Followers

Monday, December 29, 2008

இறந்தவர் உயிர் பெற்று எழ முடியுமா?

இறந்தவர் உயிர் பெற்று எழ முடியுமா?

சில மாதம் முன்பு நாம் பத்திரிக்கைகளில் ஒரு செய்தியைப் படித்திருப்போம். திருச்சியைச் சேர்ந்த வாலிபர் செல்வகுமார் தற்கொலையைப் பற்றியது அந்த செய்தி. இவர் கோவையில் உள்ள தன் அண்ணன் சார்லஸ் வீட்டில் வசித்து வந்தார். வாழ்க்கையில் ஏற்பட்ட விரக்தி காரணமாக மின் விசிறியில் தூக்குப் போட்டுக் கொண்டு தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டார்.

இறந்து போன செல்வகுமாரின் அண்ணன் சார்லஸ் ஒரு இன்ஜினீயர். இவர் தீவிர கிறித்தவ மத நம்பிக்கையுடையவர். இந்த மதப் பற்றினாலேயே தனது வேலையை ராஜினாமாச் செய்து விட்டு 'சுகம் அளிக்கும் அற்புதக் கூட்டம்' என்ற பெயரில் பிரார்த்தனைக் கூட்டங்களை ஆங்காங்கு நடத்தி வந்தார். மனைவி மற்றும் நான்கு குழந்தைகளுடன் வசித்து வரும் இவர் பாஸ்டர் பட்டம் பெற்றவர்.

இறந்து போன தனது தம்பியை அடக்கம் செய்யாமல் தனது வீட்டிலேயே ஒரு ரூமில் வைத்து 'தம்பியை உயிர்ப்பிக்க' ப் போவதாக கூறி ஜெபம் பண்ண ஆரம்பித்துள்ளார். அவரது மனைவியையும் அவரது நான்கு குழந்தைகளையும் தனது தம்பிக்காக ஜெபம் பண்ண வைத்துள்ளார். இது ஒரு நாள் இரண்டு நாள் அல்ல. இரண்டு மாதங்கள் இதே போன்று இவரது குடும்பத்தினர் ஜெபத்தில் ஈடுபட்டுள்ளனர். பிணம் அழுகி துர்நாற்றம் வீசியும் ஜெபத்தை விட வில்லை.

முடிவில் உயிர்த்தெழுந்தது என்னவோ காவல்துறைதான். தற்கொலை செய்து கொண்ட விபரத்தை காவல் துறைக்கு தெரிவிக்காமல் இருந்தது. இறந்த உடலை அடக்கம் செய்யாமல் வைத்துக் கொண்டது. சுகாதாரக் கேட்டை விளைவித்தது - ஆகிய பிரிவுகளில் காவல்துறை வழக்குப் பதிவு செய்திருந்தது.

ஏசுநாதர் இறந்தவர்களை உயிர்ப்பித்திருக்கிறார்: குருடனை பார்வையடைச் செய்திருக்கிறார்: குஷ்டரோகியைக் குணமாக்கியிருக்கிறார்: இதெல்லாம் நடந்தது உண்மை. ஏசுநாதருக்கு இந்த ஆற்றல் வந்தது கர்த்தரிடமிருந்து. எனவே அவரால் அற்புதங்கள் செய்ய முடிந்தது.

இதைப் பார்த்து சார்லஸ் தானும் தன் தம்பியை உயிர்ப்பிக்கப் போகிறேன் என்று கிளம்பியதால்தான் இவ்வளவு பிரச்னையும். இதே போன்ற பல கூட்டங்கள் பல இடங்களிலும் நடப்பதைப் பார்க்கிறோம். மனிதன் என்றுமே இறை சக்தியை அந்த இறைவனின் அனுமதி இல்லாமல் அடைய முடியாது என்பதை படித்தவர்களும் மறந்து விடுவதுதான் விந்தை.

'மேரியின் மகன் ஏசுவே! நான் உம் மீதும் உம் தாயார் மீதும் அருளிய என் அருட்கொடையை நினைவு கூறும். பரிசுத்த ஆன்மாவைக் கொண்டு உமக்கு உதவியளித்து நீர் தொட்டிலிலும் வாலிபப் பருவத்திலும் மனிதர்களிடம் பேசச் செய்தததையும் இன்னும் நான் உனக்கு வேதத்தையும் ஞானத்தையும் தவ்ராத்தையும் இன்ஜீலையும் கற்றுக் கொடுத்ததையும் நினைத்துப் பாரும். இன்னும் நீர் களிமண்ணால் என் உத்தரவைக் கொண்டு பறவை வடிவத்தை போலுண்டாக்கி அதில் நீர் ஊதியபோது அது என் உத்தரவைக் கொண்டு பறவையாகியதையும் இன்னும் என் உத்தரவைக் கொண்டு பிறவிக் குருடனையும் வெண் குஷ்டக்காரனையும் சுகப்படுத்தியதையும் நினைத்துப் பாரும். இறந்தோரை என் உத்தரவைக் கொண்டு உயிர்ப்பித்துக் கல்லறைகளிலிருந்து வெளிப்படுத்தியதையும் நினைத்துப் பாரும்.'

-குர்ஆன் -5:110

இதே போன்ற கூத்துக்கள் இஸ்லாத்திலும் அவ்வப்போது நடப்பதுண்டு. மறைவான விஷயம் எனக்கும் தெரியும் என்று புருடா விட்டு கடைசியில் மாட்டிக் கொண்ட மௌலானாக்கள் பலர் உண்டு. இந்து மத சாமியார்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். அது பலரும் அறிந்த கதை.

ம்ம்... வீட்டுக்கு வீடு வாசப்படி.

4 comments:

கோவி.கண்ணன் said...

இறைவசனம் என்று சொல்கிறீர்களே...இறைவனே பேசியதா ? அல்லது ஜிப்ரல் என்று சொல்கிறார்களே...அது அசரீரியா ?

suvanappiriyan said...

கோவிக் கண்ணன்!

//இறைவசனம் என்று சொல்கிறீர்களே...இறைவனே பேசியதா ? அல்லது ஜிப்ரல் என்று சொல்கிறார்களே...அது அசரீரியா ?//

'வஹீயின் மூலமாகவோ (வானவர் அதாவது பரிசுத்த ஆவி அல்லது தேவர்கள்) மூலமாகவோ திரைக்கப்பால் இருந்தோ அல்லது ஒரு தூதரை அனுப்பி தனது விருப்பப்படி தான் நாடியதை அறிவிப்பதன் மூலமாகவோ தவிர வேறு வழிகளில் எந்த மனிதரிடமும் இறைவன் பேசுவதில்லை. அவன் உயர்ந்தவன். ஞானமிக்கவன்.'
-குர்ஆன் 42:51

இறைத் தூதர்களிடம் இறைவன் பேசுவதற்கு மூன்று விதமான வழிகளைக் கையாள்வதாக இந்த வசனம் தெரிவிக்கின்றது. முகமது நபிக்கு குர்ஆன் அருளப்பட்டது வஹீ என்ற முறையில். அதாவது ஜிப்ரீல் என்ற வானவர் மூலமாக. இவரைத்தான் கிறித்தவர்கள் பரிசுத்த ஆவி என்று கூறுகிறார்கள். ஹிந்துக்கள் தேவர்கள் என்று கூறுவார்கள்.

'எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கிக் கூறுவதற்காக அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம்.'
-குர்ஆன் 14:4

இதன் மூலம் நமது தமிழ் மொழிக்கும் வேதமும் தூதரும் கொடுக்கப்பட்டது என்பது தெளிவாகிறது. யார் என்பதுதான் நமக்கு தெரியவில்லை. ஒருக்கால் திருவள்ளுவராகக் கூட இருக்கலாம். சித்தர் பாடல்களிலும் 'நட்ட கல்லும் பேசுமோ! நாதன் உள் இருக்கையில்' என்று குர்ஆனைப் பேசுவதைப் பார்க்கிறோம்.

'மனிதர்கள் ஒரே ஒரு சமுதாயமாகவே இருந்தனர்.எச்சரிக்கை செய்யவும் நற்செய்தி கூறவும் தூதர்களை இறைவன் அனுப்பினான்'

-குர்ஆன் 2:213

உலகம் முழுவதும் மனிதர்கள் ஒரே சமுதாயமாகவே இருந்தனர் என்பது இதன் மூலம் விளங்குகிறது. இடையில் இத்தனை சாதிகளும் மதங்களும் எங்கிருந்து வந்தது?

வருகைக்கும் கருத்தைப் பதிந்தமைக்கும் நன்றி!

suvanappiriyan said...

பேராசிரியர் எட்மண்ட் ஜேக்கப் என்பவர் பிரெஞ்சு மொழியில் ஒரு வேத ஆராய்ச்சி நூலை எழுதினார். அதன் பெயர் (Ancien Treatment) பழைய ஏற்பாடு என்பதாகும். நெடிய ஆராய்ச்சிக்குப் பின் அதில் அவர் இவ்வாறு எழுதுகின்றார். வேதங்கள் என்று சொல்லப்படுபவற்றில் ஆதி காலங்களில் பல வாய் மொழிகள் வழக்கில் இருந்து வந்தன. ஒரே மாதிரியான வாய் மொழிதான் இருந்து வந்தது எனச் சொல்ல முடியாது. பல்வேறு வாக்குமூலங்கள் மக்களிடையே புழக்கத்தில் இருந்தன.

நாளாக நாளாக அவை எழுத்து வடிவம் பெறலாயின. அதிலும் பல பிரிவுகள் வழக்கில் இருந்தன. இறுதியாக மூன்று வகையான வேத நூல்கள் ஹீப்ரு மொழியில் உருவாயின. ஏசு பிறப்பதற்கு மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்னர் உள்ள நிலவரம் இது.

இந்த மூன்று வேறுபட்ட நூல்களில் இருந்தும் உருவானதே யூதர்கள் இன்று அழைக்கும் பென்டாடெஷ் (Pentateuch) என்ற தொகுப்பாகும். இதைத்தான் அவர்கள் தவ்ராத் வேதம் என்கிறார்கள்.

மேற்கூறிய மூன்று ஹீப்ரு மூல நூல்களில் இருந்து பல பகுதிகள் கிரேக்க மொழியிலும் மொழி பெயர்க்கப்பட்டிருந்தன. இவையே பின்னால் உருவான பைபிள்களுக்கு கருவாக அமைந்தன. மூன்று வகையான வேத நூல்களையும் ஒன்றாகத் தொகுத்து ஒன்றுபடுத்தும் முயற்சி ஏசு நாதர் பிறப்பதற்கு ஒரு நூற்றாண்டு முன்னர் வரை நடந்து வந்தது. இருப்பினும் ஏசு பிறந்து ஒரு நூற்றாண்டு கழிந்த பின்னரே பைபிளுக்குரிய கருப்பொருள்கள் ஒன்று திரட்டப்பட்டன.

மேற்கூறிய கருத்துக்கள் பேராசியர் எட்மண்ட் ஜேக்கப் அவர்களுடைய நீண்ட ஆராய்ச்சிகளின் விளைவுகள் ஆகும்.

-நூல் :
டாக்டர் மாரிஸ் புகைல் எழுதிய 'விஞ்ஞான ஒளியில் பைபிளும் குர்ஆனும்'
பக்கம் 34,35

suvanappiriyan said...

ஏசுவுக்குப்பின் மற்றவர்கள் எழுதி வைத்த ஏசுவைப் பற்றிய வரலாறுதான் புதிய ஏற்பாட்டில் உள்ளதேயன்றி ஏசுவுக்கு அருளப்பட்ட ஏசு போதித்த வேதமன்று. நமக்கு உள்ள சந்தேகம் மிகப் பெரிய தீர்க்கதரிசிகளில் ஒருவரான ஏசுவுக்குக் கடவுளிடமிருந்து எந்த வேதமும் வரவில்லையா?

வந்திருக்கிறது என்பதை பல இடங்களில் புதிய ஏற்பாடே ஒத்துக் கொள்கிறது.

பின்பு ஏசு கலிலியா எங்கும் சுற்றி நடந்து அவர்களுடையே ஜெப ஆலயங்களில் உபதேசித்து ராஜ்ஜியத்தின் சுவிஷேத்தைப் பிரசிங்கித்தார்.
-மத்தேயு 4:23

ஏசு கலிலியாவில் வந்து ராஜ்ஜியத்தின் சுவிசேஷத்தைப் பிரசிங்கித்தார்.
-மாற்கு 1:14

காலம் நிறைவேறிற்று தேவனுடைய ராஜ்ஜியம் சமீபமாயிற்று. மனம் திரும்பி சுவிசேஷத்தை விசுவாசியுங்கள் என்றார்.
-மாற்கு 1:15

ஏசுவைப் பற்றி எழுதிய மத்தேயுவும் மாற்கும் ராஜ்ஜியத்தின் சுவிசேஷத்தை(புத்தகத்தை) ஏசு பிரசிங்கித்ததாக கூறுகிறார்கள். மாற்கு மேலே ஒரு படி போய் தேவனுடைய புத்தகம் அது என்கிறார். தேவனால் அருளப்பட்டதும் ராஜ்ஜியத்தின் சுவிசேஷம் எனப் பெயர் பெற்றதும் ஏசுவால் மக்களுக்குப் பிரசிங்கப்பட்டதுமான அந்த புத்தகம் எங்கே?

அந்த புத்தகம் வெளி உலகுக்கு கொண்டு வரப்படுமானால் கிறித்தவ உலகுக்கு விடை தெரியாத பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.

தமக்கு முன் சென்ற தோராவை உண்மைப் படுத்துபவராக அவர்களின் அடிச்சுவட்டில் மேரியின் மகன் ஈசாவைத் தொடரச் செய்தோம். அவருக்கு இஞ்சீலையும் வழங்கினோம். அதில் நேர் வழியும் ஒளியும் இருந்தது.
-குர்ஆன் 5:46