Followers

Monday, March 13, 2023

 





1877 ஏற்பட்ட தாது வருஷத்து பஞ்சம் பற்றி கேள்விப்பட்டு இருக்கீங்களா? பஞ்சம் என்றால் பஞ்சம் அப்படி ஒரு பஞ்சம். சென்னை மாகாணத்தில் 10 லட்சம் பேர் பசியாலேயே இறந்திருக்கிறார்கள். செத்துக் கொண்டிருந்த மக்களுக்கு உதவ அமெரிக்க கிறிஸ்தவ மிஷனரிகள் சென்னை மாகாணம் முழுவதும் முகாமிட்டது.

 

அப்படி ராணிப்பேட்டைக்கு வந்தவர்தான் டாக்டர் ஜான். இவரது 14 வயது மகள் ஐடா ஸ்கடர். ஒரு நாள் இரவு கதவு தட்டப்படுகிறது. ஐடா கதவை திறக்கிறார். ஒரு பிராமணர் நின்று கொண்டிருந்தார். "அம்மா, என் மனைவி பிரசவ வலியால் துடிக்கிறாள்... உதவி வேணும் உடனே வாங்க" என்று பதறுகிறார்.

 

ஐடாவோ, "நான் டாக்டர் இல்ல என் அப்பாதான் டாக்டர், கொஞ்சம் இருங்க அவரை எழுப்பறேன்" என்கிறார். "இல்லம்மா. என் மனைவிக்கு 14 வயசு தான் ஆகுது. நாங்க பிராமணாளுங்க பெண்ணை ஒரு ஆம்பள தொட அனுமதி இல்லை" என சொல்லிவிட்டு கிளம்பி விடுகிறார். கொஞ்ச நேரத்தில் ஒரு முஸ்லிம் நபர் கதவை தட்டுகிறார்.

 

மனைவிக்கு பிரவச வலி என்பதால் உடனே வருமாறு அழைத்தார். ஐடா தன் தந்தையை பற்றிக்கூற, "வேண்டாம்மா... நாங்கள் இஸ்லாமியர்கள்... எங்க வீட்டு பொண்ணை ஆண்கள் பார்க்கவே கூடாது" என்று அவரும் சோகத்துடனே திரும்பிவிடுகிறார். அந்த பெண்களுக்கு என்ன ஆச்சோ என்று இரவெல்லாம் பதட்டத்துடன் துடித்து பதறுகிறாள் ஐடா.மறுநாள் காலை அந்த கர்ப்பிணிகளின் சடலங்கள், தன் வீட்டை கடந்து கொண்டு செல்லப்படுவதை பார்த்து அதிர்ந்து போய், தேம்பி தேம்பி அழுகிறாள் ஐடா. "என்ன தேசமிது? பெண்களை படிக்க வைக்க மாட்டாங்களாம், ஆனால் பெண்ணுக்கு பெண்தான் பிரசவம் பார்க்க வேண்டுமாம்? இந்த நாட்டில் பெண்களை படிக்கவிடவில்லை என்றால் என்ன, நான் படித்துவிட்டு வந்து இந்த பெண்களை காப்பாற்றுவேன்" என சபதமேற்று அமெரிக்கா சென்று படிக்கிறார். டாக்டராகிறார்..! இதனிடையே, சக நண்பர் ஒருவர் ஐடாவை காதலிக்கிறார். ஆனால் ஐடா அந்த காதலை நிராகரிக்கிறார். மருத்துவம் படித்து முடித்ததுமே அமெரிக்காவிலேயே நல்ல வேலை வாய்ப்புகள் வந்தன. ஆனால் ஐடா அதையும் நிராகரிக்கிறார். தமிழகத்தில் இறந்து போன அந்த கர்ப்பிணிகளின் சடலங்கள் மட்டுமே அவர் கண்முன் வந்து வந்து போயின. ஆனால், வெறும் படிப்பை மட்டும் வைத்துக் கொண்டு எவ்வளவு பேரை தமிழ்நாட்டில் காப்பாற்ற முடியும் என்று நினைத்து, ஒரு ஆஸ்பத்திரி தேவை என்பதை உணர்கிறார். பல நாடுகளில் இந்தியாவின் அவலத்தை சொல்லி பிச்சை எடுக்காத குறையாக, நிதி உதவி கேட்கிறார். ஓரளவு நிதியும் சேர்கிறது...! இனி ஒரு கர்ப்பிணியைகூட சாக விடமாட்டேன் என்ற உறுதியுடன் 1900-ம் ஆண்டு, ஜனவரி மாதம், தமிழகத்தில் மீண்டும் கால் பதிக்கிறார் ஐடா.

 

ஆஸ்பத்திரி கட்டும் பணியை ஆரம்பிக்கிறார். படாதபாடு பட்டு, இறுதியில் 40 படுக்கை வசதியுடன் அந்த மருத்துவமனை ஒருவழியாய் கட்டி முடிக்கப்பட்டு விட்டது. பெண்ணுரிமை என்ற பேச்சுக்கே இடமில்லாத நேரத்தில், பெண்களுக்காகவே ஒரு மருத்துவமனையையே கட்டி முடித்தார் இளம்பெண் ஐடா! அதுதான் ஆசியாவிலேயே தனிப்பெருமை வாய்ந்து. நூற்றாண்டையும் கடந்து இன்றும் பிரம்மாண்டமாய் நிற்கும் வேலூர் "சிஎம்சி" ஆஸ்பத்திரி! ஐடாவின் பணி இத்துடன் முடியவில்லை. அந்த பகுதியில் உள்ள ஒவ்வொரு வீட்டுக் கதவையும் தட்டி, உங்கள் வீட்டு இளம்பெண் பிள்ளைகளை படிக்க அனுப்புங்கள் என்று கெஞ்சி கூத்தாடினார்.

 

இறுதியில் 5 இளம்பெண்களை மட்டுமே அவரால் திரட்ட முடிந்தது. அவர்களுக்கு மருத்துவ பயிற்சி தந்து, முறைப்படி தேர்வு எழுதி, தேர்ச்சியும் பெற வைத்தார் ஐடா. இவர்கள் தான் நம் தமிழகத்தின் முதல் 5 நர்ஸ்கள்..! நம்முடைய பெண்கள் மருத்துவம் படிக்க விதை போட்டதே, இந்த ஐடா தான் என்பதை எத்தனை பேர் நன்றியுடன் இன்று நினைத்து பார்க்கிறார்களோ தெரியவில்லை..! ஆனால், யார் இந்த பெண்? இவர் ஏன் நமக்காக அழுதார்? இவர் ஏன் நமக்காக உருகினார்? இவர் ஏன் நமக்காகவே கடைசிவரை வாழ்ந்தார்? எங்கேயோ பிறந்து, எங்கேயோ வளர்ந்து, நம் தமிழ்நாட்டுக்காக, தன் வாழ்க்கையையே மொத்தமாக அர்ப்பணித்த ஐடா, அன்னை தெரசாவுக்கே "வழிகாட்டி" என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?!! ஆனால், ஒரு பெண் தனி ஆளாக நின்று ஏற்றிய மெழுகுவர்த்தி, இன்று பிரகாசமாக, உலகத் தரத்தோடு, வேலூரில் இன்னமும் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது. லட்சக்கணக்கான மக்களுக்கு உயிர் தந்து கொண்டுமிருக்கிறது..!

 

Thanks to

@malarvili1998

 


1 comment:

Dr.Anburaj said...

ஆம் உண்மைதான். நன்றியுடன் தான் இருக்கின்றோம்..