Followers

Saturday, February 14, 2009

காதலர் தினமும் சில கேலிக் கூத்துகளும்!


காதலர் தினமும் சில கேலிக் கூத்துகளும்!

காதலர் தினமான இன்று உலகம் முழுவதும் காதலர்கள் தங்களின் ஜோடிகளோடு வலம் வந்தவண்ணம் உள்ளனர். இது தேவையான ஒரு விழாவா! நமது நாட்டுக்கு இது தேவைதானா என்ற சர்ச்சை ஒரு புறம் இருக்கட்டும்.

நமது இந்துத்வா நண்பர்கள் அதாவது பஜ்ரங் தள் உஜ்ஜயினியில் ஒரு ஜோடியை பிடித்து அடிக்கவும் ஆரம்பித்து விட்டனர். அவர்கள் அழுது கொண்டே 'நாங்கள் இருவரும் காதலர்கள் அல்ல. இந்த பெண் என்னுடைய உடன் பிறந்த சகோதரி. நாங்கள் மாணவர்கள். ஆராய்ச்சிக்காக உஜ்ஜயினிக்கு வந்துள்ளோம்.' என்றனர். கேட்பதற்குதான் யாருமில்லை.

சிவசேனாவும் தன் பங்குக்கு ஆக்ராவில் ஒரு காதல் ஜோடியை பிடித்து காதலனின் தலை முடியை மழித்து பெண்ணை அடிக்கவும் செய்தனர். மற்றொரு ஜோடியை பிடித்து தோப்புக்கரணம் போட வைத்தனர்.

மற்றொரு ஜோடியை வழி மறித்து பஜ்ரங்தள் ராக்கி கட்டும் காட்சியைத்தான் மேலே பார்க்கிறீர்கள். காதலர் தின கார்ட் விற்பனை செய்த கடையையும் அடித்து நொறுக்கி இருக்கிறார்கள்.

இந்து மதத்தின் கொள்கைகளை விளக்க எத்தனையோ வழிகள் இருக்க காதலர்களை இம்சைபடுத்தும் இந்த செயல் சரிதானா! இந்த அதிகாரத்தை இவர்களுக்கு யார் கொடுத்தது. தவறாகவே இருந்தாலும் கண்டிக்கும் முறை சரிதானா?

'காமசூத்ரா' வை வழங்கியது இதே நமது நாடுதானே! கோவில்களில் உள்ள சிற்பங்கள் நமக்கு சொல்லும் செய்திகள் இதை விட அதிகமல்லவா! அதை பக்தி கண் கொண்டு பார்ப்பதில்லையா? பிறகு யார் மேல் இந்த இந்துத்வவாதிகளுக்கு கோபம்? விடை சொல்வோர்தான் யாருமில்லை.

1 comment:

suvanappiriyan said...

தமிழகத்தில் எவ்வித அசம்பாவித சம்பவங்களும் இன்றி, காதலர் தினத்தை உற்சாகமாக காதலர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். காதலர்கள் கூடிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு செய்யப்பட்டதால், பெரிய அளவில் எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை. "விழியில் நுழைந்து, இதயம் கலந்து, உயிரில் கலந்த உறவே' என்று, தமிழர்களின் மனதில் மெல்லிய உணர்வாக நுழைந்து, இமயமலையாய் எழுந்து நிற்கும் காதலுக்கும், வீரத்திற்கும் நெருங்கிய தொடர்புண்டு.
"டிவி' சேனல்கள் காட்டிய காதல் : "எல்லை' தாண்டாத காதலும், எல்லைகளை கடந்த வீரமும் தான் தமிழர்களின் பாரம்பரிய அடையாளம். காலப்போக்கில், சினிமா, "டிவி' சேனல்கள் காட்டிய "காதலை' பார்த்து, இளைய தலைமுறை காதலர்கள், பொது இடங்களில் கட்டிப்பிடிப்பதும், முத்தம் கொடுப்பதும் தான் காதல் என்று நினைத்துவிட்டனர். உண்மையான காதலர்கள் கூட பொது இடங்களில், மேற்கண்ட விஷயங்களை செய்யத் தவறுவதில்லை.அதனால், சில ஆண்டுகளாக காதலர் தினத்திற்கு, பல்வேறு அமைப்புகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. நேற்று நடந்த காதலர் தினத்திற்கும் எதிர்ப்பு மிக பலமாகவே இருந்தது.
பாதுகாப்புடன், "காதல்' : எதிர்ப்புகளை சந்தித்தே பழக்கப்பட்ட காதலர்களும், அதைப் பற்றி கவலைப்படவில்லை.வழக்கம்போல, சென்னை மெரீனா, சாந்தோம் கடற்கரை மற்றும் பூங்காக்கள், மதுரையில் அழகர் கோவில் மலை, திருப்பரங்குன்றம், கோவையில் வ.உ.சி., பூங்கா, மருதமலை, திருச்சியில் மலைக்கோட்டை, முக்கொம்பு, புதுச்சேரி ஆரோவில் கடற்கரை உள்ளிட்ட இடங்களில் காதலர்கள் குவிந்தனர்."பொது இடங்களில் கூடும் காதலர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும். அவர்களுக்கு இடையூறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, தமிழக டி.ஜி.பி., அறிவித்திருந்தார். அதனால், காதலர் கூடும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அதனால், அவர்கள் வழக்கத்தை விட உற்சாகமாக, போலீஸ் பாதுகாப்புடன், "காதல்' செய்தனர்.
குறிப்பாக, சென்னை கடற்கரையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். அங்கு வைக்கப்பட்டிருந்த ஒலிபெருக்கிகளில் அறிவிப்புக்கு பிறகு, சினிமா காதல் பாடல்களை ஒலிபரப்பி காதலர்களை உற்சாகப்படுத்தினர். "அத்துமீறும்' காதலர்களை வேடிக்கை பார்ப்பதற்காக ஏராளமானோர் கடற்கரையில் குவிந்தனர்.சென்னை கடற்கரை கண்ணகி சிலை முன், இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த அனுமன் சேனா அமைப்பினரும், கலெக்டர் அலுவலகம் முன் சிவசேனா அமைப்பினரும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டம் நடத்திய 50 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவையில், இந்திய மாணவர் பேரவையினர், "ஆதலினால் காதல் செய்வீர்' என்ற புத்தகத்தை காதலர்களுக்கு இலவசமாக வழங்கினர். கன்னியாகுமரியில், நாய்களுக்கு திருமணம் செய்துவைக்கப்பட்டது.
தனிமை கிடைக்காமல் அவதி: விழுப்புரம் மாவட்டம் செஞ்சிக்கோட்டையில் தனிமையில் இருக்க ஏராளமான இடங்கள் உள்ளன. இது போன்ற சூழ்நிலை காதலர்கள் விரும்பும் வகையில் இருப்பதால் சாதாரண நாட்களிலும் இங்கு அதிகமாக வருகின்றனர்.காதலர் தினமான நேற்று சென்னை, புதுச்சேரி, வேலூர், திருவண்ணாமலை பகுதியில் இருந்து ஏராளமான காதல் ஜோடிகள் வந்திருந்தனர். இவர்கள் மட்டுமின்றி வெளிநாட்டில் இருந்து சுற்றுலா வந்திருந்த காதல் ஜோடிகளும் அதிகளவில் வந்திருந்தனர்.சனிக்கிழமையான நேற்று பள்ளி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை என்பதால், வழக்கத்தை விட சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வந்திருந்தனர். சேலம், தர்மபுரி, வேலூர், காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட இடங்களில் இருந்து பள்ளி மாணவர்கள் ஆயிரக்கணக்கில் வந்திருந்தனர். சுற்றுலாத்துறை சார்பில் நேற்று செஞ்சிக்கோட்டையில் பொங்கல் விழா நடத்தினர். இதை காண உள்ளூர் மக்களும் அதிகம் வந்திருந்தனர். ஏராளமான சுற்றுலாப் பயணிகள் மற்றும் கடுமையான போலீஸ் பாதுகாப்பினால் செஞ்சிக் கோட்டையில் நேற்று காதலர்களுக்கு தனிமை கிடைக்காமல் போனது.
கோவை குற்றாலத்திற்குள் தடை: கோவை மாவட்டம், சிறுவாணி மலையடிவாரத்தில் கோவை குற்றாலம் அமைந்துள்ளது. சிறந்த பொழுதுபோக்கு இடம் என்பதால் தினமும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். காதலர் தினமான நேற்று, கோவை குற்றாலத்தில் காலை முதலே கூட்டம் குறைவாகவே இருந்தது. பெரும்பாலான காதல் ஜோடிகளை வனத்துறையினர் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. நீர் வீழ்ச்சிக்கு செல்ல பைக்குகளில் வந்த ஒரு சில தீவிர காதல் ஜோடிகளையும் வனத்துறையினர் செக்-போஸ்ட் அருகே மடக்கிப் பிடித்து திருப்பி அனுப்பினர்.

காதலர்களை தேடிய இ.ம., கட்சியினர்: காதலர் தின கொண்டாட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, காதலர்களை தேடி வ.உ.சி., பூங்காவுக்குள் நுழைய முயன்ற, இந்து மக்கள் கட்சியினர் ஆறு பேர் கோவையில் கைது செய்யப்பட்டனர்.கோவையில், "வ.உ.சி., பூங்கா, ரேஸ்கோர்ஸ் மற்றும் கோவில் வளாகங்களில் காதலர்கள் தென்பட்டால், பெற்றோர் வரவழைக்கப்பட்டு, பொதுமக்கள் முன்னிலையில், அவர்களுக்கு கட்டாய திருமணம் செய்யப்படும்' என இந்து மக்கள் கட்சி(தமிழகம்) எச்சரிக்கை விடுத்திருந்தது.இந்து மக்கள் கட்சி(தமிழகம்) மாநில செயலர் செந்தில்குமார் தலைமையில், நேற்று காலை காதலர் தின எதிர்ப்பு கோஷமிடவும், காதலர்களை பிடிக்கவும், வ.உ.சி., பூங்கா முன் கூடினர். இவர்களை ரேஸ்கோர்ஸ் போலீசார் கைது செய்தனர்.

தாலியுடன் வந்த இந்து முன்னணியினர்: சுற்றுலாப் பகுதியான வைகை அணைக்கு வரும் காதலர்களுக்கு திருமணம் செய்து வைப்பதற்காக கையில் மஞ்சள் கயிறு தாலியுடன் வந்த, இந்து முன்னணி, ஆண்டிபட்டி ஒன்றிய செயலர் பாண்டியராஜன், பா.ஜ., மாவட்ட மகளிர் அணி நிர்வாகி ராணி உட்பட எட்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆற்றில் சாம்பல் கரைப்பு: காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, நெல்லையில் பா.ஜ.,வினர் தாமிரபரணி ஆற்றில் சாம்பல் கரைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட பொதுச் செயலர் குற்றாலநாதன், கார்த்திக் நாராயணன், இந்து முன்னணி உடையார் உள்ளிட்டோர், காதலுக்காக தற்கொலை செய்து கொண்டவர்களின் நினைவாக வாழ்த்து அட்டைகளை எரித்து, அதன் சாம்பலை வண்ணார்பேட்டை தாமிரபரணி ஆற்றில் கரைத்து மலர்களை தூவினர். காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போஸ்டர் ஒட்டி அதற்கு மாலை அணிவித்தனர்.

சிவசேனா ஆர்ப்பாட்டம்: சென்னை கலெக்டர் அலுவலகம் முன் சிவசேனா அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.பிரபாகரன் தலைமை வகித்தார். ஆணுறைகளையும், கருத்தடை மாத்திரைகளையும் கையில் வைத்துக் கொண்டு, இவையெல்லாம் கலாசார சீர்கேட்டின் அடையாளங்கள், இவற்றையெல்லாம் ஒழிக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர். காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் துண்டு பிரசுரங்களையும் வினியோகம் செய்தனர்.

-Dina Malar