Followers

Sunday, October 26, 2008

உயிரைப் பற்றி சில ருசிகரத் தகவல்கள்!

உயிரைப் பற்றி சில ருசிகரத் தகவல்கள்!

நம் உடலின் உள் உயிர் இருந்தால் பெயர் சொல்லி அழைக்கும் மனித இனம், உடலை விட்டு உயிர் பிரிந்தால் வெறும் பிணம் என்றே அழைப்பதைப் பார்க்கிறோம். இந்த உயிரைப் பற்றிய சில ருசிகரத் தகவல்களை சகோதரர் பி.ஜெய்னுல்லாபுதீன் விடுதலை ஏட்டுக்கு பதிலாக உணர்வு இதழில் எழுதி வருகிறார். அதில் சிலவற்றை இப் பதிவில் தருகிறேன்.

உயிரைப் பற்றி ஆத்திகம் என்ன சொல்கிறது?

உயிர் என்பது இறைவனிடமிருந்து நேரிடையாக வழங்கப்படுவதும் மரணத்தின் போது இறைவனிடம் திரும்பக் கொண்டு செல்லப் படுவதுமாகிய முற்றிலும் புலனுக்கு எட்டாத பொருள் என இறை நம்பிக்கையாளர்கள் குறிப்பாக இஸ்லாமியர்கள் நம்புகின்றனர்.

அனால் நாத்திகம் இதை வன்மையாக மறுக்கிறது. கடவுளின் உள்ளமையை முற்றிலுமாக மறுத்ததைப் போன்று உயிரின் உள்ளமையை நாத்திகத்தால் முற்றிலுமாக மறுக்க முடியவில்லை. புலனுக்கு எட்டாத ஏனைய பொருட்களுக்கு இல்லாத ஒரு சிறப்பான வாய்ப்பை மனித உயிர் பெற்றுள்ளதே அதற்குக் காரணமாகும்.

ஆம்! புலனுக்கு எட்டாத ஏனைய பொருட்கள் நமக்கு வெளியே இருக்கும் போது உயிருள்ள ஒவ்வொரு மனிதனையும் 'உயிர்' எனும் ஒன்று இருப்பது உண்மையே என ஒப்புக் கொள்ளும்படி ஒவ்வொருவரின் பகுத்தறிவும் அவர் மீது நிர்பந்தம் செலுத்துகிறது.

இந்த நிர்பந்தத்தை மீற முடியாமல் நாத்திகம் அதைப் பெயரளவிற்கு ஒப்புக் கொண்டு பிரச்னையைச் சமாளிக்க முயற்சி செய்கிறது. உயிர் இருப்பதை ஒத்துக் கொண்டு அதே நேரத்தில் புலனுக்கு எட்டாத உலகை மறுக்க வேண்டுமாயின் உயிர் என்பது முற்றிலும் புலனுக்கு உட்பட்ட ஒரு பொருள் எனக் கூற வேண்டி வரும்.

ஆனால் அந்தத் தந்திரமும் எடுபடாது. ஏனெனில் உயிர் என்பது புலனறிவுக்கு உட்படாத ஒன்று. உயிரைக் கண்ணால் காண முடியாது, நாவால் சுவைக்க முடியாது. கைகளால் தொடவும் முடியாது. எனவே உயிர் ஐம்புலன்களுக்கும் புலப்படாத பொருளாகும் என்பதற்கு இதற்கு மேல் விளக்கம் தேவையில்லை.

இவ்வாறு உயிரைப் பற்றிய பிரச்னையில் இருதலைக் கொள்ளியாக சிக்கிக் கொண்ட நாத்திகம் அதிலிருந்து தப்பித்துக் கொள்ள கையாண்ட தந்திரம் இதுதான்.

ஆணின் விந்தனுவும் பெண்ணின் கரு முட்டையும் இணைந்து கருவுற்ற முட்டையாக மாறுகிறது. இவை யாவும் உயிருள்ளவைகளே! எனவே மனிதனைத் தோற்றுவிக்கும் கருவுற்ற முட்டை உயிருள்ளதாக இருப்பதால் அதிலிருந்து தோன்றும் மனிதக் குழந்தைக்கு உயிர் இருப்பது இயல்பு. இதிலிருந்து கருவுற்ற என்ற வாதம் அபத்தமாகும். எனவே மனிதனுடைய உயிர் வேறு எங்கிருந்தும் வருவதும் இல்லை. இறக்கும் போது வேறு எங்கும் போவதும் இல்லை.

மனித உடல் தோன்றும் போது தொடக்கத்திலேயே உயிர் உள்ளது. அவ்வாறே உடல் இறக்கும் போது உயிரும் அழிந்து விடுகிறது. சுருங்கக் கூறின் உயிர் என்பது கரு அறையில் நாம் இறைவனிடமிருந்து பெற்றுக் கொள்வதும் மரணத்தின் போது திரும்பவும் இறைவனிடம் கொண்டு செல்லப் படுவதுமாகிய பொருள் அல்ல என்பது நாத்திகம் முன் வைக்கும் வாதமாகும்.

இந்த வாதத்திற்கு நாத்திகம் எடுத்து வைக்கும் வாதம் மானிடத் தோற்றத்தின் தொடக்கத்திலேயே கருவுற்ற முட்டையிலேயே அவனுக்குள் உயிர் இருக்கிறது என்பதாகும்.

நாத்திகத்தைத் தகர்க்கும் கருவியல் கண்டுபிடிப்பு:

பேரண்டத்திற்கு ஒரு ஆரம்பம் இருந்துள்ளது என்பதை சென்ற நூற்றாண்டு வரை அறிவியல் உலகம் எவ்வாறு அறியாமல் இருந்ததோ அவ்வாறே கரு வளர்ச்சி தொடர்பான அறிவியலிலும் போதிய விபரங்களை அறிவியலாளர்கள் அறிந்திருக்கவில்லை. இதன் காரணமாக நாத்திக விளக்கத்தில் ஏதோ நியாயம் இருப்பது போன்று மத நம்பிக்கையற்றவரிடம் ஒரு பிரம்மையை நாத்திகத்தால் ஏற்படுத்தி இருக்க முடியும்.

ஆனால் சென்ற நூற்றாண்டின் இறுதியில் கருவியல் துறையில் ஏற்பட்ட முன்னேற்றம் கருவுற்ற முட்டையானது உயிருள்ளதன்று. அது உயிரற்ற பிண்டம் என்ற உண்மையை வெளிப்படுத்தி நாத்திகச் சித்தாந்தத்தைத் தகர்க்கும் மற்றொரு அறிவியல் உண்மையாக வெளிப்பட்டது.

உலகின் முதலாவது சோதனைக் குழாய் குழந்தை பிறந்த கதை பெரும்பாலோர் மறந்திருக்க மாட்டார்கள். ஆயினும் மூன்று வருடம் கழித்து அவளுக்கு ஒரு சகோதரி பிறந்த வரலாறு அதிகமானோர் அறியவில்லை எனத் தோன்றுகிறது. அது ஒரு சுவாரசியமான வரலாறு.

முதல் சோதனைக் குழாய் குழந்தையைப் பெற்றெடுத்த இங்கிலாந்து தேசத்து பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த 'ப்ரவ்ன்' தம்பதியினருக்கு மூன்று வருடங்கள் கழித்து மற்றொரு குழந்தை வேண்டும் என ஆசை பிறக்கவே அவர்கள் முதலில் அணுகிய மருத்துவக் கழகத்தை மீண்டும் அணுகி தங்களது ஆசையைத் தெரிவித்தனர்.

அவர்களது கோரிக்கையை ஏற்றுக் கொண்ட விஞ்ஞானிகள் அவர்களிடம் மீண்டும் விந்தணுவையும் கரு முட்டையையும் எடுக்காமலேயே 'ப்ரவுன்' தம்பதியரின் இரண்டாவது குழந்தையைச் சோதனைக் குழாயில் நட்டு வளர்த்து பிறகு திருமதி ப்ரவுனின் கருவறைக்கு மாற்றி மற்றொரு அழகான பெண் குழந்தையைப் பெற்றெடுக்கும்படிச் செய்தார்கள்.

விந்தனுவும் கரு முட்டையும் எடுக்காமல் குழந்தையை உருவாக்க எப்படிச் சாத்தியமாயிற்று? இக்கதையை எடுத்துக் கூறி அதற்கு விளக்கம் தரும் இந்தியரான டாக்டர் ஹமீத்கான் (இவர் இலண்டன் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றவரும் அமெரிக்காவின் அறிவியல் ஆலோசனைக் குழுவில் உறுப்பினராகவும் இருப்பவர்) ப்ரவுன் தம்பதியினர் முதல் குழந்தைக்காக மருத்துவ உதவி நாடியபோதே அவர்களிடமிருந்து விந்தணு மற்றும் கரு முட்டைகளை எடுத்து அவைகளை இணையச் செய்து கருவுற்ற முட்டைகளாக ஆக்கி வைத்திருந்தவைகளில் சில மிச்சம் இருந்ததாகவும் அவற்றுள் ஒன்றை எடுத்தே இரண்டாவது குழந்தையை உருவாக்கியதாகவும் கூறுகிறார்.

இங்கு இயல்பாக எழும் கேள்வி உலகில் உள்ள எந்த உயிரையாவது இவ்வளவு காலம் இறந்து போகாமல் பதப்படுத்தி வைக்க முடியுமா? என்பதாகும்.

இந்த நிகழ்ச்சி கருவுற்ற முட்டை மக்கள் நினைப்பது போன்று உயிருள்ள பொருள் இல்லை என்றும் அது உயிரற்ற பொருளே என்றும் காட்டுவதாகக் கூறுகிறார் டாக்டர் ஹமீத் கான்.

கருவுற்ற முட்டை உயிரற்றது என்பதை நிரூபிக்கக் கூடிய சோதனை ஒன்றையும் அவர் கூறுகிறார். ஒரு புழுவையும் அப்புழுவின் கருவுற்ற முட்டையையும் தனித் தனியாக வேறு வேறு குழாயில் வைத்து அவைகளை மைனஸ் எழுபது டிகிரி சென்டிகிரேடு வெப்ப நிலையில் வைத்திருந்து பிறகு சிறிது நேரம் கழித்துப் புழுவை எடுத்துப் பார்த்தால் அப்புழு இறந்து போயிருக்கும். ஆயினும் அதன் கருவுற்ற முட்டையை எவ்வளவு நாள் வேண்டுமானாலும் வைத்திருந்து அதன் பிறகு அதிலிருந்து உயிருள்ள புழுவை உருவாக்க முடியும் எனக் கூறுகிறார் டாக்டர் ஹமீத்கான்.

டாக்டர் ஹமீத்கான் கூறும் இந்த விளக்கத்திலிருந்து உயிரினங்களைத் தோற்றுவிக்கும் அவைகளின் கருவுற்ற முட்டை உயிரற்ற பிண்டமே என்பதை தெளிவாக விளங்குகிறோம். கருவில் வளரும் குழந்தையின் உயிர் தொடக்கத்திலேயே அதனிடம் இருக்கும் ஒன்றில்லை என்பதும் கருவறையில் அது வளரும்போது மற்றொரு விதத்தில் பெற்றுக் கொள்வதே என்பதும் தெளிவாகும்.

இதை இன்னமும் விளங்கிக் கொள்ளச் சிரமமப்படும் நாத்திக நண்பர்கள் மிகக் குறைந்தபட்சம் ப்ரவுன் தம்பதியினரின் இரண்டாவது குழந்தைக்கு உயிர் வந்ததைப் பற்றி மட்டுமாவது சற்று சிந்திக்க வேண்டும்.

உலகிலுள்ள எந்த உயிரினத்தையும் சற்றைக்கெல்லாம் கொன்றுவிடும் மைனஸ் எழுபது டிகிரி சென்டிகிரேடு எனும் தாழ்ந்த வெப்பநிலையில் மூன்று வருடம் உயிரற்ற பிண்டமாக தங்கியிருந்து அதன் பிறகு தோற்றமெடுக்கத் தொடங்கிய அக் குழந்தைக்கு உயிர் கிடைத்ததா இல்லையா என்பதையும் உயிர் கிடைத்தது என்றால் அந்த உயிர் எப்படி வந்தது என்பதையும் பற்றி மட்டுமாவது காய்தல் உவத்தல் இன்றி சிந்திப்பது மிகவும் நன்று. சிந்திப்பார்களா!

-பி.ஜெய்னுல்லாபிதீன்

படிக்கும்போது சற்று குழப்பமாக இருக்கும். ஒரு முறைக்கு இரண்டு முறை படியுங்கள். பதிவு சொல்ல வரும் கருத்தை சுலபமாக புரிந்து கொள்ளலாம்.

நண்பர் சுவனப்பிரியன் அவர்களுக்கு,என்னுடைய வலைதளத்திற்கு உங்களை வரவேற்கிறேன். டார்வின் கோட்பாடு குறித்த என்னுடைய கட்டுரைக்கு உங்களின் பதிவை சிலர் பின்னூட்டமாக இட்டிருந்தனர் (அது உங்கள் தளத்திற்கு வருகை தந்தபின்னர்தான் புறிந்தது) அவைகளுக்கு நான் தக்க பதில் கூறியிருக்கிறேன். வாருங்களேன் விவாதிப்போம்.

தோழமையுடன்,செங்கொடி.

நண்பர் செங்கொடிக்கும் இந்த பதிவிலேயே பதிலும் இருக்கிறது.

3 comments:

Anonymous said...

ஒண்ணும் புரியலிங்க...

Anonymous said...

உங்களின் இந்தப்பதிவு குறித்து எனது தளத்தில் பதிலிட்டுள்ளேன். வருக, வந்து உங்கள் கருத்துக்களை தருக.

தோழமையுடன்
செங்கொடி

Anonymous said...

உங்களின் இந்தப்பதிவு குறித்து எனது தளத்தில் பதிலிட்டுள்ளேன். வருக, வந்து உங்கள் கருத்துக்களை தருக.

தோழமையுடன்
செங்கொடி

http://senkodi.wordpress.com/2008/12/24/