Followers

Thursday, February 28, 2013

புதுச்சேரியில் அன்று இருந்த சாதிப் பிரச்னைகள்.

நமது நாட்டில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களைப் பார்த்து சில நண்பர்கள் விமரிசனங்களை வைக்கின்றனர். அவர்கள் கூறுவதாவது 'நமது பாரத நாடு பழம் பெருமை வாய்ந்த கலாசாரத்துக்கு சொந்தமானது. இந்த நாட்டில் அருமையான வாழ்வு திட்டம் இருக்க அரபு நாட்டு வாழ்க்கை முறையை நீங்கள் ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்?' என்ற கேள்வி பரவலாக வைக்கப்படுகிறது.

எந்த ஒரு மனிதனும் தனது தாய் நாட்டு கலாசாரத்தை விட்டுக் கொடுக்க முனைய மாட்டான். தனது தாய் தந்தையர் எந்த மதத்தை பின் பற்றி வாழ்கிறார்களோ அதிலேயே நிலைத்திருக்கத்தான் கூடியவரை முயற்சிப்பான். ஏனெனில் ஒருவன் தனது தாய் தந்தையர் மதத்தை விட்டு வேறொரு மதத்திற்கு செல்லும் போது மிகப்பெரிய போராட்டத்தை சந்திக்க வேண்டி வரும். பழைய சொந்தங்கள் அனைவராலும் வெறுக்கப்படுவர். அவன் மதம் மாறிய புதிய மதத்திலும் அவனுக்கு பரிச்சயப்பட்ட நபர்கள் அவ்வளவு சுலபமாகக் கிடைத்து விட மாட்டார்கள். தற்போது சில இயக்கங்கள் இதற்காக ஒரு அமைப்பையே தற்போது உருவாக்கி அவர்களின் பிரச்னைகளை ஓரளவு சமாளிக்கின்றனர். ஆனால் ஒரு ஆயிரம் வருடங்களுக்கு முன்பு இது போன்ற அமைப்புகளெல்லாம் இல்லை. அந்த நேரங்களில் மதம் மாறிய பல நபர்கள் மிகுந்த தொல்லைகளுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பர். இந்த தொல்லைகளை எல்லாம் சகித்துக் கொண்டு ஏன் எங்களின் முன்னோர்கள் இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்? அதற்கான காரணம் என்ன? என்ற கேள்வி எழுவது இயல்பே!

அன்றைய புதுச்சேரியில் இந்து மதம் எந்த அளவு சாதி வேற்றுமைகளால் சிக்குண்டு இருந்தது என்பதை இந்த கட்டுரை மிகத் தெளிவாக விளக்குகிறது. கத்தியை காட்டி இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளச் செய்தனர் என்று பிரசாரம் செய்து வரும் பலருக்கு இந்த கட்டுரையை ஊன்றி படிக்க கேட்டுக் கொள்கிறேன்.

-----------------------------------------

புதுச்சேரி வாழ்சாதிகள்

1778ஆம் ஆண்டு துவங்கி 1792ஆம் ஆண்டு வரையிலான வீராநாயக்கரின் நாட்குறிப்பு புதுச் சேரி வாழ் சாதிகளை அறியப் பெரிதும் உதவுகிறது. மேலும் சாதிகளுக்கிடையே உள்ள தொடர்பு, முரண்பாடுகள் போன்ற செய்திகளும் இடம்பெறு கின்றன. சாதிகளுக்குள் ஏற்பட்ட உட்பூசல்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. வெள்ளாளர், கோமுட்டி, கைகோளர், செட்டி, கருமர், அகம்படையர், முதலி, நாயக்கர், சாடர், பிள்ளை, கவரை, சக்கிலி, இடையர், மேளக்காரர், காசுக்காரர், பவளக்காரர் எனப் பல சாதிகளைப்பற்றிய பதிவுகள் இந்நாட்குறிப்பில் உள்ளன.

இச்சாதிகள் வலங்கை சாதி, இடங்கை சாதி எனவும் பிரிக்கப்பட்டிருந்தன. பொதுவாக வலங்கை சாதியினர் இடங்கை சாதியினரைத் தமக்குக் கீழ்ப் பட்டவர்களாகவே கருதினர். சில நேரங்களில் வலங்கை சாதியினர் பெறும் உரிமைகளை இடங் கையினர் கோரும்போது முரண்பாடுகளும் சச்சரவுகளும் ஏற்படுகின்றன.

நாட்குறிப்பின்படி மேளக்காரர், செட்டி, கம்மாளர், கருமர், சக்கிலி போன்றவர்கள் இடங்கை சாதியினர் என்றும் பிள்ளை, கவரை, கோமுட்டி, கைகோளர், முதலி, அகம்படையர் போன்றவர்கள் வலங்கை சாதியினர் என்றும் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

மேலும் வீராநாயக்கர் மார்ச் மாதம் 2-ஆம் தேதி 1785ஆம் ஆண்டு நாட்குறிப்பில் வலங்கை, இடங்கை சச்சரவைத் தீர்க்கும்படியான பொறுப்பு ஆனந்தரங்கம் பிள்ளையின் தம்பிமகனான ரங்கப்ப திருவேங்கடம் பிள்ளையிடம் கொடுக்கப்பட்டதாகப் பதிவுசெய்கிறார்.

சாதிகளின் நடமாட்ட உரிமையும், மறுப்பும்

பிரெஞ்சுக்காரர்களின் ஆட்சியில் புதுச்சேரி அழகும், பொலிவும் பெற்றது எனலாம். பிரெஞ்சு நாட்டில் உள்ளது போன்ற நேரான, சரியாகப் பராமரிக்கப்பட்ட சாலைகள் இருந்தன. ஆயினும், சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு வரும் சாலை, சாவடித்தெரு, இன்னும் சில தெருக்கள் மட்டுமே பொதுவழிகளாகக் கருதப்பட்டன. மற்ற அனைத்துத் தெருக்களும் சாதியின் பெயரைக்கொண்டு வழங்கப் பட்டன. உதாரணமாக, வெள்ளாளத்தெரு, பிராமணத் தெரு, பள்ளத்தெரு, செட்டித்தெரு, யாதவர் தெரு, கோமுட்டித்தெரு, முதலித்தெரு, கைகோளர் தெரு போன்றவற்றைக் கூறலாம். பெரும்பாலும் மக்கள் அவரவர் சாதியின் தெருக்களிலேயே குடியிருந்தனர்.

ஒரு சாதியினரின் தெருவுக்குள் மற்ற சாதியினர் செல்லும்போது சச்சரவுகள் ஏற்பட்டுள்ளன. குடை யுடன் செல்லும்போதும், திருமண ஊர்வலங்கள் செல்லும்போதும் மற்ற சாதியினரை மதிக்காததாகக் கருதப்பட்டது.

1785ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி நாட் குறிப்பின்படி வரதராச பெருமாள் கோயில் தேர் இடங்கை சாதியினர் தெருவுக்குள் செல்லக் கூடாது என வலங்கை சாதியினர் பெரும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். இதனால் இடங்கை, வலங்கை சாதிகளுக்கிடையே மோதல் ஏற்பட்டது. இப்பிரச்சினை கவர்னர் செனரல் கோசிஜினிடம் கொண்டு செல்லப் பட்டது. இப்பிரச்சினை பெரிதானதால் கவர்னர் ஊர்வலத்தை நிறுத்தும்படி உத்தரவிட்டார்.

1789ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி நாட் குறிப்பில் வலங்கை சாதியினரான யாதவருடைய தெருவில் இடங்கை சாதியினரான திருவம்பல செட்டி மகன் பல்லக்கில் சென்றார். இதற்கு வலங்கை சாதியினர் பெரும் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

வலங்கை சாதியினர் இடங்கை சாதியினரின் தெருவுக்குள் செல்லும்போது அதிகமான சச்சரவு ஏற்படவில்லை. இவ்வாறு குடிகள் சாதியின் பெயரால் நடமாட்ட உரிமையை இழந்திருந்தனர்.

பல்லக்கு உபயோகம்

பதினெட்டாம் நூற்றாண்டில் வாகனப் போக்கு வரத்து மிகவும் குறைவாகக் காணப்பட்டது. பெரும் பாலான பொதுமக்கள் நடந்தே தங்கள் பயணத்தை மேற்கொண்டனர். சிலர் பல்லக்கு, குதிரை, மாட்டு வண்டி போன்றவற்றையும் பயன்படுத்தினர்.

இந்நாட்குறிப்புகள் சில, பல்லக்கு உபயோ கத்தைப் பதிவுசெய்கின்றன. 1785ஆம் ஆண்டு மே 14ஆம் தேதி இடங்கை சாதியைச் சேர்ந்த தேவரா செட்டி என்பவர் திருமண ஊர்வலத்தில் பல்லக்கு உபயோகித்தார். இதனை வலங்கை சாதியினர் கடுமையாக எதிர்த்தனர். கவர்னர் கோட்டேனஸ் இப்பிரச்சினையை விசாரிக்கையில், பல்லக்கு உபயோகிப்பது தங்களது உரிமை என்றும் இதனை இடங்கையர் உபயோகிக்கக்கூடாது என்றும் பிரச்சினை செய்தனர். இறுதிவரை சுமூக தீர்வு ஏற்படாத காரணத்தால், கவர்னர் அனைத்துப் பல்லக்கு ஊர்வலத்தையும் நிறுத்த உத்தரவிட்டார்.

பின்பு 1791ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் தேதி வலங்கை சாதியினரான முத்துவிஜய திருவேங்கிடம் பிள்ளையின் மகன் திருமண ஊர்வலம் பதிவு செய்யப் பட்டுள்ளது. திருமணம் வெகு விமரிசையாக பச்சைப் பல்லக்கில் யானையின் மேல் அமர்ந்து சகல தெருக் களிலும் ஊர்வலம் கொண்டு செல்லப்பட்டது. ஒரு சச்சரவும் இன்றி ஊர்வலம் நடந்ததாக நாட்குறிப்பு கூறுகிறது. இது வலங்கையாருக்குக் கொடுக்கப் பட்ட உரிமை இடங்கையாருக்கு மறுக்கப்பட்டதைத் தெரிவிக்கிறது.

வெள்ளைக் குடை சச்சரவு

நாட்குறிப்பு வெள்ளைக்கொடி, குடை, உப யோகத்தில் வலங்கை, இடங்கையாருக்கிடையே சச்சரவு ஏற்பட்டதைப் பதிவு செய்துள்ளது. 1788 ஜனவரி 14 ஆம் தேதி நாட்குறிப்பில் இடங்கை சாதி யினரான பொன்னப்ப செட்டியின் மகன் ஒரு பட்டுக்குடையும், அழகிய மணவாள செட்டி மகன் ஒரு குடையும் பிடித்துக்கொண்டு வலங்கை சாதி யினர் தெருவில் சென்றனர். இதைப் பார்த்த மகா நாட்டார்கள் மிகவும் கோபம் கொண்டனர். மறு நாள் 30 வலங்கையார் கவர்னர் செனரல் கனுவே யிடம் முறையிட்டனர். இதன்படி கனுவே இரு வரையும் சிறையிலடைத்தார்.

மற்றொரு சமயம் வலங்கையினரான சுப்புராய பிள்ளை என்பவர் குடைபிடித்துக்கொண்டு செட்டித் தெருவுக்குள் சென்றார். அப்போது செட்டிகள் செனரலிடம் முறையிட, அவர் விசாரித்தார். சுப்புராய பிள்ளை செனரலிடம் தன் தவறுக்கு மன்னிப்பு கேட்டவுடன் மன்னிக்கப்பட்டுக் கூட்டம் கலைக்கப்பட்டது. இவ்வாறு குடை உபயோகத்தில் சச்சரவு ஏற்பட்டுள்ளது.

நகரா

நகரா என்பது பெருமுரசு வகைகளுள் ஒன்று. இந்த வாத்தியம் தற்போதும் சில இந்துக் கோயில் களிலும் இஸ்லாமியப் பள்ளிகளிலும் காணப்படுகிறது. இதன் ஓசை இனியதாக இல்லாவிட்டாலும், ஒலி அதிக தூரம் வரை செல்கிறது. இதனால் நகரா செய்தி அறிவிக்கும் கருவியாகச் செயல்பட்டது.

1785ஆம் ஆண்டு ஜூலை 29ஆம் தேதி நாட் குறிப்பில் நகரா வாத்தியத்தைப் பற்றிய செய்தி உள்ளது. வலங்கை, இடங்கை சாதியினருக்குத் தனித்தனியே கோயில்கள் உள்ளன. இதில் இடங்கை சாதியினர் கோவிலில் நகரா முழங்கும் சப்தம் கேட்டதும் வலங்கை சாதியினர் திரண்டு வந்து தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். ‘நகரா வாத்தியத்தை இயக்கும் உரிமை வலங்கை சாதி யினராகிய எங்களுக்கு மட்டும்!’ என சச்சரவு செய்தனர். செனரல் சுலியாக் இப்பிரச்சினையை விசாரிக்கையில் எந்தவொரு தீர்வும் ஏற்படாததால், நகரா வாசிக்க இருதரப்பினர்களின் கோவில்களிலும் தடைசெய்தார்.

சாதித்தலைவர்

நாட்குறிப்பின் வாயிலாக ஒவ்வொரு சாதிக்கும் சாதித்தலைவர் இருந்ததை அறியமுடிகிறது. இவர்களில் இடங்கை சாதித்தலைவர் நாட்டார் எனவும், வலங்கை சாதித்தலைவர் மகாநாட்டார் எனவும் அழைக்கப்பட்டனர். புதுச்சேரியில் பதினெட்டு மகாநாட்டாரும் பல நாட்டாரும் இருந்ததாகச் செய்திகள் உள்ளன. அந்தந்தச் சாதி மக்கள் இணைந்து தங்கள் தலைவர்களைத் தேர்வு செய்தனர். தலைமை துபாசி இவர்களைப் பதவியில் அமர்த்துவார்.

தங்களது சாதிக்குள் ஏற்படும் சச்சரவுகளை சாதித்தலைவர் தீர்த்துவைப்பார். வரிவசூல் செய்து கம்பெனியாருக்கு அளிப்பது போன்ற பணிகளையும் இவர்கள் செய்துவந்தனர்.

இவர்கள் தங்களது சாதி உரிமைகளை நிலை நாட்டுவதில் பெரும் கவனம் கொண்டிருந்தனர். வலங்கையராகிய மகாநாட்டார்கள் வெள்ளைக் கொடி, குடை உபயோகித்தல், நகரா வாசித்தல், ஊர்வலங்கள் செல்லுதல் போன்றவற்றில் தங்களது சாதியப் பெருமையை நிலைநாட்டுவதில் பெரும் பங்கு வகித்தனர்.

1785ஆம் ஆண்டு மார்ச் 21ஆம் தேதி நாட் குறிப்பில் கவர்னர் குத்தான்சோ மற்றும் மகா நாட்டார்களுக்கிடையிலான சந்திப்பு பதிவு செய்யப் பட்டுள்ளது. மகாநாட்டார்கள் பரிசுகொடுத்து கவர்னரை வாழ்த்தி மகிழ்வித்த செய்தியும் இடம்பெற்றுள்ளது.

1791 ஆகஸ்டு 23ஆம் தேதி கடைவீதிகளில் கடையடைப்பு நடந்தது. இதற்கான காரணத்தை உடனே அறிந்து பதிலளிக்குமாறு சாதித் தலைவர்கள் உத்தரவிடப்பட்டனர்.

1791 டிசம்பர் 1ஆம் தேதி நாட்குறிப்பில் மேயர் சவாரியேர் சாதித்தலைவர்களை முனிசிபலிலே கூடிவரச் செய்தனர். புதுச்சேரி மக்களின் பொது நலனுக்காக பிரெஞ்சு அரசு ரூ.16,000 செலவு செய்த தாகவும், அதனால் இதில் பாதிச் செலவுப் பணத்தைப் புதுச்சேரி மக்களிடம் வசூலித்துத் தரும்படியாகவும் உத்தரவிடப்பட்டனர். இவ்வாறு மக்களின் அனைத்து நடவடிக்கைகளிலும் சாதித்தலைவர்கள் பங்கு பெற்றனர்.

குழுநியமனம்

வீராநாயக்கர் நாட்குறிப்பில் 1787 ஆம் ஆண்டு டிசம்பர் 14 தேதியில் அரசால் நியமிக்கப்பட்ட குழுவைப்பற்றிய செய்தி உள்ளது. இதில் சிவில் நீதிமன்றத் தலைவர், தமிழ்ச் சாதிய முறை ஐரோப்பியர் களுக்கு விளங்காத காரணத்தால் எட்டு பேர் கொண்ட குழுவை நியமித்தார். இக்குழுவில் தமிழரும், தமிழ்க் கிறிஸ்தவர்களும் இருந்ததாகப் பதிவு உள்ளது. சாதிய முறை, சாதியக் கட்டமைப்பு, சாதிகளின் பாரம்பரிய உரிமைகள் ஆகியவற்றைப் பற்றிய அறிக்கையினைக் கொடுக்கும்படியாகச் செய்தி உள்ளது.

இவை பிரஞ்சுக்காரர்கள் சாதிய வேறுபாடு களைக் களைய முயலாமல் சாதிகளின் முன்பிருந்த வழக்கப்படி செயல்பட நிலைப்பட்டனர் என்பது தெளிவாகிறது.

தேவரடியார்கள்

தேவராயர் என்றால் இறைப்பணிக்காகத் தங்களை அர்ப்பணித்தவர் எனப்படும். கோவிலில் நடனமாடுவது, விளக்கு ஏற்றுவது, பாடல்கள் பாடுவது என இருந்தனர். பின் நாட்களில் இவர்களின் செல்வாக்கு குறைய வீட்டு விழாக்கள், பண்டிகை நாட்கள், பிரஞ்சுக்காரர்களை வரவேற்று ஆடுவது, பாடுவது, கலை நிகழ்ச்சிகள் நிகழ்த்துவது இவர்கள் வழக்கமானது.

நாட்குறிப்பில் இவர்களைப் பற்றிய பதிவுகள் அதிகம் உள்ளன. வலங்கை இடங்கை என்னும் சாதிப்பிரிவு தேவரடியார்கள் மத்தியிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

1788 ஜூலை 16 ஆம் தேதி நாட்குறிப்பில் வலங்கையிடங்கை தாசிகளுக்கிடையேயான சச்சரவு பதிவு செய்யப்பட்டுள்ளது. ராசப்பஐயரின் மகள் திருமண வரவேற்பு மேளதாளங்கள், வண்ண விளக்குகள், தாசிகளின் நடன நிகழ்ச்சிகளுடன் வெகு சிறப்பாக நடந்தது. செனரல் கனுவேயும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது இடங்கை சாதிப் பிரிவைச் சேர்ந்த ஒரு தாசி மகுடி வாசித்துக் கொண்டு சற்று நேரம் ஒரு பாம்பை ஆட்டிக் கொண்டு மறுபடி தன் கழுத்தில் பாம்பைச் சுற்றிக்கொண்டு நாட்டியம் செய்தாள். இது அனை வரும் பாராட்டும்படியாக இருந்தது. இது வலங்கை தாசிகளிடையே கோபத்தை ஏற்படுத்தியது. அவர்கள் உடனே கிளம்பிச் சென்று விட்டனர். பின் நிகழ்ச்சி நடத்துவோர் அனைவரும் இடங்கை தாசிகளை அனுப்பிவிட்டு வலங்கை தாசிகளை அழைத்து நாட்டியம் ஆடச் சொன்னார்கள். இவ்வாறு இடங்கை, வலங்கை சாதிப் பிரிவு தேவரடியார் மத்தியிலும் இருந்தது தெளிவாகிறது.

இவ்வாறு, பதினெட்டாம் நூற்றாண்டின் ஒரு முக்கிய ஆதாரமான இரண்டாம் வீராநாயக்கர் நாட்குறிப்பு சாதியைக் குறித்த பல தகவல்களைத் தெரிவிக்கிறது. புதுச்சேரி வாழ்சாதிகள், வலங்கை, இடங்கை சாதிகள், சாதிகளுக்கிடையேயான சச்சரவுகள், சாதித்தலைவர்கள் மற்றும் அவர்களின் பணிகள், சாதியின் பெயரில் தெருக்கள், தாசி களிடையே சாதிய உணர்வு, சாதிகளுக்காக உரிமைகள் மற்றும் தடைகள் போன்றவற்றை அறிய முடிகிறது. இவ்வாறு இரண்டாம் வீராநாயக்கர் நாட்குறிப்பு ஒரு சிறந்த முதல்நிலை ஆதாரமாகச் செயல்படுகிறது.

இரண்டாம் வீராநாயக்கர் நாட்குறிப்பை முன்வைத்து...
பா.ரூத்மெர்சி ஹெலினா
நன்றி:கீற்று

4 comments:

Anonymous said...

ஷாலி says:
February 27, 2013 at 8:17 pm

//இந்தியாவின் செலவில் படித்துவிட்டு இன்று வெள்ளையனுக்கு உழைப்பவர்களை விட வீரசாவர்க்கர் நிச்சயம் சிறந்த தேசபக்தர் தான்……..//

திரு.சான்றோன் சொன்னால் அது சரியாகத்தான் இருக்கும்.அதை யாரும் மறுக்க முடியாது.இந்தியாவில் படித்தால் இந்தியாவுக்குத்தான் உழைக்க வேண்டும்.அப்ப இங்கிலாந்தில் படித்தால் இங்கிலீஷ்காரனுக்குத்தானே உழைக்கணும்.அதைத்தானே நம்ம தலைவர் வீர்சாவர்க்கர் செய்தார்.அவர் இங்கிலாந்திலே படித்தபோதுதான் “அபினவ் பாரத் சங்கம்” ஆரம்பித்தார்.பிறகு இந்தியா வந்து தப்புப் பண்ணி ஜெயிலுக்கு போனபின்புதான் அவருக்கு ஞானோதயம் வருகிறது.படித்த நாட்டுக்கு உழைக்கவேண்டும் என்று உடனே கடிதம் எழுதுகிறார்.”என்னை விடுவித்தால் நானும் எனது இளைஞர்களும் உங்கள் அரசுக்குப் பணியாற்றி உங்கள் முன்னேற்றத்திற்குப் பாடுபடுவோம்.” வீர் சாவர்க்கர் நிச்சயம் சிறந்த தேச பக்தர்தான் இங்கிலாந்துக்கு.இதைத்தான் சான்றோன் சொல்கிறார் என்பதை நாம் புரிந்து கொள்கிறோம்.இதோடு விஷயம் முடியவில்லை. சாவர்க்கரின் தம்பி மருமகளும் காந்தியை கொன்ற கோட்சேவின் மகளுமான ஹிமானி சாவர்க்கர் 2003 ல் பெரிய மாமனாரின் “அபினவ் பாரத் சங்கத்தை” மீண்டும் ஆரம்பித்து பொறுப்பேற்கிறார்.இவருடன் சாத்வி பிரயாக்சிங்க் தாக்கூர் என்ற பெண்மணியும் சேர்ந்துகொள்கிறார்.இவர்களுடன் ராணுவத்தில் லெப்டினன்ட் பதவியிலிருந்த புரோகித் ஸ்ரீ காந்த் பிரசாத் என்பவரும் ராணுவ வெடி மருந்துகளை திருடிவந்து,2006 ல் மாலேகான் முஸ்லிம் வழிபாட்டுத்தலத்தில் குண்டு வைக்கிறார்கள்.இதில் 37 பேர் கொல்லப்படுகிறார்கள். 125 பேர் படுகாயம் அடைகிறார்கள்.இப்பொழுது பிடிபட்டு கோர்ட்டுக்கும் ஜெயிலுக்கும் அலைகிறார்கள்.உத்தமர் காந்தியைக் கொன்ற கோட்சேவின் உத்தம புத்திரியும்,சாவர்க்கரின் மருமகளுமான ஹிமானி சாவர்க்கருக்கும் நல்ல ஒரு சான்றிதழை சான்றோன் கொடுத்தால் சந்தோசமாக இருக்கும்.முஸ்லிம்களை சாவடிப்பதுதான் சாவர்க்கரின் குடும்பத்தினர் வேலை போல் தெரிகிறது.அபினவ் பாரதத்திற்கு இதெல்லாம் அவசியம்தான்.

நல்லா செய்யட்டும்.நாடு நாசமா போகட்டும்.

Anonymous said...

ஷாலி says:
March 1, 2013 at 3:36 pm

அன்பு நண்பர் ஸ்ரீ க்ருஷ்ணகுமார் அவர்கள் தம் மனம் சரி கண்டு ஏற்றதை ஒளிக்காமல் வார்த்தையில் வடிக்கிறார்.

//ஸ்ரீ சாவர்க்கர் அவர்கள் சமர்ப்பித்த மன்னிப்புக் கடிதம் அவர் சரித்திரத்தில் ஒரு கறை.அவர் வீரத்திற்கு இழுக்கு.ஏற்றுக்கொள்கிறேன்.//

இப்படி மன நேர்மையுடன் கருத்துக்களமாடுபவர்களை இன்றைய நாட்களில் காண்பதரிது. எதிர்க்கருத்து எல்லாவற்றையும் மூர்க்கமாகத்தாக்கி வீழ்த்துவதும் தனிநபர் தாக்குதலில் திசை திருப்புவதும்தானே இன்றைய நடைமுறை.உங்கள் நேர்மைக்கு என் பாராட்டுக்கள்.!
சாவர்க்கரை நீங்கள் உயர்வாகப் புகழ்வதாலோ.நான் தாழ்வாக விமர்சிப்பதாலோ, உலகத் தராதர தராசு தடுமாறப்போவதில்லை.

//ஏசுபிரானை சரித்திரத்தின் பாற்பட்டு ஏற்க இயலாது.//

என்று கூறும் நீங்கள் சாவர்க்கரின் மறு பக்கத்தை சரித்திர உண்மையாக நாம் கூறும்போது வெறுப்பின் வெளிப்பாடக தாங்கள் கருதுவது சரியல்ல.யாரையும் வெறுத்து எவரும் இவ்வுலகில் சாதிக்கப்போவதில்லை.

// ஹிந்துக்களை சைவர் மற்றும் வைஷ்ணவர் என பரிசோதித்து வைஷ்ணவரை விட்டுவிட்டு தமிழ் பேசும் சைவர்களை மட்டும் கொலை செய்தார்கள் சிங்களவர்கள் என நம்ப எந்த முகாந்திரமும் இல்லை.//

தாங்கள் கூறுவது உண்மைதான் நண்பரே! நீங்கள் புத்தனை பெருமாள் அவதாரமாக பார்த்து,சிங்கள பெருமாள் பக்தர் ராட்சச ராஜ பக்சேவிற்கு அரசு மூலமாக ஆதரவினை அள்ளி வழங்கினீர்கள். ஆனால் புத்த பக்தர் ராஜ பக்சே திருப்பதி பெருமாளை ஸ்ரீ வெங்கடாஜலபதியாக கருதி வழிபடவில்லை.திருப்பதி புத்தனாக கருதியே வழிபாடு செய்கிறார்.எனவே இந்திய ஹிந்துக்கள் மீது அவருக்கு ஓட்டும் இல்லை உறவுமில்லை.ஆகவே தமிழ் பேசும் அனைத்து ஹிந்துக்களும் முள்ளிவாய்க்காலில் கொள்ளி வைக்கப்பட்டார்கள். இன்று வதை முகாம்களில் சிங்கள சிப்பாய்களுக்கு தமிழ் பெண்கள் சதை பங்கிடப்படுகிறது.தேவைப்படும் உரிய ஆலோசனையை புலியை எலியாக்கிய பெருமாள் பக்தர் சு.சாமி நேற்றுக் க்கூட கொழும்பு சென்று கொடுத்து வந்தார். காஷ்மீர் பிராமண பண்டிட் அகதிகளுக்காக அழுது கண்ணீர் வடிக்கும் பிராமண அன்பரே! உங்கள் தமிழ் சூத்திர,பஞ்சமர்,சண்டாள சகோதர ஹிந்துக்கள் உடல் இழந்து,உறவு அறுந்து, உடமை இழந்து பஞ்சைப் பாராரீகளாக கண்ணீர் வற்றி வறண்டு கிடக்கிறார்களே! அவர்களுக்காக நீங்கள் நீலிக் கண்ணீராவது வடித்ததுண்டா?
நீங்கள் நீட்டி முழக்கும் ஹிந்து சனாதன தர்மம் யாருக்கு பாடு படுகிறது? தேவ பாஷை பேசும் கனபாடிகள் சமூகத்திற்கு மட்டும் தானா? நீச பாஷை சூத்திர ஹிந்துக்களுக்கு இல்லையா?


//ஸ்ரீ வீர சாவர்க்கர் இறந்தது சமணம் மற்றும் மற்றைய ஹிந்து சமய வழி முறைகளில் ஏற்கப்பட்ட உயிர்த் தியாகமே.தற்கொலையால் அல்ல.//

நண்பரே! ஹிந்து சமய சடங்குகளில் நம்பிக்கையில்லாமல் நாத்திகராகவே வாழ்ந்தவர் சாவர்க்கர்.தன் உயிரை தானே போக்கிக்கொண்டவர்.அவர் இறந்ததற்க்குப்பின் அவரை ஹிந்துவாக மதம் மாற்றுவது நீங்கள்.மிசினரிகள் கூட உயிருள்ளவர்களை மட்டுமே மதம் மாற்றுகிறார்கள் இறந்தவர்களையே மதம் மாற்றும் திறமை உங்களிடம் உள்ளது.
நான் உங்களுக்கு ஓர் உதவி செய்கிறேன்.இனி எவரேனும் சாவர்க்கர் மரணம் பற்றிக்கேட்டால்,” அந்தக்கால தமிழ் மன்னர்கள் மரபுப்படி, கோப்பெருஞ்சோழன்,பிசிராந்தையார் போன பாதையில் “வடக்கிருந்து” உயிர் துறந்தார்.” என்று கூறி விடுங்கள்.பிரச்சினை முடிந்தது.”அரை டவுசர்” ஒரு அடையாள குறியீடாக சொல்லப்பட்டதுதானே தவிர அதில் எள்ளளவும் எள்ளல் இல்லை. தொடர்ந்து எழுதுங்கள்.

Anonymous said...

முன்மாதிரி முதல்வர்.........!!

ஆடம்பர வாழ்வு நடத்தும் முதல்வர்கள் நிறைந்த நம் நாட்டில் இப்படியும் ஒரு முதல்வர் இருக்கிறார் என்பது ஆச்சர்யம் தான்.

சமீபத்தில் நடந்த தேர்தலில் திரிபுராவில் மொத்தமுள்ள 60 இடங்களில் 50 இடங்களை வென்று மார்க்ஸிட் கம்யூனிஸ்டு கட்சியை ஆட்சி கட்டிலில் நான்காம் முறையாக அரியணை ஏற்றியுள்ள திரிபுரா முதல்வர் மாணிக் சர்கார் தான் இந்தியாவின் மிக ஏழை முதல்வர் ஆவார்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன் நடந்த தேர்தலின் போது மாணிக் சர்காரின் சொத்து மதிப்பு வெறும் 16,000 ரூபாய்கள் தான். தற்போது அவரின் சொத்து மதிப்பு 10,800 ரூபாய்கள் மட்டுமே. அனேகமாக இந்தியாவில் பதவியில் இருந்த போது சொத்து மதிப்பு குறைந்த ஒரே முதல்வர் இவராக மாத்திரமே இருக்க முடியும்.

கட்சி விதிகளின் படி தன் சம்பளத்தை கட்சிக்கு கொடுத்து விடும் மாணிக் சர்காருக்கு கட்சி மாதம் 5,000 ரூபாய் வாழ்வாதாரத்துக்காக கொடுக்கிறது. மேலும் இந்தியாவில் சொந்தமாக காரோ அல்லது வீடோ இல்லாத ஒரே முதல்வர் இவராக தான் இருக்க முடியும்.

மொபைல் போன் கூட சொந்தமாக வைத்திராத மாணிக் சர்கார் சிவப்பு விளக்கு பொருத்தப்பட்ட காரையும் உபயோகிப்பதில்லை. 2010ல் அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்ற அவரது மனைவியின் சொத்து மதிப்பு 46,000 ரூபாய்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தன் துணிகளை தானே துவைக்கும் மாணிக் சர்கார் தன்னுடையை எளிமையான வாழ்வுக்கு மனைவி பெறும் பென்ஷன் பணமே போதுமானது என்று கூறுகிறார். உண்மையில் இவர் முன்மாதிரி முதல்வர் தான்.

-mohamed umar

Anonymous said...

ஷாலி says:
March 1, 2013 at 7:45 pm

என்ன? ஸ்ரீ க்ருஷ்ணஜி, மன்னிப்பு கடிதத்தில் மீண்டும் மனம் மாறிய மைந்தன் ஆக மாறிவிட்டீர்களே! அன்று அரசவை பொற்கொல்லனின் பேச்சைக்கேட்டு பாண்டியன் நெடுஞ்செழியன் மதிமயங்கி வீழ்ந்தான்.இன்று நீங்களும் நமது பாண்டியனார் பேச்சைக்கேட்டு பல்டி அடித்துவிட்டீர்களே!

// அன்றைய அந்தமான் வாசம் எப்படி என்று குறைந்தபட்சம் கூட படிக்காதவர்கள் இன்று கருத்து சொல்வது எளிது.//

//மிகவும் அருங்கருத்து வழங்கிய ஸ்ரீ பாண்டியன் அவர்களுக்கு நன்றி!//

திரு.பாண்டியன் கருத்துப்படி அன்றைய வெள்ளை அரசாங்கத்தில் இந்திய சிறைச்சாலைகளை விட மிககொடுமையான சிறைச்சாலை அந்தமான் தீவாந்திர சிறை என்று தெரிகிறது.அதைப்பற்றி இன்று கருத்து சொல்வது சரி அல்ல.அந்தமான் சிறையைப்பற்றி அன்றே 1908-1912 சொல்லப்பட்ட கருத்தை திரு.க்ருஷ்ண-பாண்டியன் ஏற்றுக்கொள்வார்கள் தானே. உண்மை நிலவரத்தைப் பார்ப்போம்.
ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் வழக்கறிஞர்.வெள்ளை அரசுக்கு விரோதமாக மக்களை தூண்டியதாக கைது செய்யப்படுகிறார்.இவருக்கு இரட்டை ஆயுள் 40 வருட கடுங்காவல் தண்டனை வழங்கப்படுகிறது.கோவை சிறைச்சாலையில் அடைக்கப்படுகிறார்.சிறையில் பல கொடுமைகள் அவருக்கு செய்யப்படுகிறது.அக்கொடுமைகளை தாங்கிக் கொள்ள முடியாமல் படாதபாடு படுகிறார். இறுதியில் பிரிட்டிஷ் அரசுக்கு மனுப்போடுகிறார்.என்ன மனு? வீர சாவர்க்கரின் மன்றாட்ட மன்னிப்பு மனுவா? இல்லை அய்யா இது வேறு மனு. தன் தண்டனைக்கேற்ப தன்னை அந்தமான் தீவாந்திர சிறைக்கு அனுப்புமாறு வைஸ்ராய்க்கு எழுதுகிறார். தன் கணவர் சிறையில் அனுபவிக்கும் கொடுமைகளை கண்டு வேதனையுற்ற மனைவி மீனாட்சி அம்மாள், தன் கணவரை தமிழ்நாட்டு சிறைகளில் வைத்து கொடுமைப்படுத்துவதை விட அந்தமானுக்கே அனுப்புமாறு இங்கிலாந்து மன்னருக்கே மனுச்செய்தார். ஒரு முறை சிறை அதிகாரி அவரிடம் வந்து,”தாங்கள் சிறை அலுவலராக பொறுப்பேற்றுக்கொண்டால் தண்டனைக் காலம் குறையும் இன்னும் பல நன்மைகள் கிட்டும் என்று கூறியும் அதை ஏற்க மறுத்தார்.இந்த சுதந்திர போராட்ட மாவீரன் யார் தெரியுமா? அவர்தான் சிறையில் செக்கிழுத்த செம்மல்.கப்பலோட்டிய தமிழன் வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை வ.உ.சி. அந்தமான் சிறையை விட்டு வெளியேற மன்னிப்பு மனுப்போட்டவர்களை தாங்கிப்பிடிக்க இன்று ஒரு கூட்டம் உள்ளது.ஆனால் அந்தமான் சிறைக்குப்போக மனுப் போட்ட வீரத் தம்பதிகளை மறந்து போன, மரத்துப்போன தமிழர்கள் கூட்டம் இங்கு மட்டுமே உள்ளது.இப்பொழுது அனைவருக்கும் புரிந்திருக்கும் திரு.பாண்டியன் கூறும் அன்றைய அந்தமான் வாசம். நாம் இன்று ஸ்ரீமான். க்ருஷ்ண-பாண்டியனின் சுதந்திர ஹிந்துஸ்தானில் வாழ வேண்டியிருப்பதால் ஸ்ரீ வீர சாவர்க்கரின் மனுவை ஏற்றுக்கொள்வோம். அடிமை இந்தியாவில் எழுதிய வ.உ.சி மனுவை மறுதளிப்போம். “வீரம்..வீரம்…மேலும் வீரம்..கொஞ்சம் வாழ்க்கை”.அதுதான். பூஜ்ய ஸ்ரீ வீர சாவர்க்கர். இந்த வீரத்தின் விலை நிலம் தந்த பரிசுதான் மாலேகான் கூரையில் கொள்ளிவைத்த கோட்சேவின் உத்தம புத்திரி ஹிமானி சாவர்க்கர்.