Followers

Saturday, November 19, 2022

உலகத்தில் ஒரு சுவர்க்கம் இருக்குமென்றால்...


 


உலகத்தில் ஒரு சுவர்க்கம் இருக்குமென்றால் அந்த சுவர்க்கத்தில் தான் நான் இருந்தேன். அல்லாஹ்வின் மார்க்கத்திற்காக அனைத்தையும் தூக்கியெறிந்து விட்டு வந்தேன்” என்றார் சசி விஜேந்திரவாக இருந்து அவ்ப் ஹனீபாவாக வாழ்ந்து கொண்டிருக்கும் அன்பு சகோதரர் அவ்ப் அவர்கள்.

 

மாத்தளையில் வசித்து வரும், அவரை நேற்று மாலை நேரில் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அப்போது தனது ஆரம்ப கால வாழ்வை பற்றி அவர் கூறிய வார்த்தைகள் தான் இவை.

 

ஆம், கடந்த 23 ஆண்டுகளுக்கு முன் இலங்கை சிங்கள சினிமா வரலாற்றில் யாரும் எட்ட முடியாத இதுவரையிலும் எட்டாத ஓர் உச்சத்தை தொட்டிருந்தவர் தான் நடிகர் சசி விஜேந்திர. முஸ்லிம் குடும்பத்தில் பிறந்தாலும், சினிமா மீது கொண்ட ஆசையினால் சினிமா துறைக்குள் நுழைந்து சிங்கள சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வர்னிக்கப்பட்டவர் அன்றைய சசி விஜேந்திர. - அவ்ப் ஹனீபா

வெறும் 10 ஆண்டுகளில் 60 க்கும் மேற்பட்ட திறைப்படங்கள் அனைத்தும் மாபெரும் வெற்றிப் படங்கள். புகழின் உச்சத்திற்கே சென்றார். தனக்காக நாடு முழுவதும், பல வெளிநாடுகளிலும் லட்சக் கணக்கான ரசிகர்களை பெற்றார். பிரபல நடிகருக்கான பல விருதுகளை பெற்றார். பல திறைப்படங்களுக்காக சிறந்த நடிப்பு, தயாரிப்பு, வசன எழுத்தாளர் என்ற பல விருதுகளை குவித்தார்.

நாடு முழுவதும் செல்லும் இடங்களிலெல்லாம் ரசிகர்களின் ஆரவாரம். கோடியில் ஒருவருக்கு கிடைக்கும் அனைத்தும் தனது 33 வயதுக்குள்ளாகவே பெற்றுக் கொண்டார்.

 

பணம், புகழ், செல்வாக்கு என எது வேண்டுமோ அனைத்தும் கிடைத்தது.

சிங்கள சினிமாவில் சசி விஜேந்திரவை தாண்டியோ, அவருக்கு நிகராகவோ எந்த நடிகரும் இவருடைய காலத்தில் இல்லை.

 

இப்படியொரு உச்சம் தொட்ட மனிதர் தனது திறைப்படங்களினால் கவரப்பட்ட தனது ரசிகை ஒருவரை திருமணம் செய்த சில நாட்களிலேயே அவருடைய வாழ்கை திசை மாறுகிறது.

 

ஆம், இஸ்லாத்தை புரிந்து ஏற்றுக்கொண்ட அந்த சகோதரி சசி விஜேந்திரவின் நடிப்பால் ஈர்க்கப்பட்டவர். திருமணத்தின் பின்னர் இஸ்லாத்தை மேலும் கற்றுக் கொள்வதற்காக இஸ்லாமிய வகுப்புக்களில் கலந்து கொண்ட பின், தன் கனவரின் சினிமா துறை இஸ்லாத்திற்கு அப்பாற்பட்டது என்பதை புரிந்து கொள்கிறார். இதை இஸ்லாம் அங்கீகரிக்க வில்லை என்பதை தெரிந்து கொண்டு தன் கனவருக்கு தினமும் அறிவுரை கூற ஆரம்பித்தார்.

 

10 வருடத்தில் 60 மேற்பட்ட வெற்றிப் படங்களை கொடுத்த சசி விஜேந்திரவுக்கு அல்லாஹ் ஹிதாயத்தை - நேர்வழியைக் கொடுத்தான்.

 

சினிமாத் துறையின் உச்சத்தில் இருந்தவர் தனது இளமையான 34 வயதிலேயே அத்துறையை விட்டும் முழுமையாக வெளியேறும் முடிவை எடுத்தார். தான் வாழ்வில் ஓடி ஓடி சம்பாதித்த அனைத்துப் பேர், புகழையும் தூக்கியெறிந்து இஸ்லாமே எனது வாழ்வு என முடிவெடுத்தார். சசி விஜேந்திர, - அவ்ப் ஹனீபாவாக மாறினார்.

 

தான் கடந்து வந்த பாதையை அவ்ப் ஹனீபா அவர்கள் விபரிக்கும் போது ஆச்சரியப்பட்டு யோசித்தேன்.

 

10 வருடத்தில் உச்சத்தை தொட்ட ஒரு மனிதன். தன்னைச் சுற்றி எப்போதும் ரசிகர்கள், ரசிகைகளை கொண்ட ஒருவர். எங்கு போனாலும் தன்னை தெரியாதவர் இல்லை எனும் அளவுக்கு அறிமுகமானவர். பேர், புகழ், பணம், அந்தஸ்து அனைத்தையும் இம்மார்க்கத்திற்காக துறந்தாரே... எப்படி முடிந்தது? அல்லாஹ்வின் கருணையும், அருளும் தான் அவரை நேர்வழியில் கொண்டு சேர்த்தது. - அல்ஹம்து லில்லாஹ்

 

இந்நாட்டின் மிகப் பெரும் புகழ்பெற்ற ஒருவரான சசி விஜேந்திரவா இவர் என்று யோசிக்கும் அளவுக்கு ஆடம்பரமற்று இருக்கிறார், அமைதியான தோற்றம். பண்பான மனிதர், நிம்மதியான வாழ்வை கழிக்கிறார். அல்ஹம்து லில்லாஹ்.

இன்றைய நாட்களில் சமூக வலைதளங்களில் சினிமாவுக்கும், வீனான காரியங்களுக்கும் பின்னால் சென்று வாழ்வை இழந்து கொண்டிருக்கும் இளைஞர்கள், இளம் பெண்களுக்கும் இவருடைய வாழ்க்கை அனுபவம் கொண்டு சேர்க்கப்பட வேண்டும்.

 

சினிமாவுக்கும், போதைக்கும் அடிமையாகி வாழ்வை இழந்து கொண்டிருக்கும் அனைவருக்கும் இவருடைய அனுபவப் பகிர்வுகள் மாற்றத்தை கொடுக்க வாய்ப்பாக அமையும் இன்ஷா அல்லாஹ்.

 

பள்ளிவாயல் நிர்வாகங்கள் இவரை அழைத்து ஊர் மக்களுக்கு ஊரிலுள்ள ஆண்கள், பெண்கள், மாணவர்கள், இளைஞர்களுக்கென நிகழ்ச்சிகளை நடத்த முயற்சிக்க வேண்டும்.

 

பாடசாலை மாணவர்களுக்கு இவரை அழைத்து Motivation நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு மாணவர் சங்கங்கள், ஊர் முக்கியஸ்தர்கள் முனைப்பெடுங்கள்.

இவருடைய அனுபவங்கள், இவர் கடந்து வந்த பாதை பலருக்கும் பலனளிக்கும். இன்ஷா அல்லாஹ்

 

இவர் பற்றிய விளக்க வீடியோ ஒன்றுடன் விரைவில் சந்திக்கிறேன். இன்ஷா அல்லாஹ்.

 

அன்புடன்,

ரஸ்மின் MISc

 

No comments: