Followers

Saturday, August 29, 2020

முஹர்ரம் 9,10 நோன்பும் பாகிஸ்தானிகளும்!

 முஹர்ரம் 9,10 நோன்பும் பாகிஸ்தானிகளும்!

நேற்று முஹர்ரம் 9 நோன்பிருந்து மாலையில் நோன்பு திறக்க ஏற்பாடு செய்து கொண்டிருந்தேன். 'நஜீர் பாய்... தனியாக என்ன செய்து கொண்டிருக்கிறாய்... வா... ஒன்றாக நோன்பு திறப்போம்' என்றார் பக்கத்து அறையில் வசிக்கும் பாகிஸ்தானி.

'இல்லை... என் நண்பரையும் வரச் சொல்லியுள்ளேன்... நன்றி' என்றேன்.

'நண்பன் வந்தால் என்ன? அவரையும் அழைத்து வா...' என்றார்.

'சரி... நான் தயார் செய்வதையும் நீங்கள் தயார் செய்வதையும் சேர்த்து வைத்து நோன்பு திறப்போம்' என்றேன்.

'சரி' என்றார்.

என் சார்பாக நம் ஊர் ஸ்பெஷலான மெது வடையும், சுண்டலும், வாழைப்பழங்களும் கொண்டு சென்றேன். அவர்கள் தரப்பில் பேரித்தம் பழம், திராட்சைப் பழம், ஃரெஷ் மாம்பழ ஜூஸ், மட்டன் குருமா தயார் செய்து வைத்திருந்தனர். நானும், நண்பரும் அவர்கள் அறையில் நோன்பு திறந்தோம். இங்கு எங்காவது வெறுப்பு தலை தூக்குகிறதா? அன்பும் பண்பும் விருந்தோம்பலும்தான் இங்கு காணக்கிடைக்கிறது. எல்லா புகழும் இறைவனுக்கே!

இதற்கெல்லாம் ஒரு பதிவா? என்று நீங்கள் சலிப்படையலாம். இதிலும் சில விஷயங்கள் சொல்ல வேண்டியுள்ளது. பாகிஸ்தானிகள் என்றாலே முரடர்கள், இந்தியர்களை வெறுப்பவர்கள், இந்தியாவை துண்டாடியவர்கள் என்ற எண்ணம் பரவலாக நம் இந்தியர்களிடத்தில் உள்ளது. உண்மையில் நாம் நினைப்பது போல் அத்தனை மோசமானவர்கள் அல்ல பாகிஸ்தானிகள். எப்படி நமது நாட்டில் 3 சதவீதமே இருக்கும் ஒரு சிறு கும்பல் ஒட்டு மொத்த 97 சதவீத மக்களையும் அடக்கி ஆண்டு அவர்களின் கருத்தை திரிக்கிறார்களோ அதுபோல் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட பாகிஸ்தானிகள் சொற்பமானவர்களே.... இந்தியர்களோடு அன்போடும் பாசத்தோடும் பழகவே அவர்களும் விரும்புகின்றனர். ஆனால் இரு நாட்டு அரசுகளும் ஒருவரையொருவர் பகைமை பாராட்ட வைத்து அதன் மூலம் தங்களை வளமாக்கிக் கொள்கின்றனர். அரசியல்வாதிகள் செய்யும் சித்து விளையாட்டில் அப்பாவி மக்கள் பலியாகிக் கொண்டுள்ளனர்.

நமது நாடு பல உளவாளிகளை அங்கு அனுப்பியுள்ளது. அதே போல் பாகிஸ்தானும் நமது நாட்டுக்கு பல உளவாளிகளை அனுப்பி வேவு பார்க்கிறது. வறுமையில் சிக்கித் தவிக்கும் இவ்விரு நாடுகளும் பாதுகாப்புக்காக எத்தனை கோடிகளை விரயமாக்குகின்றன? இதனால் பலனடைவது வல்லரசு நாடுகளே... ரஃபேல் விமானங்களிலிருந்து தற்போது வாங்கப் போகும் விமானங்களையும் சேர்த்து கணக்கிட்டால் அந்த பணத்தில் பல வளர்ச்சி திட்டங்களை இரு நாடுகளும் முன் எடுக்கலாம். எல்லைகள் திறந்து விடப்பட்டால் இரு நாடுகளுக்கும் பல பயன்கள் உண்டு. ஆனால் இரு நாடுகளும் சேர்ந்து விடக் கூடாது என்பதில் வல்லரசுகள் மிகக் கவனமாக உள்ளன. இரு நாடுகளின் பிடிவாதத்தால் காஷ்மீர் மக்களும் சொல்லொணா துயரத்தை தினமும் அனுபவித்து வருகின்றனர். நாம் முன்பே வாக்களித்தபடி இரு நாடுகளும் விலகிக் கொண்டு காஷ்மீரை சுதந்திர நாடாக அங்கீகரித்தால் பல பிரச்னைகள் தீர வாய்ப்புண்டு.

இந்த அரசியலை எல்லாம் புரிந்து கொள்ளாமல் இரு நாட்டு மக்களும் ஒருவரையொருவர் வெறுத்து வருகிறோம். பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு ஆதரவளித்தாலும் அவரை தேச துரோகியாக்கி அழகு பார்க்கிறது இந்துத்வா. இந்நிலைகள் எல்லாம் மாறி இரு நாடுகளும் கைகோர்த்தால் மிக உயர்ந்த இடத்தை நாம் அடையலாம். ஆனால் சங்கிகள் இதற்கு சம்மதிக்க மாட்டார்கள். அதே போல் பாகிஸ்தானில் உள்ள ஒரு குழுவும் இதற்கு சம்மதிக்காது. இரு நாட்டு எதிர்ப்பாளர்களும் ஒன்றாகி விடாமல் வல்லரசுகள் காய்களை நகர்த்தி வரும். இரு நாட்டு அரசியல்வாதிகளும் அதற்கு தூபம் போடுவர். தற்போதய பாகிஸ்தான் தலைவர் இம்ரான்கான் நம் நாட்டோடு கை கோர்க்கவே விரும்புகிறார். ஆனால் துரதிஷ்டவசமாக நம் புறத்தில் இருந்து சாதகமான பதில் செல்லவில்லை. இதனை ஒரு பேட்டியிலும் இம்ரான்கான் குறிப்பிட்டுள்ளார். தற்போதய பாகிஸ்தான் தலைமையை பயன்படுத்தி இந்தியா நட்பை வலுப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

அசாதாரணமான சூழல் மற்றும் பகைமையில் இருந்து இரு நாட்டையும் இறைவன் காப்பானாக!




1 comment:

Dr.Anburaj said...

இந்திய ஊடகங்களின் குணம் ..!
வாகா எல்லை பாகிஸ்தானிய பக்க பெயர் என்று சில பேருக்கு தெரியும்..!
ஆனால் இந்திய பக்கத்தின் பெயர் அட்டாரி பார்டர் என்பது தெரியவில்லை..!
இதற்குப் பிறகும் நாம் அதை வாகா பார்டர் என்று அழைக்கிறோம் ஏனெனில்
பாகிஸ்தான் காதலர்கள் காதலர்கள் ஊடகவியலாளர்கள் பாகிஸ்தானிலிருந்து சகலமும் பெறுகிறார்கள்..!
அட்டாரி எல்லையின் பெயர்
சர்தார் ஷியாம் சிங் அட்டாரி என்று பெயர் சூட்டப்பட்டது...!
கோழைத்தனமான முகலாயர்களை போரில் பல முறை தூசி தட்டச் செய்த மகாராஜா ரஞ்சித் சிங்கின் ராணுவத் தலைவர் சர்தார் ஷியாம் சிங் அட்டாரி
அட்டாரி எல்லையை வாகா எல்லை என்று அழைப்பது ஷியாம் சிங் அட்டாரிக்கு மாபெரும் அவமானம்
ஊடகங்கள் இதை அட்டாரி பார்டர் என்று அழைக்க நிர்பந்திக்கப்படும் அளவிற்கு அதிகமாக இந்த பெயரை பயண்படுத்துங்கள்..!
பாரத் மாதா கி ஜெய்..!