Followers

Showing posts with label SEEMAN. Show all posts
Showing posts with label SEEMAN. Show all posts

Thursday, March 03, 2016

'நாம் தமிழர்' கட்சி ஏன் தோற்கடிக்கப்பட வேண்டும்?



சமீப காலமாக ஒரு சிறிய தொகையான இளைஞர்கள் 'தமிழ்நாடு தமிழனுக்கே' என்ற கோஷம் போட ஆரம்பித்துள்ளனர். இது கேட்பதற்கு நியாயம் போல் தோன்றலாம். ஆனால் சற்று ஆழ சிந்தித்துப் பார்த்தால் இது தமிழனுக்கு ஆப்பு வைக்கும் வேலை என்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம்.

200 ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்கள் பிழைப்பு தேடி பர்மா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா என்று போய் வந்தனர். 100 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காஈ இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா என்று போய் வந்தார்கள். கடந்த ஐம்பது வருடங்களாக சவுதி ஆரேபியா, துபாய், குவைத் என்று வளை குடா நாடுகளுக்கு படையெடுக்கிறார்கள். இது தொன்று தொட்டு நடந்து வருகிறது. இதன் மூலம் தமிழகம் மற்ற மாநிலங்களை விட சிறப்பாக உள்ளது. அரசியல்வாதிகள் இத்தனை கோடிகளை கொள்ளையடித்தும் நமது தமிழ்நாடு இந்த அளவு சிறந்து விளங்க காரணமே வெளி நாட்டு பணம் கோடி கோடியாக புலம் பெயர்ந்த தமிழர்களால் கொட்டப்படுவதுதான்.

இன்று சீமான் கையிலெடுத்திருக்கும் 'தமிழ்நாடு தமிழருக்கே' என்ற கோஷம் மேலோட்டமாக பார்த்தால் நியாயமாக தெரிகிறது. தற்போது தலைமைப் பதவிகளில் தமிழன்தான் இருக்க வேண்டும் என்று கூறுகிறார். ஆட்சி அதிகாரத்துக்கு வந்தவுடன் கன்னடர்களும், தெலுங்கர்களும், மலையாளிகளும் தங்கள் வியாபாரங்களை தமிழருக்கு விட்டுக் கொடுத்து வெளியேற வேண்டும் என்பார். எதிர்த்து குரல் கொடுப்பவர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்குவார். ஆட்சியில் இல்லாத போதே சீமானுக்கும் சீமானின் ஆதரவாளர்களுக்கும் இந்த அளவு வெறி வருகிறது என்றால் ஆட்சியும் அதிகாரமும் கிடைத்தால் எதுவும் செய்வார்கள்.

இவர் தலைவனாக கொண்டாடும் பிரபாகரன் அதிகார மமதையில் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராகவே எத்தனையோ கொடுமைகளை அரங்கேற்றியதை நாம் பார்த்தோம். தனது தலைமையை ஏற்காத தமிழர்களை வன்முறையின் மூலம் அடக்கியதை நமது வாழ்நாளிலேயே பார்த்தோம். இதனால் தமிழர்கள் பல ஆண்டுகள் சிறைக் கைதிகளாக அடைபட்டு கிடந்ததை மறந்து விட முடியாது. தனது தலைவனையொட்டியே 'நாம் தமிழர்' கட்சியும் செயல்படுகிறது. எதிர்க் கருத்து உடையவர்களை 'நாயே பேயே' என்று திட்டுவதும் ஆபாச அர்சணைகள் புரிவதையும் பார்த்து வருகிறோம்.

சில காலத்துக்குப் பிறகு இவர்களின் வெறியாட்டத்தால் தொழில்கள் முடங்கும். வெளி நாடுகளிலும் வெளி மாநிலங்களிலும் தொழில் செய்து கொண்டு சிறப்பாக வாழ்ந்து கொண்டிருப்பவர்களை அந்த மக்கள் அடித்து விரட்டக் கூடிய காலமும் வரலாம். எந்த ஒரு வினைக்கும் எதிர் வினை உண்டல்லவா? நான் சொல்லும் இவை எல்லாம் சீமானுக்கு நாம் முக்கியத்துவம் கொடுப்பதன் மூலம் நிகழ ஆரம்பிக்கலாம்.

எனவே சீமான் போன்ற பாசிச வாதிகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். இவர்களை வளர விட்டால் பிரபாகரனால் இலங்கைத் தமிழர்கள் எந்த அளவு கஷ்டங்களை அனுபவித்தார்களோ அதே கஷ்டங்களை தமிழக மக்களும் அனுபவிக்கும் காலம் வரும்.

எனவே வரும் தேர்தலில் பிஜேபியையும் மற்றும் அதன் துணை கழகமாக செயல்பட்டுக் கொண்டு இருக்கும் 'நாம் தமிழர்' கட்சியையும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற விடாமல் தடுக்க வேண்டும். தமிழர்களின் நலனில் அக்கறை உடைய எவரும் இதனை அவசியம் செய்தே ஆக வேண்டும்.

செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா?