அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சில ஆலோசனைகள்!
டெல்லி மக்கள் இன்று மகத்தான வெற்றியைக் கொடுத்துள்ளார்கள். இந்திய மாநிலங்கள் அனைத்திலும் இருந்து அனைத்து மொழி பேசக் கூடிய மக்களும் வாழும் இடம் டெல்லி. ஒட்டு மொத்த இந்திய மக்களின் எண்ண ஓட்டமாகவே உங்களின் வெற்றியை பார்கிறேன். இந்த நாட்டின் பிரதமராக வருவதற்குரிய அனைத்து தகுதிகளும் உங்களுக்கு இருக்கிறது.
டெல்லி இமாமின் சந்தர்பவாத ஆதரவை வேண்டாம் என்று ஒதுக்கியதும் உங்களின் ஆழ்ந்த உண்மையான இந்து மத பற்றும் மேலும் உங்களின் மதிப்பை என்னுள் உயர்த்தியுள்ளது. நரேந்திர மோடியைப் போன்றோ, அமீத்ஷா வைப் பொன்றோ ஆட்சிக் கட்டிலில் அமருவதற்காக இந்து மதத்தை தூக்கிப் பிடிப்பவர் அல்ல நீங்கள். அதனை பல சந்தர்பங்களில் நான் பார்துள்ளேன். இன்று ஒட்டு மொத்த இந்தியாவும் இந்துத்வாவின் பிடியில் சிக்கியுள்ளது. அவர்களின் ஆர்பாட்டமான அரை கூவல்களை உங்களின் இந்த வெற்றியானது சற்றே மட்டுப் படுத்தும். ஆனால் முற்றாக அடங்காது.
முற்றாக அடங்க வேண்டுமானால் டெல்லியின் ஆட்சியை மற்ற மாநில மக்களும் உணரும்படி சிறப்பாக கொண்டு செல்லுங்கள். ஊழலை அகற்றி வறுமையையும் வேலையில்லா திண்டாட்டத்தையும் உங்களால் முடிந்த அளவு முற்றாக ஒழிக்கப் பாருங்கள். சாதி மத மோதல்களை கட்டுக்குள் வைத்திருங்கள். இது ஒரு புறம் இருக்க....
ஒரு இஸ்லாமியனாக எனக்குள் ஒரு ஆதங்கம் இருக்கிறது. அதனையும் தெரிவிக்கிறேன்.....
----------------------------------------------
சென்ற ஆண்டு குடும்பத்தோடு டெல்லி சுற்றுலா சென்றிருந்தேன். அப்போது டெல்லியில் இரண்டு நாள் தங்கியிருந்தேன். புது டெல்லிக்கும் பழைய டெல்லிக்கும் மிகப் பெரிய வித்தியாசம் உள்ளதை அங்கு கண்டு ஆச்சரியப்பட்டேன். இது தற்செயலாக நிகழ்ந்த நிகழ்வாக என்னால் பார்க்க முடியவில்லை. காங்கிரஸூம் பிஜேபியும் திட்டமிட்டு கடந்த 60 ஆண்டுகளாக பழைய டெல்லியை புறக்கணித்து வந்துள்ளனர். எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படாமல் பழைய டில்லி கட்டிடங்கள் ஒரு வித சோகத்தில் உள்ளதை என்னால் பார்க்க முடிந்தது. வாடகைக்கு ஒரு மினி வேனை எடுத்து சுற்றிப் பார்க்க தயாரானோம்.
"டெல்லி ஜூம்ஆ மசூதிக்கு வண்டியை விடு" என்று சொன்னவுடன் டிரைவர்
'ஐயோ அங்கேயா போறீங்க.... அது ரௌடிகள் வாழும் இடமாச்சே... பெண்களோடு வேறு போகிறீர்கள். வேண்டாம் சார்' என்று தடுத்தார்.
'என்னப்பா இப்படி சொல்றே... நான் டெல்லி வந்ததே ஜூம்ஆ மசூதியை பார்கத்தான். வண்டியை அங்கேயே விடு' என்றேன்.
அங்கு சென்று பார்தவுடன்தான் அந்த இடம் எவ்வளவு மோசமாக உள்ளது என்பதை தெரிந்து கொண்டேன். மசூதியை சுற்றி சிதிலமடைந்த பழைய கட்டிடங்கள். போதை மருந்து சாப்பிட்டு விட்டு ஒரு வித மயக்கத்தோடு சுவரோரங்களில் சாய்ந்து கிடக்கும் சாமான்ய மக்கள். அழுக்கு படிந்த உடைகளோடு தலைகூட வாரப்படாமல் அங்கும் இங்கும் சுற்றித் திரியும் சிறுவர்கள் சிறுமிகள். நரகல் நடையில் பேசிக் கொண்டும் சண்டையிட்டுக் கொண்டும் பல பிளாட்பாரக் குடும்பங்கள். என்று நான் நினைத்ததற்கு முற்றிலும் மாற்றமான சூழலையே அங்கு கண்டேன். மசூதியைச் சுற்றி எங்கும் பிளாட்பாரக் கடைகள். அதில் பொருட்களை வாங்க கூட்டம் அலை மோதுகிறது. அந்த கூட்டத்தை பயன்படுத்திக் கொண்டு பிக் பாக்கெட் அடிக்க ஒரு கும்பலும் சுற்றிக் கொண்டிருக்கிறது. மெட்ரோ பணிகளுக்காக குழிகளை ஆங்காங்கே தோண்டி அவை சரி வர மூடப்படாமல் அந்த இடங்களில் எல்லாம் தண்ணீர் தேங்கி ஒரு விதமான நாற்றமும் வந்து கொண்டிருந்தது. இதை எல்லாம் தாண்டி மசூதிக்கு உள்ளே சென்றவுடன் ஒரு வித நிம்மதி கிடைத்தது. தாஜ்மஹாலை எவ்வளவு நேர்த்தியாக ஷாஜஹான் கட்டினாரோ அதே சிரத்தையோடு ஜூம்ஆ மசூதி கம்பீரமாக நின்று கொண்டிருந்தது. கை கால்களை சுத்தம் செய்து கொள்வதற்காக மிகப் பெரிய ஹவுள் (தண்ணீர் தொட்டி) மையத்தில் இருந்தது. கை கால்களை அலம்பிக் கொண்டு நானும் எனது குடும்பமும் அந்த பள்ளியில் மதிய நேர தொழுகையை நிறைவேற்றினோம்.
உலகப் புகழ் பெற்ற மசூதிகளில் ஒன்று இந்த ஜூம்ஆ பள்ளி. உலக அதிசயங்களில் ஒன்றாகவும் பலரால் போற்றப்படுகிறது. வெளி நாட்டிலிருந்தும் பல தலைவர்கள் பொது மக்கள் என்று தினமும் வந்து போகும் ஒரு இடத்தைப் பற்றியே இப்போது பேசிக் கொண்டிருக்கிறோம். அதே நேரம் புது டில்லியில் உள்ள ராஜ்காட்டையும் பார்தேன். மஹாத்மா காந்தி, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி என்று அனைத்து சமாதிகளும் மிக சுத்தமாக பராமரிக்கப்படுகின்றன. சாலைகளும் மிகத் தூய்மையாக உள்ளது. வேறொரு நாட்டுக்கு வந்தது போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது.
ஏன் இந்த பாகுபாடு? பழைய டில்லியில் உள்ளவர்கள் அதிகம் முஸ்லிம்கள் என்பதாலா? அரசு நினைத்தால் ஜூம்ஆ மசூதி சுற்று வட்டாரத்தை ஒரு வாரத்தில் சரி செய்து விடலாம். ஆனால் அரசு கெட்டு குட்டிச்சுவராகட்டும் என்று வேண்டுமென்றே கண்டு கொள்ளாமல் விட்டுள்ளது. இவ்வாறு ஒரு குறிப்பிட்ட சமுதாயம் தலை நகரில் ஒதுக்கப்பட்டால் அது ஒட்டு மொத்த நாட்டுக்கும் பின்னடைவு தானே. இதன் பாதிப்பு புது டில்லியையும் பாதிக்கும் அல்லவா?
ஒரு நாட்டின் முன்னேற்றம் என்பது ஒட்டு மொத்த மக்களின் முன்னேற்றமாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட சமுதாயத்தினர் அனைத்து செல்வங்களையும் அனுபவிப்பதும் மற்ற சமுதாயம் அரசால் கண்டு கொள்ளாமல் ஒதுக்கப்படுவதும் ஒரு நாட்டுக்கு மிகப் பெரிய கேடு என்பதை நமது முந்தய ஆட்சியாளர்கள் உணரவில்லை. புதிதாக ஆட்சியில் அமரும் நீங்கள் அந்த குறையை நிவர்த்தி செய்து பழைய டில்லியை புது டில்லியாக மாற்றுவதை உங்களின் பிரதான குறிக்கோளாக கொள்ளுங்கள். இந்த வாய்பை சரியாக பயன்படுத்தினால் அடுத்த மூன்றாண்டுகளில் பிரதமராக அமரும் வாய்பையும் இந்திய மக்கள் தருவார்கள்.
சாதி மத பேதமற்ற சிறந்த ஆட்சியை கொடுக்க எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்திக்கிறேன்.