Followers

Showing posts with label பவுல் அடிகள். Show all posts
Showing posts with label பவுல் அடிகள். Show all posts

Wednesday, September 23, 2009

பவுல்(பால்) எவ்வாறு கிறித்துவை கடவுளாக்கினார்?-2

பவுல்(பால்) எவ்வாறு கிறித்துவை கடவுளாக்கினார்?-2

ஏசுவுக்குப் பின்னர் அவருடன் வாழ்ந்த சிஷ்யர்கள்(அப்போஸ்தலர்கள்) தங்களை ஒரு சிறு கூட்டமாக அமைத்துக் கொண்டு ஏசு அவர்கள் கொண்டு வந்த போதனையைப் பரப்பலாயினர். யூதர்களுடைய பழக்க வழக்கங்களையே அந்த அப்போஸ்தலர்களும் கடைபிடித்து வந்தனர். யூத கோவில்களில் நடைபெறும் வணக்க முறைகளையே இவர்களும் பின்பற்றி வந்தனர்.

அப்போஸ்தலர்களின் பிரச்சாரங்களின் விளைவாக பலரும் கிறித்தவ மார்க்கத்தின்பால் ஈர்க்கப்பட்டனர். ஒரு மார்க்கத்தையும் சேர்ந்திராது காட்டுமிராண்டி வாழ்க்கை நடத்தி வந்த பாமர மக்களும் ஏசுவின் போதனையின் பக்கம் திரும்பலாயினர். இப்படிப் புதிதாக கிறித்தவ மார்க்கத்தில் சேர்ந்தவர்களுக்கு பல சலுகைகள் வழங்கப்பட்டன. இந்த சலுகை பவுல் மற்றும் அவரைச் சார்ந்தவர்களால் வழங்கப்பட்டது. புதிதாக கிறித்தவ மார்க்கத்தில் இணைபவர்கள் விருத்த சேதனம்(சுன்னத்) செய்து கொள்ளத் தேவையில்லை என்றும், வணக்க முறைகளில் சில விதிகள் அவர்களுக்காகத் தளர்த்தப்படலாம் என்றும் பவுல் கருதினார். யூதர்களைப் போன்று பல அனுஷ்டானங்களை அப்போஸ்தலர்கள் கடைபிடித்து வந்தனர். ஆனால் புதிதாக கிறித்தவ மார்க்கத்திற்கு வந்தவர்கள் இவற்றை எல்லாம் கடை பிடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என பவுல் வாதிக்கலானார்.

ஆக இப்படியாக ஈஸா நபி(ஏசு) மரித்து ஒரு நூற்றாண்டுகளுக்குள்ளாக இரண்டு கோஷ்டிகள் கிறித்தவ மார்க்கத்தில் தோன்றி அலை மோதின. ஏசு நாதரோடு கூடவே இருந்த அப்போஸ்தலர்கள் காட்டிய வழியில் செல்லும் கூட்டம் ஒன்று. இவர்கள் பெரும்பாலும் யூத பழக்க வழக்கங்களையே அனுஷ்டித்து வந்தனர். மற்றொன்று பவுல்(பால்) தலைமையில் இயங்கிய கூட்டம். யூத பழக்க வழக்கங்களை தொடர்ந்து பின்பற்ற வேண்டியதில்லை என்றும் புதிதாக மார்க்கத்தில் வருகின்றவர்கள் விஷயத்தில் அதிக கண்டிப்பு அவசியமில்லை என்றும் இவர்கள் கருதினார்கள். விருத்த சேதனம், ஓய்வு நாள், யூத வணக்க முறை, பலி(குர்பானி), பன்றி இறைச்சியை விலக்குதல் ஆகிய பிரச்னைகள் குறித்து இரு கூட்டத்தினருக்குமிடையே பலத்த மோதல்கள் எழுந்தன.

ஏசுவின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எல்லாம் அப்போஸ்தலர்களுடன் சேர்ந்து ஏசு கடைபிடித்த பழக்க வழக்கங்களையே பின் பற்ற வேண்டும் என்று கூறினர். இக் கூட்டத்தினர் பவுலை 'விரோதி' என அழைத்தனர். ஏசு மரித்து 70 ஆண்டுகள் வரை இக்கூட்டமே (ஜூதியோ கிறிஸ்டியானிடி) பெரும்பான்மையாக இருந்தனர். ஆரம்பத்தில் பீட்டரும் யோவானும் கூட இக் கூட்டத்தினருடன்தான் இருந்தனர். ஏசுவின் சொந்தமான ஜேம்ஸ் என்பவர் இக் கூட்டத்தின் தலைவராக இருந்தார். அவருக்குப் பின் ஏசுவின் மற்றொரு சொந்தமான கிளியோபாஸ் தலைமை ஏற்று நடத்திச் சென்றார். யூத-கிறித்தவர்கள் என இக்கூட்டம் அழைக்கப்பட்டது.

யூத-கிறித்தவர்களான இவ்வமைப்பினரே முதன்முதலாக சுவிசேஷங்களை ஹீப்ரு மொழியில் எழுதலானார்கள். கிறித்தவ மார்க்கத்தைப் பற்றிய பல நூல்களையும் அவர்கள் தொகுக்கலானார்கள். ஏசு மறைந்து ஒரு நூற்றாண்டு வரை இவர்களது கையே மேலோங்கி இருந்தது. ஜெருஸலம், பாலஸ்தீனம் மட்டுமல்லாது எகிப்து ரோம் வரை கூட இவர்களது ஆதிக்கம் பரவி இருந்தது. அதனால்தான் பவுல் எழுதிய நிரூபங்களில் 'மோதல்கள்' பற்றி அதிகம் குறிப்பிடுகிறார். கலாத்தியா, கோரிந்த், கோலோசேயா, ரோம், தெசலோனியா ஆகிய இடங்களில் எல்லாம் பவுல் எதிர்ப்பை சமாளிக்க வேண்டியிருந்தது.

சிரியாவிலும் ஆசியா மைனரிலும் யூத-கிறித்தவர்களின் கூட்டமே மிகைத்திருந்தது. கிரேக்க நாட்டிலும் இவர்களின் பிரச்சாரமே மேலோங்கி இருந்தது. ஆப்ரிக்க கண்டத்திற்கு கிறித்தவ மார்க்கத்தை முதன் முதலில் எடுத்துச் சென்றதே இக் கூட்டம்தான். முதன்முதலாக சுவிசேஷங்களை எழுத ஆரம்பித்ததும் இவர்களே.

இத்தகைய பின்னணியில்தான் மற்ற சுவிசேஷங்கள் எழுதப்படலாயின. எதிரி கோஷ்டியின் பிரச்சாரங்களை முறியடிக்க வேண்டும் என்ற உள் நோக்கத்துடன் எழுதப்பட்டவையே இன்று வழக்கில் இருந்து வரும் சுவிசேஷங்கள் ஆகும். கி.பி.70 ஆம் ஆண்டிலிருந்து சுவிசேஷப் போராட்டங்கள் ஆரம்பமாயின. யூதக்-கிறித்தவர்கள் யூதர்களில் ஒரு உட்பிரிவுதான் என்றும் பவுல் கோஷ்டியினர் பிரச்சாரம் செய்யலானார்கள்.

ஆனால் கி.பி. 70 ஆம் ஆண்டில் இருந்து நிலைமை மாறலாயிற்று. அப்போது நடைபெற்ற யுத்தத்தில் யூதர்கள் தோற்றுப் போயினர். அவர்கள் ஜெருஸலத்தில் இருந்து விரட்டப்பட்டனர். புதிதாக கிறிஸ்தவ மார்க்கத்தில் சேர்ந்தவர்கள் கூட்டமே பெரும்பான்மையாக இருந்தது. இவர்களுக்கு பவுல் அதிக சலுகைகளை அளித்திருந்ததால் பவுலின் பக்கமே இக்கூட்டம் சார்ந்து நின்றது. பெரும்பான்மையாகிவிட்ட இம் மக்கள் கூட்டம் ஜெருஸலத்தையும் பிற பகுதிகளையும் கைப்பற்றிக் கொண்டது. இறுதியில் பவுலுடைய கோஷ்டிக்கு வெற்றி கிட்டிவிட்டது. பவுல் எடுத்துச் சொன்னதும் விளக்கிச் சொன்னதுமான மார்க்கம்தான் கிறித்தவ மார்க்கம் என்றாகி விட்டது. யூத-கிறித்தவர்களின் செல்வாக்கு மங்கியது. அவர்கள் பல இடங்களுக்கு சிதறிப் போய் விட்டார்கள்.

இந்த வெற்றியைப் பார்ப்பதற்கு பவுல் உயிருடன் இல்லாவிட்டாலும் அவர் எடுத்துக் கொண்ட கட்சியே கிறித்தவ மார்க்கம் என்று நிலை நிறுத்தப்பட்டு விட்டது. யூதர்களை ஒட்டிய கிறித்தவர் நாளடைவில் நலிவடைந்து இல்லாமலேயே மறைந்து விட்டார்கள்.

Tuesday, September 22, 2009

பவுல்(பால்) எவ்வாறு கிறித்துவை கடவுளாக்கினார்?-1

பவுல்(பால்) எவ்வாறு கிறித்துவை கடவுளாக்கினார்?-1

//ஓர் உதவி. முன்பு ஒரு இஸ்லாமியப் பதிவர் பால் எப்படி கிறித்துவத்தை திசை மாற்றினார் என்று ஒரு கட்டுரை எழுதியிருந்தார். paul made jesus into a mythic character.

இதன் நகல் கிடைக்குமா?//-Dharumy

எனது முந்தய பதிவில் தருமி சார் கேட்டதின் நகல் என்னிடம் இல்லையாதலால் இது சம்பந்தமாக நான் படித்ததை தனி பதிவாக போடுகிறேன் என்று சொல்லியிருந்தேன். அதன்படி டாக்டர் மாரிஸ் புகைலின் 'விஞ்ஞான ஒளியில் பைபிளும் குர்ஆனும்' என்ற புத்தகத்தில் உள்ள செய்திகளை அப்படியே தருகிறேன் பலரும் விளங்கிக் கொள்வதற்காக.

டாக்டர் மாரிஸ் புகைல்: பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த இந்த டாக்டர் உடற்கூறு சிகிச்சை வைத்தியத்தில் கை தேர்ந்தவர்.மனிதர்களின் உடல்களை ஆராய்ந்து பார்த்துக் கொண்டிருந்தவருக்கு அந்த மனிதனின் ஆன்மா பற்றிய சிந்தனை எழுந்து விட்டது. அது பற்றி ஆராயத் தொடங்கி உலக மதங்களின் வேதங்களை ஆராயத் தொடங்கினார். அந்த வகையில் கிறித்துவின் வாழ்வில் எந்த அளவு உண்மை மறைக்கப் பட்டுள்ளது என்பதை அதில் பவுலின் பங்கு எந்த அளவு என்பதை இப்புத்தகத்தில் விரிவாக விளக்கியுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.

பழைய ஏற்பாட்டை எழுதியது யார்?

இக் கேள்வி பலருக்கும் ஆச்சரியத்தை விளைவிக்கலாம். ஒரு சிலர் விவிலிய வேதமான பைபிளின் முன்னுரையில் கொடுக்கப்பட்டிருக்கும் தகவலை நம்மிடம் திருப்பிக் கூறுவர். இந்நூல்கள் மனிதர்களினால் எழுதப்பட்ட போதிலும் பரிசுத்த ஆவியினால் தூண்டப்பட்டு கோர்வை செய்யப்பட்டனவாகும் என்றும் எனவே இறைவனே இந்நூலின் ஆசிரியர் என்றும் அவர்கள் சொல்லக் கூடும்.

ஏசு நாதர் இறந்து நானூறு ஆண்டுகளுக்குப் பின்னர் திருச்சபை ஒரு பட்டியலைத் தயாரித்து இதில் அடங்கியுள்ள நூல்களே வேத நூல்கள் என பொது அறிவிப்புச் செய்தது. இந்தப் பட்டியலை கி.பி.1441 ஆம ஆண்டு பிளாரன்ஸில் கூடிய திருச்சபையும் 1546 ஆம் ஆண்டில் டிரென்டில் கூடிய திருச்சபையும் 1870 ஆம் ஆண்டில் கூட்டப்பட்ட முதலாவது வாடிகன் கவுன்சிலும் அங்கீகாரம் செய்து வந்துள்ளன. அந்தப் பட்டியல்தான் 'கேனான்' என்றழைக்கப்படும் வேத நூல் தொகுப்பாக இன்றளவும் இருந்து வருகிறது.

இரண்டாவது வாடிகன் கவுன்ஸில் 1962 ஆம ஆண்டு முதல் 1965 ஆம் ஆண்டு வரை தொடர்ந்தாற்போல் மூன்று ஆண்டுகள் கலந்தாலோசனை நடத்திய பிறகு பைபிளின் புதிய வெளியீட்டைக் கொண்டு வந்திருக்கிறது. ஒரு பாமரன் மேலெழுந்தவாரியாக இதைப் படிக்கும் போது இந்த வேதங்கள் செவ்வனே பாதுகாக்கப்பட்டுத்தான் வந்திருக்கின்றன என நம்பி விடுவான். இது குறித்து ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்ற எண்ணம் இலேசில் எழாது.

என்றாலும் குருமார்களில் ஓரிருவர் இத்துறையில் ஆராய்ச்சிகள் செய்யாமல் இல்லை. அவர்கள் தங்களின் கண்டுபிடிப்புகளைத் தொகுத்து வைத்திருக்கின்றனர். அவை பொது மக்களின் பார்வைக்கு கொண்டு வரப் படுவதில்லை. அவை பல நூல் நிலையங்களில் மூலைகளில் தூங்கிக் கொண்டிருக்கின்றன.

அவற்றில் ஒன்று பேராசியர் எட்மண்ட் ஜாக்கப் பிரெஞ்சு மொழியில் எழுதிய 'பழைய ஏற்பாடு' என்ற நூலாகும். அந்நூலில் அவர் கூறியிருப்பதாவது:

'வேதங்கள் என்று சொல்லப்படுபவற்றில் ஆதி காலங்களில் பல வாய் மொழிகள் வழக்கில் இருந்து வந்தன. ஒரே மாதிரியான வாய் மொழிதான் இருந்து வந்தது எனச் சொல்ல முடியாது. பல்வேறு வாக்கு மூலங்கள் மக்களிடையே புழக்கத்தில் இருந்தன.நாளாக நாளாக அவை எழுத்து வடிவம் பெறலாயின. அதிலும் பல பிரிவுகள் வழக்கில் இருந்தன. இறுதியாக மூன்று வகையான வேத நூல்கள் ஹீப்ரு மொழியில் உருவாயின. ஏசு பிறப்பதற்கு மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்னர் உள்ள நிலவரம் இது. இந்த மூன்று வேறுபட்ட நூல்களில் இருந்தும் உருவாக்கப்பட்டதே யூதர்கள் இன்று அழைக்கும் பென்டாடெஷ் என்ற தொகுப்பாகும். இதைத்தான் அவர்கள் 'தௌராத் வேதம்' என்கிறார்கள். மேற் கூரிய மூன்று ஹீப்ரோ மொழிகளில் இருந்து பல பகுதிகள் கிரேக்க மொழியிலும் மொழி பெயர்க்கப்பட்டிருந்தன. இவையே பின்னால் உருவான பைபிள்களுக்குக் கருவாக அமைந்தன. மூன்று விதமான வேத நூல்களையும் ஒன்றாகத் தொகுத்து ஒன்று படுத்தும் முயற்சி ஏசு பிறப்பதற்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்பு வரை நடந்து வந்தது. இருப்பினும் ஏசு பிறந்து ஒரு நூற்றாண்டு கழிந்த பின்னரே பைபிளுக்குரிய கருப் பொருள்கள் ஒன்று திரட்டப்பட்டன.”

மேற் கூரிய கருத்துக்கள் பேராசிரியர் எட்மண்ட் ஜேக்கப் அவர்களுடைய நீண்ட ஆராய்ச்சிகளின் விளைவுகளாகும்.

மூன்று வகையான வேத நூல்கள் ஹீப்ரு மொழியில் வழக்கில் இருந்திருக்கின்றன. அவை அப்படியே பாதுகாக்கப்பட்டு வந்திருக்குமாயின் இன்று நாம் அவைகளை ஒன்றுடன ஒன்று ஒப்பிட்டுப் பார்த்து உண்மையை உய்த்து உணர்வதற்கு உதவியாக இருந்திருக்கும். துரதிர்ஷ்டவசமாக அவை குறித்து ஒரு துப்புக் கூட இன்று கிடைக்கவில்லை.

பழைய ஏற்பாடு முதன் முதலாக முழுமையாக கிரேக்க மொழியில் கி.மு.மூன்றாவது நூற்றாண்டில் மொழி பெயர்க்கப்பட்டது. அலெக்சாண்டிரியாவில் வாழ்ந்த யூதர்களே இப்பணியைச் செய்து முடித்திருக்கிறார்கள். இந்த கிரேக்க மொழி பெயர்ப்புதான் பிற் காலத்தில் உருவான புதிய ஏற்பாட்டிற்கு மூலமாக அமைந்தது. கி.பி.ஏழாவது நூற்றாண்டு வரை இந்த 'பழைய ஏற்பாடு' அப்படியே பாதுகாக்கப்பட்டிருந்தது.

ஆனால் செயின்ட் ஜெரோம் என்ற மத குரு கி.பி.ஐந்தாவது நூற்றாண்டில் ஹீப்ரு மூல நூல்களில் இருந்து லத்தீன் மொழியில் ஒரு பைபிளைத் தயாரித்தார். இதுவே உல்மேட் என்று அழைக்கப்படுகிறது. செயின்ட் ஜெரோம் தயாரித்த பைபிளே கிறித்தவ உலகத்தில் கி.பி. ஏழாம் நூற்றாண்டுக்குப் பிறகு பரவலாக வழக்கில் இருந்து வருகிறது. லத்தீன் மொழி பெயர்ப்பு அல்லாமல் அராமிக் மொழியிலும், சிரியாக் மொழியிலும், பைபிள்கள் வெளி வந்தும் இருக்கின்றன.

எனவே ஹீப்ரு, கிரேக்கம், லத்தீன் சிரியாக், அராமிக்,அரபி ஆகிய பல மொழிகளில் விவிலிய வேதம் வழக்கில் இருந்தபோது சில ஆராய்ச்சியாளர்கள் எல்லா நூல்களில் இருந்தும் அவர்களது யுக்திக்கு ஏற்ற வகையில் அங்கிருந்து கொஞ்சம், இங்கிருந்து கொஞ்சம் என்ற முறையில் பல விஷயங்களையும் ஒன்று திரட்டி புதிய பைபிள்களைத் தயாரிக்கலானார்கள். அம் மாதிரித் தயாரிப்புத்தான் 1957 ஆம் ஆண்டு லண்டன் நகரில் அச்சிடப்பட்ட வால்டன் பைபிள் என்பதாகும்.

கிறித்தவர்களுக்குள்ளேயே பலவித உட்பிரிவுகள் இருக்கின்றன. ஒவ்வொருவரும் ஏற்றுக் கொண்டுள்ள பைபிள்கள் பல மாதிரியானதாகவிருக்கும். வார்த்தை வித்தியாசம், கருத்து வித்தியாசங்கள் உண்டு. பல்வேறு கிறித்தவ பிரிவுகளும் இன்று ஒன்று கூடி ஒரே மாதிரியான பைபிளைத் தயாரிக்கும் முயற்ச்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். கத்தோலிக்கப் பாதிரிகளும், புரோட்டஸ்ட் பாதிரிகளும் கூட்டாக முயற்ச்சித்து இறுதியில் அதில் வெற்றியும் கண்டு விட்டனர். அவர்களது புதிய தயாரிப்புக்கு (The Ecumencial Translation Of The Old Testament) எனப் பெயரிடப்பட்டிருக்கிறது. 1975 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்நூல் வெளியிடப்பட்டு விட்டது.

மேலே கூறியவற்றில் இருந்து இன்று வழக்கில் இருக்கும் பழைய ஏற்பாடு என்ற வேதநூல் எப்படி உருவாயிற்று என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். மனிதக் கரம் இதில் அதிகமதிகம் விளையாடி இருக்கிறது. சுமார் இரண்டாயிரம் ஆண்டு வரலாற்றில் ஒவ்வொரு தடவை புதிய பதிப்பு தயாரிக்கும் பொழுதெல்லாம் திருத்தங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு மொழி பெயர்ப்பிலும் வாசகங்கள் கூட்டிக் குறைக்கப்பட்டிருக்கின்றன. காலா காலமாக இந்தத் 'திருத்தும் வேலை' நடந்தே வந்திருக்கிறது.

குறிப்பு: இஸ்லாத்தை எடுத்துக் கொண்டீர்கள் என்றால் முகமது நபியின் போதனைக்கு மாற்றமாக இந்தியா பாகிஸ்தான் போன்ற நாடுகளில் எல்லாம் ஊருக்கு ஊர் தர்ஹாக்களைக் கட்டி வைத்து அந்த மகான்களை இறைவனுக்கு சமமாக வழிபடுவதையும் பார்க்கிறோம். அதே போல் ருக்,யஜூர்,சாம,அதர்வண வேதங்கள் உருவ வழிபாட்டைப் போதிக்கவில்லை. சித்தர்கள் கூட 'நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள் இருக்கையில்' என்று உருவ வழிபாட்டைக் கண்டிக்கிறார். திருக்குறளிலும் உருவ வழிபாட்டைப் பற்றி சொல்லவில்லை. ஆனால் இந்து மதம் இன்று முழுக்க முழுக்க உருவ வழிபாட்டையே அடிப்படையாகக் கொண்டு இயங்கும் காட்சியையும் பார்க்கிறோம். இவை எல்லாம் வேத நூல்கள் ஒன்றைச் சொல்ல காலப் போக்கில் மனிதனின் மனம் அந்த வேதக்கருத்துக்களையே மாற்றி அதற்கு எதிரான திசையில் செல்ல ஆரம்பித்து விடுகிறது. இது எல்லா மதத்துக்கும் பொருந்தும். எனவே இப்பதிவு அந்த தவறுகளை சுட்டிக் காட்டத்தானே யொழிய யார் மனத்தையும் புண்படுத்தும் நோக்கம் கண்டிப்பாக இல்லை என்றும் சொல்லிக் கொள்கிறேன்.

-தொடரும்

Saturday, September 19, 2009

சவுதிகளிடம் உள்ள சில நல்ல பழக்கங்கள்.!



நோன்பு மாதம் முடியும் தருவாயில் இருக்கிறது. இந்த நேரத்தில் சவுதி நாட்டவர்களிடம் உள்ள சில நல்ல பழக்கங்களை நாம் தெரிந்து கொள்வோமா!

மாலை நேரம் நெருங்கியவுடன் வேலையின் காரணமாக பலருக்கும் குறித்த நேரத்தில் வீடு சென்று சேர இயலாது. எனவே காலையிலிருந்து பசித்து தாகித்திருந்த பலரும் நோன்பு திறக்கும் நேரத்தில் மிகுந்த சிரமம்எடுத்துக் கொள்வார்கள். ஆனால் இவர்களின் சிரமத்தைக் குறைக்கும் பொருட்டு பல சவுதிகளும் தன் குழந்தைகளுடன் ஒவ்வொரு சிக்னலிலும் காத்திருப்பார்கள். ஒரு பாட்டில் தண்ணீர், ஒரு மோர் பாக்கெட், சில பேரித்தம் பழங்கள், ஒரு பாட்டில் பழ ரசம், ஒரு கேக் இத்தனையும் தங்களின் சொந்த செலவிலேயே வாங்கி நோன்பு திறக்கும் நேரத்தில் சிக்னலில் காத்திருப்பார்கள். ஐந்து நிமிடம் முன்பு சிக்னலில் நிற்கும் அத்தனை பேருக்கும் ஓடி ஓடி அந்த பைகளை கொடுக்கும் காட்சி கண்கொள்ளாக் காட்சி. சிறுவர்களும் பசியோடு சுறுசுறுப்பாக வேலை செய்வதை நாம் அனைவரும் பார்க்க முடியும். இதுவல்லவோ மனித நேயம்.

அதே போல் பல கோடீஸ்வரர்கள் மசூதிகளில் வரிந்து கட்டிக் கொண்டு நோன்பு திறக்கும் இஃப்தார் நிகழ்ச்சிகளை தங்கள் செலவிலேயே செய்வதை பார்க்கிறோம். அதற்காக அவர்களின் உடல் உழைப்பையும் கொடுப்பதை நான் பார்த்து நான் ஆச்சரியப்பட்டுள்ளேன். நோன்பையும் வைத்துக் கொண்டு 200, 300 பேருக்கு பரிமாறுவது என்பது சாதாரண விஷயமல்ல. அதுவும் பசியே என்னவென்று பார்த்திராத சவுதிகள் செய்வதுதான் நமக்கு ஆச்சரியமாக படும்.

அடுத்து நோன்பு முடிந்து பெருநான் ஆரம்பமானவுடன் ஆஸ்பத்திரியில் முடியாமல் இருக்கும் தங்கள் சொந்த பந்தங்களை அவர்களுக்கு பிடித்தமானவைகளை சமைத்துக் கொண்டு பிள்ளைகள், மனைவி சகிதம் சென்று பார்ப்பார்கள். அந்த நேரத்தில் தனிமையில் இருக்கும் அவர்களுக்கும் இந்த நல்ல நாளில் தன் குடும்பத்தவரைப் பார்ப்பதில் மிகுந்த சந்தோஷத்தைக் கொடுக்கும். சவுதிகளின் பெரும்பாலான குடும்பங்கள் பெருநாளன்று மதியம் ஆஸ்பத்திரியில் காணக் கூடியதாக இருக்கும். முகமது நபியின் சொல்லுக்கும் இந்த மக்கள் எந்த அளவு கட்டுப்பட்டவர்களாக இருக்கிறார்கள் என்று ஆச்சரியப்பட்டேன்.

அதே போல் நோன்பில் செய்த சிறு சிறு தவறுகளுக்கு பரிகாரமாக பிஃத்ரா என்ற தர்மத்தை ஒவ்வொரு நபருக்கும் கடமையாக்கி அதை ஏழைகளுக்கு சென்றடையுமாறு முகமது நபி கட்டளையிட்டுள்ளார். அந்த ஒரு நாளாவது ஏழைகள் சற்று சுயமரியாதையோடு தங்கள் வீட்டிலேயே சமைத்து சாப்பிடட்டும் என்பதற்காக செய்யப்பட்ட ஒரு ஏற்பாடு. இதையும் சவுதிகள் கடை பிடிப்பதால் அன்று கையேந்துபவர்களை பார்ப்பது அரிதாக இருக்கும். கடந்த பத்து பதினைந்து வருடமாக நம் தமிழகத்திலும் இந்த முறையை பின் பற்ற ஆரம்பித்துள்ளனர். பெருநாளுக்கு முதல்நாள் ஒவ்வொரு ஏழைகளையும் ஊரில் கணக்கெடுத்து அவர்கள் வீடு தேடி சென்று இந்த தர்மத்தைக் கொடுக்கின்றனர். இதனால் பெருநாளன்று தற்காலங்களில் வறியவர்களை பார்ப்பதே அரிதாக இருக்கிறது. பல இலட்சங்களை தௌகீது ஜமாத், த.மு.மு.க போன்ற அமைப்புகள் வசூலித்து ஏழைகளுக்கு அளித்து வருகின்றனர்.

இது போன்று சவுதிகளின் மற்ற பழக்கங்களையும் பெருநாளன்று நம் மக்கள் கொண்ட வர பழக வேண்டும். இதற்கு மாற்றமாக புது துணிகளை உடுத்துவதாலோ, கும்பலாக சேர்ந்து சினிமா பார்ப்பதாலோ, பட்டாசு வெடிப்பதாலோ, வகையாக பிரியாணி சமைத்து சாப்பிடுவதாலோ மட்டும் நாம் பெருநாளைக் கொண்டாடியவர்களாக ஆக முடியாது. நம் பக்கத்தில் உள்ள வறியவர்கள், நம் ஊரில் உள்ள வறியவர்களை சாதி மத பேதம் பார்க்காமல் உதவ நாம் பழக வேண்டும்.

இந்த பெருநாளில் என் நாடும், என் மக்களும், உலக மக்களும் அமைதியான வாழ்வு வாழ எல்லோருக்கும் பொதுவான அந்த ஏக இறைவனிடம் இரு கரம் ஏந்தி பிரார்த்திக்கிறேன்.

எல்லோருக்கும் ஈகைத்திருநாள் வாழ்த்துக்கள்.

Sunday, September 13, 2009

கிருத்தவத்தை தழுவிய முஸ்லிம் மாணவி!



அமெரிக்க பத்திரிக்கைகளில் தற்போது பரபரப்பாக பேசப்படும் ஒரு நிகழ்வு பாத்திமா ரிப்கா பேரி என்ற முஸ்லிம் மாணவி கிருத்தவ மார்க்கத்தை தேர்ந்தெடுத்ததை. கடந்த 2000 ஆம் ஆண்டு இலங்கையை விட்டு அமெரிக்காவுக்கு குடி பெயர்கிறது பேரியின் குடும்பம். பாத்திமாவுக்கு கண்ணில் சிறு ஆபரேஷன் பண்ண வேண்டி இருந்ததால் அமெரிக்காவில் வந்து குடும்பத்தோடு செட்டில் ஆகிறார்கள். தந்தை முகமது பேரி தனது இரு பிள்ளைகளையும் கிறித்தவ கான்வென்டில் படிக்க வைக்கிறார். இங்குதான் பிரச்னை ஆரம்பம் ஆகிறது.

அந்த கான்வென்டில் கிறித்தவ மார்க்கத்தை போதிக்கிறார்கள். அந்த போதனைகளில் மெய் மறந்த பாத்திமா கிறித்தவராக மாறுகிறார் ரகசியமாக. ஒரு முறை பாத்திமாவின் சகோதரன் தன் தங்கை கையில் பைபிளோடு மற்ற குழந்தைகளிடம் மதப் பிரச்சாரம் செய்வதை பார்த்து விடுகிறான். சகோதரியின் நிலைமையை தனது தந்தையிடம் மகன் சொல்ல பிரச்னை வெடிக்கிறது. தனது மகளை திரும்பவும் இஸ்லாத்துக்குள் வந்து விடுமாறு தந்தை கண்டிக்க பிரச்னை அதிகமாகவே வீட்டை விட்டு வெளியேறி விடுகிறார் பாத்திமா. ஓர்லோண்டோவில் உள்ள சர்ச்சில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்கிறார் பாத்திமா.

'படிக்க அனுப்பிய குழந்தையை மனம் மாற்றி என்னிடமிருந்து பிரித்து விட்டனர். என் மகள் இன்னும் மேஜராகவில்லை' என்று தந்தை முகமது கோர்ட்டில் கேஸ் போட்டுள்ளார். பாத்திமாவோ 'என்னை விட என் பெற்றோர் கடவுளைத்தான் அதிகம் நேசிக்கிறார்கள். நான் திரும்பவும் வீட்டுக்கு செல்ல மாட்டேன்' என்கிறார். இவரின் தாயோ 'என் ஒரே மகளை என்னிடம் திருப்பித் தாருங்கள்' என்று கண்ணீர் மல்க கூறுகிறார்.

'நூர் இஸ்லாமிய அழைப்பு மையத்தோடு என் பெற்றோர் தொடர்பு வைத்துள்ளனர். நான் அங்கு சென்றால் என்னையும் தீவிரவாதியாக மாற்றி விடுவார்கள். என்னை கொன்றும் விடுவார்கள்' என்று பாத்திமா தனது பெற்றேறாரைப் பற்றி பேட்டியும் கொடுத்துள்ளார்.

ஆனால் நூர் இஸ்லாமிய அமைப்போ புது முஸ்லிம்களுக்கு இஸ்லாத்தை பயிற்றுவிக்கும் அமைப்பாகவும் பல நற்பணிகளையும் செய்து வருகிறது. கொலம்பஸ் மாகாண போலீஸோ பாத்திமாவின் குற்றச்சாட்டில் எந்த ஆதாரமும் இல்லை என்கிறது. நூர் இஸ்லாமிய அமைப்பின் நடவடிக்கைகளை மட்டுப்படுத்த பாத்திமாவை பகடைக்காயாக பயன்படுத்துவதாக முகமது பேரியும் மற்றும் பலரும் குற்றம் சாட்டுகின்றனர்.

இங்கு நாம் கவனிக்க வேண்டியது குழந்தைகளை பெற்றோர்கள் சேர்க்கும் போதே தனது கலாச்சாரத்துக்கு ஏற்ற பள்ளிகளாக பார்த்து சேர்த்தால் இது போன்ற பிரச்னைகளிலிருந்து நாம் தப்பிக்கலாம். டீன் ஏஜ் பிள்ளைகளின் விஷயத்தில் நாம் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இந்த வயதுதான் அவர்களை மிகவும் தடுமாற வைக்கும் வயது.

பிற்காலத்தில் ஏசுநாதர் கடவுளல்ல அவரும் முகமது நபியைப்போல ஒரு இறைத்தூதர்தான் என்ற உண்மையை உணருகிறாரா அல்லது கிறித்தவத்திலேயே ஐக்கியமாகி விடுகிறாரா என்ற கேள்விக்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.