Followers

Monday, May 19, 2014

எனக்கு ஹிஜாப் தான் முக்கியம்- முர்ஷிதா நஸ்ரின்



எனக்கு ஹிஜாப் தான் முக்கியம் : முர்ஷிதா நஸ்ரின்....!!

திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலத்தை சேர்ந்தவர் ஹாஜா அலாவுதீன். இவருடைய மகள் முர்ஷிதா நஸ்ரின்.

இவர் திருவாரூரிலுள்ள GRM பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று மாவட்டத்திலேயே முதலிடம் பிடித்துள்ளார்.

மாவட்டத்தில் முதலிடம் பிடித்த மாணவியை கௌரவிக்கும் நோக்கில் பள்ளி நிர்வாகம் மீடியாவுக்கு அழைப்பு விடுத்தது.

மீடியா முன்னிலையில் வருவதாக இருந்தால் நிகாபை கழட்ட சொல்வார்கள். எனக்கு என்னுடைய கண்ணியம் தான் முதலில் முக்கியம்.உலகில் கிடைக்கும் பெயர் புகழ் எதுவும் தேவையில்லை, அல்லாஹ்விடமிருந்து நற்பெயர் கிடைத்தாலே போதுமானது என்று மீடியா முன்னால் தோன்றுவதை முழுமையாக மறுத்துள்ளார்.

அதன்பிறகு மாவட்ட ஆட்சியர் அந்த மாணவிக்கு சான்றிதல் வழங்கி கௌரவித்தார். முகம் மட்டும் திறந்து சபையில் வருவதற்கு குர்ஆன் தடை சொல்லவில்லை. மேலதிகமாக பல ஆண்களுக்கு முன்னால் தனது முகத்தைக் காட்ட இந்த சகோதரி விரும்பவில்லை. இது இவரின் சொந்த விருப்பமாக பார்க்கப்பட வேண்டும்.

புர்கா அணிவதால் பெண்களின் முன்னேற்றத்துக்கு தடை ஏற்படுகிறது என்று சொல்பவர்கள் இந்த சகோதரியின் முன்னேற்றத்தை பார்த்து தங்கள் கருத்தை மாற்றிக் கொள்வார்களாக! மீடியாக்களின் முன்னால் வர துடிக்கும் பெண்களின் மத்தியில் இவரது இஸ்லாமிய பற்று நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது.

நம்முடைய அன்பு சகோதரி முர்ஷிதா நஸ்ரின் 12 ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் விபரம்

தமிழ் 192, ஆங்கிலம் 188, பொருளியல் 200, வணிகவியல் 200, கணக்குப்பதிவியல் 200, வணிக கணிதம் 197, மொத்தம் 1177

மாவட்டத்தில் முதலிடம் பிடித்த அன்பு சகோதரி மாநில அளவிலும் முதலிடம் பிடித்து, தேசிய அளவிலும் முதலிடம் பிடித்து இம்மையில் பல்வேறு சாதனைகள் புரிந்து, மறுமையில் அல்லாஹ்வுடைய திருப்தியை அடைந்து ஈருலகிலும் வெற்றிபெறுமாறு இறைவனிடம் இருகரம் ஏந்தி துஆ செய்கிறோம்.


--------------------------------------------------------------------

இனி மற்றொரு மாணவி....



முர்ஷிதா நஸ்ரின், (1,025 மதிப்பெண்கள் - அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கம்பம்): ''எங்கப்பா டீக்கடை வெச்சுருக்கார். வீட்டுல மொத்தம் நாலு குழந்தைங்க. நான் ரெண்டாவது பொண்ணு. தினமும் வீட்டு வேலையெல்லாம் முடிச்சுட்டுத்தான் ஸ்கூலுக்குப் போவேன். அதுலயும் பொதுத்தேர்வு சமயம், ஆபரேஷன் பண்ணி படுத்த படுக்கை ஆயிட்டாங்க அம்மா. அவங்களையும், அப்பா, அண்ணன், தம்பி, தங்கச்சியையும், வீட்டையும் கவனிச்சுக்கிட்டே பரீட்சை எழுதினேன். 'நல்லா படிக்கிற புள்ளைய, இப்படி கஷ்டப்படுத்துறோமே'னு எங்கம்மா வருத்தப்படுவாங்க. இருந்தாலும் அவங்களுக்கும் வேற வழி இல்லையே!

இத்தனை நெருக்கடிக்கு நடுவுலயும் எங்க ஸ்கூல்ல செகண்ட் மார்க் எடுத்திருக்கேன். பாடத்தை மனசுல ஏத்துறதுக்கு முன்ன, எங்க குடும்ப கஷ்டத்தை மனசுல ஏத்தினதுதான் முக்கிய காரணம்! இதுவரைக்கும் டியூஷன் போனதே இல்ல. அதுக்கு வசதி இல்லைங்கிறது ஒரு பக்கமிருந்தாலும், அதுல எனக்கு நம்பிக்கையும் இல்ல. ராத்திரி, பகல் பார்க்காம படிச்சாலும், பவர் கட் ரொம்பவே படுத்திருச்சு. மெழுகுவத்தி வெளிச்சம்தான் கைகொடுத் துச்சு. என் வகுப்பாசிரியர் கிருஷ்ணகுமார் சார், இன் ஜினீயர் கனவை விதைச்சது, எனக்கு பெரிய உந்து சக்தியா இருந்துச்சு.


நன்றி விகடன், சங்கை ரிதுவான்

---------------------------------------------------------------------------



விருத்தாசலம் வட்டம் கம்மாபுரம் கிராமத்தில் தச்சு வேலை செய்து வருபவர் முருகேசன் (45). இவருக்கு கிருத்திகா, சரண்யா என்ற இரு மகள்களும், சந்திரபிரகாஷ் என்ற மகனும் உள்ளனர். இவர்களது இரு மகள்களும் ஒரு ஆண்டு வயது வித்தியாசத்தில் இருந்தாலும் இருவரும் ஒரே வகுப்பில் கம்மாபுரம் அரசு மேல் நிலைப்பள்ளியில் +2 பொதுத்தேர்வு எழுதி இருவரும் பள்ளியின் முதல் (930) மற்றும் இரண்டாம் (928) மதிப்பெண் எடுத்திருந்தனர்.

முருகேசன் ஒரு நீரிழிவு மற்றும் இதய நோயாளி. மேலும் கலைஞர் வீடுகட்டும் திட்டத்தில் அரசிடம் ரூ 70,000 பெற்று கொண்டு மேலும் ரூ 2 லட்சம் கடனாக வாங்கி வீட்டை கட்டி முடித்துள்ளார். குடும்ப பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு, “பெரிய மகளுக்கு திருமணம் செய்து விட்டு , ஒரு மகளை படிக்க வைக்கலாம் இருவரையும் படிக்க வைப்பது இப்போதுள்ள சூழலில் முடியாத காரியம்” என தனது மனைவி ராஜலட்சுமியிடம் பேசிக் கொண்டிருந்த்தை கேட்டு மனமுடைந்த சகோதரிகள் பெற்றோர்கள் வெளியில் சென்றிருந்த நேரம் பார்த்து ஒரே துப்பட்டாவில் இரு முனைகளிலும் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

இந்த செய்தி அப்பகுதி மக்களை கடும் துயரத்தில் ஆழ்த்தியது. செய்தி அறிந்த மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் தலைவர் குணசேகரன், மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கத்தின் தலைவர் வை. வெங்கடேசன் மற்றும் வீரகாந்தி, செல்வகுமார், செல்வம், குமார் ஆகியோர் நேரில் சென்று பாதிக்கப்பட்ட பெற்றோருக்கு ஆறுதல் கூறினர்.

இது பற்றி சகோதரிகளின் தந்தையிடம் கேட்ட பொழுது “எம்பொண்ணுங்க பத்தாம் கிளாஸ் ஸ்கூல் பஸ்ட் 455 மார்க் எடுத்து எல்லாரும் பாராட்டுனாங்க. இப்ப 12-ம் வகுப்புலயும் ஸ்கூல் பஸ்ட் சொன்னவுடனே ரொம்ப சந்தோஷப்பட்டோம். நானும் என் சம்சாரமும் தான் இதை பற்றி பேசிகிட்டிருந்தோம். இதை காதுல கேட்டுருந்த என் பொண்ணுங்க இப்படி பண்ணிக்கிடுச்சிங்க ஒரு பொண்ணு கட்டி குடுத்தாலும் ஒரு பொண்ண நல்லா படிக்க வைச்சிருப்பேன். ரெண்டும் இப்படி பண்ணிடுச்சிங்க” என கலங்கினார்.

எதிர்வீட்டில் வசிக்கும் வணிகவியல் இளங்கலை (B.Com) பட்டதாரியான செந்தில் “அந்த பிள்ளைங்களோடவே படிப்பும் பொறந்த மாதிரி, எப்பவும் படிப்பு படிப்புனே இருக்குங்க. வெளில வர்ற வேலையை கிடையாது. சமூகத்தை பற்றி சரியான புரிதல் இல்லாம இப்படி பண்ணிடிச்சிங்க” என கூறினார்.

அம்மாணவிகள் பயின்ற பள்ளியின் தலைமை ஆசிரியர் G.சுப்பிரமணியன் அவர்களிடம் விசாரித்த போது “இரண்டு பொண்ணுங்களும் போட்டி போட்டு படிக்குங்க. ஆனால் +2 ரிசல்ட் வந்த 3-ம் நாளே இப்படி பண்ணிக்குங்கன்னு எதிர்பாக்கலே. அரசாங்கம் பெற்றோர்களுக்கும், பிள்ளைகளுக்கும் நிறைய கவுன்சிலிங் கொடுக்கனும். அப்பதான் இது மாதிரி தற்கொலை எல்லாம் முடிவுக்கு வரும்” என்று கூறினார்.

நன்றாக படிக்கும் இது போன்ற பெண்கள் தற்கொலையை நாடுவது ஆச்சரியமாக உள்ளது. ஒட்டு மொத்த மாணவ மாணவிகளுக்கும் ரிசல்ட் வருவதற்கு ஒரு வாரம் முன்பு அரசு செலவில் மன நல மருத்துவரைக் கொண்டு கவுன்சிலிங் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் இது பொன்ற தற்கொலைகள் அதிகரித்தவண்ணமே உள்ளன. குழந்தைகளை இழந்து வாடும் பெற்றோருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். 1,000க்கும் மேல் மதிப்பெண் பெற்றவர்கள் கூட, எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கவில்லை என, தற்கொலை செய்து கொள்ளும் சூழல் உருவாகி உள்ளது.கடந்த 2012 - 13ம் கல்வியாண்டு, தேர்வு முடிவு வெளியிட்ட பின், தமிழகத்தில், 18 மாணவ, மாணவியர் தற்கொலை செய்து கொண்டனர். ஆனால், 2013 - 14ம் ஆண்டில், பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியான, ஒரு வாரத்தில், 30 மாணவ, மாணவியர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதில், தான் எதிர்பார்த்த, அதிக மதிப்பெண்ணை, தன் மகன் எடுக்கவில்லை என, தந்தை தற்கொலை செய்து கொண்டதும் நிகழ்ந்துள்ளது.

No comments: