
முக நூல் நண்பர்கள் பலர் எனக்கு இன்று பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளனர். வாழ்த்து கூறிய அனைவருக்கும் எனது நன்றிகள்.
அறிவியல் ரீதியாக நாம் பிறந்த அந்த நாள் என்றுமே திரும்பி வரப் போவதில்லை. எனவே அதனைக் கொண்டாடுவதில் எந்த அர்த்தமும் இல்லை. மேல் நாட்டு மோகத்தால் இது போன்று பிறந்த நாள் கொண்டாடும் பழக்கம் நம்மிடையேயும் தொற்றிக் கொண்டது. இதற்காக பலர் ஆடம்பர விழாக்கள் எடுப்பதும் கடன் வாங்கியாவது விலையுயர்ந்த கேக்குகளை வாங்கி பிறந்த நாள் விழா கொண்டாடுகின்றனர். நான் இன்று வரை எனது பிறந்த நாளை விசேஷமாகக் கொண்டாடியதில்லை. முகநூல் நண்பர்கள் வரிசையாக இன் பாக்ஸில் வாழ்த்து தெரிவித்த போதுதான் எனக்கே ஞாபகம் வந்தது. இது போன்று பிறந்த நாளுக்கு ஆடம்பர செலவுகள் செய்வதை தவிர்த்து அந்த பணத்தை உணவின்றி வாடும் ஏழைகளுக்கு கொடுத்து புண்ணியத்தை தேடிக் கொள்வோமாக!
-----------------------------------------------
இந்த பிறந்த நாளை கொண்டாடுவதில் நபிகள் நாயகத்தையும் நாம் விட்டு வைக்கவில்லை. வருடா வருடம் சிலர் கொண்டாடி வருகின்றனர். நமது அரசுகளும் இதற்கு விடுமுறையும் அளித்துள்ளது. ஆனால் இஸ்லாமிய பார்வையில் இது போன்று பிறந்த நாள் விழா கொண்டாட அனுமதி இல்லை. நபிகள் நாயகம் பிறந்த சவுதி அரேபியால் மீலாது நபிக்கு விடுமுறையோ அல்லது எந்த கொண்டாட்டங்களோ கிடையாது. ஆனால் தமிழகத்தில் சிலர் இன்று வரை இதனை விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். இந்த பழக்கம் இஸ்லாமியரிடத்தில் எப்படி நுழைக்கப்பட்டது?
நபி அவர்களின் காலத்திலோ அல்லது நபி அவர்களால் சிறந்த சமுதாயம் என போற்றப்பட்ட தோழர்கள் மற்றும் அவர்களுக்கு பின் வந்த ஆட்சியாளர்கள் காலத்திலோ நபி அவர்களின் பிறந்த நாட்கள் கொண்டாடப்பட வில்லை. இஸ்லாத்தின் உண்மையான கொள்கைகளைச் சிதைப்பதற்காக முதன் முதலில் 'ஷியாக்களின் பாத்திமிட்' ஆட்சிக்காலத்தில் தோற்றுவிக்கப்பட்டது தான் இந்த மீலாது விழாக்கள். உண்மையான நம்பிக்கையாளர்களுக்கும் ஷியாக்களின் இந்த நூதன கண்டுபிடிப்புக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.
வரலாற்று ஆசிரியர் இப்னு கல்கான் என்பவர் கூறுகிறார்: -
ஃபாத்திமிட் ஆட்சியாளர்களுக்குப் பிறகு இதை விமர்சையாக முதன் முதலில் கொண்டாடியவர் ஈராக்கில் இர்பில் என்ற பகுதியை கி.பி. ஆறாம் நூற்றாண்டின் இறுதி பகுதியில் அல்லது ஏழாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஆட்சி செய்த மன்னர் அல்-முஜஃப்பார் அபூ சயீத் கவ்கபூரி என்பவராவார்.
மற்றொரு ஆய்வாளர் அபூ ஷாமா என்பவர் கூறுகிறார்: -
ஈராக்கின் மோசுல் நகரில் ஷெய்ஹூ உமர் இப்னு முஹம்மது அல்-மலா என்பவர் தான் முதன் முதலில் நபி (ஸல்) அவர்களின் பிறந்த தினத்தைக் கொண்டாடினர். பின்னர் இர்பில் நகரின் ஆட்சியாளர்களும் மற்றவர்களும் அதைப் பின்பற்றினர்.
குர்ஆனிலோ அல்லது நபி மொழிகளிலோ பிறந்த நாள் கொண்டாட அனுமதி இல்லை ஆதலால் இது போன்ற நூதன பழக்கங்களிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்வோமாக!



