Followers

Sunday, May 03, 2015

இன்று எனக்கு பிறந்த நாளாம்!



முக நூல் நண்பர்கள் பலர் எனக்கு இன்று பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளனர். வாழ்த்து கூறிய அனைவருக்கும் எனது நன்றிகள்.

அறிவியல் ரீதியாக நாம் பிறந்த அந்த நாள் என்றுமே திரும்பி வரப் போவதில்லை. எனவே அதனைக் கொண்டாடுவதில் எந்த அர்த்தமும் இல்லை. மேல் நாட்டு மோகத்தால் இது போன்று பிறந்த நாள் கொண்டாடும் பழக்கம் நம்மிடையேயும் தொற்றிக் கொண்டது. இதற்காக பலர் ஆடம்பர விழாக்கள் எடுப்பதும் கடன் வாங்கியாவது விலையுயர்ந்த கேக்குகளை வாங்கி பிறந்த நாள் விழா கொண்டாடுகின்றனர். நான் இன்று வரை எனது பிறந்த நாளை விசேஷமாகக் கொண்டாடியதில்லை. முகநூல் நண்பர்கள் வரிசையாக இன் பாக்ஸில் வாழ்த்து தெரிவித்த போதுதான் எனக்கே ஞாபகம் வந்தது. இது போன்று பிறந்த நாளுக்கு ஆடம்பர செலவுகள் செய்வதை தவிர்த்து அந்த பணத்தை உணவின்றி வாடும் ஏழைகளுக்கு கொடுத்து புண்ணியத்தை தேடிக் கொள்வோமாக!

-----------------------------------------------

இந்த பிறந்த நாளை கொண்டாடுவதில் நபிகள் நாயகத்தையும் நாம் விட்டு வைக்கவில்லை. வருடா வருடம் சிலர் கொண்டாடி வருகின்றனர். நமது அரசுகளும் இதற்கு விடுமுறையும் அளித்துள்ளது. ஆனால் இஸ்லாமிய பார்வையில் இது போன்று பிறந்த நாள் விழா கொண்டாட அனுமதி இல்லை. நபிகள் நாயகம் பிறந்த சவுதி அரேபியால் மீலாது நபிக்கு விடுமுறையோ அல்லது எந்த கொண்டாட்டங்களோ கிடையாது. ஆனால் தமிழகத்தில் சிலர் இன்று வரை இதனை விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். இந்த பழக்கம் இஸ்லாமியரிடத்தில் எப்படி நுழைக்கப்பட்டது?

நபி அவர்களின் காலத்திலோ அல்லது நபி அவர்களால் சிறந்த சமுதாயம் என போற்றப்பட்ட தோழர்கள் மற்றும் அவர்களுக்கு பின் வந்த ஆட்சியாளர்கள் காலத்திலோ நபி அவர்களின் பிறந்த நாட்கள் கொண்டாடப்பட வில்லை. இஸ்லாத்தின் உண்மையான கொள்கைகளைச் சிதைப்பதற்காக முதன் முதலில் 'ஷியாக்களின் பாத்திமிட்' ஆட்சிக்காலத்தில் தோற்றுவிக்கப்பட்டது தான் இந்த மீலாது விழாக்கள். உண்மையான நம்பிக்கையாளர்களுக்கும் ஷியாக்களின் இந்த நூதன கண்டுபிடிப்புக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.

வரலாற்று ஆசிரியர் இப்னு கல்கான் என்பவர் கூறுகிறார்: -

ஃபாத்திமிட் ஆட்சியாளர்களுக்குப் பிறகு இதை விமர்சையாக முதன் முதலில் கொண்டாடியவர் ஈராக்கில் இர்பில் என்ற பகுதியை கி.பி. ஆறாம் நூற்றாண்டின் இறுதி பகுதியில் அல்லது ஏழாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஆட்சி செய்த மன்னர் அல்-முஜஃப்பார் அபூ சயீத் கவ்கபூரி என்பவராவார்.

மற்றொரு ஆய்வாளர் அபூ ஷாமா என்பவர் கூறுகிறார்: -

ஈராக்கின் மோசுல் நகரில் ஷெய்ஹூ உமர் இப்னு முஹம்மது அல்-மலா என்பவர் தான் முதன் முதலில் நபி (ஸல்) அவர்களின் பிறந்த தினத்தைக் கொண்டாடினர். பின்னர் இர்பில் நகரின் ஆட்சியாளர்களும் மற்றவர்களும் அதைப் பின்பற்றினர்.

குர்ஆனிலோ அல்லது நபி மொழிகளிலோ பிறந்த நாள் கொண்டாட அனுமதி இல்லை ஆதலால் இது போன்ற நூதன பழக்கங்களிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்வோமாக!

பாகிஸ்தான் மாட்டுக் கறியை மட்டும் உதவியாக தந்ததா?





பாகிஸ்தான் அரசு நேபாளத்தக்கு அனுப்பப்பட்ட உதவிப் பொருட்களில் மாட்டுக் கறியும் கலந்து இருந்ததாக இந்திய பத்திரிக்கைகள் குற்றம் சாட்டியிருந்தன. இதனை மறுத்து கருத்து வெளியிட்ட பாகிஸ்தானின் உயர் அதிகாரி தஸ்னிம் ஆலம் தனது மறுப்புரையில் 'இந்திய ஊடகங்கள் தேவையற்ற சர்ச்சையை உதவி வழங்குதலிலும் ஏற்படுத்தியுள்ளன. பலதரப்பட்ட உணவுகள் வழங்கப்பட்டன. அவற்றில் ஒன்றுதான் 'பீஃப் மசாலா'. அந்த பாக்கெட்டின் மேல் தெளிவாக 'பீஃப் மசாலா' என்றும் குறிப்பிட்டிருந்தோம். நாங்கள் அனுப்பிய உணவுப் பொருட்கள் மிகவும் ருசியாக இருந்ததாகவும் மேற் கொண்டு உதவியும் தேவைப்படுவதாகவும் நேபாள அதிகாரிகள் தெரிவித்து இருக்க தேவையற்ற சர்ச்சையை இந்திய ஊடகங்கள் ஏற்படுத்துகின்றன' என்று வருத்தப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் சார்பில் அனுப்பட்ட ஒவ்வொரு உணவுப் பட்டியலில், 22 வகையான சாப்பிடத்தயாரான உணவு வகைகள் இருந்தன. அதில் அரிசி, உணவு, கோதுமை, ரொட்டி, பிரட், ஜாம், பால், தயிர், பருப்பு, கேசரி, உள்ளிட்ட பலவகையான சிறிய பாக்கெட்கள் இருந்தன, அதில் ஒன்று தான் 'பீஃப்' மசாலா. மேற்படி உணவுப் பட்டியலில், தேவையானதை சாப்பிடவும் பிடிக்காததை தவிர்ந்துக் கொள்ளும் வகையில், ஒவ்வொரு பாக்கெட்டின் மீதும் ஆங்கிலம் மற்றும் உருது மொழியில் இது இன்ன பொருள் எனத் தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தியாவிலுள்ள இந்துக்களில் 90 சதவீத மக்கள் எப்படி மாட்டிறைச்சியை சாப்பிடுவார்களோ அதேப்போன்று நேபாளிலுள்ள 95 சதவீத இந்துக்கள் மாட்டிறைச்சியை விரும்பி உண்பவர்கள். அதுமட்டுமில்லாமல் ஒவ்வொரு ஆண்டும் 5 ஆயிரம் மாடுகளை வெட்டி திருவிழா நடத்துவார்கள்.

உணவுக் கிடைக்காமல் உயிர் வாழவே சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு இக்கட்டான நேரத்திலும் மதத்தை நுழைத்து அதில் பாதிக்கப்பட்ட நேபாள மக்களை சிரமத்துக்குள்ளாக்கும் இந்துத்வாதிகளின் மனோ நிலையை என்னவென்பது?

Saturday, May 02, 2015

இந்து மதத்திலிருந்து தாய் மதம் திரும்பிய முஸ்லிம்கள்!



ஆக்ராவில் கடந்த டிசம்பர் மாதம் இந்து மதத்துக்கு மாறிய முஸ்லிம்கள் மீண்டும் தங்களது மதத்துக்கு மறு மதமாற்றம் செய்து கொண்டனர்.

ஆக்ராவில் கடந்த கிறிஸ்தமஸ் தினத்தன்று மாபெரும் மத மாற்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கானோர் மத மாற்றம் செய்துகொண்டனர். இதில் மஹூர் லத்தியா கிராமத்தைச் சேர்ந்த 'நத்' வகுப்பைச் சேர்ந்த முஸ்லிம்களும் அடங்குவர். இந்து மதத்துக்கு மாறினால் நிலம் வழங்கப்படும் என்று இந்துதுவ அமைப்பின் தலைவர் வாக்குறுதி அளித்ததன் பேரில் இவர்கள் அந்த நிகழ்ச்சி நடந்தபோது இந்து மத்துக்கு மாறினர்.

இந்த நிலையில் தற்போது சுமார் 17 முஸ்லிம்கள் இந்து மதத்திலிருந்து மீண்டும் மறு மதமாற்றம் செய்து கொண்டுள்ளனர். மறு மதமாற்றம் செய்துகொண்ட முதியவர் ராமாத் கூறும்போது, "அலி முகமது என்றவர் எங்களது குடும்பத்தினரை மதமாற்றம் செய்துகொள்ளும் படி கூறினார்.
நிலம் தருவதாக இந்துதுவா தலைவர்கள் கூறினர். ஆனால் அவ்வாறு வழங்கப்படவில்லை. எங்களது சமூகத்தை சேர்ந்தவர்களும் எங்களை ஒதுக்கி தள்ளினர். திருமணம் உள்ளிட்ட எந்த நிகழ்ச்சிகளுக்கு எங்களை உறவினர்கள் அழைப்பதில்லை. அதனால் திரும்பவும் எங்களது மதத்துக்கு மாறி விட்டோம்" என்றார்.

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் கடந்த கிறிஸ்தமஸ் தினத்தன்று 100 இஸ்லாமியர்கள் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. மத மாற்றம் செய்துகொண்டால் ஆதார் அட்டை, பணம், நிலம் ஆகியவை வழங்கப்படும் என்று நிகழ்ச்சியை நடத்திய இந்துதுவ அமைப்புகள் அறிவித்ததாக குற்றம்சாட்டப்பட்டது.

தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
02-05-2015

எந்த மதத்தவரையும் பணம், பதவி காட்டி மதம் மாற்றினால் என்ன விளைவு ஏற்படும் என்பதை மேற்கண்ட நிகழ்வு நமக்கு சிறப்பாக படம் பிடித்துக் காட்டுகிறது. முன்பு முகலாயர் ஆட்சியில் கத்தியை காட்டி கட்டாய மதமாற்றம் செய்வித்ததாக தொடர்ந்து பொய் பிரசாரம் இந்துத்வாவாதிகளால் பரப்பப்படுகிறது. அது நடைமுறை சாத்தியமில்லாதது என்பதை இந்த நிகழ்வு நிரூபிக்கிறது. தற்போது மோடி மற்றும் அமீத்ஷா தலைமையில் நடந்து வரும் இந்துத்வ ஆட்சியில் இந்துக்களுக்கே அனைத்திலும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. சிறுபான்மையினர் அச்சுறுத்தலில் உள்ளதாக இந்துத்வா தலைவரான அருண் ஷோரியே பேட்டி கொடுக்கும் நிலையில்தான் இந்தியாவின் நிலை உள்ளது. அப்படி இருந்தும் இந்து மதம் போன இஸ்லாமியர் தாய் மதம் திரும்பியுள்ளது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. வாளாலும் அதிகாரத்தாலும் எந்த மக்களையும் அதிக நாட்களுக்கு ஒரு மதத்தில் அடக்கி வைக்க முடியாது என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது.

இனியாவது இந்தியாவில் இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது என்ற திரிபு வாதத்தை இந்துத்வாவாதிகள் மாற்றிக் கொள்ள வேண்டும்.

தமிழ் இந்து நாளிதழில் இந்த கட்டுரைக்கு ஒரு இந்து நண்பர் எழுதிய பின்னூட்டத்தையும் கீழே பார்போம்....

"ஹா ஹா ஹா. ஆசை காட்டி மோசம் செய்துவிட்டார்களா RSS மற்றும் VHB சாமியார்கள். இது அவர்களுக்கு வழக்கமான ஒன்று தான். RSS கூமுட்டைகளுக்கு விவரம் பத்தவில்லை என்றே நான் நினைக்கிறேன். மதம் மாறிய மக்களுக்கு பேசியபடி நிலத்தை வழங்கியிருக்கலாம். சிறிது நாட்கள் கழித்து பாஜக அமல்படுத்திய நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டத்தை பயன்படுத்தி, "மோகன் பகவத் அன் கோ" என்ற பெயரில் "தாயத்து கம்பெனி" ஒன்றை ஆரம்பிக்கிறோம் ஆதலால் நிலம் வேண்டும் என புருடா விட்டு, கொடுத்த நிலத்தையெல்லாம் திரும்ப பிடுங்கியிருக்கலாம். பழியும் அரசு மேல் சென்றிருக்கும்."

குற்ற பின்னணி உள்ளவர்களை மணப்பது சம்பந்தமாக!

சவுதி அரேபியாவில் உள்ள மிகப் பெரும் கோடீஸ்வரர் ஃபஹத் சாத் அல் ஜோஹானி! ஏற்கெனவே மூன்று மனைவிகளோடும் குழந்தைகளோடும் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். நான்காவதாக திருமணம் முடிக்கவும் முடிவு செய்துள்ளார். அந்த அளவு செல்வமும் உடல் ஆரோக்கியமும் அவருக்கு இருக்கிறது. அவ்வாறு நான்காவது முறையாக திருமணம் முடிக்கும் போது சிறையிலிருந்து விடுதலையாகும் ஒரு குற்றவாளி பெண்ணை மணமுடிக்க முடிவு செய்துள்ளார். சமூகத்தில் பலரும் இதுபோன்ற செயலை செய்ய முன் வர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

'பாவம் செய்த மனிதர்களை படைத்த இறைவனே மன்னிப்பதாக குர்ஆனில் சொல்லும் போது சக மனிதர்களை நாம் ஏன் மன்னிக்கக் கூடாது. ஏதோ ஒரு மன அழுத்தத்தில் குற்றவாளிகளாகிப் போன அவர்களை சமூகத்தில் இரண்டறக் கலக்கச் செய்வது நம் அனைவரின் கடமையாகும். நாம் அவர்களை குற்றவாளிகள் என்று ஒதுக்கினால் விடுதலைக்கு பிறகு திரும்பவும் பழைய தொழிலுக்கே சென்று விடுவர். எனவே சமூக அக்கறை உள்ள ஒவ்வொருவரும் குற்றப் பிண்ணனி உள்ள மணமகன், மணமகளை தேர்வு செய்து சமூக பணியாற்ற வேண்டும். எனது இந்த யோசனையை மார்க்க அறிஞர்களும், அரசு அதிகாரிகளும் முழு மனதாக ஒத்துக் கொண்டனர். துரித நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்தனர்' என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

நமது இந்தியாவில் குற்ற பின்னணி உள்ள ஆண் பெண் குறைந்தது 20 சதமாவது இருக்கும். அரசு இவ்வாறு குற்றப் பின்னணி உள்ளவர்களை திருமணம் செய்து கொள்பவர்களுக்கு பல உதவிகளை வழங்கி இது போன்ற திருமணங்களை ஊக்குவிக்கலாம். குற்றங்கள் மிகக் குறைவாக நடக்கும் சவுதி நாட்டவரே இது பற்றி கவலைப்படும் போது குற்றங்களே சிலரது வாழ்வாகிக் போன நம் நாட்டுக்கு இது போன்ற ஒரு மனநிலை மிக அவசியமாகும்.

தகவல் உதவி
சவுதி கெஜட்
28-04-2015

Friday, May 01, 2015

பாலஸ்தீன மக்களின் கல்வி தேடலில் உள்ள ஆர்வம்!



எத்தனை கொலைகள்: எத்தனை குண்டு வெடிப்புகள் எத்தனை காயங்கள்: எத்தனை வீடு இடிப்புகள்: அனைத்தையும் தங்களின் வெற்றிப் படிக்கட்டுகளாக மாற்றி இடிந்த பள்ளி அறையிலும் ஆர்வத்துடன் கல்வி கற்கும் பாலஸ்தீன மக்களிடம் நமக்கும் பாடம் இருக்கிறது. இத்தனை தோல்விகள் கண்டும், அமெரிக்காவும், இஸ்ரேலும், ஐரோப்பாவும் வஞ்சகமாக பாலஸ்தீனியர்களை பழி வாங்கினாலும் கிடைக்கும் சந்தர்பங்களை நன்கு பயன்படுத்திக் கொள்பவர்கள் பாலஸ்தீனியர்கள்.

தோற்றத்திலும் நிறத்திலும் நம் ஊர் பார்பனர்களை ஒத்திருக்கும் பாலஸ்தீனியர்கள் எப்பாடு பட்டாவது ஒரு டிகிரி எடுத்து விடுவார்கள். கல்வி கற்பதை அந்த அளவு நேசிப்பர். அதிகமாக அலுவலக வேலைகளையே விரும்புவர். சவுதியில் பல பாலஸ்தீனியர்களை நண்பனாக பெற்றவன். பழகுவதற்கு மிக இனிமையானவர்கள். மிக தைரியசாலிகள்: பெண்களும் ஆண்களுக்கு நிகராக படிப்பதிலும், வேலை வாய்ப்பை பெறுவதிலும் போட்டி போடுவர். அதே வேகத்தில் தொழுகையிலும் மிக கவனமாக இருப்பர்.

தோல்விகளையும் சிரமங்களையுமே வாழ்க்கையாக கொண்டுள்ள இந்த மக்களின் வாழ்வில் வசந்தம் வீச நம்முடைய பிரார்த்தனையை இறைவனிடத்தில் வைப்போம்.

'என் இறைவா! எனக்குக் கல்வியை அதிகப்படுத்து' எனக் கூறுவீராக!

குர்ஆன் 20:114