Followers

Saturday, March 28, 2009

உலகை ஆளும் மனுநீதி!



ஆப்ரிக்காவில் உள்ள மிகப் பெரிய நாடு சூடான். இந்த நாட்டில் முஸ்லிம்கள், கிறித்தவர்கள், உள்நாட்டு நம்பிக்கைக் கொண்டோர் என பல நம்பிக்கைக் கொண்டோர் வாழ்ந்தாலும் முஸ்லிம்கள்தான் இங்கு பெரும்பான்மையாக உள்ளனர்.

1956 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற சூடானில் அதிக தடவை ராணுவ ஆட்சிதான் நடைபெற்றது. சில தடவை குடியரசு ஆட்சி இருந்தாலும் 18 ஆண்டு காலம் தொடர்ச்சியாக இராணுவ ஆட்சியின் கீழ் இருந்த சூடானில் 1986 ல் தேர்தல் மூலம் அரசு அமைக்கப்பட்டது. அந்த அரசும் பின்னர் கவிழ்க்கப்பட்டது. அதற்குப் பிறகு 1988 ல் சூடானில் ஏற்பட்ட பஞ்சத்தில் 3 லட்சம் பேர் மாண்டனர்.

வறுமையும் பஞ்சமும் இருக்கும் நாட்டில் தீவிரவாதத்திற்கு கொஞ்சமும் பஞ்சமிருக்காது. இந்த இலக்கணத்தின்படி சூடான் அரசுப் படைகளுக்கும் போராளி இயக்கங்களுக்கும் இடையில் எப்போது பார்த்தாலும் உள்நாட்டுப் போர்தான்.

கடைசியாக 2004 ஆம் ஆண்டு சூடான் அரசுக்கும் போராளி இயக்கங்களுக்கும் இடையில் அதிகாரப் பகிர்வு குறித்து மூன்று ஒப்பந்தங்கள் ஏற்பட்டன. இந்த ஒப்பந்தத்தின் விளைவாக சூடானின் மேற்குப் பகுதியான டார்ஃபர் பகுதியிலிருந்து அரபுப் போராளிகளால் 12 மில்லியன் கருப்பு சூடானியர்கள் வெளியேற்றப்பட்டனர். அவர்களை வெளியேற்றிய விவகாரம்தான் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்காகி தற்போது சூடான் அதிபருக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த கைது வாரண்ட் குறித்து கருத்து தெரிவித்த அதிபர் பஷீர் 'சர்வதேச நீதி மன்றத்தின் உத்தரவு தங்கள் நாட்டைக் கட்டுப்படுத்தாது' என்கிறார்.

சூடானில் நடந்தது உள்நாட்டு கலகம். இந்த கலகத்திற்க்காக பஷீருக்கு கைது வாரண்ட் பிறப்பித்த சர்வதேச நீதிமன்றம் இராக், ஆப்கான் உள்ளிட்ட அன்னிய நாடுகள் மீது படை எடுத்து லட்சக்கணக்கான மக்களைக் கொன்று குவித்த அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகளின் தலைவர்களுக்கு கைது வாரண்ட் போடாதது ஏன் என்று உலக மக்கள் ஒருமித்து கேட்கின்றனர்.

மனித உரிமை மீறலுக்காக சூடான் அதிபர் தண்டிக்கப்பட வேண்டியவர் எனில் அவருக்கு முன்பாக முன்னால் அமெரிக்க அதிபர் புஷ் தண்டிக்கப்பட வேண்டியவர் அல்லவா?

வலியவனுக்கு ஒரு சட்டம் எளியவனுக்கு இன்னொரு சட்டம் என்ற நம் நாட்டின் மனு நீதி சட்டம்தான் சர்வதேச சட்டமாக இருக்கிறது என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை.

-நன்றி உணர்வு

No comments: