குர்ஆனின் சில வசனங்கள் வன்முறையை தூண்டுவதுபோல் உள்ளதே என்ற கேள்விக்கு ஆயிரம் முறை விளக்கம் சொன்னாலும் திரும்பவும் அதே கேள்வியே வைக்கப்படுகிறது. காரணம் வேறு விதங்களில் அவர்களால் இஸ்லாத்தை விமர்சிக்க சரியான காரணம் கிடைக்கவில்லை. இது ஒன்றையே திரும்ப சொல்லிக் கொண்டிருந்தால் பத்தோடு இந்த மதமும் ஒன்று என்ற முடிவுக்கு நடுநிலயாளர்கள் வந்து விடுவார்கள் என்பது அவர்கள் எண்ணம். இனி அவர்கள் வைக்கும் குற்றச்சாட்டுகளான வசனங்கள் எந்த நேரத்தில் இறங்கப்பட்டது என்பதை சற்று சுருக்கமாக பார்ப்போம்.
'உங்களால் இயன்ற அளவு பலத்தையும் போர்க்குதிரைகளையும் அவர்களுக்கு எதிராகத் தயாரித்துக் கொள்ளுங்கள். அதன் மூலம் இறைவனின் எதிரிகளையும் உங்களின் எதிரிகளையும் அவர்கள் அல்லாத மற்றவர்களையும் நீங்கள் அச்சமடையச் செய்யலாம். அவர்களை நீங்கள் அறிய மாட்டீர்கள். இறைவனே அவர்களை அறிவான்.'
-குர்ஆன் 8:60
இது இஸ்லாமிய அரசுக்கு சொல்லப்பட்ட வசனம். முகமது நபி இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தை நிறுவிய போது அருகில் உள்ள சிறு சிறு யூத, கிறித்தவ, சிலை வணக்கம் புரியும் அரசுகள் ஓயாது தொல்லை கொடுத்து வந்தன. இந்த நேரத்தில் முஸ்லிம்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்ற அறிவுரையை இறைவன் வழங்குகிறான். நமது நாட்டின் வளர்ச்சியை கண்டு பொறாமையால் பல தொல்லைகளை நமது அண்டை நாடு நமக்கு கொடுத்து வருகிறது. இதைக் கண்டு இந்தியர்களாகிய நாம் அந்நாட்டுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்ற நோக்கில் நமது படை பலத்தை அதிகப்படுத்த முயற்ச்சிப்பது தவறாகுமா? இதையேதான் அன்றைய முஸ்லிம்களுக்கு இறைவன் கட்டளையிடுகிறான். முஸ்லிம்களிலேயே சிலர் இது தனிப்பட்ட மனிதனுக்கு சொல்லப்பட்ட வசனம் என்று தவறாக விளங்கிக் கொள்வதாலேயே சமூகத்தில் சில தீவிரவாதங்களை எதிர் கொள்ள நேரிடுகிறது. இதற்கு ஒரே வழி இந்த வசனம் எந்த நேரத்தில் யாருக்கு இறங்கியது என்ற விபரத்தை விளங்காத மக்களுக்கு எடுத்துச் சொன்னால் பிரச்னை சுலபமாக தீரும்.
மதினாவில் சிறந்து ஆட்சி செய்யும் முகமது நபிக்கு மக்காவில் உள்ள பல தெய்வ வணக்கத்தை உடையவர்கள் பெரும் சிரமத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். மக்காவில் முஸ்லிம்களாகிய சிறுபான்மையினரை மிகுந்த தொல்லை கொடுத்து வந்தனர் சிலை வணங்கிகள். பல முஸ்லிம்களை கோபத்தில் கொலையும் செய்தனர். மக்காவில் உள்ள எஞ்சிய முஸ்லிம்களை காப்பாற்றவே அன்று போர் கடமையாக்கப்பட்டு போரும் நடை பெறுகிறது. அப்பொழுது இறங்கிய வசனம்
'ஏக இறைவனை மறுப்போரைப் போர்களத்தில் சந்தித்தால் பிடரியை வெட்டுங்கள். முடிவில் அவர்களை வென்றால் தனது ஆயுதங்களை கீழே போடும் வரை கட்டுக்களைப் பலப்படுத்துங்கள். அதன்பிறகு ஈட்டுத் தொகை பெற்றுக் கொள்ளலாம். அல்லது பெருந்தன்மையாக விட்டு விடலாம். இதுவே இறைக் கட்டளை. இறைவன் நாடி இருந்தால் அவர்களை அவனே தண்டித்திருப்பான். மாறாக உங்களில் ஒருவர் மூலம் மற்றவரை அவன் சோதிக்கிறான்.'
-குர்ஆன் 47:4
குர்ஆன் அருளப்பட்ட காலத்தில் முஸ்லிம்களைச் சுற்றி வாழ்ந்த பல தெய்வ நம்பிக்கையாளர்களும் யூதர்களும் முஸ்லிம்களுக்கு எதிராக படை திரட்டிக் கொண்டு இருந்தனர். பல போர்கள் நடந்தது. முஸ்லிம்களை மிகுந்த சிரமத்துக்கு உள்ளாக்கினர். பெண்களின் பிறப்புறுப்பில் ஈட்டியைப் பாய்த்து கொல்வது, இரண்டு ஒட்டகங்களில் முஸ்லிம்களை கட்டி இரு வேறு திசைகளில் அவைகளை ஓட விட்டு முஸ்லிம்களின் உடலை இரண்டாக கிழிப்பது, இவை எல்லாம் மக்காவில் நடந்த கொடுமைகள். காரணம் அந்த மக்கள் இஸ்லாத்தை ஏற்றது. இந்த நேரத்தில் சில முஸ்லிம்களின் உறவினர்களும் நண்பர்களும் எதிரிகளின் பகுதிகளில் இருந்தனர். அவர்களுடன் முஸ்லிம்கள் உறவாடி வந்தனர். முஸ்லிம்கள் மூலம் தகவல்கள் எதிரிகளுக்கு கிடைத்து விடக் கூடாது என்பதற்க்காகவே இவ்வாறு கட்டளை பிற்பிக்கப்பட்டது.
(முஃமின்களே!) அவர்கள் நிராகரிப்பதைப் போல் நீங்களும் நிராகரிப்போராகி நீங்களும் (இவ்வகையில்) அவர்களுக்கு சமமாகி விடுவதையே அவர்கள் விரும்புகிறார்கள்; ஆகவே, அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் (தம் இருப்பிடங்களை விட்டு வெளியே)புறப்படும் வரையில் அவர்களிலிருந்து எவரையும் நண்பர்களாக நீங்கள் எடுத்துக் கொள்ளாதீர்கள்; (அல்லாஹ்வின் பாதையில் வெளிப்பட வேண்டுமென்ற கட்டளையை) அவர்கள் புறக்கணித்துவிட்டால் அவர்களை எங்கு கண்டாலும் (கைதியாகப்) பிடித்துக் கொள்ளுங்கள்; (தப்பியோட முயல்வோரைக்) கொல்லுங்கள் - அவர்களிலிருந்து எவரையும் நண்பர்களாகவோ, உதவியாளர்களாகவோ எடுத்துக் கொள்ளாதீர்கள்.
-குர்ஆன் 4:89
'கலகம் இல்லாதொழிந்து அதிகாரம் முழுவதும் இறைவனுக்காக ஆகும் வரை அவர்களுடன் போரிடுங்கள். அவர்கள் விலகிக் கொல்வார்களானால் இறைவன் அவர்கள் செய்பவற்றைப் பார்ப்பவன்'
-குர்ஆன் 8:39
மனிதர்களுக்குள் அன்பையும் நல்லலொழுக்கத்தையும் போதிக்க வேண்டிய இறைவன் ஏன் இவ்வாறு கடுமையான நிலையை எடுக்க வேண்டும் என்ற கேள்வி வரலாம். சில போராட்டங்களை அடக்க அரசு சில நேரங்களில் காவல்துறை, ராணுவத்தின் துணை கொண்டு தனது மக்கள் மீதே பலத்தை பிரயோகிக்கும். இந்த நடவடிக்கை நாடு அமைதியாக இருக்க வேண்டும். நாட்டு மக்கள் குழப்பம் இல்லாமல் இருக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே நடத்தப்படுகிறது. இதே அளவு கோலைத்தான் இறைவனும் இங்கு கையாள்கிறான். அப்படி போர் நடந்தாலும் சில விதிமுறைகளை முஸ்லிம்கள் கடை பிடிக்க வேண்டும் என்று கட்டளையிடுகிறான். அவைகள்:
'உங்களிடம் போருக்கு வருவோருடன் இறைவனின் பாதையில் நீங்களும் போர் செய்யுங்கள். வரம்பு மீறாதீர்கள். இறைவன் வரம்பு மீறியோரை நேசிக்க மாட்டான்.'
-குர்ஆன் 2:190
அதாவது எதிரிகளாக போரை துவக்கும் போது நீங்களும் போர் புரியுங்கள். அதிலும் கூட வரம்பு மீறக் கூடாது என்கிறான் இறைவன்.
'எங்கள் இறைவன் அல்லாஹ்வே!' என்று அவர்கள் கூறியதற்காகவே நியாயமின்றி அவர்களின் இல்லங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர். மனிதர்களில் ஒருவர் மூலம் மற்றவரை இறைவன் தடுத்திருக்காவிட்டால் மடங்களும், ஆலயங்களும், வழிபாட்டுத் தலங்களும், இறைவனின் பெயர் அதிகமாகத் துதிக்கப்படும் பள்ளிவாசல்களும் இடிக்கப்பட்டிருக்கும்.
-குர்ஆன் 22:40
இஸ்லாத்தை ஏற்ற ஒரே காரணத்துக்காக சொந்த வீடுகளை விட்டு விரட்டப்பட்டவர்களிடமே போர் செய்ய குர்ஆன் கட்டளையிடுகிறது.
இப்படி ஒரு பலப்பிரயோகம் இல்லாவிட்டால் பல மதங்களின் வழிபாட்டுத் தலங்கள் சேதப்படுத்தப்பட்டிருக்கும் என்கிறான் இறைவன். இதன் மூலம் பிற நம்பிக்கையாளர்களின் புனித இடங்களை அழிப்பது குர்ஆனுக்கு எதிரானது என்று விளங்கலாம்.
'விலகிக் கொள்வார்களானால் அநீதி இழைத்தோர் மீதே தவிர மற்றவர்கள் மீது எந்த வரம்பு மீறுதலும் கூடாது.'
-குர்ஆன்
எதிரிகள் போரிலிருந்து விலகி சமாதானத்துக்கு வந்தால் அதனை ஏற்று போரை நிறுத்தி காரணமானவர்களை கைது செய்ய வேண்டும். எதிரி நாட்டு பொது மக்களை வரம்பு மீறி எந்த தொந்தரவும் கொடுக்கக் கூடாது என்கிறது குர்ஆன்.
'இம் மார்க்கத்தில் எந்த வற்புறுத்தலும் இல்லை: வழிகேட்டிலிருந்து நேர்வழி தெளிவாகி விட்டது'
-குர்ஆன் 2:256
'உங்கள் மார்க்கம் உங்களுக்கு: என் மார்க்கம் எனக்கு' என முஹம்மதே கூறுவீராக!'
-குர்ஆன்
இந்த வசனங்களின் மூலம் மதத்தைப் பரப்புவதற்காக போர் புரிதல் கூடாது என்பதை விளங்கலாம். வாளினால் இஸ்லாம் பரவியது என்று கூறுபவர்கள் இந்த வசனத்தை சிந்திக்க கடமைப்பட்டவர்கள். வற்புறுத்தலினால் ஒருவர் இஸ்லாத்தில் இணைந்தால் உளப்பூர்வமான ஈடுபாடு அவரிடத்தில் எதிர்பார்க்க முடியாது.
குர்ஆனின் போர் வசனங்களுக்கு மாற்றாக இந்து மதத்தில் நடைபெற்ற ஆதிகால போர்கள், கிறித்தவ மதத்தில் நடைபெற்ற அனைத்து போர்களையும் அதன் கொடூரங்களையும் வரலாற்று ஆதாரங்களோடு என்னால் எடுத்து தர முடியும். குர்ஆனில் சொல்லப்பட்ட நியாயமான காரணங்கள் கூட அந்தப் போர்களுக்கு பொருந்தாது. எனினும் அதனை நான் எடுத்து எழுதவில்லை. போர்களை பற்றி குறை கூறும் அனைத்து பதிவர்களுக்கும் இந்த ஒரு பதிவே பதிலாகும்.
முடிவில் இந்து மதத்தில் கூறப்பட்ட ஏக இறை கோட்பாடுகள் சிலவற்றை சொல்லி இப்பதிவை முடிக்கிறேன்.
எய்வகைசார் மதங்களிலே பொய்வகைச்சா த்திரங்கள்
எடுத்துரைத்தே எமது தெய்வம் எமது தெய்வம் என்று
கைவகையே கதறுகின்றீர் தெய்வம் ஒன்றென் றறியீர்
அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே
அன்பெனும் குடில்புகும் அரசே
அன்பெனும் வலைக்குட் படும்பரம்பொருளே
அன்பெனும் கரத்தமர் அமுதே
அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே
அன்பெனும் உயிர் ஒளிர் அறிவே
அன்பெனும் அணுவுள் அமைந்தபே ரொளியே
அன்புருவாம் பர சிவமே!
--வள்ளலார்
ஓதம் ஒலிக்கும் உலகை வலம் வந்து பாதங்கள் நோவ நடந்தும் பயனில்லை
காதலில் அண்ணலைக் காண இனியவர் நாதன் இருந்த நகரறி வாரே
இறைவனைக் காணுதல் பொருட்டு கடல் சூழ்ந்த உலகம் முழுவதும் கால்கள் நோவ நோவ சுற்றி வரினும் பயன் கிட்டாது, மனித உயிர்களிடத்தின் பால் கொள்ளும் அன்பின் மூலம் கடவுள் வசிக்கும் இடத்தை அறியலாம் என்கிறார் திருமூலர். மனித இனத்தைப் பிரித்துப் பார்க்காமல், அணைத்து ஜீவ ராசிகளிடத்தும் அன்பு புரிதலின் அவசியத்தையும் கூறுகிறார் திருமூலர்.
திரையற்ற நீர்போல் சிந்தை தெளிவார்க்குப் புரையற் றிருந்தான் புரிசடை யோனே
இறைவனை அனுபவிக்க வேண்டுமென்றால் முதலில் சிந்தயைத் தெளிவு படுத்திக் கொள்ள வேண்டும். களங்கங்களை நீக்க வேண்டும். அசைவற்ற நீர் போல் சிந்தனை தெளிந்தார்க்கு மாசு மறு அற்றவன் வெளிபட்டு அருள் செய்வான்.
உன்னத்தின் உள்ளே உளபல தீர்த்தங்கள் மெள்ளக் குடைந்துநின் றாடார் வினைகெடப்
பள்ளமும் மேடும் பரந்து திரிவாரே கள்ள மனமுடைக் கல்வியி லோரே
மனத்தின் தன்மையை மாற்றுவதன் மூலமாகவே ஆன்மீக அனுபவத்தைப் பெற முடியும். உள்ளத்தினுள்ளேயே திருக்கோயில்களிலுள்ள இறைவனைச் சந்திக்கலாம். இந்த அனுபவத்தை உதறிவிட்டுப் பள்ளமும் மேடும் திரிந்து என்ன பயன்?
'இறைவனையும, இறுதி நாளையும் அவர்கள் நம்புகின்றனர். நன்மையை ஏவுகின்றனர். தீமையைத் தடுக்கின்றனர். நல்ல காரியங்களை நோக்கி விரைகின்றனர். அவர்களே நல்லோர். '
'அவர்கள் எந்த நன்மையைச் செய்தாலும் அது மறுக்கப்படாது. தன்னை அஞ்சுவோரை இறைவன் நன்கு அறிந்தவன்.'
-குர்ஆன் 3:114,115