Followers

Sunday, June 25, 2006

இறைவனைக் காண முடியுமா?

இறைவனைக் காண முடியுமா?

இறைவனை நேரில் பார்க்க முடியுமா? என்றால் 'முடியாது' என்று இஸ்லாம் பதிலளிக்கிறது. இந்து மதத்திலும் ஸ்வேதாஸ்வதாரா உபனிஷத்தில் 'அவன் உருவத்தை யாரும் பார்க்க முடியாது.அவனது உருவை பார்க்கும் சக்தி எந்த கண்களுக்கும் இல்லை' என்று வருகிறது.

'அவனைக் கண்கள் பார்க்காது. அவனோ கண்களைப் பார்க்கிறான். அவன் நுட்பமானவன். நன்கறிந்தவன்.'

குர்ஆன் 6 : 103

இறைவனை எந்த மனிதனோ இறைவனின் தூதர்களோ பார்த்ததில்லை என்பது மேற்கண்ட வசனத்திலிருந்து நாம் அறிகிறோம்.

'நீங்கள் இறைவனைப் பார்த்ததுண்டா?' என்று முகமது நபியிடம் கேட்கப் பட்டபோது 'அவனோ ஒளி மயமானவன்.நான் எப்படி அவனைப் பார்க்க முடியும்? என்று பதிலளித்தார்.

ஆதாரம் : முஸ்லிம் :261 - புகாரி 3234, 4855, 7380

மேற்கண்ட நபி மொழி மூலம் முகமது நபியும் இறைவனைப் பார்த்ததில்லை என்று நம்மால் விளங்க முடிகிறது.

மோசே(மூஸா)யின் சமூகத்தார் இறைவனை நேருக்கு நேர் காட்டுமாறு மோசேயிடம் கேட்டபோது கோபமுற்ற இறைவன் அவர்களை இடியோசையால் தாக்கினான் என்று குர்ஆன் கூறுகிறது.

'முகம்மதே! 'வானத்திலிருந்து அவர்களுக்கு வேதத்தை நீர் இறக்க வேண்டும் ' என்று வேதமுடையோர் உம்மிடம் கேட்கின்றனர். இதை விடப் பெரியதை அவர்கள் மோசேயிடம் கேட்டுள்ளனர்..'இறைவனைக் கண் முன்னே எங்களுக்குக் காட்டு' என்று அவர்கள் கேட்டனர். அவர்கள் அநீதி இழைத்ததால் இடி முழக்கம் அவர்களைத் தாக்கியது.

குர்ஆன் 4 :153

இந்த வரலாறுகளின் மூலம் நமக்குத் தெரிய வருவது இறைவனை யாராலும் நேரில் பார்க்க முடியாது என்பதே! 'நான் இறைவனைப் பார்த்தேன்' என்று எந்த ஆன்மீகவாதியாவது சொன்னால் மக்களை ஏமாற்றுவதற்காக பொய் சொல்கிறார் என்று தான் நாம் முடிவுக்கு வர முடியும். இறைவனை எவரும் காண முடியாது என்று மக்கள் நம்பினால் ஆன்மீகத்தின் பெயரால் நடக்கும் பெருமளவிலான மோசடியை ஒழித்து விட முடியும். இன்று இந்து,இஸ்லாம், கிறித்தவம் என்று எந்த மார்க்கத்தையும் இந்த போலி ஆன்மீகவாதிகள் விட்டு வைக்கவில்லை.இதற்கெல்லாம் காரணம் நம்மை விட இந்த ஆன்மீகவாதிகள் இறைவனுக்கு நெருக்கமானவர்கள் என்ற போலி நம்பிக்கைதான்.

ஒரு முறை எங்கள் கிராமத்தில் ஒரு மௌலானா(ஆன்மீக குரு) என்ற பெயரில் ஒரு பெரியவர் வெளியூர்க்காரர் அனைவருக்கும் ஓதி விடுவதாகவும் மறைவான விஷயங்கள் பலவற்றை சொல்வதாகவும் நிறைய காணிக்கைகள் சேர்வதாகவும் கேள்விப் பட்டோம்.எங்கள் நண்பர்கள் குழு அவரை சந்திக்க சென்றோம். பெரிய தாடி. பெரிய தலைப்பாகை.கையில் மணிகள் என்று பார்த்தவுடன் மரியாதை வந்து விடும். அவரிடம் கேட்டோம் 'மௌலானா! 'உங்களை தொழுகைக்கு பள்ளிவாசலில் பார்க்க முடிவதில்லையே!' என்று கேட்டோம். அதற்கு அவர்,'நாங்கள் அத்தகைய வணக்கத்திற்கெல்லாம் அப்பாற்பட்டவர்கள்.கேள்விகள் கேட்காதீர்கள்.' என்று சிடுசிடுத்தார். 'அடப்பாவி!நெஞ்சார பொய்தன்னை சொல்கிறானே' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு இடத்தை காலி பண்ணினோம். அடுத்த இரண்டு நாளில் ஒரு பெண்ணிடம் சில்மிஷம் பண்ணினான் என்று ஊர்க்காரர்களே அடித்து விரட்டி விட்டனர். இது போல் பல நிகழ்வுகளை நாம் அன்றாடம் பத்திரிக்கைகளில் படித்தும் மக்கள் திருந்துவதாக இல்லை.

'இறைவன் அருளிய வேதத்தை மறைத்து அதை அற்ப விலைக்கு விற்போர்,தமது வயிறுகளில் நெருப்பைத் தவிர வேறு எதையும் சாப்பிடுவதில்லை. மறுமையில் இறைவன் அவர்களுடன் பேசமாட்டான்.அவர்களைத் தூய்மைபடுத்தவும் மாட்டான்.அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையும் உண்டு.'

குர்ஆன் 2 :174

போலி ஆன்மீக வாதிகளுக்கு சாட்டையடியாக அமைந்துள்ளது மேற்கண்ட வசனம்.

அடுத்து நாத்திக வாதத்தை எடுத்துக் கொள்வோம்.நம் நாட்டிலும் மேலை நாடுகளிலும் நாத்திகத்தை பின் பற்றக் கூடியவர்கள் கணிசமான அளவு இருக்கிறார்கள்.இதற்கெல்லாம் காரணம் அவர்கள் மதத்தின் பலஹீனமான கொள்கைகளினால் வெறுப்புற்று நாத்திகத்தை நாடுகிறார்கள்.இறைவனை நேரில் காட்டினால்தான் இவர்கள் ஒத்துக் கொள்வார்களாம். உதாரணத்திற்கு காற்றை எடுத்துக் கொள்வோம். காற்றை நாம் கண்ணால் பார்த்ததில்லை. அந்த காற்று மரங்களை லேசாக அசைத்தால் தென்றல் காற்று என்கிறோம்.அதே காற்றினால் மரங்கள் வேரோடு சாய்க்கப் பட்டால் புயல் என்கிறோம்.காற்றை நாம் பார்க்கா விட்டாலும் அதன் சக்தியை நாம் உணருகிறோம்.

கேள்வி: அரைகுறையாக சமைக்கப் பட்ட மாமிச உணவைக் கூட இரைப்பை ஜீரணித்து விடுகிறது.மாமிசத்தால் ஆன இரைப்பை மட்டும் தன்னைத் தானே ஜீரணிப்பதில்லை. இந்த அதிசயத்தின் உண்மை என்ன?

சுஜாதா பதில் : இதை விளக்க நம் உணவுப் பாதையில் நடக்கும் அதிசயங்களைப் பற்றி ஒர கட்டுரையே எழுதலாம். இந்த ஜீரணம் இரைப் பையில் ஏற்படும் சுரப்பிகளால் நிகழ்வது. அதன் அமில சக்தி கல்லையும் ஜீரணிக்கும் அல்லது கொல்லைப் பக்கம் அனுப்பி வைக்கும்.இரைப் பையை பாதுகாப்பதற்குஅதில் முலாம் போல் உள் சுவர் பூச்சு உள்ளது.அதன் எதிரி சாராயம். ம்யூகோஸா என்னும் இந்த சளி போன்ற பூச்சிலிருந்து தான் ஜீரணத்துக்கான அமிலங்கள் சுரக்கின்றன. ஆனால் வயிற்றைக் கரைப்பதில்லை.இது எப்படி என்பது இயற்கையின் இதுவரை தீர்க்கப் படாத மர்மம்.

'விளங்கும் சமுதாயத்திற்கு இதில் சான்று உள்ளது' என்று பல இடங்களில் இறைவன் குறிப்பிடுவது இது போன்று அறிவியலால் விளக்க முடியாத உண்மைகளைத்தான்.இறைவன் மேலும் கூறுகிறான் :

'இறைவனே வானிலிருந்து தண்ணீரை இறக்கினான். பூமி இறந்த பின் அதன் மூலம் இதற்கு உயிரூட்டினான்.செவியுறும் சமுதாயத்திற்கு இதில் சான்று உள்ளது.'

குர்ஆன் : 16 : 65

கால்நடைகளில் உங்களுக்குப் படிப்பினை உள்ளது.அதன் வயிறுகளில் உள்ள செறிக்கப் பட்ட உணவுக்கும், இரத்தத்துக்கும் இடைப்பட்ட நிலையில் தூய்மையான பாலை உங்களுக்குப் புகட்டுகிறோம்.அருந்துவோருக்கு அது இனிமையானது.'

குர்ஆன் 16 :66 - உண்மையில் இரத்தம் பாலாக மாறுவதில்லை.அறைக்கப் பட்ட உணவுக் கூழுக்கும்,இரத்தமாக மாறுகின்ற நிலைக்கும் இடைப்பட்ட பொருளில் இருந்துதான் பால் உற்பத்தியாகிறது என்ற இன்றைய அறிவியல் உண்மையை அன்றே குர்ஆன் சொல்லியிருக்கிறது.

'தேனிக்களின் வயிறுகளிலிருந்து மாறுபட்ட நிறங்களையுடைய பானம் வெளிப்படுகிறது. அதில் மனிதர்களுக்கு நோய் நிவாரணம் உள்ளது. சிந்திக்கின்ற சமுதாயதத்திற்கு இதில் சான்று உள்ளது.'

குர்ஆன் 16 : 69 - பெரும்பான்மையானோர் பூக்களிலிருந்து தேனை எடுத்து தனது கூட்டில் தேனிக்கள் வாய் வழியாக சேமிக்கின்றன.என்று தான் பலரும் நம்பியிருந்தோம். ஆனால் தேனை உறிஞ்சிய தேனீக்கள் அவற்றை உட்கொண்டு ஜீரணித்து பிறக வெளியாக்கும் கழிவுதான் நாம் ருசித்து சாப்பிடும் தேன் என்று இன்றைய விஞ்ஞானிகளின் கண்டு பிடிப்பை அன்றே இறைவன் சுட்டிக் காட்டுகிறான்.

'நீங்கள் பார்க்கின்ற தூண்களின்றி வானங்களை இறைவனே உயர்த்தினான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான்.சூரியனையும் சந்திரனையும் தன் கட்டுப் பாட்டில் வைத்திருக்கிறான்.ஒவ்வொன்றும் குறிப்பிட்ட தவணை வரை ஓடுகின்றன. காரியத்தை அவனே நிர்வகிக்கிறான். உங்கள் இறைவனின் சந்திப்பை நீங்கள் உறுதியாக நம்புவதற்காக சான்றுகளை அவன் தெளிவு படுத்துகிறான்.

குர்அன் 13 :3

அவனே பூமியை விரித்தான். மலைகளையும் நதிகளையும் அதில் அமைத்தான். ஒவ்வொரு கனிகளிலும் ஒரு ஜோடியை அமைத்தான். இரவை பகலால் மூடுகிறான். சிந்திக்கும் சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.

குர்ஆன் 13 :3

நான் எடுத்து எழுதியிருக்கும் அறிவியல் உண்மைகள் மிகச் சிலவே! இது போல் பல நூற்றுக் கணக்கான அறிவியல் உண்மைகளை குர்ஆனிலிருந்து எடுக்க முடியும். எவ்வளவு தான் முகமது நபி திறமையாக தன் சொந்த கற்பனையில் இந்த குர்அனை சொல்லியிருந்தாலும் மனிதன் என்ற நிலையில் ஒரு சில இடங்களிலாவது கண்டிப்பாக தவறுகள் வந்திருக்கும்.

'இந்த குர்ஆன் இறைவன் அல்லாதவரிடமிருந்து இட்டுக்கட்டப் படடதாக இல்லை. மாறாக தனக்கு முன் சென்றதை உண்மைப் படுத்துவதாகவும் தெளிவு படுத்தும் வேதமாகவும் உள்ளது.இதில் எந்த சந்தேகமும் இல்லை.இது அகிலத்தின் இறைவனிடமிருந்து வந்தது.'

குர.ஆன் 10 :37

'இதனை இவர் இட்டுக் கட்டி விட்டார்' என்று அவர்கள் கூறுகிறார்களா?'நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இது போன்ற ஓர் அத்தியாயத்தையேனும் கொண்டு வாருங்கள்! அல்லாஹ்வையன்றி உங்களால் இயன்றவர்களை துணைக்கு அழைத்துக் கொள்ளுங்கள்.' என்று முகம்மதே கூறுவீராக!

குர்ஆன் 10 :38

தின மலர். அறிவியல் ஆயிரம்!கேள்வி: பலரது சந்தேகம் உலகம் எப்படி வந்தது? முதலில் ஒரு செல் உயிர் தோன்றியது என்றும்: சிலர் கடவுள் நம்மைப் படைத்தார் என்றும் கூறப்படுகிறது. எது நிஜம்?-பிரியங்கா, பண்ணைக்காடு, கொடைக்கானல்.

இங்கே உலகம் தோன்றுவதற்கும் உயிர்கள் தோன்றுவதற்கும் வெளியிலிருந்து ஒரு ஆள் தேவைப் பட வில்லை. எல்லாமே தானாக உதித்துக் கொள்ள முடியும் என்று அறிவியல் கூறுகிறது.கடிகாரம், பூட்டு, சாவி, பானை என்று எந்த செயற்கைப் பொருளைப் பார்க்க நேர்ந்தாலும் அவை யாராலோ செய்யப் பட்டது என்பது நமக்குத் தெரிகிறது. தனக்குத் தானாகவே ஒட்டிக் கொண்டும், பொருந்திக் கொண்டும், உருவாகிக் கொள்ளும் கருவியை மனிதன் இதுவரை கண்டு பிடிக்கவில்லை. எனவே செய்யப் பட்டவைகளுக்கு செய்தவர் உண்டு.சூரியன், உலகம், உயிர்கள் யாவும் செய்யப் பட்டவைகளா? இல்லையே. எனவே செய்தவர் எவரும் இல்லை.ஒரு நிமிடம் .... செயற்கைப் பொருட்கள் தாமாக செய்து கொள்ள முடியாதபோது.... இயற்கைப் பொருட்கள் மட்டும் எப்படி செய்து கொள்கின்றன? எனில், ஒரு செய்முறை தகவலின் அடிப்படையில் அவை செய்து கொள்கின்றன என்று அறிவியல் சொல்வதால்....இயற்கைப் பொருட்கள் தோன்றுவதற்கு முன்பாகவே ஒரு 'தகவல்' இருந்திருப்பது உறுதியாகிறது. அந்தத் தகவல் ....எது? யார?தினமலர்க் காரருக்கு வேண்டுமானால் யார் என்பதில் இன்னும் குழப்பம் இருக்கலாம். சுவனப் பிரியனான எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. அது தான் அல்லாஹ், இறைவன், கர்த்தர், கடவுள் என்ற பெயர்களுடைய அனைத்தையும் படைத்து பரிபாலிக்கக் கூடிய ஒருவன்.


முத்து தமிழினி ஒரு பதிவில் 'சுவனப்பிரியன் இறைவனை நம்புவது எதன் அடிப்படையில்?' என்ற ஒரு கேள்வியை வைத்திருந்தார். அந்த நேரத்தில் பதில் தருவதற்கு நேரம் இல்லாமல் இருந்தது. முத்து தமிழினியின் கேள்விக்கு இந்த பதிவே பதிலாக அமைந்திருக்கிறது.

4 comments:

மருதநாயகம் said...

இந்த வலைப்பூவை ஒரு முறை சென்று பாருங்கள்

http://maruthanayagam.blogspot.com/

அபூ ஸாலிஹா said...

அன்பின் சுவனப்பிரியன்,

சத்தியமார்க்கம்.காம் தளத்தினர் இக்கேள்விக்கான பதிலை அளித்திருப்பதைக் கண்டீர்களா?

suvanappiriyan said...

மெக்கா பயணம்!

நாளையிலிருந்து வெள்ளிக் கிழமை வரை மெக்காவில் இருப்பேன். எனவே பின்னூட்டம் இடுபவர்கள் சனிக்கிழமை வரை பொறுக்கவும்.

நன்றி!

suvanappiriyan said...

வருகைக்கு நன்றி அபூ saima,abu saliha,paarvai,maruthanayagam!

இறைவனை நிரூபிக்க இது போல் எத்தனையோ ஆதாரங்களை குர்ஆனிலிருந்தே எடுக்க முடியும்.