Followers

Showing posts with label நைஜீரியா. Show all posts
Showing posts with label நைஜீரியா. Show all posts

Friday, November 11, 2011

நைஜீரிய படுகொலைகளும நமது நாட்டு இந்து மதமும்!




நைஜீரியாவில் தினம் தினம் நடந்து வரும் படுகொலைகள் நம்மை வேதனைப்படுத்துகிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன் நைஜீரியாவில் நமது நாட்டின் இந்து மத பிரிவுகளைப் போல் சிறு சிறு குழுக்களாக இருந்துளளனர். ஒவ்வொரு குழுக்களும் நம் நாட்டைப்போல ஒரு சாதியாக மாற்றப்பட்டது. ஒவ்வொரு சாதிக்கும் நம் நாட்டின் வழக்கைப் போல் ஒரு கடவுள் ஏற்படுத்தப் பட்டது. வைதீகம், வேதாந்தம், சமணம், பௌத்தம் என்று எப்படி பல வாறாக இறைக் கொள்கை பிரிக்கப்பட்டதோ அதே போன்ற நிலைதான் நைஜீரியாவிலும். அவரவர் தங்களின் சாதிகளின் அடிப்படையில் தங்களின் வணக்கங்களை செலுத்தி வந்தனர். இதில் சமணம், பவுத்தம் என்று நம் நாடடில் எப்படி ஒரே மதத்துக்குள்ளேயே குழி தோண்டுதல் நடந்ததோ அது போன்ற பழங்குடி இன மோதல்களுக்கு நைஜீரியாவும் சளைக்கவில்லை. பல சாதிகளாக பிரிந்து ஒருவரை ஒருவர் அழிக்கும் வேலை நன்றாகவே நடந்து வந்தது.

இப்படி மக்கள் பலவாறாக பிரிந்து அழிவின் உச்சத்தில் இருந்த போதுதான் அங்கு இஸ்லாமிய பிரசாரகர்கள் நுழைகின்றனர். இஸ்லாம் அந்த மக்களை 50 சதவீதம் ஆட்கொள்கிறது. ஆனால் அங்கும் ஒரு சில உயர் சாதிகள் நம் நாட்டைப் போலவே இஸ்லாத்தை ஏற்க மறுக்கின்றன. புதிதாக அவர்கள் நாட்டில் புகுந்த இஸ்லாமிய கொள்கையை விரட்ட முற்படுகின்றனர். வழக்கம்போல் தோல்வியே ஏற்படுகிறது. இஸ்லாத்தை முற்றிலுமாக நைஜீரியாவில் துடைக்க பழங்குடி இன மக்களால் முடியவில்லை. அன்று முதல் சமீப காலம் வரை நைஜீரிய பழங்குடியினருக்கும் புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்களுக்கும் சிறு சிறு மோதல்கள் நிகழ்ந்த வண்ணமே உள்ளது.

1960 வாக்கில் நைஜீரியா பல சோதனைகள் போரட்டங்களுக்குப் பிறகு சுதந்திரம் அடைகிறது. பெரும்பான்மையினராக இஸ்லாமியர்கள் இருந்ததால் ஆட்சி அதிகாரமும் முஸ்லிம்கள் வசம் வருகிறது. இதை விரும்பாத கிறித்தவ, பழங்குடி குழுக்கள் அவ்வப்போது சுதந்திர நைஜீரிய ஆட்சியாளர்களுக்கு இன்று வரை தொல்லை கொடுத்து வருகின்றனர்.
அதன்பின் நம் நாட்டைப் போலவே காலனி ஆதிக்கம் நைஜீரியாவிலும் ஏற்படுகிறது. போர்ச்சுக்கீசியர்கள் நைஜீரியாவை தங்களது ஆளமைக்கு கீழ் கொண்டு வருகின்றனர். அதன் பின் பிரிட்டிசாரின் வருகையும் நடக்கிறது. இவர்கள் வந்தவுடன் இஸ்லாமாகாத பழங்குடி மக்களை கிறித்துவர்களாக மாற்றுகின்றனர். எஞ்சிய மிகச் சிலர் இன்றும் பழங்குடியினராகவே வாழ்ந்து வருகின்றனர்.

1960 வாக்கில் நைஜீரியா பல சோதனைகள் போரட்டங்களுக்குப் பிறகு சுதந்திரம் அடைகிறது. பெரும்பான்மையினராக இஸ்லாமியர்கள் இருந்ததால் ஆட்சி அதிகாரமும் முஸ்லிம்கள் வசம் வருகிறது. இதை விரும்பாத கிறித்தவ, பழங்குடி குழுக்கள் அவ்வப்போது சுதந்திர நைஜீரிய ஆட்சியாளர்களுக்கு இன்று வரை தொல்லை கொடுத்து வருகின்றனர்.

இடையில் சில நாட்கள் சண்டையில்லாமல் இஸ்லாமியர்கள் கிறித்தவர்கள் பழங்குடியினருடன் சமாதானமாக சென்று சிறந்த முறையில் ஆட்சி செய்து வந்தனர். ஆப்ரிக்காவில் பட்டினி சாவு இல்லாத ஒரு நாடாக செல்வ செழிப்பிலும் சிறந்து விளங்கியது. அள்ள அள்ள குறையாத கனிம வளங்களும் நைஜீரியாவை மேலும் செல்வ நாடாக மாற்றியது.

நம்ம பெரியண்ணன் அமெரிக்காவுக்கு ஒரு நாடு செல்வ செழிப்பில் சிறந்து விளங்குவதை கண்டால் பொறுக்குமா? வழக்கம் போல் ஐரோப்பியர்களையும் துணைக்கழைத்துக் கொண்டு அந்நாட்டு கிறித்தவர்களுக்கு ஆயுதங்களையும் கொடுத்து இஸ்லாமிய ஆட்சியாளர்களுக்கு எதிராக போராட தூண்டுகிறது. கிறித்தவர்கள் பெரும்பான்மையாக உள்ள இடங்களை பிரித்து தனி நாடாக்கும் முயற்ச்சியில் அமெரிக்கா இறங்கியுள்ளது. அங்குள்ள கனிம வளங்களை பங்கு போடுவதே பெரியண்ணனின் திட்டம். இதை எதிர்க்கும் இஸ்லாமிய அரசுக்கும் ஆதரிக்கும் கிறித்தவ மற்றும் பழங்குடி இன மக்களுக்கும் இடையிலான போராட்டமே தற்போது நடந்து வருவது.

வரலாறு இப்படி இருக்க நமது எழுத்தாளர் ஜெய மோகன் அந்த நாட்டு நிகழ்வை நம் நாட்டோடு ஒப்பிட்டுப் பார்க்கிறார்.

//இந்தியாவில் என்ன வேற்றுமை? இந்தியாவை கிறித்தவ மயமாக்கும் காலனியாதிக்க முயற்சிகளை இந்துமதம் அனுமதிக்காமல் எதிர்த்து நின்றது. இஸ்லாமின் ஆதிக்கத்தை வென்றதுபோலவே கிறித்தவ ஊடுருவலையும் அது வென்றது. அதற்கான காரணம் என்ன? மிக எளிய விடைதான் ஏற்கனவே இந்து,சமண,பௌத்த மதங்களால் இந்தியாவின் சிறுவழிபாட்டுமரபுகள் தத்துவார்த்தமாக தொகுக்கப்பட்டுவிட்டிருந்தன. ஆகவே அவை நைஜீரியா போல தனித்தனி வழிபாட்டுக்குழுக்களாக தேங்கி இருக்கவில்லை. ஒன்றுடன் ஒன்று உரையாடி வளர்ந்து ஒருங்கிணைந்த சக்தியாக, வலுவான தத்துவ – வழிபாட்டு அடிபப்டையுடன் விளங்கின. ஆகவேதான் நைஜீரிய பழங்குடி மதங்களுக்கு நிகழ்ந்தது இந்துமதப்பிரிவுகளுக்கு நிகழவில்லை.//
-எழுத்தாளர் ஜெய மோகன்

அதாவது எழுத்தாளர் ஜெயமோகன் சொல்ல வருவது நமது நாட்டில் சாதிகள் மிகவும் ஆழமாக வேரூன்றி ஒவ்வொரு சாதியினரும் தங்கள் தெய்வங்களையும் வேதங்களையும் காப்பியங்களையும் ஒருங்கிணைத்ததால்தான் அதாவது இந்து மதம் என்ற ஒரு குடையின் கீழ் வந்ததால்தான் இஸ்லாமிய கிறித்தவ படையெடுப்புகள் இந்து மதத்தை அழிக்க முடியவில்லை என்கிறார். இது எந்த அளவு ஒத்துக் கொள்ளக் கூடிய கருத்து என்று எனக்கு விளங்கவில்லை.

எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் சாதிகள் நிலைத்திருக்க வேண்டும் என்றும் மனிதர்கள் பல வருணங்களாக பிரிந்தே இருக்க வேண்டும் என்று விரும்புகிறாரா? அடுத்து எந்த காலத்தில் இந்து மத சாதிப் பிரிவுகளுக்குள் ஒற்றுமை இருந்தது? அப்படி இந்துக்கள் ஒற்றுமையாக இருந்திருந்தால் மொகலாயர்கள் இந்த நாட்டை 1000 ஆண்டுகாலம் ஆட்சி செய்திருக்க முடியுமா?

அதன் பிறகு வந்த கிறித்தவர்கள் இந்த நாட்டை 300 வருட காலம் ஆட்சி செய்திருக்கத்தான் முடியுமா? மொகலாயர்களுக்கு முன்னால் வாழ்ந்த நமது பூர்வீக ஆட்சியாளர்கள் ஒழுங்காக மக்களை வைத்திருந்தால் அந்நியர்களின் ஆட்சி இத்தனை வருடம் தாக்குபிடித்திருக்க முடியுமா? சேர சோழ பாண்டியர்கள் அதிகாரத்துக்கு போட்ட சண்டைகளும் அதனால் மக்கள் பட்ட துன்பங்களுமே அந்நியர்களை இத்தனை வருட காலம் ஆட்சி செய்ய வைத்தது.

அடுத்து உலகிலேயே இஸ்லாமியர்களின் மக்கள் தொகையில் முதல் இடத்தை பிடிக்க போகிறது நமது இந்தியா. பாகிஸ்தான் இந்தியாவோடு சேர்ந்திருந்தால் அந்த இலக்கை என்றோ அடைந்திருக்கலாம். இவ்வளவு மதமாற்றங்கள் நடந்திருக்கின்றன. இன்றும் நடந்து கொண்டிருக்கின்றன. நிலைமை இப்படி இருக்க இந்தியாவில் இஸ்லாம் வெற்றி பெற முடியவில்லை என்று எதை வைத்து சொல்கிறார்?

இவ்வளவு தகவல் தொடர்பு சாதனங்களை பெற்ற நாம் காஸ்மீரிலிருந்து கன்னியாகுமரிவரை நம் நாட்டை கட்டுக்குள் வைத்திருப்பதற்கே போதும் போதும் என்றாகி விடுகிறது. அந்த காலத்தில் அதுவும் இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள ஒரு நாட்டில் ஆப்கானிஸ்தானத்திலிருந்து வந்த மொகலாயர்கள் இந்த நாட்டை அதுவும் பாகிஸ்தான் பங்களாதேசையும் சேர்த்து 1000 ஆண்டுகள் ஆட்சி செய்வது என்பது சாத்தியப்படுமா?

அடுத்து சாதிகளுக்குள ஒரு ஒற்றுமை இருந்தது என்கிறார் ஜெயமோகன். சமணர்களை வன்முறையால் ஒழித்தது தானே இன்றைய இந்து மதம்? அதே போல் பவுத்தத்தை இந்து மதத்தின் ஒரு பிரிவாக மாற்றியமைத்ததல்லவா நமது நாட்டு இந்து மதம். இனி குறு நில மன்னர்களுக்குள் சண்டை எந்த அளவு உக்கிரமாக இருந்தது என்பதையும் இனி பார்ப்போம்.

"ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும்
புதுவதன்று இவ்வுலகத்து இயற்கை (புறம் 76: 12)

என்று பாடியுள்ளார். இவ்வாறு போர் என்பது மன்னர்களுக்கிடையில் மிக இயல்பாக நடைபெறும் நிகழ்வாக இருந்தது. ஆயினும், மன்னர்கள் அவர்களது படைவீரர்கள் ஆகியோருடன் இது நின்று விடவில்லை. குடிமக்களையும் பாதிக்கும் ஒன்றாகவே போர் அமைந்தது. இதைச் சங்க நூல்கள் சுட்டுகின்றன.

பாண்டியன் பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதியின் வீரச்செயல் நெட்டிமையார் என்ற புலவரால் இவ்வாறு புகழப்படுகிறது,

"பகைவர் நாட்டில் தேர் செல்லும் தெருக்களைக் கழுதை பூட்டிய ஏரால் உழுது பாழ்படுத்தினாய். பறவைகள் ஒலிக்கும் புகழமைந்த வயல்களில் குதிரைகள் பூட்டிய தேரைச் செலுத்தி விளைபயிர்களை அழித்தாய்". (புறநானூறு 15). இதே மன்னனைக் காரிகிழார் என்ற புலவர் வாழ்த்தும் பொழுது,

"வாடுக இறைவநின் கண்ணி யொன்னார்
நாடுசுடு கமழ்புகை யெறித்தலானே" (புறம் 6)

என்று வாழ்த்துகிறார். பகைவருடைய நாட்டினைச் சுட்டெரிப்பதால் எழும் புகையால் உன் தலைமலை வாடட்டும் என்பது இதன் பொருளாகும்.

சோழன் கரிகால் பெருவளத்தான் பகலும் இரவும் கருதாது பகைவரது ஊரைத் தீயிட்டு அந்த ஒளியில் பகைவர்களின் புலம்பலோசையுடன் கொள்ளையிடுதலை விரும்புபவன் என்பதனை,

"எல்லையும் இரவும் எண்ணாய் பகைவர்
ஊர் சுடு விளக்கத் தழுவிளிக் கம்பலைக்
கொள்ளை மேவலை யாகலின்"

என்ற புறநானூற்றுப் பாடலால் (7) அறிகிறோம். சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி பகைவரது நெல் விளையும் வயல்களைக் கொள்ளையடித்து வீடுகளைக் கொளுத்திய செயல் போற்றப்படுகின்றது.

பகைவர் நாட்டை எரிக்கும் இக்கொடுஞ்செயல் அடிக்கடி நிகழ்ந்தமையால்தான் சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ, வற்றிய பாலை நிலத்திற்கு "செருமிகு சினவேந்தன் சிவந்திறுத்த புலம்போல" என்ற உவமையைப் பயன்படுத்துகிறார்.

பகைவர் நாட்டைத் தீயிட்டு அழிக்கும் கொடுமை மட்டுமல்லாது போரில் தோற்றவர்களைக் கொடூரமாகப் பழிவாங்கும் செயல்களும் நிகழ்ந்துள்ளன.

நன்னன் என்ற குறுநில மன்னன் தன்னுடைய பகைவர்களை வென்ற பிறகு அவர்களின் உரிமை மகளிரின் தலையை மழித்து அக்கூந்தலைக் கயிறாகத் திரித்து, அக்கயிற்றால் அப்பகைவரின் யானையைப் பிணித்தான் (நற்றிணை 270).

வேல்கெழு குட்டுவன் என்ற சேர மன்னன் பழையன் என்ற மன்னனை வென்று அவன் மனைவியாரின் கூந்தலைக் கொண்டு திரிக்கப் பெற்ற கயிற்றினால் யானைகளை வண்டியில் பூட்டி அவ்வண்டியில் வெட்டப்பட்ட பழையனது காவல் மரத்தை ஏற்றிச் சென்றான் (பதிற்றுப் பத்து 5ம் பத்து)

கணைக்கால் இரும்பொறை என்ற சேர மன்னன் மூவன் என்பவனைப் போரில் வென்று அவனது பற்களையெல்லாம் பிடுங்கித் தொண்டி நகர் கோட்டைக் கதவில் பதித்தான்.

மத்தி என்ற பரதவர் தலைவன் எழினி என்ற குறுநில மன்னனின் பற்களைப் பிடுங்கி தனது வெண்மணிக் கோட்டைக் கதவில் பதித்து வைத்தான். (அகம் 211).

இத்தகையக் கொடுமைகள் தமிழ் மன்னர்களுக்கிடையில் நிகழ்ந்துள்ளன என்பதனையும் தமிழ் மக்களின் சொத்துக்களே அழிவுக்கு ஆளாயின என்பதனையும் நினைவிருத்திக் கொள்ளுவது அவசியம். எல்லாவற்றிற்கும் மேலாகத் தனி மனிதர்களின் நாடு விரிவாக்கும் கொள்கையால் தமிழ்ச் சமுதாயம் அவலத்திற்காளானது.

இவையெல்லாம் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பு நடந்த கொடுமைகள் என்றால் பதினொன்றாவது நூற்றாண்டில் படையெடுப்பின்போது நிகழ்ந்த கொடுமைகள் இவற்றை விஞ்சுவதாகவே உள்ளன.

ராஜ ராஜ சோழனின் மெய் கீர்த்திகளில் அவனது வெற்றிச் சிறப்புகளில் ஒன்றாக "இரட்டைபாடியும், ஏழரை இலக்கமும் வென்று" என்ற தொடர் இடம்பெறுகிறது. ராஜ ராஜன் தன் மகன் முதலாம் இராசேந்திரனை அனுப்பி இவ்வெற்றியைப் பெற்றான்.

முதலாம் இராசேந்திரன் தலைமையில் சென்ற சோழர் படை சத்யாசிரையன் என்ற மேலைச் சளுக்கர் மன்னனுடன் போரிட்டு வென்று இரட்டைபாடியைக் கைப்பற்றியது இப்போரில் இராசேந்திரன் மேற்கொண்ட பழி செயல்களை சத்தியாசிரையனின் கி.பி. ஆயிரத்தி ஏழாம் ஆண்டு காலத்திய கல்வெட்டு பின்வருமாறு குறிப்பிடுகிறது. (சாஸ்திரி 1989: 23940).

நாட்டை சூறையாடி பாழ்படுத்தினான். நகரங்களைக் கொளுத்தினான். இளங்குழவிகள் அந்தணர் என்றும் பாராமல் அவர்களைக் கொன்றும் கன்னியரைக் கைப்பற்றி மனைவியராக்கினான். அந்தணச் சாதியை அழித்தும் அளவற்ற பொருள்களைக் கவர்ந்து கொண்டும் தன் நாட்டிற்குத் திரும்பினான்.

இவ்வாறு சூறையாடி வந்த செல்வத்தின் ஒரு பகுதியைத் தஞ்சை பெருவுடையார் கோவிலுக்கு வழங்கினான்.

சிங்கள நூலான மகாவம்சம் சிங்கள மன்னன் காட்டுக்குள் ஓடிப்போனதாகவும், உடன்பாடு செய்து கொள்ளுவதாகச் சொல்லிய சோழப்படை அவனை உயிரோடு பிடித்துக் கொண்டு, மேற்கொண்ட செயல்களை பின்வருமாறு குறிப்பிடுகிறது.

"தாங்கள் பிடித்த அரசனையும் தங்கள் கைக்குள் சிக்கிய கருவூலங்களையும் உடனே சோழ மன்னனுக்கு அனுப்பி வைத்தனர். பாதுகாப்பாக பல இடங்களில் இலங்கை முழுவதும் வைக்கப்பட்டிருந்த நினைவுச் சின்ன அறைகளை உடைத்து அவற்றிலிருந்த பொன்னாலான உருவங்களை அவர்கள் எடுத்துச் சென்றனர். அவர்கள் கண்பட்ட இடங்களிலெல்லாம் பெளத்த சமயத்து மடங்களை அழித்து இரத்தத்தை உறிஞ்சும் அரக்கர்களைப் போல் இலங்கையின் செல்வங்கள் அனைத்தையும் கொள்ளையடித்தனர்" (சாஸ்திரி, 1989: 272).

வங்காள தேசத்து மன்னன் மகிபாலனை வென்று யானைகள், பெண்கள், செல்லம் எல்லாவற்றையும் கைப்பற்றிக் கொண்டான் (மேலது: 281).

முதல் இராஜேந்திரனின் மூத்த மகனான ராஜாதிராஜன் (1018- 1054) இலங்கையின் மீது படையெடுத்து, வீரசாலமேகன் என்ற சிங்கள மன்னனை வென்றான். சிங்கள மன்னன் ஓடி ஒளிய அவனது தமக்கையையும், மனைவியையும் சிறை பிடித்ததுடன் அவனது தாயின் மூக்கை அறுத்தான் (ளு11 111; 5056).

இஸ்லாமியப் படையெடுப்பும் இந்துப் படையெடுப்பும்.
- ஆ. சிவசுப்பிரமணியன்.
http://thatstamil.oneindia.in/art-culture/visai/mar05/siva.html

பண்டைய தமிழகத்தின் நிலை இவ்வாறு இருக்க இங்கு ஏதோ பாலாறும் தேனாறும் ஓடி மக்கள் சாதி வேறுபாடுகளை மறந்து சுபிட்சமாக வாழ்ந்ததால்தான் அந்நிய கலாசார படையெடுப்புகள் தடுத்து நிறுத்தப்பட்டன என்று எதை வைத்து ஜெயமோகன் எழுதுகிறார்?

நான் மதிக்கும் ஒரு சிறந்த எழுத்தாளரிடமிருந்து இத்தகைய கருத்தை எதிர்பார்க்கவில்லை.