Followers

Tuesday, February 24, 2026

பெரியசாமி பல ஆண்டு போராட்டத்துக்குப் பிறகு தமிழகம் திரும்பினார் - ஒரு மீள் பதிவு

 








பெரியசாமி பல ஆண்டு போராட்டத்துக்குப் பிறகு தமிழகம் திரும்பினார் - ஒரு மீள் பதிவு

 

சவூதியில் கடந்த பதினெட்டு வருடங்களாக அலைகழிக்கப்பட்ட அப்பாவி தமிழகத் தொழிலாளி ஒருவருக்கு ஒருவழியாகத் தீர்வு கிடைத்துள்ளது.

 

சவூதியின் ஹைல் மாகாண ஆளுநர் இளவரசர் சவூத் பின் அப்துல் முஹ்சின் என்பவருடைய தலையீட்டால் பெரியசாமி என்னும் அந்தத் தமிழர் கஃபீல் எனப்படும் பொறுப்பாளரிடமிருந்து 85,000 ரியால்களை ஒட்டுமொத்தச் சம்பளமாகப் பெற்று ஊர்திரும்ப வழி ஏற்பட்டுள்ளது. ஜெத்தாவிலுள்ள இந்தியத் துணை தூதரகத்தில் அவருக்கான இத்தொகையை ஷாம்லி காவல் நிலையத்தார் ஒப்படைத்துள்ளனர்.

 

45 வயதான பெரியசாமியை துன்பத்தின் கோரப்பிடியிலிருந்து மீட்க உதவிய ஹைல் மாகாண கவர்னருக்கு இந்திய கான்சல் ஜெனரல் ஃபைஸ் அகமது கித்வாய் வெளிப்படையாக தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டுள்ளார். "ஹைல் மாகாண கவர்னரின் தலையீடு இல்லாமல் இருந்திருந்தால், பெரியசாமி தன் துன்பச்சுரங்கத்தின் முடிவில் ஒளியைப் பார்த்திருக்க முடியாது," என்று ஃபைஸ் அஹமது சொன்னார்.

 

நன்றியறிவித்தலின் அடிப்படையில் ஹைல் மாகாண கவர்னருக்கு ஒரு தனிப்பட்ட கடிதத்தை அனுப்ப உள்ளதாகவும் ஃபைஸ் அகமது கூறினார். "ஷாம்லி காவல்நிலைய அதிகாரிகளுக்கும் பாராட்டுக்கடிதம் வழங்கப்படும்"

 

தமிழ்நாட்டின் காரைக்குடியைச் சேர்ந்த பெரியசாமி சவூதி அரேபியாவுக்கு வேலைக்காக வந்த போது, எல்லோரையும் போல அவருக்கும் கனவுகள் இருந்தன.1994ல் ஆடு மேய்க்கும் வேலைக்கு வந்தவருக்கு, கல்யாணமாகி ஒரேஒரு வருடம் தான் ஆகியிருந்தது.

 

கஃபீல் எனப்படும் அந்தப் பொறுப்பாளரின் பொறுப்பற்ற தனத்தால் கடந்த 18 வருடங்களாக சம்பளமோ, விடுமுறையோ கிடைக்கவேயில்லை பெரியசாமிக்கு. மன அழுத்தத்தால் ஒருமுறை தற்கொலைக்கும் முயன்றுள்ளார்.

 

பெரியசாமியின் அவலநிலைக்குத் தீர்வு ஒரு சவூதிக்காரர் மூலம் வந்தது. மனிதாபிமானமிக்க அந்த மற்றொரு சவூதிக்காரர் பெரியசாமியின் நிலையை ஹைல் கவர்னர் இளவரசர் சவூத் இப்னு அப்துல்முஹ்சின் கவனத்திற்கு எடுத்துச்சென்றார். இந்தியத் தூதரக அதிகாரி தட்சினா மூர்த்தியும் சக இந்தியச் சகோதரனான பெரியசாமிக்காக உதவ முன்வந்தார்

 

 

கவர்னரின் ஆணைகளின் படி விசாரணைக்குப் பின்னர், அந்தப் பொறுப்பாளர் ஊதியம் மற்றும் விமான ச் சீட்டை செலுத்த உத்தரவிடப்பட்டது. மேலும் ஊதியங்கள் வழங்கப்பட்டதன் பின்னர் பெரியசாமியை உடனடியாக இந்தியா திருப்பி அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

 

அந்தப் பொறுப்பாளர் ஒரு பெரிய தொகையை செலுத்த முடியவில்லை . இறுதியாக தனக்கு சுமார் ஒரு இலட்சம் ரியால் வரவேண்டியது இருந்தும் 85,000 கிடைத்தால் போதும் என்று பெரியசாமி தெரிவித்ததன் பேரில் அத்தொகையை பெற்றுத்தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

இதற்கிடையில், ஜெத்தா துணைத் தூதரகம் தமிழ்நாட்டில் பெரியசாமி குடும்பத்தாருடன் தொடர்பை ஏற்படுத்தியது."ஜெத்தாவில் உள்ள சில சமூக ஊழியர்கள் எங்களுக்கு அவர் குடும்பத்தார் எங்கிருக்கிறார்கள் என்று கண்டுபிடிக்க உதவினர்.பெரியசாமியின் இளைய சகோதரர் கண்ணப்பன் ஊரில் அவரை வரவேற்பதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளார் என்று துணைத் தூதர் ஃபைஸ் அகமது கூறினார்.

 

மேலும் இந்திய சமூகஊழியர்கள் சிலர் இந்தியா செல்லும் பெரியசாமிக்கு உதவ 30,000 சேகரித்து உதவுகின்றனர்.

 

பாஸ்போர்ட்டும்  இல்லாத பெரியசாமிக்கு இந்திய தூதரகம் ஒருவழிப் பயணத்திற்கான சிறப்பு அனுமதி அட்டையை வழங்கியுள்ளது

No comments: