Followers

Wednesday, June 24, 2009

வட்டியில்லா வங்கியை அரசு அறிமுகப்படுத்துமா?



திண்டுக்கல்: வட்டியில்லாமல் கடன் கொடுக்கும் திட்டம் விரைவில் இந்தியாவில் நடைமுறைக்கு வரும், என ஐகோர்ட் நீதிபதி அக்பர் அலி நம்பிக்கை தெரிவித்தார். வட்டியில்லா இஸ்லாமிய வங்கி ஒருங்கிணைப்பு குழுவின் 2வது மண்டல மாநாடு திண்டுக்கல்லில் நடந்தது.

கண்காட்சியை திறந்து வைத்து நீதிபதி அக்பர் அலி பேசியதாவது:
வட்டியில்லாமல் கடன் கொடுக்க முடியுமா என ஆச்சர்யப்பட்டேன். சில வெளிநாடுகளில் இத்திட்டம் நல்லமுறையில் செயல்படுகிறது.விரைவில் இந்தியாவிலும் செயல்பாட்டிற்கு வரும். வட்டி வசூலிப்பதால் சமூகத்தில் ஏற்படும் பாதிப்புகள் என்ன என்பதை ஒரு நீதிபதியாக இருப்பதால் சாதாரண மக்களை விட அதிகம் தெரிந்து கொள்ள முடிகிறது. வரும் வழக்குகளை விசாரிக்கும் போது கடன்பட்டவர்கள் எவ்வளவு சிரமங்களை அனுபவிக்கின்றனர் என்பதை அறிந்து கொண்டேன். ஒரு காசுகூட வட்டியை குறைக்க மாட்டேன் என கல் நெஞ்சத்துடன் பேசுபவர்களையும் நான் பார்த்திருக்கிறேன். அதிக வட்டி வாங்க கூடாது என்ற நடைமுறை சட்டத்தில் உள்ளது.

நீதிபதியாக எங்களுக்கு சில அதிகாரங்களை அரசு கொடுத்துள்ளது. அதில், நாங்கள் நியாயத்தின் அடிப்படையில் வட்டியை குறைத்து நிர்ணயம் செய்து தீர்ப்பு வழங்க முடியும். கந்துவட்டி ஒழிப்பு தண்டனை சட்டமும் நடைமுறையில் உள்ளது. நிதி நிறுவனங்கள் தரும் அதிக வட்டியை நம்பி பெரும் பணத்தை இழந்தவர்களும் உள்ளனர். இப்படி பணத்தை இழந்தவர்களுக்கு வசூலித்து கொடுக்க தனி கோர்ட் உள்ளது. இது தவிர, வட்டி தொல்லையில் இருந்து மக்களை காக்க நிறைய குற்றவியல் நடைமுறை சட்டங்களும் உள்ளன. இவ்வளவு சட்டங்களை தாண்டியும் வட்டி கொடுமைகள் செய்கிறது. சில மனிதர்களுக்கு அதிகமாகவும், சிலருக்கு குறைவாகவும் இறைவன் கொடுத்தாலும், மனிதர்கள் தங்களுக்கு கிடைத்ததை சமமாக பங்கிட வேண்டும். தன்னிடம் எவ்வளவு உள்ளது என்று கணக்கு பார்ப்பதை விட,இருப்பதை மற்றவர்களுடன் பங்கிடும் நல்ல எண்ணம் வேண்டும். செலவினங்களை கூட தர்மமாக செய்ய வேண்டும். வட்டி வாங்க வேண்டாம் என்ற இஸ்லாம் சமூகத்தின் உயர்ந்த அறிவுரையை எல்லோரும் வரவேற்கின்றனர். "கடன் வாங்கியவர்கள் திரும்ப கொடுக்க முடியாவிட்டால் பரவாயில்லை, விட்டு விடு' என்ற இஸ்லாம் உபதேசம் எனக்கு மிகவும் பிடித்தது. இவ்வாறு பேசினார்.
-பத்திரிக்கை செய்தி

இந்த வட்டியினால் சீரழிந்த குடும்பங்கள் அனேகம் உண்டு. எனவே தான் இஸ்லாம் இந்த வட்டியின் பக்கம் நெருங்கக் கூட தடை விதிக்கிறது. இனி குர்ஆன் இடும் கட்டளைகளைப் பார்ப்போம்.

வட்டியை உண்போர் மறுமை நாளில் சாத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள். 'வியாபாரம் வட்டியைப் போன்றதே' என்று அவர்கள் கூறியதே இதற்கு காரணம். இறைவன் வியாபாரத்தை அனுமதித்து வட்டியை தடை செய்து விட்டான்.
குர்ஆன்: 2:275

இறைவன் வட்டியை அழிக்கிறான். தர்மங்களை வளர்க்கிறான்.
குர்ஆன் 2:276

நம்பிக்கை கொண்டோரே! இறைவனை அஞ்சுங்கள். நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் வர வேண்டிய வட்டியை விட்டு விடுங்கள்.

அவ்வாறு நீங்கள் செய்யா விட்டால் இறைவனிடமிருந்தும் அவனது தூதரிடமிருந்தும் போர்ப்பிரகடனத்தை உறுதி செய்து கொள்ளுங்கள்.
குர்ஆன் 2: 278,279


மேற்கண்ட வசனங்கள் வட்டி வாங்குவதை எந்த அளவு கண்டிக்கிறது என்பதை விளங்கலாம். இதில் மத வித்தியாசம் எல்லாம் இல்லாமல் எங்கும் நீக்கமற இந்த கொடுமை நிறைந்திருப்பதுதான் வேதனையிலும் வேதனை.

முகமது நபி வருகைக்கு முன் அரபு நாடுகளில் வட்டித் தொழில் அனைவரிடத்திலும் தாராளமாக புழக்கத்தில் இருந்தது.

வட்டியை தடை செய்த முகமது நபி இதற்கு முன் யாரெல்லாம் வட்டிக்கு கடன் கொடுத்தார்களோ அவர்கள் அசலை மட்டும்தான் வாங்க வேண்டும்: ஏற்கெனவே பேசப்பட்ட வட்டியானாலும் அதை வாங்கவும் கொடுக்கவும் கூடாது என்று பிரகடனம் செய்தார்.

'தம்மிடம் இருந்தே எதையும் ஆரம்பிக்க வேண்டும்' என்ற கொள்கையின் காரணமாக தமது பெரிய தந்தையின் வட்டிகள் அனைத்தையும் முதலில் தள்ளுபடி செய்தார்.

'எனது பெரிய தந்தையிடம் வட்டிக்கு கடன் வாங்கியவர் அசலை மட்டும் கொடுத்தால் போதும். வட்டியைக் கொடுக்கக் கூடாது' என்று அறிவிப்பும் செய்கிறார். நஷ்டம் ஏற்பட்டாலும் எந்த சட்டமும் முதலில் தம் குடும்பத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ள இவரல்லவோ ஒப்பற்ற தலைவர்.

வட்டியின் கொடுமையிலிருந்து நாமும் நமது குடும்பமும் விலகி இருக்கும் சூழலை இறைவன் நம் அனைவருக்கும் தர வேண்டும் என்று கூறி இப்பதிவை முடிக்கிறேன்.

No comments: