Followers

Showing posts with label AMIRKHAN. Show all posts
Showing posts with label AMIRKHAN. Show all posts

Wednesday, November 25, 2015

அமீர்கானுக்கு ஆதரவும் எதிர்பும் - ட்விட்டர் தளத்தில்



இந்தியாவில் சகிப்பின்மை மற்றும் பாதுகாப்பின்மை அதிகரித்து விட்டதாக பாலிவுட் நடிகர் ஆமிர்கான் கூறியிருந்தார். ஏற்கெனவே நாட்டில் சகிப்பின்மையும் வெறுப்பு அரசியலும் அதிகரித்துவிட்டதாகக் கூறி, எழுத்தாளர்கள் பலர் தங்களது விருதுகளைத் திரும்ப ஒப்படைத்து வரும் நிலையில், ஆமிர்கானின் இந்த வெளிப்படையான பேச்சு மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து ஆமிர்கானுக்கு ஆதரவு தெரிவித்தும், எதிர்ப்பு தெரிவித்தும் பிரபலங்கள் ட்விட்டரில் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

ஆதரவுக் குரல்கள்:

மார்க்கண்டேய கட்ஜூ, முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி

ஆமிர்கானின் கருத்துகள் திரிக்கப்பட்டிருக்கின்றன. அவர் இந்தியாவை விட்டு வெளியேறுவதாகக் கூறவில்லை. வளர்ந்து வரும் சகிப்பின்மை குறித்து மற்றவர்கள் ஏற்கெனவே தெரிவித்திருந்த, அவரின் பார்வையையே வெளிப்படுத்தினார். அப்பேச்சில், குழந்தைகளுக்காக அவரின் மனைவி பயந்ததையும், இந்தியாவை விட்டு வெளியேறி விடலாமா என்று கேட்டதையும் பகிர்ந்துகொண்டார். மொத்தத்தில் இது எதுவுமில்லாத விஷயத்துக்காக தேவையில்லாமல் மற்றவர்கள் பதற்றப்படுவதாக மட்டுமே உள்ளது.

பரேஷ் ராவல், நடிகர்

ஆமிர்கான் போராட்ட குணம் படைத்தவர். இந்த நாட்டை விட்டு அவர் வெளியேறக் கூடாது. தாய்நாட்டின் மீது உண்மையான பற்றுக் கொண்டவர்கள், இக்கட்டான சமயங்களில் நாட்டை விட்டு வெளியேற மாட்டார்கள். ஆகவே இங்கிருந்தபடியே சகிப்புத்தன்மை வளரப் போராடுங்கள்.

கவிதா கிருஷ்ணன், அகில இந்திய முற்போக்கு பெண்கள் சங்க செயலாளர்

பாஜகவைப் பொருத்தவரையில், நீங்கள் இந்தியாவில் வாழ்ந்தாலும், சிலிக்கன்வேலியில் வாழ்ந்தாலும், பாஜகவை ஆதரித்தால் நீங்கள் நாட்டுப்பற்று கொண்டவர். பாஜகவை எதிர்த்தால், தேசிய எதிர்ப்புவாதி. நான் ஆமிர்கானை ஆதரிக்கிறேன்.

சுதீந்தர குல்கர்னி, அரசியல்வாதி மற்றும் கட்டுரையாளர்

ஆமிர்கானுக்கு எதிராக சகிப்பின்மையை நிறுத்துங்கள். அவர் தேசப்பற்றுக் கொண்டவராகத்தான் பேசினார்.

ரகுராம், எம்டிவி

அமீர்கான் மீதான தனிப்பட்ட தாக்குதல்களும், கிண்டல்களும், ஏசல்களும் அவரின் கருத்துக்கு உடன்படாமல் இருப்பதைக் காட்டவில்லை. சகிப்பின்மையைத்தான் காட்டுகிறது.

வினோத் மேத்தா, பத்திரிகையாளர்

லட்சக்கணக்கான இந்தியர்களின் மனக் குரலைத்தான் ஆமிர்கான் எழுப்பியிருக்கிறார். 'உன்னதமான இந்தியா'வின் தூதர், சகிப்பின்மை இந்தியா எனக் கூறியிருக்கிறார். மோடி அரசு என்ன செய்கிறது?

எதிர்ப்புக் குரல்கள்:

முரளிதர் ராவ், பா.ஜ.க. தேசிய பொதுச் செயலாளர்

துரதிர்ஷ்டவசமாக ஆமிர்கான், தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு எதிராக தீங்கிழைக்கும் பிரச்சாரத்தை மேற்கொள்ள முயல்கிறார்.

அனுபம்கெர், நடிகர்

அன்புள்ள ஆமிர்கான், எந்த நாட்டுக்கு செல்லவேண்டும் என்று உங்கள் மனைவியிடம் கேட்டுவிட்டீர்களா? இந்த நாடுதான் உங்களை உருவாக்கி இருக்கிறது என்பதை அவர்களிடம் தெரிவித்துவிட்டீர்களா? பல மோசமான தருணங்களில்கூட இந்த நாட்டில்தான் வாழ்ந்து வந்தீர்கள். அப்போதெல்லாம் வேறு நாட்டுக்கு செல்ல வேண்டும் என்று ஏன் தோன்றவில்லை?

உன்னதமான இந்தியா எப்போது உங்களுக்கு சகிப்பின்மை இந்தியாவாக மாறியது? கடந்த 7- 8 மாதங்களிலா, மற்ற இந்தியர்களுக்கு என்ன சொல்கிறீர்கள்? நாட்டை விட்டு வெளியேறவா அல்லது ஆட்சி மாற்றத்துக்காகக் காத்திருக்கவா?

ராம்கோபால் வர்மா, இயக்குநர்

சகிப்பின்மை குறித்து சில பிரபலங்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர். சகிப்பின்மை அதிகரித்துவிட்டதாக கூறப்படும் இதே நாட்டில்தான் அவர்கள் பிரபலமானவர்களாக ஆனார்கள் என்பதை அவர்கள் மறந்துவிடக் கூடாது. அமீர்கான், ஷாரூக், சல்மான் கான் ஆகிய மூன்று முஸ்லீம்களும் ஒரு இந்து நாட்டின் நட்சத்திரங்களாக இருப்பதிலிருந்தே இந்தியா சகிப்புத்தன்மை கொண்டது என்பது தெரிகிறது.

ரவீணா டாண்டன், நடிகை

மோடி பிரதமராக இருப்பதை விரும்பாதவர்கள், இந்த அரசையும் முடிவுக்குக் கொண்டு வர விரும்புகிறார்கள். அரசியல் காரணங்களுக்காக, நாட்டையே அசிங்கப்படுத்துகிறார்கள். இந்த நாடு உங்களுக்கு என்ன செய்தது என்று கேட்பதற்கு முன்னால், நீங்கள் நாட்டுக்காக என்ன செய்தீர்கள் என்று கேட்டுக்கொள்ளுங்கள்.

ஜி.வி.எல். நரசிம்ம ராவ், பா.ஜ.க. தேசிய செய்தி தொடர்பாளர்

ஆமிர்கான், இந்தியாவில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி இருக்கிறார்களே, அதுவே சகிப்புத்தன்மையின் உச்சத்தை உங்களுக்கு எடுத்துக் காட்டவில்லையா?

தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
26-11-2015

அமீர்கானுக்கு எதிராக கருத்து சொல்லும் அனைவரும் பாஜக எம்பிக்களும், மந்திரிகளும், கவர்னர்களும் 'முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டும்' என்று சொன்னபோது வாய் மூடி மவுனியாக இருந்ததை கவனிக்க வேண்டும். இப்போது அமீருக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் அன்றே எதிர்த்திருந்தால் அமீர்கானுக்கு இத்தகைய பேட்டி கொடுக்க அவசியமே ஏற்பட்டிருக்காது அல்லவா?