Followers

Monday, December 29, 2008

இறந்தவர் உயிர் பெற்று எழ முடியுமா?

இறந்தவர் உயிர் பெற்று எழ முடியுமா?

சில மாதம் முன்பு நாம் பத்திரிக்கைகளில் ஒரு செய்தியைப் படித்திருப்போம். திருச்சியைச் சேர்ந்த வாலிபர் செல்வகுமார் தற்கொலையைப் பற்றியது அந்த செய்தி. இவர் கோவையில் உள்ள தன் அண்ணன் சார்லஸ் வீட்டில் வசித்து வந்தார். வாழ்க்கையில் ஏற்பட்ட விரக்தி காரணமாக மின் விசிறியில் தூக்குப் போட்டுக் கொண்டு தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டார்.

இறந்து போன செல்வகுமாரின் அண்ணன் சார்லஸ் ஒரு இன்ஜினீயர். இவர் தீவிர கிறித்தவ மத நம்பிக்கையுடையவர். இந்த மதப் பற்றினாலேயே தனது வேலையை ராஜினாமாச் செய்து விட்டு 'சுகம் அளிக்கும் அற்புதக் கூட்டம்' என்ற பெயரில் பிரார்த்தனைக் கூட்டங்களை ஆங்காங்கு நடத்தி வந்தார். மனைவி மற்றும் நான்கு குழந்தைகளுடன் வசித்து வரும் இவர் பாஸ்டர் பட்டம் பெற்றவர்.

இறந்து போன தனது தம்பியை அடக்கம் செய்யாமல் தனது வீட்டிலேயே ஒரு ரூமில் வைத்து 'தம்பியை உயிர்ப்பிக்க' ப் போவதாக கூறி ஜெபம் பண்ண ஆரம்பித்துள்ளார். அவரது மனைவியையும் அவரது நான்கு குழந்தைகளையும் தனது தம்பிக்காக ஜெபம் பண்ண வைத்துள்ளார். இது ஒரு நாள் இரண்டு நாள் அல்ல. இரண்டு மாதங்கள் இதே போன்று இவரது குடும்பத்தினர் ஜெபத்தில் ஈடுபட்டுள்ளனர். பிணம் அழுகி துர்நாற்றம் வீசியும் ஜெபத்தை விட வில்லை.

முடிவில் உயிர்த்தெழுந்தது என்னவோ காவல்துறைதான். தற்கொலை செய்து கொண்ட விபரத்தை காவல் துறைக்கு தெரிவிக்காமல் இருந்தது. இறந்த உடலை அடக்கம் செய்யாமல் வைத்துக் கொண்டது. சுகாதாரக் கேட்டை விளைவித்தது - ஆகிய பிரிவுகளில் காவல்துறை வழக்குப் பதிவு செய்திருந்தது.

ஏசுநாதர் இறந்தவர்களை உயிர்ப்பித்திருக்கிறார்: குருடனை பார்வையடைச் செய்திருக்கிறார்: குஷ்டரோகியைக் குணமாக்கியிருக்கிறார்: இதெல்லாம் நடந்தது உண்மை. ஏசுநாதருக்கு இந்த ஆற்றல் வந்தது கர்த்தரிடமிருந்து. எனவே அவரால் அற்புதங்கள் செய்ய முடிந்தது.

இதைப் பார்த்து சார்லஸ் தானும் தன் தம்பியை உயிர்ப்பிக்கப் போகிறேன் என்று கிளம்பியதால்தான் இவ்வளவு பிரச்னையும். இதே போன்ற பல கூட்டங்கள் பல இடங்களிலும் நடப்பதைப் பார்க்கிறோம். மனிதன் என்றுமே இறை சக்தியை அந்த இறைவனின் அனுமதி இல்லாமல் அடைய முடியாது என்பதை படித்தவர்களும் மறந்து விடுவதுதான் விந்தை.

'மேரியின் மகன் ஏசுவே! நான் உம் மீதும் உம் தாயார் மீதும் அருளிய என் அருட்கொடையை நினைவு கூறும். பரிசுத்த ஆன்மாவைக் கொண்டு உமக்கு உதவியளித்து நீர் தொட்டிலிலும் வாலிபப் பருவத்திலும் மனிதர்களிடம் பேசச் செய்தததையும் இன்னும் நான் உனக்கு வேதத்தையும் ஞானத்தையும் தவ்ராத்தையும் இன்ஜீலையும் கற்றுக் கொடுத்ததையும் நினைத்துப் பாரும். இன்னும் நீர் களிமண்ணால் என் உத்தரவைக் கொண்டு பறவை வடிவத்தை போலுண்டாக்கி அதில் நீர் ஊதியபோது அது என் உத்தரவைக் கொண்டு பறவையாகியதையும் இன்னும் என் உத்தரவைக் கொண்டு பிறவிக் குருடனையும் வெண் குஷ்டக்காரனையும் சுகப்படுத்தியதையும் நினைத்துப் பாரும். இறந்தோரை என் உத்தரவைக் கொண்டு உயிர்ப்பித்துக் கல்லறைகளிலிருந்து வெளிப்படுத்தியதையும் நினைத்துப் பாரும்.'

-குர்ஆன் -5:110

இதே போன்ற கூத்துக்கள் இஸ்லாத்திலும் அவ்வப்போது நடப்பதுண்டு. மறைவான விஷயம் எனக்கும் தெரியும் என்று புருடா விட்டு கடைசியில் மாட்டிக் கொண்ட மௌலானாக்கள் பலர் உண்டு. இந்து மத சாமியார்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். அது பலரும் அறிந்த கதை.

ம்ம்... வீட்டுக்கு வீடு வாசப்படி.

Saturday, December 27, 2008

PJ என்ற ஈரெழுத்து வித்தகர்!


PJ என்ற ஈரெழுத்து வித்தகர்!

இன்று தமிழக முஸ்லிம்களிடையே மிகப் பெரும் மாறுதலை தோற்றுவித்தவர்களில் முதன்மையானவர் PJ என்று அனைவராலும் அழைக்கப்படும் பி.ஜெய்னுல்லாபுதீன். புரோகிதம், மூடப்பழக்கம், தர்ஹா வணக்கம், வரதட்சணை, தீவிரவாதம் என்று எந்த துறையையும் விட்டு வைக்காமல் இவை எல்லாம் இஸ்லாத்தில் இல்லாத தீமைகள் என்று தைரியமாக எடுத்துச் சொல்லி இதனால் பலரின் எதிர்ப்பையும் சம்பாதித்துக் கொண்டவர். இன்று இளைஞர்கள் கூட குர்ஆனையும் முஹமது நபியின் வாழ்க்கையையும் தங்களது வாழ்க்கையில் முடிந்தவரை கடைபிடிக்க முயல்வது இவரின் கடந்த 25 ஆண்டுகால பிரச்சாரம் என்றால் மிகையாகாது.

இந்துத்வவாதிகள் எத்தனையோ முயற்சி செய்தும் இன்று வரை தமிழகத்தில் கலவரம் வராமல் தடுத்ததில் பெரும் பங்கு இவர் தமிழகம் முழுதும் நடத்தும் 'இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்' என்ற நிகழ்ச்சியாகும். எவரின் மனமும் கோணாமல் இவர் அளிக்கும் பதில் பல இந்து நண்பர்களை இஸ்லாமியர்களை வெறுக்கும் நிலையிலிருந்து மாற்றியிருக்கிறது.

இவரால் சமீபத்தில் துவக்கப்பட்ட TNTJ என்ற 'தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்' அமைப்பு இன்று பட்டி தொட்டிகளெல்லாம் உறுப்பினர்களைக் கொண்டு ஒரு அரசாங்கத்தைப் போல் நடத்தப்படுகிறது. இந்த இயக்கம் இரத்த தானத்தில் தமிழகத்தில் பல மாவட்டங்களில் முதலிடத்தில் உள்ளது. முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத ஒதுக்கீடு தர காரணமாயிருந்தது, பெண்களையும் வீதிக்கு அழைத்து வந்து போராட வைத்தது என்று இவரது சாதனைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். இவரது புத்தகங்கள் பலவற்றை சவூதி அரேபிய அரசு பல மொழிகளில் மொழியாக்கம் செய்து இலவசமாக விநியோகித்து வருவதில் இருந்தே இவரின் திறமையை அறிந்து கொள்ளலாம்.

இவரை சமீபத்தில் கல்கி இதழ் பேட்டி எடுத்தது. அவற்றை கீழே தருகிறேன்.

கல்கி -14-12-2008

'தவ்ஹீத் ஜமாத்' என்ற அமைப்பு தமிழக இஸ்லாமியரிடையே செல்வாக்கு பெற்றது. குறிப்பாக இஸ்லாமிய பெண்கள் இந்த இயக்கச் செயல்பாடுகளில் பெருமளவு பங்கு கொள்கிறார்கள்.இந்த அமைப்பின் உயிரோட்டமாக இருப்பவர் பீ.ஜெய்னுல் ஆபிதீன். அவருடன் ஒரு சந்திப்பு....

கல்கி: 'இந்து மதம் சார்ந்தது' என்று சொல்லி மலேஷிய அரசு யோகாசனத்தைத் தடை செய்திருக்கிறதே?

பீஜே: அடிப்படையில் யோகாசனம் நல்ல உடல் மற்றும் மனப்பயிற்சி என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இஸ்லாத்தைப் பொறுத்தவரை பிரச்னை எங்கே வருகிறது என்றால் மதம் சார்ந்த விசயங்கள் அதில் கலக்கப்படும் போதுதான். உதாரணமாக பிராணாயாமப் பயிற்ச்சியைச் சொல்லலாம். 'ஓம்...ஓம்' என்று சொல்லி இந்த மூச்சுப் பயிற்சியைச் செய்ய வேண்டும் என்று சில யோகாசன ஆசிரியர்கள் சொல்கிறார்கள்.

இது தவிர புராண விஷயங்களையும் மிக்ஸ் செய்கிறார்கள். 'இறைவன் ஒருவனே' என்ற ஏகத்துவ தத்துவத்தைக் கடைபிடிக்கும் இஸ்லாமியர்களுக்கு யோகாசனத்தில் மதத்தைக் கலக்கும் போது அதைக் கடைபிடிப்பது சாத்தியமில்லாமல் போகிறது. நாலைந்து ஆசனங்களில் இப்படி மதத்தைக் கலப்பது நடக்கிறது. மற்ற ஆசனங்கள் ஒரு பிரச்னையும் இல்லை. யோகாசனம் கற்றுக் கொள்ள ஆர்வத்துடன் செல்லும் இஸ்லாமியர்கள் பின்வாங்கக் காரணம் இதுதான்.

கல்கி: ஒழுக்கக் கேடுகள் நிறைந்த மைக்கேல் ஜாக்சனை இஸ்லாம் மதத்தில் சேர்த்துக் கொண்டது சரியா?

பீஜே: மைக்கேல் ஜாக்ஸன் ஒழுக்கக் கேடாக வாழ்க்கையை நடத்தியிருக்கிறார் என்பதில் கருத்து வேற்றுமை கிடையாது. ஆனால் ஒரு மனிதன் திருந்தி வருவதை ஏற்றுக் கொள்ள வேண்டும். எல்லா மதங்களிலும் இது நடக்கிறது. மைக்கேல் ஜாக்ஸன் புகழ் பெற்றவராக இருப்பதால் அவரைப் பற்றித் தெரிகிறது. பாப் பாடகர் கேட் ஸ்டீவன்ஸன், குத்துச் சண்டை வீரர் முகமது அலி, எழுத்தாளர் கமலாதாஸ் ஆகியோர் இஸ்லாத்தின் கொள்கைகளை ஏற்று இணைந்து நல்ல வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள். அது போல தான் மைக்கேல் ஜாக்ஸனும் இஸ்லாமில் சேர்ந்து மீகாயீல் ஆகியிருக்கிறார்.

கல்கி: ஒபாமா தன்னை இஸ்லாமில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று மதவாதிகள் சொல்கிறார்களே?

பீஜே: நீங்கள் கேட்டதால் சொல்கிறேன். ஒபாமாவின் தாயும் தந்தையும் சட்டபூர்வமான திருமண வாழ்க்கை மேற்கொண்டவர்கள் அல்ல. அவர்கள் கம்பேனியனாக வாழ்ந்து பிறந்தவர்தான் ஒபாமா. அவரது அப்பா அம்மாவை விட்டு பிரிந்தபின் அம்மா மீண்டும் மறுமணம்(அவரும் இஸ்லாமியர்) செய்து கொண்டார்.ஆனால் ஒபாமா தாய் வழிப் பாட்டியால் ஒரு கிறித்தவராகவே வளர்க்கப்பட்டவர். கிறித்தவ மிஷினரிகளிலும் வேலை செய்திருக்கிறார்.

பிறப்பின் அடிப்படையில் ஒருவர் தன்னை முஸ்லிம் என்று உரிமை கொண்டாட முடியாது. அவரே தன்னை கிறித்தவர் என்று சொன்ன பிறகு யாரும் அவரை கட்டாயப் படுத்தக் கூடாது.

கல்கி: பெருகி வரும் தீவிரவாதச் சூழலில் முஸ்லிம்களின் பொறுப்பு என்ன?

பீஜே: அதிகாரத்தில் உள்ளவர்களுக்குத்தான் பொறுப்பு வேண்டும்.நாங்கள் பொறுப்போடுதான் இருக்கிறோம். தீவிரவாதிகளுக்கோ தீவிரவாதத்துக்கோ நாங்கள் சிறிதும் இடம் கொடுப்பது இல்லை. நம் தென்காசியிலேயே ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தின் மீது குண்டு வீசி மாட்டிக் கொண்ட குமார் பாண்டியன் இந்து முன்னணியைச் சேர்ந்தவர். முஸ்லிம்கள் மீது பழி போட பார்த்தார்கள். கோயம்புத்தூர் குண்டு வெடிப்பில் கைது செய்யப் பட்ட முஸ்லிம்களுக்கு எந்த முஸ்லிம் இயக்கமும் சட்ட உதவி செய்யவில்லை. ஆனால் மாலேகான் விவகாரத்தில் இந்து அமைப்புகள் கைது செய்யப் பட்டவர்களுக்கு எல்லா உதவிகளும் செய்கின்றன. இது சரியா?

அரசியல்வாதிகளின் பிரித்தாளும் சூழ்ச்சியால் நடைமுறை வாழ்க்கையில் இன்னல்களை அனுபவித்து வரும் நாங்கள், தீவிரவாதத்தை ஆதரித்து அமைதியை இழப்போமா? நாங்கள் அகிம்சையின் அமைதியை விரும்புகிறோம்.

Thursday, December 25, 2008

தோழர் செங்கொடியும் பரிணாம அறிவியலும்!

தோழர் செங்கொடியும் பரிணாம அறிவியலும்!

டார்வினின் பரிணாம அறிவியலுக்குள் புகுந்தால் சில நேரங்களில் படிக்கும் நாமே குழப்பத்தோடு வெளியில் வருவோம். இதுவரை இந்த துறையை அனைவரும் ஒத்துக் கொள்ளும் படியாக விளக்கமளித்த நபர்களே இல்லை எனலாம். அந்த குழப்பமும் சிக்கலும் நிறைந்த பரிணாமக் கொள்கையைப் பற்றி சில காலம் முன்பு நானும் இங்கு பதிவாக இட்டிருந்தேன். இதைப் படித்த தோழர் செங்கொடி இது சம்பந்தமாக மேலும் விவாதிக்க என் தளத்துக்கு வாருங்களேன் என்று அழைப்பு விடுத்திருந்தார். தற்போதுள்ள வேலைப்பளுவில் அதற்க்கெல்லாம் நேரம் இருக்காது என்பதால் அவர் வலைப்பதிவை பார்வையிட்டதோடு விட்டு விட்டேன். கம்யூனிஷத்தில் பிடிப்புள்ளவர் ஆதலால் நிறைய படிக்கிறார் போல. நிறைய விபரங்களைத் தெரிந்தும் வைத்திருக்கிறார்.

சமீபத்தில் உயிர் சம்பந்தமாக நான் இட்ட பதிவில் உயிர் சம்பந்தமாக நாத்திகவாதிகள் வைக்கும் வாதத்துக்கு பல விளக்கங்களை இந்த பதிவு தந்திருக்கும். எனவேதான் பரிணாமவியலில் எழுப்பப்படும் பல கேள்விகளுக்கும் இதிலும் விடை கிடைக்கும் என்ற ரீதியில் பதிவிட்டிருந்தேன். இதைப் பார்த்த செங்கொடி திரும்பவும் ?
இங்கு 'வாருங்களேன் விவாதிப்போம்' என்று அழைத்துள்ளார். நான் முன்பே கூறியது போல் வருட முடிவில் வேலைப்பளுவைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை. எனவே எனக்கு உள்ள சில சந்தேகங்களை பின் வருமாறு பட்டியலிட்டுள்ளேன். தோழர் செங்கொடியோ அல்லது இது பற்றித் தெரிந்தவர்கள் விளக்கமளித்தால் பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

1. 'ஒரு உயிரிலிருந்துதான் மற்றொரு உயிரினம் உருவாக முடியும்' என்பது அறிவியலார் பொதுவாக ஒத்துக் கொண்ட உண்மை.

ஆனால் பரிணாமவியலோ உலகம் முழுவதும் உயிரற்றப் பொருட்களான கற்பாறைகள் மண்,வாயு ஆகியன நிரம்பி இருந்த போது காற்று, மழை, மற்றும் மின்னல் ஆகியவற்றின் பல பொருட்களின் கூட்டு விளைவால் உயிர் உண்டானது என்கிறது. இரண்டு கருத்தக்களில் ஏதோ ஒன்றுதான் உண்மையாக இருக்க முடியும். இதற்கான உங்களின் விளக்கம் என்ன?

2.ஜீன்களை ஆராய்ந்த அறிவியலார் மனித இனம் அனைத்தும் ஒரு தாயின் வயிற்றிலிருந்து பிறந்து பிறகு பல்கிப் பெருகியதாக கண்டுபிடித்துள்ளனர். இந்த கண்டுபிடிப்பு பற்றி பரிணாமவியல் சொல்வது என்ன?

3. 'ஆற்றலை ஒரு போதும் உருவாக்கவும் முடியாது. அழிக்கவும் முடியாது. ஆயினும் மாற்றி அமைக்கவே முடியும்' - ஐன்ஸ்டீன்.

ஒரு பொருளைப் படைப்பதற்கு ஆற்றல் மிகவும் இன்றியமையாதது.மனிதனைப் படைத்தது இறைவன் தன்னகத்தே கொண்ட ஆற்றலினால் என்கின்றனர் ஆன்மீகவாதிகள். இல்லை... மனிதனாலும் படைக்க முடியும் என்கின்றனர் நாத்திகவாதிகளும் பரிணாமவியலாரும். இது உண்மையானால் அண்டசராசரங்கள் அடங்கிய இப் பேரண்டத்திலிருந்து எந்த ஒன்றையும் எவ்விதத்திலும் பயன்படுத்தாமல் சுத்த சூன்யத்திலிருந்து சுயமாக (இறைவன் படைப்புகளில் கை வைக்காது) சொந்த ஆற்றலைப் பயன்படுத்தி ஒரு சிறிய அணுவையேனும் படைத்துக் காட்ட முடியுமா?

4.நமக்குள் இருக்கும் உயிர் எங்கிருந்து வருகிறது? உயிரின் உதயம் எவ்வாறு நிகழ்கிறது? மனிதனின் இறப்புக்குப் பின் எங்கு செல்கிறது?

5.மனிதனுக்குப் பிறகு பரிணாமம் அடைந்து நாம் என்னவாகப் போகிறோம்? அது எப்போது என்பதையும் தெரிவிக்க முடியுமா?

6. எந்த ஒரு கோட்பாடும் நிரூபிக்கப் பட்டதாக இருக்க வேண்டும். டார்வினின் கோட்பாடுகளில் எத்தனை கோட்பாடுகள் அறிவியல் ரீதியாக நிரூபிக்கப் பட்டுள்ளன?

7.மனிதன் தனது உடல் அமைப்பால் மனிதன் என்ற பெருமையைப் பெறவில்லை. பகுத்தறிவால்தான் பெறுகிறான்.

உடல் வளர்ச்சி, உடல் அமைப்பில் மாறுதல் என்பதற்குத்தான் டார்வின் காரண காரியங்களைக் கூறுகிறார். பகுத்தறிவு இல்லாத உயிரினம் பகுத்தறிவு உள்ளதாக மாறுவதற்குரிய சூழல் நிர்பந்தம் எது என்று பரிணாமவியல் கூறும் தத்துவம் என்ன?

பரிணாமவியலை முழுவதும் படித்தவனல்ல நான். எனக்குள் எழுந்த சந்தேகங்களை பட்டியலிட்டுள்ளேன். நான் தெளிவு பெற விளக்கமாக பதில் அளிப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

தின மலர். அறிவியல் ஆயிரம்!

கேள்வி: பலரது சந்தேகம் உலகம் எப்படி வந்தது? முதலில் ஒரு செல் உயிர் தோன்றியது என்றும்: சிலர் கடவுள் நம்மைப் படைத்தார் என்றும் கூறப்படுகிறது. எது நிஜம்?

-பிரியங்கா, பண்ணைக்காடு, கொடைக்கானல்.

இங்கே உலகம் தோன்றுவதற்கும் உயிர்கள் தோன்றுவதற்கும் வெளியிலிருந்து ஒரு ஆள் தேவைப் பட வில்லை. எல்லாமே தானாக உதித்துக் கொள்ள முடியும் என்று அறிவியல் கூறுகிறது.

கடிகாரம், பூட்டு, சாவி, பானை என்று எந்த செயற்கைப் பொருளைப் பார்க்க நேர்ந்தாலும் அவை யாராலோ செய்யப் பட்டது என்பது நமக்குத் தெரிகிறது. தனக்குத் தானாகவே ஒட்டிக் கொண்டும், பொருந்திக் கொண்டும், உருவாகிக் கொள்ளும் கருவியை மனிதன் இதுவரை கண்டு பிடிக்கவில்லை. எனவே செய்யப் பட்டவைகளுக்கு செய்தவர் உண்டு.

சூரியன், உலகம், உயிர்கள் யாவும் செய்யப் பட்டவைகளா? இல்லையே. எனவே செய்தவர் எவரும் இல்லை.

ஒரு நிமிடம் .... செயற்கைப் பொருட்கள் தாமாக செய்து கொள்ள முடியாதபோது.... இயற்கைப் பொருட்கள் மட்டும் எப்படி செய்து கொள்கின்றன? எனில், ஒரு செய்முறை தகவலின் அடிப்படையில் அவை செய்து கொள்கின்றன என்று அறிவியல் சொல்வதால்....இயற்கைப் பொருட்கள் தோன்றுவதற்கு முன்பாகவே ஒரு 'தகவல்' இருந்திருப்பது உறுதியாகிறது. அந்தத் தகவல் ....எது? யார?

Tuesday, December 23, 2008

இந்த காவல்காரர் செய்த தவறு என்ன?



இந்த காவல்காரர் செய்த தவறு என்ன? கண்டு பிடியுங்கள் பார்ப்போம!

ஹைதராபாத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் கார்பரேஷன் ஈடுபட்டிருந்தது. அப்பொழுது அனுமதி இல்லாமல் போக்குவரத்துக்கு இடையூராக ஒரு சிறிய கோவில் இருந்தது. அதை அகற்ற வந்த பணியார்களுக்கு பாதுகாப்பாக வந்த காவலரை இந்துத்வாவாதிகள் தாக்குவதைத்தான் படத்தில் பார்க்கிறீர்கள்.

அத்வானியும், மோடியும் குறிப்பிடும் ராமராஜ்யம் என்பது இதுதானோ!

Saturday, December 20, 2008

'கடவுள்' தோனிக்கு கோவில்: ராஞ்சி ரசிகர்கள் முடிவு!



ராஞ்சி: கிரிக்கெட்டில் அடுத்தடுத்து வெற்றிகளை குவித்து வரும் இந்திய அணியின் கேப்டன் தோனிக்கு ராஞ்சி ரசிகர்கள் சேர்ந்து கோவில் கட்ட முடிவு செய்துள்ளனர். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி தலைமையில், "டுவென்டி-20' உலககோப்பை, ஆஸ்திரேலியா ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களை கைப்பற்றி, தற்போது இங்கிலாந்து தொடரிலும் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது.

ஐந்தரை அடி சிலை: இந்நிலையில் தோனியை கவுரவிக்கும் விதத்தில் தோனி ரசிகர்கள் கிளப், ராஞ்சியில் கோவில் கட்ட முடிவு செய்துள்ளனர். 1,650 சதுர அடியில், அடுத்த ஆண்டில் கோவில் கட்டி, ஐந்தரை அடி உயரத்தில் தோனிக்கு சிலை வைக்கப்பட இருக்கிறது. இதுதவிர தோனியின் சிறுவயது, இளைஞர் மற்றும் இந்திய அணியில் அறிமுக புகைப்படங்கள் மற்றும் தற்போதைய புகைப்படங்கள் உட்பட 200க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் இந்த கோவிலில் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட இருக்கிறது.

கிரிக்கெட் கடவுள்: இதுகுறித்து, தோனி ரசிகர்கள் கிளப்பின் தலைவர் ஜிதேந்திர குமார் சிங் தெரிவித்தது: அமிதாப்பச்சன், ஷாருக்கானுக்கு லண்டன் மியூசியத்தில் மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பிரபலமான தோனிக்கு ஏன் கோவில் கட்டக்கூடாது. ஜார்க்கண்ட் மற்றும் ராஞ்சியை கிரிக்கெட் உலக வரை படத்தில் இடம்பெற செய்தவர் தோனி. இதனால் தோனி ரசிகர்கள் கிளப்பின் சார்பில் "கிரிக்கெட் கடவுள்' தோனிக்கு கோவில் கட்ட முடிவு செய்துள்ளோம். இதுதான் அவருக்கு நாம் செய்யும் மரியாதை.

கோவில் திறப்பு: கோவில் கட்டுவதற்கு, பல்வேறு தரப்பில் எங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். கோவிலை திறந்து வைக்க தோனியை சம்மதிக்க வைக்க உள்ளோம். இவ்வாறு ஜிதேந்திர குமார் சிங் தெரிவித்தார்.

-Dina Malar

Thursday, December 18, 2008

அதிகாரி ஹேமந்த் கர்கரேயை சுட்டது யார்?

அதிகாரி ஹேமந்த் கர்கரேயை சுட்டது யார்?

மும்பை துப்பாக்கிச் சூட்டில் பாகிஸ்தானிய தீவிரவாதிகளால் ஹேமந்த் கர்கரே சுடப்பட்டதாகவும், அதை உயிருடன் பிடிபட்ட தீவிரவாதியே ஒத்துக் கொண்டதாகவும் நாம் செய்திகளில் படித்தோம். ஆனால் நேற்று மத்திய மந்திரி அப்துர்ரஹ்மான் அந்துலே 'அதிகாரி ஹேமந்த் கர்கரேயின் சேவைக்கும் தியாகத்துக்கும் தலை வணங்குகிறேன். நேர்மையான அதிகாரி. இவரை குறிப்பாக சுடுவதற்கு தீவிரவாதிகளுக்கு எந்த காரணமும் இல்லை. மாலேகான் குண்டு வெடிப்பில் நேர்மையாக நடந்து குற்றவாளிகளை பிடித்ததில் பாதிக்கப்பட்டவர்கள் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டதாகத்தான் நான் பார்க்கிறேன்.' என்று தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

'ஒரு மத்திய மந்திரி நாட்டில் மிக முக்கியமாக கருதப்படும் ஒரு சம்பவத்தைப் பற்றி ஆதாரம் இல்லாமல் சொல்லியிருப்பாரா?' என்றும் 'பொறுப்பற்ற முறையில் பேட்டி கொடுத்த அந்துலே பதவி விலக வேண்டும்' என்றும் காரசாரமான விவாதங்கள் தொடங்கி விட்டன. அந்துலேயின் கொடும்பாவி எரிப்பையும் சிவசேனை செய்து முடித்து விட்டது.

என் பாகிஸ்தானிய நண்பரிடம் பாம்பே குண்டு வெடிப்பைப் பற்றிய வாக்குவாதத்தில் ஈடுபட்டேன். அப்போது அவர் 'பலுசிஸதான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லையோரம் உள்ள மாகாணங்களில் பாகிஸ்தானின் சட்டங்களை மதிப்பவர் எவருமில்லை. பாகிஸ்தானும் அங்கு சற்று அடக்கியே வாசிக்கும். போதைப் பொருள் நடமாட்டமும் இங்கு அதிகம். பணத்திற்காக எதையும் செய்யக் கூடிய கூலிகள் இங்கு அதிகம் கிடைப்பர்.' என்ற ரீதியில் சொன்னார்.

அவர் மேலும் கூறும்பொழுது 'மும்பை குண்டு வெடிப்பைப் பார்த்து நான் மிகவும் வருத்தமுற்றேன். இதில் என் நாட்டைச் சேர்ந்தவர்களும் ஈடுபட்டுள்ளது என்னை மிகவும் வருத்தமுறச் செய்கிறது. பாகிஸ்தானில் சில மத்ரஸாக்களில் ஜிஹாதுக்கு தவறான விளக்கம் கொடுத்து மூளை சலவையும் நடக்கிறது. அவர்களுக்கு உங்கள் நாட்டு சில ஹிந்துத்வா தலைவர்களின் இஸ்லாத்துக்கு விரோதமான பேச்சுக்களையும் போட்டுக்காட்டி தயார்ப்படுத்துகிறார்கள். தீவிரவாதத்தை முற்றாக ஒழிக்க எங்கள் நாடு இது போன்ற தவறாக வழிநடத்தப்படும் மத்ரஸாக்களை மூட வேண்டும். இதன் மூலமே அப்பாவிகள் தற்கொலை குண்டுதாரிகளாக மாறுவதைத் தடுக்க முடியும்.' என்றும் கூறினார்.

இந்தியாவில் கூட எல்லையோரம் சில இஸ்லாமியர்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவான நிலையை எடுப்பதையும் பார்க்கிறோம். தவறாக வழி நடத்தப்பட்டிருக்கும் இது போன்றவர்களை சமூகத்திலிருந்து ஒதுக்க வேண்டும். நமது நாட்டை நிர்மூலமாக்கும் எவனையும் அது முஸ்லிமாக இருந்தாலும் அவனுக்கு எதிரான நிலையைத்தான் இந்திய முஸ்லிம்கள் எடுக்க வேண்டும். 95 சதவீதமான இஸ்லாமியர் இந்திய சார்புடையவர்களாகவே இருக்கின்றனர். அப்படி மாறும் ஒரு சிலர் கூட இந்திய ராணுவத்தாலும் காவல்துறையாலும் பாதிப்படைந்தவர்களே!

சரி தலைப்புக்கு வருவோம்....

'இது போல் கூலிக்கு வேலை செய்யும் பாகிஸ்தானிகள் கூட்டத்தில் குறிப்பிட்டு ஹேமந்த் கர்கரேயை சுட்டது எப்படி? போலீஸ் காவலில் உள்ள பாகிஸ்தானிய தீவிரவாதியை சித்திரவதை செய்து தங்கள் விருப்பத்துக்கு தோதுவாக வாக்கு மூலம் வாங்க முடியும் தானே' என்ற ரீதியிலும் சர்ச்சை கிளம்பியுள்ளது.

இந்த சதியில் அமெரிக்க சி.ஐ.ஏ யின் சதியும் இருக்கலாம் என்ற பாகிஸ்தான் அதிகாரியின் பேட்டியையும் என் நண்பர் சுட்டிக் காட்டினார். இது போல் பல யூகங்களுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை.

பதிவு இடும் நேரம் அந்துலே தனது கருத்தை வாபஸ் வாங்கிக் கொண்டதாக செய்தியில் பார்த்தேன்.

Wednesday, December 17, 2008

எறும்புகளைப் பற்றி என்றாவது எண்ணியதுண்டா?






எறும்புகளைப் பற்றி என்றாவது எண்ணியதுண்டா?

நாம் அன்றாடம் சந்திக்கும் பல உயிரினங்களில் எறும்பும் ஒன்று. இந்த எறும்பினத்தைப் பற்றி நாம் என்றாவது சிந்தித்திருக்கிறோமா? இந்த பதிவில் எறும்புகளைப் பற்றி சில ருசிகர தகவல்களை பரிமாறிக் கொள்வோமே!

எறும்புகளின் அறிவாற்றல்:

ஒரு வகை எறும்பு இனத்தில் தொழிலாளி எறும்புகள் குளிர் காலங்களில் பிற எறும்புகளின் உணவுக்காகச் சின்ன சின்ன வித்துக்களை இழுத்து வந்து புற்றுக்களில் சேர்க்கின்றன. புற்றுக்கள் தானியங்கள், வித்துக்கள் போன்றவற்றை அரைப்பதற்க்கென்றே ஒரு கிடங்கை அந்த எறும்புகள் உருவாக்குகின்றன.

அங்கே குடியிருக்கும் எறும்புகளுக்கு தானியங்களை அரைத்து உண்ணுவதற்க்கேற்ற வகையில் முன்னேற்ப்பாடுகள் செய்து தருவதற்க்கான பொறுப்பை பெரிய தாடைகளையுடைய சில எறும்புகள் ஏற்றுக் கொள்கின்றன. அது ஒன்று தான் அந்த எறும்புகளின் வேலை. இலையுதிர் காலம் வரும்போது அந்தக் கிடங்கிலுள்ள எல்லா தானியங்களும் அரைத்து முடிக்கப்பட்டு விடுகின்றன. இப்போது பெரிய எண்ணிக்கையுடைய அந்த எறும்புகளின் தலை சிறந்த பணி முன்னேற்பாடாக ஒதுக்கப்பட்டுள்ள அந்த உணவைப் பாதுகாப்பது ஒன்றுதான்.



இன்னும் சில வகை எறும்புகளை அவற்றின் உள்ளுணர்வோஅல்லது அறிவுத்திறனோ எதுவோ ஒன்று அவற்றின் உணவுக்காகவும் வசிப்பதற்க்காகவும் புல் வீடுகளை வளர்க்கச் சொல்லித் தூண்டுகிறது. புல்லால் ஆன அந்தக் குடில்களே அவற்றிற்கு உணவாகவும் பயன்படுவதால் அவற்றைத் தோட்ட வீடுகள் என்றும் சொல்லலாம்.

சில எறும்புகள் தேன் கூடுகளுக்கு இடர் விளைவிக்கும் சில குறிப்பிட்ட கம்பளிப் புழுக்களையும் பூச்சிகளையும் வேட்டையாடி உண்ணுகின்றன. அந்த புழுக்களும் பூச்சிகளும்தான் அவற்றுக்கு மாமிசம் வழங்கும் ஆடு மாடுகளாகும். அந்தப் புழுக்களிலிருந்து தேனைப் போல வடியும் ஒரு திரவத்தையும் அந்த எறும்புகள் உணவாகக் கொள்கின்றன.

சில எறும்புகள் அவற்றிலேயே சிலவற்றைப் பிடித்துத் தமக்கு அடிமைகளாக்கிக் கொள்கின்றன. வேறு சில எறும்புகள் தமக்குக் குடில் அமைத்துக் கொள்ளும் போது இலை தழைகளை தமக்குத் தேவையான பருமனுக்கு ஏற்ப வெட்டிக் கொள்கின்றன.

சில தொழிலாளி எறும்புகள் ஓய்வாகத் தமது கை கால்களை ஓரிடத்தில் கிடத்திக் கொண்டு படுத்து விடும்போது பட்டுப் புழுக்களைப்போல் நூல் நூற்க்கவும் அவற்றால் நெய்யவும் தெரிந்த கூடுகளில் வாழும் ஒரு வகைச் சிற்றெறும்புகளை வேலைக்கு அமர்த்திக் கொள்கின்றன. சில குட்டி எறும்புகளுக்கு அவற்றுக்கான கூடுகளை உருவாக்கிக் கொள்ளத் தெரியாத போது அதன் சமுதாயம் பாடுபட்டு அதற்காக ஒரு கூட்டை உருவாக்கித் தருகின்றது.

-'அறிவு இறை நம்பிக்கையைத் தூண்டுகிறது'
பேராசியர் மஹ்மூத் ஸாலிஹ்

பேராசியரின் இந்த கட்டுரையைப் பார்த்து நாம் பிரமித்து போகிறோம். சின்னஞ்சிறிய எறும்பு அதற்கும் கண் வாய் மூக்கு வயிறு குடல் மலப்பாதை என்று ஒன்று விடாமல் அதனுள் வைத்து அதற்கு உயிரையும் கொடுத்தது எந்த சக்தி?

எந்த உயிரணுக்களிலிருந்து எறும்புகள் உருவாகின்றனவோ அவற்றிடம் இந்த சிக்கல் நிறைந்த பணிகள் எல்லாம் எவ்வாறு ஒப்படைக்கப்படுகின்றன?

நிச்சயம் அங்கே அவற்றுக்கெல்லாம் இந்தப் பணிகளை நிறைவேற்றுதற்க்குரிய வழிகாட்டும் படைப்பாளன் ஒருவன் இருக்கின்றான் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

'அவனே படைத்தான். ஒழுங்குற அமைத்தான். அவனே நிர்ணயித்தான். வழி காட்டினான்' - குர்ஆன் 87:1-2-3

Sunday, December 14, 2008

யார் இந்த அஃப்ஸல்?

இன்று சிவசேனைக் கட்சியைச் சார்ந்த சிலர் அஃப்சல் குருவின் உருவத்தை தூக்கில் தொங்க விட்டு ஆக்ரோஷமாக அடிக்கவும் செய்தனர். இன்று கூட ஒரு அனானி அஃப்சல் குருவை பற்றிய எனது அபிப்ராயத்தையும் கேட்டிருந்தார். இவற்றுக்கெல்லாம் பதிலாக நான் ஒரு வருடம் முன்பு இட்ட பதிவை மீள் பதிவு செய்கிறேன்.

யார் இந்த அஃப்ஸல்?

'1990-ல் அப்ஸல் 'ஜே.கே.எல.எஃப்' என்ற இயக்கத்தால் கஷ்மீரில் வாழும் ஆயிரக்கணக்கான இளைஞர்களைப் போல் கவரப்பட்டார். பாகிஸ்தானுக்கும் ஒரு முறை சென்றார். இயக்கத்தில் இருந்த கருத்து வேறுபாடுகளால் மனம் உடைந்து டெல்லி சென்றார். டெல்லியில் தன்னுடைய படிப்பை தொடர்ந்திட முடிவு செய்தார்.அவர் எப்போதும் படிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டினார்.அதற்கு முன் அவர் எம்.பி;பி;எஸ் (மருத்துவப் பட்டத்திற்காக படித்துக் கொண்டிருந்தார். என் கணவர் சாதாரண வாழ்க்கையையே வாழ்ந்திட விரும்பினார். அதனால் நமது இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்தார். எல்லைப் பாதுகாப்புப் படையினர் அவருடைய சான்றிதழ்களைத் தர மறுத்து விட்டனர். சான்றிதழ்களை தந்திட வேண்டும் என்றால் இன்னும் இரண்டு பேரை சரணடையச் செய்திட வேண்டும் எனக் கட்டாயப் படுத்தினர். இதனால் இன்னும் இரண்டு பேரை சரணடையச் செய்தார். அதன் பின்னர் அஃப்ஸலுக்கு ஒரு சான்றிதழைத் தந்தார்கள். அதில் 'அவர் ஒரு சரணடைந்தவர்' எனக் குறிப்பிட்டிருந்தார்கள். சரணடைந்த ஒருவராக கஷ்மீரில் வாழ்க்கை நடத்துவது மிகவும் சிக்கலான ஒன்று. ஆனாலும் அவர் தன் குடும்பத்தோடு கஷ்மீரிலேயே வாழ்ந்திடுவது என முடிவு செய்தார்.'

'1997-ல் அவர் ஒரு சிறு வியாபாரத்தைத் தொடங்கினார். அது மருத்துவம் - மருந்து ஆகியவை தொடர்பான வியாபாரம். மருத்துவ கருவிகளை வாங்கி விற்பதும் இதில் அடங்கும். அடுத்த வருடம் நாங்கள் திருமணம் முடித்துக் கொண்டோம். அப்போது அவருக்கு வயது 28. எனது வயது 18.'

'நாங்கள் கஷ்மீரில் வாழ்ந்த காலங்கள் வரை இந்திய பாதுகாப்புப் படையினர் எங்களைத் தொடர்ந்து தொந்தரவு செய்து கொண்டே இருந்தார்கள். யார் யார் மீதெல்லாம் சந்தேகம் இருக்கின்றதோ அவர்களைப் பற்றிய தகவல்களைத் தந்திட வேண்டும். அவர்களை உளவு பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என அழுத்தங்களும் அல்லல்களும் தந்து கொண்டே இருந்தார்கள். '22 ரைஃபிள்ஸ்' என்ற ராணுவப் பிரிவைச் சார்ந்த மேஜர் இராம் மோகன் ராய் என்பவர் அஃப்ஸலை சித்திரவதை செய்தார். அவருடைய மரம ஸ்தானத்தில் மின்சாரத்தைப் பாய்ச்சி சித்திரவதை செய்தார். அஃப்ஸலை அவமானப் படுத்தினார். கேவலமான சொற்களைக் கொட்டி வைதார்.'

'சில நாட்கள் கழித்து சிறப்புக் காவல் படையினர் அவரைத் தங்களுடைய ஹம்ஹமா முகாமிற்கு அழைத்துச் சென்றார்கள். அந்த முகாமில் வைத்து டி.எஸ்.பி.டாரிந்தர் சிங், டி.எஸ்.பி. வினாய் குப்தா ஆகியோர் ஒரு லட்சம் ரூபாய் கேட்டார்கள். இந்த ஒரு லட்சம்ரூபாயை கொடுக்கும் அளவிற்கு நாங்கள் வசதியானவர்கள் அல்ல. அதனால் நாங்கள் எங்களிடமிருந்தவை அனைத்தையும் விற்றுவிட வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானோம்.என்னுடைய திருமணத்தில் கிடைத்த சிறிய தங்க நகையையும் விற்பனை செய்ய வேண்டியதாயிற்று. இத்தனையையும் அஃப்ஸலை இந்தச் சித்திரவதைகளிலிருந்து காப்பாற்றிட இழக்க வேண்டியதாயிற்று.'

'அஃப்ஸலை குளிர்ந்த நீரில் நிறுத்தி வைத்தார்கள். பெட்ரோலை அவருடைய மலத் துவாரத்தில் ஊற்றினார்கள்.ஒரு அதிகாரி சாந்தி ஷிங் என்பவர் அஃப்ஸலை கடுங்குளிரில் தலை கீழாக தொங்க விட்டார். மணிக்கணக்கில் தொங்க விட்டார். அவருடைய மறைவிடத்தில் மீண்டும் மின் அதிர்ச்சியைப் பாய்ச்சினர். இந்த சித்திரவதை ரணங்களிலிருந்து வெளியே வந்திட அவர் பல மாதங்கள் மருத்துவ சிகிச்சை பெற வேண்டியதாயிற்று.'

'அஃப்ஸல் ஏதேனும் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டிருக்கலாம். அதனால்தான் அவரை இப்படி சித்திரவதை செய்திருக்கலாம் என நீங்கள் நினைக்கலாம். இப்படிச் சித்திரவதை செய்யப் பட்டது அவரிடமிருந்து தகவல்களைச் சேகரிக்கத்தான் என்றும் நீங்கள் நினைக்கலாம். ஆனால் கஷ்மீரில் இருக்கும் சூழலை நீங்கள் மனதில் கொள்ள வேண்டும். கஷ்மீரில் வாழும்; ஒவ்வொருவருக்கும் அங்கே என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது தெரிந்திருக்கும். அவர் அங்கு நடப்பவற்றில் பங்கு பெறுகிறாரோ இல்லையோ அங்கு என்ன நடக்கிறது என்பது நிச்சயமாகத் தெரிந்திருக்கும். மக்கள் அனைவரையும் தகவல் சொல்பவர்களாக மாற்றுவதன் மூலம் அண்ணனுக்கு எதிராக தம்பியையும், கணவனுக்கு எதிராக மனைவியையும், பிள்ளைகளுக்கு எதிராக பெற்றோரையும் மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அஃப்ஸல் தன் குடும்பத்தோடு அமைதியாக வாழவே விரும்பினார். ஆனால் எஸஃ.டி.எஃப் என்ற சிறப்புக் காவல் அதற்கு அனுமதிக்கவில்லை.'

'இது போன்ற குரூரமான சூழ்நிலையிலிருந்து அஃப்ஸல் தன்னை விடுவித்துக் கொள்ள விரும்பினார். அவர் தக் வீட்டை விட்டு வெளியேறினார்.தன் குடும்பத்தையும் தொடர்ந்தார் டெல்லி வந்தார்.டெல்லியில் வந்து வயிறு பிழைக்க விரும்பினார். அங்கே தன்னுடைய வாழ்க்கையைச் சீர் செய்திட முயற்சி செய்தார். வாழ்க்கை ஓரளவுக்கு நிலை பெற்றதும் என்னையும் எங்களது நான்கு வயது மகனையும் டெல்லிக்கு அழைத்து வாழ வைப்பதாக முடிவு செய்தார்.எல்லாக் குடும்பங்களையும் போல நாங்கள் ஒன்றாய் வாழ்ந்திட விரும்பினோம். ஆனால் மீண்டும் சிறப்புக் காவல் படையினர் என் கணவரை டெல்லியிலும் துரத்த ஆரம்பித்தனர். அத்தோடு எங்களுடைய எல்லாக் கனவுகளும் தகர்ந்து தவிடு பொடியாயின.

'சிறப்புக் காவல் படையினர் என் கணவரிடம் முஹம்மத் என்பவரை கஷ்மீரிலிருந்து டெல்லிக்கு அழைத்து வர வேண்டும் எனக் கட்டாயப் படுத்தினார்கள். என்னுடைய கணவர் இந்த முஹம்மத் என்பவரையும், தாரிக் என்பவரையும் சிறப்புக் காவல் படையின் கஷ்மீர் முகாமில் வைத்தே சந்தித்தார். இவர்களைப் பற்றி என்னுடைய கணவருக்கு எதுவும் தெரியாது. அதே போல் ஏன் இப்படியொரு பணியைச் (கஷ்மீர் சிறப்புக் காவல் படையின் முகாமிலிருந்து இவர்களை டெல்லிக்கு அழைத்து வரும் பணியை) செய்யச் சொல்கிறார்கள் என்பதும் என் கணவருக்குத் தெரியாது. '

'இவற்றை எல்லாம் என் கணவர் நீதி மன்றத்தில் விரிவாக எடுத்துச் சொன்னார். ஆனால் நீதி மன்றமோ பாதியை எடுத்துக் கொண்டது. மீதியை எடுத்துக் கொள்ள மறுத்து விட்டது. என்னுடைய கணவர் முஹம்மதை காஷ்மீரிலிருந்து டெல்லிக்கு அழைத்து வந்தார் என்பதை எடுத்துக் கொண்டது. ஆனால் முஹம்மதை சிறப்புக் காவல் படைதான் தன் முகாமிலிருந்து டெல்லிக்கு அழைத்துச் செல்லும்படி பணித்தது என்பதை ஏற்றுக் கொள்ள மறுத்தது.'

'கீழ் நீதி மன்றங்களில் அஃப்ஸல் என்ற என் கணவருக்கு வாதாட யாரும் இல்லை. நீதி மன்றம் ஒரு வழக்கறிஞரை நியமித்தது. அவரோ என் கணவரிடம் என்ன நடந்தது என்பதை எப்போதும் கேட்டதில்லை. அதே போல் அவருக்கு எதிராகச் சாட்சியம் சொன்னவர்களைக் குறுக்கு விசாரணையும் செய்யவில்லை. அந்த வழக்கறிஞர் என் கணவரை வெறுத்தார். நீதிபதி திங்காரா அவர்களிடம் என்னுடைய கணவர் 'அந்த வழக்கறிஞர் எனக்காக வாதாட வேண்டாம் ' என்று எவ்வளவோ சொன்னார். ஆனால் நீதிபதி திங்காரா அதைக் கண்டு கொள்ளவே இல்லை. உண்மையில் என் கணவர் கீழ் நீதி மன்றத்தில் தனது தரப்பில் எதையும் எடுத்துச் சொல்லிட இயலவில்லை. என்னுடைய கணவர் எதையேனும் சொல்லிட முற்படும் போதெல்லாம் நீதிபதி அதைக் கேடக மறுத்து விட்டார். அவர் தன்னுடைய துவேஷங்களை வெளிப்படையாகவே நீதி மன்றத்தில் காட்டினார்.'

'உயர் நீதி மன்றத்தில் ஒருவர் மனித உரிமை வழக்கறிஞர் எனக் கூறிக் கொண்டு என்னுடைய கணவருக்காக வாதாட முன் வந்தார். என் கணவரும் அதை ஏற்றுக் கொண்டார். ஆனால் அவர் என் கணவருக்காக வாதிடவில்லை. மாறாக நீதி மன்றத்திடம் என் கணவரைத் தூக்கிலிட்டுக் கொலை செய்யக் கூடாது: விஷ ஊசியைப் போட்டுத்தான் சாகடிக்க வேண்டும் என வாதாடினார். என் கணவருக்காக ஒரு வழக்கறிஞரை வைத்திடும் வாய்ப்பு எனக்கிருக்கவில்லை. எனக்கு டெல்லியில் யாரையும் தெரியாது. வேறு வழியின்றி என் கணவர் எஸ்.ஏ.ஆர் ஜீலானியைக் காப்பதற்காக ஏற்படுத்தப் பட்ட வழக்கறிஞர் குழுவுக்கு கடிதம் எழுதினார். இந்தக் குழு 'சுசில்குமார்' என்ற வழக்கறிஞரை வைத்தது. ஆனால் இவரால் உச்ச நீதிமன்றம் சாட்சியங்களுக்குள் செல்ல முடியாது. அதனால் என் கணவருக்கு என்ன நடக்கும் என்று தெரியவில்லை.'

'என் கணவரைத் தூக்கில் போட்டு விடக் கூடாது என்றும் அவருடைய வழக்கை நியாயமாக நீதியாக விசாரிக்க வேண்டும் என்றும் உச்சநீதி மன்றத்தைக் கேட்டுக் கொள்கிறேன்.தன்னுடைய தரப்பு வாதத்தைச் சொல்லிட வாய்ப்பளிக்கப்படாத ஒருவரை நீங்கள் (உச்சநீதி மன்றம்) தூக்கிலிட மாட்டீர்கள் என்று நான் நம்புகிறேன். சம்பவம் நடந்தவுடன் காவல் துறையினர் என் கணவரை ஊடகங்களின் மூலம் ஒப்புதல் வாக்கு மூலம் தந்திட கட்டயப் படுத்தினார்கள். இது வழக்கு விசாரணை தொடங்குவதற்கு முன்னரே நடைபெற்றது.

'காவல் துறையினர் அவரை அவமானப் படுத்தினார்கள். அடித்தார்கள். சித்திரவதை செய்தார்கள்.அவருடைய வாயில் மூத்திரத்தைப் பெய்தார்கள்.'

'இவற்றை எல்லாம் வெளிப்படையாகச் சொல்வதற்கு வெட்கமாகவெ இருக்கின்றது. ஆனால் சூழ்நிலைகள் என்னைக் கட்டாயப் படுத்தியதால்தான் இவற்றை எல்லாம் சொல்லிட வேண்டியதாயிற்று. இவற்றை எல்லாம் எழுத்தில் வடிப்பதற்கு மிகையான தைரியம் தேவைப்பட்டது. இப்பொது ஆறு வயதாகி விட்ட என் மகனின் தந்தையைக் காப்பாற்றிடுவதற்காக நான் இவற்றை எல்லாம் சொல்லிட வேண்டியதாயிற்று.'

'என்னுடைய கணவருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக உச்ச நீதி மன்றம் பேசுமா? என் சார்பில் நீங்கள் பேசுவீர்களா?நான் என் கணவருக்காகவும் என் மகனின் தந்தைக்காகவும் வாதாடுகிறேன் என்பது உண்மைதான். அதே நேரத்தில் கஷ்மீரில் வாடும் என்னைப் போன்ற பெண்களுக்காகவும் வாதாடுகின்றேன்.'

இந்த மொத்த விவகாரத்திலும் நாடாளுமன்றத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் எஸ்.டி.எஃப் என்ற சிறப்புப் பாதுகாப்புப் படையின் கண்காணிப்பில் நீண்ட நாட்கள் இருந்தவர்கள் என்பது புலப்படும். இதனால்தான் விருப்பு வெறுப்பற்ற ஒரு விசாரணை நாடாளுமன்றத் தாக்குதலில் மேற் கொள்ளப் பட வேண்டும் என ஜன நாயக உரிமைகளுக்கான மக்கள் குழுமம் கேட்கிறது.

-நாடாளுமன்ற தாக்குதலில் சம்பந்தம் உள்ளதாக அப்ஸல் என்ற கஷ்மீரி கைது செய்யப்பட்டு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.மாவட்ட தலைமை நீதிபதி திங்காரா அவர்களாலும், பின்னர் உச்ச நீதி மன்றத்தாலும் தண்டிக்கப் பட்டவர். இந்த தண்டனையைப் பற்றி அஃப்ஸலின் மனைவி தபஸ்ஸூம் தான் உச்ச நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் தமிழாக்கத்தைத்தான் நாம் மேலே பார்த்தது.

Source : Annexe 18 of : December, 13,
Terror Over Democracy By Nirmalangshu Mukherji:
A Wifes Appeal for justice :
Published by Promilla & co, New Delhi.

அஃப்ஸல் நம் பாராளுமன்றத்தை தாக்க திட்டம் தீட்டியிருந்தால் உண்மையிலேயே தூக்கு தண்டனை கொடுக்க தகுதியானவர்தான். ஆனால் இங்கு அன்றைய பி.ஜே.பி அரசும், இந்துத்துவ வாதிகளும், நீதிபதிகளும் திட்டமிட்டு ஏற்கெனவே அவர்களின் கஸ்டடியில் இருந்தவர்களை வைத்து நடத்திய நாடகமாகத்தான் மேற் சொன்ன மனுவின் மூலம் தெரிய வருகிறது. இந்த மனுவில் உள்ள விபரங்கள் உண்மையாகும் பட்ஷத்தில் உண்மைக் குற்றவாளிகளை மக்கள் முன் கொண்டு வந்து உச்ச பட்ச தண்டனையை கொடுக்க வேண்டும்.

எஸ்.ஏ.ஆர். ஜீலானி!

தூக்குத் தண்டனை வழங்கப்பட்டவர்களில் நாடாளுமன்றத் தாக்குதலுக்கு சதி செய்தார் எனக் குற்றம் சாட்டப்பட்ட எஸ்.ஏ.ஆர். ஜீலானி என்பவரும் உண்டு. இவர் டெல்லிப் பல்கலைக் கழகத்தில் அரபித் துறைத் தலைவராகப் பணியாற்றிக் கொண்டிருந்தவர். ஜீலானி அவர்களை டெல்லி உயர்நீதி மன்றம் வழக்கிலிருந்தே விடுதலை செய்தது. அவரை விடுதலை செய்திடும் போது இந்த வழக்கில் சமர்ப்பிக்கப் பட்ட சாட்சியங்கள் எத்துணை பொய்யானவை போலியானவை என்பதைத் தெளிவுபடுத்தியது.

ஜீலானியின் மீது பதினெட்டு சாட்சியங்களின் அடிப்படையில் குற்றம் நிரூபிக்கப் பட்டதாக கீழ் நீதிமன்றம் கூறிற்று. அதனால் மரண தண்டனையும் வழங்கிற்று. அந்த பதினெட்டு சாட்சியங்களும் போலியானவை என உயர் நீதி மன்றம் கூறிற்று. அத்தனை சாட்சியங்களையும் ஒட்டுமொத்தமாக நிராகரித்தது உயர் நீதி மன்றம்.

அதே போல் அஃப்சல் என்பவரைப் பற்றிய காவல் துறையின் கூற்றுக்கள் முழுமையாக உடைந்து தகர்ந்து துகள் துகள்களாகப் போய்விட்டன.

'செல் போன்களைத்தான்' மிக முக்கியமான சாட்சியமாக அரசு தரப்பு காட்டுகிறது. அதற்கும் ஆதாரமாக குற்றம் சுமத்தப் பட்டவர்களின் வாக்கு மூலங்களையே காட்டுகின்றது. இந்த வாக்கு மூலங்கள் அனைத்தும் கொடுமையும் குரூரமும் நிறைந்த சித்திரவதைகளுக்குப் பின் வாங்கப் பட்டவை. ஆகவே இந்த வழக்கின் அடிப்படை ஆதாரங்கள் அல்லது சாட்சியங்கள் யதார்த்தமானவை அல்ல. அவை உருவாக்கப் பட்டவை. இதனால் இந்த வழக்கு விசாரணையில் உண்மைகள் வெளிவர தவறி விட்டன.

அதே போல் 'சுயமான சாட்சியங்கள்' எனக் காவல் துறை கொண்டு வந்து நிறுத்திய சாட்சியங்களும் வாங்கப் பட்ட சாட்சியங்கள்.

குற்றவாளிகளிடம் வாக்கு மூலங்கள் என வாங்கப் பட்டவை 'பொடா' என்ற பாசிச பயங்கர வாதச் சட்டத்தின் கீழ் வாங்கப் பட்டவை. இதில் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது இந்த வாக்கு மூலங்கள் காவல் துறை அதிகாரிகளிடம் வழங்கப் பட்டவை அல்ல. அவை பார தூரமான சித்திரவதைகளின் கீழ் வழங்கப் பட்டவை என்பதை ஏற்கெனவே சுட்டிக் காட்டியிருக்கிறோம்.

இந்த வாக்கு மூலங்கள் - அதாவது காவல் துறையினர் முன் வழங்கப் பட்ட இந்த வாக்கு மூலங்கள் அனைத்தும் பின்னர் நீதிபதிகளின் முன் குற்றவியல் நடைமுறைச் சட்டம் (criminal procedure code) பிரிவு முன்னூற்றுப் பதின் மூன்றின் கீழ் வழங்கப் பட்ட வாக்கு மூலங்களுக்கு முற்றிலும் மாறானவை.

இப்படி நீதிபதிகளின் முன் வழங்கப் பட்ட வாக்கு மூலங்களில் (அதாவது குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட வாக்கு மூலங்களில்)பல வழக்கின் போக்கையே மாற்றுபவை. இதில் முஹம்மது அஃப்ஸல் என்பவர் வழங்கிய வாக்கு மூலம் மிகவும் முக்கியமானது.

அந்த வாக்கு மூலம் நம்பத் தகுந்தது. இதனால் நீதி மன்றங்கள் இதில் சில பகுதிகளை நம்பின. இந்த வாக்கு மூலம் இந்த வழக்கில் மறைத்து வைக்கப் பட்ட பல முக்கிய பகுதிகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது.

எல்லாவற்றிற்கும் மேலாக இந்த வாக்கு மூலத்தை இதர வாக்கு மூலங்களோடு ஒப்பிட்டுப் பார்த்திடும் போது இந்த சதியில் பாதுகாப்பு முகவர்களின் (security agencies) பங்கு முண்டோ என்ற கசப்பான சர்ச்சையும் கிளம்பியிருக்கின்றது.

முஹம்மது அஃப்ஸலுக்கு அவருடைய வரலாற்றையும் வாதத்தையும் முழுமையாக சொல்லிட எந்த வாய்ப்பும் வழங்கப்பட வில்லை. இதோடு முஹம்மது அஃப்ஸல் என்பவரின் தரப்பை நீதிமன்றத்தில் யாரும் சமர்ப்பிக்வில்லை.

இதனால் முழு வழக்கிலும் காவல் துறையினரின் கூற்று நிரூபிக்கப் படாமலேயே நின்றது. பெரிய திரிபுகளும் கற்பனைக் கதைகளும் இயற்கையான நீதி மறுக்கப் பட்ட நிலையிலுமே (Against National Justice) வழக்கு முடிந்தது.

-நிர்மலாங்ஷூ முகர்ஜி
ஜனநாயக உரிமைகளுக்கான மக்கள் குழு
Terror Over Democracy

Kashmir

கஷ்மீரில் பள்ளிக்குச் செல்லும் பெண் குழந்தைகளைக் கடத்திச் சென்று நிர்வாணமாக படம் பிடித்து வைத்துக் கொண்டு அந்தப் படங்களைக் காட்டி மிரட்டி அந்தப் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்துவது வழக்கம்.இப்படி விபச்சாரத்தில் ஈடுபடுத்தப் பட்ட இளம் பெண்கள் நாற்பத்தி மூன்று பேர் மீட்கப் பட்டுள்ளனர்.

பாதுகாப்புப் படை அதிகாரிகள், காவல் துறையினர், அரசியல்வாதிகள் இவர்கள் தான் இதைச் செய்து கொண்டிருக்கிறார்கள். வழக்கமான பாணியில் எட்டாம் வகுப்பு பெண் குழந்தை ஒன்றை கடத்திச் சென்றதில் தான் இந்த விவகாரம் வெளியே வந்துள்ளது. இதில் பாதுகாப்புப் படையைச் சார்ந்த பதிமூன்று பேர் உடந்தை.

காவல் துறை இதனை சரிவர புலன் விசாரணை செய்யாது என்பதால் இந்த வழக்கு மத்திய புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மத்திய புலனாய்வுத் துறையும் இதனைச் சரிவர புலனாய்வுச் செய்திட வில்லை என கஷ்மீர் உயர்நீதி மன்ற நீதிபதி நீதி மன்றத்திலேயே வருத்தப் பட்டுள்ளார்.

-Indian Express. Pune.
29-04-2006

'ஜம்மு கஷ்மீரில் நடக்கும் தீவிரவாத தாக்குதல்களை அடிக்கடி இஸ்லாமியர்கள் அங்கு வாழும் இந்துக்கள் மீது நடத்தும் போர் என்றே காட்டுகின்றார்கள். இது மீடியாக்களின் வழியாக பெரிதுபடுத்தப் படுகிறது. இந்த ஊடகங்கள் எண்ணிக்கையில் அதிக அளவில் கொலை செய்யப்படும் முஸ்லிம்களைப் பற்றிய செய்திகளை அதிகமாக வெளியிடுவதில்லை. கொல்லப் பட்டவர்களில் எண்பது சதவீதம் முஸ்லிம்களே என்ற உண்மை திட்டமிட்டு மறைக்கப் படுகிறது.'

-The Hindu
2-5-2006

கடந்த பதினாறு வருடங்களுக்குள் எட்டாயிரம் பேர் வரை காணாமற் போய் விட்டார்கள். இவர்களில் அதிகமானோர் பாதுகாப்புப் படையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப் பட்டவர்கள். அந்த இளைஞர்கள் எங்கு அடைத்து வைக்கப் பட்டுள்ளார்கள் என்ற ஒரு விபரமும் பெற்றோர்களுக்கு இதுவரை தெரியப் படுத்தப் படவில்லை.

ஸாஹிருத்தீன் என்ற பத்திரிக்கையாளர் தனது 'அவர்கள் காற்றில் கரைந்து போனார்களா?' என்ற நூலில் காணாமற்போன நான்காயிரம் பேர்களின் பட்டியலைத் தருகிறார்.

ஐநூறு பேருக்கும் அதிகமாக கஷ்மீரில் இளைஞர்கள் காணாமல் போனதை உயர் நீதி மன்றமே ஒப்புக் கொண்டிருக்கிறது.

காணாமற்போனோரின் பெற்றோர்கள் அமைப்பும், மனித உரிமைகள் அமைப்பும் எட்டாயிரம் பேர் என்று கணக்கு சொல்கிறது.

இவை எல்லாம் கஷ்மீர் மக்கள் கடைபிடித்து வரும் இஸ்லாமிய கலாச்சாரத்தை கொஞ்சம் கொஞ்சமாக சீர்குலைத்து அவர்களிடையே கலாச்சார பேரழிவை ஏற்படுத்தும் முயற்சி என்று தான் கஷ்மீர் மக்கள் நினைக்கின்றனர். அடக்கு முறையால் மக்களை தற்காலிமாக வெல்லலாம். ஆனால் அவர்களின் மனங்களை வெல்ல நம் அரசு முயல வேண்டும். நம் நாட்டு அறிவு ஜீவிகளும், அரசும் இதற்கான முயற்ச்சியில் உடன் இறங்க வேண்டும்.

Saturday, December 13, 2008

மஹாத்மா காந்தியும் ராதா கிருஷ்ணனும்!

மஹாத்மா காந்தியும் ராதா கிருஷ்ணனும்!

காந்தியைப் பார்ப்பதற்கு ஜனாதிபதி ராதா கிருஷ்ணன் வந்தார். அவருக்கு மட்டும் ஒரு குவளை பசும்பால் கொண்டு வரும்படி காந்தி பணித்தார். 'ஏன் நீங்கள் பசும்பால் குடிப்பதில்லையா?' என்று ராதா கிருஷ்ணன் கேட்டார். உடனே காந்தி 'பசும்பால் என்பது பசுவின் மாமிசம்தான் திரவ நிலையில் உள்ளது. அதனால் நான் பசும்பால் குடிப்பதில்லை' என்று காந்தி கூறினார். அதனைக் கேட்ட ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் 'நாம் குழந்தையாக இருந்தபோது தாயிடம் குடித்தது தாயின் மாமிசம்தானே? குழந்தைப்பருவத்தில் நாம் தாயின் பாலைத் தவிர எதனைச் சாப்பிடுவது?' என்ற வினாவை எழுப்பினார். அதன் பிறகு காந்தி பசும்பால் சாப்பிட ஆரம்பித்தாராம்.

சிங்கம் புலி சிறுத்தை நாய் பூனை முதலிய மிருகங்கள் கூர்மையான பற்களை மட்டும் கொண்டுள்ளன. இந்தக் கூரிய பற்கள் மாமிசத்தைக் கிழித்து தின்பதற்குப் பயன்படுகின்றன. அதனால்தான் மேற்கண்ட மிருகங்கள் அசைவமாகவே இருக்கின்றன. இதே போல ஆடு மாடு குதிரை யானை போன்ற மிருகங்கள் தட்டையான பற்களைக் கொண்டுள்ளன. இதனால் இவைகள் இலை தழை கிழங்குகள் அதாவது சைவ உணவுகளையே சாப்பிடுகின்றன.

ஆனால் மனிதனுக்கு கூரிய பற்களும் தட்டையான பற்களும் உள்ளன. மனிதன் சைவ உணவுகளையும் அசைவ உணவுகளையும் சாப்பிடும் விதத்தில் பற்களை இறைவன் அமைத்துள்ளான். எனவே மனிதன் சைவ உணவுகளையும் அசைவ உணவுகளையும் சாப்பிட வேண்டும் என்பது வல்ல இறைவனின் விருப்பமாக இருப்பது சிந்திக்க வேண்டிய உண்மை.

-உணர்வு வார இதழ்

அடடே.... அசைவ பிரியர்கள் ஓ போட்டுக் கொள்ளலாம்.

Thursday, December 11, 2008

மிஸ் இந்தியா நஃபீசா அலி - மெக்காவில்




மிஸ் இந்தியா நஃபீசா அலி - மெக்காவில்

1976 ஆம் ஆண்டு மிஸ் இந்தியாவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் நஃபீசா அலி. 1977 ஆம் ஆண்டு நடந்த உலக அழகிப் போட்டியில் ரன்னராகவும் வந்துள்ளார். நீச்சல் வீராங்கனை, நடிகை, சமூக சேவகர் என்ற பல பரிணாமங்களைக் கொண்டவர் நஃபீசா அலி. பலராலும் அறியப்பட்ட புகைப்படக் கலைஞர் அஹமது அலியின் மகளாவார். ரோமன் கத்தோலிக்க தாய்க்கும் முஸ்லிம் தந்தைக்கும் பிறந்த இவர் மணந்தது போலோ வீரர் சீக்கியரான சோதி சிங்கை.

ஒரு காலத்தில் இவருடைய முகம் பிரதிபலிக்காத பத்திரிக்கைகளே இல்லை எனலாம். இதனால் பலரின் விமரிசனத்துக்கும் உள்ளானார். தற்போது சமூக சேவையில் அதிகம் கவனம் செலுத்தும் நஃபீசாவை அரப் நியூஸ் பேட்டி எடுத்தது.

'பெண்களுக்கு இஸ்லாம் கொடுத்த 'ஹிஜாப்' என்ற உடையில் புது அனுபவத்தை அடைகிறேன். எங்களின் ஹஜ் பயணம் மிகவும் சிறப்பாகவும் எந்த ஒரு சிரமும் இன்றியும் அமைந்ததற்கு இறைவனுக்கு முதலில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.'

'நான் அன்பையும் பாசத்தையும் அதிகம் விரும்புபவள். என்னைப் போன்றே என் நாடான இந்தியாவின் மீதும் அன்பையும் பாசத்தையும் பொழிகின்றேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக என் நாடு தினந்தோறும் குண்டு வெடிப்புகளால் அச்சுறுத்தப்படுகிறது.'

'அனைத்து மதங்களும் அமைதியையே போதிக்கின்றன.ஆனால் எங்கோ ஒரு சிறு குழு இருந்து கொண்டு மதச்சாயத்தையும் பூசிக் கொண்டு தீவிரவாதத்தை வளர்க்கின்றன. அவர்களை இனம் கண்டு சமூகத்திலிருந்து தனித்து ஒதுக்குவது சமய நம்பிக்கை உள்ள ஒவ்வொருவரின் கடமை. இந்த ஹஜ் பயணத்தில் என் நாட்டுக்காகவும் என் மக்களுக்காவும் அமைதி வேண்டி இறைவனிடம் அதிகமதிகம் பிரார்த்தனையில் ஈடுபட்டேன்.'

இவ்வாறு தனது பேட்டியில் கூறியுள்ளார் நஃபீசா அலி.

-சுவனப்பிரியன்.

Wednesday, December 10, 2008

'சந்திர மோகன்' --'சாந்த் முகம்மதாக' மாறியது ஏன்?




'சந்திர மோகன்' 'சாந்த் முகம்மதாக' மாறியது ஏன்?

ஹரியானா முதலமைச்சர் பஜன்லாலின் மகன் சந்திர மோகன். எல்லா மாநிலத்திலும் 'முதலமைச்சரின் மகனே அடுத்த வாரிசு' என்ற எழுதப்படாத விதிக்கொப்ப தன் மகனை உப முதல்வராகவும் ஆக்கி அழகு பார்த்தார் முதல்வர் பஜன்லால். நான்கு முறை எம் எல் ஏ வாகவும் இருந்துள்ளார் சந்திர மோகன். திருமணமாகி குழந்தைகளும் உள்ளது. இஸ்லாமிய நூல்களை நண்பர்கள் மூலமாக பல ஆண்டுகளாக படித்து வந்துள்ளார். இஸ்லாமிய மார்க்கத்தில் சந்திர மோகனுக்கு ஒரு பிரியம் வந்துள்ளது.

அதோடு அல்லாமல் அனுராதா பாலி என்ற பெண்மணியுடன் சந்திர மோகனுக்கு ஒரு ஈர்ப்பு ஏற்பட்டு அது பின்பு காதலாகவும் மாறியுள்ளது. திடீரென்று வீட்டை விட்டு வெளியேறிய சந்திர மோகன் ஒரு மாதம் தலைமறைவாக இருந்து இன்று சண்டீகரில் நிருபர்கள் முன் தன் காதலியோடு தோன்றி 'நானும் என் மனைவியும் திருமணம் செய்து கொண்டு விட்டோம். இன்று முதல் என் பெயர் சாந்த் முகம்மது' என்று அறிவித்தவுடன் நிருபர்களே சிறிது ஆடிவிட்டனர்.

நிருபர்: இதனால் உங்களின் முதல் மனைவிக்கும் குழந்தைகளுக்கும் துரோகம் இழைப்பதாக நினைக்கவில்லையா?

சாந்த் முகம்மது: என் பெயரில் எந்த சொத்தும் இல்லை. அனைத்தும் என் முன்னால் மனைவி பெயரிலும் என் குழந்தைகளின் பெயரிலும் மாற்றி விட்டுத்தான் இந்த முடிவை எடுத்துள்ளேன். எனவே இதனால் அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. இதனால் பாதிக்கப் பட்டது நான்தான்.

நிருபர்: உப முதல்மந்திரி, அடுத்த முதல்வர் என்று வர்ணிக்கப்பட்டவர். இன்று முதல் மந்திரியால் வீட்டை விட்டு வெளியேற்றப் பட்டுள்ளீர்கள். அனைத்து சொத்துக்களையெல்லாம் இழந்துள்ளீர்கள். இவை எல்லாம் உங்களை பாதிக்கவில்லையா?

சாந்த் முகம்மது: இந்த பாதிப்புகள் எல்லாம் வரும் என்று தெரிந்துதானே இந்த முடிவை எடுத்துள்ளேன். இதை விட இன்னும் பாதிப்புகள் வந்தாலும் அதையும் தாங்கக் கூடிய நிலையில்தான் நானும் என் மனைவியும் உள்ளோம். மேலும் முன்பை விட சந்தோஷமாக இருப்பதாகவே நாங்கள் உணர்கிறோம்.

நிருபர்: சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிப்பிப்பதற்காகவே நீங்கள் இஸ்லாத்தில் இணைந்ததாக சொல்லப்படுகிறதே?

சாந்த் முகம்மது: என்னோடு நெருங்கி பழகும் என் நண்பர்களிடம் இது சம்மந்தமாக கேட்டுப் பாருங்கள். பல இஃப்தார் விருந்துகளை நானே ஏற்பாடு செய்துள்ளேன். பல காலம் நான் குர்ஆனை படித்து வந்துள்ளேன். இது நான் நீண்ட நாள் சிந்தித்து எடுத்த முடிவு. குறை சொல்பவர்களைப் பற்றி எனக்கு கவலை இல்லை. என் மனதில் உள்ளதை நானே அறிவேன்.

இவர் உண்மையில் இஸ்லாத்தினால் ஈர்க்கப்பட்டுத்தான் முஸ்லிமாக மாறினாரா? அல்லது சட்டத்துக்கு பயந்து முஸ்லிமாக மாறினாரா என்பது அவருக்கும் இறைவனுக்கும் மட்டுமே தெரிந்த உண்மை. ஆனால் இது சம்பந்தமாக சில காலம் ஊடகத்துறைக்கு நிறைய செய்திகள் கிடைத்த வண்ணம் இருக்கும். முதல்வர் பஜன்லால் வேறு 'என்னை அவமானப் படுத்திய அவர்களை நான் விடப் போவதில்லை' என்று கர்ஜித்துக் கொண்டிருக்கிறார். இந்த இருவரின் எதிர்காலமும் தற்போது கேள்விக் குறியாகவே உள்ளது.

'பியார் கியா து டர்னாகியா?'

Tuesday, December 09, 2008

இறை தூதரின் வாழ்வை நினைவூட்டும் பெருநாள்!


இறை தூதரின் வாழ்வை நினைவூட்டும் பெருநாள்!

பெயரைச் சொல்லும்போதே நம் இதயங்களில் ஒரு நெகிழ்ச்சி...! நம்மையும் மீறி நம் மனங்களில் ஒரு சோக கீதத்தின் மெல்லிய ஓசை...!ஆம்...! தியாகங்க ளாலேயே புடம் போடப் பட்ட மகத்தான ஓர் இறைத் தூதரின் உன்னத வாழ்வை ஆண்டுதோறும் நினைவூட்டும் பெருநாள்தான் இந்தத் தியாகத் திருநாள். யார் அந்த இறைத் தூதர்?அவர்தாம் இப்ராஹீம் (அலை) அவர்கள்.ஏறத்தாழ நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், இன்றைய ஈராக் அமைந்துள்ள பகுதியில், "ஊர்' எனும் ஊர் இருந்தது.
அந்த ஊரில் உயர் குலத்தைச் சேர்ந்த ஆஸர் என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் அந்த ஊருக்கே தலைமைப் பூசாரியாகவும், மன்னரின் ஆஸ்தான குருவாகவும் (ராஜகுரு) விளங்கினார்.அந்தத் தலைமைப் பூசாரியின் மகனாகப் பிறந்தவர் தான் இப்ராஹீம் நபி (அலை) அவர்கள்.
இளமையிலேயே ஆழ்ந்த மதிநுட்பம் கொண்டவராகத் திகழ்ந்த இப்ராஹீம் நபி, தம்மைச் சூழ்ந்திருந்த சமுதாயத்தின் செயல்பாடுகளைக் கூர்ந்து கவனிக்கத் தொடங்கினார்.கல்லில் ஓர் உருவத்தை வடித்து, "இதுதான் கடவுள்; இதற்குச் சிரம் தாழ்த்து' என்று தந்தையும் சமுதாயப் பிரமுகர்களும் சொன்னதை அவர் ஏற்றுக் கொள்ள மறுத்தார். தந்தை, "கல்லால் அடித்து உன்னைக் கொல்வேன்' என்றார். மகன் கலங்கவில்லை. கொள்கையில் உறுதியாக நின்றார்."சூரியன், சந்திரன் உட்பட இயற்கைப் படைப்புகள் எதுவும் இறைவன் ஆக முடியாது. இந்த இயற்கைப் படைப்புகளைப் படைத்த ஓர் இறைவன் இருக் கின்றான். அவனே வானங்கள் - பூமி ஆகியவற்றின் இறைவன். மனிதனுக்கும் அவன்தான் உண்மையான அதிபதி.நான் அவனை மட்டுமே வணங்குவேன். வேறு யாருக்கும் சிரம் பணியமாட்டேன். நீங்களும் என் அறிவுரையை ஏற்றுக் கொள்ளுங்கள். படைப்பினங் களை வணங்காதீர்கள். படைத்தவனையே வணங்குங்கள்' என்று, வெளிப் படையாக இப்ராஹீம் நபி(அலை) பிரசாரம் செய்தார்.அவ்வளவுதான்...! ஒட்டுமொத்த சமுதாயமும் அவருக்கு எதிராகத் திரும்பியது. சமுதாயத் தலைவர்கள் ஒன்றுகூடி "இவருக்கு என்ன தண்டனை தரலாம்?' என்று கலந்தாலோசித்தனர். இறுதியாக ஒரு முடிவுக்கு வந்தனர். அது மிகவும் பயங்கரமான முடிவு.

"திகுதிகு' என கொழுந்துவிட்டெரியும் நெருப்புக் குண்டம் ஒன்றைத் தயார் செய்து அதில் இப்ராஹீமை வீசி எறிந்திட வேண்டும் என்று தீர்ப்பளித்தனர்.நெருப்புக் குண்டம் தயார் செய்யப்பட்டது. இப்ராஹீம் இழுத்து வரப்பட்டார்.கண்ணெதிரே கனன்று எரிந்து கொண்டிருக்கும் தீக்குண்டம்; கதறக் கதற நெருப்பில் வெந்து உயிரை இழக்க வேண்டிய கொடூரம்...! யாராக இருந்தாலும் ஆடித்தான் போயிருப்பர்.ஆனால் -இப்ராஹீம் நபி(அலை) கலங்கவில்லை; கதறவில்லை. இறைவன் ஒருவனே எனும் கொள்கைக்காக - அவன் மீது வைத்திருந்த அளவிட முடியாத நேசத்திற்காகத் தம் இன்னுயிரையும் அர்ப்பணிக்கத் தயாராகி விட்டார்.இதோ, நெருப்பில் வீசி எறியப் படுகிறார் இப்ராஹீம் நபி(அலை).உடனடியாக இறைவனிடமிருந்து கட்டளை வருகிறது: ""நெருப்பே...! நீ இப்ராஹீமுக்கு குளுமையாகவும் சாந்தமாகவும் ஆகிவிடு''(குர்ஆன் 21:69)அதற்குப் பிறகு அவர் அந்த ஊரை விட்டே வெளியேறினார். பல நாடுகளுக்கும் சென்று ஓரிறைக் கொள்கையை - ஏகத்துவத்தைப் பிரசாரம் செய்தார். கடுமையான அடக்குமுறைகளையும், சோதனைகளையும் எதிர் கொண்டார்.

இவை அனைத்தையும் விட மகத்தான ஒரு சோதனை அவருக்குக் காத்திருந்தது.இப்ராஹீம் நபி(அலை) அவர்களுக்கு நீண்ட காலமாகக் குழந்தை இல்லை. தமக்கு ஒரு குழந்தையைத் தரும்படி தொடர்ந்து இறைவனிடம் இறைஞ்சிக் கொண்டிருந்தார். முதுமையை எட்டிப் பிடித்தபோது "வாராது வந்த மாமணி' போல அவருக்கு ஓர் அழகிய ஆண்மகவு பிறந்தது.
அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. மகனுக்கு இஸ்மாயீல் என்று பெயரிட்டு தம் உயிரில் வைத்து வளர்த்தார். இஸ்மாயீலுக்கு ஏழு அல்லது எட்டு வயது இருக்கும். அப்பொழுதுதான் அந்தச் சோதனை தொடங்கியது.தம் ஆருயிர் மகனை இறைவனுக்காக அறுத்து பலியிடுவது போல இப்ராஹீம் கனவு கண்டார். அடுத்தடுத்த நாள்களிலும் அந்தக் கனவு தொடர்ந்தது.இப்ராஹீம் நபி சற்றும் தாமதிக்காமல் மகனை அழைத்தார். தாம் கண்ட கனவைக் கூறுகிறார்."தந்தையே, இறைவனின் விருப்பம் அதுதான் எனில் அவனுடைய கட்டளையை நிறைவேற்றுங்கள். என்னை நீங்கள் பொறுமை உள்ளவனாகவே காண்பீர்கள்' என்றார் மைந்தர்.ஆஹா...! இப்படிப்பட்ட தந்தையையும் மகனையும் வரலாற்றில் எங்காவது நீங்கள் பார்த்தது உண்டா?"இறைவனுக்காக உன்னைப் பலியிடப் போகிறேன்' என்கிறார் தந்தை. "தயங்காமல் செய்யுங்கள்" என்கிறார் மைந்தர்.இப்ராஹீம் கத்தியை நன்கு கூர்தீட்டி மகனின் கழுத்தில் வைத்து அறுக்க முயன்றபோது இறைவனிடமிருந்து கட்டளை வந்தது.""நிறுத்து இப்ராஹீம்! நாம் வைத்த சோதனைகள் அனைத்திலும் நீர் வெற்றி பெற்றுவிட்டீர். மகனை அறுப்பதற்குப் பதிலாக ஓர் ஆட்டைப் பலியிடுங்கள்!''ஏக இறைவனின் மீது கொண்ட அன்புக்காக-அவனுடைய திருப்தியையும் உவப்பையும் பெற வேண்டும் என்பதற்காக எந்தத் தியாகத்தையும் செய்வதற்குத் தயாராக இருந்தார்கள் இப்ராஹீம் (அலை) அவர்கள்.அதற்குப் பிறகு அவர் தம் மகனுடன் மக்காவுக்கு வந்து இறை ஆலயத்தைக் கட்டியதும், அந்த ஆலயத்தை தரிசிக்க வரும்படி உலக மக்களுக்கு அழைப்பு கொடுத்ததும், அந்த அழைப்பு இறையருளால் இன்று வரை செயல்வடிவம் பெற்று வருகிறது என்பதும் வரலாறு.இறைவனுக்காக அனைத்தையும் தியாகம் செய்யும் உயர் பண்பு நம் உள்ளங்களிலும் மலரட்டும்...!வாசகர்கள் அனைவருக்கும் தியாகத் திருநாள் வாழ்த்துகள்.

சிராஜுல் ஹஸன்-சமரசம் ஆசிரியர்.

இணைய நண்பர்கள் அனைவருக்கும் இனிய பெருநாள் வாழ்த்துக்கள்.

Tuesday, December 02, 2008

சீரா என்ற பெயரில் ஒரு போலி இஸ்லாமியர்!




சீரா என்ற பெயரில் ஒரு போலி இஸ்லாமியர்!

சமீப காலமாக சீரா என்ற பெயரில் பதிவுகள் எழுதி வரும் ஒரு பதிவரை நாம் அனைவரும் அறிவோம். இவருக்கு கொடுக்கப்பட்ட வேலை நடு நிலையான இந்து மக்களையும் முஸ்லிம்களுக்கு எதிராக திருப்புவது. தனக்கு கொடுக்கப்பட்ட இந்த வேலையை மிகவும் திறமையாக இந்த நபர் செயல்படுத்தி வருகிறார். பாகிஸ்தானுக்கு ஆதரவாக பொய்யயான செய்திகளை வெளியிடுவது. இதன் மூலம் ஹிந்துக்களை உசுப்பி விட்டு இஸ்லாமியருக்கு எதிராக பின்னூட்டம் வாங்க வேண்டியது. அவர்கள் மனத்தில் இஸ்லாத்துக்கு எதிரான எண்ணங்களை விதைப்பது என்று தன் வேலையை இந்த நபர் அருமையாக செய்து வருகிறார்.

//ஆனால் இன்று காங்கிரசும் அதே பாப்பனிய பயங்கரவாத பாஜக வழியில் பாகிஸ்தானை மிரட்டுவதை கண்டு மதச்சார்பற்ற இந்தியர்களும் முஸ்லீம்களும் கடும் கோபத்தில் உள்ளார்கள். கம்யூனிஸ்டு ஏ பி பரதன் ஏற்கெனவே அப்படிப்பட்ட தவறான பாதையில் சென்று பாகிஸ்தானை மிரட்டும் வேலையெல்லாம் வைத்துகொள்ளவேண்டாம் என்று காங்கிரஸை எச்சரித்திருந்தார்.//- சீறா.

//வறுமையில் வாடும் ஏழை முஸ்லீம்களிடமிருந்து பிடுங்கிய பணத்தை வைத்து இப்படி ஊதாரி செலவு செய்ய திட்டம் போட்ட இந்து பாசிச பாஜக அரசுக்கும், அந்த திட்டத்தை செயல்படுத்திய இந்து பாசிச காங்கிரஸ் அரசுக்கும் வித்தியாசம் என்ன?//-Seera

//நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிலவினை இரண்டாக உடைத்து விட்டதை ஸஹீஹ் அல் புகாரியில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

அப்படியிருக்கையில், ஏற்கெனவே நிலவுக்கு ஆம்ஸ்ட் ராங் ஆகியோரை அனுப்பியதாக அமெரிக்கா கூறியதை இஸ்லாமியர் சந்தேகக்கண்ணுடனேயே பார்த்தார்கள்.

அது பிறகு பெரிய ஏமாற்றுவேலை என்று அமெரிக்கர்களாலேயே புட்டு புட்டு வைக்கப்பட்டது. உண்மையில் நிலவுக்கு யாரும் போகவும் இல்லை, அதனுக்கு யாரும் துணைக்கோள் அனுப்பவும் இல்லை என்று நிரூபணம் ஆகிவிட்டது

ஆகவே நாம் பார்ப்பது அரை நிலவுதான். அந்தபக்கத்து நிலவு உடைத்து ஹிராம் மலைக்கு அப்பால் விழுந்துவிட்டது என்பதே ஸஹீஹ் அல் புகாரி கூற்று. (பாகம் 5, அத்தியாயம், 58, எண் 208, 209, 210, 211) (பாகம் 4, அத்தியாயம் 56, எண் 830, 831, 832)//-Seera


இதே மாதிரியான உளரல்களை இவரின் ஒவ்வொரு பதிவிலும் காணலாம். விபரம் அறிந்த பதிவர்கள் இந்த கோமாளியின் செய்கையை கண்டு சிரித்து விட்டு சென்று விடுகின்றனர். ஆனால் இவரை முஸ்லிமாக நினைத்துக் கொண்டு கோபமாக இவருக்கு இன்னும் பின்னூட்டம் அளித்து வரும் சக பதிவர்களை நினைத்தால் தான் பரிதாபமாக இருக்கிறது.

விருத்த சேதனமும் செய்து கொண்டு கையில் 'இஸ்மாயில்' என்றும் பச்சை குத்திக் கொண்டு காந்தியைக் கொன்றவர்கள் இதுவும் செய்வார்கள். இதற்கு மேலும் செய்வார்கள்.

Sunday, November 30, 2008

ஹேமந்த் கர்கரே - வீரத்திருமகன்!



உண்மையிலேயே தொலைக்காட்சியில் அந்தக் காட்சியைப் பார்த்தவர்களுக்கு மெய் சிலிர்த்திருக்கும். சிக்கலான நேரங்களில் தமக்கு கீழுள்ளவர்களை அனுப்பி விட்டு தலைவன் பின்னால் இருந்து இயக்குவதுதான் உலக மரபு. வழக்கத்துக்கு மாறாக இந்த வீரத் திருமகன் தானே தீவிரவாதிகளை ஒடுக்க முன்னால் சென்று சதிகாரர்களால் குண்டுக்கு பலியாக்கப்பட்டுள்ளார். அவரைக் கொன்றது தீவிரவாதிகளின் குண்டுதானா அல்லது அவரின் எதிரிகளால் இந்த சந்தர்ப்பம் நன்றாக பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பது விசாரணையில் தெரிய வரும்.

மாலேகான் குண்டு வெடிப்பிலும் அதற்கு முன்னும் பின்னும் நடந்த குண்டு வெடிப்புகள் எல்லாவற்றிலும் சங்பரிவாரின் கை இருக்கிறது என்பதை உலகம் அறிய செய்தவர். தான் இந்துவாக இருந்தாலும் தன் நாட்டின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்து சாமியார்களையும், ஜெனரல் புரோகிதையும் உலகின் வெளிச்சத்துக்கு கொண்டு வந்தவர். இதனால் நரேந்திர மோடி, எல்.கே.அத்வானி போன்றோரின் விமர்சனத்துக்கும் உள்ளானவர். சங் பரிவாரும் இவருக்கு குறி வைத்திருந்தது. தன் முடிவு இதனால் இப்படித்தான் இருக்கும் என்று தீர்மானித்து பல கைதுகளை தீவிரமாக செய்த இவர் ஒரு வீரத் திருமகன்தான்.

நாட்டுப் பற்று என்ன என்பதை நாம் இவரிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும். ஒரு முஸ்லிம் இந்த நாட்டுக்கு துரோகம் இழைக்கிறானா! அவனைப் பிடித்துக் கொடுப்பதில் முதல் ஆளாக முஸ்லிம்கள் இருக்க வேண்டும். அதே போல் ஒரு இந்து இந்த நாட்டை நிர் மூலமாக்க நினைக்கிறானா! அவனை பிடித்து சட்டத்தின் பிடியில் கொடுப்பதில் முதல் ஆளாக இந்துக்கள் இருக்க வேண்டும். நம்ம ஆள்தானே என்று சற்று கண்டும் காணாமல் இருந்தால் பாதிக்கப் படுவது நமது நாடும் நமது குடும்பமும் நமது உற்றார் உறவினர்களும்தான் என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

கர்கரேயின் மனைவி நரேந்திர மோடி தர நினைத்து இழப்பீட்டுப் பணத்தை வாங்க மறுத்து விட்டதாக இணையங்களில் பார்த்தேன். இது உண்மையாயிருக்கும் பட்சத்தில் கர்கரேயின் மதிப்பு மேலும் கூடுகிறது. தனது மனைவியையும் தனது குடும்பத்தையும் அந்த மகான் எந்த அளவு பக்குவப்படுத்தியுள்ளார் என்று நினைக்கும்போது கண்களில் கண்ணீர் வருகிறது. சில சில்லரைகளுக்காக நாட்டையே நிர்மூலமாக்கத் துணியும் கயவர்களுக்கு மத்தியில் இந்த மகான் நிச்சயம் என் பார்வையில் வீரத்திருமகன்தான்.

மேலும் எங்கு குண்டு வெடித்தாலும் உடன் ஏதாவது ஒரு முஜாஹிதீன் பெயரை வைத்து முஸ்லிம்களை கருவறுப்பதையே தொழிலாக கொண்டது நம் காவல்துறை. தற்போதுதான் மீடியாக்களும் வலைப்பதிவர்களும் சற்று நிதானித்து பதிவு எழுதுவதாக நினைக்கிறேன். இந்த மாற்றத்துக்கு அடிகோலிய அந்த வீரத்திருமகன் ஹேமந்த் கர்கரேயும் மேலும் உயிரிழந்த தியாகிகளின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

இந்த குண்டு வெடிப்புக்கு காரணமான மனித குல விரோதிகள் அழிந்து நாசமாகட்டும் என்றும் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.

Tuesday, November 25, 2008

அஸ்ஸலாமு அலைக்கும்!!!

அஸ்ஸலாமு அலைக்கும்

முகமன் எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றி நான் ஒரு பதிவு இடலாம் என்றிருந்தேன். ஆனால் நான் என்ன சொல்ல நினைத்தேனோ அதை நண்பர் மஸ்தூக்கா அழகாக தனது பதிவில் எடுத்தாண்டுள்ளார். இனி நண்பர் மஸ்தூக்காவின் பதிவின் மீள் பதிவு:

மனிதர்கள் ஒருவரையொருவர் சந்திக்கும்போது அழகிய முகமன் கூறித் தங்கள் அன்பை வெளிப்படுத்துவது இனம் நிறம் மொழி தேசம் மதம் இவை எல்லாவற்றையும் கடந்த ஓர் அழகிய பண்பாடு.

இவ்விதம் ஒருவரையொருவர் சந்திக்கும் போது கூறும் முகமன், வெறுப்பு குரோதம், பகை, உயர்வு தாழ்வு ஆகிய அனைத்தையும் அப்புறப்படுத்தி அதற்கு பதிலாக அன்பு, பாசம், சகோதரத்துவம், ஆகியவற்றை ஏற்படுத்தி நெருக்கத்தை அதிகப்படுத்துகிறது எனலாம்.

ஒருவர் ஏதோ ஒரு காரணத்திற்காக உங்களை வெறுக்கிறார் என வைத்துக் கொள்வோம். அவரிடம் சென்று அழகிய முகமன் கூறி கை கொடுத்தால் அதுவரை அவருக்கு உங்கள் மீதிருந்த வெறுப்பின் அளவு குறைந்து விடும். மென்மேலும் தொடர்ந்து இதனைக் கடைப் பிடித்தால் வெறுப்பு படிப்படியாகக் குறைந்து இறுதியில் அடியோடு அவர் மாறிப்போவதைக் காணலாம்.

ஒருவரையொருவர் சந்திக்கும் போது கூறும் இந்த அழகிய முகமன் எப்படி இருக்க வேண்டும்? அனைவருக்கும் பொதுவானதாக, அனைத்து நேரத்திலும் பயன்படுத்தக்கூடியதாக இருந்தால் தானே முகமன் கூறுவதன் நோக்கம் நிறைவேறும்.

உலகின் பலதரப்பட்ட மக்கள், பல்வேறு மதத்தினர், பல் வேறு மொழி பேசுவோர், பல்வேறு கலாச்சாரங்களைப் பின்பற்றுவோர் எப்படியெல்லாம் முகமன் கூறும் வழக்கத்தைக் கொண்டிருக்கின்றனர்? கொஞ்சம் அலசி ஆராய்ந்து சரியானதைத் தெர்ந்தெடுப்போமா?

ஆங்கிலேய ஆட்சி ஒரு காலத்தில் உலகின் பெரும் பகுதியைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததால் உலகம் முழுவதும் அம் மொழி வெகு எளிதில் பரவிற்று. பல்வேறு நாடுகளிலிருந்தும் அவர்கள் அடித்து விரட்டப்பட்டாலும், அவர்களது மொழி மட்டும் பலமாக வேரூன்றி கோலோச்சிக் கொண்டிருப்பதை மறுக்க முடியாது.

நாகரிகம் என்று கருதி பலரும் ஆங்கில மொழியில் முகமன் கூறுவதைக் காண்கிறோம். ஒருவரையொருவர் சந்திக்கும் போது குட்மார்னிங் சொல்கிறார்கள்.இதையே மாலைப் பொழுதுக்கு வேறு மாதிரியும் இரவுப் பொழுக்கு வேறு மாதிரியும் சொல்ல வேண்டும். பகல் பொழுதில் ஒருவரைச் சந்திக்கும்போது 12 மணிக்கு முன் ஒரு வார்த்தை, அதன் பின் வேறு வார்;த்தை என்று மாற்றிக் கொண்டிருக்க வேண்டும். ஒரு வரை சந்திக்கும்போது அவருக்கு வாழ்த்துச் சொல்வதா? அல்லது மணியைப் பார்த்துக் கொண்டிருப்பதா?

நமது நண்பர் அல்லது உறவினரைச் சந்திக்கிறோம் அல்லது அவர்கள் வீட்டுக்குச் செல்கிறோம். அவர்கள் குடும்பத்தில் ஒரு இறப்பு அல்லது துக்கம் நிகழ்ந்திருக்கிறது. அவருக்கு எப்படி குட்மார்னிங் சொல்ல முடியும்? அது அவருக்கு நல்ல காலைப் பொழுதல்லவே! பேட் மார்னிங் என்றல்லவா சொல்ல வேண்டும். இது பழக்கமில்லை என்பது ஒரு புறம் இருக்கட்டும் நாகரிகமும் இல்லையே!

சிலர் ஹலோ என்கிறார்கள், அவரும் பதிலுக்கு ஹலோ என்பார். சிலர் ஹாய் என்பர்கள். பதிலுக்கு ஒரு ஹாய். அதிகம் ஆங்கிலம் படித்தவர்கள் ஹவ் டு யு டு சொல்வார்கள். பதிலுக்கும் அதே ஹவ் டு யு டு தான். இதில் அழகிய முகமன் எங்கே இருக்கிறது?

தமிழ் பேசும் கிறிஸ்தவச் சகோதரர்கள் சிலர் ஒருவரையொருவர் சந்திக்கும் போது 'ஏசுவுக்கு ஸ்தோத்திரம்' என்கிறார்கள். அதனைக்கேட்டவரும் 'ஏசுவுக்கு ஸ்தோத்திரம்' என்று மறு மொழி சொல்கிறார். ஏசுவைப் புனிதராகக் கருதும் அவர்களைப் பொருத்தவரை இந்த ஸ்தோத்திரம் சரியானதாக இருக்கலாம், அதனை இங்கு நாம் விமரிசிக்கவில்லை. ஆனால் இது எப்படி ஒருவரையொருவர் சந்திக்கும் போது கூறும் முகமன் ஆக இருக்க முடியும்?

வடநாட்டின் சில பகுதிகளில் ஒருவரையொருவர் சந்திக்கும் போது 'ராம் ராம்' என்பர். அதனைக் கேட்பவரும் அதற்கு மறுமொழியாக 'ராம் ராம்' என்பார். அவர்கள் கடவுளாகக் கருதி வணங்கும் இராமரை நினைவு படுத்திக் கொள்கின்றனர்.ஆனால் சந்திப்பவருக்கு உரிய வாழ்த்து இதில் என்ன இருக்கிறது?

இந்தியைத் தாய் மொழியாகக் கொண்ட இந்துச் சகோதரர்கள் பலர் 'நமஸ்தே' என்றோ 'நமஸ்கார்' என்றோ கூறுகின்றனர். மலையாளம் தெலுங்கு கன்னடம் ஆகிய மொழி பேசும் தென்னாட்டு இந்துச் சகோதரர்கள் 'நமஸ்காரம்' என்று கூறுவர். தமிழர்கள் பலரும் இதையொட்டி 'வணக்கம்' என்கின்றனர். இவை அனைத்தும் 'நான் உங்களை வணங்குகிறேன்' என்ற பொருளையே தருபவை.

யாரை யார் வணங்குவது? அனைவருமே அவர் எம்மதத்தவராயினும் கடவுளை மட்டும் அல்லவா வணங்க வேண்டும்? மனிதரை மனிதர் ஏன் வணங்க வேண்டும்? 'வணங்குதல் என்னும் பொருளில் சொல்வதில்லை முகமன் கூறுமுகமாகத்தான் சொல்கிறோம்' என்று சிலர் வாதிடலாம். அப்படியானால் 'வணக்கம்' என்னும் சொல்லுக்கு வேறு என்ன தான் பொருள்?
முகமன் கூறுமுகாக அவர்கள் சொல்லும் 'வணக்கம்' கூட பெரியவர் சிறியவருக்கோ, ஆசிரியர் மாணவருக்கோ, உயர்ந்தவர் தாழ்ந்தவருக்கோ சொல்வதில்லை. (உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்பது எந்த முறையிலும் இருக்கலாம்)

இவை எல்லாவற்றையும் சற்று ஒதுக்கி வைத்து விட்டு இஸ்லாம் சொல்லும் அழகிய முகமன் எப்படி என்று பார்ப்போமா?

ஒருவரையொருவர் சந்திக்கும் போது 'அஸ்ஸலாமு அலைக்கும்'(இறைவின் சாந்தி உங்கள் மீது உண்டாவதாக!) என்று ஒருவர் சொல்ல அதனைக் கேட்டவர் 'வ அலைக்குமுஸ் ஸலாம்' (அவ்வாறே உங்கள் மீதும் இறைவனின் சாந்தி உண்டாவதாக!)

ஆகா! என்ன அற்புதமான வார்த்தைகள்! எத்துனைச் சிறந்த முகமன்! உயர்ந்தவர் தாழ்ந்தவர், பெரியவர் சிறியவர், ஆண்கள் பெண்கள், பெற்றோர் குழந்தைகள், ஆசிரியர் மாணவர், முதலாளி தொழிலாளி, அனைவரும் சொல்லலாம் அனைவருக்கும் சொல்லலாம். மகிழ்ச்சி, துக்கம், கோபம், குதூகலம் எந்த நேரத்திலும் சொல்லலாம். எந்த நேரத்திலும் சொல்லாம், யாரும் சொல்லலாம். யாருக்கும் சொல்லலாம். இனம் புரியாத பேரின்பம் அடைவீர்கள். எங்கே! ஒரு முறை சொல்லுங்கள் பார்ப்போம்.

அஸ்ஸலாமு அலைக்கும் (இறைவனின் சாந்தி உங்கள் மீது உண்டாவதாக!)

Saturday, November 22, 2008

மைக்கேல் ஜாக்ஸன் மீகாயிலாக ஏன் மாறினார்?

மைக்கேல் ஜாக்ஸன் மீகாயிலாக ஏன் மாறினார்?

நமக்கெல்லாம் மிகவும் பரிச்சயமான மைக்கேல் ஜாக்ஸன் இன்று முஸ்லிமாக தனது வாழ்க்கையை மாற்றிக் கொண்டு இன்று மீகாயிலாக நம் முன் வலம் வருகிறார். இவரின் சகோதரர் ஜெராமிக் ஜாக்ஸன் (அப்துல் அஜீஸ்) முன்பு ஒரு பேட்டியில் 'என் சகோதரனையும் இஸ்லாமிய வாழ்க்கை நெறியை ஏற்றுக் கொள்ளச் சொல்வேன்' என்று கூறியிருந்தார். அவர் சொன்னது போல் தன் சகோதரனுக்கு இஸ்லாமிய வாழ்க்கை நெறியை அறிவுருத்தி இன்று இஸ்லாமிய உலகினுள் பிரவேசிக்க வைத்துள்ளார்.

தான் பின்பற்றும், தன் தாய் தந்தையர் பின் பற்றும் ஒரு கொள்கையை விட்டு இஸ்லாத்துக்கு செல்வது என்பது ஏதோ 'எடுத்தேன்: கவிழ்த்தேன்' என்பது போன்ற ஒரு செயலல்ல. அரசின் எதிர்ப்பு: குடும்பத்தின் எதிர்ப்பு: நண்பர்களின் ஏளனம்: அனைத்தையும் தாங்கிக் கொண்டு உலகம் முழுவதும் பரிச்சயமான 'மைக்கேல் ஜாக்ஸன்' என்ற பெயரையும் நீக்கி விட்டு புதுப் பெயரை சூட்டிக் கொள்கிறார் என்றால் அவரின் மனமாற்றத்தை நாம் லேசாக எடை போட்டுவிட முடியாது.

தான் பிறந்து வளர்ந்த அமெரிக்காவைத் துறந்து தற்போது பஹ்ரைனில் குடியேறத் திட்டமிட்டுள்ளாராம். 'கோடிகளால் அமைதி கிட்டாது. இன்று எனக்கு தேவை மன அமைதி.அது இஸ்லாத்தில்தான் எனக்கு கிடைக்கும்' என்று சொல்வது போல் உள்ளது இவரின் மனமாற்றம்.

London based Arabic "al-Mujallah" has recently published an interview of Jermaine Jackson for the first time since he became Muslim. In this interview, he has expressed his passionate love for Islam. Let us see how he responded to various questions: -

What were your feelings after you proclaimed that you were a Muslim?
Jaramike Jackson:
Having embraced Islam, I felt as if I were born again. I found in Islam the answers to those queries which I had failed to find in Christianity. Particularly, it was only Islam that provided satisfactory answer to the question relating to the birth of Christ. For the first time I was convinced about the religion itself. I pray my family members might appreciate these facts.

What happened when you got back to the US after embracing Islam?
Jaramike Jackson:
When I returned to USA, American media orchestrated heinous propaganda against Islam and the Muslims. The gossips were let loose on me which really disturbed my peace of mind. The Hollywood was hell-bent upon maligning the Muslims. They were being projected as terrorists. There are many things where there is consensus between Christianity and Islam, and Quran presents Holy Christ as a virtuous Prophet. Then, I wondered, why Christian America levels baseless allegations against Muslims?

What was the reaction of your brother Michael Jackson?
Jaramike Jackson:
On my way back to America, I brought a number of books from Saudi Arabia. Michael Jackson asked me himself for some of these books for study. Before this, his opinion was influenced by the propaganda of American media against Islam and the Muslims. He was not inimical towards Islam, but he was not favorably disposed towards Muslims either. But after reading these books, he would keep mum and not say anything against Muslims. I think perhaps this is the impact of the study of Islam that he diverted his business interests towards Muslim traders. Now, he has equal shares with the Saudi billionaire prince Waleed bin Talal, in his multi-national company.
It was said earlier that Michael Jackson was against Muslims, then there are rumors that he had become Muslim. What is the real story?
I testify this fact, at least there is nothing in my knowledge that Michael Jackson ever said anything derogatory against Muslims. His songs, too, give message of love for others. We have learnt from our parents to love others. Only those who have their own ax to grind hurl allegations on him. When there can be a nasty uproar against me when I became Muslim, why can it not be so against Michael Jackson. But, so far, media has not subjected him to scathing criticism, although he is threatened for his getting somewhat closer to Islam. But who knows what would it look like when Michael Jackson embraces Islam.

Wednesday, November 19, 2008

ஹாஜிகளே! வருக!! வருக!!!




ஹாஜிகளே! வருக!! வருக!!!

25000 ஹாஜிகள் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா கண்டங்களில் இருந்து இந்த வருடம் ஹஜ்ஜீக் கடமையை நிறைவேற்ற சவூதி அரேபியா வருகிறார்கள். மேற்கண்ட நாட்டு ஹாஜிகளின் பொறுப்பாளர் அலாவுதீன் இத் தகவலைத் தெரிவித்துள்ளார். இவர்களை கவனிக்கும் பொருட்டு 24 மணி நேரமும் மூன்று ஷிஃப்ட்களாக ஆட்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அலாவுதீன் கூறுகிறார்.

மேலும் சவுதியில் பணிபுரிவோர் தக்க அனுமதி இல்லாமல் ஹஜ்ஜீ செய்ய வந்தால் காவலர்களால் பிடிக்கப் பட்டு தண்டனையும் வழங்கப்படும் என்றும் அவர்களின் நாட்டுக்கும் திரும்ப அனுப்பப் படுவார்கள் என்றும் சவூதி அரசு எச்சரித்துள்ளது. எனவே நிர்வாக வசதிக்காக சவூதி அரசு எடுக்கும் இந்நடவடிக்கைக்கு நாமும் ஒத்துழைப்பு கொடுத்து நமது நண்பர்களுக்கும் அறிவுறுத்துவோம்.

ஹஜ்ஜீக் கடமை என்பது கடன்கள் இல்லாமல் உடல் ஆரோக்கியமும் இருந்து மெக்கா செல்வதற்கான முழு ஆவணங்களும் இருந்தால்தான் கடமையாகும். ஆர்வக் கோளாரில் சிலர் வெளியாட்களின் மூலமாக பயண ஏற்ப்பாட்டை செய்து கொண்டு பல சிரமங்களுக்கும் ஆளாகிறார்கள். இந்த வருடம் சவூதி அரசும் மிகவும் கண்டிப்புடன் இருப்பதால் முறையான அனுமதி கிடைக்காதவர்கள் பொறுமையுடன் இருந்து அடுத்த வருடம் முயற்ச்சி செய்வார்களாக!

இறைவன் நமது உள்ளத்தைத்தான் பார்க்கிறான்.

'ஹஜ்ஜுக்குத் தேவையானவற்றைத் திரட்டிக் கொள்ளுங்கள்: திரட்டிக் கொள்ள வேண்டியவற்றில் இறை அச்சமே மிகச் சிறந்தது.'

-குர்ஆன் 2:197





Tuesday, November 18, 2008

பெற்றோரையே கொன்ற பிரியங்கா!

பெற்றோரையே கொன்ற பிரியங்கா!

மீரட் நகரில் மிகவும் நாகரிமான குடும்பத்தில் பிறந்த இள நங்கை பிரியங்கா: 2003-ல் பாலிடெக்னிக் முடித்துள்ளார். 2005-ல் மிஸ் மீரட் பட்டத்தையும் வென்றுள்ளார். சாதுவான முக தோற்றம் கொண்ட இந்த பெண்ணின் உள்ளும் கொலை வெறி இருந்துள்ளது பலராலும் நம்ப முடியவில்லை.

தன்னை வளர்த்து ஆளாக்கிய தனது பெற்றோர்களை தனது தோழி அஞ்சுவோடு சேர்ந்து தன் கைகளாலேயே கொன்றுள்ளார் பிரியங்கா! 'கொலையும் செய்வாள் பத்தினி' - என்பது இதுதானோ!

தன் தாய் தன்னை மிகவும் கண்டித்தார். தந்தை தன்னை மற்ற குழந்தைகளைப்போல் நடத்தவில்லை: அக்காள் புருஷன் தன்னோடு தவறாக நடக்க முயற்ச்சித்தார்: என்னை கண்டிக்கும் யாரையும் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது.
-இவை எல்லாம் தன் பெற்றோர்களை கொன்றதற்க்கான காரணமாக பிரியங்கா மீடியாக்களிடம் சொன்னவை. ஆனால் உண்மையான காரணம் நீதிமன்ற விசாரணையில் வெளி வரலாம்.

இங்கு நாம் கவனிக்க வேண்டியது 'பெற்றோர்கள் தன் குழந்தைகளை கண்டிப்பது குற்றமா?' அப்படியே கண்டித்தாலும் தன் பெற்றோர்களையே கொல்லும் அளவுக்கு செல்லும் இளம் தலைமுறையின் விபரீதப் போக்குக்கு யார் காரணம்? பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் அன்பை பரிமாறும் நேரம் குறைவதுதான் இது போன்ற நிகழ்வுகளுக்கு காரணமா?- என்று கேள்வி நீண்டு கொண்டே போகிறது.

Wednesday, November 12, 2008

இந்துப் பயங்கரவாதம்

இந்துப் பயங்கரவாதம்

பொய் பேசுகிறர்களா, உண்மையைக் கூறுகிறார்களா என்றறியும் சோதனை நார்கோ அனலைசிஸ் எனப்படும். மாலேகான் குண்டுவெடிப்புச் சதியில் கைது செய்யப்பட்ட இருவருக்கு இச்சோதனை பெங்களூரில் நடத்தப்பட்டது. மாலேகான் குண்டுவெடிப்பு பற்றியும் கூறினார்கள்; எதிர்காலத்தில் எங்கெங்கே குண்டு வைக்கச் சதித் திட்டம் தீட்டியிருக்கிறார்கள் என்பதையும் கூறிவிட்டார்கள். போபால், ஜபல்பூர் ஆகிய இடங்களில் குண்டு வைக்கப் போடப்பட்ட திட்டம்பற்றியும் கக்கி விட்டனர். பணம் தந்தது யார், ஆர்டிஎக்ஸ் தந்ததும், ஆயுதங்களைத் தந்ததும் யார், எந்தெந்த வகையில் உதவினார்கள் என்பதையெல்லாமே தெரிவித்து விட்டனர்.

மாலேகான் குண்டுவெடிப்புச் சதியில் சாமியாரிணி பிரக்யாசிங் தாக்கூர் மற்றும் அவருடைய கூட்டாளிகள் இரண்டு பேர் ஈடுபட்டு முசுலிம்கள் கொல்லப்படுவதற்குக் காரணமாக இருந்த சதிச் செயல் மக்களுக்கு இப்போதுதான் தெரிய வருகிறது. என்றாலும், இந்துத்துவ பயங்கரவாதம் 2006 முதலே கண்காணிக்கப்பட்டு வருகிற சேதிதான்.
6.4.2006 இல் நடந்த நான்டெட் குண்டுவெடிப்பு தொடர் பாகக் கைது செய்யப்பட்ட ராகுல் மனோகர் பாண்டே, மும்பை பயங்கரவாதத் தடுப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ள சஞ்சய் என்கிற பானுராவ் வித்தல்ராவ் சவுத்ரி ஆகியோரின் கைதுகள் தீவிர வலதுசாரி (பிற்போக்கு)ச் சக்திகளின் தொடர்பை உறுதிப்படுத்துகின்றன.

மனோகர் பான்டேவுக்கும், பிரக்யாசிங் தாக்கூருக்கும் பயங்கரவாதப் பயிற்சி மேடையாக, புனே நகரம் விளங்குகிறது.
இவர்கள் இரண்டு பேரிடமும் நடத்தப்பட்ட நார்கோ அனலைசிஸ் (பொய் அறியும் சோதனை) முடிவுகளின்படி, இவர்கள் இருவருக்கும் இச்சதியில் உள்ள தொடர்புகளை இவர்கள் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். 2003 முதல் 2006 வரை இசுலாமியர்களின் குடியிருப்புப் பகுதிகளில் மகாராட் டிரா மாநிலத்தில் நடத்தப் பெற்ற சதிச் செயல்களில் இரு வருக்கும் உள்ள தொடர்புகளை இவர்கள் ஒத்துக்கொண்டி ருக்கிறார்கள். மனோகர் பான்டே சதியில் ஈடுபட்டதை ஒத்துக்கொண்டார் என்று நார்கோ அனலைசிஸ் அறிக்கை கூறுகிறது.

பொய் அறியும் சோதனையின்போது, நான்டெட் நகரத்து சங் பரிவாரைச் சேர்ந்த லட்சுமண் ராஜ்கொண்டவார் என்பாரின் வீட்டில் நடந்த வெடிவிபத்து பற்றிய விவரங்களை எல்லாம் சொல்லிவிட்டார். இந்த வெடிவிபத்தில் நரேஷ் ராஜ் கொண்டவார் மற்றும் ஹிமான்சு பான்சே ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டனர், நான்கு பேர் படுகாயம் அடைந்தனர். பட்டாசு தயாரிக்கும்போது ஏற்பட்ட விபத்து என்று காவல்துறையினர் முதலில் நினைத்தனர். பின்னர்தான், வெடிகுண்டு தயாரிக்கும்போது ஏற்பட்டது என்பதை அவர்கள் அறிந்துகொண்டனர். தாங்கள் சக்தி வாய்ந்த வெடிப் பொருள்களைக் கையாள்வதில் பயிற்சி பெற்றவர்கள் என்பதையும் பாண்டே கூறிவிட்டார்.
விபத்தில் இறந்துபோன ஹிமான்சு பான்சே இச்சதிக் குழுவின் தலைவன் என்றும், வெடிகுண்டு தயாரிக்கும் முறை யைக் கற்றுக் கொடுத்ததே இந்த ஆள்தான் என்றும் கூறியதாக ஆய்வு அறிக்கையில் உள்ளது. ஜல்னா, புர்னா, பர்பானி பகுதிகள் உள்ளிட்ட மரத்வாடா பகுதியில் நடந்த எல்லா குண்டுவெடிப்புச் சதிச் செயல்களையும் செய்தவர்களே இந்த ஹிமான்சுவும், பான்டேயும்தான். புனே நகரிலிருந்து வெடிப் பொருள்களை ஹிமான்சு ஏற்றி வந்து, உடற்பயிற்சிக் கூடம் ஒன்றில் பதுக்கி வைத்திருக்கின்றனர் எனும் விவரமும் வெளி வந்துள்ளது.

உள்ளூர் அரசியல்வாதிகளின் ஆதரவும் தொடர்பும் பற்றியும் பான்டே கூறிவிட்டார். ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பி., பஜ்ரங் தள் ஆகிய அமைப்புகள் ஹிமான்சுக்கு எல்லா உதவிகளையும் செய்தன. மிதுன் சக்ரவர்த்தி என்பவன் புனேயிலிருந்து வந்து வெடிகுண்டு தயாரிக்கும் பயிற்சியை அளித்ததாகவும் பான்டே தெரிவித்துள்ளார்.

2006 ஆம் ஆண்டு மராட்டியர்களின் ஆண்டுப் பிறப்பான குடிபாதவ் நாளில்தான் நான்டெட் குண்டு வெடிப்புச் சதிக் கான திட்டமே தீட்டப்பட்ட தகவலையும் பான்டே கூறி விட்டார். ஈத் நாளன்று மசூதியில் வைக்கத் திட்டம் போடப் பட்டிருந்த வெடிகுண்டுதான் வீட்டில் வெடித்துவிட்டது.

பான்டே தெரிவித்த செய்திகளிலேயே முக்கியமானதும், அதிர்ச்சியானதும் என்னவென்றால், இவர்களின் இருப்பிடத்துக்கு வந்து சொற்பொழிவு நிகழ்த்திவிட்டுப் போனவர் விசுவ இந்துப் பரிசத்தின் தலைவர் பிரவீன் தொகாடியா.

பர்பானி, நான்டெட் சதிச் சம்பவங்கள் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இவர் நார்கோ அனலைசிஸ் ஆய்வுக்காக அழைத்து வரப்பட்டார்.
பானுராவ் வித்தல் ராவ் சவுத்ரி (சஞ்சய்) தம் வாக்கு மூலத்தில் 2003 ஆம் ஆண்டிலேயே தானும் தன்னுடன் நான்கு பேரும் சேர்ந்து வெடிகுண்டு தயாரிக்கப் பயிற்சி பெற்றதாகத் தெரிவித்தனர்.
ஹிமான்சு பான்சே, மரோட்டி வாக், ராகுல் மனோகர் பான்டே மற்றும் யோகேஷ் ரவீந்திர விடுல்கர் ஆகியோரும் இவருடன் பயிற்சி பெற்றவர்கள் என்கிற விவரத்தையும் கூறியுள்ளார். புனேவில் சின்ககாட் பகுதியில் உள்ள ஆகாஷ் விடுதியில் இவர்களுக்கு வெடிகுண்டுத் தயாரிப்புப் பயிற்சி தரப்பட்டதாம்.

அவரங்காபாத்தில் உள்ள மசூதியில் மறுநாள் வைத்து வெடிப்பதற்காகத் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டுதான் ராஜ் கொண்டவாரின் வீட்டில் வெடித்துவிட்டது என்பதை இவர் ஒத்துக்கொண்டுள்ளார்.
நூற்றுக்கணக்கானவர்களைக் கொன்றதற்குக் காரணமான வெடிகுண்டுகளை வைத்த அபுசலீம் மற்றும் தாவூத் இப்ராகிம் ஆகிய இருவரையும் பழி தீர்ப்பதற்காக ஹிமான்சு திட்டமிட்டார் எனவும் சஞ்சய் கூறினார்.

- நவீன் அம்மேம்பலா, பெங்களூர்,

"தி நியூ இன்டியன் எக்ஸ்பிரஸ்", 11.11.2008

Tuesday, November 11, 2008

குர்ஆன் பற்றி சில அறிஞர்களின் கருத்துக்கள்!

குர்ஆன் பற்றி சில அறிஞர்களின் கருத்துக்கள்!

அறிஞர் கொய்தே கூறுகிறார்:

குர்ஆனை எத்தனை முறை பார்த்தாலும் அது முதலில் அந்நியமாகத் தெரிகிறது. பிறகு புதுமையாகத் தெரிகிறது. அடுத்து ஒரு தென்றல் போல் மனதைக் கவர்ந்து செல்கிறது. மதிப்பச்சத்தை ஏற்படுத்துகிறது- அதனுடைய நடையழகு அதனுடைய கருத்துக்கு ஏற்ப கம்பீரமாகவும் வலுவானதாகவும் அச்சத்தை ஏற்படுத்தக் கூடியதாகவும் அதன் மீது மதிப்புக் கொள்ளச் செய்வதாகவும் அமைந்துள்ளது- இந்த நூல் இவ்வாறு காலங்காலமாக மக்கள் மீது தன் ஆதிக்கத்தை செலுத்தக் கூடியதாக இருக்கிறது.

-Quoted in T.P. Hughes Dictionary Of Islam, Page – 526.

ஜி.மார்கோலத் கூறுகிறார்:

உலகத்திலுள்ள பெரும் மத கிரந்தங்களில் குர்ஆன் திண்ணமாக முக்கிய இடத்தை வகிக்கிறது. உலகில் புரட்சி சகாப்தத்தைத் தோற்றுவித்த இந்த கிரந்தங்களில் அது இளைய வயது கொண்டதாக இருந்த போதிலும் மக்களின் உள்ளங்களை மாற்றுவதிலும் பெரும் பெரும் மக்கள் கூட்டத்தையே வியக்கத்தக்க முறையில் மாற்றி அமைப்பதிலும் அதற்கு இணையான வேறு கிரந்தம் இல்லை. அது முற்றிலும் புதிய சிந்தனையை மக்கள் உள்ளத்தில் தோற்றுவிக்கிறது. அது முதலில் அரேபிய பாலைவனத்தில் சிதறிக் கிடந்த மக்களை இலட்சியத்தைப் பேணும் குழுவாக ஒன்றிணைத்தது. அவர்களை மக்களில் சிறந்தவர்களாக மாற்றியது. ஐரோப்பிய மக்களும் கிழக்கிந்திய மக்களும் இன்றைக்கும் மதிக்கும் அளவுக்கு சமய அரசியல் அமைப்புகளை அது தோற்றுவித்துள்ளது.

-Introduction to J.M.Rodwells The Koran, New york, Every mans library 1977, page 711

ஆர்தர் ஜே.ஆர்.பெர்ரி கூறுகிறார்:

குர்ஆனுடைய கருத்துக்களை வெளிக் கொணர்வதில் முன்னோர்கள் செய்த முயற்ச்சியை விட இன்னும் சிறப்பாக செய்ய நாடினேன். ஆனால் அரபி மொழியில் குர்ஆனில் இருக்கும் அழகையும் ஆழத்தையும் நேர்த்தியையும் மிகக் குறைவாகவே என்னால் கொண்டு வர முடிந்தது. மிகத் துல்லியமாக பின்னிப் பிணைந்து நிற்கும் ஓசைகளை நான் ஆழமாக கவனித்தேன். குர்ஆனில் இருக்கும் கருத்தழகுக்கு சற்றும் குறைந்ததல்ல அதன் இசை நயம் என்பதை உணர்ந்தேன். உலக இலக்கியங்களிலேயே குர்ஆனை இவை இணையற்ற ஒன்றாக விளங்கச் செய்கிறது. குர்ஆனின் இந்த விநோதமான அம்சம் அதற்கேயுரிய தனிப் பாணியாகும். பிறரால் முற்றிலும் கையாள முடியாத பாணியாக அது இருக்கிறது.

'அதனுடைய சொற்களின் ஓசைநயமே மக்களின் கண்களை கசியச் செய்கிறது. உள்ளங்களைப் பரவசமடையச் செய்கிறது.' - என்று பிக்தால் தன் மொழி பெயர்ப்பில் சொன்ன கருத்து எந்த வகையிலும் மிகையானதல்ல.

-The Koran Interpreted, London Oxford University Press, 1964,Page 8.

'நமது அடியாரான முஹம்மதுக்கு நாம் அருளியதில் நீங்கள் சந்தேகம் கொண்டு அதில் நீங்கள் உண்மையாளர்களாகவும் இருந்தால் இது போன்ற ஒரு அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள்: இறைவனைத் தவிர ஏனைய உங்கள் உதவியாளர்களையும் அழைத்துக் கொள்ளுங்கள்'

குர்ஆன் 2:23

Wednesday, November 05, 2008

பராக் ஒபாமா - என் பார்வையில்



பராக் ஒபாமா - என் பார்வையில்

எல்லோரும் எதிர்பார்த்தபடி பராக் ஒபாமா அமெரிக்க ஜனாதிபதியாகி விட்டார். ஆப்ரிக்க நாட்டைச் சார்ந்த ஒருவர் அதிபராக முதன் முறையாக வெள்ளை மாளிகையை தொடுவது பலராலும் நம்ப முடியவில்லை. பல நீக்ரோ இனத்தவர் ஆனந்தத்தில் கண்ணீர் விட்டு அழுத காட்சி மெய் சிலிர்க்க வைத்தது. கென்ய மக்கள் குழுவினராக ஆனந்த நடனமாடியது கண் கொள்ளாக் காட்சி.

நம் இந்தியாவில் எப்படி ஒரு இனம் இன்று வரை பலராலும் ஒடுக்கப்பட்டு வருகிறதோ அதே போன்ற நிலைதான் அமெரிக்காவிலும். இடமும் பெயரும் மட்டுமே மாற்றம். ஒபாமாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க சென்றவர்களை நிற வெறி பிடித்த வெள்ளையர்கள் அவமானப்படுத்திய நிகழ்ச்சி பல இடங்களிலும் நிகழ்ந்துள்ளது. அரசாள்வதற்கு மன்னருக்கு மகனாக பிறக்க வேண்டும்: மக்களாட்சிக்கு தலைவராக வர இன்ன இனத்தில்தான் பிறந்திருக்க வேண்டும் என்ற கோட்பாடுகளையெல்லாம் தகர்த்து இன்று அமோக வெற்றி பெற்றுள்ளார் ஒபாமா.

அதிலும் அமெரிக்காவில் கணிசமான மக்கள் தொகையை கொண்ட யூதர்களும் ஒபாமாவை ஆதரித்ததுதான் பலருக்கும் ஆச்சரியம். இஸ்லாமிய பாரம்பரியத்தில் வந்தவர்: மதரஸாவில் கல்வி பயின்றவர்: இஸ்லாமிய தீவிரவாதி: முதலாளித்துவத்தை எதிர்ப்பவர்: என்றெல்லாம் ஒபாமாவுக்கு எதிரான பிரச்சாரம். வாக்குச் சீட்டில் ஒபாமா என்பதற்கு பதில் ஒஸாமா என்று அச்சடித்த ஒரு சிலரின் குள்ள நரித்தனம். தேர்தலுக்கு முன் 'அமெரிக்க ஜனாதிபதியாக ஒபாமாவை வைப்பதும், ஒஸாமாவை வைப்பதும் ஒன்றுதான்' என்று கூறிய ஆஸ்திரேலிய பிரதமரின் திமிர்த்தனம். அமெரிக்க தேவாலயங்கள் முழுவதும் பாதிரிகளால் ஒஸாமாவின் இஸ்லாமிய பின்னணியை வைத்து எதிர்ப் பிரச்சாரம். இதை எல்லாம் முறியடித்து 'மாற்றம் தேவை' என்ற ஒரே முழக்கத்துடன் இன்று அமெரிக்க அதிபராக பராக் ஒபாமா அமரப் போகிறார்.

பொருளாதார பின்னடைவு, ஆப்கன் பிரச்னை, ஈராக் பிரச்னை, பாலஸ்தீன பிரச்னை, என்று பல சிக்கல்களை ஜார்ஜ் புஷ் என்ற கிறுக்கனால் மேலும் சிக்கலாக்கப் பட்டுள்ளது. இந்த பிரச்னைகளை எல்லாம் எப்படி சமாளிக்கிறார் என்பதில்தான் ஒபாமாவின் உண்மையான வெற்றி அமைந்துள்ளது.

நிறவெறி, மொழிவெறி, மதவெறி அனைத்தையும் கடந்து சிறந்த உலக தலைவராக மிளிருகிறாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Sunday, November 02, 2008

வைகோவின் வடிகட்டிய தேசத் துரோகம்!!

விடுதலைப் புலிகளைக் கடுமையாக விமர்சித்து எழுதிய ஹிந்து நாளிதழின் கோவை - ஈரோடு அலுவலகங்கள் தாக்கப்பட்டன. ஆனால் இந்தத் தாக்குதலால் தமிழக முதல்வர் தொடங்கி, எந்தவொரு அரசியல்வாதியும் கண்டனம் செய்யவில்லை.

கருத்துச் சுதந்திரத்தக்கும் பத்திரிகை சுதந்திரத்துக்கம் நேர்ந்துள்ள அச்சுறுத்தல் இது என்பது ஓர் அபாயம். விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களுடைய வன்முறையையும் செயல்பாடுகளையும் ந்த மௌன அரசியல்வாதிகள் அங்கீகரிக்கிறார்கள் என்பது மற்றொரு மிகப் பெரிய அபாயம். இந்த மௌன ஆதரவை வைகோ நன்றாக சாதகமாக்கிக் கொண்டிருக்கிறார். தமது பொதுக்கூட்டப் பேச்சில் (அக்டோபர் 21 அன்று) புலிகளுக்கு வெளிப்படையாகவே ஆதரவு தெரிவித்திருக்கிறார். இலங்கை துண்டாடப்படாமல் காக்க இந்தியா எந்த விதத்தில் உதவினாலும் சரி, இந்தியாவே துண்டாடப்படும் அபாயம் ஏற்படும் என்று பிரதமரை எச்சரித்திருக்கிறார்! தமிழ் ஈழம் உருவாக உதவுவதற்கு, தாமே படை திரட்டி, தலைமை தாங்கி நடத்திச் செல்ல முடியும் என்றும் அவர் சவால் விட்டிருப்பது, பகிரங்க புலிகள் ஆதரவுப் பேச்சு மட்டுமல்ல; வடிகட்டிய தேசத் துரோகமும்கூட. ஆனால், இதற்கும் தமிழக முதல்வர் மௌனம் காத்து மறைமுக ஆதரவு தெரிவிப்பார் என்று நம்பலாம்!

தமிழக அரசியல்வாதிகள் நினைப்பதுபோல், பிரபாகரன் தமிழ் ஈழத்தைத் தனி நாடாகப் பெற்று, ஆட்சி புரிய அனுமதிக்கப்பட்டால் விடுதலைப்புலிகளின் அடுத்த குறி தமிழகமாக இராது என்பது என்ன நிச்சயம்? அப்போது இங்கே நிலவக்கூடிய கொடுங்கோன்மையில் யாரும் எதையும் மேடைபோட்டுப் பேசக்கூட முடியாது! புலி ஆதரவுப் புயலில் நிலை தடுமாறும் தமிழக அரசியல்வாதிகள் மத்தியில், வேலூர் சட்டமன்ற உறுப்பினர் சி.ஞானசேகரன் (காங்கிரஸ்) மட்டுமே தெளிவாகச் சிந்தித்தது. தைரியமாகப் பேசியுள்ளார். ராஜீவ்காந்தி கொலையாளிகளை ஆதரிக்கும் வெறிப் போக்கைத் துணிந்து கண்டனம் செய்துள்ளார். தடை செய்யப்பட்ட இயக்கத்தையும் அதன் தலைவரையும் பகிரங்கமாக ஆதரித்துப் பேசுவோரை, தமிழக முதல்வர் கைது செய்யாதது ஏன்? என்று நியாயம் கேட்டிருக்கிறார். தமிழ் உணர்வு என்பது மொழி, பண்பாடு, உரிமைகள் காப்பதில் இருக்க வேண்டியதுதான். ஆனால் அந்த உணர்வு வெறியாக திசை மாறி நாட்டைத் துண்டாட அனுமதித்தால், தமிழ்ப் பண்பாடும் தமிழ் உணர்வும் தழைக்காது. விரைவில் அழிந்துதான் போகும். மும்பையில் ராஜ்தாக்கரே விசிறி விட்டிருக்கும் மராத்தியப் பிரிவினை உணர்வும் இத்தகைய விபத்தையே விளைவிக்கும்.
வரலாற்று ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் பல்வேறு அழகான இழைகளைக் கொண்டு பின்னப்பட்ட நாடு இந்தியா. அதில் ஒவ்வோர் இழைக்கும் தனித் தன்மையும் குணமும் உண்டு என்பதற்காக, இழையிழையாகப் பிரிக்க ஆரம்பித்தால் நாடும் துவண்டு போகும். அதன் மாநிலங்களும் தனித் தனி இழைகளாகி வலுவிழந்து சுருண்டு தொங்கும்.இந்த விபரீதம் நோக்கிச் செல்லவும் மக்களைத் தூண்டவும் முற்படும் சுயநல அரசியல்வாதிகள் ராஜ் தாக்கரேயானாலும் சரி. வைகோவானாலும் சரி, கைதாகி தண்டனை பெற வேண்டும். மக்களால் புறக்கணிக்கப்பட வேண்டும்.

-கல்கி (02.11.08)

- - - - - - - - - - - - - - - -

Sunday, October 26, 2008

உயிரைப் பற்றி சில ருசிகரத் தகவல்கள்!

உயிரைப் பற்றி சில ருசிகரத் தகவல்கள்!

நம் உடலின் உள் உயிர் இருந்தால் பெயர் சொல்லி அழைக்கும் மனித இனம், உடலை விட்டு உயிர் பிரிந்தால் வெறும் பிணம் என்றே அழைப்பதைப் பார்க்கிறோம். இந்த உயிரைப் பற்றிய சில ருசிகரத் தகவல்களை சகோதரர் பி.ஜெய்னுல்லாபுதீன் விடுதலை ஏட்டுக்கு பதிலாக உணர்வு இதழில் எழுதி வருகிறார். அதில் சிலவற்றை இப் பதிவில் தருகிறேன்.

உயிரைப் பற்றி ஆத்திகம் என்ன சொல்கிறது?

உயிர் என்பது இறைவனிடமிருந்து நேரிடையாக வழங்கப்படுவதும் மரணத்தின் போது இறைவனிடம் திரும்பக் கொண்டு செல்லப் படுவதுமாகிய முற்றிலும் புலனுக்கு எட்டாத பொருள் என இறை நம்பிக்கையாளர்கள் குறிப்பாக இஸ்லாமியர்கள் நம்புகின்றனர்.

அனால் நாத்திகம் இதை வன்மையாக மறுக்கிறது. கடவுளின் உள்ளமையை முற்றிலுமாக மறுத்ததைப் போன்று உயிரின் உள்ளமையை நாத்திகத்தால் முற்றிலுமாக மறுக்க முடியவில்லை. புலனுக்கு எட்டாத ஏனைய பொருட்களுக்கு இல்லாத ஒரு சிறப்பான வாய்ப்பை மனித உயிர் பெற்றுள்ளதே அதற்குக் காரணமாகும்.

ஆம்! புலனுக்கு எட்டாத ஏனைய பொருட்கள் நமக்கு வெளியே இருக்கும் போது உயிருள்ள ஒவ்வொரு மனிதனையும் 'உயிர்' எனும் ஒன்று இருப்பது உண்மையே என ஒப்புக் கொள்ளும்படி ஒவ்வொருவரின் பகுத்தறிவும் அவர் மீது நிர்பந்தம் செலுத்துகிறது.

இந்த நிர்பந்தத்தை மீற முடியாமல் நாத்திகம் அதைப் பெயரளவிற்கு ஒப்புக் கொண்டு பிரச்னையைச் சமாளிக்க முயற்சி செய்கிறது. உயிர் இருப்பதை ஒத்துக் கொண்டு அதே நேரத்தில் புலனுக்கு எட்டாத உலகை மறுக்க வேண்டுமாயின் உயிர் என்பது முற்றிலும் புலனுக்கு உட்பட்ட ஒரு பொருள் எனக் கூற வேண்டி வரும்.

ஆனால் அந்தத் தந்திரமும் எடுபடாது. ஏனெனில் உயிர் என்பது புலனறிவுக்கு உட்படாத ஒன்று. உயிரைக் கண்ணால் காண முடியாது, நாவால் சுவைக்க முடியாது. கைகளால் தொடவும் முடியாது. எனவே உயிர் ஐம்புலன்களுக்கும் புலப்படாத பொருளாகும் என்பதற்கு இதற்கு மேல் விளக்கம் தேவையில்லை.

இவ்வாறு உயிரைப் பற்றிய பிரச்னையில் இருதலைக் கொள்ளியாக சிக்கிக் கொண்ட நாத்திகம் அதிலிருந்து தப்பித்துக் கொள்ள கையாண்ட தந்திரம் இதுதான்.

ஆணின் விந்தனுவும் பெண்ணின் கரு முட்டையும் இணைந்து கருவுற்ற முட்டையாக மாறுகிறது. இவை யாவும் உயிருள்ளவைகளே! எனவே மனிதனைத் தோற்றுவிக்கும் கருவுற்ற முட்டை உயிருள்ளதாக இருப்பதால் அதிலிருந்து தோன்றும் மனிதக் குழந்தைக்கு உயிர் இருப்பது இயல்பு. இதிலிருந்து கருவுற்ற என்ற வாதம் அபத்தமாகும். எனவே மனிதனுடைய உயிர் வேறு எங்கிருந்தும் வருவதும் இல்லை. இறக்கும் போது வேறு எங்கும் போவதும் இல்லை.

மனித உடல் தோன்றும் போது தொடக்கத்திலேயே உயிர் உள்ளது. அவ்வாறே உடல் இறக்கும் போது உயிரும் அழிந்து விடுகிறது. சுருங்கக் கூறின் உயிர் என்பது கரு அறையில் நாம் இறைவனிடமிருந்து பெற்றுக் கொள்வதும் மரணத்தின் போது திரும்பவும் இறைவனிடம் கொண்டு செல்லப் படுவதுமாகிய பொருள் அல்ல என்பது நாத்திகம் முன் வைக்கும் வாதமாகும்.

இந்த வாதத்திற்கு நாத்திகம் எடுத்து வைக்கும் வாதம் மானிடத் தோற்றத்தின் தொடக்கத்திலேயே கருவுற்ற முட்டையிலேயே அவனுக்குள் உயிர் இருக்கிறது என்பதாகும்.

நாத்திகத்தைத் தகர்க்கும் கருவியல் கண்டுபிடிப்பு:

பேரண்டத்திற்கு ஒரு ஆரம்பம் இருந்துள்ளது என்பதை சென்ற நூற்றாண்டு வரை அறிவியல் உலகம் எவ்வாறு அறியாமல் இருந்ததோ அவ்வாறே கரு வளர்ச்சி தொடர்பான அறிவியலிலும் போதிய விபரங்களை அறிவியலாளர்கள் அறிந்திருக்கவில்லை. இதன் காரணமாக நாத்திக விளக்கத்தில் ஏதோ நியாயம் இருப்பது போன்று மத நம்பிக்கையற்றவரிடம் ஒரு பிரம்மையை நாத்திகத்தால் ஏற்படுத்தி இருக்க முடியும்.

ஆனால் சென்ற நூற்றாண்டின் இறுதியில் கருவியல் துறையில் ஏற்பட்ட முன்னேற்றம் கருவுற்ற முட்டையானது உயிருள்ளதன்று. அது உயிரற்ற பிண்டம் என்ற உண்மையை வெளிப்படுத்தி நாத்திகச் சித்தாந்தத்தைத் தகர்க்கும் மற்றொரு அறிவியல் உண்மையாக வெளிப்பட்டது.

உலகின் முதலாவது சோதனைக் குழாய் குழந்தை பிறந்த கதை பெரும்பாலோர் மறந்திருக்க மாட்டார்கள். ஆயினும் மூன்று வருடம் கழித்து அவளுக்கு ஒரு சகோதரி பிறந்த வரலாறு அதிகமானோர் அறியவில்லை எனத் தோன்றுகிறது. அது ஒரு சுவாரசியமான வரலாறு.

முதல் சோதனைக் குழாய் குழந்தையைப் பெற்றெடுத்த இங்கிலாந்து தேசத்து பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த 'ப்ரவ்ன்' தம்பதியினருக்கு மூன்று வருடங்கள் கழித்து மற்றொரு குழந்தை வேண்டும் என ஆசை பிறக்கவே அவர்கள் முதலில் அணுகிய மருத்துவக் கழகத்தை மீண்டும் அணுகி தங்களது ஆசையைத் தெரிவித்தனர்.

அவர்களது கோரிக்கையை ஏற்றுக் கொண்ட விஞ்ஞானிகள் அவர்களிடம் மீண்டும் விந்தணுவையும் கரு முட்டையையும் எடுக்காமலேயே 'ப்ரவுன்' தம்பதியரின் இரண்டாவது குழந்தையைச் சோதனைக் குழாயில் நட்டு வளர்த்து பிறகு திருமதி ப்ரவுனின் கருவறைக்கு மாற்றி மற்றொரு அழகான பெண் குழந்தையைப் பெற்றெடுக்கும்படிச் செய்தார்கள்.

விந்தனுவும் கரு முட்டையும் எடுக்காமல் குழந்தையை உருவாக்க எப்படிச் சாத்தியமாயிற்று? இக்கதையை எடுத்துக் கூறி அதற்கு விளக்கம் தரும் இந்தியரான டாக்டர் ஹமீத்கான் (இவர் இலண்டன் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றவரும் அமெரிக்காவின் அறிவியல் ஆலோசனைக் குழுவில் உறுப்பினராகவும் இருப்பவர்) ப்ரவுன் தம்பதியினர் முதல் குழந்தைக்காக மருத்துவ உதவி நாடியபோதே அவர்களிடமிருந்து விந்தணு மற்றும் கரு முட்டைகளை எடுத்து அவைகளை இணையச் செய்து கருவுற்ற முட்டைகளாக ஆக்கி வைத்திருந்தவைகளில் சில மிச்சம் இருந்ததாகவும் அவற்றுள் ஒன்றை எடுத்தே இரண்டாவது குழந்தையை உருவாக்கியதாகவும் கூறுகிறார்.

இங்கு இயல்பாக எழும் கேள்வி உலகில் உள்ள எந்த உயிரையாவது இவ்வளவு காலம் இறந்து போகாமல் பதப்படுத்தி வைக்க முடியுமா? என்பதாகும்.

இந்த நிகழ்ச்சி கருவுற்ற முட்டை மக்கள் நினைப்பது போன்று உயிருள்ள பொருள் இல்லை என்றும் அது உயிரற்ற பொருளே என்றும் காட்டுவதாகக் கூறுகிறார் டாக்டர் ஹமீத் கான்.

கருவுற்ற முட்டை உயிரற்றது என்பதை நிரூபிக்கக் கூடிய சோதனை ஒன்றையும் அவர் கூறுகிறார். ஒரு புழுவையும் அப்புழுவின் கருவுற்ற முட்டையையும் தனித் தனியாக வேறு வேறு குழாயில் வைத்து அவைகளை மைனஸ் எழுபது டிகிரி சென்டிகிரேடு வெப்ப நிலையில் வைத்திருந்து பிறகு சிறிது நேரம் கழித்துப் புழுவை எடுத்துப் பார்த்தால் அப்புழு இறந்து போயிருக்கும். ஆயினும் அதன் கருவுற்ற முட்டையை எவ்வளவு நாள் வேண்டுமானாலும் வைத்திருந்து அதன் பிறகு அதிலிருந்து உயிருள்ள புழுவை உருவாக்க முடியும் எனக் கூறுகிறார் டாக்டர் ஹமீத்கான்.

டாக்டர் ஹமீத்கான் கூறும் இந்த விளக்கத்திலிருந்து உயிரினங்களைத் தோற்றுவிக்கும் அவைகளின் கருவுற்ற முட்டை உயிரற்ற பிண்டமே என்பதை தெளிவாக விளங்குகிறோம். கருவில் வளரும் குழந்தையின் உயிர் தொடக்கத்திலேயே அதனிடம் இருக்கும் ஒன்றில்லை என்பதும் கருவறையில் அது வளரும்போது மற்றொரு விதத்தில் பெற்றுக் கொள்வதே என்பதும் தெளிவாகும்.

இதை இன்னமும் விளங்கிக் கொள்ளச் சிரமமப்படும் நாத்திக நண்பர்கள் மிகக் குறைந்தபட்சம் ப்ரவுன் தம்பதியினரின் இரண்டாவது குழந்தைக்கு உயிர் வந்ததைப் பற்றி மட்டுமாவது சற்று சிந்திக்க வேண்டும்.

உலகிலுள்ள எந்த உயிரினத்தையும் சற்றைக்கெல்லாம் கொன்றுவிடும் மைனஸ் எழுபது டிகிரி சென்டிகிரேடு எனும் தாழ்ந்த வெப்பநிலையில் மூன்று வருடம் உயிரற்ற பிண்டமாக தங்கியிருந்து அதன் பிறகு தோற்றமெடுக்கத் தொடங்கிய அக் குழந்தைக்கு உயிர் கிடைத்ததா இல்லையா என்பதையும் உயிர் கிடைத்தது என்றால் அந்த உயிர் எப்படி வந்தது என்பதையும் பற்றி மட்டுமாவது காய்தல் உவத்தல் இன்றி சிந்திப்பது மிகவும் நன்று. சிந்திப்பார்களா!

-பி.ஜெய்னுல்லாபிதீன்

படிக்கும்போது சற்று குழப்பமாக இருக்கும். ஒரு முறைக்கு இரண்டு முறை படியுங்கள். பதிவு சொல்ல வரும் கருத்தை சுலபமாக புரிந்து கொள்ளலாம்.

நண்பர் சுவனப்பிரியன் அவர்களுக்கு,என்னுடைய வலைதளத்திற்கு உங்களை வரவேற்கிறேன். டார்வின் கோட்பாடு குறித்த என்னுடைய கட்டுரைக்கு உங்களின் பதிவை சிலர் பின்னூட்டமாக இட்டிருந்தனர் (அது உங்கள் தளத்திற்கு வருகை தந்தபின்னர்தான் புறிந்தது) அவைகளுக்கு நான் தக்க பதில் கூறியிருக்கிறேன். வாருங்களேன் விவாதிப்போம்.

தோழமையுடன்,செங்கொடி.

நண்பர் செங்கொடிக்கும் இந்த பதிவிலேயே பதிலும் இருக்கிறது.

Friday, October 24, 2008

மாலிகான் குண்டு வெடிப்பில் வி.ஹெச்.பி தொடர்பு!

மாலிகான் குண்டு வெடிப்பில் வி.ஹெச்.பி தொடர்பு!

சமீபத்தில் மஹாராஷ்ட்ரா மாநிலம் மாலிகானிலும், அஹமதாபாத் மூடசா நகரிலும் நடந்த குண்டு வெடிப்பின் முக்கிய சூத்திரதாரிகள் மூன்று பேரை மஹாராஷ்ட்ரா காவல்துறை கைது செய்துள்ளது. போலீஸ் அதிகாரி சூர்ய பிரகாஷ் குப்தா இது பற்றி கூறும்போது 'குண்டு வெடிப்புக்கு பயன் படுத்தப்பட்ட இரு சக்கர வாகனம் ஒரு பெண்ணுக்கு சொந்தமானது. அவரும் இதில் சம்பந்தப்பட்ட மேலும் மூவரையும் கைது செய்துள்ளோம். இவர்கள் வி.ஹெச்.பி. யின் பிரிவான 'ஜனத் ஜாக்குதி சமிதி' என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள். இந்த குண்டு வெடிப்பில் ஆறு பேர் இறந்தது நினைவிருக்கலாம். இன்னும் பல குண்டு வெடிப்புகளில் இவர்கள் சம்பத்தப் பட்டுள்ளார்களா என்பதை இனி வரும் விசாரணைதான் முடிவு செய்யும்' என்றார்.

-மக்கள் தொலைக்காட்சி செய்தி

எடுத்த எடுப்பிலேயே இந்த குண்டு வெடிப்புக்கு முஸ்லிம்கள்தான் காரணம் என்று சொன்ன அறிவுஜீவிகள், பல அப்பாவி முஸ்லிம்களை உள்ளே தள்ளிய காவல் துறையினர் தற்போது என்ன பதில் வைத்துள்ளார்கள்?

Tuesday, October 21, 2008

இலங்கை எனது பார்வையில்!

ஒரு முறை சவுதியா விமானம் சென்னையில் புயல் காரணமாக இறங்க முடியாமல் கொழும்பு விமான நிலையத்தில் இறக்கும் நிர்பந்தத்திற்கு உள்ளானது. அப்போது அந்த குட்டித் தீவை மேலிருந்து பார்க்கும் பாக்கியம் கிட்டியது. என்ன அழகிய இயற்கை வளம் கொஞ்சும் நாடு! எங்கு திரும்பினாலும் பசுமை. இன்று அந்த நாடு எதிர் கொள்ளும் பிரச்னைகளோ ஏராளம்.

என் தாத்தாவும் தொழில் நிமித்தமாக அடிக்கடி கொழும்பு சென்று வந்ததையும் அந்த நாட்டைப் பற்றியும் உயர்வாக என்னிடம் என் சிறு வயதில் சிலாகித்துக் கூறுவார். என் சிறு வயதில் எனது உற்ற தோழன் இலங்கை வானொலி என்றால் மிகையாகாது. கே.எஸ்.ராஜா, பி.எச்.அப்துல் ஹமீது, ராஜேஸ்வரி சண்முகம், புவனலோஜினி துரைராஜசிங்கம், போன்றோரின் குரல்கள் இன்றும் என் காதில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கிறது.

அந்த அமைதியான நாட்கள் மீண்டும் எப்போது வரும்?

நேற்று தொலைக்காட்சியில் தமிழ் சிறுவர் சிறுமியர் சுமார் 10 அல்லது 12 வயதிருக்கும்: பள்ளி யூனிஃபார்மோடு ஸ்ரீலங்கா படையின் வான் தாக்குதலுக்கு பயந்து பதுங்கு குழியில் கண்ணீரோடு அமர்ந்திருந்தனர். இந்தக் காட்சியைப் பார்த்து மனதை என்னவோ செய்தது. பொது மக்கள் அங்கும் இங்கும் மரண பயத்தில் ஓடுவதைக் கண்டு மிகுந்த துயருற்றேன்.

பல காலம் தொடர்ந்து வரும் இந்த பிரச்னை முடிவுக்கு வராதா? 'தனி ஈழமே எங்கள் குறிக்கோள்' என்று முழங்கும் விடுதலைப் புலிகள் ஒரு புறம். 'இலங்கை வெளிநாடு நாங்கள் தலையிட முடியாது என்று கூறும் மன் மோகன் சிங்கின் அரசின் மெத்தனம்: சொந்த நாட்டைப் பிரிந்து அகதிகளாக பிரான்சிலும், ஜெர்மனியிலும், இங்கிலாந்திலும் காலம் தள்ளும் தமிழர்கள் ஒரு புறம்: சொந்த மண்ணிலேயே அகதிகளாக்கப்பட்டு அகதி முகாம்களில் வருடக் கணக்கில் காலம் தள்ளும் நடுத்தர வர்க்கத்தினர்: மொழியாலும் இனத்தாலும் ஒன்றுபட்ட முஸ்லிம்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே உள்ள இடைவெளி என்று பிரச்னை ஒவ்வொரு நாளும் நீண்டு கொண்டே செல்கிறது.

1. தனி ஈழத்தைக் கை விட்டு அதிகார பகிர்வுக்கு ஒத்துக் கொள்ள விடுதலைப் புலிகளை அணுகுதல்.

2. சிங்கள ராணுவத்திற்கும் அதிகார பகிர்வை ஒத்துக் கொள்ளச் செய்தல். இதற்கு ஒத்து வராத பட்சத்தில் இந்தியா போர் தொடுத்து அதிகார பகிர்வுக்கு வழி காணுதல்.

3. மொழியாலும், இனத்தாலும் ஒன்று பட்ட இந்துக்கள், இஸ்லாமியர், கிறித்தவர் அனைவரையும் முந்தய சம்பவங்களை மறந்து ஒரு குடையின் கீழ் கொண்டு வருதல்.

போன்ற அவசர கால நடவடிக்கை இன்று இலங்கைக்கு மிக அவசியம். இல்லையென்றால் நம் கண் முன்னே நம் இனம் சிறுக சிறுக சுத்திகரிக்கப் படுவதற்கு நாம் அனைவருமே காரணகர்த்தாக்களாக்கப் படலாம்.

இணைய நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

Sunday, October 19, 2008

ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானமா!

ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானமா!

'பெண்கள் வீட்டு வேலை செய்வது, கோலம் போடுவது, சாணி தட்டுவது, பாத்திரம் கழுவுவது, கும்மியடிப்பது, கோலாட்டமடிப்பது என்பது போன்ற அடிமை வேலைக்குத் தயார் செய்யாதீர்கள்.'
-பெரியார்-குடியரசு-08-03-1936

'நாகம்மாளை நான் தான் வாழ்க்கைத் துணையாகக் கொண்டு இருந்தேனேயில்லாமல் நாகம்மாளுக்கு நான் வாழ்க்கைத் துணையாக இருந்தேனா என்பது எனக்கே ஞாபகத்துக்கு வரவில்லை.'

'பெண்கள் சுதந்திர விஷயமாகவும் பெண்கள் பெருமை விஷயமாகவும் பிறத்தியாருக்கு நான் எவ்வளவு பேசுகிறேனோ, போதிக்கிறேனோ அதில் நூறில் ஒரு பங்கு வீதமாவது என்னருமை நாகம்மாள் விஷயத்தில் நான் நடந்து கொண்டிருந்தேன் என்று சொல்லிக் கொள்ள எனக்கு முழு யோக்கியதை இல்லை'

'ஆனால் நாகம்மாளோ, பெண் அடிமை விஷயமாகவும், ஆண் உயர்வு விஷயமாகவும் சாஸ்திர புராணங்களில் எவ்வளவு கொடுமையாகவும் மூர்க்கமாகவும் குறிப்பிட்டிருந்ததோ அவற்றுள் ஒன்றுக்குப் பத்தாக நடந்து கொண்டிருந்தார் என்பதையும், அதை நான் ஏற்றுக் கொண்டிருந்தேன் என்பதையும் மிகுந்த வெட்கத்துடன் வெளியிடுகிறேன்.'

-பெரியார்-குடியரசு-14-05-1933

மேலே உள்ள கருத்துக்கள் அனைத்துமே பெரியார் ஈ.வெ.ரா அவர்களின் சொந்தக் கருத்துக்களாகும். இதை இங்கு பதிவதின் நோக்கம் 'ஆணும் பெண்ணும் சரி நிகர் சமானம்' என்ற எண்ணம் மேடைப் பேச்சுக்கும், எழுத்துக்கும் வேண்டுமானால் புரட்சிகரமாகத் தோன்றலாம். ஆனால் நடைமுறையில் ஒத்து வராத சித்தாந்தம். ஆனானப்பட்ட பெரியாருக்கே இந்த நிலை என்றால் சாதாரண மனிதர்களுக்கோ இன்னும் சிரமமான காரியமாகவே படும்.

ஏனெனில் ஆணுக்கு சில சிறப்புகளையும் பெண்ணுக்கு சில சிறப்புகளையும் படைத்தவன் வழங்கியிருக்கிறான். மேலும் பெண்ணை விட ஆணுக்கு சில சிறப்புத் தகுதிகளையும் அதே இறைவன் கொடுத்துள்ளான். இதை எல்லா வேதங்களும் உண்மையும்படுத்துகின்றன. இதற்கு மாற்றமாக 'நாங்கள் ஆண்களுக்கு சமமானவர்கள்தான்' என்று வாதிடும் பெண்கள் உடல் உழைப்பை வெளிப்படுத்தும் வேலைகளை செய்ய முன் வருவதில்லை. அதற்கு அவர்களின் உடலும் ஒத்துழைக்காது.

தாய்மை என்ற மிகச் சிறந்த பொறுப்பை பெண்களுக்கு வழங்கிய இறைவன் அதை ஆண்களுக்கு தரவில்லை. அதே போல் குடும்பத்தை நிர்வகிக்கும் பொறுப்பை ஆண்களுக்கு வழங்கிய இறைவன் பெண்களை இது விஷயத்தில் விட்டு விடுகின்றான். இதற்கு மாற்றமாக நடக்கும் மேலை நாடுகளில் குடும்ப வாழ்வு சீரழிந்து குழந்தைகள் தறி கெட்டு தவறான வழிகளில் செல்வதையும் பார்க்கிறோம்.

அடுத்து இஸ்லாமியர்களில் பெண்களை அதிகம் கல்லூரி வரை அனுப்புவதில்லை. பெண்கள் கல்வி கற்பதை இஸ்லாம் எந்த வகையிலும் தடை செய்யவில்லை. ஆணும் பெண்ணும் சேர்ந்து கல்வி கற்பதைத்தான் இஸ்லாம் தடுக்கிறது. தற்போதுதான் இஸ்லாமிய பெண்களும் அதிக அளவில் கல்லூரி வரை செல்லும் பழக்கம் அதிகரித்துள்ளது. இது தொடர வேண்டும்.

'சிலரை மற்றும் சிலரை விட இறைவன் மேன்மைப்படுத்தியிருப்பதில் பேராசைக் கொள்ளாதீர்கள்! ஆண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. பெண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. இறைவன் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவனாகவே இருக்கிறான்.'
-குர்ஆன் 4:32

'பெண்களுக்கு கடமைகள் இருப்பது போல் அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன. அவர்களை விட ஆண்களுக்கு ஓர் உயர்வு உண்டு'
-குர்ஆன் 2:228

Friday, October 17, 2008

ஊடகங்களில் முஸ்லீம்கள்

ஊடகங்களில் முஸ்லீம்கள்-ச.பாலமுருகன்

இவ்வருட சுதந்திர தினத்தின்போது, இந்நாட்டின் தேசிய கொடியை மரியாதை செய்ய பாபுலர் பிரண்ட் என்ற அமைப்பினர் முஸ்லீம்கள் சுதந்திர தின விழா கொண்டாட ஏற்பாடு செய்திருந்தனர். முஸ்லிம்களின் இச்சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி மறுத்திருந்தது. இறுதியில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து அனுமதி பெற்றே சுதந்திர தினத்தை முஸ்லிம்கள் கொண்டாட முடிந்தது.மதத்தின் பெயரால் வேறுபாடு காட்டுவது அரசுக்கு நியாயமானதல்ல. ஆனால் நமது சமூகத்தில் உருவாகியுள்ள பகைமை உணர்வு முஸ்லிம்களின் சுதந்திர தின விழாவைக் கூட தடுக்கும் வகையில் வளர்ந்துள்ளது.

இந்நாட்டின் விடுதலைக்கு இந்துக்களும் முஸ்லிம்களும் இணைந்தே போராடினர். பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் நாட்டு விடுதலைக்கு இரத்தம் சிந்தியுள்ளனர். ஆனால் தேசபக்தி என்பது பெரும்பான்மை மதத்தவரின் உடமை போன்ற சித்திரங்கள் ஊடகங்களில் கட்டமைக்கப்படுகிறது.சமீபத்தில் ஒரு சில ஆண்டுகளில் வெளியாகியுள்ள பல தமிழ் திரைப் படங்களில் முஸ்லிம்கள் வில்லன்களாகவும், பயங்கரவாதிகளாகவும், கோயில்களில் குண்டு வைப்பவர்களாகவுமே சித்தரிக்கப்பட்டுள்ளனர்.இந்த அருவருக்கதக்க விஷமத்தை எந்த குற்ற உணர்வுமின்றி இந்த திரைப்படங்கள் தணிக்கையில் சான்று பெற்று வெளிப்படுத்தியுள்ளது.ஆரம்ப கால 1920 ஆண்டுகளில் மேற்கத்திய திரைப்படங்களான பேச்சற்ற படங்களில் கூட தாடி வைத்த அரேபியர்கள் மற்றும் முஸ்லிம்களே வில்லன்களாகவும், போக்கிரிகளாகவும் சித்தரிக்கப்பட்டனர். இந்த அபத்தம் இன்னமும் தொடர்கிறது. பல்வேறு அமெரிக்க திரைப்படங்களில் அரேபிய முஸ்லிம்கள் பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்பட்டுள்ளனர்.செய்தி ஊடகங்களும், காட்சி ஊடகங்களும் தொடர்ந்து முஸ்லீம்களை பயங்கரவாதிகளாக சித்தரித்து வருகிறது.

சிமி என்ற முஸ்லீம் அமைப்பிற்கான தடை அடிப்படையில் தவறானது என நீதிமன்றம் முடிவு செய்த செய்தி வெளிவந்தவுடன் ஆங்கிலத் தொலைக்காட்சிகள் அகமதாபாத் குண்டு வெடிப்புக் காட்சிகளையும், செத்துக் கிடந்த மனிதர்களையும் காட்டியது. பின் சிமியின் கைது செய்யப்பட்ட ஊழியர்களைக் காட்டியது. ஏறக்குறைய ஒரு நாள் முழுவதும் இந்தக் கொடூரத்தை செய்து முடித்தது ஆங்கிலக் காட்சி ஊடகங்கள். சராசரி மனிதனின் மனதில் பயங்கரவாத அமைப்புத் தடையை நீதிமன்றம் நீக்கினால் மீண்டும் குண்டுவெடிக்கும் என்ற கருத்தை அது ஆழமாகப் பதிய வைக்க முயன்றது. பயங்கரவாத அமைப்பு என்பது சிமி என்ற வட்டத்தை தாண்டி ஒட்டுமொத்த முஸ்லீம் சமூகம் என்ற பதிவு ஏற்கனவே சராசரி பார்வையாளர்கள் மத்தியில் தொடர்ந்து இந்த ஊடகங்கள் பதிய வைத்துள்ளது.

முஸ்லீம் பயங்கரவாதத்தைப் பற்றி பேசிய ஊடகங்கள் வசதியாக இந்து வெறியின் கோரத்தை மறக்கச் சொல்லுகிறது. சிறுபான்மை என்பது பெரும்பான்மைக்குக் கட்டுப்பட்டது என்ற எண்ணம், அரசியல் ஊடகங்களில் மேலோங்கியும் உள்ளது. இது ஜனநாயகத்தின் அடிப்படைக்கே எதிரானது. முஸ்லீம்கள் கையில் உள்ள ஊடகங்கள் கூட இந்தக் கருத்தை ஏற்றுக் கொண்டு தங்களை தக்க வைத்துக் கொள்ள முயல்கிறது. எனவே தான், முஸ்லீம்கள் சுதந்திர தின விழாவைக் கொண்டாடி இச்சுதந்திரத்திற்கு தாங்களும் தியாகம் செய்தவர்கள் என நிரூபித்துள்ளனர்.

உலகம் முழுவதும் முஸ்லீம்கள் இந்த ஊடக வழி தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. செப்டம்பர் 11 இரட்டை கோபுர தாக்குதலுக்கு பின்னிட்டு அமெரிக்கா, ஐரோப்பிய ஊடகங்களில் இது வெகு அதிகமாக அதிகரித்துள்ளது. சாதாரண முஸ்லீம் ஒரு பயங்கரவாதியாகவும், பயங்கரவாத செயல் புரியும் தன்மை கொண்டவனாகவே கருதப்படும் சூழல் உருவாகியுள்ளது. எனது நண்பர் ஒருவர் சிறந்த மனித உரிமைப் போராளி. அவரும், அவர் மனைவியும் ஒரு மனித உரிமைப் பயிலரங்கில் பங்கேற்க வேண்டி அமெரிக்காவிற்கு 2 ஆண்டுகளுக்கு முன் சென்றார்கள். அவர் முகத்தில் அடர்த்தியான தாடி வைத்திருந்தார்.அமெரிக்காவின் ஒவ்வொரு விமான நிலையத்திலும் அவர் நிர்வாணப்படுத்தப்பட்டு கடும் வேதனைக்கு உள்ளானார். சில இடங்களில் அவரின் மல வாயிலும் கூட கை நுழைத்து ஏதேனும் மறைக்கப்பட்டுள்ளனவா என போலீசார் சோதனை செய்தனர். அவரின் நிலைக்கு காரணம் அவர் தோற்றத்தில் ஒரு முஸ்லீம் போல காணப்பட்டது தான். பெங்களூரைச் சார்ந்த முஸ்லீம் மருத்துவர் & அமீது ஆஸ்திரேலியாவில் பயங்கரவாதி என சந்தேகப்பட்டதையும் ஊடகங்கள் அவரைப் பற்றி தாறுமாறாக சித்தரித்ததையும் பின் அவர் அப்பாவி என விடுவிக்கப்பட்டதையும் நாம் அறிவோம். உலகம் முழுவதும் முஸ்லிம்கள் தங்களின் தார்மீக உரிமையான முஸ்லீம் அடையாளங்களை வெளிப்படுத்திக் கொள்ளும் உரிமை (தாடி வளர்ப்பது, குல்லா அணிவது) பெரும் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது.

ஒரு முறை ஊடகங்களால் பதியப்பட்ட பொய்யான பிம்பம் சராசரி மனிதர்களின் உள்ளங்களில் ஆழப் பதிந்து விடுகிறது.கடந்த 2006 ஜூலை 22ம் தேதி கோவை குண்டுவெடிப்பு வழக்கு விசாரணை இறுதிக் கட்டத்தை அடைந்திருந்த சமயம். பத்திரிகைகளில் ஒரு பரபரப்பு செய்தி வெளியானது. 5 முஸ்லீம் இளைஞர்கள் கோவையை தகர்க்க சதி செய்ததாகவும், வெடி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் பேசப்பட்டது. ஆனால் பின்னர் போலீசார் போட்ட பொய் வழக்கு என வேறு ஒரு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளரே நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார். ஆனால் முந்தைய செய்திக்கு கொடுத்த முக்கியத்துவத்தில் ஒரு சதவீதத்தைக் கூட பிந்தைய செய்திக்கு வழங்கவில்லை.ஊடகங்களில் இந்த ஜனநாயக விரோதப் பார்வை நாட்டின் வளர்ச்சி, பண்பாடு மற்றும் ஒற்றுமைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இதன் ஆழமான பிரதிபலிப்பை காவல் துறையில் நாம் காண முடியும். காவல் துறை எப்போதும் முஸ்லிம்களை சந்தேகத்துடனேயே பார்க்கிறது.

1996ஆம் ஆண்டு நேஷனல் அகாடமி ஆஃப் அட்மினிஸ்ட்ரேஷன் என்ற முசோரியில் உள்ள ஆட்சித் துறையினருக்கான பயிற்சி கழக ஆய்வில் முஸ்லிம்களை எதிரிகளாகவும், பொது அமைதியை குறைப்பவர்களாக கருதுவதையும் கலவர சமயங்களில் இந்த சார்பு மற்றும் ஓரவஞ்சனையுடன் காவல் துறையில் பணிபுரிபவர்கள் நடந்து கொள்வதையும் வெளிப்படுத்தி உள்ளது.இந்த நாட்டின் குடிமகன் அவன் சார்ந்த மதத்தின் அடிப்படையில் அவன் நம்பும் ஆன்மீகத்தின் வெளிப்பாடுகளால் சிறுமைப்படுத்தப்படுவதும் சந்தேகத்திற்கு உள்ளாக்கப்படுவதும் ஜனநாயகம், சுதந்திரம் என்ற கருத்துக்களுக்கு அவமானகரமானது. ஊடகங்கள் முஸ்லீம்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் இழிவை, சுய பரிசோதனை செய்ய வேண்டும்.காவல்துறை மற்றும் ஆயுதப்படைகளில் ஆழ வேரூன்றி உள்ள இஸ்லாமிய எதிர்ப்பு உணர்வு கலவர காலங்களில் அமைதியான நிலை உருவாகுவதற்கு பதிலாக கடுமையான பின்விளைவுகளை உருவாக்கி விடுகிறது.

வி.என்.ராய் என்ற உத்திரபிரதேசமாநில காவல்துறை மூத்த உயரதிகாரி தனது ஆய்வில் காவல்துறையில் வேரூண்றி உள்ள இந்த பாதக பார்வையை மாற்றி சில வழிவகைகளை தெரிவித்தார்.

1. காவல்துறை மற்றும் ஆயுதப் படைகளில் கணிசமான அளவு முஸ்லீம்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண்டும். ஏனெனில் பெரும்பாலும் காவல்துறையில் முஸ்லீம்களின் எண்ணிக்கை வெகு குறைவாகவே உள்ளது. அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் வெள்ளையர்களுக்கு இணையாக கருப்பர்களையும், ஆங்கிலேயர்களையும் வெற்றிகரமாக பணியமர்த்தி பாகுபாடுகளை களைய முயன்றுள்ளனர்.

2. காவல்துறையினர் மற்றும் ஆயுதப் படைகளுக்கு மதச் சிறுபான்மையினரின் உரிமைகள் மத ஒற்றுமை குறித்த அறிவுப்பூர்வமான பயிற்சிகளைத் தொடர்ந்து பயிற்றுவிக்க வேண்டும். பணி உயர்வு பெறும் சமயம் கட்டாயம் இப்பயிற்சிகளை அதிகாரிகள் பெற வேண்டும். உயர் அதிகாரிகள் முறையான கலந்தாய்வினை மேற்கொள்ள வேண்டும். மேலும் தவறு செய்யும் காவல் துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். (2002 கோவையில் பொய் வழக்குப் போட்டு 5 முஸ்லீம்களை சிறைப்படுத்திய அதிகாரிக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.) உயர் அதிகாரி தவறுக்கு பொறுப்பாக்கப்பட வேண்டும்.

3. மக்களின் பங்களிப்பு காவல்துறையினரின் சிந்தனை மாற்றத்திற்கு காரணம். கலவரப் பகுதிகளில் மக்களின் கருத்து மற்றும் ஒற்றுமைக்கான வழிகளை கேட்டு பரிசீலிக்கவும் வேண்டும். இக்கருத்துக்களை நாம் பரிசீலிப்பது அவசியம்.

நன்றி ச.பாலமுருகன்.