Followers

Thursday, January 15, 2009

கேள்வி கேட்க மறந்த மக்கள்! - எஸ்.ஏ.ஆர். கிலானி

கேள்வி கேட்க மறந்த மக்கள்
எஸ்.ஏ.ஆர். கிலானி

‘மதவாதம், பாசிசம் மற்றும் ஜனநாயகம்-மிகையும், உண்மையும்' என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு தலைமை ஏற்க, நவம்பர் 6, 2008 அன்று காலை சரியாக 11.30 மணிக்கு நான் தில்லி பல்கலைக் கழகத்தின் கலைத் துறையை வந்து சேர்ந்தேன். நான் என் இருப்பிடத்தில் அமர்ந்த போது, இன்னும் சில நிமிடங்களில் என் மீது ஒரு வெட்கங்கெட்ட பாசிசத் தாக்குதல் நடைபெறப் போகிறது என்பதை நான் அறிந்திருக்கவில்லை. நான் அமர்ந்த உடனேயே ஒரு மாணவர் என்னிடம் பேச முற்படுவது போல் என் அருகே நெருங்கினார். ஆனால் பேசுவதற்குப் பதில், என் முகத்தில் அவர் காறி உமிழ்ந்தார். அடுத்த நொடியே வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது.

பார்வையாளர்களிடையேயும் வெளியிலும் விரவியிருந்த விசுவ இந்து பரிஷத் மற்றும் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் கூச்சலிடவும்-நாற்காலி, மேசைகள், ஜன்னல் கண்ணாடிகளை உடைக்கவும் தொடங்கினர். பெரும் எண்ணிக்கையில் காவல் துறையினர் குவிக்கப்பட்டிருந்ததைப் பற்றிய எந்த பாதிப்புமின்றி அவர்கள் என்னை மட்டுமல்ல; ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையுமே பழிக்கத் தொடங்கினர். ஒரு நொடி நான் அதிர்ந்து போனேன். ஆனால் என் மீது உமிழ்ந்த மனிதர் முழக்கங்கள் எழுப்பத் தொடங்கியவுடன் -அவர் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. கலாச்சாரத்தில் உள்ளவர் என்பதை உணர்ந்தேன். இவர்கள்தான் உஜ்ஜயினியில் பேராசிரியர் சபர்வாலை கொலை செய்தவர்கள். அண்மையில் ஒரிசாவிலும் கர்நாடகத்திலும் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள்.

இந்தியப் பண்பாட்டைப் பிரதிபலிப்பதாக சொல்லிக் கொள்பவர்களின் பாசிசம் இதுதான். வன்முறைதான் இந்தியப் பண்பாட்டின் அடையாளம் என்ற தவறான செய்தியை இவர்கள் உலகுக்கு அளிக்கிறார்கள். டிசம்பர் 2001இல் நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் நான் கைது செய்யப்பட்ட நாளிலிருந்து, 2005 இல் நான் விடுதலை செய்யப்பட்ட பிறகும் கூட, இந்த பாசிசத்தை நான் சந்தித்து வருகிறேன்.

உண்மையில் நான் குற்றமற்றவன் என்று விடுதலை செய்யப்பட்ட பிறகான வாழ்க்கை எனக்கு மட்டுமல்ல; எனது குடும்பத்தினருக்கும் மிகக் கடினமாகவே இருக்கிறது. நான் குறி வைக்கப்பட்டிருப்பதை உணர்கிறேன். எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம். 2005 இல் என்னைக் கொல்ல முயற்சி நடந்தது. 6 குண்டுகள் என்னை துளைத்தன. மருத்துவர்கள் நம்பிக்கை இழந்து விட்டனர். ஆனாலும் அதிசயமாக நான் பிழைத்துக் கொண்டேன். ஓராண்டு கழித்து, என் உயிருக்கு ஆபத்து இருப்பதாக நான் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தேன். அதன் பிறகும் பல முயற்சிகள் என் மீது நடந்தன. என்னைச் சுற்றி ஆபத்து இருப்பதை அறிவேன்.

இறுதியாக உயர் நீதிமன்றமும், பின்னர் உச்ச நீதிமன்றமும் என் மீது சுமத்தப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளும் பொய்யென என்னை விடுவித்தன. சொல்லப் போனால், உயர் நீதிமன்றமும், காவல் துறையும் எனக்கு எதிராக பொய்யான
சாட்சியங்களை உருவாக்கியதையும், போலி ஆவணங்கள் தயாரித்ததையும் கண்டுபிடித்துச் சொன்னது. ஆனால்
தற்போது மக்கள் மனதில் ஆழப்பதிந்திருப்பது, ஊடகங்கள் ஏற்கனவே உருவாக்கி வைத்த பிம்பமே. இது, மற்றவர்களுக்கும் பொருந்தும். அய்தராபாத்தில் உள்ள ஒரு நீதிமன்றம், சென்ற வாரம் மெக்கா மசூதி குண்டு வெடிப்பு வழக்கில் கைதான ஒரு முஸ்லிம் இளைஞனை விடுதலை செய்து தீர்ப்பளித்தது. ஊடகங்கள் இதை வெளியிட எந்த அக்கறையும் காட்டவில்லை. 2003இல் நடைபெற்ற ஒரு பேருந்து குண்டு வெடிப்பு வழக்கில், கைது செய்யப்பட்ட அனைவரையும் மும்பையில் உள்ள நீதிமன்றம் விடுதலை செய்தது. ஆனால் ஒருவரும் இந்த செய்தியை வெளியிடவில்லை.

நான் உளவு நிறுவனங்களை மிக நெருக்கமாக கவனித்திருக்கிறேன். அவர்களுடன் அமர்ந்திருக்கும்போது, நான் ஓர் அரசு அலுவலகத்திலோ அல்லது ஒரு ஜனநாயக நாட்டிலோ இருப்பதாக உணர்ந்ததே இல்லை. மாறாக, ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்தில் இருப்பது போன்ற உணர்வையே அது ஏற்படுத்தியது. இந்த நிறுவனங்கள் எல்லாம் முற்றிலும் மதமயமாகிப்
போயிருக்கின்றன. வேதனையான செய்தி என்னவெனில், ஊடகங்களில் திட்டமிட்டு சொருகப்பட்ட செய்திகள் நிறைய வெளிவருகின்றன. இந்த உளவு நிறுவனங்கள் பல ஊடகவியலாளர்கள் மூலம் சில கதைகளைப் பரப்புகிறார்கள். அவர்களும் அதை மகிழ்ச்சியுடன் வெளியிடுகிறார்கள்.

இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக, இந்திய நாட்டின் மக்கள் தங்கள் அரசாங்கத்தை கேள்வி கேட்க மறந்து விட்டார்கள். நான் தொடர்ந்து மக்களிடம் கேட்கிறேன். "2001 டிசம்பர் 13 அன்று நாடாளுமன்றத்தைத் தாக்கியவர்கள் யார் என்று உங்களுக்குத் தெரியுமா?' யாருக்கும் தெரியாது. யாரும் கேட்கவும் இல்லை. அதனால் இது, இந்த நொடி இது மிக மோசமாகத் தோன்றுகிறது. பாரபட்சமான, முன்தீர்மானத்துடன் கூடிய சட்டத்திட்டங்கள், ஜனநாயகத்திற்கான இடத்தை சுருக்கிக் கொண்டே வருகின்றன. ஜனநாயகத்திற்கான இடத்தை உறுதி செய்வதன் மூலம் நமது வருங்காலத் தலைமுறையினர் பயன் பெறுவதற்காக, நாம் துன்பங்களை சந்திக்கவும் தயாராக இருக்க வேண்டும்.

‘தெகல்கா' 22.11.2008

6 comments:

Unknown said...

அரசின் முக்கிய துறைகள் அனைத்திலும் காவிச்சிந்தனையாளர்களைப் புகுத்தி வைத்திருக்கின்றனர். ஜனநாயகத்திற்கான இடங்கள் சுருக்கப்படும்போது பாதிக்கப் பட்டவனுக்கு எதிர்மாறான சிந்தனைகள் தோன்றுவது இயல்புதானே.

தானே பாதிக்கப்பட்ட போதும் "ஜனநாயகத்திற்கான இடத்தை உறுதி செய்வதன் மூலம் நமது வருங்காலத் தலைமுறையினர் பயன் பெறுவதற்காக, நாம் துன்பங்களை சந்திக்கவும் தயாராக இருக்க வேண்டும்" என்று கூறியுள்ளது சிறப்பானது.

இது குறித்த எனது பதிவையும் பார்வையிடுங்கள்.

suvanappiriyan said...

வாங்க சுல்தான்!

உங்களின் பதிவையும் பார்வையிட்டேன். ஒரு பேராசிரியருக்கே இந்த நிலை என்றால் இந்த நாட்டில் சாதாரண முஸ்லிமின் நிலையை நினைத்து வருத்தமே மேலோங்குகிறது.

"எப்போதெல்லாம் பா.ஜ.க விற்கு பிரச்னை வருகின்றதோ அப்போதெல்லாம் நாட்டில் குண்டுகள் வெடிக்கும். 2001-ல் சவப் பெட்டி ஊழலில் பா.ஜ.க வின் ஊழல் புகழ் இந்தியாவெங்கும் பரவியது. திடீரென வந்த தீவிரவாதிகள் பாராளுமன்றத்தைத் தாக்கி அந்தப் பிரச்னையிலிருந்து பா.ஜ.க வை பாதுகாத்தார்கள்.

கர்னாடகாவில் முதல் கட்ட தேர்தல் நடக்கும் முன்பு ஹூப்ளியில் குண்டுகள் வெடித்தன. இரண்டாவது கட்ட தேர்தலுக்கு முன்பு ஜெய்ப்பூரில் குண்டுகள் வெடித்தது."

-திக் விஜய் சிங்.

Anonymous said...

ஆம். இஸ்லாமியன் என்பதே வெறுப்புக்குறிய ஒன்றாக குழந்தைகள் மனதில்கூட பதியவைக்கப்பட்டுள்ளது. நீங்கள் உங்கள் பின்னூட்டத்தில் கூறியபடி எப்போதெல்லாம் காவி பாசிசங்களுக்கு தேவைப்படுகிறதோ அப்போதெல்லம் குண்டுகள் வெடிக்கின்றன. அதுமட்டுமல்ல, இடஒதுக்கீடு பிரச்சனையான போது ரதயாத்திரை கலவரங்கள் நிகழ்த்தப்பட்டன. காட் ஒப்பந்தம் பாராளுமன்ற ஒப்புதல் தேவையில்லாமல் உள்ளே நுழைந்தபோது பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அணுவிசை ஒப்பந்தம் விவாதப்பொருளானபோது ராமர்பாலம் புறப்பட்டது. பார்பனீய பாசிசமும், மறுகாலனியாக்கமும் வேறுவேறல்ல. அனால் அதை எந்த வழியில் எதிர்கொள்வது? இந்து மதவெறி உயிர்ப்புடன் இருப்பதற்கு இஸ்லாமின் ஒருங்கிணைவும், இஸ்லாமிய மதவெறியும் முன்நிபந்தனையாக இருக்கிறது என்பது தான் உண்மை.

தோழமையுடன்
செங்கொடி

suvanappiriyan said...

நண்பர் செங்கொடி!

//அதை எந்த வழியில் எதிர்கொள்வது? இந்து மதவெறி உயிர்ப்புடன் இருப்பதற்கு இஸ்லாமின் ஒருங்கிணைவும், இஸ்லாமிய மதவெறியும் முன்நிபந்தனையாக இருக்கிறது என்பது தான் உண்மை.//

இந்து மத வெறி உயிர்ப்புடன் இருப்பதற்கு இஸ்லாமிய தீவிரவாதம்தான் காரணம் என்பது போல் உங்கள் கருத்து உள்ளது. இது தவறான கருத்து.

ஏனெனில் சிறுபான்மையாக உள்ள எந்த இனமும் ஆயுதத்தை முதலில் கையில் எடுக்காது. தனக்கு நீதி கிடைக்கவில்லை என்ற நிலை வரும்போதுதான் ஒரு சிலர் ஆயுதத்தை கையில் எடுக்கிறார்கள். இந்த வழிமுறை தவறு என்று பல இயக்கங்கள் மூலமாக விளக்கியும் வருகிறோம். டிஎன்டிஜே, டிஎம்எமகே, எம்என்பி போன்ற இயக்கங்கள் எல்லாம் ஜனநாயக முறையில் போராட்டங்களை அறிவிப்பதும் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களின் உணர்வுகளை சாந்தப் படுத்தவே. அதில் ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளார்கள்.

மேலும் இந்துத்துவவாதிகளுக்கும் முஸ்லிம்களுக்கும் ஜென்மப் பகை என்றெல்லாம் ஏதும் கிடையாது. வர்ணாசிரமத்தை முஸ்லிம்களும் ஏற்றுக் கொண்டு விட்டால் 'தீர்ந்தது பகை' என்று மறுநாளே அறிவித்து விடுவார்கள். இன்று இந்துத்துவவாதிகளுக்கு மிகப் பெரும் பிரச்னையாக இருப்பது முஸ்லிம்களே! ஆர்யம் என்றோ பௌத்தத்தை வீழ்த்தி விட்டது. கிறித்துவத்தையும் சாதிப்படுகுழியில் தள்ளியாகி விட்டது. இனி தனித்து விளங்குவது இஸ்லாம் ஒன்றுதான். அதை வீழ்த்தத்தான் இத்தனை முஸ்தீபுகளும்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Anonymous said...

நண்பர் சுவனப்பிரியனுக்கு,

கவனிக்கவும், காரணமாக இருக்கிறது என்று நான் சொல்லவில்லை, மாறாக முன்நிபந்தனையாக இருக்கிறது என்று சொல்லியிருக்கிறேன். அதன் பொருள் இஸ்லாமிய தீவிரவாதம் காரணம் என்பதல்ல, இந்துத்தீவிரவாதம் அதன் மக்களிடம் முன்வைக்கப்படுவதற்கும் ஏற்றுக்கொள்ளச்செய்வதற்கும் இஸ்லாமிய ஒருங்கிணைவும் தீவிரவாதமும் தேவையாயிருக்கிறது. அஃதன்றி வர்க்கமாய் இணைவதே பாட்டாளிகளாய் இணைவதே இந்துமதவெறி பாசிசத்தை ஒழிப்ப‌தற்கான வழி.
மத அடிப்படையில் இணைவது இன்னொரு மத அடிப்படை இணைவைத்தான் துரிதப்படுத்தும். இந்துப்பாசிசம் என்பது வெறும் மதவெறியோடு முடிவதல்ல அது சமூக வெறியையும் கொண்டது. மத மேலாண்மைக்காக அது சமண பௌத்தங்களை அழிக்கவில்லை. வரலாறு நெடுக அது செய்துவந்திருக்கும் கொடூரங்கள் சமூக வேர் கொண்டவை. எனவே அதை மதவெறியாக குறுக்காதீர்கள், அது நீங்கள் நினைப்பதைவிட மிகக்கொடூரம் கொண்டது. இஸ்லாமும் கிருஸ்தவமும் ஏற்கப்படுவதற்க்கு முன்பிருந்தே அதன் பாசிசத்தன்மை வரலாற்றின் பக்கங்களில் பதியப்பட்டிருக்கிறது

தோழமையுடன்
செங்கொடி

suvanappiriyan said...

நண்பர் செங்கொடி!

இந்து தீவிரவாதம் ஒருங்கிணைப்பதற்கு இஸ்லாமும் ஒரு காரணமாக இருப்பது ஒத்துக் கொள்ளக் கூடிய ஒன்று. இகற்காகவெல்லாம் மதத்தை தூரமாக்க முடியுங்களா? மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்திய கதையாகி விடும்.

மேலும் கம்யூனிசம் வேறூன்றி இருக்கும் இடங்களில் இந்துத்வாவின் தாக்கம் மிகவும் குறைவாக இருக்கும். இதற்கு கேரளாவை உதாரணமாகக் கொள்ளலாம். அதை நான் மறுக்கவில்லை.

நீங்கள் சமதர்ம சமுதாயத்தை மதத்தை தூரமாக்கி கொண்டு வர முயற்ச்சிக்கிறீர்கள். நாங்களோ அதே சம தர்ம சமுதாயத்தை இஸ்லாத்தின் மூலம் கொண்டு வர முயற்ச்சிக்கிறோம். வழிகள் இரண்டானாலும் நோக்கம் ஒன்றல்லவா!