Followers

Saturday, June 30, 2018

உறவினருடன் ஒப்படைத்த தவ்ஹீத் ஜமாஅத்....

"நோய்வாய்ப்பட்ட பெண்மணியை மீட்டு உறவினருடன் ஒப்படைத்த தவ்ஹீத் ஜமாஅத் தக்கலை கிளையின் மனித நேயப்பணி"

மேலப்பாளையம் சார்ந்த ஒரு முஸ்லிம் பெண்மணி ஆதரவற்ற நிலையில் தக்கலை தர்கா முன்பு உடல் ரொம்பவும் பலஹீனமான நிலையில் உள்ளார் என்றும் அநாதை பிணமாகும் முன்பு ஜமாஅத்தார்கள் அல்லது சமூக ஆர்வலர்கள் வந்து மீட்டு செல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம், இந்த முஸ்லிம் சகோதரிக்கு உதவவும்..

என்று இப்படி ஒரு வாட்சப் செய்தி தக்கலை மற்றும் குமரி மாவட்டத்தில் வைரலாக பரவியது. இந்த வாட்சப் செய்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவட்ட தலைவர் சகோதரர் ஷேக் அலியின் (19/06/18 அன்று) கவனத்திற்கு வரவே TNTJ மாவட்ட மருத்துவ அணி செயலாளர் சகோதரர் ஹஃபீஸிடம் இது பற்றி விசாரிக்க கோரினார்.

சகோதரர் ஹஃபீஸ், TNTJ தக்கலை கிளை செயலாளர் சகோதரர் செய்தலி, து.தலைவர் பீர் முஹம்மது, கிளை து.செயலாளர் சகோதரர் பாஸிம் மற்றும் கிளை சகோதரர்கள் உடனடியாக தக்கலை பீரப்பா தர்ஹா முன்பு நோய்வாய்ப்பட்டு உடல் மிக பலஹீனமான நிலையில் படுத்திருந்த முஸ்லிம் பெண்மணியை பாதுகாப்பாக மீட்டெடுத்தனர்.

விசாரித்ததில் மேலப்பாளையம் சார்ந்த பாத்திமா பீவி என்ற 30 வயது பெண்மணி ரமலான் நோன்பு 20 முதல் தற்போது வரை தக்கலை பீரப்பா தர்கா முன்பு உள்ளார். அவரது கையில் ருபாய் 1622 பணமும் வைத்திருந்தார்.

நான்கைந்து நாட்களாக சாப்பிடாமல் உடல்நிலை சரியில்லாமலும் மிக சோர்வாக பரிதாப்படும் நிலையில் இருப்பதை கண்டு உடனடியாக தவ்ஹீத் ஜமாஅத் ஆம்புலன்ஸை வரவழைத்து தக்கலை அரசு மருத்துவனையில் சேர்த்தனர்.

அரசு மருத்துவமனை மருத்துவர் சகோதரி பாத்திமாவின் உடல் பரிசோதனை செய்த பின் தொண்டையில் தைராய்டு வீக்கம் அதிகமாக இருப்பதாலும் நான்கு அல்லது ஐந்து நாள் தொடர்ச்சியாக நீராகாரத்தை தவிர வேறு எதையும் உண்ணாததாலும் அதுமட்டுமின்றி மிக குறைந்த இரத்த அழுத்தம் (BP) இருப்பதாலும் முதலுதவி அளிக்கப்பட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரியில் உடனடியாக அட்மிட் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

அதனடிப்படையில் மீண்டும் ஆம்புலன்ஸில் ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரிக்கு கொண்டு சென்று மிக சிரமப்பட்டு அட்மிட் செய்து சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த சகோதரியின் உறவினருக்கும் நடந்த விசயங்களை எடுத்து கூறி தகவல் கொடுக்கபட்டது.

மேலப்பாளையத்திலிருந்து பாத்திமாவின் உறவினர்கள் வந்து மருத்துமனையிலிருந்து அழைத்து சென்று அவர்களின் பாதுகாப்பில் அவர்கள் ஊரில் மருத்துவ சிகிச்சை கொடுக்கும் முடிவோடு அழைத்து சென்றனர்.

"அணு அளவு நன்மை செய்தவர் அதைக் காண்பார்." என்ற அல்லாஹ்வின் வாக்கை அடிப்படையாக கொண்டு, அல்ஹம்துலில்லாஹ் என்று கூறியவாறே மன திருப்தியுடன் அல்லாஹ் இந்த மனித நேயப்பணியை பொருந்தி கொள்ள துவா செய்தவாறு தக்கலை கிளை சகோதரர்கள் கலைந்து சென்றனர்.

".... நிலையான நல்லறங்களே உமது இறைவனிடம் கூலியில் சிறந்ததும், எதிர்பார்க்கப்படுவதில் சிறந்ததுமாகும். " திருக்குர்ஆன் 18:46

#குறிப்பு : மறுநாளே இந்த பெண்மணி வஃபாத்தாகி விட்டார் என்று தகவல் வந்தது. (இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்)

இவர் சேர்த்து வைத்த பணத்தை பள்ளிக்கோ அல்லது மதர்ஷாவிற்கோ பயன்படுத்தி கொள்ளுமாறு இறந்த பெண்மணியின் உறவினர்கள் கூறிவிட்டார்கள், அந்த பணத்தை
வாங்க மறுத்துவிட்டார்கள்.

எனவே அதை தலைமையின் முதியோர் இல்லத்திற்கு மவுத்தான பெண்மணியின் பணம் (1622.50 பைசா)  பில் போட்டு  அனுப்பபட்டது.

தக்கலை ஆட்டோ கபீர்





Dr Ashraf Ali Abdul Shukkur M.B.B.S.,D.Ch.,

தமிழக அரசின் சிறந்த மருத்துவர்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கபட்ட சகோதரர் Dr Ashraf Ali Abdul Shukkur M.B.B.S.,D.Ch., அவர்களுக்கு 28/6/18 சென்னையில் நடைபெற்ற விழாவில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் விருது மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.....
வாழ்த்துவோம்


வெளிநாட்டில் வேலை பார்க்கும் தகப்பன்மார்களுக்கு சமர்ப்பணம்.

வெளிநாட்டில் வேலை பார்க்கும் தகப்பன்மார்களுக்கு சமர்ப்பணம்.
கத்தாரில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியராக பணிபுரிகிறார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தனது குழந்தைகளை சந்திக்கிறார். அவர் வருவது அவரது மனைவிக்கு மட்டுமே தெரியும். ஒரு குறிப்பிட்ட நாளில் தன் மனைவியிடம் சொல்லி குழந்தைகளை ஒரு ரெஸ்டாரண்டுக்கு அழைத்து வரச் சொல்கிறார். அங்கே தானே சர்வராக மாறி,குழந்தைகளுக்குத் தெரியாமல் உணவு பரிமாறுகிறார்....
எமோஷனல் மொமென்ட்......


*அல்- *ஹிதாயா இலவச டியூஷன் சென்டர்*

*அல்- *ஹிதாயா இலவச டியூஷன் சென்டர்*
கலந்துகொண்ட நபர்கள்:127
தேதி: *29/06/2018*
நேரம்: மாலை 7.00 மணி முதல்இரவு 8.30 வரை*
இடம்: *மஸ்ஜிதுல் இக்லாஸ் பள்ளிவாசல்*
*ஆசிரியர்கள்: சிந்தா மதார், கணி பக்கீர்,ஆலி அசன், இஸ்ஹாக், நாகூர், பிச்சை மைதீன்*
கிளை : *TNTJ பத்தமடை & கேசவசமுத்திரம்*.
மாவட்டம்: *நெல்லை (கிழக்கு) மாவட்டம்*.
---------------------------------------
பள்ளி வாசல்கள் என்பது வெறும் தொழும் இடம் மட்டும் அல்ல. மாணவ மாணவிகள் கல்வி கற்கும் இடமாகவும் நபிகள் காலத்தில் இருந்துள்ளது. இதனால் இடப் பற்றாகுறையும், பொருளாதார விரயமும் மட்டுப் படுத்தப்படும். தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களும் இந்த நடைமுறையை அமுல்படுத்துவார்களாக!



Thursday, June 28, 2018

மரங்களின் அருமை தெரிந்த அரசு மரத்தை பிடுங்கி நடுகிறது

மரங்களின் அருமை தெரிந்த அரசு மரத்தை பிடுங்கி நடுகிறது

மரங்களின் அருமை தெரியாத அரசு மரத்தை பிடுங்கி எறிகிறது.


தவ்ஹீத் ஜமாத்தினருக்கு சில படிப்பினைகள் உண்டு!

தவ்ஹீத் ஜமாத்தினருக்கு சில படிப்பினைகள் உண்டு!

கடந்த 30 வருடங்களாக தமிழகத்தில் பட்டி தொட்டியெங்கும் ஏகத்துவ கொள்கையை எடுத்துச் சென்றோம். அடி உதைகள் வாங்கினோம். ஊர் விலக்கம் செய்யப் பட்டோம். நண்பர்களால் வெறுக்கப்பட்டோம். சொந்தங்களால் தூரமாக்கப்பட்டோம். நெருங்கிய உறவுகள் விருந்துகளையும் நபி வழிக்கு மாற்றமாக இருந்ததால் புறக்கணித்தோம். வெயில் பனி என்று பாராமல் ஐந்து வேளை பள்ளியில் ஜமாத்தாக சென்று தொழும் பழக்கத்தை உண்டாக்கிக் கொண்டோம். இளம் வயதிலேயெ அழகிய தாடியை வைக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டோம். தர்ஹா, கத்தம், ஃபாத்திஹா, மவுலாது என்று பித்அத் ஆன அனைத்தையும் தூரமாக்கினோம். இதை எல்லாம் பார்த்த ஊர் மக்கள் ஏகத்துவ கொள்கையை ஏற்காத மக்கள் கூட ஏகத்தவ வாதிகளை கண்ணியமாக பார்த்தார்கள்: மரியாதை செய்தார்கள்.

தமிழகத்தில் மிகச் சிறந்த சமுதாயத்தை உருவாக்கிய இந்த தருணத்தில்தான் தவ்ஹீத்வாதிகளிடம் சைத்தான் தனது வேலையை சிறுக சிறுக ஆரம்பித்தான். கிராமத்தில் நாம் மட்டும்தான் சத்தியத்தில் இருக்கிறோம்: மற்ற அனைவரும் வழிகேட்டில் உள்ளனர் என்ற மமதை ஒரு சில ஏகத்துவவாதிகளிடம் தலை தூக்க ஆரம்பித்தது. அவர்களை ஏளனமாக பார்க்க ஆரம்பித்தனர். கிண்டலடிக்க ஆரம்பித்தனர்.

என்னை பொருத்த வரை தவ்ஹீத் மர்கஸ், சுன்னத் ஜமாத் பள்ளி என்று எங்கு நேரம் கிடைக்கிறதோ அங்கு தொழுது கொள்வேன். ஒரு முறை காலை நேர தொழுகையான ஃபஜ்ர் தொழுகையை எங்கள் வீட்டுக்கு அருகாமையில் உள்ள சுன்னத் ஜமாத் பள்ளியில் தொழுது விட்டு வெளியே வந்தேன். அதே நேரம் தவ்ஹீத் மர்கஸில் தொழுது விட்டு வந்து கொண்டிருந்த நண்பர்கள் என்னிடம் 'எப்படி பாய் சுன்னத் ஜமாத் பள்ளியில் தொழுகிறீர்கள்' என்று கேட்டனர்.

'தவ்ஹீத் மர்கஸ் வெகு தொலைவில் உள்ளது. சில நேரம் ஜமாத் கிடைப்பதில்லை. நமது கிராமத்தில் உள்ள எல்லா பள்ளிகளிலும் பல ஆண்டுகளாக தொழுது வருகிறேன்.'

'பித்அத் அதிகம் நிறைவேறும் பள்ளியில் நாம் தொழலாமா?'

'நான் எந்த பித்அத்திலும் கலந்து கொள்வதில்லை. தவ்ஹீத் முறைப்படித்தான் தொழுகிறேன்.'

'இணை வைக்கும் இமாமை பின்பற்றலாமா?'

'இந்த பள்ளியின் இமாம் இணை வைப்பதை நான் பார்க்கவில்லை. அப்படி பகிரங்கமாக பார்த்தால் விலகிக் கொள்வேன்'

'இருந்தாலும் பாய்... நீங்கள் தொழுவது எங்களுக்கு கொஞ்சம் கூட பிடித்தமில்லை' என்று உரையாடல் முடிவுக்கு வந்தது.

என்று நாம் தனிப்பள்ளி கட்டிக் கொண்டு போனோமோ அன்று முதல் நமது பிரசாரத்துக்கு மிகப் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. பித்அத் வாதிகளுக்கு நாம் தனியாக சென்றது மிகவும் வசதியாக போய் விட்டது. தனிப் பள்ளி கட்டிக் கொண்டு சென்றதில் பல நன்மைகளும் விளைந்துள்ளதை மறுப்பதற்கில்லை.

அடுத்து இணையத்தில் தவ்ஹீத் ஜமாத் தலைவர்களைப் பற்றி ஏதேனும் விமரிசனம் வைத்தால் உடன் ஒருமையில் பேச ஆரம்பித்து விடுகின்றனர் சில தவ்ஹீத்வாதிகள். அவர்களை முஸ்லிம்கள் இல்லை என்றே ஓரங்கட்டும் நிலைக்கு சென்று விடுகின்றனர். அவர்கள் அறியாமையில் உள்ளனர். தெரிந்த நாம்தான் அவர்களுக்கு பக்குவமாக ஏகத்துவத்தை எத்தி வைக்க வேண்டும். 'நாம் உண்மையைத்தானே சொல்கிறோம்: நம்மை எதிர்க்கிறார்களே' என்று கோபப்பட்டு வார்த்தைகளை கொட்ட ஆரம்பித்து விடுகின்றனர்.

அதே போல் டிஎன்டிஜே தலைமையின் நிர்வாகம் சம்பந்தமாக ஏதேனும் கேள்விகள் வைத்தால் தவ்ஹீத் ஜமாத்திலிருந்தே தூக்கி விடுகின்றனர்.  கேள்விகள் பிறந்தால்தான் சிறப்பான பதில்கள் நமக்கு கிடைக்கும். நம்மை சீர்படுத்திக் கொள்ள ஏதுவாகும். நம்மை எல்லோரும் கவனித்துக் கொண்டுள்ளார்கள் என்ற எண்ணம் வந்தாலே பல தவறுகள் மறைய வாய்ப்புண்டு. கேள்வி கேட்பவர்களை எல்லாம் நீக்கிக் கொண்டே போனால் முடிவில் யார் மிஞ்சுவர்.

'நாங்கள் மட்டுமே சத்தியத்தில் இருக்கிறோம்: நாங்கள் மட்டுமே நேர்மையாளர்கள்: இறைவனுக்கு பயந்தவர்கள்: மற்றவர்கள் அனைவரும் வழிகேட்டில் உள்ளனர்' என்ற எண்ணம் ஒரு சில ஏகத்துவ வாதிகளிடம் மிகைத்ததாலேயே இறைவன் இந்த ஜமாத்துக்கு தற்போது சோதனையை கொடுத்துள்ளான். பாக்கர், அல்தாஃபி, பிஜே, சையத் இப்றாஹிம் என்று வரிசையாக பல பெரும் தலைகள் தவறு செய்து வெளியாக்கப்பட்டுள்ளனர். எல்லோருமே ஆதமுடைய மக்கள்: யாரும் இங்கு புனிதர்கள் கிடையாது: என்பதை உணர்த்துவதற்காகவே இறைவன் செய்த ஏற்பாடாகவே இதனை நான் பார்க்கிறேன். இதனால் தவறு செய்தவர்களை நியாயப்படுத்த இங்கு வரவில்லை. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் இறைவனிடத்தில் தண்டனையை பெற்றுக் கொள்வார்: அவர் செய்த நன்மைக்கான கூலியையும் பெற்றுக்  காள்வார்.

எனவே ஆணவம், அகங்காரம், திமிர் போன்ற சைத்தானிய குணங்களை நீக்கி பணிவு, அடக்கம், அன்பு கொண்டு நாம் நமது சகோதரர்கள் இடத்தில் ஏகத்துவத்தை கொண்டு செல்வோம். கண்டிப்பாக இறைவன் நமக்கு வெற்றியை கொடுப்பான்.

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து பேசினார். அப்போது அவரது தோள் புஜங்கள் நடுங்கின. இதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், சாதரணமாக இரு! நான் மன்னன் அல்லன். உப்புக் கண்டத்தை சாப்பிடும் பெண்ணின் பிள்ளை தான் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூமஸ்வூத் (ரலி)
ஹதிஸ் என் : 3303
நூல் : இப்னுமாஜா

"(முஹம்மதே!) அல்லாஹ்வின் அருள் காரணமாகவே அவர்களிடம் நளினமாக நீர் நடந்து கொள்கிறீர். முரட்டுத்தனம் உடையவராகவும் கடின உள்ளம் உடையவராகவும் நீர் இருந்திருந்தால் அவர்கள் உம்மை விட்டு ஓடியிருப்பார்கள். 

அல்குர்ஆன் 3 : 159

"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், "ஆயிஷா! அல்லாஹ் மென்மையானவன். மென்மையான போக்கையே அவன் விரும்புகிறான். வன்மைக்கும் பிறவற்றுக்கும் வழங்காததையெல்லாம் அவன் மென்மைக்கு வழங்குகிறான்" என்று கூறினார்கள்.
நூல் : முஸ்லிம் 5055

நாகரிகம் மற்றும் கல்விப் பணிகளுக்கு இஸ்லாம் என்றுமே தடை போட்டதில்லை!


Wednesday, June 27, 2018

எனது குரல் இன்னும் வலிமையாக மாறும் என்று நடிகர் பிரகாஷ் ராஜ்

எனக்குக் கொலை மிரட்டல் விடுத்தால், எனது குரல் இன்னும் வலிமையாக மாறும் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
முற்போக்கு எழுத்தாளர் கவுரி லங்கேஷ் மூடபழக்கங்களுக்கும், இந்துத்துவா வலதுசாரிகளுக்கும் எதிராக எழுதி வந்தார். இதனால், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மர்மநபர்களால் அவரின் வீட்டு முன் கவுரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்தச் சம்பவத்துக்கு பின், நடிகர் பிரகாஷ் ராஜ் இந்துத்துவா அமைப்புகளுக்கும் எதிராகவும், பாஜகவுக்கு எதிராகவும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். சிறுபான்மையினர் தாக்கப்படும்போதும், உரிமைகள் பறிக்கப்படும் போதும் ட்விட்டரில் பிரதமர் மோடிக்கு பல்வேறு கேள்விகளைக் கேட்டார். கர்நாடகத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக மாநிலம் முழுவதும் பிரச்சாரம் செய்தார் நடிகர் பிரகாஷ் ராஜ்.
இந்நிலையில், சமீபத்தில் கவுரி லங்கேஷ் கொலையில் சந்தேகிக்கப்படும் 6 பேரை சிறப்பு புலனாய்வுப் பிரிவினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட டைரியில் அடுத்தடுத்து யாரைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளனர் என்கிற விவரம் தெரியவந்தது. அதில் நடிகர் கிரிஷ் கர்நாட், நடிகர் பிரகாஷ் ராஜ், எழுத்தாளர்கள் உள்ளிட்டோர் பெயர்கள் இடம் பெற்று இருந்தது.
இது குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் ட்விட்டரில் கருத்துத் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:
பெங்களூருவில் முற்போக்கு சிந்தனையாளர்,பத்திரிகையாளர் கவுரி லங்கேஷை திட்டமிட்டு கொலை செய்தவர்கள், நடிகர் பிரகாஷ் ராஜையும் கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்களாம் சிறப்பு புலனாய்வு பிரிவு கூறுகிறது. என்னுடைய குரலை ஒடுக்கும் வகையிலான மிரட்டல். ஆனால், இப்படி மிரட்டல்கள் வரும்போது, என் குரல் மேலும் வலிமைபெறும். கோழைகளே, நீங்கள் இந்த வெறுப்பு அரசியலில் இருந்து எப்போது வெளியேறப்போகிறோம் என நினைத்துப்பார்க்கிறீர்களா.  இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tamil hindu daily
27-06-2018


மாட்டுக்கறி சாப்பிட்ட விவேகானந்தர்!

மாட்டுக்கறி சாப்பிட்ட விவேகானந்தர்!
மகாராஷ்டிரா, அரியானாவில் பா.ஜ.க. ஆட்சிகள், மாட்டுக்கறி விற்பதோ சாப்பிடுவதோ தண்டனைக்குரிய குற்றம் என்று சட்டம் கொண்டு வந்துவிட்டன. மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்தியா முழுமையும் மாட்டுக்கறிக்கு தடை விதிக்கும் சட்டத்தைக் கொண்டு வரவேண்டும் என்று கூறுகிறார். மகாராஷ்டிராவில் பார்ப்பன முதல்வர் தலைமையில் நடக்கும் பா.ஜ.க. ஆட்சி, பசுக்களை காளைகளை மட்டும் வெட்டக் கூடாது என்று சட்டம் கொண்டு வந்திருக்கிறது. எருமைகளுக்கு இது பொருந்தாது. ‘எருமை’ சூத்திர, பஞ்சமப் பிரிவைச் சார்ந்தது. ‘பசு’, பிராமண, சத்திரியப் பிரிவு. பார்ப் பனர்கள் எப்போதும் எருமை மாடுகளை வளர்ப்பது இல்லை. பசு மாட்டைத்தான் வளர்ப்பார்கள்.
பார்ப் பனர்கள் மாட்டுக்கறியை சுவைத்து சாப்பிட்டதை, ஏராளமான சுலோகங்கள் வழியாக வேதங்கள் உறுதிப்படுத்துகின்றன. யாகங்கள் என்ற பெயரால் ஆரியர்கள் ஆடு மாடுகளை தீயில் போட்டுக் கொளுத்தியதாலும், அந்த உணவை விரும்பி சாப்பிட்டதாலும் விவசாயத்துக்குத் தேவையான கால்நடைகள் கிடைக்காமல் போயின. இந்த நிலையில்தான் புத்தர், யாகங்களுக்கும், ஆரிய பார்ப்பனர்களுக்கும் எதிராக மக்களை திரட்டினார். புத்த மார்க்கம் செல்வாக்குப் பெற்றதால், பார்ப்பனர்களின் வேத மதம் கடும் நெருக்கடிகளை எதிர் கொண்டது. இந்த நிலையில் புத்த மார்க்கத்தில் ஊடுருவி, அழித்த ஆரிய பார்ப்பனர்கள், புத்த மார்க்கம் வலியுறுத்திய மக்களிடம் செல்வாக்குப் பெற்றிருந்த கொள்கைகளை தங்கள் வசமாக்கிக் கொண்டனர். பார்ப்பனர்கள் மாட்டிறைச்சியை சாப்பிடாமல் நிறுத்தியதும் இந்தக் காலகட்டத்தில் தான். அம்பேத்கர் உள்ளிட்ட பல வரலாற்று ஆசிரியர்கள் இதைப் பதிவு செய்துள்ளனர்.
மாட்டுக் கறி உணவுப் பழக்கத்தை கைவிட முடியாமல் திணறியதால்தான் அதன் நினைவாக பார்ப்பனர்கள் மாட்டுப் பாலையும், மாட்டு ‘மூத்திரத்தை’யும் (கோமியானம்) உணவாக்கிக் கொண்டனர் என்று அம்பேத்கர் கூறுகிறார். பயன்படக்கூடிய எந்த விலங்கையும் எவரும் வெட்ட மாட்டார்கள். அவை பயன்படாத நிலையில் உணவுக்காக வெட்டப்படு கிறது. மாடுகளை வெட்டக் கூடாது என்று சட்டம் போடுகிறவர்கள் பயன்படாமல் போகும் அடி மாடுகளை எந்த வழியில் பாதுகாப்பது என்பது குறித்து கவலைப்படவில்லை. ஆங்காங்கே இந்த மாடுகள் கவனிப்பாரற்று, நோய்க்குள்ளாகி வீதிகளில் செத்து விழும் நிலைதான் உருவாகும். குடும்பத்தில் முதியவர்களையே புறக்கணிக்கும் சமூகம் இது; பயன்படாத மாடுகளையா பாதுகாக்கப் போகிறது?
சங்பரிவாரங்கள் போற்றும் இந்துமதத் துறவி விவேகானந்தர், மாட்டிறைச்சிப் பற்றிய தனது கருத்துகளைப் பதிவு செய்துள்ளார். ‘இராமன்-சீதை’ மாட்டிறைச்சியை விரும்பி உண்டனர் என்று கூறும் விவேகானந்தர், மாட்டிறைச்சி உணவை நிறுத்தி யதால்தான், இந்த நாடு ஆண்மை இழந்து போனது என்றும் கூறுகிறார். 19ஆம் நூற்றாண்டு இறுதியில் வடமாநிலங்களில் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, பஞ்சத்தில் மனிதர்கள், கால்நடைகள் ஏராளமாகப் பலியானபோது பார்ப்பனர்கள் பசு மாட்டைக் காப்பாற்ற ‘கோ ரக்ஷன் சமிதி’ என்ற அமைப்பை உருவாக்கி, விவேகானந்தரிடம் உதவி கேட்க வந்தனர். மனிதர்களைக் காப்பாற்றாமல் மாடு களைக் காப்பாற்ற வந்துவிட்டீர்களா? என்று கடுமை யாகப் பேசி அவர்களை விரட்டினார், விவேகானந்தர்.
விவேகானந்தரே மாட்டுக்கறி சாப்பிடுவதை எதிர்க்கவில்லை.
“உடலை வருத்தி உழைக்கும் மக்கள் மாட்டுக் கறியை சாப்பிட அனுமதிக்க வேண்டும். அதே நேரத்தில் பக்தர்களாக வாழ விரும்புவோர் மாட்டுக்கறி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்” (விவேகானந்தர் உரை தொகுப்பு-தொகுதி 4).
“ஒரு காலத்தில் ‘பிராமணர்கள்’ மாட்டுக்கறி சாப்பிட்டார்கள். ‘சூத்திரர்’களை திருமணம் செய்து கொண்டார்கள். ‘பிராமணர்’களுக்கு சூத்திரர்கள் மாட்டுக்கறி உணவை சமைத் தார்கள்” (விவேகானந்தர் உரை தொகுப்பு-தொகுதி 9).
“நான் சொல்வதைக் கேட்டால் உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கும். நமது பழங்கால பழக்க வழக்கத்தின்படி மாட்டுக் கறியை சாப்பிடாதவன் நல்ல இந்துஅல்ல.” (He is not a good Hindu whodoes not eat beef) - (தொகுதி-3 - அமெரிக்காவில் கலிபோர்னியாவில் ‘ஷேக்ஸ்பியர் கிளப்பில்’ பிப்.2, 1900 அன்று ஆற்றிய உரை).
- இப்படி ஏராளமான சான்றுகளை அடுக்கிக் காட்ட முடியும். இவை எல்லாவற்றையும்விட விவேகானந்தரே மாட்டிறைச்சி சாப்பிட்டார் என்பதற்கு வரலாற்றுச் சான்றுகள் உள்ளன.
அமெரிக்காவில், ‘உலக மதங்களின் நாடாளு மன்றம்’ என்ற அமைப்பு செயல்பட்டது (1893). அந்த அமைப்பில், விவேகானந்தர் ஆற்றிய உரையைத்தான் சங்பரிவாரங்கள் சிலாகித்துப் பெருமை பேசுகின்றன. இந்த நாடாளுமன்றத்தின் தலைவராக இருந்தவர் டாக்டர் ஜான் ஹென்றி பாரோஸ்எனும் பாதிரியார். அவர் எழுதிய ‘ஆசியாவில் கிறிஸ்தவர்களின் ஆக்கிரமிப்பு’ என்ற நூலில், கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
“மதங்களுக்கான நாடாளுமன்றத்தின் முதல் அமர்வு முடிந்த பிறகு, நான் விவேகானந்தருடன் உணவு விடுதிக்கு சாப்பிடச் சென்றேன்; அந்த உணவு விடுதி, நிகழ்ச்சி நடந்த ‘ஆர்ட் இன்ஸ்டிடியூட்’ என்ற நிறுவனத்தின் தரைதளத்தில் இருந்தது. ‘என்ன சாப்பிடுகிறீர்கள்? என்று கேட் டேன். ‘எனக்கு மாட்டிறைச்சி கொடுங்கள்’ என்று விவேகானந்தர் கேட்டார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
அவர் மட்டுமல்ல, சேரன்மாதோவி குருகுலத்தில், ‘பிராமணர்’களுக்கு மட்டும் தனி இடத்தில் சாப்பாடு போட்டு, பெரியாரின் எதிர்ப்பைச் சந்தித்த வ.வே.சு. அய்யர், இலண்டனுக்கு படிக்கச் சென்றபோது, பொருளாதார சிக்கனம் கருதி, ‘மாட்டிறைச்சி’யை சாப்பிட்டதாக ஒப்புக் கொண்டிருக்கிறார். வைதீகத்தில் ஊறித் திளைத்தப் பார்ப்பனர்கள்கூட, தங்களின் நலன் என்று வரும்போது எந்த சாஸ்திர மீறலுக்கும் தயாராகவே இருக்கிறார்கள். ஆனால், உழைக்கும் மக்களின் உணவை, அவர்களின் தொழிலை தடைப்படுத்துகிறார்கள்.
இந்த நிலையில், அரசியல் சட்டத்தின் வழிகாட்டு நெறிகளில் (Directive Principles of State Policy) 48ஆவது பிரிவு - பசுக்களையும் கன்றுகளையும் வதை செய்யக் கூடாது என்று குறிப்பிட்டிருப்பதாக மாட்டுக்கறி தடையை நியாயப்படுத்தும் ‘சங் பரிவாரங்கள்’ கூறுகின்றன. ‘தினமணி’ நாளேடும், தனது தலையங்கத்தில் இதை குறிப்பிட்டுள்ளது. வழிகாட்டும் நெறி என்பது எதிர்காலத்தில் அரசுக்கான கொள்கை வழிகாட்டி! அதில்கூட ‘வதை செய்யக்கூடாது’ என்ற சொற்றொடரைத்தான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. உண்மையில் பசு, இந்துக்களால் வணங்கப்படும் தெய்வம் என்ற கண்ணோட்டத்தில் வழிகாட்டும் நெறி இதைக் குறிப்பிடவில்லை. அத்துடன், பசு மாட்டை மட்டுமே தான் வெட்டுவதற்கு தடைவிதிக்க வேண்டும் என்றும் கூறவில்லை. இந்த வரலாற்று உண்மைகளை சங்பரிவாரங்களும் பார்ப்பன ஊடகங்களும் திட்டமிட்டு மறைத்து வருகின்றன.
இந்தப் பிரச்சினை குறித்து அரசியல் நிர்ணய சபையில் 14.11.1949 அன்று விவாதிக்கப்பட்டது. இந்த விவாதங்கள் குறித்த பதிவுகள் அரசியல் நிர்ணய சபை விவாதங்களின் 11ஆவது தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. 48ஆவது பிரிவில் இடம் பெற்றுள்ள வாசகம் இதுதான். “வேளாண்மை மற்றும் கால்நடை பராமரிப்புக்கு நவீன அறிவியல் முறை குறித்து முயற்சி மேற்கொள்ளப்படவேண்டும். குறிப்பாக உயர்ரக கால்நடைகளை பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் பசுக்கள், கன்றுகள் மற்றும் பால் தரும் விலங்குகள், பாரம் இழுக்கும் கால் நடைகள் ஆகியவற்றைக் கொல்வதை தடுப்பதற்கும் வேண்டிய முயற்சிகளை அரசு எடுக்க வேண்டும்” என்று 48ஆவது பிரிவு கூறுகிறது. கால்நடைகள் பாரம் இழுக்கும் விலங்குகள் உள்பட. அனைத்து பயன்படக்கூடிய விலங்குகளுக்குமான பாதுகாப்பு குறித்துதான் இந்தப் பிரிவு பேசுகிறது. ஆனால், அரசியல் நிர்ணய சபையில் இடம் பெற்றிருந்த சில மதவாதிகள், மதத்தின் கண்ணோட்டத்தில் ‘பசு’வை தெய்வமாகக் கருதி அதை வெட்டக் கூடாது என்ற கருத்தை இந்த பிரிவுகளுக்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என்று விரும்பினார்கள். எனவே இந்த வாசகங்கள் மதத்தின் கண்ணோட்டத்தை ஏற்காமல் நீர்த்துப் போகச் செய்துவிட்டன என்று தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்து, இரண்டு உறுப்பினர்கள் இதற்கு திருத்தங்களைக் கொண்டு வந்தனர். ஒருவர் பேராசிரியர் சிவன்லால் சக்சேனா; மற்றொருவர் சேக்கோவிந்ததாஸ். இந்துக்கள் புனித தெய்வமாகக் கருதும் பசுக்களை கொல்லக் கூடாது என்ற சொற்றொடரை இணைக்க வேண்டும் என்று சேக் கோவிந்ததாஸ்கொண்டு வந்த திருத்தத்தை அரசியல் நிர்ணய சபை ஏற்கவில்லை. இப்படி ஒரு பிரிவை சேர்த்ததே - உறுப்பினர்கள் விரும்புவது போல மதக் கண்ணோட்டத்தில் அல்ல; பயன் பாட்டுக் கண்ணோட்டத்தில்தான் என்று அரசியல் நிர்ணய சபை இதற்கு விளக்கமளித்தது.
“We have particularly substituted this article for, the article which other members wanted from a religious point of views; It is now simply a utilitarian measure”-என்பதுதான் அரசியல் நிர்ணய சபை தந்த விளக்கம்.
அதனால்தான் விவசாயத்துக்கு பயன்படாமல், பால் கறப்பது நின்று போன பயன்படாத அடி மாடுகளை வெட்டி உணவாக்கலாம் என்ற பயன்பாட்டுக் கண்ணோட்டத்தில் (ரவடைவையசயைn அநயளரசந) உணவாகவும் ஏற்றுமதிப் பொருளாகவும் பயன் படுத்தப்படுகிறது. ஒட்டுமொத்த கால்நடைகளிலும், ‘பசு’ மட்டுமே ‘புனிதம்’ என்றும் அதை வெட்டக் கூடாது என்றும் மதவாதக் கண்ணோட்டத்தில் சட்டம் போடும் ‘இந்துத்துவா’ ஆட்சியாளர்கள், இதற்கு நேர்மாறாக பயன்பாட்டுக் கண்ணோட்டத் தில் உருவான வழிகாட்டு நெறியின் 48ஆவது பிரிவை தங்களுக்கு ஆதரவாக எடுத்துக் கூறுவது மிகப் பெரும் மோசடி ஆகும். பயன்படக்கூடிய கால்நடைகளை நோயிலிருந்து காப்பாற்றத் தேவையான மருத்துவ உதவிகளை மருத்துவ வல்லுனர்களின் துணையோடு வழங்கிட வேண்டும் என்று அரசியல் சட்டத்தின் 7ஆவது அட்டவணையில் மாநிலங்களுக்கான அதிகாரப் பட்டியலின் 15ஆவது பிரிவு கூறுகிறது.
ஒட்டுமொத்த பயன்தரத்தக்க கால்நடைகளை பாதுகாப்பது வேறு; பயன்படாத நிலையிலும் பசு மாட்டை மட்டுமே வெட்டக் கூடாது; அது இந்துக் களில் புனித தெய்வம் என்று கூப்பாடு போடுவது வேறு;
ஜாதி கவுரவம் என்ற பெயரில், வேறு ஜாதி இளைஞரை காதலித்த அல்லது திருமணம் செய்த “குற்றத்துக்காக” பெற்ற மகளையே வெட்டிப் பலியிடும் ‘மனித வதைகள்’இங்கே நடக்கின்றன. இதைச் செய்பவர்களும் இந்துக்கள்தான்! இதைத் தட்டிக் கேட்பதற்கோ, தடைச் சட்டம் கொண்டு வரு வதற்கோ குரல் கொடுக்காத ‘பார்ப்பன பரிவாரங்கள்’, பசுமாடுகளை வெட்டக் கூடாது; சாப்பிடக் கூடாது; விற்கக் கூடாது என்று சட்டம் கொண்டு வரு கிறார்கள். இந்த அவமானகரமான இழிவுகள், இந்தப் ‘புண்ணிய’ பூமிகளில் மட்டுமே நடக்கும்.
Thanks Keetru


இந்த நபி மொழி எடப்பாடி பழனிச்சாமிக்கும் அவரது அமைச்சரவை சகாக்களுக்கும்!


Tuesday, June 26, 2018

பெரும்பாலும் மாடு அறுப்பவர்கள் இஸ்லாமியர்களாக இருப்பர்.

பெரும்பாலும் மாடு அறுப்பவர்கள் இஸ்லாமியர்களாக இருப்பர்.  மாட்டை ஆட்டை விற்பவர்கள் பெரும்பாலும் இந்து பிற்படுத்தப்பட்ட மக்களே. தங்கள் வீட்டிலேயே குடிசை தொழிலாக ஐந்து அல்லது ஆறு ஆடுகளை வளர்ப்பார்கள். இது அவர்களுக்கு துணை வருமானம்.

தற்போது பீட்டா எனும் பார்பனர் அதிகம் உள்ள ஒரு அமைப்பு ஒவ்வொரு பக்ரீத் பண்டிகையிலும் வம்பு பண்ணுகிறது. ஆட்டையும் மாட்டையும் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி பண்ணுவதில் 90 சதவீதம் பார்பனர்களுக்கு சொந்த மானது. கும்பிடும் கடவுளை இவ்வாறு வெட்டி வெளி நாட்டுக்கு ஏற்றுமதி செய்கிறீர்களே என்று என்றாவது இந்த அமைப்பு போராடியுள்ளதா? தங்கள் இனத்தை சார்ந்தவர்கள் பாதிப்படையக் கூடாது என்பதில் மிக கவனமாக இருப்பர் பார்பனர்.

பீட்டா அமைப்பு இவ்வாறு போராடுவதால் வீட்டில் ஆடு மாடு வளர்க்கும் இந்து பிற்படுத்தப்பட்ட மக்கள் தங்களின் கால்நடைகளை அடி மாட்டு விலைக்கு பார்பன முதலாளிகளிடம் விற்க வேண்டும் என்ற மறைமுக அஜண்டா இந்த போராட்டத்துக்குப் பின்னால் ஒளிந்துள்ளது. எனவெ இந்து பிற்படுத்தப்பட்ட மக்களும் இஸ்லாமியரும், கிருத்தவர்களும், தலித் மக்களும் ஒன்று சேர்ந்து பீட்டா எனும் பார்பன அமைப்பை தமிழகத்தை விட்டு ஓட ஓட விரட்ட வேண்டும. 

நடிகர் சூர்யாவுக்கு தொப்பி போட்டு.தலைப் பாகை கட்டி

எத்தனை விளக்கு அலங்காரங்கள்...
எத்தனை லட்சம் பணம் விரயம்......
இறைவன் மன்னிக்கவே மாட்டேன் என்ற இணை வைப்பில் மூழ்கி கிடக்கும் இஸ்லாமிய பெயர் தாங்கிகள்.
பெரிய தாடியோடு உலா வரும் அந்த மவுலவிக்கே இது ஷிர்க் என்று தெரியாத போது பாமர மக்கள் என்ன செய்வர்?
அதிலும் நடிகர் சூர்யாவுக்கு தொப்பி போட்டு.தலைப் பாகை கட்டி மாலை போட்டவர்கள் குர்ஆன் தமிழ் மொழி பெயர்ப்பை கொடுத்து இறைவன் என்றால் யார் என்றாவது விளக்கியிருக்கலாம்.


சிந்தனையை தோற்றுவிப்பது இதயமா? மூளையா?

சிந்தனையை தோற்றுவிப்பது இதயமா? மூளையா?

சிந்தனையை தோற்றுவிப்பது இதயமா? மூளையா?

மனிதர்களின் சிந்தனை எங்கே நிகழ்கிறது என்பதில் ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு விதமான நம்பிக்கை நிலவி வருகிறது.

ஒரு காதலன் தன் காதலியைப் பார்த்து 'இதயத்தில் இடம் தா!' என்கிறான். அது என்ன இதயத்தில் சென்று காதலன் உட்கார்ந்து கொள்வதா? 'உன் மூளையில் இடம் தா' என்றாலாவது ஓரளவு உண்மை இருக்கிறது. நம் உடம்பில் உள்ள இதயத்தின் பணி என்பது உடல் அனைத்துக்கும் ரத்த ஓட்டத்தை சீராக்கி கொடுக்கும் வேலையைத் தவிர வேறு விஷேசமாக தீர்மானங்கள் எதையும் எடுப்பதில்லை என்பது தற்கால அறிவியல் கண்டு பிடிப்பு. அறிவு சம்பந்தப் பட்டது மூளையில் நடப்பதாகவும், ஆசை சம்பத்தப் பட்டது இதயத்தில் நிகழ்வதாகவும் பலரும் நம்பி வருகிறோம். நானும் இதே கருத்தைத் தான் சமீப காலம் வரை கொண்டிருந்தேன்.

அண்ணா எம்.ஜி.ஆரை 'இதயக் கனி' என்று வர்ணித்தார். 'இதயம் ஒரு கோவில். அதில் வாழும் தெய்வம் நீ' என்றெல்லாம் (வைரமுத்து என்று நினைக்கிறேன்) எழுதுவது இந்த அர்த்தத்தை வைத்துத்தான். 'மனதில் உறுதி வேண்டும்' என்று பாரதி எடுத்து எழுதியதும் மேலே சொன்ன அர்த்தத்தில் தான். ஒருவன் ஒரு செயலில் உறுதியுடன் இருக்க வேண்டுமானால் அவன் சிந்தனை, செயல் பாடுகளில் உள்ள உறுதியை தீர்மானிப்பது மூளை தானே ஒழிய இதயம் அல்ல.அன்றைய மக்களின் நினைவு செயல் பாடுகள் அனைத்தும் இதயம் சம்பந்தப் பட்டது என்பதாக இருந்ததால், பாரதியும் அதே அர்த்தத்தில் கவிதை புனைந்துள்ளார் என்று தான் நான் நினைக்கிறேன்.

தினமலர் தரும் விளக்கம்

'விஞ்ஞானிகள் பவுதீக ஆராய்ச்சி செய'கின்றனர். பூத பவுதீக நுட்பங்களுக்கே முக்கியத்துவம் தருகின்றனர். இவற்றிற்கு மேலாக மனித உடலில் மனம் எனற ஒன்று இருக்கிறது. அந்த மனம் எங்கிருக்கின்றது? என்பதில் இன்னும் அறிவியல் தடுமாறிக் கொண்டிருக்கிறது. ஆனால் மெய்ஞஞானமோ மனத்துக்கே முக்கியத்துவம் கொடுக்கிறது.
-ஜனவரி 2004, பக்தி மலர், பக்கம் 7

தற்போதய அறிவியல் மனத்தைப் பற்றி என்ன கூறுகிறது?

சிந்திப்பது மனம். இதுதான் உணர்ச்சி, அறிவு இவற்றிற்கு அடிப்படை. இது மனிதனின் பெரு மூளைப் பகுதியில் தோன்றும் இயக்க மாகும். நரம்பு மண்டலத்தின் முதன் மையப் பகுதியாகிய மூளைதான் மனம் என்னும் மூளைத் திறன் தோன்றுவதற்கு முக்கியக் களம் ஆகும்.

உடலுக்குள் உயிர் என்பதாகத் தனியாக எதுவும் இல்லை. உடலின் பல்வேறு மண்டலங்களின் செயல் திறன்களுக்கும் அவற்றின் இயக்கங்களுக்கும் இடையிலான ஒருமைப்பாடு அல்லது ஒருங்கினைப்பே உயிர் எனப் படுவது. (The functions of the various systems in the body and the functional integration or co-ordination, we call life) இது போலவே ' பெரு மூளையின் கண் உள்ள ஏறத்தாழ 1400 கோடி நரம்பணுக்கள் அல்லது நியூரோ செல்கள் எனப்படும் நியூரான்களில் நிகழும் உடல்-வேதியல் எதிர் வினையே மனம் என்பதாகும்' என அறிவியலார் வரையறை செய்துள்ளனர்.

பெரு மூளையானது அறிவுத் திறன், உணர்ச்சி, நினைவாற்றல், கற்பனைத் திறன் முதலான மனத்தின் செயல் பாடுகளுக்கு இருப்பிடமாக இருக்கிறது. சிறு நீரகத்தின் செயலால் சிறுநீர் வெளிப் படுவது போல மூளை நரம்பு மண்டலம் இவற்றின் செயலால் உருவாவதே மனம். இன்னும் சுருங்கக் கூறின் மூளை அணுக்களில் ஏற்படும் வேதியல் மாற்றத்தால் உருவாவதே மனம்.
-நன்றி: விடுதலை



இது போன்ற ஒரு சர்ச்சை குர்ஆனிலும் வந்துள்ளது. ஒரு ஹிந்து நண்பர் இது பற்றி கேட்டதற்கு  கொடுத்த விளக்கத்தை கீழே தருகிறேன்.

இறைவனை மறுப்பவர்களுக்கு உள்ளங்கள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் புரிந்து கொள்வதில்லை. அவர்களுக்கு கண்கள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் பார்ப்பதில்லை. அவர்களுக்கு காதுகள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் கேட்பதில்லை. (குர்ஆன் 7:179)

(அநியாயத்துக்கு எதிராக போரிட கூப்பிட்டால், போருக்கு வராமல்) வீட்டோடு இருக்கும் பெண்களைப் போல் இருப்பதையே அவர்கள் பொருந்தி கொண்டனர். அவர்களின் உள்ளங்களின் மீது முத்திரை இடப்பட்டு விட்டது. எனவே அவர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள். (குர்ஆன் 9;87)

(போரில் உங்களின் எதிரிகள்) உங்கள் மேற் புறத்திலிருந்தும், உங்கள் கீழ்ப் புறத்திலிருந்தும் வந்த போது, பார்வைகள் நிலை குத்தி இதயங்கள் தொண்டைக் குழிகளை அடைத்து, அல்லாஹ்வைப் பற்றி நீங்கள் பல விதமான எண்ணங்களைக் கொண்டபோது, அங்கு தான் நம்பிக்கை கொண்டோர் சோதிக்கப் பட்டனர். அவர்கள் கடுமையாக ஆட்டுவிக்கப் பட்டார்கள். (குர்ஆன் 33:10)

சிந்தனையைக் குறிப்பிடும் போது இதயம் எனக் கூறாமல் மூளை என்று குர்ஆன் கூறுவதாக வைத்துக் கொள்வோம். இன்றைய உலகத்தின் முடிவுடன் அது அற்புதமாகப் பொருந்தி போகும்.ஆனால் இதயத்தில் தான் சிந்தனை மற்றும் உணர்வுகள் உள்ளன என்ற கருத்து நிலை பெற்றிருந்த காலத்தில்இவ்வாறு கூறியிருந்தால் அன்றைய மக்கள் இதையே காரணமாகக் காட்டி குர்ஆனை நிராகரித்திருப்பார்கள். இதயத்தில் நடக்கிற காரியங்களை மூளையில் நடப்பதாக இறைவன் தவறாகக் கூறுவானா எனக் கேட்டு அன்றைய மக்கள் குர்ஆனை நிராகரித்திருப்பார்கள். அவர்கள் நிராகரித்திருந்தால் குர்ஆன் பாதுகாக்கப் பட்டுநம் காலம் வரை வந்து சேர்ந்து இருக்காது.

ஆனால் மூளைதான் சிந்தனைக்கு காரணம் என்று நிரூபிக்கப் பட்ட காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இன்றைய அறிவியல் உலகம் பழைய நம்பிக்கைப் படி இதயம் என்று பொருள் படுத்தினால் குர்ஆன் இறை வேதமாக இருக்க முடியாது என்று மறுக்க வாய்ப்பாகி விடும். எனவே இது போன்ற இடங்களில் மூளை என்றும் குறிப்பிட முடியாது இதயம் என்றும் குறிப்பிட முடியாது ஒன்றுமே குறிப்பிடாமலும் இருக்க முடியாது.

இப்போது என்ன செய்வது? எல்லாக் காலத்துக்கும் பொருந்தக் கூடிய வகையில் இதை எவ்வாறு கூறுவது?நாமாக இருந்தால் இப்படிக் குழம்புவோம்.அனைத்தையும் அறிந்த இறைவனுக்கு இவ்வாறு குழப்பம் ஏதும் இல்லை. அவன் எக்காலத்துக்கும் பொருந்தக் கூடிய வகையில் கூற வல்லவன்.

அரபு மொழியில் 'கல்ப்' என்ற சொல்லுக்கு மூளை என்ற பொருளும் உள்ளது. இதயம் என்ற பொருளும் உள்ளது. அரபு இலக்கியங்களில் மூளையைக் குறிக்கவும் இதயத்தை குறிக்கவும் இச் சொல் பயன் படுத்தப் பட்டுள்ளது.மூளை தான் எல்லாக் காரியங்களையும் நிகழ்த்துகிறது என்பதைக் கண்டு பிடிக்கும் முன் பல நூறு ஆண்டுகளுக்கு முன் எழுதப் பட்ட அரபு அகராதி நூல்களில் (லிஸானுல் அரப், முக்தாருஸ் ஸஹாஹ்) சிந்திக்கும் திறனுக்கு மூளை இதயம் ஆகிய அர்த்தங்கள் இச் சொல்லுக்கு உள்ளன எனக் குறிப்பிடப் பட்டுள்ளது.

மூளை, இதயம் ஆகிய இரண்டையும் குறிக்கக் கூடிய இந்தச் சொல்லை அல்லாஹ் தேர்ந்தெடுத்து பயன் படுத்தி இருக்கிறான். இதயத்தில் தான் இந்தக் காரியங்கள் நிகழ்கின்றன என்ற நம்பிக்கை நிலவிய காலத்தில் குர்ஆனுக்கு மொழி பெயர்ப்பு செய்தவர்கள் இச் சொல்லுக்கு இதயம் என்று மொழி பெயர்த்தார்கள். அவர்களும் திருக் குர்ஆன் உண்மையே கூறியது என்று கருதினார்கள். மூளைதான் எல்லாக் காரியத்தையும் செய்கிறது என்ற நம்பிக்கை நிலவுகின்ற இக் காலத்தில் அந்தச் சொல்லுக்கு மூளை என்றே பொருள் கொள்ள வேண்டும். அப் பொருளும் அச் சொல்லுக்கு அகராதியில் உள்ள பொருள் தான். 5:25- 7;179- 9;87- 9;93- 17;46- 18;57- 63;3 ஆகிய வசனங்களில் சிந்தனையுடன் தொடர்பு படுத்தியே கல்ப் என்ற வார்த்தை பயன் படுத்தப் பட்டுள்ளது. இதயங்கள் என்று இங்கே தமிழாக்கம் செய்வது தவறாகும்.

33;10- 40;18 ஆகிய இரண்டு இடங்களில் மட்டுமே இச் சொல் இதயம் என்ற பொருளில் பயன் படுத்தப் பட்டுள்ளது.ஏனைய எல்லா இடங்களிலும் மூளை என்ற பொருளில் தான் பயன் படுத்தப் பட்டுள்ளது. நீங்கள் குறிப்பிட்டுள்ள இடங்களிலும் மூளை என்றே பொருள் கொள்ள வேண்டும். அரபு மூலச் சொல் அதற்கு இடம் தரக் கூடிய வகையில் தான் அமைந்துள்ளது.எதை நீங்கள் பலவீனமாகக் கருதி கேள்வி கேட்கிறீர்களோ அதுவே இவ்வேதம் இறைவனுடையது என்பதை நிரூபிக்கும் பலமாக அமைந்துள்ளது.

மூளை தான் மனிதனை முழுமையாக இயக்குகிறது என்ற உண்மை இறுதிக் காலத்தில் கண்டு பிடிக்கப் படும் என்ற உண்மையை அறிந்தவனால்தான் இவ்வாறு கூற முடியும். அது அருளப்பட்ட காலத்திலும் மறுக்கப் பட முடியாமல் காப்பாற்றி- உண்மை கண்டறியப் படும் காலத்திலும் அதை மேலும் உண்மைப் படுத்தக் கூடிய வகையில் வார்த்தைகளைப் பயன் படுத்தி இருப்பது இறை வேதம் என்பதற்கான நிரூபணங்களில் ஒன்றாக உள்ளது.

'நாங்கள் ஆண்ட பரம்பரை'

இணையத்தில் பலமுறை சாதி பெருமை பேசக் கூடியவர்கள் 'நாங்கள் ஆண்ட பரம்பரை' 'நீங்கள் பேண்ட பரம்பரை' என்று பெருமை பேசி வருவதை பார்த்துள்ளோம். மொகலாயர்களும் ஆங்கிலேயர்களும் இந்த நாட்டுக்கு வருவதற்கு முன் தமிழகத்தின் பல பகுதிகளில் வறுமை தாண்டவமாடியது. தீண்டாமை கொடுமை தலைவிரித்தாடியது. சேர சோழ பாண்டிய மன்னர்கள் ஒருவரையொருவர் போரிட்டுக் கொண்டு காடு கழனிகளையெல்லாம் போரில் அழித்து வந்தனர். மதத்தின் பெயரால் தீண்டாமை சகல மட்டத்திலும் கடைபிடிக்கப்பட்டது. 

மார்புக்கு வரி, மேலாடைக்கு வரி, தொட்டால் தீட்டு, இரட்டைக் குவளை முறை, என்று தலித்கள் ஒரு பக்கம் துன்புறுத்தப்பட்டனர். மற்றொரு பக்கம் சைவ மதத்தவர் சமணர்களையும் பவுத்தர்களையும் வன்முறையால் மதம் மாற்றிக் கொண்டிருந்தனர். இந்த கால கட்டத்தில்தான் மொகலாயர்கள் ஆட்சியை பிடிக்கின்றனர். கிட்டத்தட்ட 1000 ஆண்டுகள் அகண்ட பாரதத்தை ஆள்வது அதுவும் அந்த காலத்தில் என்பது அவ்வளவு லேசான காரியம் அல்ல. இதற்கு முன்னால் நடந்த இந்துக்களின் ஆட்சியை விட இஸ்லாமியரின் ஆட்சி பெரும்பான்மை மக்களுக்கு அரணாக இருந்ததின் காரணத்தினால்தான் இத்தனை ஆண்டு காலம் ஆட்சி செய்ய முடிந்தது. அதன் பிறகு வந்த வெள்ளையர்கள் நமது செல்வங்களை இங்கிலாந்துக்கு கொண்டு சென்றாலும் நமது நாட்டுக்கும் பல நல்லதுகள் செய்து வந்துள்ளனர்.

எனவே ஆண்ட பெருமை பேசிக் கொண்டு சில சாதி வெறியர்கள் தங்களின் ஆளுமையை பறை சாற்ற வேண்டாம். மக்களை இவ்வளவு வறுமையில் வைத்து ஆண்டு விட்டு அதனை பெருமையாக வேறு பேசித் திரிய வேண்டாம். இது நாம் தமிழர் கட்சிக்கும் பொருந்தும்.



ஷவ்வாலில் 6 நோன்பு நோற்கின்றாரோ அவர்.....

யார் ரமலானில் நோன்பு நோற்று, பிறகு அதைத் தொடர்ந்து ஷவ்வாலில் 6 நோன்பு நோற்கின்றாரோ அவர் (ஆண்டு) காலம் முழுவதும் நோன்பு நோற்றவரைப் போலாவார்.
அறிவிப்பவர் : அபூ அய்யூப் அல் அன்சாரி (ரலி)
நூல் : முஸ்லிம்
இந்த ஹதீஸில் ரமளானில் நோன்பு நோற்று, பிறகு அதைத் தொடர்ந்து ஷவ்வால் நோன்பு நோற்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
முப்பது நோன்பும், ஆறு நோன்பும் சேர்த்து முப்பத்து ஆறு நோன்புகளாகின்றன. நன்மைகள் ஒன்றுக்குப் பத்து என்ற கணக்குப்படி தினமும் நோன்பு நோற்ற நன்மை கிடைக்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதற்குக் காரணம் கூறியுள்ளனர்.
இதன்படி ஷவ்வால் மாதம் முழுவதும் இந்த ஆறு நோன்பை பூர்த்தியாக்கலாம். தற்பொது பலரும் இந்த ஆறு நோன்பை வைப்பது பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது.
நானும் மூன்று நோன்பை வைத்து விட்டேன். இன்னும் பாக்கி மூன்று நோன்பு உள்ளது. வாய்ப்புள்ளவர்கள் ஆறு நோன்பை அவசியம் வைத்து வருடம் முழுவதும் நோன்பு நோற்ற நன்மையை பெறுவார்களாக!

இரத்த தான சான்றிதழ்☆தி,மலை மாவட்டம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
☆இரத்த தான சான்றிதழ்☆தி,மலை மாவட்டம்☆
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) சார்பாக திருவண்ணாமலை மாவட்டத்தில் 2017 - ம் ஆண்டில் அதிகமாக (அவசர) இரத்த தானம் செய்ததற்காக திருவண்ணாமலை மாவட்ட சகோதரர்களுக்கு திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் சகோதரர். கந்தசாமி. IAS அவர்கள் 25-06-2018 திங்கள்கிழமை அன்று சான்றிதழ் வழங்கினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.



பாபா ராம் தேவின் உண்மை முகம்!

பாபா ராம் தேவின் உண்மை முகம்!

தனது பதஞ்சலி தயாரிப்புகள் ஆயுர் வேத மூலிகைகள் கொண்டு தயாரானது என்று ஒரு பக்கம் கூவிக் கொண்டு மறு பக்கம் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கூடாது என்று அனில் அகர்வாலுக்கு ஆதரவாக லண்டன் சென்று ட்விட் இடுகிறார். பணத்துக்காக மனிதர்கள் மாறும் நிறங்கள் தான் எத்தனை?


Monday, June 25, 2018

விபி.சிங் ஆட்சி எப்படி கவிழ்ந்தது தெரியுமா??

விபி.சிங் ஆட்சி எப்படி கவிழ்ந்தது தெரியுமா??
அனைத்து பணிகளிலும் பார்ப்பனர்களே ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர் என்பதால்,,,பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு (#அதாவது_இந்துக்களுக்கு) உரிய பணி இடங்களை ஒதுக்க வேண்டும் எனக் கூறி,,,மண்டல் கமிசனின் பரிந்துரையின் படி,,,,பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்க சட்டமியற்றினார்,,,
அது எப்படி கால காலமாக பார்ப்பனர்களுக்கு அடிமையாய் இருக்கும் பிற்படுத்தப்பட்ட மக்கள் (#அதாவது_இந்துக்கள்) பார்ப்பனர்களுக்கு சரிசமமாய் வருவதா?? என உங்க ஆர்எஸ்எஸ், பாஜக கும்பலுக்கு தூக்கம் கெட்டது,,,
இந்த விபி.சிங் ஆட்சியே நமது ஆதரவில் தான் நடைபெறுகிறது,,,எனவே நமது ஆதரவை விலக்கி, இந்த ஆட்சியை கலைத்து விட்டால்,,,பிற்படுத்தப்பட்ட மக்கள் (#அதாவது_இந்துக்கள் ) பெறவிருக்கும் உரிமையை தடுத்து விடலாம் எனத் திட்டமிட்டது,,,
ஆனால் நேரடியாக இட ஒதுக்கீட்டை எதிர்ப்பதாய் கூறி ஆட்சியை கலைத்தால் ,மக்களிடம் அம்பலப்படுவோம் என்பதால் வேறு ஒரு திட்டத்திற்கு தயாரானது பார்ப்பனக் கூட்டம்,,,
அப்போது அத்வானி கழிவறையில் அமர்ந்திருந்த போது உதித்த யோசனை தான் #ரதயாத்திரை திட்டம்,,,
ராமனுக்கு கோவில் கட்டுகிறேன் என்ற பெயரில் நாடெங்கும் ரதயாத்திரை நடத்தி கலவரங்களை நிகழ்த்தினால்,,,சனநாயகவாதியான விபி.சிங் எப்படியும் ரதயாத்திரைக்கு தடை விதிப்பார்,,,ரதயாத்திரைக்கு தடை விதித்ததையே காரணமாக கூறி, விபி.சிங் ஆட்சிக்கு வழங்கப்பட்டு வந்த ஆதரவை நீக்கி ஆட்சியை கவிழ்க்கலாம் என திட்டமிட்டது பார்ப்பனக் கூட்டம்,,,
அதை அப்படியே நடைமுறை படித்தி ஆட்சியையும் கவிழ்த்தது,,,
(பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தங்களுக்கு பிடிக்காததால் தான் விபி்.சிங் ஆட்சியை ரதயாத்திரை என்ற பெயரில் கவிழ்த்தோம் என அத்வானியே பின்னர் தான் எழுதிய ஒரு புத்தகத்தில் கூறியுள்ளார்)
பாஜகவிற்கு சொம்பு தூக்கும் பிற்படுத்தப்பட்ட இந்துக்களே,,,இதுக்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்???
நீங்களும் இந்துக்கள் தானே !! அப்படி இருக்க இந்துக்களுக்கு கட்சி நடத்துகிறோம் எனக் கூறும் பாஜக உங்களுக்கு வர வேண்டிய இட ஒதுக்கீட்டை தடுக்க ஏன் இப்படி துடித்தது ???
இஸ்லாமியர்களுக்கு சலுகை தரக் கூடாது, கிருஸ்துவர்களுக்கு சலுகை தரக் கூடாது என பார்ப்பான் சொல்லிக் கொடுப்பதை கிளிப்பிள்ளை போல ஒப்புவிக்கும் கூட்டமே !! உங்களுக்கு தர வேண்டிய இடஒதுக்கீட்டையே எதிர்த்தது தான் உங்க ஆர்எஸ்எஸ், பாஜக கூட்டம்,,,
இதுக்கும் சொம்படிக்காம, போய் உங்க கட்சியில் இருக்கும் பார்ப்பனர்களிடம் கேளுங்க,,,,
"ஜீ ஜீ நாங்களும் இந்துக்கள் தான ஜீ,,,அப்பறம் ஏன் ஜீ எங்க இட ஒதுக்கீட்டை எதிர்த்தீங்க'னு"
Thoughts by Manoj Kumar

சிறுவாணி நீர் பன்னாட்டு கம்பெனிக்கு தாரை வார்ப்பு!

உலகிலேயே சுவையான சிறுவாணி நீரை அள்ளி குடித்து வளர்ந்த மக்களே தற்போது நம்முடைய குடிதண்ணீரை பிரஞ்சு நாட்டு சுயஸ் என்னும் பன்னாட்டு நிறுவனத்திற்கு வழங்கி உள்ளதை அறிவீர்களோ! ஆம், கோயம்புத்தூர் மக்களுக்கு குடிநீர் வழங்கி பராமரிக்கும் (O&M) உரிமத்தை கடந்த பிப்ரவரி மாதம் சுமார் 3,150 கோடிக்கு (400 மில்லியன் யூரோ) பிரஞ்சு நாட்டின் சுயஸ் நிறுவனத்திற்கு அரசு வழங்கிவிட்டது. இந்தியாவில் மிகப்பெரிய உரிமத்தை பெற்றுவிட்டோம் என அந்நிறுவனம் தனது வலைதளத்தில் மார்தட்டி சொல்லி இருப்பதை நீங்கள் பார்க்கலாம்.
ஆதாரம் இதோ : SUEZ-wins-a-contract-worth-near-400-million-euros-to-improve-the-water-distribution-service-in-Coimbatore
அரசோ வேறு ஒரு கணக்கை வெளியிட்டுள்ளது, அதில் 21 ஆண்டுகள் இயக்குதல் மற்றும் பராமரிப்புக்கு 2,325 கோடி ரூபாய் மட்டுமே கொடுத்ததாக சொல்கிறது. 5 ஆண்டுகள் நடைபெறும் கட்டுமானதிற்கு 646 கோடி ரூபாய் எனவும் தனியாக சூயஸ் பிராஜெக்ட்ஸ் நிறுவனத்துக்கு பணி ஆணை கொடுத்துள்ளது. மொத்தம், 2961 கோடி ரூபாய் வழங்கப்படும்.
இந்தியாவிலேயே டெல்லி மாளவியா நகருக்கு பிறகு இரண்டாவது கோயம்புத்தூரை கண்டுபிடித்து வந்துள்ளது இந்நிறுவனம். இனி இந்த தனியார் நிறுவனம் கொடுக்கும் குடிநீரைத்தான் இனி கோயம்புத்தூர் மக்கள் குடித்தாக வேண்டும். அது மட்டுமல்ல கோவை மக்கள் தண்ணீர் நுகர்வு வரி இனி சூயஸ் நிறுவனத்தின் காப்போலை (ESCREW) கணக்கிற்கு சென்றுவிடும்.
இது கோயம்புத்தூரோடு நின்றுவிடப்போவதில்லை இனி அனைத்து பெரு நகரங்களிலும் தனியார் நிறுவனங்கள் தங்கள் தண்ணீர் தொழிலை தடையின்றி செய்வார்கள். அதற்கான முன் தயாரிப்பு வேலையை இந்திய தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு (CII) பல ஆண்டுகளாக செய்துவருகிறது. கோவையில் உள்ள சிறுதுளி, ராக் போன்ற முதலாளி வர்க்க அமைப்புகளின் மூலம் குடிநீரை தனியார்தான் வினியோகிக்கவேண்டும் என பரப்புரையை கோவையில் கடந்த 5 ஆண்டுகளாக செய்துவருகிறது.  அதற்காக செயற்கையாக தண்ணீர் தட்டுப்பாடு கூட உருவாக்குவார்கள் என்ற அய்யம் மக்கள் மனதில் எழுந்துள்ளது.

மக்களாட்சியில் பின்வாசல்
சுத்தமான, சுகாதாரமான, குடிநீர் வீணாகாமல் மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் அல்லது இலவசமாக வழங்கவேண்டிய பொறுப்பு அரசுடையது என்பதை மனதில் கொள்வோம். சூயஸ் என்ற தனியார் நிறுவனத்திற்கு குடிநீர் வழங்கும் மற்றும் பராமரிக்கும் உரிமத்தை (O&M Contract) கொடுக்கப்போகிறோம் என்றோ, கொடுத்தாகிவிட்டது என்றோ செய்திகள் இதுவரை மக்கள் விரும்பி பார்க்கும் ஊடகங்களில் எதுவுமே வரவில்லை. இச்செய்தி திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளது.
கோவையில் தனியார் நிறுவனத்திற்கு குடிநீர் வினியோகம் கொடுக்கப்போவதைப் பற்றி நாடாளுமன்றத்திலோ, சட்டசபையிலோ, கோவை மாநகராட்சி கூட்டத்திலோ விவாதம் நடந்ததாக எந்த செய்தியும் இல்லை. குடிநீர் வினியோகம் தனியார் மயமாவது குறித்த மக்கள் கருத்து கேட்புக்கூட்டம் எதுவுமே கோவையில் நடைபெறவில்லை. இன்றைய தேதியில் தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெறாத நிலையில் பின்வாசல் வழியே இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது எப்படி? இதற்கு கோவை மாவட்டத்தை சேர்ந்த உள்ளாட்சித்துறை அமைச்சராக பதவி வகிக்கும் திரு. வேலுமணிதான் பதில் சொல்ல வேண்டும்.

மக்களிடம் எழும் சில நியாயமான கேள்விகள்
1. இந்த ஒப்பந்தத்தின் மூலம், நம் வரிப்பணத்தில் கட்டிய அணைகள், குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், குடிநீரேற்று நிலையங்கள், குடிநீர் குழாய்கள், மேல்நிலைத் தொட்டிகள், வால்வுகள், வீட்டு இணைப்புகள், நீர் அளவு மானிகள், என அனைத்துமே சூயஸ் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது இந்த அரசு. இதற்கான முடிவை யார் எடுத்தார்கள்?
2. குடிநீருக்கான கட்டணத்தையும் சூயஸ் நிர்ணயம் செய்யுமா அல்லது மாநகராட்சி மாமன்றம் முடிவு செய்யுமா?
3. 1,50,000 குடிநீர் இணைப்புகளுக்கு அடுத்த 26 ஆண்டுகள் தாங்கள் சேவை செய்யப்போவதாக சூயஸ் இணையதளத்தில் உள்ளது. நம் மாநகராட்சியில் 2,70,000 இணைப்புகள் உள்ளன. மீதம் உள்ளவர்களுக்கு யார் தண்ணீர் கொடுப்பார்கள்? மீதமுள்ளவர்களிடம் வசுல் செய்யும் கட்டனத்தை அரசிடம் செலுத்துமா சூயஸ் நிறுவனம்?
4. சூயஸ் நிறுவனத்திற்கு அரசு 21 ஆண்டுகள் பராமரிக்க செலுத்தும் தொகை 2325 கோடி ரூபாய். நம் அரசின் மூலம் சூயஸ் நிறுவனத்திற்கு ஒவ்வொரு மாதமும் வீட்டு இணைப்புகள் செலுத்த வேண்டியிருக்கும் தொகை 615 ரூபாய். (ரூ 2325,00,00,000 / 1,50,000 இனைப்புகள் / 21 ஆண்டுகள் / 12 மாதங்கள் = ரூ 615.08/மாதம்). இதில் சூயஸ் லாபத்தை சேர்க்கவில்லை, தண்ணீரின் அளவையும் சேர்க்கவில்லை. சூயஸின் லாபத்தை சேர்த்தால் மக்களுக்கு குடிநீர் கட்டணம்தான் எவ்வளவு?
5. இந்த திட்டம் செயலுக்கு வரும் முன்பு நமது நீர் அளவு மானிகளை மாற்றிவிடுவார்கள். புதிய நீர் அளவு மானிகளுக்கு யார் பணம் செலுத்தப்போகிறார்கள்?
6. குடிநீர் வாங்க வீட்டு பட்ஜட்டில் ஒரு தொகையை ஒதுக்கிவைக்கவேண்டும். மாதா மாதம் நடுத்தர மற்றும் குறைந்த வருவாய் உள்ள மக்களின் பாடு மிகவும் மோசமாக இருக்கும். அதுவும் வரட்சி காலங்களில் அனைகளில் தண்ணீர் இல்லாத போது அனைத்துத்தர மக்களுக்கும் சரி சமமாக குடிநீர் கிடைக்க உறுதி செய்வார்களா?
7. நிலத்தடியில் இருந்து தண்ணீர் எடுத்து பயன்படுத்த கட்டணம் செலுத்தவேண்டுமா?
8. மழை நீரை சேமித்து பயன்படுத்தினால் கட்டணம் செலுத்தவேண்டுமா?
9. கடந்த 90 அண்டுகளாக (1928 முதல்) நமது வரிப்பணத்தில் குறைந்த கட்டணத்தில் ஏழை, பணக்காரர், சிறு தொழில், பெரிய தொழில், என பாராமல் அனைவருக்கும் தண்ணீர் வினியோக கட்டுமானங்களை நமது மாநகராட்சியின் சார்ப்பில் ஏற்படுத்தியுள்ளோம், மேலும் ஏற்படுத்திக்கொண்டிருக்கிறோம். இதை அரசே ஏற்றுச்செய்யாமல் நீண்ட கால ஒப்பந்தம் மூலம் தனியார் வசம் ஒப்படைக்கவேண்டிய காரணங்கள் என்ன?
10. தினமும் 30 நிமிடங்கள் குழாய் முழுவதும் சீராக தண்ணிர் வந்தால் சராசரியாக 4பேர் இருக்கும் குடும்பத்திற்கு தேவையான அளவு குடிநீர் கிடத்துவிடுகிறது. எதற்கு 24 மணி நேரமும் (24×7) தண்ணீர் வரவேண்டும்?
மக்களாகிய நம்மிடம் கருத்து எதுவும் கேட்காமல், பொது மக்கள் விரும்பாத பொது மக்களுக்குத் தேவையில்லாத, அதிக கட்டணம் வசூலித்த JNNURM சொகுசுப்பேருந்து போலத்தான் இத்திட்டம் நம்மிடையே திணிக்கப்பட்டுள்ளது. மனிதர்கள் உயிர் வாழ அத்தியாவசிய தேவையான குடிநீரை நம் மக்கள் விலை கொடுத்து வாங்கும் வணிகப்பொருளாக (Commodity) இந்த அரசு மாற்றியுள்ளதை நாம் ஏற்கமுடியாது.
கோவை நொய்யல் ஆத்துப்பாலத்தில்தான் தனியார் நெடுஞ்சாலையில் பாலம் கட்டி சுங்கம் வசுலிக்கும் முறை இந்தியாவில் முதல் முதலாக அமுல்படுத்தப்பட்டது. சாலைகள் போடவும், பாலங்கள் கட்டவும் நெடுஞ்சாலைத்துறை இருந்தும் நம்மிடையே ஒரு சிறு பாலத்தை கட்ட தனியாரிடம் ஏன் ஒப்படைத்தார்கள்? அதேபோல தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் மாநகராட்சியில் உள்ள பொறியியல் துறை எல்லாமே நாம் மக்களின் வரி பணத்தை கொண்டு உருவாக்கியிருப்பது லாப நோக்கில் இயங்கும் தனியார் நிறுவனத்திற்காகவா என்ற கேள்வியும் எழுகிறது.
பின் வாசல் வழியே திணிக்கப்பட்ட இந்த குடிநீர் வழங்கும் மற்றும் பராமரிக்கும் (O&M Contract) ஒப்பந்தத்தை திரும்பப்பெறவேண்டும் என்று கோவை குளங்களைக் காப்போம் கூட்டமைப்பு மக்களிடயே பரப்புரை செய்யும்.
90 வருடங்களாக குடிநீரை கொடுத்து வந்த #கோவை உள்ளாட்சி, வரி செலுத்தும் மக்களை கேட்காமல் தனியாருக்கு தண்ணீர் வினியோகித்து கட்டணம் வசுல் செய்யும் உரிமத்தை கொடுத்திருப்பது மக்களாட்சியில் மக்களின் உரிமைகளை பறிக்கும் செயல்.
நன்றி : http://www.coimbatorewetlands.org/waterprivatisation/1039




பொலிவியா நாட்டில் சுயஸ் நிறுவனத்திற்கு நடந்தது என்ன?

பொலிவியா நாட்டில் சுயஸ் நிறுவனத்திற்கு நடந்தது என்ன?
தற்போது பொலிவியா (Boliva) நாட்டில் கொச்சபம்மா (Cochabamba) நகரில் நடந்த சம்பவத்தை பார்த்துவிட்டு வருவோம் வாருங்கள். 1997 ஆம் ஆண்டு அந்நாட்டு அரசு தன் மக்களுக்கு குடிநீர் வழங்கும் உரிமத்தை முதலில் சிமாபா (SEMAPA) என்னும் அரசு கம்பனிக்கும் பின் இதே சுயஸ் (SUEZ) என்னும் தனியார் நிறுவனத்திற்க்கு வழங்கியது. கார்டை சொருகினால் தண்ணீர். கொடுக்கும் பணத்திற்கு ஏற்றார் போல் தண்ணீர் கொடுப்பார்கள். பணம் இல்லை என்றால் ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடையாது.
இந்நிலையில், மக்கள் ஆற்று நீரை பயன்படுத்த துவங்கினார்கள். இதை பொருத்துக்கொள்ள முடியாத தனியார் நிறுவனம். ஆற்று வழிப்பாதை அமைப்பதாக கூறி அங்கு தனியார் இரானுவத்தை நிறுத்தி மக்கள் ஆற்றில் நீர் எடுப்பதை தடுத்தார்கள். (இந்நேரம் ஜக்கியின் Rally for River ஐ உங்களுக்கு ஞாபகப்படுத்த விருப்புகிறேன்). சரி ஆற்றில் தான் தண்ணீர் எடுக்க முடியாது. தன் வீட்டு கிணற்றில், ஆழ்துளை கிணற்றில் (Bore well) தண்ணீர் எடுத்து பயன்படுத்தினார்கள். அதையும் தடுத்து அதற்கு கட்டணம் வசூலித்தார்கள். வெறுத்துப் போன மக்கள், சரி மழை நீரையாவது பயன்படுத்துவோம் என மழை நீரை சேமித்து பயன்படுத்த துவங்கினார்கள். ஆத்திரமடைந்த சூயஸ் நிறுவனம் மழை நீரை பயன்படுத்த கூடாது என்று அதற்கும் சரமாரியாக கட்டணம் வசூலித்து. மழை நீரை கூட விட்டு வைக்கா பாவிகள் என… Even The Rain என்று இச்சம்பவம் ஒரு படமாக உருவானது.
வெகுண்டெழுந்த மக்கள் போர் களத்தில் குதித்தனர். உள்நாட்டு போர் வெடித்தது. மக்கள் அனைவரும் ஒன்றினைந்து போராடி அந்நிறுவனத்தை நாட்டை விட்டே அடித்து விரட்டினர்.
ஆதாரம் :
1.  https://en.m.wikipedia.org/wiki/Cochabamba_Water_War
2. https://nacla.org/article/bolivia-privatized-water-company-defeated


என்னை கவர்ந்த இஸ்லாம் - பாகம் 30


mohanlal -


Sunday, June 24, 2018

#மரங்களை நட்டு தொடர்ந்து பராமரிக்கும் மகத்துவம் மிக்க பணி...*

#மரங்களை நட்டு தொடர்ந்து பராமரிக்கும் மகத்துவம் மிக்க பணி...*

அல்லாஹ்வின் மாபெரும் உதவியால் 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை தெற்கு கிளை சார்பாக சில மாதங்களுக்கு முன்பாகவே மரங்கள் நட்டு அதனை பராமரித்தும் வந்தனர். அதன் தொடர்ச்சியாக புது இடங்களில் மரங்கள் வைக்கப்பட்டது. ஏற்கனவே வைத்த மரங்களை சரியான வளர்ச்சி இருக்கா என்பதை கண்காணித்து.
சரியாக வளராத மரங்களை அப்புறப்படுத்திவிட்டு வேறு மரங்களை நட்டார்கள். அதனை தொடர்ச்சியாக தெற்கு கிளையின் தொண்டர் அணியினர் பராமரித்து வருகின்றனர். 
அல்ஹம்துலில்லாஹ்



சேலம் ராமலிங்கபுரத்தில் 40 வீடுகள் இடியும்...

சேலம் ராமலிங்கபுரத்தில் 40 வீடுகள் இடியும்...

5 கோவில்கள் சாலைகளுக்காக இடிக்கப்படும்....

மக்கள் எதிர்ப்பையும் மீறி நில அளவீடுகள் நடக்கின்றன.....

எதிர்ப்பவர்களை தேச விரோதிகள் என்கிறது ஒரு கூட்டம்.

நாட்டில் எத்தனையோ சாலைகள் குண்டும் குழியுமாக இருக்க யாரும் கேட்காமல் 8 வழி பசுமை வழிச் சாலை யாருக்காக!


Saturday, June 23, 2018

நல்ல வேளை... நடக்கவில்லை......

இந்தியா என்றுமே மேல் நாட்டுகாரர்களால் பெரிதும் மதிக்கப்பட்டே வந்துள்ளது. அதற்கு காரணம் இந்நாட்டு மக்களின் நம்பகத் தன்மை. மழையில் நனையாமல் இருக்க அன்றைய அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன் ராஜீவ் காந்திக்கு குடை பிடித்து செல்லும் காட்சி.
இதே இன்று நடந்திருந்தால் பிஜேபியினர் மோடிக்கு கண் காது மூக்கு எல்லாம் வைத்து வானாளவப் புகழ்ந்திருப்பர்.  நல்ல வேளை... நடக்கவில்லை.


பசுவின் பெயரால் சில இந்துத்வ காட்டுமிராண்டிகள்

பசுவின் பெயரால் சில இந்துத்வ காட்டுமிராண்டிகள் ஒரு முஸ்லிமை அடித்து இழுத்து வருகின்றனர். இதற்கு மூன்று காவலர்கள் பாதுகாப்புக்காக உடன் வருகின்றனர். இந்த நாடு எங்கே சென்று கொண்டுள்ளது? இதைப் பார்க்கும் வெளிநாட்டுக்காரன் காறி துப்ப மாட்டானா?

இந்துக்களில் பெரும்பாலnனோர் இந்த காட்டுமிராண்டி தனத்தை விரும்பவில்லை. ஆனால் அவர்கள் எதிர்ப்பு காட்டாமல் மவுனமாக இருப்பதாலேயே இவர்கள் அராஜகத்தை நிறைவேற்றுகின்றனர். இது போன்ற செயல்கள் இந்து மதத்தை மேலும் அழிவுப் பாதைக்கே இட்டுச் செல்லும் என்பதை ஏனோ இவர்கள் உணர்வதில்லை.

பாதிக்கப்படும் முஸ்லிம்கள் இன்று வரை பொறுமை காத்தே வருகின்றனர். அராஜகம் அளவுக்கு அதிகமானால் முஸ்லிம்களும் ஆயுதம் தூக்க ஆரம்பித்தால் இந்த நாடு தாங்குமா? இஸ்லாமியருக்கு நாட்டுப் பற்று அதிகம் உள்ளதாலேயே இன்று வரை பொறுமை காக்கின்றனர். பொறுமைக்கும் ஒரு அளவு உண்டு. அதனை ஆட்சியாளர்கள் புரிந்து உடன் நடவடிக்கை எடுப்பார்களாக!









யோகா.. யோகா.. யோகா..! நாடே ஆகுது ஸ்வாஹா..!!

யோகா.. யோகா.. யோகா..!
நாடே ஆகுது ஸ்வாஹா..!!
ம.க.இ.க-வின் புதிய பாடல்..!!!
உலக யோகா தினத்தை முன்னிட்டு, மோடியின் ’யோகா’ நாடகத்தை துகிலுரித்து அம்பலப்படுத்துகிறது மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் இந்தப் பாடல்
பாருங்கள் ! பாடுங்கள் ! பகிருங்கள் !
பாடல் வரிகள்
யோகா யோகா யோகா
நாடே ஆகுது ஸ்வாகா – 2
நீ கண்ண மூடி செய்யிற யோகா – மோடி
கார்ப்பரேட்டுக்கு கொடுக்குறார் நேக்கா
யோகா யோகா யோகா
நாடே ஆகுது ஸ்வாகா – 2
மோடிக்கு கார்ப்பரேட் சேவை – அதுக்கு
பாடுபட லேபர் தேவை -2
பதினெட்டு மணி நேரம் உழைக்க
பலமான ஒடம்பு தேவை
பலமான ஒடம்பு தேவை – நீ
ஒடம்ப வளச்சி தரையில உருள –
அது ஒனக்கு இல்ல கார்ப்பரேட் வளர
யோகா யோகா யோகா
நாடே ஆகுது ஸ்வாகா – 2
ஜமுக்காளம் வேணும் விரிக்க
சம்மணம் போட்டு குந்தணும் கெழக்கே
மோதிர விரலில் மூடணும் மூக்க
மூனு நிமிசம் அடக்கணும் மூச்ச - நீ
அடக்கி அடக்கி விடணும் மூச்ச – மோடி
ஸ்டெர்லைட்டால அழிக்கணும் நாட்ட.
யோகா யோகா யோகா
நாடே ஆகுது ஸ்வாகா – 2
இதயத்துக்கு புஜங்காசனம்
மூளைக்கு சிரசாசனம்
வயித்த கொறைக்க தனுசாசனம்
வயச கொறைக்க வஜ்ராசனம்
டாசுமாக்கு சரக்கடிச்சி – மக்கள்
பாதி பேரு சவாசனம்
யோகா யோகா யோகா
நாடே ஆகுது ஸ்வாகா – 2
ஊட்டச்சத்து குறைபாடு
வறுமையிலே இந்திய நாடு -2
முப்பது கோடி மக்களுக்கு
இல்லை நாட்டில் ராச்சோறு
வறுமையை ஒழிச்சிடுமா
மோடியோட யோகாசனம்
கார்ப்பரேட்டு திட்டங்கள
ஒழிச்சாத்தான் விமோசனம்.
யோகா யோகா யோகா
நாடே ஆகுது ஸ்வாகா – 2
நீ - கண்ண மூடி செய்யிற யோகா
மோடி கார்ப்பரேட்டுக்கு கொடுக்குறார் நேக்கா
யோகா யோகா யோகா
நாடே ஆகுது ஸ்வாகா – 2