காவிரியைக் காத்த கான்சாகிபு!
மருதநாயகம் கட்டுப்பாட்டில் மதுரை திரு நெல்வேலி போன்ற பகுதிகள் ஆங்கிலேயர்களால் ஒப்பந்தத்தின் அடிப்படையில் கொடுக்கப்படுகிறது. ஆற்க்காட்டு நவாபையே எதிர்க்கும் அளவுக்கு தனது படை வலிமையை குறுகிய காலத்திலேயே பெருக்கிக் கொண்டார யூசுப்கான். திருநெல்வேலிச் சீமையில் பூலித்தேவரின் புரட்சி ஒரு பக்கம். மாபூஸ்கானின் கொள்ளை கலகங்கள் ஒரு பக்கம். நவாப் முகமது அலியின் எதிர்ப்பு ஒரு பக்கம். இடையறாத போர்கள் நடைபெற்ற இந்த நேரத்தில் பிரெஞ்சுப் படை வீரர்கள் காவிரி நதியின் கால்வாய்கள் அணைக்கட்டுகள் ஆகியவற்றை இடித்து தகர்த்து தமிழகத்து விவசாயத்தை .
கெடுக்க நினைத்தனர். தஞ்சை மாவட்டத்தின் பயிர் நிலங்களெல்லாம் காவிரிப் பாய்ச்சலை நம்பி இருப்பதால் முத்தரசநல்லூர் என்ற இடத்தில் பிரெஞ்சுப் படையை மிகுந்த படை பலத்துடன் எதிர்க்கிறார் யூசுப்கான். இவரின் எதிர்ப்பை சமாளிக்க முடியாமல் காவிரி அணைகளை உடைக்கும் முயற்ச்சியில் தோல்வியைத் தழுவுகின்றனர் பிரெஞ்சுப் படையினர்.
காவிரிக்கு கரை கட்டிய கரிகாலன் காலத்திலிருந்து கான்சாகிபின் காலம் வரை காவிரியின் கல்லணை காப்பாற்றப்பட்ட வரலாறு தமிழர் வரலாற்றிலே முக்கியத்துவம் பெற்று விட்டது.
ஆதாரம் : கான்சாகிபு கம்மந்தான்-பக்கம் 25,26.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை சீரமைத்த யூசுப்கான்!
மதுரை மாநகரம் பரகத்துல்லாஹ் என்பவரின் நிர்வாகப் பொறுப்பின் கீழ் இருந்து வந்தது. அவர் மதுரைக் கோவிலில் ஒரு முஸ்லிம் துறவிக்கு தங்கிக் கொள்ள அனுமதியை வழங்கினார்.அந்த முஸ்லிம் சந்நியாசி(பக்கீர்) கோவிலின் முன்னால் சிறிய பள்ளிவாசலைக் கட்ட முயன்றார். மதுரை மக்கள் இந்த செய்கையால் கொதிப்புற்று கிளர்ச்சி செய்தனர். இந்த வேளையில்தான் காப்டன் காலியாட்டும் யூசுப்கானும் மதுரையைக் கைப்பற்றுகின்றனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் சொத்துக்களை தவறாக பயன்படுத்திய பரக்கத்தல்லாஹ்வை அதிகாரத்திலிருந்து நீக்கினார் யூசுப்கான். கோவில் சொத்துக்களையும் கோவில் வருமானங்களையும் கோவிலின் பராமரிப்புக்கு செலவிட துரித நடவடிக்கை எடுத்தவர் கான்சாகிபு. மதுரைக் கோவிலின் முன்பு குழப்பம் விளைவித்தக் கொண்டிருந்த முஸ்லிம் பக்கிரியை கோவிலின் வாசலிலில் இருந்து அப்புறப்படுத்தி இந்து மக்களின் நியாய உணர்வுக்கு ஏற்ப செயல்பட்டார் யூசுப்கான். 'பாண்டியன் கிரானிக்கள்' என்ற தலைப்பில் 'டெய்லர்' என்பவர் இதனை தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.
- w.taylor- Oriental Historical Manuscripts-1835-volume 1-page 42 and 44.
விவசாயிகளின் வேதனையை போக்கியவர்!
நாட்டில் அமைதியை ஏற்படுத்தியதோடு குழப்ப காலங்களில் காலி செய்யப்பட்ட கிராமங்களில் மக்களைக் குடியேறச் செய்ய கான் சாகிபு ஊக்கம் அளித்தார்.விவசாயத்திற்கு முன்பணம் அளித்து வாய்க்கால்களை செப்பனிட்டார்.சாக்கடைகளை கருங்கற்களால் கட்டினார்.காடுகளை அழித்து பெரும் நிலப்பகுதிகளை விவசாயத்திற்க்கு ஏற்றதாக்கினார்.
உண்மையில் மேற்கொள்ளப்பட்ட நலன் பயக்கும் நடவடிக்கைகள் பொருளாதாரத்தை விருத்தி செய்வதில் விவசாயிகளுக்கு பெரிதும் உதவியது.வணிகமும் உற்பத்தியும் ஊக்குவிக்கப்பட்டன. பாண்டியர்கள் சோழர்களைப் போன்று கான்சாகிப் வணிகர்களுக்கென்று அமைக்கப்பட்ட ஓய்வு விடுதிகளை தகுந்த முறையில் பராமரிக்க அவைகளை கிராமக் குழுக்களின் கண்காணிப்பின் கீழ் விட்டு வைத்தார்.
யூசுப்கானின் வீர மரணத்திற்குப் பிறகு அதற்கென்று ஒதுக்கப்பட்ட மானியங்களை அவரவர் தாங்களே தங்கள் சொந்தச் செலவுகளுக்கு எடுத்துக் கொண்டு பராமரிக்காமல் போனதால் காலகதியில் அவை அழிந்தன.
“As the Pandyas and the Chalas did in early times, Yousuf Khan constructed rest houses for the merchants and gave security of travel”
-k.Rajayyan, History of Madurai page 210.
தவறுகளும் தண்டனைகளும்!
நாட்டின் நிர்வாகம் எத்தகைய கொடுமைக் குற்றத்துக்கும் உள்ளாகாமல் உபரி வருவாய் பெரும் நிலைக்கு வந்தது. குற்றம் செய்தவர்கள் தண்டனையிலிருந்து தப்புவதற்க்கான வழி வகைகள் இல்லாதபடி நிதி நிர்வாகம் எத்தகைய குறைபாடுகளுமின்றி இருந்தது. பிற்கால மக்கள் அவரது நிர்வாக முறைகளை மறுபடியும் நடைமுறைபடுத்த வேண்டுமென்று கோருமளவிற்கு கான்சாகிபின் நடவடிக்கைகள் சிறப்புடன் அமைந்தது.
-கு.ராஜய்யன், தமிழக வரலாறு, பக்கம் 113,114.
மக்களை பேட்டி கண்ட மன்னர்!
மக்களின் மகிழ்ச்சியில் தனது மகிழ்ச்சி இருப்பதாக பறை சாற்றிய யூசுப்கான் தன் பாசறையை விட்டு வெளியே போய் நிலபுலன்களில் வேலை செய்து கொண்டிருந்தவர் குறைகளை கண்டறிந்து அவர்களைத் தேற்றினார்.
மன்னரைத் தரிசிக்க மக்கள் வரும் நிலையை மாற்றி மக்களை நேரில் சென்று சந்தித்து பேட்டி கண்ட மன்னர் கான்சாகிப்.
-ஜெயச்சந்திரன், புரட்சி தளபதி யூசுப்கான், பக்கம் 41
நெசவாளர் நலிவை நீக்கிய கான்சாகிப்!
மதுரையைச் சேர்ந்த நெசவாளர்கள் (சௌராஷ்டிர இன மக்கள்) தயாரிக்கும் துணிகள் உள் நாட்டிலும் கும்பெனியாரால் வெளிநாட்டுக்கும் ஏற்றுமதி செய்யப்படத்தக்க அளவில் சிறப்பாக இருந்தது. ஆனால் அந்த மக்களோ வறமையில் வாடினார்கள். நெசவுத் தொழிலுக்குப் போதிய பணமின்றி பரிதவித்தனர். இதனை அறிந்த கான்சாகிப் அவர்களுக்கு முன்பணமாக உதவிகளை வாரி வழங்கினார்.
'மதுரைச் சாலியருக்கு திரவிய சகாயம் செய்து நெசவுத் தொழிலக்கு உயிர் ஊட்டினார் கான்சாகிப்' என்று எம்.எஸ்.சுப்ரமணிய ஐயரும்தெரிவித்தள்ளார்.
-R. SATHIANATHAIER, A POLITICAL AND CULTURAL HISTORY OF INDIA, VOLUME 3, 1952 PAGE 100,113,114.
'மதுரைச் சீமைக்கு வந்து துஷ்டர்களை அடக்கி கான்சாகிப் கம்மாந்தான் நல்லரசு புரிந்தான். ஆற்றலைப்போல் அறிவும் இவருக்கு வாய்த்திருந்தது. பட்சபாதம் இன்றி, சமய வெறியும் இன்றி நீதி வழங்கியதால் பொது மக்களின் ஆதரவு இவனுக்குக் கிடைத்தது'. என்று கான்சாகிபைப் பற்றி ஸ்ரீஆச்சாரியா தெரிவிக்கிறார்.
-வீரத் தமிழகம், சென்னை, 1958, பக்கம் 123
