Followers

Wednesday, June 28, 2006

மொழி வெறி நமக்கு தேவைதானா?

மொழி வெறி நமக்கு தேவைதானா?

'வானங்களையும் பூமியையும் படைத்திருப்பதும், உங்களது மொழிகளும் நிறங்களும் வேறுபட்டிருப்பதும் அவனது அத்தாட்சிகளில் உள்ளது. அறிவுடையோருக்கு இதில் பல சான்றுகள் உள்ளன.' - குர்ஆன் 30 :22

மேற்கண்ட வசனத்தின் மூலம் மொழிகள் வேறுபட்டிருப்பதையும், மனிதனின் நிறங்கள் வேறுபட்டிருப்பதையும் தன்னுடைய அத்தாட்சிகளில் ஒன்றாக இறைவன் கூறுகிறான். இதன் மூலம் நிறங்களை வைத்து மனிதர்களிடையே ஏற்றத் தாழ்வை கற்பிப்பதும், மொழிகளை வைத்து ஏற்றத் தாழ்வு கற்ப்பிப்பதும் கூடாது என்பது விளங்குகிறது.

குர்ஆன் அரபி மொழியில் இருக்கிறது. எனவே அது தேவ பாஷை என்ற அந்தஸ்த்தைப் பெறுமா? கண்டிப்பாக இல்லை. முகமது நபி அரபுகள் மத்தியில் தோன்றுகிறார். அவருக்கு தெரிந்த ஒரே மொழி அரபு மட்டுமே! எனவே குர்ஆன் அரபு மொழியில் இறங்கியது. முகமது நபி தமிழ்நாட்டில் பிறந்திருந்தால் குர்ஆன் தமிழ் மொழியிலேயே அருளப் பட்டிருக்கும்.உலக மக்களுக்கு இறை செய்தியை சொல்லுவதற்கு உலக வழக்கில் உள்ள ஏதாவது ஒரு மொழியில் தான் கொடுத்தாக வேண்டும்.

உதாரணத்துக்கு நமது தேசிய கீதத்தை எடுத்துக் கொள்வோம். ஜன கன மன என்றவுடன் ஒரு வித மரியாதையில் எழுந்து நின்று நாட்டுப் பற்றை எடுத்துக் காட்ட மரியாதை செய்கிறோம். இதனால் வங்காள மொழி சிறந்தது என்றாகி விடுமா? பல மொழிகள் பேசும் நம் நாட்டில், ஏதோ ஒரு மொழியில் தேசிய கீதம் இருக்க வேண்டும் என்று முடிவெடுக்கிறோம். அதே போல் இறைவனின் கட்டளைகளை சொல்வதற்கு கடைசியாக பயன் படுத்தப் பட்டது அரபி மொழி. எனவே தான் குர்ஆன் அரபு மொழியில் இறங்கியது. இதனால் அரபு மோழி மற்ற மொழிகளையெல்லாம் விட சிறந்த மொழி என்று நினைப்தே இஸ்லாத்துக்கு மாற்றமானது.

பள்ளிவாசல்களில் தொழுகைக்கான அழைப்பு ஏன் தமிழில் கொடுப்பதில்லை?

ஒவ்வொரு நாளும் அரபு மொழியில் 'அல்லாஹீ அக்பர்'(இறைவனே பெரியவன்) என்று அரபியில் 'அதான்' அழைப்பு விடப் படுவதை நாம் அனைவரும் கேட்டிருக்கிறோம். இதை ஏன் தமிழில் மொழி பெயர்த்து சொல்லக் கூடாது? என்று கேட்பதும் நியாயமாகத்தான் படுகிறது. முதலில் இஸ்லாம் என்பது உலகம் தழுவிய மார்க்கம் எனபதை நாம் அறிவோம்.ஆப்ரிக்காவிலிருந்து ஒரு முஸ்லிம் தமிழகத்தை சுற்றிப் பார்க்க வருகிறார் என்று வைத்துக் கொள்வோம். தொழுகை நேரம் வந்தவுடன் பள்ளிவாசலில் இருந்து வரும் அழைப்போசையைக் கேட்டவுடன் 'இங்கு ஒரு பள்ளிவாசல் இருக்கிறது' என்று தொழுக சென்று விடுவார்.உலக நாடுகளில் அது கம்யூனிஷ நாடாகட்டும், அல்லது சோஷலிஷ நாடாகட்டும் எங்கு சென்றாலும் நீங்கள் கேட்கும் ஒரே ஒலி இந்த பாங்கோசைதான். இதுவும் நமது தேசிய கீதம் போல் உலக ஒருமைப் பாட்டிற்க்குத் தானே யொழிய அரபி மொழி சிறந்த மொழி என்பதற்காக அல்ல.

முஸ்லிம்கள் அரபியில் மட்டுமே தங்கள் பெயர்களை வைக்கிறார்களே ஏன்?

இஸ்லாத்தில் அரபியில் தான் பெயர் வைக்க வேண்டும் என்று எந்த சட்டமும் இல்லை. சாந்தி, அன்பு, அறிவழகன், முத்து போன்ற அழகிய பெயர்களை முஸ்லிம்கள் தங்களுக்கு வைத்துக் கொள்ள தடையேதும் இல்லை. ஆனால் முருகன், ராமன், கணபதி என்று உருவம் வைத்து வணங்கும் தெய்வங்களின் பெயர்களை வைக்க இஸ்லாம் தடை செய்கிறது.

உதாரணத்திற்கு குமார் என்ற நண்பர் பழைய பெயரிலேயே முஸ்லிம் ஆகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவரை முதலில் சந்திப்பவர்கள் 'குமார் சௌகரியமா?' என்று விசாரித்தவுடன் மனதுக்குள் இவர் செட்டியாரா, கவுண்டரா, தேவரா, நாடாரா, தலித்தா, பிராமணரா? என்ற எண்ணம் ஓடும். சாதி நம் சமூகத்தில் அந்த அளவு புரையோடிப் போய் இருக்கிறது. அதே குமார் தனது பெயரை ரஹீம் என்று மாற்றி விட்டால் ஒரு நொடியில் சாதி எங்கோ சென்று விடுகிறது. எனவே தான் நமது இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் இஸ்லாமியர்கள் அரபியிலேயே பெயர்களை வைத்துக் கொள்கிறார்கள்.

இப்றாகிம், மூஸா போன்ற பெயர்கள் அரபு பெயர்கள் அல்ல. இதை இன்றும் முஸ்லிம்கள் வைப்பதன் மூலம் அரபி அல்லாத பெயர்களை வைப்பதற்கு தடை இல்லை என்று அறியலாம். அரபியில் வைக்கும் பெயர்களில் கூட முஸ்லிம்களில் சிலர் பொருள் புரியாமல் வைத்து விடுகிறார்கள். அப்துல் முனாப், அப்துல் முத்தலிப், அப்துல் முகமது போன்ற பெயர்கள் வைப்பதற்கு இஸ்லாத்தில் தடை உள்ளது.
முனாப், முத்தலீப் போன்றவை அன்றைய அரபிகள் வணங்கி வந்த தெய்வங்களின் பெயர்கள். அப்துல் முனாப் என்றால் முனாபின் அடிமை என்று தமிழில் பொருள் வரும். 'அப்துல் முகமது' என்றால் முகமதின் அடிமை என்று பொருள் வரும் முகமது நபி இறைவனின் தூதர் தானே ஒழிய நாம் அவருக்கு அடிமைகள் அல்ல. அதே போல் அல்லாபிச்சை, மைதீன்பிச்சை என்று தன்னை இழிவு படுத்திக் கொள்வது போல் தோற்றமளிக்கும் பெயர்களையும் வைப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். தன்னை இழிவுபடுத்தும்படி வைக்கும் பெயர்களை மாற்றிக் கொள்ளும் படி முகமது நபி கட்டளை இட்டுள்ளார்.

என்னோடு ஒன்றாக வேலை பார்க்கும் ஹைதராபாத்தியுடன் ஒரு முறை மொழி சம்பந்தமாக சர்ச்சை வந்தது. 'இந்துக்களின் மொழி தமிழ் மொழி. நாங்கள் பேசும் உருது மொழி இஸ்லாமியருக்கு சொந்தமான மொழி' என்று ஏதோ மிகப் பெரிய தத்துவத்தை உதிர்ப்பது போல் பேசினான்.

'மூல மொழிகள் அனைத்துக்கும் தூதரையும் வேதங்களையும் அனுப்பியிருக்கிறேன் என்று குர்ஆனில் இறைவன் கூறுவது உனக்குத் தெரியுமா?' - சுவனப்பிரியன்

'ஆமாம். நானும் படித்திருக்கிறேன்' - ஹைதராபாதி

'உருது மொழி எப்போது உருவானது?' - சுவனப்பிரியன்.

'மொகலாயர்கள் காலத்தில்' - ஹைதராபாதி

'அப்படியானால் உருது மொழிக்கு வேதமோ தூதரோ வந்திருக்கிறார்களா?' -சுவனப்பிரியன்

'அதெப்படி! முகமது நபிதான் கடைசி நபியாயிற்றே! அவருக்கு பிறகுநபி வர முடியாதே!' - ஹைதராபாதி

'ஆதி மொழியான தமிழுக்கு வேதமும், தூதரும் இறைவனிடமிருந்து வந்திருக்கிறார்கள். உன் மொழியான உருதுக்கு அத்தகைய சிறப்பு ஏதும் இல்லை. அப்படியானால் நாம் இருவர் பேசும் தாய் மொழிகளில் யாருடைய மொழி சிறந்த மொழி?' - சுவனப்பிரியன்

இந்த கேள்விக்கு இன்று வரை அவனிடமிருந்து பதில் வரவில்லை. மொழிகளையும் நிறங்களையும் வைத்து உயர்வு தாழ்வு கற்ப்பிக்கும் மனப் பாங்கு என்று மாறுமோ தெரியவில்லை.

'எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கிக் கூறுவதற்காக அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம்.' - குர்ஆன் 14 :4

மேலும் முகமது நபியின் காலத்துக்கு முன்பு அரபுகள் மொழி வெறியின் உச்சத்தில் இருந்தார்கள். அரபி மொழி அல்லாத வேறு மொழி பேசுவோர் அனைவரும் ஊமைகளைப் போன்றவர்கள் என்றனர்.அதாவது அவர்கள் நினைப்பில் மற்ற மொழிகளுக்கு எந்த பொருளும் கிடையாது என்று விளங்கி வைத்திருந்தனர். அந்த நேரத்தில் தான் முகமது நபி பின் வருமாறு பிரசிங்கித்தார்.

'மக்களே! இறைவனை அஞ்சிக் கொள்ளுங்கள்! அரபு மொழி பேசுபவன், அரபு மொழி பேசாதவனைவிட உயர்ந்தவன் இல்லை. அரபு மொழி பேசாதவன் அரபு மொழி பேசுபவனை விட சிறந்தவனும் இல்லை.வெள்ளை நிறத்தவன் கருப்பு நிறத்தவனை விட உயர்ந்தவன் இல்லை அவர்கள் செய்யும் நல்லறங்கள் தான் அவர்களை உயர்த்துகின்றன. இன்று முதல் குலப் பெருமையை என் காலடியில் போட்டு மிதிக்கிறேன்' என்று சொன்னார்.

மேற்கண்ட நபிமொழியின் மூலம் ஒரு மொழியை உயர்த்தியும் மற்றொரு மொழியை தாழ்த்தியும் வாதங்கள் புரிவது இஸ்லாம் தடுத்துள்ளது என்று அறிகிறோம். எனவே உலகில் உள்ள மொழிகள் அனைத்தையும் நேசிப்போம். அதன்மூலம் மனித நேயத்தையும் வளர்ப்போம்.

இறைவனே மிக அறிந்தவன்

என்றும் அன்புடன்

சுவனப்பிரியன்

3 comments:

வஹ்ஹாபி said...

தேவையான பதிவு; பாராட்டுகள்!

திருத்தங்கள்:
\\தொழுகை நேரம் வந்தவுடன் பள்ளிவாசலில் இருந்து வரும் அழைப்போசையைக் கேட்டவுடன் 'இங்கு ஒரு பள்ளிவாசல் இருக்கிறது' என்று தொழுக சென்று விடுவார்.\\
தொழுகை/அழுகை என்ற சொற்களை வினையுடன் ஆளும்போது தொழ/அழ என்றே எழுத வேண்டும்.

'தொழுகத் தொடங்கி விடுவார்' என்பதை அழுகையோடு தொடர்பு படுத்தினால் அழுகத் தொடங்கி விடுவார் என்றாகி விடும்.

\\அரபியில் வைக்கும் பெயர்களில் கூட முஸ்லிம்களில் சிலர் பொருள் புரியாமல் வைத்து விடுகிறார்கள். அப்துல் முனாப், அப்துல் முத்தலிப், அப்துல் முகமது போன்ற பெயர்கள் வைப்பதற்கு இஸ்லாத்தில் தடை உள்ளது.\\ என்பது சரியானது. ஆனால்,

\\அதே குமார் தனது பெயரை ரஹீம் என்று மாற்றி விட்டால் ஒரு நொடியில் சாதி எங்கோ சென்று விடுகிறது.\\ தவறானது. வெறும் ரஹீம் என்று பெயர் வைப்பதற்கும் தடை இருக்கின்றது, அஃது அல்லாஹ்வின் பெயர் என்பதால். அப்துர் ரஹீம் என்று பெயரிடுதலே சரியானதாகும்.

suvanappiriyan said...

வருகை புரிந்து எண்ணங்களை வெளியிட்ட ஆதவன், வஹ்ஹாபி, நெருப்பு(வாவ்..... எழுதும் போதே சுடுகிறது)Abdul rahamn அனைவருக்கும் நன்றிகள் பல.

OK. mozhi veri thevai illai. inimel ella muslim pillaikalukkum antha antha regional language peraye vaikkalaam.regional language-l vaanku othalaam. b'coz Nabikal naayagam mozhi veri koodaathunnu solli irukkaar.
நெருப்பு!

பாங்கு வட்டார மொழிகளில் ஏன் சொல்லப் படுவதில்லை என்பதை பதிவிலேயே விளக்கியிருக்கிறேனே பார்க்கவில்லையா! அடுத்து குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைக்க பெற்றோர் விரும்பினால் அதற்கு இஸ்லாம் தடை சொல்லவில்லை என்றும் விளக்கியிருக்கிறேனே!

suvanappiriyan said...

முகமது நபிதான் முஸ்லிம்களின் ஒரே தலைவர் என்று நான் சொன்னது ஆன்மீக தலைமையை. ஒவ்வொரு நாட்டிலும் அந்தந்த நாட்டின் சூழ்நிலைக் கேற்ப அரசியலில் தலைவர்களை உருவாக்கிக் கொள்ள இஸ்லாம் தடை ஏதும் சொல்லவில்லை. அத்தகைய தன்னலமற்ற தலைமை இதுவரை ஏற்படாதது வருந்தத் தக்கதே!