம் கோடி ஊழல்களை எல்லாம் பார்க்கிறோம்? தனியார்மயம் எங்கு புகுத்தப்படுகிறதோ, அங்கே ஊழல் திளைக்கும். மின்சாரம் என்பது காசு கொழிக்கும் வளம்!''

----------------------------------------------------

நாடுஎன்ப நாடா வளத்தன நாடல்ல
நாட வளந்தரும் நாடு

திருக்குறள் 74:739

ஒரு சிறந்த நாட்டுக்கு இலக்கணம் எனப்படுவது பிற நாட்டை நாடாமல் தமக்கு வேண்டிய சுய தேவைகளை தாமே உற்பத்தி செய்து கொள்ளும் திறனை பெற வேண்டும். அதுவல்லாது பிற நாட்டு பொருள்களை நாடிப் பெற்று அதனால் வளம் பெறும் நாடுகள் எந்த முன்னேற்றத்தையும் அடைய முடியாது என்கிறது இந்த குறள்.

இந்த உண்மை வள்ளுவருக்கு தெரிகிறது: எனக்கும் உங்களுக்கும் தெரிகிறது. ஆனால் நம் நாட்டை ஆள்வோருக்கு மட்டும் தெரிவதில்லை. தெரிய வந்தாலும் பன்னாட்டு கம்பெனிகள் பணத்தால் அடித்து அவர்களின் கைகளையும் வாயையும் கட்டி விடுகின்றனர்.


19 comments:

Unknown said...

சலாம் சகோ.சுவனப்பிரியன்

திருநெல்வேலியில் காலை 6 மணி முதல் இரவு 12 மணிவரை உள்ள 18 மணி நேரத்தில்
மொத்தம் 6 மணி நேரமே மின்சாரம் உள்ளது..இரவில் எவ்வளவு நேரம் தடைபடுகிறது என்பது தெரியவில்லை...

மின்சார செயல் திட்டத்தை பொறுத்தவரை ஒரு ஆட்சியில் ஆரம்பித்து அதே ஆட்சியில் முடியக்கூடிய காரியம் அல்ல...ஒருவர் விதைத்தால் மற்றொருவர் அறுவடை செய்யக்கூடும் என்ற காரணத்தினால் எந்த ஆட்சியுமே மின்சார திட்டங்களை செயல்படுத்த முயற்சிக்கவில்லை....

இந்த ஆட்சியாளர்களின் ஆளுமையை பற்றி பேச வேண்டும் என்றால் ....(18 +) என்ற குறியீட்டோடு தான் பேச வேண்டும்..... ஆங்கிலேய ஆட்சியே இருந்திருக்கலாமோ என்று எண்ண தோன்றுகிறது ...!!!!

நன்றியுடன்
நாகூர் மீரான்

suvanappiriyan said...

திரு தின பதிவு!

//மிக அருமையான பதிவு
வணக்கம் வளர்ந்து வரும் புதிய திரட்டி தினபதிவு
உங்கள் வரவை விரும்புகிறது//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. முயற்சிக்கிறேன்.

suvanappiriyan said...

சகோ நாகூர் மீரான்!

//மின்சார செயல் திட்டத்தை பொறுத்தவரை ஒரு ஆட்சியில் ஆரம்பித்து அதே ஆட்சியில் முடியக்கூடிய காரியம் அல்ல...ஒருவர் விதைத்தால் மற்றொருவர் அறுவடை செய்யக்கூடும் என்ற காரணத்தினால் எந்த ஆட்சியுமே மின்சார திட்டங்களை செயல்படுத்த முயற்சிக்கவில்லை....//

மின்சார திட்டங்கள் தோலிவியடைவதற்கு பல காரணங்களில் நீங்கள் சொன்ன காரணமும் ஒன்று.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

ஸாதிகா said...

salaam சலாம் சகோ.அருமையான அலசல்.,உதல் பத்தியில் காணும் ஜோக் இன்றைய நிலைமிக்கு நகைச்சுவை அல்லதானே?ஒரு அருமையான திருக்குறள் வாசகத்தை காட்டி அருமையானதொரு விளக்கத்தையும் தந்துள்ளீரக்ள்.

suvanappiriyan said...

சலாம் சகோ ஸாதிகா!

//salaam சலாம் சகோ.அருமையான அலசல்.,உதல் பத்தியில் காணும் ஜோக் இன்றைய நிலைமிக்கு நகைச்சுவை அல்லதானே?ஒரு அருமையான திருக்குறள் வாசகத்தை காட்டி அருமையானதொரு விளக்கத்தையும் தந்துள்ளீரக்ள்.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Nasar said...

அஸ்ஸலாம் அலைக்கும் .....சகோ

'ஆத்தா மிக்சி கொடுத்துச்சு:....

ஃபேன் கொடுத்துச்சு...

கிரைண்டர் கொடுத்துச்சு....

கரண்டை மட்டும் புடுங்கிடுச்சு....
நீங்க பயங்கர நக்கல் பார்ட்டி ..!!
ஆத்தா லாப் டாப் கொடுத்துச்சி ....மறந்துட்டிங்களா ..?!
நானும் சூரிய ஒளி மின்சாரம் அமைக்கும் எண்ணத்தில் இருக்கிறேன்.
ஆல்டர் நெட் டைனமோ திரு.அஸ்லம் அவர்களின் விபரங்கள்
இருந்தால் தெரிவிக்கவும்

வவ்வால் said...

சு.பி,சுவாமிகள்,

இன்றைய சூழலுக்கு ஏற்ற பதிவு.

நான் ஏற்கனவெ சில மின்சாரம் சார்ந்து பதிவுகள் போட்டேன். இன்னொரு பதிவு பாதியில் விட்டுவ்விட்டேன்.

இந்த அரசியல்வாதிகள், அதிகாரிகள் செய்வதை கண்டு வந்த எரிச்சல் தான் காரணம்.

உண்மையில் என்ன நடக்கிறது என தேடிப்படித்ததால் வந்த விளைவு. யாரும் இங்கு சுத்தமில்லை. இன்னும் சில ஆண்டுகளில் மிகப்பெரிய ஆப்பு வர இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் நடப்பதற்கு அடிக்கல் எல்லாம் 2010 இல் நட்டாச்சு.

விரிவாக சொல்ல வேண்டிய விஷயம் ,பதிவாக போடணும் ,ஆயசமாக இருக்கு :-((

//1992-2008-க்கு உட்பட்ட 16 ஆண்டுகள் மின்வெட்டே இல்லாத மாநிலம் இது. ஆனால், 1989-க்குப் பின் பெரிய மின் உற்பத்தித் திட்டங்கள் எதையுமே அரசு கொண்டுவரவில்லை. தவறான பாதையைத் தேர்ந்தெடுத்துவிட்டுக் காரணத்தைத் தேடுகிறது அரசு!''//

1989 க்கு பிறகு திட்டங்கள் கொண்டு வந்திருக்கிறார்கள் பலவும் முடிக்கப்படாமல் இருக்கிறது.

2006-7 காலங்களிலும் மின் தடை உருவாக ஆரம்பித்துவிட்டது. என்ன இந்த அளவுக்கு இருக்காது அவ்வளவு தான்.

//உலகம் முழுவதும் மக்கள் நல அரசுகள் மின்சாரத்தைச் சேவைத் துறையாகத்தான் வைத்திருக்கின்றன!''
//

உலகம் முழுவதும் உள்ள நாடுகள் மின்சாரத்தினை உற்பத்தி விலைக்கு கீழ் விற்பதில்லை, அத்தொகை அம்மக்களுக்கு பெரிய தொகை அல்ல.

தற்போது இந்தியாவிலும் உலக நாடுகளைப்போல உற்பத்தி விலையை ஒப்பிட்டு விலை நிர்னயம் செய்ய வேண்டும் என அரசின் நிர்வாகிகள் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள், அதன் விளைவு தான் சமிபத்திய மின்கட்டண உயர்வு.

எப்படி எண்ணை நிறுவனங்கள் தாங்களே விலையை நிர்ணயிக்கலாம் என அரசு கையை நழுவிக்கொண்டதோ அப்படி மின்சாரவாரியமும் வருங்காலத்தில் செயல்ப்பட போகின்றன.

இதனை அறிவுறுத்துவது மன்னு மோகனின் ஆலோசகர்கள், மாநில அரசுகளும் அதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டன, ஆனால் செயல்பாட்டுக்கு வரும் போது ஒப்புக்கு ஒரு அறிக்கை மட்டும் விடுவார்கள்.

நம்ம அரசியல்கட்சிகள் எதிர்ப்பதை உண்மையான எதிர்ப்பு என்றோ, ஆதரிப்பதை உண்மை என்றோ நம்பவே கூடாது :-))

suvanappiriyan said...

திரு வவ்வால்!

//உண்மையில் என்ன நடக்கிறது என தேடிப்படித்ததால் வந்த விளைவு. யாரும் இங்கு சுத்தமில்லை. இன்னும் சில ஆண்டுகளில் மிகப்பெரிய ஆப்பு வர இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் நடப்பதற்கு அடிக்கல் எல்லாம் 2010 இல் நட்டாச்சு.//

வருங்காலங்களை நினைத்தால் பயமாக இருக்கிறது. போகப் போக நிலைமை சீராவதை விட மேலும் கீழ் நோக்கியே சென்று கொண்டிருக்கிறோம். முதலில் இந்த இலவசங்களை ஒழித்தால்தான் அரசு திட்டங்களுக்கு உரிய நிதி கிடைக்கும். விட்ட பதிவை பூர்த்தியாக்கி வெளியிடவும்.

//நம்ம அரசியல்கட்சிகள் எதிர்ப்பதை உண்மையான எதிர்ப்பு என்றோ, ஆதரிப்பதை உண்மை என்றோ நம்பவே கூடாது :-))//

உண்மைதான்! எதிலுமே அவர்களின் நலன் தான் தொக்கி நிற்கும். அரசியல்வாதிகளை நம்பாமல் மக்கள் தங்களுக்கு தாங்களே எதையும் செய்து கொள்ளும் கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளோம். இதில் அன்றாடங் காய்ச்சிகளின் நிலைமையை நினைத்தால்தான் மனது கனக்கிறது.

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம் சகோ நாசர்!

//ஆத்தா லாப் டாப் கொடுத்துச்சி ....மறந்துட்டிங்களா ..?!//

அடடே...மறநதுட்டேனே! சேர்த்துடுவோம்.

//நானும் சூரிய ஒளி மின்சாரம் அமைக்கும் எண்ணத்தில் இருக்கிறேன்.
ஆல்டர் நெட் டைனமோ திரு.அஸ்லம் அவர்களின் விபரங்கள்
இருந்தால் தெரிவிக்கவும் //

வாழ்ததுக்கள்!

அஸ்லம் அவர்களின் மேலதிக விபரங்கள் கிடைத்தால் பகிருகிறேன்.

ssk said...

நாட்டிலோ மின்சாரம் இல்லை. அதை சரி செய்ய எந்த திறமையும் இல்லை.
ஆட்சி மட்டும் வேண்டும். எதற்கு ஆட்சி...
இதில் வேறு நூறு ஆண்டு சாதனை ஒரே வருடதில் செய்தாகிவிட்டது என்று அமைச்சர்களின் புல்லரிப்பு.
வேதனை.. மக்கள் படும் சிரமத்திற்கு அளவு இல்லை..
சொகுசாக கொட நாட்டில் இருக்கும் போது எப்படி தெரியும்.

துரைடேனியல் said...

அருமையான பகிர்வு. நியாயமான கேள்விகள். நிதானமான அலசல்கள். நிதர்சனமான தீர்வுகள். யோசனைகள் அத்தனையும் அருமை. நண்பர் இமெயிலில் அனுப்பிய திட்டம் அருமையானது. அரசாங்கம் யோசிக்குமா? காலம்தான் பதில் சொல்லவேண்டும் நண்பரே!

suvanappiriyan said...

சகோ எஸ்எஸ்கே!

//நாட்டிலோ மின்சாரம் இல்லை. அதை சரி செய்ய எந்த திறமையும் இல்லை.
ஆட்சி மட்டும் வேண்டும். எதற்கு ஆட்சி...
இதில் வேறு நூறு ஆண்டு சாதனை ஒரே வருடதில் செய்தாகிவிட்டது என்று அமைச்சர்களின் புல்லரிப்பு.
வேதனை.. மக்கள் படும் சிரமத்திற்கு அளவு இல்லை..
சொகுசாக கொட நாட்டில் இருக்கும் போது எப்படி தெரியும். //

ஆதங்கம் புரிகிறது. மக்கள் ஆட்சியாளர்களை சரியாக புரிந்து கொண்டாலே பல சிக்கல்கள் தீர வழியுண்டு.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

திரு துரை டேனியல்!

//அருமையான பகிர்வு. நியாயமான கேள்விகள். நிதானமான அலசல்கள். நிதர்சனமான தீர்வுகள். யோசனைகள் அத்தனையும் அருமை. நண்பர் இமெயிலில் அனுப்பிய திட்டம் அருமையானது. அரசாங்கம் யோசிக்குமா? காலம்தான் பதில் சொல்லவேண்டும் நண்பரே!//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

ஹுஸைனம்மா said...

//அரசு மான்யத்தோடு சேர்த்து 60000 நமக்கு செலவு வரும் என்று சொல்கின்றனர்.//

மொத்தம் 2 லட்சம் ஆகும் என்றும், அரசு மானியம் 80 ஆயிரம் என்றும், அரசு அங்கீகரித்த நிறுவனங்கள் மூலம் செய்தால் மட்டுமே மான்யம் கிடைக்குமென்றும் சென்ற வாரம் விகடனில் - பசுமை விகடனா, நாணய விகடனா என்று மறந்துவிட்டது - படித்தேன்.அதுவும் அக்டோபர் மாதம் மட்டுமே மானியத்திற்கு விண்ணப்பிக்க முடியுமாம. (அதாவது எப்போதுவேண்டுமானாலும் நிறுவிக் கொள்ளலாம், ஆனால் மான்யத்தை வாங்குவதற்கு) ஏனென்று புரியவில்லை.

suvanappiriyan said...

//(அதாவது எப்போதுவேண்டுமானாலும் நிறுவிக் கொள்ளலாம், ஆனால் மான்யத்தை வாங்குவதற்கு) ஏனென்று புரியவில்லை. //

இப்படி சட்டங்களில் ஏகப்பட்ட சிக்கல்களை வைப்பது பயனாளர்களை அடைய கால தாமதமாகிறது. வருங்காலங்களில் சூரிய ஒளியே நிரந்தர தீர்வாக இருக்கும் என்பது எனது அபிப்ராயம்.

ஹுஸைனம்மா said...

//சூரிய ஒளியே நிரந்தர தீர்வாக இருக்கும் //

முந்தைய ஆட்சியில், அம்மா மழைநீர் சேகரிப்பைக் கட்டாயமாக்கினார். இப்போ, மின்சாரத்தைக் கட் பண்ணி சோலார் பேனல் வச்சே ஆக வேண்டிய சூழலை உருவாக்கிவிட்டார். இயற்கை வளம் காக்கும் அம்மா!! இது தெரியாம அவர்மேல சேற்றைப் பூசுறாங்க மக்கள்!! :-)))))

suvanappiriyan said...

//முந்தைய ஆட்சியில், அம்மா மழைநீர் சேகரிப்பைக் கட்டாயமாக்கினார். இப்போ, மின்சாரத்தைக் கட் பண்ணி சோலார் பேனல் வச்சே ஆக வேண்டிய சூழலை உருவாக்கிவிட்டார். இயற்கை வளம் காக்கும் அம்மா!! இது தெரியாம அவர்மேல சேற்றைப் பூசுறாங்க மக்கள்!! :-))))) //

அதானே! தாய்க் குலம் மற்றொரு தாய் குலத்துக்கு சப்போர்ட்டா! எப்படியோ மக்கள் நலமாக இருக்க வேண்டும். அம்மா கிட்டே சொல்லி மேலும் ஏதாவது செய்ய சொல்லுங்க... :-) மக்கள் நிம்மதியான பிறகு கொட நாடு போய் ரெஸ்ட் எடுக்கலாம்.

Nasar said...

அஸ்ஸலாம் அலைக்கும் ..
@ சகோ ஹுசைனம்மா

// மின்சாரத்தைக் கட் பண்ணி சோலார் பேனல் வச்சே ஆக வேண்டிய சூழலை உருவாக்கிவிட்டார். இயற்கை வளம் காக்கும் அம்மா!!//

புர்ர்ர்ரட்சி அம்மாவை உண்மையிலேயே பாராட்டுரீங்களா ? நக்கல் பண்ணுறீங்களா ??
மற்றும் நீங்க சொன்னது போல் இரண்டு விகடன்களிலும் தேடிப்பார்தேன் செய்தி
கிடைக்கவில்லை..
// இது தெரியாம அவர்மேல சேற்றைப் பூசுறாங்க மக்கள்!! :-))))) //

யாராகிருந்தாலும் நன்றாகா ஆட்சி செய்தால் மக்கள் சந்தனத்தை பூசுவாங்க இல்லேன்னா
நீங்க சொன்ன மாதிரி சேற்றை பூசுவாங்க
எனக்கு தெரிந்தவரை மஞ்ச துண்டும் , பச்சை புடவையும் சரியில்ல ....ஒருதரம்
சிவப்புக்கு வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம்
--

ஹுஸைனம்மா said...

//இரண்டு விகடன்களிலும் தேடிப்பார்தேன் செய்தி
கிடைக்கவில்லை..//

23-அக்டோபர் -2012 தேதியிட்ட அவள்-விகடனில் வந்திருக்கிறது. (ஹி.. ஹி.. ஸாரி)

அங்கு வாசகர் ஒருவர் சொல்லியிருந்த கருத்துகளும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படவேண்டியவை:

Major negatives have not been highlighted in this issue.

A . The solar panels DO NOT have a 20 year life span. Atmost maximum 8 years, after you have to change the solar panels. Currently we get chinese made panels only, which needless to say, are hopeless.
B. Batteries as quoted in the article do not come for 6 years. Most batteries have a 2 year warranty and if properly maintained will extend to max 5 years.
C. Whatever alternativ energy we choose, it CANNOT replace the AC supply we have. You will not be able to run any of those 15 amps range appliances- water heater, AC, Fridge, Iron box, etc. The solar energy will augment lighting and fan reqquirements.

There is no doubt that we need to look out for alternative energy but have to keep in mind the additional cost of replacing solar panels and batteries.

Finaly lets pray that this situation improves.