
'அச்சத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தக் கூடியதாக மின்னலை அவனே உங்களுக்குக் காட்டுகிறான்'
-குர்ஆன் 13:12
ஒரு முறை மின்னல் வெட்டி மறையும் போது 300000 டிகிரி வெப்பத்தை உமிழ்கிறது. சிலரது உயிரே இதனால் போய் விடுகிறது. மின்னல் தாக்கி இறப்பு என்ற செய்தியை நாம் அவ்வப்போது படித்து வருகிறோம். மனிதர்களுக்கு ஒரு வித அச்சத்தை இந்த மின்னல் தருகிறது.
அச்சம் என்ற வார்த்தையோடு எதிர்பார்ப்பு என்ற வார்த்தையையும் இறைவன் சேர்த்து சொல்கிறான். மின்னல் யாரை எதிர் பார்த்து காத்திருக்க வேண்டும்? அது பற்றி சற்று விரிவாக பார்போம்.
வளி மண்டலத்தில் நைட்ரஜன் 78 சதவீதமும் ஆக்சிஜன் 21 சதவீதமும் கார்பன் டை ஆக்சைடு 0.033 சதவீதமும் ஆர்கான், நியான், ஹீலியம், மீதேன், ஹைட்ரஜன் ஆகிய வாயுக்கள் மிகக் குறைந்த அளவிலும் கலந்துள்ளன. காற்றிலுள்ள 78 சதவீத நைட்ரஜனும் 21 சதவீத ஆக்சிஜனும் ஒன்றாகக் கலந்து நைட்ரேட்டுகளை உருவாக்குகின்றன. இந்த நைட்ரேட்டுகள் நீருடன் கலந்து நீர்த்த நைட்ரிக் அமிலமாக மாறி மழையாகப் பொழிகின்றது. வளி மண்டலத்திலுள்ள இந்த நைட்ரஜனை ஏற்கெனவே மண்ணில் உள்ள பாக்டீரியாக்கள் கவர்ந்து நைட்ரேட்டுகளாக மாற்றுகின்றன. இந்தப் பணியை மின்னல் வந்து பாய்ந்து வளி மண்டலத்தில் உள்ள நைட்ரஜன்களை அதிர்வுகளால் உடைத்து அமிலமாக, சத்தாக, சாறாக மாற்றி மழை நீருடன் கலந்து ஆறாக ஓடச் செய்கிறது.
மண்ணுக்குள் கால்சியம், இரும்பு, அலுமினியம் போன்ற கனிமங்கள் இருக்கின்றன. அந்தக் கனிமங்களுடன் நைட்ரேட் கலக்கிறது. நைட்ரேட்டோடு கால்சியம் சேர்ந்து 'கால்சியம் நைட்ரேட்' உருவாகிறது. இவை தான் மண்ணில் விளைகின்ற தாவரங்களுக்கு இயற்கை உரமாகப் பயன்படுகின்றது. இவற்றை நேரிடையாக மனிதன் சாப்பிடுவதன் மூலமோ அல்லது அவற்றை சாப்பிடும் ஆடு மாடுகளின் இறைச்சியை சாப்பிடுவதன் மூலமோ நைட்ரஜனை தன் உடலில் சேர்த்துக் கொள்கிறான்.
மனிதனின் உடலில் ஒட்டிக் கொண்டிருக்கும் இந்த நைட்ரஜன் அவன் இறந்தவுடன் மீண்டும் மண்ணிலேயே போய் சேர்ந்து விடுகின்றது. மிருகங்களின் உடலில் உள்ள நைட்ரஜன்களும் மண்ணிலேயே சேர்ந்து விடுகின்றனது. பின்னர் அது காற்றிலும் கலந்து விடுகின்றது. இதனைத்தான் நாம் 'நைட்ரஜன் சுழற்சி' என்கிறோம்.
நைட்ரஜன் ஆக்சிஜன் என்ற என்ற பின்னல்களுக்கிடையே மின்னலைப் பாய்ச்சி மின்னலின் எதிர்பார்ப்பை பூர்த்தியாக்குகிறான் இறைவன். மின்னலுக்கு எதிர்பார்ப்பு என்ற வார்த்தையை ஏன் இறைவன் உபயோகித்தான் என்ற உண்மை நமக்கு விளங்குகிறதல்லவா? இவ்வளவு கருணையை நம் மீது பொழிந்து நம்மை ரட்சிக்கும் இரட்சகனான அந்த இறைவனுக்கு நன்றி செலுத்த நாம் மறக்கலாமா?