Followers

Thursday, March 31, 2011

சகோ. சார்வாகனுக்கு சில கேள்விகள்!



//இஸ்லாமின் மத அடிப்படைவாத சட்டமான் ஷாரியா,இஸ்லாமிய நாடுகளில் வாழும் பிற மதத்தவர் நிலைமை, மற்றும் உலகம் முழுதும் இஸ்லாமிய அரசு அமைத்தல் என்ற விஷயங்க்ளே இஸ்லாமை,முஸ்லிம்களை பிற மதத்தவரின் விமர்சனத்திற்கு உள்ளாக்கியது.//

ஒரு இசமோ மார்க்கமோ மதமோ வளர்வதால் அதனால் சமூகத்துக்கு நன்மை கிடைத்தால் அதை வரவேற்பதுதானே முறை! பெரியார் எவ்வளவு பாடுபட்டார்? அவரால் சாதியை ஒழிக்க முடிந்ததா? இன்னும் எத்தனை பெரியார்கள் முயன்றாலும் இந்திய சாதி சமூக கட்டமைப்பை உடைக்க முடியாது. மத புத்தகங்களில் வர்ணாசிரமம் இருக்கும் வரை, சாதியை ஒழிக்க முடியாது. எல்லோரும் படித்து விட்டால் சாதிகள் ஒழிந்து விடும் என்ற கருத்து முன் வைக்கப்பட்டது. முன்பு கத்தி அரிவாளால் வெட்டிக் கொண்டவர்கள் இன்று மானிட்டர், கீ போர்ட, மௌஸ் மூலமாக சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். நேரமிருப்பின் வினவு பக்கமும் டோண்டு பக்கமும் சென்று பார்ப்பனர்கள், படையாச்சி,தேவர், ஆதிதிராவிடர் சம்பந்தமாக வந்த பதிவுகளையும் அதற்கு வந்த பின்னூட்டங்களையும் சற்று பார்வையிடவும்.

பிராமணர்கள் அல்லாத மற்றவர்களை சூத்திரன் என்று சொல்லும் இந்து மதம், அதே இனத்திலிருந்து இஸ்லாத்தை தழுவிய என்னை சொல்ல மனம் வருமா? சொல்லத்தான் முடியுமா? சொல்லத்தான் விடுவோமா? இது இஸ்லாத்தால் எங்களுக்கு கிடைத்த பேறு அல்லவா!

தமிழகத்தில் எங்கோ ஒரு குக்கிராமத்தில் பிறந்த நான் சவுதி அரேபியாவின் புகழ் பெற்ற ஒரு மசூதியில் தலைவராக நின்று பல முறை தொழுகை நடத்தியிருக்கிறேன். என்னைப் பின்பற்றி சவுதி, எகிப்து, சூடான், பிலிப்பைன், பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாட்டவர்கள் நான் குனிந்தால் குனிகிறார்கள். நான் நிமிர்ந்தால் நிமிர்கிறார்க்ள. நான் தொழுகையை முடித்தால் என்னைப் பின்பற்றி அவர்களும் தொழுகையை முடிக்கிறார்கள். இது இஸ்லாத்தினால் எனக்கு கிடைத்த பேறு அல்லவா? நம் தமிழுக்கு கிடைத்த பெருமை அல்லவா!

இஸ்லாத்தை கூட்டாக ஏற்ற ஒரு தாழ்த்தப்பட்ட கிராமத்துக்கு பேட்டி எடுப்பதற்காக ஜீனியர் விகடன் சென்றிருந்தது. அங்கு கல்லூரியில் படிக்கும் மாணவனிடம் 'நீங்கள் இஸ்லாத்துக்கு சென்றதால் என்ன மாற்றம் வந்து விடும் என்று நினைக்கிறீர்கள்?' என்று கேட்டனர். 'எந்த மாற்றம் வருகிறதோ இல்லையோ! இனி என்னை விட வயதில் சிறியவன் எல்லாம் என்னை 'டேய் சரவணா!' என்று கூப்பிடமாட்டார்கள். 'ரஹீம் பாய்' என்றுதான் கூப்பிடுவார்கள். அது ஒன்று போதும்' என்று சொன்னதைப் படித்து என் கண்கள் கலங்கி விட்டது. எந்த அளவு மனதால் பாதிக்கப்பட்டு இருந்தால் இந்த வார்த்தைகள் வரும்!

நம் காலத்திலேயே திண்ணியம், பாப்பாரப் பட்டி, கீரிப்பட்டி, கீழ்வெண்மணி சம்பவங்களை மறந்திருக்க மாட்டீர்கள் என்றே நினைக்கிறேன். நமது சமூகமும் நமது மூதாதையர்களும் சிறந்தவர்களாக இருந்திருந்தால் எங்கோ பிறந்த அரபியரான முகமது நபியை வாழ்க்கை வழி காட்டியாக எனது முன்னோர்கள் எடுத்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. நமது நாட்டில் இஸ்லாத்தின் முன்னேற்றம் தடைபடுமானால் அதனால் இஸ்லாத்துக்கு எந்த பின்னடைவும் இல்லை. மாறாக பின்னடைவு நமது நாட்டுக்ககும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும்தான்.

சாதிக் கொடுமை அரசு ஆதரவோடு நடைபெறுகிறது என்பதற்கு சமீபத்திய கோர்ட் ஆர்டரை வினவு தளத்திலிருந்து சுருக்கமாக பார்ப்போம்.

வழக்கு 07.02.11 அன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுகுணா முன்பு விசாரணைக்கு வந்தது. உறுத்துக்கட்டளை மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்டு, இடைக்கால தடைவிதிக்கக் கோரும் மனுவைத் தள்ளுபடி செய்ததோடு இத்தகையபழக்கவழக்கங்களை அரசியலைப்பு சட்டம் ஷரத்து 13 அங்கிகரிப்பதாகவும் தெரிவித்தார். அரங்கநாதனுக்காக வழக்காடிய வழக்குரைஞர் சகாதேவன் சாதி வேற்றுமை மற்றும் தீண்டாமை காரணமாக பணிவழங்க மறுப்பது அரசியலமைப்பு சட்டம் வழங்கும் சமத்துவ வேலை வாய்ப்பிற்கான உரிமைக்கு எதிரானது என வாதிட்டதை ஏற்காமல் மத உரிமையில் சமத்துவம் (வெங்காயம்!) எல்லாம் கிடையாது என்பதை அரசியலமைப்பு சட்டம் பிரிவு 25 கூறியிருப்பதாகவும், உச்சநீதிமன்றத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் வழக்கு நிலுவையில் இருப்பதால் எதுவும் தற்போது செய்யவியலாது என தடையானை மனுவை தள்ளுபடி செய்து பார்ப்பன மேலாதிக்கத்திற்கு மயிலிறகால் வருடிவிட்டிருக்கிறார் நீதிபதி சுகுணா. உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பது என்பது வேறுவழக்கென்றும், அது அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் வழக்கு. ஆனால், இந்தப் பணி கோயில் பணிவிடைகளுக்கான வேலை என்று வாதாடியதையும் நிராகாரிதுள்ளார் நீதிபதி.

பார்ப்பனரல்லாதோர், கோயிலில்; மணியாட்டினால் பூசை செய்தால் கடவுள் சிலையைவிட்டு வெளியேறிவிடுவார் என்று உச்சநீதிமன்றமும், பார்ப்பனரல்லாதோர் பிரசாதம் செய்தால், தண்ணீரெடுத்து சிலையை குளிப்பாட்டினால் இந்துமத உரிமைக்கு எதிரானது என உயர்நீதிமன்றமும் தீர்ப்பு வழங்குகிறது.

இத்தனை நடக்கும்போதும் சாதியா? அது பள்ளிக்கூடத்தில் சேர்க்கும்போது குழந்தைகளிடம் கேட்பதனால்தான் உருவானது என்பதுபோல் பார்ப்பன புரட்டையும் வெட்கமில்லாமல் பேசித்திரிகின்றனர் பார்ப்பன மற்றும் கருப்புஅம்பிகள்.

இத்தகைய பார்ப்பன மயமான தீர்ப்பை வழங்கும் நீதிபதி நேர்மையானவராக, பார்ப்பனர் அல்லாதவராக இருந்தால் சரியான தீர்ப்பை வழங்கிவிடுவார்கள் என்ற மூடநம்பிக்கையை இந்த தீர்ப்பு சாட்டையால் அடிக்கிறது. காசு வாங்கிக்கொண்டு தீர்ப்பை எழுதினார்என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகாதவர் நீதிபதி சுகுணா! ஆனால், பிரச்சனை நீதித்துறை காவி மயமாக இருப்பது, நீதிபதி பார்ப்பன ஆதரவாளராக இருப்பது. அரசியலமைப்பு சட்டத்தின் ஷரத்துக்கள் 13, 15 மற்றும் 26 ஆகியவை இந்து மதத்தின் தீண்டாமை, பிற்போக்குதனம், சாதி ஒழிப்பு என்பதை ஊறுகாய் போல தொட்டுவிட்டு, மதம் என்பது என்ன? சாதி என்பது என்ன? இந்து மதத்தின் சாதி தொடர்வது ஏன்? மதச்சார்பின்மை என்பது என்ன? என்பதையெல்லாம் விளக்காமல் சாதுர்யமாக பழைய கழிவுகளை கரண்டியில் அள்ளிப் பானையில் போட்டு பொங்கல் வைத்து சமத்துவம் பேசுகிறது அரசியலமைப்புச் சட்டம்’. நீதித்துறை அதற்கு மகுடம் சூட்டுகிறது.

செயலாளர்
மனித உரிமைப் பாதுகாப்பு மையம்
சென்னைக் கிளை

இது ஏதோ படிப்பறிவில்லாத அந்த காலத்தில் வந்த தீர்ப்பல்ல. போன மாதம் வெளியான தீர்ப்பைத்தான் நாம் பார்க்கிறோம்.

எனவே தவறு எங்கு நடக்கிறதோ அங்கு தான் சார்வாகன் போன்றவர்களின் சேவை இருக்க வேண்டுமே யொழிய ஒரே வடிகாலான இஸ்லாத்தை குறை கூற முனைவது ஒடுக்கப்பட்டவர்களை மேலும் மேலும் அதள பாதாளத்தில் தள்ளுவதாகவே முடியும்.


இனி விடுதலையில் வந்த ஒரு பேட்டியைப் பார்ப்போம்


தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் 1300 மக்கள்தொகை கொண்ட ஒரு சிற்றூர் மீனாட்சிபுரம். அங்கே வாழ்ந்து வந்தவர்களில் பெரும்பாலோர் தீண்டத்தகாதவர்களே. அவர்களில் பெரும் எண்ணிக்கை கொண்டவர்கள் 1981 பிப்ரவரியில் இஸ்லாம் மதத்திற்கு மாறினர். அதனால் ஒரு முரண்பாட்டின் மையமாக அது ஆயிற்று.

விசுவ இந்து பரிசத், அதன் தோழமை அமைப்புகளைப் பொறுத்தவரை, இந்தத் திடீர் மத மாற்றத்திற்கான காரணம் உள்ளூர் குறைபாடுகளின் வெளிப்பாடு இல்லை. ஆனால், எண்ணெய் வள நாடுகளால் நிதி உதவி அளிக்கப்பட்ட, இந்துக்களை, இந்து மதத்தை, இந்துஸ்தானத்தை அழிக்கும் ஒரு பழைய சதித்திட்டத்தின் ஒரு பகுதியே இந்த மதமாற்றங்கள் அன அவை கருதின. சமூகத்தில் சமத்துவம் மறுக்கப்பட்டதை எதிர்க்கும் ஒரு நடவடிக்கையாகவே இங்கிருந்த 1,250 தீண்டத்தகாதவர்களில் அ,000-த்துக்கும் மேற்பட்டோர் இஸ்லாத்திற்கு மதம் மாறினர் என அறிவிக்கப்பட்டது.

சமூகத்தில் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்னும் விதிகளை உயர்சாதியினரான தேவர்கள் வகுத்தனர்; அந்த விதிகளை மீறுதல் கடுமையான எதிர்விளைவையே உருவாக்கிற்று. 1980-81 இல் இப்பகுதியைச் சுற்றியிருந்த சில இடங்களிலும் இஸ்லாத்திற்கு மதமாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால் இந்த மதமாற்றங்கள் வி.இ.ப. அல்லது மற்ற இந்து அமைப்புகளிடமிருந்து எந்தவிதப் பெருங்கூச்சலையும் எழுப்பவில்லை. ஏனெனில் மீனாட்சிபுர மதமாற்றங்கள் போல பெரும் எண்ணிக்கையிலான மதமாற்றங்கள் அல்ல அவை. மேலும் உயர் ஜாதியினரிடையே கசப்பு மிகுந்த (சாதிகலப்பு) உறவுகளும் உயர்சாதியினரின் எதிர்ப்பைத் தடுத்தன. தேவர் போன்ற உயர்சாதியினரிடம் தீண்டத்தகாத மக்கள் சமூக அளவிலும் அரசியல் நிலையிலும் பட்ட அவமானங்களின் எதிர்விளைவே இந்த மதமாற்றங்கள் எனத் தோன்றுகிறது.

மீனாட்சிபுரத்தைச் சுற்றியுள்ள சிற்றூர்களில் இருந்து ஆண்கள், பெண்கள் உள்ளிட்ட பல ஆயிரக்கணக்கான முஸ்லிம் மக்கள் இந்த ஊர்களுக்குள் நுழைந்து, மதமாற்றத்திற்கு ஆதிதிராவிடரைக் கட்டாயப்படுத்தினர் என்பதாக இந்த நிகழ்ச்சிக்கு ஆர்.எஸ்.எஸ்., வி.இ.ப. போன்றோர் மதக்கண்ணோட்டத்துடன் விளக்கம் அளித்தனர். கடந்த காலங்களில் இங்கு நிலவிய தூய்மை, தீட்டு போன்ற கடுமையான ஜாதி வெறித்தனத்திற்கும், இந்த மத மாற்றங்களுக்கும் இடையே உள்ள தொடர்பை ஒப்புக்கொள்ள இயலாத வி.இ.பரிசத்தினால், மீனாட்சிபுரம் மதமாற்றங்கள் வெளிக்கொணர்ந்த பிரச்சினைகளை ஏற்றுக்கொள்ளவோ, எதிர்கொள்ளவோ இயலவில்லை என்றே தோன்றுகிறது.

இந்த மதமாற்றங்களுக்குப் பின்னணியில் உள்ள சமூக சீர்திருத்தம் என்னும் செயல்திட்டம் இருட்டடிப்பு செய்யப்பட்டு விட்டது. சமூக அளவில் உரிமைகள் பலவற்றைப் பெற்றுள்ள, பிற்போக்கு மனப்பான்மை கொண்ட வி.இ.பரிசத்தின் பங்கு இவ்வாறு இருட்டடிப்பு செய்யப்பட்டதில் பெரிதாகும். உயர்ஜாதி இந்துக்கள் தொடர்ந்து தீண்டத்தகாத மக்களை ஒடுக்கி, கொடுமைப்படுத்திக் கொண்டே வருவது, இந்து மதத்திலிருந்தே முற்றிலுமாகத் தங்களை அவர்கள் துண்டித்துக் கொள்ளும் ஒரு நிலைக்கு வழி வகுக்கவே செய்யும். இந்த சமூக நிலையை வி.இ.ப. சிறிது கூடப் புரிந்து கொள்ளும் நிலையில் இல்லை. இத்தகைய சமூகச் சூழ்நிலையை வி.இ.ப. சரியாகப் புரிந்து கொள்ள இயலாமற் போனதன் காரணமாக, ஒரு சமூகத்தினர் தாங்களாகவே இந்து மதத்திலிருந்து விலகி, மற்றொரு மதத்தில் சேர்ந்து கொள்வதைத் தவிர வேறு எந்த வழியும் அற்றவர்களாகவே சமூக அளவில் ஒடுக்கப்பட்ட மக்கள் ஆகிவிட்டனர்.

இந்து மதத்துடனான தங்களது தொடர்பை இவ்வாறு அவர்கள் துண்டித்துக் கொண்டதை பிற்போக்கு மனப்பான்மை கொண்ட உயர்ஜாதி இந்துக்களால் ஏற்றுக் கொள்ளவோ, பொறுத்துக்கொள்ளவோ இயலாமல் போனது என்றே தோன்றுகிறது. இத்தகைய மதமாற்ற நிகழ்ச்சிகள் பெரும் அளவிலான தர்மசங்கடங்களை உருவாக்கும் என்பதும், இந்து சமூகத்தினுள் பார்ப்பனர்களின் இந்துக் கோட்பாட்டினால் ஏற்பட்டுள்ள ஜாதி அமைப்பு முறையின் விரும்பத்தகாத உண்மைகள் பலவற்றை வெளிப்படுத்தும் என்பதும் இதன் காரணங்களாக இருக்கக்கூடும் என்ற வாதமும் சரியாகவே தோன்றுகிறது.(ராஜ்: 233)

வி.இ.ப. மற்றும் இந்து முன்னணி, ஆர்ய சமாஜம் போன்ற அமைப்புகளால் மீனாட்சிபுரம் மதமாற்ற நிகழ்ச்சிக்குப் பரவலான விளம்பரம் அளிக்கப்பட்டது. அதன்பின், மதம் மாறியவர்களில் 7 பேர் மறுபடியும் இந்து மதத்திற்கு மாறியதாக அறிவிக்கப்பட்டது.(கான் அ991 : 49)

இந்த நிகழ்ச்சிக்குப்பின் கலாச்சாரத்தைப் பாதுகாக்கும் சமஸ்கிருத ரட்சக யோஜனா என்ற அமைப்பை வி.இ.ப. தொடங்கியது. 1982 நவம்பர், டிசம்பர் மாதங்களில் மக்களின் விழிப்புணர்வுக்காக ஜன ஜக்ரண அபியானா என்ற அமைப்பையும் அது தொடங்கியது. இந்து மதத்தை அழிக்கும் அனைத்துலக சதித்திட்டத்தைப் பற்றி இந்துக்களுக்கு எச்சரிக்கை அளிப்பதே இதன் நோக்கம். இந்தப் பிரசாரங்களின் போது நன்கொடையாகப் பொதுமக்களிடமிருந்து ஓரளவுக்கு நிதி திரட்டிக் கொள்ளவும் வி.இ.பரிசத்தால் முடிந்தது. என்றாலும், நன்கொடை அளிப்பதற்கு மேலாக மக்கள் இந்தப் பிரச்சினை பற்றி அதிக அக்கறையோ, கவலையோ காட்டவில்லை.

தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்திப் பிரச்சாரக் கூட்டங்களும், மாநாடுகளும், பேரணிகளும் நடத்துவதில் 1980-ஆம் ஆண்டுக்குப் பின் வி.இ.ப. தன்னை ஈடுபடுத்திக் கொண்டது. மதமாற்றப் பிரச்சினை பெரிதுபடுத்தப்பட்டு, தேசிய பாதுகாப்புக்கும், ஒருமைப்பாட்டுக்கும் ஒரு பெரும் அச்சுறுத்தலாகக் காட்டப்பட்டது. கிறிஸ்தவ மத அமைப்புகளின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளில் அரசின் தலையீட்டை வி.இ.ப. கோரியது.

பார்ப்பனீய ஆதிக்கம் ஆட்டம் கண்டுவிடுகிறது என்பதற்காகவே அவர்கள் மதமாற்றத்தை - அதுவும் சுமார் 100 கோடி மக்கள் கொண்ட நாட்டின் தென்கோடியில் எங்கோ ஒரு சிறு கிராமத்தில் ஏற்பட்டதை ஒரு பெரும் பூகம்பமாகக் கருதி, தங்கள் அமைப்பைப் பலப்படுத்தி, இன்று பகிரங்கமாக 'திரிசூலம்' வழங்கி, வன்முறையை வெளிப்படையான ஆயுதமாகக் கையாளுகின்றனர்.

மத்தியில் உள்ள ஆட்சி பெயரளவுக்குத் தேசிய ஜனநாயக முன்னணி என்ற 23 கட்சிகள் கூட்டணியாக முத்திரை குத்தப்பட்டுள்ளது என்றாலும், நடைமுறையில் அது பி.ஜே.பி. என்ற பெரிய அண்ணனின் தாக்கீது செல்லும் ஆட்சியாக நடைபெற்று வருவது உலகறிந்த உண்மையாகும்.

அக்கட்சியினர், இந்திய அரசியல் சட்டத்தினைத் தூக்கி எறிந்து விட்டு, பழைய மனுதர்மத்தையே சட்டமாக வைத்து ஆட்சி நடத்த வேண்டும் என்று வெளிப்படையாகத் தீர்மானம் போட்டு முழங்கும் அபாயகரமான நிலை ஏற்பட்டுள்ளது.

'விசுவ இந்து பரிஷத்' ஒரு கலாச்சார அமைப்புதானே, உலகம் முழுவதிலும் உள்ள இந்துக்களை இணைத்து ஒரு புது உணர்ச்சியைத் தோற்றுவிப்பது தானே என்ற கருத்தில் இதில் முக்கியப் பங்கு வகித்த டாகடர் கரண்சிங் போன்ற அறிஞர்கள், இந்த பிற்போக்குத் தனத்தை - அதாவது இந்திய அரசியல் சட்டத்திற்குப் பதிலாக மனுதர்மமே மீண்டும் அரசியல் சட்டமாக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாடு அபாயகரமானது; அது மீண்டும் 2-ஆம் நூற்றாண்டுக்கு நாட்டைப் பின்னோக்கி அழைத்துச் செல்லும் என்பதால் அவர் அதிலிருந்து விலகி கொண்டார்(இவ்விவரங்கள் மேற்சொன்ன நூலில் 31-ஆம் பக்கத்தில் உள்ளது).

பசு பாதுகாப்பு, கணபதி ஊர்வலம், புதிய கோயில் கும்பாபிஷேகம், அனுமார் ஜெயந்தி விழாக்கள், இராமன் கோயில் கட்டும் விவகாரம் இவைகள் மூலம் தான் பாமர மக்களுக்குப் 'பக்தி போதை'யைத் தந்து இந்து மதம் என்கிற பார்ப்பன மதத்தினை வலியுறுத்த அவர்கள் முயலுகின்றனர்!.

மதம் மாறுவதற்குரிய நிர்பந்தம் ஏன் ஒடுக்கப்பட்ட மக்காளுக்கு ஏற்படுகிறது என்பதை ஆயிரம் ஆராய்ச்சியாளர்கள், அறிவுஜீவிகள் விவாதம் செய்வது - அய்வர் யானையை வர்ணித்த கதைபோலச் செய்தாலும் - அந்த மக்களைYஏ நேரில் கண்டு அவர்கள் சொன்னதை அப்படியே வெளியிட்டுள்ளோம்!.

நோய் நாடி, நோய் முதல் நாடுவதே உயர்ந்த சிகிச்சை முறை; நோயின் கொடுமையால் அவதியுற்று அழுகின்றவனை அடித்து மாற்ற முயற்சிப்பது பலன் தருமா? வாசகர்களே முடிவு செய்யட்டும்!.

இந்து மதத்திலிருந்து முஸ்லிம் மதத்துக்கு மாறியுள்ள உமர்செரீப் கூறியதாவது:-

உமர்செரீப்:
இங்கே வந்த மணியன் கேட்டார், "நீங்க பெரியார் கொள்கைக்காரங்கறீங்க; இந்த மதத்திலும் சாமி கும்பிட வேண்டியது தானே இருக்கிறது? பின் ஏன் மதம் மாறினீங்கன்னு கேட்டார்." நாங்க சொன்னோம், "இந்து மதத்திலே சாதி இருக்குது. இங்க சாதி வித்தியாசம் இல்லை. எனக்கு கடவுள் மறுப்பு கொள்கை இருக்கலாம். ஆனல், எல்ல இடத்திலும் உன் சாதி என்னன்னு தானே கேக்கறாங்க" என்று சொன்னேன்!
ஆசிரியர்: அதுக்கு மணியன் என்ன சொன்னார்?

உமர்செரீப்: அதுக்கு அவர் ஒண்ணும் சொல்லல்லே.

ஆசிரியர்: உங்களுக்கு இந்த எண்ணம் திடீர்னு தோணுச்சா? இல்ல கொஞ்ச நாளாவே இருந்ததா?

20 வருடம் முன்பே

உமர்செரீப்:
20 வருஷத்துக்கு முன் எங்க தகப்பனார் அப்படி மாறணும்னு ஏற்பாடு பண்ணினார். ஆனா சில பெரியவங்கள்லாம் தடுத்து நிறுத்திட்டாங்க.
இப்ப நாங்கள்லாம் படிச்சவங்க. 10, 20 பேர் செர்ந்து இதிலேயே இருப்பதா? அல்லது ஒரு 50 வருஷம் கழித்தாவது விமோசனம் உண்டா அப்படீன்னு யோசிச்சோம். இன்னும் 50 வருஷம் கழிச்சும் நமக்கு தாழ்த்தப்பட்டவங்கற முத்திரை மறையாது என்று உணர்ந்த பிறகு தான் மதம் மாற முடிவு செய்தோம்.

ஆசிரிய: நீங்க படிச்சவங்கன்னு சொன்னீங்க; அதுவரைக்கும் படிச்சிருக்கீங்க?

உமர்செரீப்: பி.ஏ. வரை படிச்சிருக்கேன்.

ஆசிரியர்: எந்தக் காலேஜில்?

உமர்செரீப்: ஸ்ரீவைகுண்டம் காலேஜ்ல.

ஆசிரியர்: சரி, இவ்வளவு படிச்சிருக்கீங்க. உங்களுக்கு சலுகைகள்லாம் கிடைச்சிருக்குமே!

உமர்செரீப்: ஆமா கிடைச்சது.

ஆசிரியர்: உங்களுக்கு தாழ்த்தப்பட்டவங்க அப்படீங்கறதனாலதான் இந்த சலுகையெல்லாம் கிடைச்சது. அப்போ இந்தச் சலுகையெல்லாம் கிடைக்காதுன்னு தெரிஞ்சு தானே மாறுனீங்க?

உமர்செரீப்: ஆமா! தெரிஞ்சு தான் மாறுனோம். சலுகை கிடைக்காட்டிலும் பரவாயில்லை தாழ்த்தப்ப்ட்டவன் என்கிற முத்திரையில்லாம இருந்தால் போதும் என்று மாறினோம்.

இப்போது ஏன் இந்த முடிவு?

ஆசிரியர்: இதுக்கு முன்னால் இந்தக் கொடுமைகள்லாம் அனுபவிச்சுக்கிட்டுதானே இருந்தீங்க? இப்ப எப்படி திடீர்னு இந்த முடிவுக்கு வந்தீங்க?

உமர்:
நாங்கள் கொடுமை அனுபவிச்சாலும் பரவாயில்லை எங்க வருங்கால சந்ததியாவது நல்லா இருக்கட்டுமென்றுதான் இந்த முடிவுக்கு வந்தோம். வருங்கால சந்ததி மற்றவர்களோடு சரி சமமாக மானத்தோட இருக்கணும்னுதான் இந்த முடிவுக்கு வந்தோம்.
ஏது மரியாதை?

ஆசிரியர்: நீங்க பி.ஏ., வரைக்கும் படிச்சிருக்கீங்களே அதுக்காகவாவது கிராமத்தில் மரியாதை காட்டமாட்டார்களா?

உமர்: எங்கே காட்டுறங்க? இல்லையே!

ஆசிரியர்: உங்க சாதியாரைத் தவிர, பிற சாதியார் மரியாதை காட்டறாங்களா?

உமர்:
எங்க காட்டறாங்க?. வெள்ள வேட்டி, வெள்ள சட்டை மோட்டுகிட்டு போனாலே, அதோ போறான் பாரு வெள்ள வேட்டி கட்டிக்கிட்டு, படிச்சுப்புட்டானாம் அப்படீன்னு கிண்டல் செய்றாங்க. டிபார்ட்மெண்டில கூட படிச்சாலும் பட்டம் பெற்றாலும் துவேஷம் தான் பண்றாங்க.
ஆசிரியர்: இங்க பொருளாதாரத்தில் எப்படி? தொழில் முறை என்ன?

உமர்: இங்க பெரும்பாலும் விவசாயம் பண்றாங்க; எல்லாருக்குமே சொந்ததைடங்கள் இருக்கு.

ஆசிரியர்: நீங்க யாராவது தினக் கூலிகளாக இருக்கீங்களா?

உமர்: தினக்கூலிகளும் பத்து இருபது பேர் இருக்காங்க. அவங்கலும் மதம் மாறியிருக்காங்க.

துவேஷமே காரணம்

ஆசிரியர்:
மற்ற கிராமத்திலே இருக்கிற தாழ்த்தப்பட்டவங்களை விட, குறிப்பா திருநெல்வேலி பக்கத்தில் இருக்கிறவங்க படிப்புத்துறையில் முன்னேறுனவங்க பொருளாதாரரீதியில் - எடுத்துக்கிட்டாலும் மற்றவங்களைவிட நல்ல நிலையில் இருக்கிறீங்க. அப்படி இருந்தும் உங்களுக்கு இந்த எண்ணம் தோண வேண்டிய அவசியமென்ன?

உமர்:
துவேஷம் தான் காரணம். மனித உரிமை தான் வேண்டும். படிப்பு பரவப்பரவ மக்களுக்கு பகுத்தறிவு உண்டாகுது. அப்போது இதுல இருக்கிறதனால என்ன நன்மைன்னு சிந்திக்கிறாங்க. நம்மை மனுசனா மதிக்காத சாதியில ஏன் இருக்கணும்? நம்மை மதிக்கிற மதத்துக்கு போயிடலாமேன்னு நினைக்கிறாங்க.

ஆசிரியர்: நீங்க பெரியார் கூட்டங்களையெல்லாம் கேட்டிருக்கீங்கள்ள, அந்தக் கொள்கையில் நம்பிக்கை உண்டா?

உமர்: ஆமா!

ஆசிரியர்:
இருந்தாலும் நீங்க இளைஞர்கள், உங்க சமுதாயத்தில் இருக்கிற பெரியவங்க என்ன நினைக்கிறாங்க? அவங்க மதம் மாற ஆதரவா இருந்தாங்களா?

உமர்: நாங்க எந்தப் பெரியவங்களையும் அணுகவில்லை; எல்லாம் இளைஞர்கள் தான். ஆனா எங்க ஊர் பெரியவங்களும் மதம் மாறியிருக்காங்க.

ஆசிரியர்: இங்கு மொத்தம் எத்தனை குடும்பங்கள் மதம் மாறியிருக்கு?

உமர்: மொத்தம் 300 குடும்பத்தில் 210 குடும்பங்கள் மதம் மாறியிருக்காங்க.

ஆசிரியர்: ஒரு குடும்பத்துக்கு எத்தனை பேர்?

உமர்: சராசரி 5 பேரு.

ஆசிரியர்: அப்ப ஒரு ஆயிரம் பேர் இருக்கும்.

உமர்: ஆமாம்!

முக்கியமானவரை மறப்பதா?

ஆசிரியர்: இப்ப சாதாரணமா தீண்டாமையினால தொந்தரவு, சுயமரியாதையில்லாம நடத்தப்படுவது, நமக்கு படிச்சும் கவுரவம் இல்லை – இது மாதிரி தொந்தரவு இருக்குது.
இந்து மதத்தில் தீண்டாமையெல்லாம் அனுசரிக்கிறது இல்லைன்னு சங்கராச்சாரி சொல்றாரே?. மதாச்சாரியார்கள் அப்படி சொல்லியும் நடைமுறையில் இங்க இருக்கறவங்க கடைபிடிக்கறதில்லையேன்னாலும் - நமக்கு சங்கராச்சாரி தானே முக்கியம்! அவுங்கள விட்டுட்டு எப்படி போறதுன்னு நீங்க நினைக்கலியா?

உமர்: இந்து மதம்னு ஒண்ணு இருக்கத்தான் செய்யுது; இல்லேன்னு சொல்லல. இங்கே தாழ்த்தப்பட்டவங்களுக்கு எந்தப் பயனும் கிடையாது. தாழ்த்தப்பட்டவன் இந்துவா இருக்கிறதில அர்த்தமேயில்லை.
ஏன்னா, அவங்க ‘சாதி இந்து’ன்னு வைச்சுக்கிறாங்களே தவிர ‘அரிஜன்’ என்பதை அப்படியே தான் வைச்சிருக்காங்க. அதை மாத்தலியே.
அவங்க அன்னைலேயிருந்து இன்னைய வரைக்கும் ஒரு ‘அரிஜனை’ இந்துவா ஏத்துகிறதில்ல.
ஆக முடியாது
இவன் தான் அவங்களோட போயிடுறானே தவிர இவனை அவுங்க ஒத்துக்கறதில்ல. இங்கே கலவரம் நடக்குதுன்னா சாதி ‘இந்து’க்களுக்கும் ‘அரிஜனனு’க்கும் தான் சண்டைன்னு சொல்றானே தவிர இந்துக்கும் இந்துக்கும் சண்டேன்னு சொல்றதில்ல. அப்படியிருக்கும் போது எப்படி ‘அரிஜன்’ இந்து ஆக முடியும்?

ஆசிரியர்: சமஸ்கிருதத்தில் சாதி இந்துக்களுக்கு வர்ணஸ்தர்கள் மற்றவர்களுக்கு ஈழவர்களையும் சேர்த்து அவர்ணஸ்தர்கள் என்று சொல்கிறார்கள். அந்த அவர்ணஸ்தர்களுக்கும் கீழே எல்லோருக்கும் கீழே கடைசியாக தாழ்த்தப்பட்டவர்கள் பட்டியலை வைத்துள்ளனர்.
இப்ப சங்கராச்சாரியார் துக்ளக் பேட்டி மற்ற செய்திகளை எல்லாம் பார்த்து விட்டு தலைவர்கள்லாம் வந்தாங்களே, உங்களை வந்து பாக்கலியா?

உமர்: சந்திக்கலிங்க.

ஆசிரியர்: வாஜ்பேயி எல்லாம் வந்தாரே, வந்து பாக்கலியா? நியாயமாக உங்கள தானே வந்து சந்திக்க வேண்டும்?

உமர்: அவரு ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்தோட போனாரே தவிர எங்களை வந்து சந்திக்கல. மதம் மாறாதவர்களைக் கூட போய்ச் சந்திக்கல. ஒரு கூட்டத்தைப் போட்டாங்க! இஸ்லாம் மதத்தைப் பத்தி தாக்கித் தாக்கி பேசினாங்க.

'மதம் மாறாதே' 'மதம் மாறாதே'!

'அரபு நாட்டுப் பணத்துக்கு அடிமையாகாதே'

அப்படீன்னு இன்னும் மோசமான வார்த்தைகளால திட்டினாங்க. அப்புறம் முடிச்சுட்டு போயிட்டாங்க.

ஆசிரியர்: மற்றவங்க யாரும் சந்திக்கலயா?

உமர்: வாஜ்பேயை நாங்களா போய் சந்திச்சோம். "இந்த மதக் கொடுமையினால் தான் நாங்க மதம் மாறினோம். இருக்கிறவங்களுக்காவது கொடுமையில்லாம நடத்துவீங்களான்னு? கேட்டோம்.

ஆசிரியர்: அதுக்கு என்ன சொன்னாரு?

உமர்: அவரு உடனே பேச்சை முடிச்சிக்கிட்டு போயிட்டாரு. போயி அங்க என்ன சொல்லி விட்டாருன்னா, "இஸ்லாம் மதத்துக்கு போனவங்கள்லாம் தாய் மதத்துக்குத் திரும்பப் போறாங்கன்னு" சொல்லிட்டுப் போயிட்டார்.

இஸ்லாம் மதத்துக்கு மாறியது ஏன்?

ஆசிரியர்: சரி இந்து மதத்தில் கொடுமையிருக்கிறதினாலே மதம் மாறினீர்கள். எத்தனையோ மதங்கள் இருக்க ஏன் இஸ்லாம் மதத்துக்கு மாறினீர்கள்?

உமர்: இந்து மதத்தை விட்டா கிறிஸ்தவ மதம் இருக்கிறது. நாங்கள்லாம் இஸ்லாம் மதத்துக்கு மாறனும்கிறதுக்கு முன்னாடி ஒரு 50 குடும்பங்கள் கிறிஸ்தவர்களாக மாறினார்கள்.

கிறிஸ்தவ மதம் மாறினால்....

ஆசிரியர்: எத்தனை வருஷத்திற்கு முன்பு?

உமர்: சுமார் 20 வருஷத்திற்கு முன்னாடி, அங்க தாழ்த்தப்பட்டவன் தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவனாக இருக்கிறானே தவிர தாழ்த்தப்பட்டவன் நாடார் கிறிஸ்தவனுக்கு பெண் கொடுப்பதே நாடார் கிறிஸ்தவன். தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவனுக்குப் பெண் கொடுப்பதோ இல்லை. அங்க சாதி அப்படியே இருக்கிறது. ஆனால் இஸ்லாம் மதம் அப்படி இல்லை. யார் ஒருவன் அல்லாவைத் தொழுகிறானோ அவன் எல்லாமே முஸ்லிம் தான். அங்க தீண்டாதவன் என்ற வித்தியாசம் கிடையாது.

'ஒன்றே குலம்! ஒருவனே தேவன்!'

Monday, March 28, 2011

குழந்தைகளின் விடுமுறை நெருங்கி விட்டது!


குழந்தைகளை பெற்று மூன்று வயது ஆரம்பிக்கு முன்னரே அவர்களை எந்த கான்வென்டில் சேர்க்கலாம் என்று திட்டம் போட்டு அவர்களை பள்ளிகளில் சேர்க்கிறோம். இங்கு ஆரம்பிக்கும் திட்டமிடல் அவர்களின் கல்லூரி படிப்பு வரை பெற்றோர்களால் தொடரப்படுகிறது. நல்ல முயற்சிதான். இதில் தவறொன்றும் இல்லை. ஆனால் சில நேரங்களில் அளவுக்கதிகமாக அவர்களை படி படி என்று கசக்கிப் பிழிவதால் மனச் சிதைவுக்கு சில குழந்தைகள் ஆளாகி விடுகின்றனர். 9 மணியிலிருந்து 5 மணி வரை பள்ளி. பிறகு ஆறிலிருந்து 10 வரை ஹோம் வொர்க். காலையில் 6 லிருந்து 8 மணி வரை படிப்பு படிப்பு என்று அந்த பிள்ளைகளை ஒரு மெஷின் வாழ்க்கைக்கு கொண்டு வந்து விட்டோம்.

தன் குழந்தை டாக்டராக வேண்டும்: தன் குழந்தை இன்ஜினியராக வேண்டும் என்ற கனவில் அதைப்படி இதைப்படி என்று அவர்களை கசக்கிப் பிழிகின்றனர். குழந்தை எதை விரும்புகிறது என்பதை பல பேர் சிந்திப்பதில்லை. பெற்றோர்கள் கொடுக்கும் மன அழுத்தத்தினால் பிள்ளைகளில் சிலர் பரீட்சை முடிவுகளைப் பார்த்து தற்கொலை வரை கூட சென்று விடுகின்றனர்.

நமது தலைநகர் டெல்லியில் போராட்டம் ஒன்றில் குழந்தைகள் பதாகைகளை ஏந்திய வண்ணம் நிற்ப்பதைத்தான் மேலே பார்க்கிறீர்கள்.

'பெற்றோர்களே! எங்களுக்கு எதில் ஆர்வம் இருக்கிறதோ அதைப் படிக்க விடுங்கள். உங்கள் பேராசையை எங்கள் மீது திணிக்காதீர்கள்'

என்று குழந்தைகள் சொல்லுமளவுக்குத்தான் சில பெற்றோர்களின் நடவடிக்கை இருக்கிறது.

எனது உடற்பயிற்சி ஆசிரியரின் மகன் ரமேஷ் படிக்க விரும்பியது ஆர்ட்ஸ் குரூப். ஆனால் ஆசிரியர் தன் மகனுக்கு தேர்ந்தெடுத்த துறையோ பாலி டெக்னிக். தகப்பனை எதிர்த்துப் பேசவும் ரமேஷூக்கு பயம். முடிவில் மன சிதைவுக்கு ஆளாகி தற்கொலையும் செய்து கொண்டார். எங்கள் எல்லோருக்கும் மிகுந்த அதிர்ச்சி. விளையாட்டிலும் படிப்பிலும் சிறந்து விளங்கிய அந்த பள்ளித் தோழன் இளம் வயதிலேயே வாழ்க்கையை முடித்துக் கொண்டது துரதிஷ்ட வசமானது. எனது ஆசிரியரும் ஒரே பையனை பறி கொடுத்த துக்கத்தில் தாடியோடு எந்த நேரமும் சோகமாகவே இருப்பார். பையனின் விருப்பத்தில் தகப்பன் தலையிடாமல் இருந்திருந்தால் இன்று ரமேஷ் உயிரோடு இருந்திருப்பார் அல்லவா!

இதைத் தடுப்பது எப்படி?

பிள்ளைகளின் மனங்களை சிறை பிடித்து பெற்றோர்கள் தங்களின் எண்ணங்களை திணிப்பதை முதலில் நிறுத்த வேண்டும். பிள்ளைகளின் அறிவுத் திறன், அவர்கள் ஆர்வம் காட்டுவது எந்த துறைகளில் என்று கண்காணித்து அவர்களுக்கு ஆலோசனை வழங்கலாம். இறுதி முடிவை அவர்களின் கைகளிலேயே தர வேண்டும்.

இன்னும் சில தந்தைகள் வீட்டை ஒரு சிறைச்சாலையைப் போல் வைத்திருப்பார்கள். தனக்கு குழந்தை பயப்பட வேண்டும். தன் சொல்லை மீறக் கூடாது என்பதால் சிறு வயது முதலே அவர்களை அடக்கி வைப்பதை பார்க்கிறோம். அடிமைகளை போல் நடத்தும் சிலரை நான் பார்த்திருக்கிறேன்.

இன்னும் சில பெற்றோர்களோ

'இவன் எங்கே படித்து பட்டம் வாங்க போகிறான். இவன் மாடு மேய்க்கத்தான் லாயக்கு'


என்று சர்வ சாதாரணமாக பலர் முன்னிலையில் திட்டும் பல பெற்றோர்கள் இன்றும் இருக்கிறார்கள். இப்படி எல்லாம் திட்டினால் அவனுக்கு ரோஷம் வந்து ஒழுங்காக படிக்க ஆரம்பிப்பான் என்பது பெற்றோர்களின் எதிர்பார்பபு. ஆனால் மாறாக சில மாணவர்கள் விரக்தி வந்து படிப்பையே விட்டவர்களும் இருக்கிறார்கள். ஒவ்வொரு மனிதனுக்கும் தன்மானம் என்று ஒன்று உண்டு என்பதை சில நேரம் நாம் மறந்து விடுகிறோம்.

விடுமுறை காலங்களில் குழந்தைகளை வெளியூர்களுக்கு சுற்றுலா அழைத்து செல்லலாம். இது அவர்களின மனதிலே பல மாற்றங்களை உண்டு பண்ணும். எந்த நேரமும் படிப்பிலேயே நேரத்தைக் கழித்த அவர்களுக்கு இதெல்லாம் பல அறிவு சார்ந்த சிந்தனைகளை உண்டாக்கும்.

வள்ளுவர் மகன் தந்தை உறவு பற்றி சொல்லும் போது

தந்தை மகற்கு ஆற்றும் நன்றி அவையத்து

முந்தி யிருப்பச் செயல்

மகன்தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை

என்நோற்றான் கொல்எனும் சொல்

என்கிறார். இந்த நிலை எப்பொழுது வரும். தந்தையும் மகனும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு அன்பு செலுத்துவதின் மூலமாகவே வரும்.நம் குழந்தைகளை ஒரு நண்பனைப்போல் பாவிக்க வேண்டும். அதிகாரத்தினால் இத்தகைய நிலை ஏற்படாது.

இனி பெற்றோருக்கு பிள்ளைகள் செய்யும் கடமை பற்றி குர்ஆன் கூறுவதைக் கேட்போம்:

'உம்முடன் இருக்கும் அவ்விருவருமோ, இருவரில் ஒருவரோ முதுமையை அடைந்து விட்டால் அவ்விருவரை நோக்கி 'சீ' எனக் கூறாதே!அவ்விருவரையும் விரட்டாதே! மரியாதையான சொல்லையே அவ்விருவரிடமும் கூறு'

'அன்புடன் பணிவு எனும் சிறகை அவ்விருவருக்காகவும் தாழ்த்துவீராக! 'சிறுவனாக இருக்கும் போது என்னை இருவரும் பராமரித்தது போல இறைவா! இவ்விருவருக்கும் அருள் புரிவாயாக!' என்று கேட்பீராக!'

-குர்ஆன் 17:23,24

ஒரு மகன் தனது பெற்றோருக்காக கேட்கும் பிரார்த்தனையே இது. சிறுவர்களாக இருந்தபோது நம் பெற்றோருக்கு எத்தனை சிரமங்களைக் கொடுத்திருப்போம். அதை எல்லாம் சகித்துக் கொண்டு எந்த அளவு பாசத்தோடும் பரிவோடும் நடந்து கொண்டார்களோ அது போல இறைவா! என் பெற்றொர்களுக்கு அதே போன்ற அன்பையும் பரிவையும் நீ செலுத்துவாயாக! என்று கேட்க வேண்டும் என பிள்ளைகளுக்கு கட்டளையிடுகிறது குர்ஆன்.

இனி தந்தை மகனுக்கு செய்ய வேண்டிய சில கடமைகளைப் பற்றி குர்ஆன் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.

'அங்கத்தில் குறைகளற்ற குழந்தையை நீ எங்களுக்கு வழங்கினால் நன்றி செலுத்துவோராவோம்'

-குர்ஆன் 7:189

நம்முடைய மூதாதயரான ஆதாமும் ஏவாளும் இறைவனிடம் செய்த பிரார்த்தனையே இது. இது போன்ற பிரார்த்தனையை நம்மில் எத்தனை பேர் செய்திருக்கிறோம். பிறக்கும் முன்பே பெயர்களைத் தேர்ந்தெடுக்கும் நாம் இது போன்ற பிரார்த்தனைகளை தவற விட்டு விடுகின்றோம்.

அடுத்து நபி லுக்மான் அவர்கள் தனது மகனுக்கு ஆற்றிய உபதேசங்களைப் பார்ப்போம்.

'என் அருமை மகனே! தொழுகையை நிலை நாட்டு. நன்மையை ஏவு தீமையை தடு. உனக்கு ஏற்படும் சிரமங்களை சகித்துக் கொள். அது உறுதி மிக்க காரியமாகும்.'

'மனிதர்களை விட்டும் உனது முகத்தைத் திருப்பிக் கொள்ளாதே!பூமியில் கர்வமாக நடக்காதே! கர்வம் கொண்டு பெருமையடிக்கும் எவரையும் இறைவன் விரும்ப மாட்டான்.'

'நீ நடக்கும் போது நடுத்தரத்தைக் கடைபிடி.உனது குரலைத் தாழ்த்திக் கொள். குரல்களில் வெறுக்கத்தக்கது கழுதையின் குரலாகும்'

-குர்ஆன் 31:17

என்ன ஒரு அழகிய உபதேசம். இந்த உபதேசம் அவர் மகனுக்கு மட்டும் உரியதல்ல. இது உலக மக்கள் அனைவரும் தனது மகனிடம் மகளிடம் எதிர்பார்க்கும் செயல்களாகும். எனவேதான் இறைவன் இந்த உபதேசங்களை குர்ஆனிலே எடுத்துப் போடுகிறான்.

நபி லுக்மான் அவர்கள் எப்படிப்பட்ட குணங்களை தனது மகனிடம் எதிர்பார்த்தாரோ அது போன்ற மக்களை நம் அனைவருக்கும் இறைவன் தர வேண்டும் எனப் பிரார்த்திப்போமாக!

Sunday, March 27, 2011

லிபியாவின் வருங்காலத்தை தீர்மானிப்பவர்கள்!


நேட்டோ படைகளின் சீறும் போர்க்கப்பல்கள் மத்தியதரைக் கடலின் நீரைக் கொதிநிலைக்குக் கொண்டு சென்றிருக்கின்றன. உலக ரவுடியாக தன்னைத் தானே நியமித்துக் கொண்டிருக்கும் அமெரிக்காவின் தலைமையில் நேட்டோ படைகள் லிபியாவின் தலைநகர் திரிப்போலியின் மேல் குண்டு வீச்சு நடத்தி வருகின்றன. அதில் வழக்கம் போல அப்பாவி மக்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த நாற்பத்தியிரண்டு வருடங்களாக லிபியாவின் சர்வாதிகாரியாய் இருந்து வரும் முவாம்மர் கடாஃபியை எதிர்த்து ஜனநாயகத்துக்காகப் போராடி வரும் ஜனநாயக வீரர்களுக்கு உதவும் பொருட்டுமனிதாபமானத்தின்அடிப்படையில் தான் தாங்கள் இந்தத் தாக்குதலைத் துவங்கியதாக நேட்டோ நாடுகள் அறிவித்துள்ளன.

அமெரிக்க மனிதாபிமானத்தின் கந்தக நெடியை லிபியர்களுக்குப் பரிசளிக்கும் விதமாய்க் கடந்த 19-ஆம் தேதி நேட்டோ நாடுகளின் நாசகாரிக் கப்பல்களில் இருந்து லிபியாவை நோக்கி நூற்றுக்கணக்கான தொமொஹாக் ஏவுகணைகள் பறந்து சென்றன. சரியாக எட்டு ஆண்டுகளுக்கு முன் – 2003-ஆம் ஆண்டு மார்ச் 19-ஆம் தேதிஇதே போன்றதொரு மனிதாபிமானத்தின் செய்தியை ஈராக்கியர்களுக்குச் சொன்னான் வெள்ளைத் தோல் ஒபாமாவான ஜார்ஜ் புஷ். லட்சக்கணக்கான மக்கள் மாண்டு போயும், உடல் உறுப்புக்களை இழந்தும் கூட இன்று வரை பணியாமல் நின்று புதைகுழி என்பது எப்படியிருக்கும் என்று அமெரிக்கர்களுக்குப் பாடம் நடத்தி வருகிறார்கள் பண்டைய பாபிலோனியாவின் வீரம் செரிந்த அந்த மக்கள்.

அரபுலகின் எழுச்சியும் அமெரிக்க நலனும்!

இலட்சக்கணக்கான ஈராக்கியர்களின் ஆவி அடங்கும் முன்பாகவே கருப்புத் தோல் ஜார்ஜ் புஷ்ஷான ஒபாமா இன்று லிபியாவைக் குறிவைத்துக் கிளம்பியிருக்கிறார். இந்தப் போரில் அமெரிக்காவின் நாசகாரிக் கப்பல்களும், எப்-16 விமானங்களும், தொமொஹாக் ஏவுகணைகளும் என்னென்ன வேலைகளைச் செய்யுமோ அதே வேலைகளை சர்வதேச அளவிலான முதலாளித்துவ ஊடகங்களும் செய்து வருகின்றன. கடாஃபியை எதிர்த்து நடந்து வரும் மக்கள் புரட்சியை அவர் கொடூரமான வழிமுறைகளைக் கையாண்டு ஒடுக்கி வருவதாகவும், மக்களைக் கொத்துக் கொத்தாகக் கொன்று வருவதாகவும் மிகைப்படுத்தப்பட்ட செய்திகளை கடந்த சில வாரங்களாகவே மிகத் தீவிரமாக உலகெங்கும் பரப்பி வருகின்றன.

முதலில் இப்போது லிபியாவில் கடாஃபிக்கு எழுந்துள்ள எதிர்ப்பு என்பது பிற அரபு நாடுகளில் உண்டான எதிர்ப்பில் இருந்து சாராம்சத்திலேயே வேறுபட்டது. அதைப் பற்றி விரிவாகப் பார்க்கும் முன், ‘வண்ணப் புரட்சிகள்என்று மேற்கத்திய முதலாளித்துவ ஊடகங்களால் சித்தரிக்கப்படும் அரபு தேசங்களில் ஏற்பட்ட மக்கள் எழுச்சிகளுக்கும் லிபியாவில் நடந்து வரும் போராட்டங்களுக்கும் உள்ள வேறுபாட்டினை புரிந்து கொள்வது அவசியம்.

மத்திய கிழக்கு நாடுகளின் எண்ணை வளம் அறியப்பட்ட துவக்க ஆண்டுகளிலேயே அந்நாடுகளை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கும் போட்டியின்றி அதன் எண்ணை வளத்தை உறிஞ்சிக் கொள்ளவும் ஏகாதிபத்திய நாடுகளிடையே நாய்ச்சண்டை ஆரம்பித்து விட்டது. ஐம்பதுகளுக்குப் பின் இரண்டாம் உலகப் போரினால் கடுமையாக பலவீனமடைந்திருந்த பிற ஏகாதிபத்தியங்களைப் பின்னுக்குத் தள்ளி அமெரிக்கா ஒரு உலக வல்லரசாக உருவெடுத்திருந்ததால், இப்பிராந்தியத்தின் அரபு தேசங்களை மற்றவர்களுக்கு முன் முந்திக்கொண்டு சுலபமாக வளைத்துக் கொண்டது. மத்திய கிழக்கின் பெரும்பாலான அரபு தேசங்களில் பெயரளவுக்கு ஒரு பொம்மை சர்வாதிகாரியை வைத்துக் கொண்டு அவற்றை தமது மறைமுகக் காலனிகளாக கட்டியாள்கிறது அமெரிக்கா. வளைகுடா எண்ணை வர்த்தகம் முழுவதையும் கட்டுப்படுத்துவது ஆங்கிலோ அமெரிக்கப் பன்னாட்டு எண்ணைக் கம்பெனிகள் தாம்.

இந்நிலையில் பல பத்தாண்டுகளாகத் தொடர்ந்து ஜனநாயகம் மறுக்கப்பட்டு வந்த நிலையில், சமீப வருடங்களாக உலகெங்கும் ஒரு பொதுப் போக்காக இருக்கும் உணவுப் பொருட்கள் விலை உயர்வு, மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் காரணமாக பெரும்பாலான மத்திய கிழக்கு நாடுகளில் மக்களிடையே சர்வாதிகாரத்திற்கான எதிர்ப்புணர்வு உருவாகியுள்ளது. இது கடந்த சில ஆண்டுகளாகவே பொருளாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தும் சிறியதும் பெரியதுமான போராட்டங்களாக முளைவிடத் துவங்கியது.

பொருளாதாரக் கோரிக்கைகளுக்கான இப்போராட்டங்கள், அரசுக்கு எதிரான போராட்டமாக கொஞ்சம் கொஞ்சமாக பரிணமித்து வந்த நிலையில், இதன் காரணமாக தனது மேலாதிக்கத்திற்கு எந்தவிதமான சவாலும் உருவெடுத்து விடக் கூடாது என்பதில் அமெரிக்கா தீவிர கவனம் செலுத்தியது. தொடர்ந்த போராட்டங்களின் மைய்யமாக மக்களை வாட்டி வதைக்கு மறுகாலனியாதிக்கத்திற்கான எதிர்ப்பாக இல்லாமல், ஜனநாயகம், பலகட்சி ஆட்சி முறை போன்ற சில சில்லறை முதலாளித்துவச் சீர்திருத்தக் கோரிக்கைகளைச் சுற்றியே அமைந்தது. இது எதார்த்தத்தில் வெறுமனே சர்வாதிகார ஆட்சியாளர்களுக்கு எதிரான போராட்டமாக மட்டுமே சுருங்கிப் போனது. அதாவது வறுமை, வேலையின்மை, விலைவாசி உயர்வு முதலான பிரச்சினை காரணமாக எழுந்த எதிர்ப்புணர்வு பின்னர் வெறும் ஆட்சியாளரை மாற்றும் போராட்டமாக மட்டும் மாறிப்போனது. இந்த போராட்டங்களில் உழைக்கும் மக்கள் வெகுவாக அணிதிரண்டாலும் அவர்களை வழிநடத்தியது நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த அறிவுஜீவிகள்தான்.

எகிப்திலும், துனீசியாவிலும் ஏற்பட்டிருக்கும்மாற்றம்வெறுமனே ஆட்சியாளர்களின் பெயர் மாற்றம் மட்டும் தான்பென் அலிக்கு பதிலாக பதவிக்கு வந்துள்ள முகம்மது கன்னோசி ஆகட்டும்; எகிப்தில் முபாரக்கை அடுத்து அதிகாரத்தைக் கைப்பற்றியிருக்கும் இராணுவமாகட்டும்இவர்களுக்குள் கொள்கையளவில் எந்த வேறுபாடும் கிடையாது. துனீசியாவின் முகம்மது கன்னோசியும் அவரது கூட்டாளிகளும் இவர்களைத் தாங்கி நிற்கும் இராணுவமும் அமெரிக்க அடிவருடிகள் தான். அதே போல் எகிப்தில் அதிகாரத்தைக் கைப்பற்றியிருக்கும் இராணுவமும் அமெரிக்க ஆதரவு இராணுவம் தான். இந்நாடுகளில் தன்னெழுச்சியாகத் துவங்கிய மக்கள் போராட்டங்களின் திசைவழி இன்னதென்பதை அமெரிக்காவே தீர்மானிப்பதாகவே அமைந்தது.

இப்படியாக, எகிப்து மற்றும் துனீசியாவில் நடந்த மக்கள் எழுச்சி ஆயுதம் தாங்கிய போராட்டமாக அல்லாமல் அமைதியான வழியிலேயே நடத்தப்பட்டன. மேலும், போராட்டக்காரர்களுக்கு அயல் நாடுகளில் இருந்து ஆயுத உதவியோ இராணுவ உதவியோ வழங்கப்படவில்லை. எகிப்தின் பல்வேறு நகரங்களின் கட்டுப்பாடுகளை முபாரக் இழந்து கொண்டிருந்த சமயத்தில் பிற நாடுகள் எதுவும் போராட்டக்காரர்களோடு தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு தமது தூதர்களை அனுப்பி வைக்கவில்லை, இப்போது பஹ்ரைனில் அரச எதிர்ப்பாளர்களை இராணுவம் மிருகத்தனமாக ஒடுக்கிக் கொண்டிருக்கும் போதும் அம்மக்களுக்கு ஆதரவாக நேட்டோ படைகள் களத்தில் இறங்கவில்லைஆனால், இது அனைத்தும் லிபியாவில் நடந்து கொண்டிருக்கிறது. மட்டுமல்லாமல், லிபியாவில் கடாஃபியை எதிர்த்த போராட்டங்கள் துவங்குவதற்குச் சில மாதங்கள் முன்பிருந்தே அதன் மீது இராணுவ நடவடிக்கை ஒன்றிற்கான தயாரிப்புகளில் அமெரிக்காவும் அதன் அல்லக்கை நாடுகளும் ஈடுபட்டிருந்தன.

Your browser may not support display of this image.

லிபியாவில் நடப்பது ஜனநாயகத்திற்கான போராட்டமா? அமெரிக்காவின் ஐந்தாம் படை வேலையா?

மக்களுக்கான ஜனநாயகத்தை கடந்த நாற்பத்திரண்டு ஆண்டுகளாக முவாம்மர் கடாஃபி மறுத்து வந்ததும், தனக்கு எதிரான போராட்டங்களை அவர் ஒடுக்கி வந்ததும், இவற்றின் காரணமாக லிபியாவில் ஜனநாயகத்திற்கான கோரிக்கை இருந்து வந்ததும் எந்தளவுக்கு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை தான் இன்று மேற்கத்திய ஊடகங்களால் ஜனநாயகத்தைக் காக்க வந்தபுரட்சியாளர்கள்என்பது போல சித்தரிக்கப்படும் போராட்டக்காரர்கள் உண்மையில் அமெரிக்கத் தயாரிப்புகள் என்பதும்.

லிபியாவின் ஜனநாயகப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கவும்முவாம்மர் கடாஃபியை பதவி விலக்கம் செய்யவும், அமெரிக்கா எந்த விதமான உதவியையும் செய்யத் தயார் என்றும், லிபியப் புரட்சியாளர்களோடு அமெரிக்கா தொடர்பு கொண்டு வருகிறது என்று ஹிலாரி கிளிண்டன் பிப்ரவரி 27-ஆம் தேதி அறிவித்துள்ளார். லிபியாவின் 80% எண்ணையைக் கொண்டுள்ள சிர்ட்டே வளைகுடா பிராந்தியத்தில் இருக்கும் சைரென்னிகா, பெங்காஸி டோப்ருக் போன்ற கலவரக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளுக்கு அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகளில் இருந்து இராணுவ ஆலோசகர்களும், உளவுப்பிரிவு அதிகாரிகாரிகளும் வந்திறங்கியுள்ளனர்.

அதற்கும் முன்பாக சென்ற வருட அக்டோபர் மாத வாக்கிலேயே லிபியாவோடு எண்ணை வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த செவ்ரான் மற்றும் ஓக்ஸிடென்டல் பெட்ரோலியம் ஆகிய பன்னாட்டு நிறுவனங்கள் எண்ணை துரப்பணத்திற்காகவும் புதிய எண்ணை வயல்களைக் கண்டுபிடிக்கவும் பெற்றிருந்த லைசென்சுகளை புதுப்பிக்கவில்லை. அப்போதே ரசிய ஊடகங்கள் லிபியாவின் மேல் மேற்கத்திய நாடுகள் இராணுவ நடவடிக்கை ஒன்றைத் துவங்குவதற்கான சாத்தியங்கள் பற்றி எழுதத் துவங்கிவிட்டன.

லிபியாவின் கிழக்கு எல்லையில் இருக்கும் எகிப்தின் வழியே நவீன ஆயுதங்களும் வெடி பொருட்களும் கடந்த மாதத் துவக்கத்திலிருந்தே போராட்டக்காரர்களுக்கு வழங்கப்பட்டு வந்துள்ளது. யுகோஸ்லோவிய விவகாரத்தில் கையாண்ட அதே போன்ற தந்திரத்தை லிபியாவிலும் வெற்றிகரமாக நிறைவேற்றி விடலாம் என்று மேற்கத்திய நாடுகள் நினைத்துக் கொண்டிருந்த நிலையில், மார்ச் மாதத் துவக்கத்தில் கடாஃபியின் இராணுவம் தொடுத்த எதிர்த் தாக்குதல்கள் ஒரு எதிர்பாராத திருப்பமாக அமைந்து விட்டது. மார்ச் 4-ஆம் தேதி துவங்கிய லிபிய இராணுவ நடவடிக்கையின் விளைவாய் கலக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருந்த முக்கியமான நகரங்களை இராணுவம் மீண்டும் தன் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டது.

உடனடியாக தனது ஊதுகுழலாக செயல்படும் சர்வதேச ஊடகங்கள் மூலம் லிபியாவில் படுபயங்கரமான இனப்படுகொலை நடப்பதாக பீதியூட்டும் பிரச்சாரங்களை அமெரிக்கா கட்டவிழ்த்து விடுகிறது. இதன் மூலம், லிபியாவில் நடந்து கொண்டிருப்பது துனீசியா, எகிப்து போன்ற அமைதி வழிப் போராட்டம் என்பது போன்றும் அதை கடாஃபி ஆயுதம் கொண்டு கொடூரமாக ஒடுக்குகிறார் என்பது போன்றும் ஒரு சித்திரம் திட்டமிட்ட ரீதியில் கட்டமைக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்துமனிதாபிமானத்தின்அடிப்படையில் தாம் லிபிய விவகாரத்தில் தலையிடுவதாகச் சொல்லிக் கொண்டு மார்ச் 19-ஆம் தேதி துவங்கி தொடர்ந்து விமானத் தாக்குதலையும் ஏவுகணைத் தாக்குதலையும் நடத்தி வருகிறது.

பொதுவில் நீண்ட நாட்களாக மக்களுக்கான ஜனநாயகத்தை கடாஃபி மறுத்து வந்துள்ளார். மொத்த நாட்டையும் அதன் பொருளாதாரத்தையும் அவரது குடும்பமே கட்டுப்படுத்தி வந்திருக்கிறது. மத்திய கிழக்கு மற்றும் ஆப்ரிக்க நாடுகள் பலவற்றில் உள்ள சர்வாதிகாரிகளுக்கும் மன்னர்களுக்கும் கடாஃபிக்கும் இந்த அம்சங்களில் பெரும் ஒற்றுமை இருந்தது உண்மை தான். ஆனால், அடிப்படையில் வேறு ஒரு முக்கியமான அம்சத்தில் கடாஃபி மற்றவர்களிடம் இருந்து வேறுபட்டார்அது தன் தேசத்தின் வளங்களை மேற்கத்திய ஏகாதிபத்தியங்களின் கைகளில் முழுமையாக ஒப்படைக்காமல் இருந்தது தான்.

ஜனநாயகக் கோரிக்கை லிபியாவில் ஓரளவுக்கு இருந்து வந்தது என்பதும், மக்களில் ஒரு பிரிவினர் கடாஃபியின் மேலான நம்பிக்கையை இழந்திருந்தனர் என்பதும் உண்மை தான். ஆனால், துனீசியா, எகிப்து உள்ளிட்ட அரபு தேசங்கள் போல் அல்லாது லிபியாவில் பெருமளவிலான மக்கள் போராட்டங்களோ எதிர்ப்புகளோ உருவாகிவிடவில்லை. ஆக, தற்போது லிபியாவின்ஜனநாயகத்துக்காகப்போராடிவரும்லிபிய விடுதலைக்கான தேசிய முன்னணியின்’ (National Front for the salvation of Libya) வரலாறு என்னவென்பதை அறிந்து கொள்வது அவசியமாகிறது. அதிலும் மிகக் குறிப்பாக லிபியாவின் கிழக்குப் பிராந்தியத்தை ஏகாதிபத்திய நாடுகள் உடனடியாகப் பிரித்து எதிர்ப்பாளர்களை அங்கீகரிக்க காட்டிவரும் அக்கறையும் கவனத்திற்குரியது.

1983-ஆம் ஆண்டு அமெரிக்க உளவுத்துறையான சி.. மற்றும் யு.எஸ்.எய்ட் ஆகிய அமைப்புகளின் நேரடி ஏற்பாட்டில்ஜனநாயகத்திற்கான தேசிய அறக்கட்டளை’ (National Endowment for Democracy) எனும் அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டது. இராணுவ பலத்தோடு ஜனநாயகத்தை உருவாக்க முடியாத பிராந்தியங்களில் செயல்படுவதற்கென்று உருவாக்கப் பட்ட இவ்வமைப்பின் நோக்கம்தமக்கு ஒத்துவராத சர்வாதிகாரிகள் ஆளும் நாடுகளில் ஊடுறுவி, மக்கள் மத்தியில் எதிர்ப்புணர்வை விதைப்பதே. அவ்வகையில் இவ்வமைப்பு எண்பதுகளில் இருந்தே லிபியர்கள் மத்தியில் ஒரு நீண்ட கால நோக்குடன் கடாஃபிக்கு எதிரான வேலைகளை ஆரம்பித்திருந்தது.

மேற்படி அமைப்பின் தீவிர ஆசியைப் பெற்றது தான் தற்போது அப்பாவிப் புரட்சியாளர்கள் என்று மேற்கத்திய ஊடகங்கள் போற்றிப் புகழும்லிபிய விடுதலைக்கான தேசிய முன்னணி’. இந்த அப்பாவிகள் தமது பிறப்பிலேயே அமெரிக்க அடிவருடித்தனத்தைக் கொண்டிருந்தனர். 1981-ஆம் ஆண்டு சூடானின் அமெரிக்கக் பொம்மை சர்வாதிகாரியாக இருந்த கலோனல் ஜாஃபர் நிமிரியின் முன்னிலையில் தான் இந்த அமைப்பே தோற்றுவிக்கப்பட்டது. இவ்வமைப்பின் தேசிய காங்கிரஸ், பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க உளவுத் துறைகளின் ஏற்பாட்டில் 2005-ஆம் ஆண்டு லண்டனிலும் பின்னர் ஜூலை 2007-ஆம் ஆண்டு அமெரிக்காவிலும் நடைபெற்றுள்ளது.

கடாபியின் சரணடைவும், தேசிய எண்ணைய் நிறுவனமும்

இதில் மிகவும் கவனத்திற்குரிய அம்சம் என்னவென்றால், அமெரிக்க இரட்டை கோபுரத் தகர்ப்பிற்குப் பின், தீவிரவாதத்திற்கு எதிரான போர் எனும் பெயரில் தன் எதிரி நாடுகளை வேட்டையாட அமெரிக்கா துவங்கியிருந்த ஆரம்ப நாட்களில் லிபியாவையும் தீமைக்கான அச்சு நாடுகள் பட்டியலில் சேர்த்திருந்தது. ஆப்கான், ஈராக்கைத் தொடர்ந்து தனது கொலைப் பட்டியலில் ஈரானையும் லிபியாவையுமே வைத்திருந்த நிலையில், வேறு நாடுகளின் ஆதரவு இல்லாத நெருக்கடியில் கடாஃபி தன்னிச்சையாக அமெரிக்க ஆதரவு நிலையை எடுக்கத் தள்ளப்படுகிறார்.

அவரே சுயமாக முன்வந்து தமது நாட்டின் அணு ஆயுதத் திட்டங்களைக் கைவிடுவதாக அறிவித்ததோடு அல்லாமல், அது தொடர்பாக லிபியா சேகரித்து வைத்திருந்த தொழில்நுட்ப விபரங்களையும் கருவிகளையும் ஒப்படைக்கவும் செய்கிறார். மட்டுமல்லாமல், அல்குவைதா அமைப்பைப் பற்றிய மிக முக்கியமான உளவுத் தகவலையும், அணு ஆயுதக் கள்ளச் சந்தை பற்றிய உளவுத் தகவல்களையும் கூட அமெரிக்க உளவுத் துறைக்கு கையளிக்கிறார். அதைத் தொடர்ந்து லிபியா திருந்தி விட்டதாக ஞானஸ்நானம் அளிக்கும் அமெரிக்கா, அதன் மேல் இருந்த பொருளாதாரத் தடைகளையும் 2004-ஆம் ஆண்டே விலக்குகிறது. கடாஃபியும் தனது படை பரிவாரங்களோடு ஐரோப்பிய தேசங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்கடாஃபியின் பில்லியன் கணக்கான பெட்ரோ டாலர்கள் அமெரிக்காவின் நிதிமூலதனச் சூதாடிகளான ஜே.பி.மார்கன் மற்றும் சிட்டி குரூப்பில் முதலீடு செய்யப்படுகிறது.

அமெரிக்காவின் மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனங்களான எக்ஸான்மொபில், ஹாலிபர்ட்டன், செவ்ரான், கொனாகோ மாரத்தான் ஆயில் போன்ற பெட்ரோலிய நிறுவனங்களும், ரேய்த்தியன் நார்த்ராப், க்ரம்மன் போன்ற ஆயுதக் கம்பெனிகளும் டவ் கெமிக்கல்ஸ் போன்ற பன்னாட்டுக் கம்பெனிகளும் அமெரிக்க லிபிய பொருளாதார மேம்பாட்டுகென அமைப்பு ஒன்றையும் (USLBA) 2005-ஆம் ஆண்டு துவங்குகிறார்கள்.

ஆக, தெளிவாக ஒரு மேற்கத்திய ஆதரவு நிலையை கடாஃபி எடுத்த பின் இந்தப் போருக்கான தேவை ஏன் எழுந்தது? ஒரு பக்கம் கடாஃபியோடு உறவாடி வந்த நிலையில், இன்னொரு பக்கம் அவரின் எதிர்ப்பாளர்களை அமெரிக்காவும் அதன் அல்லக்கை நாடுகளும் ஏன் வளர்த்து விட வேண்டும்? லிபியர்களுக்கு ஜனநாயகத்தை வழங்குவதற்காகவே அப்படிச் செய்தார்கள் என்பதை விரல் சூப்பும் குழந்தை கூட ஒப்புக் கொள்ளாது. அப்படி ஜனநாயகத்தின் மேல் உண்மையில் அமெரிக்காவுக்கு காதல் இருக்குமானால், டொமஹாக்கின் முதல் இலக்கு பஹ்ரைனாகவோ சவூதியாகவோ தான் இருந்திருக்க முடியும்.

அமெரிக்க ஆக்கிரமிப்பு ஜனநாயகத்திற்கா, எண்ணெய் வளத்தை கைப்பற்றவா?

அமெரிக்க ஜனநாயகக் காதலின் இலக்காக லிபியா மாறியதன் மிக முக்கிய காரணம் லிபியாவின் பெட்ரோலும் யுரேனியம் தங்கம் உள்ளிட்ட அதன் அள்ள அள்ளக் குறையாத கனிம வளங்களும் தான். லிபியாவின் பெட்ரோல் வர்த்தகத்தில் அமெரிக்க ஐரோப்பிய நிறுவனங்கள் ஈடுபட்டிருந்தாலும் அது இன்று வரையில் முழுமையாக தனியார்மயமாக்கப் படவில்லை. தேசிய பெட்ரோலிய கார்ப்பொரேஷன் எனும் அரசுடைமை ஆக்கப்பட்ட நிறுவனத்தின் கீழ் தான் லிபியாவின் எண்ணை வளம் இருந்து வருகிறது. அதோடு கூட்டு ஒப்பந்தங்கள் வழியாகத் தான் அமெரிக்க நிறுவனங்கள் பெட்ரோல் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றது.

தற்போதைய ஆய்வு முடிவுகளின் படி, லிபியாவில் 60 பில்லியன் பேரல் எண்ணை ரிசர்வாக உள்ளது. உலகின் மொத்த எண்ணை மற்றும் எரிவாயு ரிசர்வுகளில் 3.34% லிபியாவில் இருக்கிறது. அமெரிக்க ஐரோப்பிய எண்ணை நிறுவனங்கள் லிபியாவின் தேசிய எண்ணை கார்பொரேஷனுடன் கூட்டு ஒப்பந்தங்கள் மூலம் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தாலும், சீனாவின் தேசிய பெட்ரோலிய கார்பொரேஷனும் லிபியாவுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளது.எண்ணை துரப்பணம் உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்காக சுமார் 30,000 சீனத் தொழிலாளிகள் லிபியாவில் உள்ளனர். லிபியா மட்டுமல்லாமல், சீனா பிற ஆப்ரிக்க தேசங்களிலும் கனிமங்கள், பெட்ரோல் போன்ற இயற்கை வளங்களின் வர்த்தகத்தில் மேற்கத்திய நாடுகளுக்கு ஒரு போட்டியாக உருவெடுத்து வருகிறது.

இந்தப் பின்னணியில், அமெரிக்காவின் லிபியா போர் என்பது நேரடி ஆக்கிரமிப்பு என்பதையும் கடந்த ஒன்றாகும். வட ஆப்ரிக்கா, மத்திய கிழக்காசிய மற்றும் மத்திய ஆசியப் பிரதேசங்களைக் கட்டுப்படுத்துவதன் ஊடாக, உலகின் 60% எண்ணை ரிசர்வைக் கட்டுப்படுத்தும் அமெரிக்காவின் விரிவான திட்டத்தின் ஒரு சிறிய அங்கம் தான் லிபியப் போர்.

தற்போது லிபியாவின் ஜனநாயகப்போராளிகள்முக்கியமாகக் கட்டுப்படுத்தும் பிரதேசங்கள் கடாஃபியால் 1969-இல் பதவியிறக்கப்பட்ட முன்னாள் மன்னருக்கு ஆதரவானவர்கள் நிறைந்த பிரதேசம் என்பதும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த எண்ணை வயல்களும் எரிவாயுக் குழாய்களும் கொண்ட பகுதி என்பது தற்செயலானதல்ல. மட்டுமல்லாமல், கலகக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் பிராந்தியத்தை அங்கீகரித்து, சட்டப்பூர்வமானதாக அறிவிக்கவும் மேற்கத்திய நாடுகள் முயன்று வருகின்றன.

அமெரிக்காவின் உலக மேலாதிக்கக் கனவுகள் நிறைவேறத் தேவையென்றால் எந்த நாட்டின் மேலும் எப்போது வேண்டுமானாலும் தனது இராணுவத்தை ஏவி விடலாம் என்கிற ஒரு எதார்த்தத்தை ஈராக் யுத்தத்திற்குப் பின் அமெரிக்கா நிலைநாட்டியுள்ளது. இறையாண்மை, தேசம், தேச எல்லைகளின் புனிதம் என்றெல்லாம் பேசியது மெல்ல மெல்லப் பழங்கதையாகி வருகிறது. லிபியாவில் ஜனநாயகத்தை நிலைநாட்டவோ, அதற்காக அதன் மேல் தாக்குதல் தொடுக்கவோ அமெரிக்காவுக்கு இருக்கும் உரிமை குறித்து உலக நாடுகள் எந்தக் கேள்வியும் கேட்காமல் லேசான முணுமுணுப்புகளோடு ஒப்புக் கொள்ளும் அடிமை மனநிலைக்கு வந்து விட்டன. ஒரு வேளை லிபியாவின் அரச படைகளை தங்கள் ஆதரவையும் ஆயுதத்தையும் பெற்றபுரட்சியாளர்கள்வென்று முழு லிபியாவையும் கைப்பற்ற இயலாது போனால், குறைந்தபட்சம் அவர்கள் வசமிருக்கும் எண்ணை வயல்கள் மிகுதியாகக் கொண்ட பிரதேசத்தை சட்டப்பூர்வமாக அங்கீகரிப்பதன் மூலம் லிபியாவின் எல்லைக் கோடுகளை திருத்தி வரையும் முயற்சியிலும் மேற்கத்திய நாடுகள் இறங்கியுள்ளன.

ஐக்கிய நாடுகள் சபையில் லிபியாவின் மேல் நேட்டோ படைகளின் தாக்குதலுக்குக்கு ஒப்புதல் பெறும் வாக்கெடுப்பில் தீர்மானத்தை எதிர்த்து வாக்காளிக்காமல் புறக்கணித்த இந்தியா பிரேஸில் உள்ளிட்ட நாடுகள் அமெரிக்காவின் கைக்கூலிகள் என்றால், ஜெர்மனிக்கு லிபியாவோடு கடந்த நவம்பரில் போடப்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தின் நிலை பற்றித் தான் கவலை. மற்றபடி, இரசியா சீனா உள்ளிட்ட பிற நாடுகளும் கூட, லிபிய விவகாரத்தில் தலையிடும் அமெரிக்க உரிமை குறித்து கேள்வியெழுப்பவில்லை.

ஒரு உலக ரவுடியாக உருவெடுத்துள்ள அமெரிக்கா, தன்னைத் தானே உலகப் போலீசாகவும் நியமித்துக் கொண்டுள்ளது. லிபியாவின் மேல் அமெரிக்கா அக்கறை கொள்வதன் உண்மையான நோக்கம் ஜனநாயகம் அல்லஅது எண்ணையும் இயற்கை வளங்களும் தான்.

அமெரிக்க ஆக்கிரமிப்பின் செலவு உங்கள் தலையில்!

ஒவ்வொரு முறை பெட்ரோலிய நாடுகள் மீது அமெரிக்கா போர் தொடுக்கும் போதும் உலகளவில் பெட்ரோலியப் பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்திருப்பதை கடந்த கால அனுபவங்களில் இருந்து நாம் உணர்ந்து கொள்ள முடியும். அந்த வகையில் ஏகாதிபத்தியங்களின் மேலாதிக்க வெறியின் செலவு மறைமுகமாக உலக மக்கள் அனைவரின் தலைமேல் தான் சுமத்தப்படுகிறது. மறைமுகமாக நம்முடைய செலவில் கொல்லப்படும் ஒவ்வொரு ஈராக்கியனின் உயிருக்கும், லிபியனின் உயிருக்கும், ஆப்கானியனின் உயிருக்கும் பதில் சொல்ல வேண்டிய தார்மீகப் பொறுப்பு நமக்கும் இருக்கிறது.

நம்மை அன்றாடம் அலைக்கழிக்கும் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகள் நமது நாட்டோடும் ஆட்சியாளர்களோடும் மட்டுமே தொடர்புடைய ஒன்றல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். போர்களின்நன்மைகளைஏகாதிபத்தியங்களும் அதன் பன்னாட்டுக் கம்பெனிகளும் அறுவடை செய்து கொள்ளும் அதே வேளையில் அதன் சுமை உலகம் மொத்தமும் உள்ள உழைக்கும் மக்களின் தலையில் தான் சுமத்தப்படுகிறது.

அன்று கொஸாவாவிலும், நேற்று ஈராக்கிலும் ஆப்கானிலும், இன்று லிபியாவிலும் வெடித்துச் சிதறும் டொமஹாக் ஏவுகணைகளின் நேரடி இலக்குகளாக அந்த நாடுகளின் அப்பாவி மக்கள் இருந்தார்கள் என்றால் அதன் மறைமுக இலக்கு நாம் தான். எனவே, இது எங்கோ அப்ரிக்கக் கண்டத்தின் ஒரு மூலையில் இருக்கும் லிபியர்களின் பிரச்சினை மட்டுமல்ல. நம்முடைய பிரச்சினையும் தான். அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடி முறியடிக்கும் கடமை ஈராக்கியர்களோடும் ஆப்கானியர்களோடும் லிபியர்களோடும் மட்டும் முடிந்து விடுவதல்லஅது நம் ஒவ்வொருவரின் கடமையும் கூட.

-மின்னஞ்சலில் இந்த இடுகையை அனுப்பியவருக்கும் எழுதியவருக்கும் நன்றி!

______________________________________________________________