கண்கொள்ளா காட்சி!
மண்ணடியிலுள்ள ததஜ தலைமை அலுவலகத்தை சீல் வைக்க அரசு தரப்பிலிருந்து எடுக்கப்பட்ட முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் ததஜ நிர்வாகிகள் வந்த அதிகாரியிடம், ஒரே ஒருநாள் டைம் தரக் கேட்டு அவ்வளவு கெஞ்சியும் பெரிய சட்டம் பேசி கொண்டிருந்தவர் பின்மாறி திரும்பிச் சென்றது பார்க்க கண்கொள்ளா காட்சியாக இருந்தது.
செய்தி கேள்விப்பட்டதும் சம்பவ இடத்துக்கு எஸ் டி பி ஐ கட்சி நிர்வாகிகள், தமுமுகவினர் என இயக்கம் கட்சி பாராமல் வந்து குவிந்தனர். நேரம் செல்லச் செல்ல நிலைமை கைமீறிவிடும் என்று புரிந்த அரசு தரப்பு அதிகாரிகளும் காவல்துறையினரும் வந்த நோக்கம் கைவிட்டுத் திரும்பிச் சென்றனர். சிறிது நேரத்திலேயே தமுமுக, மமக, எஸ் டி பி ஐ தலைவர்களெல்லாம் ததஜ அலுவலகத்தில் ஒன்றுகூடியது, மிக நீண்டகாலமாக பலப் பல ஏக்கங்களுடன் தவித்து வந்த தமிழக முஸ்லிம்களுக்குப் பெரும் எதிர்பார்ப்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்திய மகத்தான நிகழ்வு. மனம் நிறைந்த மகிழ்ச்சி. வரும்நாட்களில் இன்னுமின்னும் இந்த நெருக்கம் அதிகரித்துச் செல்ல வாழ்த்துகளும் பிரார்த்தனைகளும்!
இறைவன் முன்னிலையில் வேற்று, விருப்பற்று சிந்திக்கும் ஒரு சக முஸ்லிமாக நிச்சயமாக இது எல்லோருக்கும் மன மகிழ்ச்சியைத் தரும். ஆனால் அதே சமயம், இதன் பின்னணி அரசியலைப் பற்றியும் நாம் சற்று விழிப்போடு இருந்து கவனமாக நம் நகர்வுகளை அமைத்துக் கொள்ள வேண்டியது கட்டாயம். இல்லையேல், பாஜக முன் நகர்த்தும் காய்களில் அவர்களின் விருப்பம் கனிய நாமே பகடை காய்களாக நம்மை அறியாமல் ஆகிவிடுவதற்கான வாய்ப்புகளும் அதிகம்!
பாகிஸ்தான் பிரிவினைக்கும் பின்னரும் இந்தோ - பாக் மற்றும் இந்தோ - சீனா போர்களுக்குப் பின்னரும் கொண்டு வரப்பட்ட எதிரி சொத்து சட்டங்கள் இந்திய நலனுக்காக போடப்பட்டவை. ஒருநாட்டின் சொந்த நலன் என்ற அடிப்படையில் அதனை எதிர்க்கவோ குற்றம் சொல்லவோ முடியாது. இந்தியக் குடிமகன்களாக அதனை நாம் எதிர்க்கவும் முடியாது.
பாசிச பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர், ஏக போக அதிகாரத்துடன் எண்ணற்ற சட்டத்திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளது. அவை எல்லாமே இந்தியாவில் சிறுபான்மை மதத்தைச் சேர்ந்தவர்களை இரண்டாம்தரக் குடிமக்களாக மாற்றுவதற்கானவை என்பதில் எள்ளளவும் யாருக்கும் சந்தேகம் இருக்காது. இப்போது எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு முகாந்திரமாக 2017 ல் இந்த எதிரி சொத்து சட்டத்தில் பாஜக திருத்தச் சட்டம் நிறைவேற்றியுள்ளது. அதன் அடிப்படையிலேயே எவ்வித முன்னறிவிப்பும் இன்றி அடிமை அதிமுக அரசு இன்றைய அடாவடி நடவடிக்கையில் இறங்கி தோல்வி கண்டு திரும்பியுள்ளது.
பாசிச பாஜக போட்டு வைத்து, இது போன்று சந்தர்ப்பங்கள் கிடைக்கும்போதெல்லாம் அதனைத் தம் வசதிக்கு எடுத்துப் பயன்படுத்தும் போதுதான் நமக்குத் தெரியப்போகிறது. ஒன்றும் செய்ய முடியாதுதான்.
ஆனால், இவ்வாறு தம் வசதிக்கு அவற்றை எடுத்து உபயோகிக்கும்போது அதன் பின்னணியிலுள்ள நோக்கம் என்ன, அதனால் விளையும் பயன் என்ன என்பதையுமெல்லாம் சேர்த்து யோசித்து சமயோஜிதமாக நம் பக்கமிருந்தும் காய்களை நகர்த்த வேண்டியது கட்டாயம்.
இந்தச் சட்டம் உண்மையில் இந்திய நலனுக்குப் பயன்விளைவிப்பதே. அதனைச் செயல்படுத்த வேண்டிய முறை இதுவல்ல. முறையாக, நோட்டீஸ் அனுப்பி டைம் கொடுத்துச் செயல்படுத்தியிருக்க வேண்டும். அப்படி செய்தால், நாமும் சட்டத்தை மதித்தே நடந்திருப்போம். எதிர்த்து நின்றிருக்க மாட்டோம். இதனை நன்கு தெரிந்தே, வேண்டுமென்றே எந்த முன்னறிவிப்பும் இன்றி அடிமை அதிமுக அரசு இன்றைய அடாவடியில் இறங்கியுள்ளது. இதற்கான காரணம் என்னவாக இருக்கும்?
ரஜினியின் முதுகை தேய்த்து பலனின்றி ஏமாந்துவிட்ட நிலையில், வரும் தேர்தலுக்கு முன்னர் எப்படியாவது முஸ்லிம் சிறுபான்மை ஓட்டுகளைச் சிதறடிப்பதை உறுதிபடுத்த வேண்டிய கட்டாயத்தில் பாஜக உள்ளது. அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்ய அது தயாராகும். அந்த கண்ணோட்டத்தில் இன்றைய சம்பவத்தைப் பார்த்தால்...
இதன் மூலம் பாஜக நாடுவது என்ன, அது நடக்காமல் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பது நமக்குத் தெளிவாக பிடிகிடைக்கும்.
இந்துக்களுக்கான ஒரே கட்சியாக தம்மை முன்னிறுத்துவதற்கு, இந்து ஓட்டுகளை ஒன்றிணைப்பதற்கு ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு இருக்கும் ஒரே ஆயுதம் அரசியல் ரீதியாக முஸ்லிம்கள் ஒன்றாக நிற்கின்றனர் என்பதைக் காட்டுவது மட்டும்தான். முஸ்லிம்கள் ஒரு தலைமையில் ஒன்றிணைய வேண்டியது முஸ்லிம்களுக்கு எவ்வளவு முக்கியமோ அதனைவிட ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு முக்கியம். அதற்காக முஸ்லிம்கள் ஒரு தலைமையில் ஒன்றிணையாமலோ இணைந்து ஒன்றாக நிற்காமலோ இருக்க முடியுமா? இல்லை! அது நம் மார்க்கக் கடமை போன்ற முக்கியமானது!
எனில், அதனை எப்படி செயல்படுத்துவது? நம் ஒன்றிணைவு மூலம் பாஜக அதன் நலனை அறுவடை செய்யாமல் இருப்பதற்கான அணுகுமுறை என்ன?
நம் ஒன்றிணைவையும் பரஸ்பர புரிதலுடனான செயல்பாட்டையும் இயன்றவரை ஊடக வெளிச்சத்துக்குக் கொண்டுவராமல் விளம்பரமின்றி செயல்படுத்துவதும் தலைமைக்கு வருபவர்கள், நீதி விசயத்தில் எவ்வித சமரசத்துக்கும் இடம்கொடுக்காமல் வலுவாகவும் உறுதியாகவும் எதற்கும் அசைந்து கொடுக்காதவர்களாக இருப்பதும் அதனை உறுதிபடுத்தும்!