என்னை மிகவும் சங்கடப்பட வைத்த ஒரு நிகழ்வு!
ஒரு குடும்பத்திலேயே பல பிரிவுகளை பல பிரச்னைகளை நாம் அன்றாடம் பார்த்து வருகிறோம். மொழி, இனம், கலாசாரம் எல்லாம் முற்றிலும் மாறுபட்ட இந்திய, பாகிஸ்தான், பங்களாதேசத்து நபர்கள் ஒரே அறையில் ஒன்றாக சமைத்து சாப்பிட்டு பல ஆண்டுகள் குடும்பம் போல சகோதர வாஞ்சையோடு வாழ்ந்து வருவதை வளைகுடா நாடுகளில் சர்வ சாதாரணமாக பார்க்கலாம். பிரச்னையில்லாமல் சென்று கொண்டிருந்தாலும் எப்போதாவது சண்டைகள் வருவதும் உண்டு.
எனது கம்பெனி ஆட்களில் அவ்வாறு சண்டைகள், பிரச்னைகள் என்று ஏதாவது ஏற்பட்டால் அலுவலகத்துக்கு எங்களுடைய பாஸ் வரவழைத்து அவர்களை கண்டித்து அனுப்புவது வழக்கம். மொழிப் பிரச்னை வந்து விடக் கூடாது என்பதற்காக இந்த பஞ்சாயத்துகளில் நான் அவசியம் இருப்பேன். :-)
அவ்வாறு சில நாட்களுக்கு முன்பு ஒரு விசித்திரமான வழக்கொன்று சபைக்கு வந்தது. :-) பங்களாதேசத்தைச் சேர்ந்த ஜியாவுதீனுக்கும் நம் இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த உஸ்மான் அலிக்கும் அடிதடி தகராறு. இதற்கான பஞ்சாயத்துக்காக அந்த இருவரையும் அலுவலகத்தக்கு அழைத்திருந்தார் எங்கள் பாஸ். நான் உட்பட நால்வரும் பாஸின் அலுவலகத்தில் அமர்ந்தோம். பஞ்சாயத்து தொடங்கியது. வந்தவர்களுக்கு அரபி சரியாக தெரியாததால் என்னைப் பார்த்து பாஸ் கேட்டார்....
'நஜீர்.... என்ன பிரச்னை என்று இவர்களிடம் கேள்'
'என்னப்பா உங்க ரெண்டு பேருக்கும் பிரச்னை?' ஹிந்தியில் அவர்களிடம் கேட்டேன்.
பங்களாதேஷியான ஜியா சொல்ல ஆரம்பித்தான்... 'நஜீர் பாய்! நானும் இன்னும் மூன்று பேரும் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். அந்த நேரம் உஸ்மான் அலி அறைக்குள் நுழைந்தான். நுழைந்தவுடன் வேகமாக சப்தத்தோடு காற்றை பிரிய விட்டான். சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது இது போல் செய்தால் கொசியாக சாப்பிட முடியுமா? எனவே எனக்கு கோபம் அதிகமாகவே எழுந்து அவனை அடித்து விட்டேன்'
இதைக் கேட்டவுடன் எனக்கு சிரிப்பு வந்து விட்டது. சிரிப்பை அடக்கிக் கொண்டு 'இதற்காக அவனை அடிப்பதா?' என்று கேட்டேன்.
'இது முதல் முறை அல்ல. சிரிப்பு காட்டுவதற்காக வேண்டுமென்றே வரவழைத்து செய்தால் மனிதனுக்கு கோபம் வருமா? வராதா?' என்றான் ஜியா.
நான் சிரித்ததை கவனித்த பாஸ் 'ஏன் சிரிக்கிறே.... என்ன நடந்தது. விபரமாக சொல்' என்றார்.
அரபியில் இதற்கு என்ன வார்த்தை என்பதும் தெரியவில்லை. யோசித்து "சாப்பிட்ட உஸ்மானுக்கு கேஸ் பிரச்னை. அதனால் எழுந்தது இந்த சண்டை' என்று ஒருவாறாக சமாளித்து அனைத்தையும் அரபியில் சொல்லி முடித்தேன். இதை பொறுமையாக கேட்ட எனது பாஸ் சப்தமிட்டு சிரிக்க ஆரம்பித்து விட்டார். நாங்களும் சேர்ந்து சிரித்து விட்டோம். சிறிது நேரத்திற்கு பிறகு பாஸ் உஸ்மானை பார்த்து பேச ஆரம்பித்தார்...
'உஸ்மான்! நாம் எல்லாம் முஸ்லிம்கள். ஒரு இஸ்லாமியனுக்கு நாணம் மிக மிக அவசியம். வெட்கம் என்பது இறை நம்பிக்கையின் ஒரு பகுதி என்று நமது நபி கூறியது உனக்கு தெரியாதா? சிரிப்பு காட்டுவதற்கு எத்தனையோ விஷயங்கள் இருக்கிறது. சாப்பிடும் போது இவ்வாறு நீ செய்தது தவறு. ஒத்துக் கொள்கிறாயா?'
'ஆம். நான் செய்தது தவறுதான்'
உடன் ஜியாவை நோக்கிய பாஸ்...
'இதோ பார் ஜியா! அவன் என்னதான் தவறு செய்திருந்தாலும் அவனை அடித்தது பெரும் தவறு. நான் எதற்கு இருக்கிறேன். என்னிடம் அந்த விஷயத்தை கொண்டு வராமல் அடித்தது பெரும் தவறு. நீ அடித்ததில் தவறுதலாக எங்கும் பட்டு அவனது உயிர் போனால் அதற்கு யார் பொறுப்பு?'
'தவறுதான் சார். இனி அவ்வாறு நான் செய்ய மாட்டேன்' - ஜியா
'உஸ்மான்! அடித்ததற்காக பணம் ஏதும் வேண்டுமா?' என்று பாஸ் உஸ்மானைப் பார்த்து கேட்டார். ஏனெனில் இவ்வாறு முதலில் யார் அடிக்கிறாரோ அவர் அடி வாங்கியவருக்கு தனது சம்பளத்தின் பாதியைக் கொடுக்க வேண்டும் என்பது கம்பெனி சட்டம்.
'எனக்கு பணம் வேண்டாம்! தவறு என்னிடமும் இருக்கிறது' - உஸ்மான்
'சரி! அப்படி என்றால் இரண்டு பேரும் மன்னிப்பு கேட்டுக் கொண்டு கை கொடுத்துக் கொள்ளுங்கள்' - பாஸ்
பாஸின் கட்டளைக்கு இணங்க இரண்டு பேரும் கை கொடுத்துக் கொண்டு சிரித்தனர்.
'உஸ்மான் இனி உனக்கு ஏதும் வயிற்று பிரச்னை என்றால் கழிவறை பக்கம் சென்று விட வேண்டும். புரிகிறதா?' என்று பாஸ் சொன்னவுடன் எல்லோரும் சிரித்து விட்டோம். அன்றைய வழக்காடு மன்றம் ஒரு வழியாக முடிவுக்கு வந்தது. எல்லோரையும் சிரிக்க வைக்கிறேன் என்று பலரை சங்கடத்துக்கு உள்ளாக்கும் நபர்கள் இந்த பதிவை படித்த பிறகாவது தங்களை சரி செய்து கொள்வார்களாக!
--------------------------------------------
"இறைநம்பிக்கை என்பது அறுபதுக்கும் மேற்பட்ட கிளைகளாக உள்ளது. வெட்கம் அந்த இறை நம்பிக்கையின் ஒரு கிளையாகும்" என்று நபிகள் நாயகம் அவர்கள் கூறினார்கள்" என நபித் தோழர் அபூ ஹுரைரா அறிவித்தார்.
- ஆதார நூல்: ஸஹீஹூல் புஹாரி 9.