Followers

Friday, February 03, 2012

சினிமாப் பிரியன் சுவனப்பிரியனானது எவ்வாறு?

எனது இளமைக்காலங்களில் ஒரு சினிமாப் பைத்தியமாகவே இருந்தேன். எங்கும் எதிலும் சினிமாவைப் பற்றிய எண்ணமே எனது மனதுக்குள் ஓடிக் கொண்டிருக்கும். இதனால் வீட்டில் என் தாயாரிடம் நிறைய அடி வாங்கியதுண்டு. படிக்கும் காலங்களில் சலங்கை ஒலி என்ற படத்தை ஒரே தியேட்டரில் மூன்று முறை தினமும் சென்று பார்த்தேன் எனறால் எனது வெறி எந்த அளவு இருந்திருக்கும் என்று யூகித்துக் கொள்ளுங்கள். இந்த நிலையில்தான் சவூதி அரேபியாவுக்கு வேலை நிமித்தமாக பயணம் மேற்கொண்டேன். இங்கு வந்தும் வீடியோ மூலமாக தினமும் படமே கதி என்று இருந்த நிலையில்தான் வெள்ளிக்கிழமை பத்ஹா என்ற ஏரியாவுக்கு செல்ல நேர்ந்தது. ரியாத்தில் வேலை செய்யும் வெளிநாட்டவர் வாரா வாரம் சந்தித்து கொள்ள மெயின் சிட்டியான பத்ஹாவுக்கு வருவது வழககமான ஒன்று.

மாலை நேர தொழுகைக்கான நேரமும் வந்தது. சவுதி சட்டப்படி தொழுகை நேரத்தில் வியாபார கடைகள் மூட வேண்டும் என்ற சட்டம் இருப்பதால் அனைத்து கடைகளும் மூடப்பட்டது. அந்த நேரம் பிலிப்பைன் நாட்டவர் ஒன்று கூடும் இடத்துக்கு அருகில் அழைப்பு வழி காட்டல் மையம் ஒன்று இருந்தது. அதன் அருகில் உள்ள பள்ளியில் தொழுது விட்டு அந்த டென்டில் என்ன நடக்கிறது என்பதைப பார்ப்பதற்காக நானும் நண்பரும் உள்ளே சென்றோம்.




உள்ளே நுழைந்தவுடன் அங்கு பெரும்பாலும் பிலிப்பைன் நாட்டவர் குர்ஆனை ஓதக் கற்றுக் கொள்வதும், தொழுகை எப்படி தொழுவது என்று கற்றுக் கொள்வதுமாக ஆர்வமுடன் உள்ளதை நோட்டமிட்டேன். இவர்கள் அனைவரும் புதிய முஸ்லிம்கள் என்ற செய்தி என்னை மேலும் ஆச்சரியத்துக்குள்ளாக்கியது. முஸ்லிம் தாய் தந்தைக்கு பிறந்து வளர்ந்த என்னை விட நேற்று முஸ்லிமான பிலிப்பைன் நாட்டவர் அதீத ஈடுபாடோடு உள்ளதை நினைத்துக் கொண்டே வீடு வந்து சேர்ந்தேன்.

அதன் பிறகு வாரா வாரம் இந்த டென்டுக்கு வருவதை வழக்கமாக்கிக் கொண்டேன். அதன் பிறகு அங்குள்ள சவுதிகளும் பிலிப்பைனிகளும், சைனீஸ்களும் பழக்கமாயினர். சொந்த வீட்டைப்போல இந்த டென்டை(கூடாரத்தை) பாவிக்க தொடங்கினேன். தூக்கம் வந்தால் இந்த டெண்டிலேயே தூங்கி விடுவேன். பசி எடுத்தால் சாப்பாடு எந்த நேரமும் தயார். எனவே அதற்கும் குறைவில்லை. இஸ்லாத்தை தெரிந்து கொள்வதற்காக 4 மாத கோர்ஸூகளை பல மொழிகளிலும் இங்கு கற்றுக் கொடுக்கிறார்கள். நான் ஆங்கில பிரிவில் சேர்ந்து கொண்டு 4 மாத கோர்ஸையும் முடித்தேன். சான்றிதழ்களும் பரிசுப் பொருட்களும் தந்தனர். புதிதாக இஸ்லாத்தை ஏற்கும் பிலிப்பைன் நாட்டவருக்கு இஸ்லாமிய அடிப்படைகளை சொல்லிக் கொடுக்கும் பொறுப்பும் எனக்கும் மற்றும் நண்பர்களுக்கும் தரப்பட்டது.

அதோடு சவுதி இளைஞர்களும் ஆர்வத்தோடு இங்கு வந்து புதிய முஸ்லிம்களுக்கு குர்ஆன் ஓத கற்றுக் கொடுக்கும் காட்சியும் நம்மை ஆச்சரியப்பட வைக்கும். இவர்களுக்கு இருககும் வசதிக்கு தங்களின் நேரத்தை எப்படி எப்படியெல்லாமோ கழிக்கலாம். ஆனால் மார்க்கக் கல்வியை கற்றுக் கொடுக்கும் ஆவலில் சம்பளம் வாங்காமல் பணி புரியும் இந்த இளைஞர்கள் உண்மையில் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

இந்த நேரததில்தான் நண்பர் ஒருவர் மூலமாக பி.ஜெய்னுல்லாபுதீனின் ஆடியோ கேசட்டுகள் பல தலைப்புகளில் கிடைக்கப் பெற்றது. இரவு நேரங்களில் அமைதியான சூழலில் தினம் ஒவ்வொரு கேசட்டாக கேட்க ஆரம்பித்தேன். தெளிவு பிறந்தது. தமிழகத்தில் இருக்கும் போது ஐந்து வேளை தொழுகை மாத்திரமே இருக்கும். குர்ஆனை விளங்கி ஓத வேண்டும் என்ற ஆவல் இப்பொழுதுதான் வர ஆரம்பித்தது.



இந்த கூடாரத்தின் தொடர்பால் அமெரிக்க பிரசாரகர் யூசுப் எஸ்டை சந்தித்து கைகுலுக்கி பேசவும் முடிந்தது. அதே போல் உலக பணக்காரர்களில் ஒருவரான இளவரசர் தலாலின் சகோதரருடன் கைகுலுக்கி பேசும் வாய்ப்பும் கிடைத்தது. இளவரசர் தலாலுக்கு சமமாக மதிக்கப்படுபவர் அவரது சகோதரரும்.

இந்த கூடாரத்தில் ஒரு மனிதன் இறந்து விட்டால் எப்படி குளிப்பாட்டி எவ்வாறு உடலில் துணியை சுற்றி அடக்கம் செய்ய வேண்டும் என்ற பாடம் செய்முறையாக ஒரு நபரை படுக்க வைத்து செய்து காண்பிக்கப்படுகிறது. இஸ்லாத்தின் ஒவ்வொரு செயல்களும் எவ்வாறு செயல்படுத்துவது என்பதை மினி தியேட்டர் மூலமாக பாடம் எடுக்கிறார்கள். எதற்க்கெடுத்தாலும இது போன்ற வேலைகளை எல்லாம் மார்க்க அறிஞர்கள்தான் செய்ய வேண்டும் என்ற நிலையை மாற்றி அனைவரும் மார்க்க அறிஞர்களாக மாற வேண்டும் என்ற நிலையை கொண்டு வருவதற்காகவே இது போன்ற பயிற்சிகளை நடத்துகின்றனர். அதாவது புரோகிதத்தை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இது போன்ற பயிற்சிகள் நடத்தப்படுகிறது.

பெரும் பெரும் கம்பெனிகள் இலவசமாக உணவு, குளிர்பானங்கள், தண்ணீர், விலையுயர்ந்த பரிசுப் பொருட்களை இது போன்ற கூடாரங்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். புதிதாக இஸ்லாத்தை ஏற்கும் நபர்களுக்கு இவை எல்லாம் பகிர்ந்தளிக்கப்படுகிறது. இது போன்ற அழைப்பு வழி காட்டுதல் மையம ஒவ்வொரு நகரத்திலும் அரசு செலவால் நடத்தப்படுகிறது. எங்கு நல்லது நடந்தாலும் அங்கு மூக்கை நுழைக்கும் அமெரிக்கா 'இது போன்ற கூடாரங்களை தடை செய்யுங்கள். இது தீவிரவாதத்தை வளர்க்கிறது' என்ற கோரிக்கையை சவுதி அரசுக்கு வைத்தது. இவர்களின் கோரிக்கையை சவுதி அரசு ஏற்கவில்லை. இதற்கு ஆதாரத்தை கேட்டது சவுதி அரசு. ஆதாரத்தை தர முடியாமல் கடைசியில் மூக்குடைபட்டது அமெரிக்கா.



அதே போல் இரண்டு பெருநாள் விடுமுறைகளிலும் மூன்று நாட்கள் தொடர்ந்து விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும். பல நாட்டவரும் வயது வித்தியாசம் பாராமல் கலந்து கொள்வர். வெல்பவர்களுக்கு விலையுயர்ந்த பரிசுகள் கிடைக்கும். முஸ்லிம் அல்லாதவர்களும் இங்கு பெறுமளவில் கலந்து கொண்டு பரிசுகளை தட்டிச் செல்வர். பெரும் கம்பெனிகள் இதன் செலவுகளை ஷேர் செய்து கொள்கின்றன. ஒருக்கால் இதைப் பார்த்துதான் 'தீவிரவாதிகள் பயிற்சி' என்று அமெரிக்கா ஓலமிட்டதோ தெரியவில்லை.

இது போன்ற விளையாட்டுப் போட்டிகளை தமிழ்நாட்டில் பண்டிகை நாட்களில் நாம் கூட அறிமுகப்படுத்தலாம். இதற்கு மாற்று மத சகோதரர்களையும் பார்வையாளர்களாக அழைத்து நமது அன்பை பகிர்ந்து கொள்ளலாம். நம் நாட்டில் இரண்டு பெருநாள் தொழுகையிலும் காலை டிபன், மதியம் பிரியாணி. அடுத்து மாலை நேரங்களில் இளைஞர்கள் தியேட்டரையும் பெண்கள் தைக்காலுக்கு சென்று தர்ஹா வழிபாட்டில் மூழ்குவதும் சிலரின் வழக்கமாக இருக்கிறது. இது போன்ற விளையாட்டுப் போட்டிகள் அவர்களின் ஆர்வத்தை ஆக்கபூர்வமான வழிகளில் திருப்பி விட ஏதுவாகும்.

ஒரு மனிதன் நேர்வழியை தேர்ந்தெடுக்க இறைவனின் கிருபை தேவைப்படுகிறது. அடுத்து அவனின் சுற்று சூழல் சீரிய முறையில் அமைந்தால்தான் அந்த நேரிய வழி தொடர்கதையாகிறது. அந்த வகையில் நமது வழியை சீரிய முறையில் கொண்டு செல்ல பல வழிகளிலும் உதவி வரும் அந்த ஏக இறைவனுக்கே புகழ் அனைத்தும்.

'இறைவா! எனக்குக் கல்வியை அதிகப்படுத்துவாயாக!'

-குர்ஆன் 20:114

'நாம் நாடியோருக்குத் தகுதிகளை உயர்த்துவோம். ஒவ்வொரு அறிந்தவனுக்கு மேல் அறிந்தவன் இருக்கிறான்,'
-குர்ஆன் 12:76

அவர்கள் மன்னிப்புத் தேடுபவர்கள்: இறைவனைப் புகழ்பவர்கள்: நோன்பு நோற்பவர்கள்: ருகூவு செய்பவர்கள்: ஸஜ்தாச் செய்பவர்கள்: நன்மையை ஏவுபவர்கள்: தீமையைத் தடுப்பவர்கள்: இறைவனின் வரம்புகளைப் பேணிக் கொள்பவர்கள்: இத்தகைய நம்பிக்கைக் கொண்டோருக்கு முஹம்மதே நற்செய்தி கூறுவீராக!'
-குர்ஆன் 9:112

27 comments:

ரஹீம் கஸ்ஸாலி said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)...
நல்லதொரு அனுபவ்ம் கிடைத்திருக்கிரது உங்களுக்கு....இன்னொரு விஷயம் தெரியுமா?
சிராஜ் திருமணத்தில் பி.ஜெ.அவர்கள் கலந்து கொண்டிருக்கிறார்.

Seeni said...

nalla anupavam!

Aashiq Ahamed said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

சுப்ஹானல்லாஹ்..அருமையான, உணர்வுப்பூர்வமான பகிர்வு.

ஜசாக்கல்லாஹ்..

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம்! சகோ கஸ்ஸாலி

// நல்லதொரு அனுபவ்ம் கிடைத்திருக்கிரது உங்களுக்கு....இன்னொரு விஷயம் தெரியுமா?
சிராஜ் திருமணத்தில் பி.ஜெ.அவர்கள் கலந்து கொண்டிருக்கிறார்.//

அப்படியா! நல்லது. எனது திருமண நேரததில் பிஜேக்கு எங்கள் ஊரில் பயங்கர எதிர்ப்பு. எனவே பிஜேயை கூப்பிடும் திட்டத்தை தள்ளி வைத்தோம். மாலை போடாமல் ஊர்வலம் இல்லாமல் எனது திருமணமும் நடந்தது. அதற்கே ஊரில் சிறிது சலசலப்பு இருந்தது.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

சகோ சீனி!

//nalla anupavam!//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம்! சகோ ஆஷிக்!

//சுப்ஹானல்லாஹ்..அருமையான, உணர்வுப்பூர்வமான பகிர்வு.

ஜசாக்கல்லாஹ்..//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

ஸலாம் சகோ.சுவனப்பிரியன்,
(மாஜி சினிமாப்பிரியன்? :-))
தலைப்பு 'நச்'.

எனக்கும் ஒரே நாளில் நான்கு ஷோ பார்த்த சினிமாவெறி எல்லாம் ஒரு காலத்தில் (1993) இருந்தது. இப்போது ஒரு ஷோ பார்த்தே வருஷக்கணக்காகி விட்டது. சுத்தமாக சினிமாவில் ஆர்வமே இல்லை.

அப்புறம்,
சவூதி வந்தவர்களுக்கு ஒவ்வொருவருக்கும் மறக்கவியலாத 'தாவா சென்டர்' அனுபவங்கள் நிச்சயமாக இருக்கும். எனக்கும்... பரிசு, சான்றிதழ், புத்தகம்... என்று நிறைய உண்டு..!

நல்லதொரு அனுபவ பகிர்வு. நன்றி சகோ.

Adirai Iqbal said...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோ . மிக அருமையான பதிவு

suvanappiriyan said...

சலாம் சகோ முஹம்மது ஆஷிக்!

//எனக்கும் ஒரே நாளில் நான்கு ஷோ பார்த்த சினிமாவெறி எல்லாம் ஒரு காலத்தில் (1993) இருந்தது. இப்போது ஒரு ஷோ பார்த்தே வருஷக்கணக்காகி விட்டது. சுத்தமாக சினிமாவில் ஆர்வமே இல்லை.//

ஆஹா...நீங்களும் நம்ம குரூப்தானா! நீங்கள் சொல்வது போல் தற்போதெல்லாம் சினிமா பார்ப்பதில் ஆர்வம் சுததமாக இல்லை. சமீபத்தில் பார்த்த படமே ஏழாம் அறிவு. அந்த அளவுதான் எனது ஆர்வம். ஆர்வமுடன் பார்ப்பது போல் நம்மவர்கள் படமும் எடுப்பதில்லை.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

சகோ அதிரை இக்பால்!

//அஸ்ஸலாமு அலைக்கும் சகோ . மிக அருமையான பதிவு//

வருகைக்கும் கருத்துககும் நன்றி!

G u l a m said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

நெகிழ்வூட்டும் அனுபவம்....

பகிர்ந்தமைக்கு ஜஸாகல்லாஹ் கைரன் சகோ

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம்! சகோ குலாம்!

//நெகிழ்வூட்டும் அனுபவம்....

பகிர்ந்தமைக்கு ஜஸாகல்லாஹ் கைரன் சகோ//

வருகைக்கும் கருத்தைப் பதிந்தமைக்கும் நன்றி!

Jaleela Kamal said...

அஸ்ஸலாமு அலைக்கும்

மிக அருமையான பகிர்வு தலைப்பும் அழகாக இருக்கு

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம்! சகோ ஜலீலா கமால்!

// மிக அருமையான பகிர்வு தலைப்பும் அழகாக இருக்கு//

வருகைக்கும் கருத்தைப் பதிந்தமைக்கும் நன்றி!

suvanappiriyan said...

Thiru kannan!

//Where there is a creation there should be a creator... . Without the creator there is no creation. So...?'//

நல்லா இன்னொரு தரம் அழுத்தி சொல்லுங்க கண்ணன். இந்த டார்வின் மாமா ரசிகர்கள் பண்ற ரவுசு தாங்க முடியல. :-(

சிராஜ் said...

சலாம் சகோ சுவனப்பிரியன்,

இன்று இஸ்லாமிய சித்தனை நிரம்பப்பெற்ற சகோதர சகோதரிகள் அனைவருக்கும் இது போன்ற அனுபவங்கள் நிறைய இருக்கும். நான் திருச்சியில் படிக்கையில் ஒரே நாளில் 3 வெவ்வேறு திரையரங்குகளில் டிக்கெட் ரிசர்வ் செய்து பார்த்த அனுபவங்கள் நிறைய உண்டு. உங்கள் பதிவு கல்லூரி வாழ்க்கையை நினைவூட்டியது. பஹிர்விர்க்கு நன்றி.

இன்று தீவிர இஸ்லாத்தை சொல்லும் அனைவரும் கடந்த காலங்களில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாக இருந்தவர்களே. அப்படி பட்ட நம்மைப் போன்றவர்களை உண்மையின் பக்கம் திருப்பிய அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும். யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தமிழகத்தை பொறுத்த வரை சகோ P .J அவர்களின் பங்கு இந்த விசயத்தில் மகத்தானது.

எங்கள் இறைவா!!!!! நேரான பாதை தெளிவான பின்பு, எங்களை வழி தவறியவர்களாக ஒரு போதும் ஆக்கி விடாதே.

சிராஜ் said...

/* இன்னொரு விஷயம் தெரியுமா?
சிராஜ் திருமணத்தில் பி.ஜெ.அவர்கள் கலந்து கொண்டிருக்கிறார். */

இல்லை கஸாலி. PJ அண்ணன் எங்க வீட்டுக்கு வரவில்லை. நான் வரதட்சணை இல்லாமல், எழிய முறையில் திருமணம் செய்திருந்தாலும், ஊர் மக்களுடன் இணைந்தே திருமணம் செய்தேன். மாலை எதுவும் போடவில்லை என்றாலும், நாம் ஆமீன் சொல்லவில்லை என்றாலும் "அல்லாஹும்ம அல்லி...." ஓதப்பட்டது. இதை சகோ PJ அவர்களிடம் சொல்லிவிட்டேன். அதனால் அவரும், பாக்கர் அண்ணனும் என் வீட்டிற்கு வர வில்லை.

அன்று TNTJ வின் புதுக்கோட்டை மாவட்ட பொதுக்குழு அறந்தாங்கியில் நடப்பதாக இருந்தது. ஆனால் என்னுடைய திருமணத்திற்கு சகோதரர்கள் வர வேண்டும் என்பதற்காக அதை நமது ஊருக்கு மாற்றினார்கள். உண்மையில் இந்த விசயத்தில் நமது மாவட்ட சகோதரர்கள் என்மீது அளப்பரிய அன்பையே காட்டினார்கள். அதற்காக அவர்களுக்கு என்றென்றும் நன்றி சொல்ல நான் கடமைப்பட்டுள்ளேன்.

எனது திருமணம், TNTJ பொதுக்குழு, அன்று இரவு பொதுக்கூட்டம் என்று அந்த நாள் மறக்க முடியாத நாள். எல்லாப் புகழும் இறைவனுக்கே.

Nasar said...

ம்..... அனுபவங்கள் பேசுது .....
உள்ளது உள்ளபடி ,
மறைக்காமல் உரைத்தீர் .
பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ

suvanappiriyan said...

சகோ நாசர்!

//ம்..... அனுபவங்கள் பேசுது .....
உள்ளது உள்ளபடி ,
மறைக்காமல் உரைத்தீர் .
பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

சலாம் சகோ சிராஜ்!

//இன்று தீவிர இஸ்லாத்தை சொல்லும் அனைவரும் கடந்த காலங்களில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாக இருந்தவர்களே. அப்படி பட்ட நம்மைப் போன்றவர்களை உண்மையின் பக்கம் திருப்பிய அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும். யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தமிழகத்தை பொறுத்த வரை சகோ P .J அவர்களின் பங்கு இந்த விசயத்தில் மகத்தானது.

எங்கள் இறைவா!!!!! நேரான பாதை தெளிவான பின்பு, எங்களை வழி தவறியவர்களாக ஒரு போதும் ஆக்கி விடாதே.//

உங்கள் பிரார்த்தனை பலிக்கட்டும். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Ganesan said...

நண்பர் சுவனபிரியன்,

//Where there is a creation there should be a creator... . Without the creator there is no creation. So...?'//

//நல்லா இன்னொரு தரம் அழுத்தி சொல்லுங்க கண்ணன். இந்த டார்வின் மாமா ரசிகர்கள் பண்ற ரவுசு தாங்க முடியல. :-(//

தாங்கள் Richard Dawkins அவர்களின் "The blind watchmaker" படித்ததுண்டா?

suvanappiriyan said...

திரு கணேசன்!

//தாங்கள் Richard Dawkins அவர்களின் "The blind watchmaker" படித்ததுண்டா?//

இல்லை. நேரமும் அந்த புத்தகமும் கிடைக்கும் போது அவசியம் படிக்கிறேன். அதில் உள்ள கருத்தை சுருக்கமாக சொல்லுங்களேன்.

ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) said...

மாஷா அல்லாஹ். சொல்ல வேண்டிய கருத்துகளை நேராக, நேர்மையாக தெளிவாக சொல்லி உள்ளீர்கள்.

அல்லாஹ் உங்களுக்கு ஈருலகிலும் நன்மையையே நாடுவானாக.

Ganesan said...

// அதில் உள்ள கருத்தை சுருக்கமாக சொல்லுங்களேன்.//

"Where there is a creation there should be a creator" என்ற கருத்துக்கான பதிலை தான் ரிச்சர்ட் டாவ்கின்ஸ் இந்த புத்தகத்தில் சொல்லி உள்ளார். சொல்ல போனால் இந்த முழு புத்தகமே இந்த கருத்தை பற்றியது தான். இந்த கருத்தில் உள்ள அனுமான தவறை (இறைவன் என்ற ஒன்று தான் creater என்ற அனுமான தவறு) நூல் ஆசிரியர் அழகாக விளக்கி இருப்பார். சுருக்கமாக சொல்வதானால் Natural selection தான் blind creator என்று டாவ்கின்ஸ் இதில் நிறுவுவார். யாருக்கெல்லாம் "Where there is a creation there should be a creator" என்ற சிந்தனை எழுகிறதோ அவர்கள் அவசியம் படிக்க வேண்டிய ஒரு அருமையான புத்தகம் இது. அதனால் தான் இந்த நூலை பற்றி சொன்னேன்.

பாத்திமா ஜொஹ்ரா said...

சுப்ஹானல்லாஹ்..அருமையான, உணர்வுப்பூர்வமான பகிர்வு.

suvanappiriyan said...

சகோ ஃபாத்திமா ஜொஹ்ரா!

//சுப்ஹானல்லாஹ்..அருமையான, உணர்வுப்பூர்வமான பகிர்வு.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Anonymous said...

நண்பா. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

நன்றி
யாழ் மஞ்சு