Followers

Tuesday, November 18, 2014

நரேந்திர மோடியை விடாது துரத்தும் இஸ்லாம்! :-)



ஜி20 மாநாட்டு ஒருங்கிணைப்பாளர்கள் நரேந்திர மோடியை சவுதி அரேபிய கொடிக்கு அருகில் நிற்க வைத்துள்ளதை நினைத்து எனக்குள் சிரித்துக் கொண்டேன். அந்த கொடியில் உள்ள அரபு வாசகம் 'இறைவன் ஒருவனைத் தவிர வேறு இல்லை: முகமது நபி அந்த இறைவனின் தூதராக இருக்கிறார்' என்று சொல்கிறது. உலக முஸ்லிம்களும் அதனைத்தான் சொல்கிறார்கள். கூடிய விரைவில் அதன் பொருளை உணர மோடி முயற்சிப்பார் என்று நம்புவோமாக! மோடி விரும்பாவிட்டாலும் அவரையும் அறியாமல் இஸ்லாம் அவரோடு பல வழிகளில் தொடர்பு கொண்டே வருகிறது. :-)

குஜராத் படுகொலைகளை இந்திய வரலாறு உள்ளவரை எவரும் மறந்து விட முடியாது. இந்திய பிரதமராக வலம் வரும் நரேந்திர மோடி முன்பு செய்த பாவங்களுக்கு தற்போது பிராயச்சித்தம் தேட பல வழிகளில் முயற்சிக்கிறார். ஆனால் செய்த தவறுகளுக்கு இன்றில்லாவிட்டாலும் என்றாவது இவரும் அமீத்ஷாவும் தண்டனை பெறுவது நடந்தே தீரும். முன்பு அவர் குஜராத்தில் நிகழ்த்திய கொடூரங்கள் எல்லாம் இந்து மதத்தின் மேல் உள்ள பற்றினால் செய்ததாக யாரும் நினைத்தால் அவர்களைப் பார்த்து நாம் பரிதாபமே பட முடியும். ஏனெனில் எந்த மதமும் மற்ற மத நம்பிக்கையாளர்களை அநியாயமாக கொன்று தனது மதத்தை வளர்க்க சொல்லவில்லை. பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்த தான் எப்படியாவது பிரதமர் பதவியை பிடித்து விட வேண்டும் என்ற ஆசையினால் செய்த அட்டூழியங்களே குஜராத் கலவரங்கள்.

இது ஒரு புறம் இருக்க.....

தற்போது நரேந்திர மோடி அவர்கள் இஸ்லாமிய சட்டங்களை ஒவ்வொன்றாக அமுல்படுத்த தொடங்கியிருப்பது வரவேற்கத்தக்கது. சில நாட்களுக்கு முன்பு யாரும் தனது காலில் விழ வேண்டாம் என்று அறிவித்து அதனை நடைமுறைபடுத்தியதைப் பார்த்தோம்.

புதுடில்லி: பா.ஜ.க,வின் பார்லிமென்டரி கட்சி முதல் கூட்டம் பார்லிமென்ட்டின் மத்திய அரங்கில் நடந்தது. இதில், அனைத்து பா.ஜ., எம்,பி.,க்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திரமோடி, 'என் காலிலோ, கட்சியின் மூத்த உறுப்பினர்களின் கால்களிலோ விழுந்து வணங்க வேண்டாம். லோக்சபா கூட்டத்திற்கு வரும் முன், உங்களை அதற்கேற்றவாறு தயார் செய்து கொண்டு வாருங்கள். கடுமையாக பணியாற்றுங்கள். புரியாத விஷயங்களை படித்து தெரிந்து கொண்டு வாருங்கள். லோக்சபா கூட்டங்களில் தொடர்ந்து கலந்து கொள்ளுங்கள்,' என்று கூறினார்.

-பத்திரிக்கைச் செய்தி 06-06-2014

'நான் ஹீரா என்ற ஊருக்குச் சென்றேன். அங்குள்ள தலைவருக்கு அந்த மக்கள் காலில் விழுந்து சிரம் பணிவதைப் பார்த்தேன். காலில் விழுந்து மரியாதை செய்வதற்கு நம்முடைய நபி மிகப் பொருத்தமானவர்களாயிற்றே என்று எனக்குள் கூறிக் கொண்டேன். முகமது நபி அவர்களிடம் வந்து 'ஹீரா ஊர் மக்கள் தங்கள் தலைவருக்கு காலில் விழுந்து மரியாதை செய்வதைக் கண்டேன். இறைவனின் தூதரே! இதற்கு நீங்கள் தகுதியானவர்கள்' என்றேன். அதற்கு முகமது நபி அவர்கள் 'நான் இறந்த பிறகு எனது சமாதியில் இதே போன்ற வணக்கத்தைச் செலுத்துவாயோ?' என்று கேட்டனர். மாட்டேன் என்று நான் கூறினேன். பின்னர் முகமது நபி அவர்கள் 'மனிதனுக்கு மனிதன் காலில் விழுந்து மரியாதை செய்யும் பழக்கத்தை செய்யாதீர்கள். ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு சிரம் தாழ்த்த அனுமதி இருந்தால் ஒரு மனைவி தனது கணவனுக்கு சிரம் தாழ்த்த சொல்லியிருப்பேன். ஏனெனில் அவர்கள் கணவர்களுக்கு அதிகம் கடன்பட்டிருக்கிறார்கள்.'

-அறிவிப்பவர் கைஸ் பின் சாத், நூல் அபுதாவுத்: 1828.

ஒருமுறை முகமது நபி அவர்கள் தமது தோழர்களுடன் நடந்து சென்றார்கள். அவர்களின் தலை மீது மட்டும் நிழல்படுவதைக் கண்டார்கள். தலையை உயர்த்திப் பார்த்தபோது ஒரு துணிக் குடையால் அவர்களுக்கு நிழல் தரப்படுவதைக் கண்டார்கள். 'விடுங்கள்' என்று கூறி அந்தத் துணியை வாங்கி மடக்கி வைத்தார்கள். 'நானும் உங்களைப் போன்ற மனிதன் தான்' என்றும் கூறினார்கள்.

ஆதாரம்: தப்ரானி.

தனக்கு யாரும் விசேஷமாக மரியாதை செய்து விடக் கூடாது என்பதிலும், தனது இறப்புக்குப் பின் யாரும் தன்னை கடவுளாக்கி விடக் கூடாது என்பதிலும் முகமது நபி எந்த அளவு கவனமாக இருந்திருக்கிறார்கள் என்பதை நினைத்து ஆச்சரியப்படுகிறோம்.

இறைவனையே சிரம் தாழ்த்தி வணங்குங்கள்.

-குர்ஆன்: 53: 62

----------------------------------------------------

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் நரேந்திர மோடி நேற்று முன்தினம் பிரிஸ்பேன் நகரில் நடைபெற்ற ஜி20 நாடுகளின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார்.

"நோய்தான் ஏழைகளுக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. எனவே தெருக்களை சுத்தமாக வைத்துக்கொள்வதை விட ஏழைகளுக்கு வேறு பெரிய அளவில் நன்மை செய்துவிட முடியாது.

சிலர் பெரிய அளவில் கனவு காண்கிறார்கள். ஆனால் நான், கழிவறைகள் கட்டுவது, நாட்டை சுத்தமாக வைத்துக்கொள்வது போன்றவற்றில் மிகுந்த அக்கறை காட்டுகிறேன். இந்தியாவில் ஏழைகளுக்கு கழிவறைகள் கட்டுவதற்கு ஆஸ்திரேலிய வாழ் இந்தியர்கள் உதவ வேண்டும்." என்று பேசியுள்ளார். இங்கும் அவர் இஸ்லாமிய சட்டத்தையே முன் மொழிந்துள்ளார்.

இது சம்பந்தமாக இஸ்லாம் என்ன கூறுகிறது என்று பார்ப்போம்.

நபி (ஸல்) அவர்கள் மலம் கழிக்கச் சென்றால் மற்ற யாரும் அவர்களை பார்க்காத அளவுக்கு (தூரமாக) செல்வார்கள். (ஆதாரம் - அபூதாவூத்)

நபியவர்கள் மல ஜலம் கழிக்க விரும்பினால் அவ்விடத்தை நெருங்கும் வரைக்கும் தன் ஆடையை உயர்த்தமாட்டார்கள். (ஆதாரம் - திர்மிதி, அபூதாவூத்)

மனிதர்கள் களைப்பாறும் இடம், நடைபாதை, நிழல் (போன்ற) இம் மூன்று இடங்களில் மல ஜலம் கழித்து (அதனால் மக்களின்) சாபத்தை பெறுவதை தவிர்ந்து கொள்ளுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் - அபூதாவூத்)

உளூ செய்யக்கூடிய, அல்லது குளிக்கக்கூடிய தேங்கிக் கிடக்கும் தண்ணீரில் சிறுநீர் கழிக்கக் கூடாது என நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள். (ஆதாரம் - நஸாயி)

இஸ்லாமிய சட்டங்கள் எப்படியோ அறிந்தோ அறியாமலோ மோடியை ஆட் கொள்ளத் தொடங்கியுள்ளது. இது தொடர வேண்டும் என நாமும் விரும்புவோம்.






No comments: