Followers

Sunday, July 29, 2012

ஒரு பைசா கூட லஞ்சம் வாங்கியதில்லை – ஜவாஹிருல்லாஹ்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவரும் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், இராமநாதபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லாஹ் அண்மையில் சவூதி அரேபியா தலைநகர் ரியாத்துக்கு வந்திருந்தார். அவரைச் சந்திக்க வாய்ப்பு கிடைத்தபோது, ஏற்பாட்டாளர்கள் மூலம் வினவியபோது, மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டார்.



வாக்களிக்கப்பட்ட ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக மேலும் பல மணித்துளிகள் நேர்காணல் நீடித்த போதும் எவ்வித சங்கடத்தையும் வெளிக்காட்டாமல் மிகுந்த பொறுமையுடனும் இன்முகத்துடனும் அரசியல் முதிர்ச்சியுடனும் ஜவாஹிருல்லாஹ் விடையளித்த பாங்கு பாராட்டிற்குரிய ஒன்று.

தேர்தலுக்குப் பின் அரசியல் ரீதியான அவரின் நிலைப்பாடுகள், சமுதாயம் குறித்து அவர் எடுத்து செல்லும் நடவடிக்கைகள், சட்டசபை தொடர்பானவை, இயக்கம் தொடர்பானவை என்று தொலைநோக்கில் நாம் கேட்க நினைத்தவையும் அவரின் விளக்கங்களும் பரவலாய் விரிகின்றது.

அவருடனான நேர்காணல் -

கேள்வி: இந்திய முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளாக எதைக் கருதுகிறீர்கள்? அதை எவ்வாறு தீர்க்கலாம்?

ஜவாஹிருல்லாஹ்: இந்திய அளவில் முஸ்லிம்களிடையே கல்வியறிவின்மை, வறுமை, அரசியல் விழிப்புணர்வின்மை, ஒருங்கிணைந்த அரசியல் தலைமை இல்லாதது ஆகிய பிரச்னைகளைக் குறிப்பிடலாம். முஸ்லிம்கள் அதிகம் வாழும் பீகார், உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம் முதலிய மாநிலங்களில் வறுமை தலைவிரித்தாடுகின்றது. அரசியல் விழிப்புணர்வை அவர்களிடத்தில் ஏற்படுத்தவேண்டியது கட்டாயமாகிறது. மக்களை விழிப்பறிவுணர்வை எட்டச்செய்வதன் வாயிலாகவே இவற்றைத் தீர்க்கலாம்


கேள்வி: மனிதநேய மக்கள் கட்சியை தேசிய அளவில் முன்னெடுத்துச் செல்லும் திட்டமுண்டா? மேலும், தேசிய தேர்தல்களில் முஸ்லிம் கட்சிகள் ஒருங்கிணைந்து தேர்தலைச் சந்திக்க வாய்ப்புகள் உள்ளதா?

ஜவாஹிருல்லாஹ்: “இல்லை; அதற்கான சாத்தியங்களில்லை, வட இந்திய முஸ்லிம்களுக்கும், தென்னிந்திய முஸ்லிம்களுக்கும் அடிப்படை மனநிலையில் பெரிதும் மாற்றங்கள் இருக்கின்றன. அவர்கள் (வட இந்திய முஸ்லிம்கள்) ஒரு தென்னிந்திய தலைமையை ஏற்றுக்கொள்வார்கள் என்று சொல்வதற்கில்லை. இருப்பினும் அவர்களிடையே அரசியல் விழிப்புணர்வு ஏற்பட தொடர்ந்து நாங்கள் பாடுபட்டு வருகிறோம். அங்கு பல்வேறு கூட்டங்களில் நான் பங்குக் கொண்டு பேசியுள்ளேன். சமீபத்தில் உத்தரபிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிப்பெற்ற பீஸ் கட்சி 2007ல் தமுமுக டெல்லியில் நடத்திய பேரணியினால் கவரப்பட்டு உருவாக்கப்பட்ட கட்சியாகும். எனவே நாங்கள் அங்கு எங்கள்கட்சியை கட்டமைக்காவிட்டாலும் முஸ்லிம்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த முயன்று வருகிறோம்.


கேள்வி: ஜெயலலிதா அரசை எவ்விதம் மதிப்பிடுகிறீர்கள்?

ஜவாஹிருல்லாஹ்: எதிராகச் சொல்வதற்கு பெரிதாக எதுவும் இல்லை; வக்ஃப் வாரியத்தின் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஓய்வூதியப் பலன் அளிப்பதற்கும், அதிகரிக்கப்பட்ட ஊதியத்தினால் ஏற்பட்ட ஊதிய வித்தியாசத் தொகையை அளிப்பதற்காகவும் சென்ற ஆண்டு ரூ3 கோடியை தமிழக அரசு வழங்கியது. இதே போல் இந்த ஆண்டு பள்ளிவாசல் பராமரிப்பு பணிகளுக்காக ரூ 3 கோடி அரசு வழங்கியுள்ளது. மாவட்டங்களில் இயங்கும் முஸ்லிம் மகளிர் குழுவிற்கு அரசின் பங்களிப்பு அதிகரித்துள்ளது. உலமாக்களின் உதவி தொகையை ரூ750லிருந்து ரூ 1000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இருப்பினும் தேர்தல் பரப்புரையின் போது முஸ்லிம்களின் இடஒதுக்கீடு அளவு அதிகரிக்கப்படும் என்று அளித்த தேர்தல் வாக்குறுதியை இன்னும் நிறைவேற்றாதது வருத்தம் அளிக்கின்றது. அதைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.


கேள்வி: குண்டுவெடிப்பு போன்ற வழக்குகளில் சிறைத்தண்டனைப் பெற்ற அப்பாவி முஸ்லிம் கைதிகள் பல்லாண்டுகளுக்குப் பின்னரும் பிணை வழங்கப்படாமல் இருக்கிறார்களே?

ஜவாஹிருல்லாஹ்: முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில், அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு, ஏழாண்டுகளுக்கு மேல் சிறைப்பட்டிருந்த கைதிகள் அனைவரையும் விடுவிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டது. ஆனாலும், ஏழாண்டுகளுக்கு மேல் சிறையில் வாடிய முஸ்லிம் கைதிகளை அப்போது விடுவிக்கவில்லை. அதே நிலை இப்போதும் தொடர்கிறது.எங்கள் நிலைப்பாட்டின் படி, பத்தாண்டுகளுக்கு மேல் சிறைவாசம் அனுபவித்த அனைத்து கைதிகளையும் மேலும் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த சிறைக்கைதிகளையும் விடுவிக்க வேண்டுமென்று வலியுறுத்தி வருகிறோம்.

கேள்வி: ஆளுங்கட்சிக்கு, குறிப்பாக முதல்வருக்கு அளவுக்கதிகமாகத் துதிபாடுவதாக உங்கள் மீது குற்றச்சாட்டு உள்ளதே. மேலும் தானே புயல் நேரத்தில் நீங்கள் சட்டமன்றத்தில் பேசுகையில் “தானே புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்கள் துயர் நிவாரணம் பெற்றதன் பின்னால் மற்ற மாவட்ட மக்களும் ‘தானே புயல் தங்களைப் பாதித்திருக்கக் கூடாதா? என்று எண்ணத் தலைப்பட்டதாக”ச் சொல்லியிருந்தீர்கள், அதுபற்றி?

ஜவாஹிருல்லாஹ்: ஒவ்வொரு முதல்வருக்கும் ஒரு மனநிலை உண்டு. சிலர் விமர்சித்தால் அதை நேர்மறையாக எடுத்துக்கொண்டு செயல்படுவார்கள். இன்னும் சிலர் பாராட்டினால் மேலும் ஊக்கம் பெற்று நல்லபல திட்டங்களைச் செயற்படுத்துவார்கள். அவ்வகையில் நமது தற்போதைய முதல்வரைப் பாராட்டினால் மென்மேலும் ஊக்கம் பெற்று நல்ல பல திட்டப்பணிகளைத் தொடர்வார். இதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். அந்த வகையில் முதலில் பாராட்டிவிட்டு அதன்பின்பு வேண்டிய கோரிக்கைகளை வைக்கிறோம். ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமென்றால்…

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் அரசு ஓராண்டு நிறைவடைந்தது தொடர்பாக சட்டப்பேரவையில் நடைபெற்ற சிறப்பு விவாதத்தில் நமது மாண்புமிகு முதல்வர் தொலைநோக்குத் திட்டம் 2023 என்று திட்டம் வகுத்திருப்பது இதே போல் தமிழக இளைஞர்களின் திறன் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்திருப்பது மிகவும் பாராட்டிற்குரியது. ஆனால் தமிழகத்தில் இளம் குடிக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. அரசுக்கு வருமானம் வருகிறது என்ற ஒரே காரணத்திற்காக மதுக்கடைகளை திறந்து வைத்திருப்பது புத்திசாலித்தனமானது அல்ல. இது எதிர்காலத்தில் வலிமையான தமிழகம் என்ற கருத்தோட்டத்திற்கு இழுக்கு ஏற்படுத்திவிடும் என்று குறிப்பிட்டோம்..

மற்றபடி, தானே புயல் தொடர்பாக, நான் அப்படி பேசியது தவறுதான் என்று ஏற்றுக்கொள்கிறேன். நானும் மனிதன் தானே, அவ்வகையில் தவறிழைத்துவிட்டேன். இனி அவ்வாறு பேசமாட்டேன் என்றும் உறுதி அளிக்கிறேன்.நானும் எங்கள் கட்சி ஆம்பூர் உறுப்பினர் அஸ்லம் பாஷாவும் இதுவரை, ஒரு பைசா கூட இலஞ்சம் வாங்கியதில்லை; இன்ஷா அல்லாஹ் இனிமேலும் வாங்க மாட்டோம் என்று உறுதி அளிக்கிறோம். இங்கே நீங்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும், ஒரு எம்.எல்.ஏ வாக நீங்கள் இலஞ்சம் கேட்கக் கூட வேண்டாம், எல்லா நலத்திட்டங்களிலும் எம்.எல்.ஏ பங்கு என்று அவர்களாகவே ஒரு தொகையை ஒதுக்கிவிடுகிறார்கள். நாங்கள் அதைக் கூட பெறுவதில்லை என்பதை இங்கே உங்களுக்குச் சொல்லிக்கொள்கிறேன்.

கேள்வி: பர்மிய முஸ்லிம்கள் மீது பெரும் வன்முறையும், இன அழிப்புப் படுகொலைகளும் நிகழ்த்தப்படுகின்ற வேளையில், நமது எந்த அமைப்புகளும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகத் தெரியவில்லையே? தமுமுக எந்தவிதமான நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கிறது.?

ஜவாஹிருல்லாஹ்: இன்ஷா அல்லாஹ், விரைவில் இது பற்றி ஆலோசித்து, எங்களால் இயன்றதைச் செய்வோம்

கேள்வி: கடந்த வாரம் வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகைக்குப் பின்னர், மக்கா மஸ்ஜித் தலைமை இமாம் ரவுடிகளால் தாக்கப்பட்டுள்ளாரே?

ஜவாஹிருல்லாஹ்: கருத்தை கருத்தால் தான் எதிர்கொள்ள வேண்டும். வன்முறை மிகவும் தவறு. மெளலவி ஷம்சுத்தீன் காஸிமி மீதான தாக்குதலை தமுமுக சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறோம் ஒரு பள்ளிவாசலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியிருப்பதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள இயலாது..நான் வளைகுடா சுற்றுப் பயணத்தில் இருப்பதால் ஊர் திரும்பி இது குறித்தான அடுத்த கட்ட நடவடிக்கையை அமைப்புடன் கலந்து பேசி முடிவெடுப்போம். மேலும் இது குறித்து கலகம் செய்தவர்கள் மேல் காவல் துறை நடவடிக்கை எடுக்கவும் ஆவண செய்வோம்.


கேள்வி: மிஸ்ரா கமிஷன் அறிக்கையின் பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்கான சாத்தியக்கூறுகளைப் பற்றி கூறுங்களேன்?

ஜவாஹிருல்லாஹ் - 2004ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதல் ஆட்சியின் போது இந்த ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் தனது அறிக்கையை மே21 2007ல் சமர்பித்தது. 2009 டிசம்பரில் இந்த அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் மத்திய அரசு இது வரை இந்த ஆணையத்தின் பரிந்துரையை செயல்படுத்தவில்லை. மத்திய அரசின் வேலை வாய்ப்பில் 15 விழுக்காடு மதவழி சிறுபான்மையினருக்க வழங்க வேண்டும். அதில் 10 விழுக்காடு முஸ்லிம்களுக்கு அளிக்க வேண்டும் என்பது இந்த ஆணையத்தின் முதன்மையான பரிந்துரை. இது இயலாவிட்டால் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 27 விழுக்காடு இடஒதுக்கீட்டில் முஸ்லிம்களுக்கு 7 விழுக்காடு அளிக்க வேண்டும் என்று இந்த ஆணையம் பரிந்துரைச் செய்துள்ளது. இந்த ஆணையத்தின் பரிந்துரையை புறக்கணித்து உ.பி. தேர்தல் வரும் வேளையில் ஒத்துமொத்தமாக 4.5 விழுக்காடு முஸ்லிம்கள் உட்பட அனைத்து மதவழி சிறுபான்மையினருக்கு அளிக்கும் வகையில் முஸ்லிம்களை ஏமாற்றும் வகையில் மத்திய அரசு ஆணை பிறப்பித்தது. இந்த ஏமாற்று வித்தைக்கு உ.பி. முஸ்லிம்கள் சட்டமன்ற தேர்தலில் நல்ல பாடத்தை படித்துக் கொடுத்தார்கள்.

கேள்வி: ஜமாத்தே இஸ்லாமி அமைப்பு நீங்கள் பாடம் கற்ற இடம். இப்போது அந்த அமைப்பு தேசிய அளவிலான அரசியல் கட்சியொன்றை அமைத்துள்ளது. அவர்களுடனான உங்கள் உறவு எப்படி இருக்கிறது?

ஜவாஹிருல்லாஹ்: சென்ற உள்ளாட்சி மன்றத் தேர்தலில் கூட சில ஊர்களில் அவர்களுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டோம். நாங்கள் போட்டியிட்ட இடங்களில் அவர்களின் ஒத்துழைப்பு நன்றாகவே இருந்தது.. அமைப்பு என்பதெற்கெல்லாம் அப்பாற்பட்டு பரஸ்பரம் தேர்தல் வெற்றிக்கு இரு தரப்புமே உதவிக் கொண்டோம்.

கேள்வி: முஸ்லிம் சமுதாயத்துக்கு உங்களால் நிறைய பலன் கிடைக்க கூடும் என்று தான் உங்களை சட்டசபைக்கு அனுப்பினோம். ஆனால் இதுவரை ஒன்றும் நீங்கள் அது குறித்து பேசியதாக ஒன்றும் தெரியவில்லையே..?

ஜவாஹிருல்லாஹ் -(சிரிக்கிறார்) என் தொகுதியில் ஓட்டு போட்ட மற்ற சமுதாயத்தினரும் இது போலதான் கேட்கிறார்கள்

நீங்கள் உங்கள் சமுதாய மக்களுக்கு மட்டுமே சட்டசபையில் பேசுவதாக தெரிகிறது. அன்றைக்கு கூட உங்கள் சட்டசபை பேச்சை கேட்டேன். 60 70 சதவீதம் உங்கள் மக்களுக்காக மட்டும்தான் பேசினீர்கள் என்று ஒருவர் என்னை கேட்டார். அவர்கள் அப்படிக் கேட்கிறார்கள். நீங்கள் இப்படிக் கேட்கிறீர்கள். நான் என்னளவுக்கு அனைத்து சாராருக்கும் பொதுவாகவே பேசுகிறேன். தொலைக்காட்சிகளில் சட்டசபை நிகழ்வுகள் மிகவும் சுருக்கமாக ஒளிபரப்பபடுவதால் நாங்கள் பேசுவது முழுமையாக மக்களுக்குச் சென்றடைவதில்லை.

கேள்வி: தமிழக முஸ்லீம்களுக்கு என்று தனித்த ஒரு செய்தித் தாள் இல்லை. தொலைக்காட்சி சேனலும் இல்லை.. இவையிரண்டில் ஏதேனும் ஒன்று கொண்டு வரும் திட்டம் உள்ளதா?

ஜவாஹிருல்லாஹ் - அவசியமான ஒன்றுதான். கேரளாவில் கூட மாத்யம் போன்ற பிரபல செய்தி தாள்கள் இருக்கின்றன. அவையெல்லாம் பெரும் முதலீட்டில் செய்ய வேண்டியவை. அந்தளவு இப்போது நம்மிடம் நிதி நிலைமை இல்லை. சமுதாயம் குறித்தான அக்கறையுள்ள பெரும் முதலீட்டாளர்கள் முன் வரும்போது இதெல்லாம் சாத்தியப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது.


கேள்வி: கேரளாவில் இஸ்லாமிய வங்கி போன்று அல்பரகா நிதியகம் இருக்கிறது. தமிழகத்தில் கொண்டு வரும் முயற்சிகளை எடுப்பீர்களா?

ஜவாஹிருல்லாஹ்- இல்லை கேரளாவில் நீங்கள் குறிப்பிடுகிற அல்பரகா நிதி நிறுவனம் வங்கி என்பதாக ரிசர்வ் வங்கியில் பதிவிடப்படவில்லை. மாறாக அது வங்கி அல்லாத நிதி நிறுவனம் அதாவது Non Banking Financial Corporation என்றே ரிசர்வ் வங்கியில் அனுமதி வாங்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் வங்கிப் போன்று எல்லா செயற்பாடுகளையும் அவர்கள் மேற்கொள்ளலாம் என்றாலும் காசோலையோ, வரைவோலையோ வழங்க விதிமுறை அனுமதிக்காது. மேலும், இந்த அல்பரகா வளைகுடா வாழ் கேரள அமைப்புகளால் முன்னெடுக்கப்பட்ட ஒரு திட்டம். அப்படி தமிழகம் சார்ந்த வளைகுடா அமைப்புகள் அத்தனை வலிமையாக இதனை முன்னெடுக்குமா என்பதைப் பொறுத்தே இதற்கு விடையளிக்கமுடியும்.

கேரளாவிலேயே முந்தைய ஆட்சியின் முதல்வர் இது குறித்து எல்லா நடவடிக்கைகளும் எடுத்து செயல்படுத்த துவங்குமுன் ஆட்சி மாற்றம் நிகழ்ந்துவிட்டது.

கேள்வி: சக அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றல் குறித்து……….

ஜவாஹிருல்லாஹ்- சமுதாயத்திற்கு பொதுவான விஷயங்களில் பிற அமைப்புகளுடன் கடந்த காலங்களில் இணைந்தே செயல்பட்டுள்ளோம். எடுத்துக்காட்டாக சென்ற திமுக ஆட்சியில் கட்டாய திருமணப் பதிவுச் சட்டம் தொடர்பாக அனைத்து அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டுள்ளோம். சமீபத்தில் 15 வயது பெண் திருமணம் தொடர்பாக பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் எடுத்து நடவடிக்கையை கண்டித்து அனைத்து அமைப்பினருடன் இணைந்து போராட்டத்தில் பங்குக் கொண்டோம்.

________________________________________
ஒவ்வொரு அமைச்சரும் மானியக் கோரிக்கை விவாதத்திற்க்குப் பதிலளித்துப் பேசிக் கொண்டிருக்கும் போது குறுக்கிட்டு யாரும் பேசக்கூடாது. சந்தேகங்கள் விளக்கங்கள் இருப்பினும் அவர் பேசி முடித்தபிறகுதான் பேசவேண்டும் என்பது அவை மரபு. அப்படி பொதுப்பணித்துறை மீதான மானியக் கோரிக்கை மீது அதன் அமைச்சர் பேசிக்கொண்டிருந்த போது இந்துக்கள் இராமனை வணங்குவது போல் கிறிஸ்துவர்கள் இயேசுவை வணங்குவது போல் முஸ்லீம்கள் முகமது நபியை வணங்குவது போல் .. என்று தொடரும்போதே நமது ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அஸ்லம் பாஷா எழுந்து “மன்னிக்கவும் முஸ்லீம்கள் முகமது நபியை வணங்குவதில்லை.அல்லாஹ்வைத் தான் வணங்குவோம் என்று குறுக்கிட்டுக் குறிப்பிட்டார். (அப்போது நான் (ஜவாஹிருல்லாஹ்) மும்பையில் அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் பொதுக்குழுவில் இருந்தேன்) உடனே முதல்வர் ஜெயலலிதா எழுந்து முஸ்லீம்கள் அல்லாஹ்வைத்தான் வணங்குகிறார்கள். முகமது நபியை இல்லை. அமைச்சரின் அந்த பேச்சு சபைக்குறிப்பில் திருத்தப்பட்டுப் பதியப்படும்” என்று கூறியதாக ஜவாஹிருல்லாஹ் குறிப்பிட்டார்.

H.FAKHRUDEEN
ஃபக்ருத்தீன் (இப்னு ஹம்துன்)

--------------------------------------------------------------


மனக்குழப்பத்திற்கு மகத்தான தீர்வு -5



--------------------------------------------------------------

மனக்குழப்பத்திற்கு மகத்தான தீர்வு – 4




7 comments:

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

ஸலாம் சகோ.சுவனப்பிரியன்,
பேட்டி நல்லாத்தான் கொடுக்கிறார்..! தானே தவறை தானாகவே தவறு என்று ஒத்துக்கொண்டது சிறப்பு.

ஒரு முஸ்லிமாக இருந்துகொண்டு இந்தியாவில் அரசியல்வாதியாக இருப்பது கத்தி மேல் நடப்பது மாதிரி..! அவ்வப்போது கால் கிழிந்து இரத்தம் ஊற்றத்தான் செய்யும்..! அதையும் தாண்டி ஈருலகிலும் 'செல்ல வேண்டிய இடத்துக்கு' சரியாக சென்றால்... அனைவருக்கும் மகிழ்ச்சியே..!

அப்புறம்...

///60 70 சதவீதம் உங்கள் மக்களுக்காக மட்டும்தான் பேசினீர்கள் என்று ஒருவர் என்னை கேட்டார். அவர்கள் அப்படிக் கேட்கிறார்கள். நீங்கள் இப்படிக் கேட்கிறீர்கள்.///----இவர்கள் WWW.TNTJ.NET வலைத்தளம் சென்று படிக்க வேண்டும். அங்கேதான், ஒரு எம் எல் ஏ என்ற முறையில் அனைவருக்கும் பொதுவானவராக 'ஜவாஹிருல்லாஹ் இந்துக்களுக்கு எவ்வளவு அரும்பணி ஆற்றுகிறார்' என்ற தகவல்களை அறிந்து கொள்ளலாம்..! :-))
மற்றவர்கள் மறைத்தாலும் / மறந்தாலும்... இங்கே ஜவாஹிருல்லாஹ் பற்றிய மறுபக்க நியூஸ் கரீக்டாக போட்டு விடுகிறார்கள்..!

பகிர்வுக்கு நன்றி சகோ.சுவனப்பிரியன்..!

டிஸ்கி:
இவர் பேட்டியை மட்டும் தனிப்பதிவா போட்டால் பின்னூட்டத்தில் ததஜ வினர் சிலர் வந்து உங்களை தாளித்து விடுவார்களோ என்று மனக்குழப்பம் வந்து அதற்கு தீர்வாக இரண்டு பிஜே வீடியோ போட்டு விட்டீர்களா..? ஹா...ஹா...ஹா...! ஜமாய்ங்க..!

suvanappiriyan said...

சலாம் சகோ ஆஷிக்!

//இவர் பேட்டியை மட்டும் தனிப்பதிவா போட்டால் பின்னூட்டத்தில் ததஜ வினர் சிலர் வந்து உங்களை தாளித்து விடுவார்களோ என்று மனக்குழப்பம் வந்து அதற்கு தீர்வாக இரண்டு பிஜே வீடியோ போட்டு விட்டீர்களா..? ஹா...ஹா...ஹா...! ஜமாய்ங்க..!//

என்னைப் பொறுத்த வரை யார் நல்லது செய்தாலும் அவர்களை ஆதரிப்பேன். அந்த வகையில் ஜவாஹிருல்லாஹ் தன்னால் இயன்ற உதவிகளை சமூகத்துக்கு செய்யும் போது அதற்கு நாம் ஆதரவு தெரிவிக்க வேண்டும்.

மற்றபடி நீங்கள் சொல்வது போல் ததஜ ரை சாந்தப்படுத்த போட்டதாகவும் பிஜேயின் உரையை எடுத்துக் கொள்ளலாம். இதற்கு முன்னும் பல தொடர்களை கொடுத்துள்ளேன். பின்னால் வரும் பதிவுகளிலும் இதன் தொடரை வெளியிடுவேன்.

வருகைக்கும் கருத்தக்கும் நன்றி.

suvanappiriyan said...

சகோ உண்மைகள்!

//முஸ்லீம்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்க இந்திய அரசாங்க அதிகார துஷ்பிரயோகம்.//

ஒரு அரசாங்கமே சதி வேலைகளில் ஈடுபட்டால் நாட்டு மக்களை காப்பாற்றுவது யார்? வேதனையும் வெட்கமும் பட வேண்டிய செய்தி.

suvanappiriyan said...

புனை பெயரில்!

//எங்கே இவர்களை நான் முஸ்லீமா தமிழனா என்னவென்று கேளுங்கள்…?//

இனத்தால் திராவிடன்: மொழியால் தமிழன்: பிறந்த நாட்டால் இந்தியன்: பின்பற்றும் மார்க்கத்தால் முஸ்லிம்: இவை அனைத்தையும் ஒன்றாக்கினால் அங்கு தெரிவது சுவனப்பிரியன்.

//மண்டியிடுவது அரேபிய மன்னனுக்கு,//

ஹா..ஹா.. சரியான காமெடிதான் உங்களோட.....முகமது நபிக்கே முஸ்லிம்கள் மண்டியிட மாட்டார்கள். படைத்த இறைவன் ஒருவனுக்கே ஒரு முஸ்லிமின் தலை கவிழும். சவுதி அரசரின் காலில் விழும் எந்த நாட்டுக்காரனையாவது பார்த்ததுண்டா? ஆனால் இங்கு ஜெயலலிதாவின் காலில் அவரின் வயதின் மூத்த அமைச்சர்கள் முதற்கொண்டு காலில் விழுந்து கிடப்பதை தினமும் பார்க்கிறோமே!

நான் ஒரு கம்பெனியில் கணிணி பிரிவில் எனது தேவைக்கு ஏற்ற ஊதியத்தோடு நிம்மதியாக இருக்கிறேன். அரசருக்கு ஜால்ரா அடித்து பிழைப்பு நடத்த வேண்டும் என்ற எந்த தேவையும் எனக்கில்லை.

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும். சகோ சு.பி.
ஒரு பைசா கூட லஞ்சம் வாங்கவில்லை என்று கூறும் தமுமுக தலைவர் கூறுவதை கேட்டு பெருமிதம் அடைகிறேன்.அவர் அரசியலில் இருக்கும் காலம் வரை இப்படியே இருக்க இறைவனிடம் இறைஞ்சுகிறேன்.இனிமேலாவது நம் சமுதாயத்திற்கு கிடைக்க வேண்டியவைகளை முடக்க பாடுபடாமல் சட்ட சபையில் குரல் கொடுத்து கிடைக்க வழி செய்யவேண்டும்.மேலும் சிலர் சமுதாய ஒற்றுமை வேண்டும் என்று கூறிக்கொண்டு வேட்டுதான் வைக்கிறார்கள்.
kalam

suvanappiriyan said...

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் வேலூர் மாவட்ட மாநாடு நேற்று வேலூரில் நடைபெற்றது. அதிலே பங்கேற்று நிறைவுரையாற்றிய தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலப் பொதுச்செயலாளர் தோழர் கே.சாமுவேல்ராஜ் கூறிய பல தகவல்கள் அதிர்ச்சிகரமானது. அதிலே ஒன்றை இங்கே பதிவு செய்கிறேன். மற்றவை பிறகு.

விருதுநகர் மாவட்ட நீதிமன்றம் ஸ்ரீவில்லிபுத்தூரில் செயல்பட்டு வருகின்றது. அங்கே நீதிமன்றத்திற்காக புதிய நூலகம் கட்டப்பட்டுள்ளது. நூலகத்திற்கு ராம்கோ சிமெண்ட்ஸ் உரிமையாளர் திரு ராமசுப்ரமணிய ராஜா, ஒரு கோடி ரூபாய்க்கு சட்டப் புத்தகங்கள் வாங்கி அளித்துள்ளார். நூலகத் திறப்பு விழாவிற்கு அந்த மாவட்ட நீதிபதியின் பெயரை அழைப்பிதழில் போடவேயில்லை. காரணம் அவர் ஒரு தலித்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடு செய்தது பார் கவுன்ஸில். அவர்களைக் கேட்டால் மிகவும் கூலாக மறந்து விட்டோம் என்று பதிலளித்தார்களாம். யார் யார் பெயரையோ ஞாபகமாக போட்டவர்கள், அந்த மாவட்ட நீதிமன்றத்தின் உயர் பிரிவில் உள்ளவரை மறந்து விட்டார்களாம். எத்தனையோ வழக்கறிஞர்கள் அமைப்புக்கள், சங்கங்கள் இருந்தாலும் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் ( All India Lawyers Union ) மட்டுமே இப்பிரச்சினையை கையில் எடுத்தது.

தீண்டாமை ஒழிப்பு முன்னணியோடு இணைந்து போராடுவோம் என்று வற்புறுத்திய பிறகு அவசரம் அவசரமாக மாவட்ட நீதிபதியின் பெயரை இணைத்து புதிதாக சுவரொட்டி அச்சடித்து அவரைத் தலைமை தாங்க வைத்து விழாவை நடத்தியுள்ளார்கள்.

அரசியல் சாசனத்தை அமுலாக்க வேண்டிய ஒரு பிரிவினராக உள்ள வழக்கறிஞர்களில் சிலரே இது போல தீண்டாமைக் கொடுமையை அனுசரித்தால், அதிலே பாதிக்கப் படுவது ஒரு நீதிபதி என்றால் இந்தியாவிலே தீண்டாமைக் கொடுமை என்றுதான் ஒழியும் என்ற கேள்வி தானாக எழுகிறது.

நீதி தேவதையின் கண்கள் கட்டப்பட்டுள்ளதால்தான் இந்த
கொடுமை நிகழ்ந்ததோ?

வருங்கால சமூகத்திற்கு நாம் எப்படிப் பட்ட வரலாற்றை விட்டு விட்டுப் போகப் போகின்றோம்?

http://ramaniecuvellore.blogspot.com/2012/07/blog-post_30.html

Abu Faheem said...

////கேள்வி: மனிதநேய மக்கள் கட்சியை தேசிய அளவில் முன்னெடுத்துச் செல்லும் திட்டமுண்டா? மேலும், தேசிய தேர்தல்களில் முஸ்லிம் கட்சிகள் ஒருங்கிணைந்து தேர்தலைச் சந்திக்க வாய்ப்புகள் உள்ளதா?

ஜவாஹிருல்லாஹ்: “இல்லை; அதற்கான சாத்தியங்களில்லை, வட இந்திய முஸ்லிம்களுக்கும், தென்னிந்திய முஸ்லிம்களுக்கும் அடிப்படை மனநிலையில் பெரிதும் மாற்றங்கள் இருக்கின்றன. அவர்கள் (வட இந்திய முஸ்லிம்கள்) ஒரு தென்னிந்திய தலைமையை ஏற்றுக்கொள்வார்கள் என்று சொல்வதற்கில்லை. இருப்பினும் அவர்களிடையே அரசியல் விழிப்புணர்வு ஏற்பட தொடர்ந்து நாங்கள் பாடுபட்டு வருகிறோம். அங்கு பல்வேறு கூட்டங்களில் நான் பங்குக் கொண்டு பேசியுள்ளேன். சமீபத்தில் உத்தரபிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிப்பெற்ற பீஸ் கட்சி 2007ல் தமுமுக டெல்லியில் நடத்திய பேரணியினால் கவரப்பட்டு உருவாக்கப்பட்ட கட்சியாகும். எனவே நாங்கள் அங்கு எங்கள்கட்சியை கட்டமைக்காவிட்டாலும் முஸ்லிம்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த முயன்று வருகிறோம்///.

என்னே ஒரு கயமைத்தனம் வடமாநிலதவர்கள் தென்னிந்திய தலைமையை எற்றுக்கொள்ளமாட்டார்கலாம்! ஏன் அவர்கள் உங்கள் தலைமையை ஏற்றுக்கொள்ளவேண்டும்? உங்களுக்கு உண்மையிலேயே சமுதாயதின்மேல் அக்கறை இருந்தால் மற்ற மாநில தலைவர்களிடம் கலந்து பேசி இணைந்து புதிய தலைமையை உருவாக்க வேண்டியதுதானே இந்தியாவிலேயே சிறந்த தலைமைக்கு சொந்தக்காரர்கள் நீங்கள்தான் என்ற மமதை ஏன்?
மேலும் வடமாநில மக்கள் இன்று பெரும் விழிப்புணர்வு பெற்றதற்கு நீங்கள் காரணமல்ல ஏதோ ஒரு ஊர்வலத்தை டில்லியில் நடதிவிட்டதனால் நீங்கள் வடமாநிலங்களில் பிரபலமாகிவிட்டீர்கள் என பகல் கனவு காண வேண்டாம் சகோதரரே . இந்தியாவின் பல மாநிலங்களிலும் பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா, எஸ் டி பி ஐ, ஜமாத்தே இஸ்லாமி போன்ற கட்சிகள் இயக்கங்கள் தினம் தினம் மக்களின் தேவையை முன்னிறுத்தி பல போராட்டங்களை நடத்திவருவது உங்களின் கண்களுக்கு தெரியாமல் போய்விட்டதா? நாங்கல்தான் எனும் அகங்காரம் உங்களை படுகுழிக்கு வலி நடதிக்கொண்டுள்ளது அல்லாஹ் உங்களை காப்பாற்றுவானாக.