Followers

Saturday, January 21, 2023

இறந்தவர்களின் பெயரால் நடத்தப்படும் சில புதிய பழக்கங்கள்.

 

மார்க்கத்தில்) புதிதாக உருவாக்கப்பட்டவைகளை விட்டும் உங்களை நான் எச்சரிக்கிறேன். புதிதாக உருவாக்கப்பட்டவை அனைத்தும் பித்அத் (எனும் அனாச்சாரம்) ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் சேர்க்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்துள்ளார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)

நூல்: நஸாயீ 1560

 

இன்று நமது ஊர்களில் ஒரு முஸ்லிம் இறந்தவுடன் அதன் பெயரில் பல புதிய சடங்குகள் நடத்தப்படுகின்றன. இவை எல்லாம் மார்க்கம் அனுமதித்ததுதானா என்று சீர்தூக்கி பார்க்க கடமைப்பட்டுள்ளோம்.

 

ஜஃபர் பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் மரணித்த செய்தியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்களுக்கு அறிவித்துவிட்டு ‎‎ ஜஃபரின் குடும்பத்தினருக்காக நீங்கள் உணவு தயாரியுங்கள், அவர்களைப் பாதிக்கும் செய்தி வந்துள்ளது என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஜஃபர் (ரலி)

நூல்கள்: அபூதாவூத் 2725, அஹ்மத் 1660, திர்மிதி 919, இப்னுமாஜா ‎‎1599

 

இதன் அடிப்படையில் இறந்தவரின் குடும்பத்தினருக்கு மற்றவர்கள் தான் உணவு அளிக்க வேண்டுமே தவிர அவர்கள் வீட்டில் சாப்பிடக் கூடாது என்று அறியலாம். சாப்பிட்டதோடு அல்லாமல் அங்கு புதிய முறையில் ஃபாத்திஹாக்கள் ஓதுவதும் கூடாது என்பதை அறிக.

 

இறந்தவருக்காக மூன்று நாட்களுக்கு மேல் துக்கத்தை வெளிப்படுத்தக் கூடாது  என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் நாங்கள் தடுக்கப்பட்டிருந்தோம். கணவரைத் தவிர. கணவர் இறந்தால் நான்கு மாதம் பத்து நாட்கள் துக்கத்தை வெளிப்படுத்தலாம்.

அறிவிப்பவர்: உம்மு அதிய்யா (ரலி)

நூல்: புகாரி 313, 5341, 5343

 

ஏழாம் நாள், பத்தாம் நாள், நாற்பதாம் நாள், வருஷத்து ஃபாத்திஹா ஓதி பணத்தை விரயமாக்குபவர்கள் கவனிக்க...

 

அபூ தல்ஹாவின் மகன் உமைர் மரணித்த போது அபூ தல்ஹா ‎‎(ரலி), நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அழைத்தார்கள். அவ்வீட்டாரிடம் நபிகள் நாயகம் (ஸல்) வந்தார்கள். அவர்கள் வீட்டிலேயே அவருக்குத் தொழுகை நடத்தினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னே நின்றார்கள். அவர்களின் பின்னால் அபூ தல்ஹா (ரலி) நின்றார்கள். (அவரது மனைவி) உம்மு ஸுலைம் அபூ தல்ஹாவின் பின்னே நின்றார். அவர்களுடன் வேறு யாரும் இருக்கவில்லை.

அறிவிப்பவர்: அபூ தல்ஹாவின் மகன் அப்துல்லாஹ்

நூல்: ஹாகிம்

 

ஒருவர் இறந்து விட்டால் அவரது உடலைப் பள்ளிவாசலுக்கோ, அல்லது ஜனாஸா தொழுகைக்காக நிர்ணயிக்கப்பட்ட இடத்துக்கோ கொண்டு சென்று தான் தொழுகை நடத்த வேண்டும் என்பது கட்டாயம் இல்லை.

 

எந்த மனிதரின் குடும்பத்தினர் விஷயத்திலும், அவரது அதிகாரத்திலும் அவருக்கு நீ இமாமாக - தலைவனாக ஆகாதே! ‎‎ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ மஸ்வூத் (ரலி)

நூல்: முஸ்லிம்

 

நபிகள் நாயகத்தின் இந்தப் பொதுவான அறிவுரையில் திருமணம் நடத்தி வைத்தல், ஜனாஸா தொழுகை நடத்துதல் உள்ளிட்ட அனைத்துமே அடங்கும் என்பதால் இறந்தவரின் குடும்பத்தினரே ஜனாஸா தொழுவிக்க உரிமை படைத்தவர்கள் என்பதை அறியலாம். இதற்கும் பள்ளிவாசல் இமாமைக் கொண்டுதான் தொழ வைப்போம் என்று அடம் பிடிப்பவர்கள் நபிகள் நாயகத்தின் அறிவுரைகளை புறம் தள்ளுகிறார்கள். வாரிசுகள் அனுமதி கொடுத்தால் யார் வேண்டுமானாலும் தொழ வைக்கலாம். இதனை  மார்க்கம் அறிந்த இமாம்கள்தான் நிர்வாகிகளுக்கு சொல்லி புரிய வைக்க வேண்டும்.

 

 

 

 

No comments: