Followers

Thursday, March 31, 2011

சகோ. சார்வாகனுக்கு சில கேள்விகள்!



//இஸ்லாமின் மத அடிப்படைவாத சட்டமான் ஷாரியா,இஸ்லாமிய நாடுகளில் வாழும் பிற மதத்தவர் நிலைமை, மற்றும் உலகம் முழுதும் இஸ்லாமிய அரசு அமைத்தல் என்ற விஷயங்க்ளே இஸ்லாமை,முஸ்லிம்களை பிற மதத்தவரின் விமர்சனத்திற்கு உள்ளாக்கியது.//

ஒரு இசமோ மார்க்கமோ மதமோ வளர்வதால் அதனால் சமூகத்துக்கு நன்மை கிடைத்தால் அதை வரவேற்பதுதானே முறை! பெரியார் எவ்வளவு பாடுபட்டார்? அவரால் சாதியை ஒழிக்க முடிந்ததா? இன்னும் எத்தனை பெரியார்கள் முயன்றாலும் இந்திய சாதி சமூக கட்டமைப்பை உடைக்க முடியாது. மத புத்தகங்களில் வர்ணாசிரமம் இருக்கும் வரை, சாதியை ஒழிக்க முடியாது. எல்லோரும் படித்து விட்டால் சாதிகள் ஒழிந்து விடும் என்ற கருத்து முன் வைக்கப்பட்டது. முன்பு கத்தி அரிவாளால் வெட்டிக் கொண்டவர்கள் இன்று மானிட்டர், கீ போர்ட, மௌஸ் மூலமாக சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். நேரமிருப்பின் வினவு பக்கமும் டோண்டு பக்கமும் சென்று பார்ப்பனர்கள், படையாச்சி,தேவர், ஆதிதிராவிடர் சம்பந்தமாக வந்த பதிவுகளையும் அதற்கு வந்த பின்னூட்டங்களையும் சற்று பார்வையிடவும்.

பிராமணர்கள் அல்லாத மற்றவர்களை சூத்திரன் என்று சொல்லும் இந்து மதம், அதே இனத்திலிருந்து இஸ்லாத்தை தழுவிய என்னை சொல்ல மனம் வருமா? சொல்லத்தான் முடியுமா? சொல்லத்தான் விடுவோமா? இது இஸ்லாத்தால் எங்களுக்கு கிடைத்த பேறு அல்லவா!

தமிழகத்தில் எங்கோ ஒரு குக்கிராமத்தில் பிறந்த நான் சவுதி அரேபியாவின் புகழ் பெற்ற ஒரு மசூதியில் தலைவராக நின்று பல முறை தொழுகை நடத்தியிருக்கிறேன். என்னைப் பின்பற்றி சவுதி, எகிப்து, சூடான், பிலிப்பைன், பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாட்டவர்கள் நான் குனிந்தால் குனிகிறார்கள். நான் நிமிர்ந்தால் நிமிர்கிறார்க்ள. நான் தொழுகையை முடித்தால் என்னைப் பின்பற்றி அவர்களும் தொழுகையை முடிக்கிறார்கள். இது இஸ்லாத்தினால் எனக்கு கிடைத்த பேறு அல்லவா? நம் தமிழுக்கு கிடைத்த பெருமை அல்லவா!

இஸ்லாத்தை கூட்டாக ஏற்ற ஒரு தாழ்த்தப்பட்ட கிராமத்துக்கு பேட்டி எடுப்பதற்காக ஜீனியர் விகடன் சென்றிருந்தது. அங்கு கல்லூரியில் படிக்கும் மாணவனிடம் 'நீங்கள் இஸ்லாத்துக்கு சென்றதால் என்ன மாற்றம் வந்து விடும் என்று நினைக்கிறீர்கள்?' என்று கேட்டனர். 'எந்த மாற்றம் வருகிறதோ இல்லையோ! இனி என்னை விட வயதில் சிறியவன் எல்லாம் என்னை 'டேய் சரவணா!' என்று கூப்பிடமாட்டார்கள். 'ரஹீம் பாய்' என்றுதான் கூப்பிடுவார்கள். அது ஒன்று போதும்' என்று சொன்னதைப் படித்து என் கண்கள் கலங்கி விட்டது. எந்த அளவு மனதால் பாதிக்கப்பட்டு இருந்தால் இந்த வார்த்தைகள் வரும்!

நம் காலத்திலேயே திண்ணியம், பாப்பாரப் பட்டி, கீரிப்பட்டி, கீழ்வெண்மணி சம்பவங்களை மறந்திருக்க மாட்டீர்கள் என்றே நினைக்கிறேன். நமது சமூகமும் நமது மூதாதையர்களும் சிறந்தவர்களாக இருந்திருந்தால் எங்கோ பிறந்த அரபியரான முகமது நபியை வாழ்க்கை வழி காட்டியாக எனது முன்னோர்கள் எடுத்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. நமது நாட்டில் இஸ்லாத்தின் முன்னேற்றம் தடைபடுமானால் அதனால் இஸ்லாத்துக்கு எந்த பின்னடைவும் இல்லை. மாறாக பின்னடைவு நமது நாட்டுக்ககும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும்தான்.

சாதிக் கொடுமை அரசு ஆதரவோடு நடைபெறுகிறது என்பதற்கு சமீபத்திய கோர்ட் ஆர்டரை வினவு தளத்திலிருந்து சுருக்கமாக பார்ப்போம்.

வழக்கு 07.02.11 அன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுகுணா முன்பு விசாரணைக்கு வந்தது. உறுத்துக்கட்டளை மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்டு, இடைக்கால தடைவிதிக்கக் கோரும் மனுவைத் தள்ளுபடி செய்ததோடு இத்தகையபழக்கவழக்கங்களை அரசியலைப்பு சட்டம் ஷரத்து 13 அங்கிகரிப்பதாகவும் தெரிவித்தார். அரங்கநாதனுக்காக வழக்காடிய வழக்குரைஞர் சகாதேவன் சாதி வேற்றுமை மற்றும் தீண்டாமை காரணமாக பணிவழங்க மறுப்பது அரசியலமைப்பு சட்டம் வழங்கும் சமத்துவ வேலை வாய்ப்பிற்கான உரிமைக்கு எதிரானது என வாதிட்டதை ஏற்காமல் மத உரிமையில் சமத்துவம் (வெங்காயம்!) எல்லாம் கிடையாது என்பதை அரசியலமைப்பு சட்டம் பிரிவு 25 கூறியிருப்பதாகவும், உச்சநீதிமன்றத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் வழக்கு நிலுவையில் இருப்பதால் எதுவும் தற்போது செய்யவியலாது என தடையானை மனுவை தள்ளுபடி செய்து பார்ப்பன மேலாதிக்கத்திற்கு மயிலிறகால் வருடிவிட்டிருக்கிறார் நீதிபதி சுகுணா. உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பது என்பது வேறுவழக்கென்றும், அது அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் வழக்கு. ஆனால், இந்தப் பணி கோயில் பணிவிடைகளுக்கான வேலை என்று வாதாடியதையும் நிராகாரிதுள்ளார் நீதிபதி.

பார்ப்பனரல்லாதோர், கோயிலில்; மணியாட்டினால் பூசை செய்தால் கடவுள் சிலையைவிட்டு வெளியேறிவிடுவார் என்று உச்சநீதிமன்றமும், பார்ப்பனரல்லாதோர் பிரசாதம் செய்தால், தண்ணீரெடுத்து சிலையை குளிப்பாட்டினால் இந்துமத உரிமைக்கு எதிரானது என உயர்நீதிமன்றமும் தீர்ப்பு வழங்குகிறது.

இத்தனை நடக்கும்போதும் சாதியா? அது பள்ளிக்கூடத்தில் சேர்க்கும்போது குழந்தைகளிடம் கேட்பதனால்தான் உருவானது என்பதுபோல் பார்ப்பன புரட்டையும் வெட்கமில்லாமல் பேசித்திரிகின்றனர் பார்ப்பன மற்றும் கருப்புஅம்பிகள்.

இத்தகைய பார்ப்பன மயமான தீர்ப்பை வழங்கும் நீதிபதி நேர்மையானவராக, பார்ப்பனர் அல்லாதவராக இருந்தால் சரியான தீர்ப்பை வழங்கிவிடுவார்கள் என்ற மூடநம்பிக்கையை இந்த தீர்ப்பு சாட்டையால் அடிக்கிறது. காசு வாங்கிக்கொண்டு தீர்ப்பை எழுதினார்என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகாதவர் நீதிபதி சுகுணா! ஆனால், பிரச்சனை நீதித்துறை காவி மயமாக இருப்பது, நீதிபதி பார்ப்பன ஆதரவாளராக இருப்பது. அரசியலமைப்பு சட்டத்தின் ஷரத்துக்கள் 13, 15 மற்றும் 26 ஆகியவை இந்து மதத்தின் தீண்டாமை, பிற்போக்குதனம், சாதி ஒழிப்பு என்பதை ஊறுகாய் போல தொட்டுவிட்டு, மதம் என்பது என்ன? சாதி என்பது என்ன? இந்து மதத்தின் சாதி தொடர்வது ஏன்? மதச்சார்பின்மை என்பது என்ன? என்பதையெல்லாம் விளக்காமல் சாதுர்யமாக பழைய கழிவுகளை கரண்டியில் அள்ளிப் பானையில் போட்டு பொங்கல் வைத்து சமத்துவம் பேசுகிறது அரசியலமைப்புச் சட்டம்’. நீதித்துறை அதற்கு மகுடம் சூட்டுகிறது.

செயலாளர்
மனித உரிமைப் பாதுகாப்பு மையம்
சென்னைக் கிளை

இது ஏதோ படிப்பறிவில்லாத அந்த காலத்தில் வந்த தீர்ப்பல்ல. போன மாதம் வெளியான தீர்ப்பைத்தான் நாம் பார்க்கிறோம்.

எனவே தவறு எங்கு நடக்கிறதோ அங்கு தான் சார்வாகன் போன்றவர்களின் சேவை இருக்க வேண்டுமே யொழிய ஒரே வடிகாலான இஸ்லாத்தை குறை கூற முனைவது ஒடுக்கப்பட்டவர்களை மேலும் மேலும் அதள பாதாளத்தில் தள்ளுவதாகவே முடியும்.


இனி விடுதலையில் வந்த ஒரு பேட்டியைப் பார்ப்போம்


தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் 1300 மக்கள்தொகை கொண்ட ஒரு சிற்றூர் மீனாட்சிபுரம். அங்கே வாழ்ந்து வந்தவர்களில் பெரும்பாலோர் தீண்டத்தகாதவர்களே. அவர்களில் பெரும் எண்ணிக்கை கொண்டவர்கள் 1981 பிப்ரவரியில் இஸ்லாம் மதத்திற்கு மாறினர். அதனால் ஒரு முரண்பாட்டின் மையமாக அது ஆயிற்று.

விசுவ இந்து பரிசத், அதன் தோழமை அமைப்புகளைப் பொறுத்தவரை, இந்தத் திடீர் மத மாற்றத்திற்கான காரணம் உள்ளூர் குறைபாடுகளின் வெளிப்பாடு இல்லை. ஆனால், எண்ணெய் வள நாடுகளால் நிதி உதவி அளிக்கப்பட்ட, இந்துக்களை, இந்து மதத்தை, இந்துஸ்தானத்தை அழிக்கும் ஒரு பழைய சதித்திட்டத்தின் ஒரு பகுதியே இந்த மதமாற்றங்கள் அன அவை கருதின. சமூகத்தில் சமத்துவம் மறுக்கப்பட்டதை எதிர்க்கும் ஒரு நடவடிக்கையாகவே இங்கிருந்த 1,250 தீண்டத்தகாதவர்களில் அ,000-த்துக்கும் மேற்பட்டோர் இஸ்லாத்திற்கு மதம் மாறினர் என அறிவிக்கப்பட்டது.

சமூகத்தில் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்னும் விதிகளை உயர்சாதியினரான தேவர்கள் வகுத்தனர்; அந்த விதிகளை மீறுதல் கடுமையான எதிர்விளைவையே உருவாக்கிற்று. 1980-81 இல் இப்பகுதியைச் சுற்றியிருந்த சில இடங்களிலும் இஸ்லாத்திற்கு மதமாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால் இந்த மதமாற்றங்கள் வி.இ.ப. அல்லது மற்ற இந்து அமைப்புகளிடமிருந்து எந்தவிதப் பெருங்கூச்சலையும் எழுப்பவில்லை. ஏனெனில் மீனாட்சிபுர மதமாற்றங்கள் போல பெரும் எண்ணிக்கையிலான மதமாற்றங்கள் அல்ல அவை. மேலும் உயர் ஜாதியினரிடையே கசப்பு மிகுந்த (சாதிகலப்பு) உறவுகளும் உயர்சாதியினரின் எதிர்ப்பைத் தடுத்தன. தேவர் போன்ற உயர்சாதியினரிடம் தீண்டத்தகாத மக்கள் சமூக அளவிலும் அரசியல் நிலையிலும் பட்ட அவமானங்களின் எதிர்விளைவே இந்த மதமாற்றங்கள் எனத் தோன்றுகிறது.

மீனாட்சிபுரத்தைச் சுற்றியுள்ள சிற்றூர்களில் இருந்து ஆண்கள், பெண்கள் உள்ளிட்ட பல ஆயிரக்கணக்கான முஸ்லிம் மக்கள் இந்த ஊர்களுக்குள் நுழைந்து, மதமாற்றத்திற்கு ஆதிதிராவிடரைக் கட்டாயப்படுத்தினர் என்பதாக இந்த நிகழ்ச்சிக்கு ஆர்.எஸ்.எஸ்., வி.இ.ப. போன்றோர் மதக்கண்ணோட்டத்துடன் விளக்கம் அளித்தனர். கடந்த காலங்களில் இங்கு நிலவிய தூய்மை, தீட்டு போன்ற கடுமையான ஜாதி வெறித்தனத்திற்கும், இந்த மத மாற்றங்களுக்கும் இடையே உள்ள தொடர்பை ஒப்புக்கொள்ள இயலாத வி.இ.பரிசத்தினால், மீனாட்சிபுரம் மதமாற்றங்கள் வெளிக்கொணர்ந்த பிரச்சினைகளை ஏற்றுக்கொள்ளவோ, எதிர்கொள்ளவோ இயலவில்லை என்றே தோன்றுகிறது.

இந்த மதமாற்றங்களுக்குப் பின்னணியில் உள்ள சமூக சீர்திருத்தம் என்னும் செயல்திட்டம் இருட்டடிப்பு செய்யப்பட்டு விட்டது. சமூக அளவில் உரிமைகள் பலவற்றைப் பெற்றுள்ள, பிற்போக்கு மனப்பான்மை கொண்ட வி.இ.பரிசத்தின் பங்கு இவ்வாறு இருட்டடிப்பு செய்யப்பட்டதில் பெரிதாகும். உயர்ஜாதி இந்துக்கள் தொடர்ந்து தீண்டத்தகாத மக்களை ஒடுக்கி, கொடுமைப்படுத்திக் கொண்டே வருவது, இந்து மதத்திலிருந்தே முற்றிலுமாகத் தங்களை அவர்கள் துண்டித்துக் கொள்ளும் ஒரு நிலைக்கு வழி வகுக்கவே செய்யும். இந்த சமூக நிலையை வி.இ.ப. சிறிது கூடப் புரிந்து கொள்ளும் நிலையில் இல்லை. இத்தகைய சமூகச் சூழ்நிலையை வி.இ.ப. சரியாகப் புரிந்து கொள்ள இயலாமற் போனதன் காரணமாக, ஒரு சமூகத்தினர் தாங்களாகவே இந்து மதத்திலிருந்து விலகி, மற்றொரு மதத்தில் சேர்ந்து கொள்வதைத் தவிர வேறு எந்த வழியும் அற்றவர்களாகவே சமூக அளவில் ஒடுக்கப்பட்ட மக்கள் ஆகிவிட்டனர்.

இந்து மதத்துடனான தங்களது தொடர்பை இவ்வாறு அவர்கள் துண்டித்துக் கொண்டதை பிற்போக்கு மனப்பான்மை கொண்ட உயர்ஜாதி இந்துக்களால் ஏற்றுக் கொள்ளவோ, பொறுத்துக்கொள்ளவோ இயலாமல் போனது என்றே தோன்றுகிறது. இத்தகைய மதமாற்ற நிகழ்ச்சிகள் பெரும் அளவிலான தர்மசங்கடங்களை உருவாக்கும் என்பதும், இந்து சமூகத்தினுள் பார்ப்பனர்களின் இந்துக் கோட்பாட்டினால் ஏற்பட்டுள்ள ஜாதி அமைப்பு முறையின் விரும்பத்தகாத உண்மைகள் பலவற்றை வெளிப்படுத்தும் என்பதும் இதன் காரணங்களாக இருக்கக்கூடும் என்ற வாதமும் சரியாகவே தோன்றுகிறது.(ராஜ்: 233)

வி.இ.ப. மற்றும் இந்து முன்னணி, ஆர்ய சமாஜம் போன்ற அமைப்புகளால் மீனாட்சிபுரம் மதமாற்ற நிகழ்ச்சிக்குப் பரவலான விளம்பரம் அளிக்கப்பட்டது. அதன்பின், மதம் மாறியவர்களில் 7 பேர் மறுபடியும் இந்து மதத்திற்கு மாறியதாக அறிவிக்கப்பட்டது.(கான் அ991 : 49)

இந்த நிகழ்ச்சிக்குப்பின் கலாச்சாரத்தைப் பாதுகாக்கும் சமஸ்கிருத ரட்சக யோஜனா என்ற அமைப்பை வி.இ.ப. தொடங்கியது. 1982 நவம்பர், டிசம்பர் மாதங்களில் மக்களின் விழிப்புணர்வுக்காக ஜன ஜக்ரண அபியானா என்ற அமைப்பையும் அது தொடங்கியது. இந்து மதத்தை அழிக்கும் அனைத்துலக சதித்திட்டத்தைப் பற்றி இந்துக்களுக்கு எச்சரிக்கை அளிப்பதே இதன் நோக்கம். இந்தப் பிரசாரங்களின் போது நன்கொடையாகப் பொதுமக்களிடமிருந்து ஓரளவுக்கு நிதி திரட்டிக் கொள்ளவும் வி.இ.பரிசத்தால் முடிந்தது. என்றாலும், நன்கொடை அளிப்பதற்கு மேலாக மக்கள் இந்தப் பிரச்சினை பற்றி அதிக அக்கறையோ, கவலையோ காட்டவில்லை.

தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்திப் பிரச்சாரக் கூட்டங்களும், மாநாடுகளும், பேரணிகளும் நடத்துவதில் 1980-ஆம் ஆண்டுக்குப் பின் வி.இ.ப. தன்னை ஈடுபடுத்திக் கொண்டது. மதமாற்றப் பிரச்சினை பெரிதுபடுத்தப்பட்டு, தேசிய பாதுகாப்புக்கும், ஒருமைப்பாட்டுக்கும் ஒரு பெரும் அச்சுறுத்தலாகக் காட்டப்பட்டது. கிறிஸ்தவ மத அமைப்புகளின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளில் அரசின் தலையீட்டை வி.இ.ப. கோரியது.

பார்ப்பனீய ஆதிக்கம் ஆட்டம் கண்டுவிடுகிறது என்பதற்காகவே அவர்கள் மதமாற்றத்தை - அதுவும் சுமார் 100 கோடி மக்கள் கொண்ட நாட்டின் தென்கோடியில் எங்கோ ஒரு சிறு கிராமத்தில் ஏற்பட்டதை ஒரு பெரும் பூகம்பமாகக் கருதி, தங்கள் அமைப்பைப் பலப்படுத்தி, இன்று பகிரங்கமாக 'திரிசூலம்' வழங்கி, வன்முறையை வெளிப்படையான ஆயுதமாகக் கையாளுகின்றனர்.

மத்தியில் உள்ள ஆட்சி பெயரளவுக்குத் தேசிய ஜனநாயக முன்னணி என்ற 23 கட்சிகள் கூட்டணியாக முத்திரை குத்தப்பட்டுள்ளது என்றாலும், நடைமுறையில் அது பி.ஜே.பி. என்ற பெரிய அண்ணனின் தாக்கீது செல்லும் ஆட்சியாக நடைபெற்று வருவது உலகறிந்த உண்மையாகும்.

அக்கட்சியினர், இந்திய அரசியல் சட்டத்தினைத் தூக்கி எறிந்து விட்டு, பழைய மனுதர்மத்தையே சட்டமாக வைத்து ஆட்சி நடத்த வேண்டும் என்று வெளிப்படையாகத் தீர்மானம் போட்டு முழங்கும் அபாயகரமான நிலை ஏற்பட்டுள்ளது.

'விசுவ இந்து பரிஷத்' ஒரு கலாச்சார அமைப்புதானே, உலகம் முழுவதிலும் உள்ள இந்துக்களை இணைத்து ஒரு புது உணர்ச்சியைத் தோற்றுவிப்பது தானே என்ற கருத்தில் இதில் முக்கியப் பங்கு வகித்த டாகடர் கரண்சிங் போன்ற அறிஞர்கள், இந்த பிற்போக்குத் தனத்தை - அதாவது இந்திய அரசியல் சட்டத்திற்குப் பதிலாக மனுதர்மமே மீண்டும் அரசியல் சட்டமாக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாடு அபாயகரமானது; அது மீண்டும் 2-ஆம் நூற்றாண்டுக்கு நாட்டைப் பின்னோக்கி அழைத்துச் செல்லும் என்பதால் அவர் அதிலிருந்து விலகி கொண்டார்(இவ்விவரங்கள் மேற்சொன்ன நூலில் 31-ஆம் பக்கத்தில் உள்ளது).

பசு பாதுகாப்பு, கணபதி ஊர்வலம், புதிய கோயில் கும்பாபிஷேகம், அனுமார் ஜெயந்தி விழாக்கள், இராமன் கோயில் கட்டும் விவகாரம் இவைகள் மூலம் தான் பாமர மக்களுக்குப் 'பக்தி போதை'யைத் தந்து இந்து மதம் என்கிற பார்ப்பன மதத்தினை வலியுறுத்த அவர்கள் முயலுகின்றனர்!.

மதம் மாறுவதற்குரிய நிர்பந்தம் ஏன் ஒடுக்கப்பட்ட மக்காளுக்கு ஏற்படுகிறது என்பதை ஆயிரம் ஆராய்ச்சியாளர்கள், அறிவுஜீவிகள் விவாதம் செய்வது - அய்வர் யானையை வர்ணித்த கதைபோலச் செய்தாலும் - அந்த மக்களைYஏ நேரில் கண்டு அவர்கள் சொன்னதை அப்படியே வெளியிட்டுள்ளோம்!.

நோய் நாடி, நோய் முதல் நாடுவதே உயர்ந்த சிகிச்சை முறை; நோயின் கொடுமையால் அவதியுற்று அழுகின்றவனை அடித்து மாற்ற முயற்சிப்பது பலன் தருமா? வாசகர்களே முடிவு செய்யட்டும்!.

இந்து மதத்திலிருந்து முஸ்லிம் மதத்துக்கு மாறியுள்ள உமர்செரீப் கூறியதாவது:-

உமர்செரீப்:
இங்கே வந்த மணியன் கேட்டார், "நீங்க பெரியார் கொள்கைக்காரங்கறீங்க; இந்த மதத்திலும் சாமி கும்பிட வேண்டியது தானே இருக்கிறது? பின் ஏன் மதம் மாறினீங்கன்னு கேட்டார்." நாங்க சொன்னோம், "இந்து மதத்திலே சாதி இருக்குது. இங்க சாதி வித்தியாசம் இல்லை. எனக்கு கடவுள் மறுப்பு கொள்கை இருக்கலாம். ஆனல், எல்ல இடத்திலும் உன் சாதி என்னன்னு தானே கேக்கறாங்க" என்று சொன்னேன்!
ஆசிரியர்: அதுக்கு மணியன் என்ன சொன்னார்?

உமர்செரீப்: அதுக்கு அவர் ஒண்ணும் சொல்லல்லே.

ஆசிரியர்: உங்களுக்கு இந்த எண்ணம் திடீர்னு தோணுச்சா? இல்ல கொஞ்ச நாளாவே இருந்ததா?

20 வருடம் முன்பே

உமர்செரீப்:
20 வருஷத்துக்கு முன் எங்க தகப்பனார் அப்படி மாறணும்னு ஏற்பாடு பண்ணினார். ஆனா சில பெரியவங்கள்லாம் தடுத்து நிறுத்திட்டாங்க.
இப்ப நாங்கள்லாம் படிச்சவங்க. 10, 20 பேர் செர்ந்து இதிலேயே இருப்பதா? அல்லது ஒரு 50 வருஷம் கழித்தாவது விமோசனம் உண்டா அப்படீன்னு யோசிச்சோம். இன்னும் 50 வருஷம் கழிச்சும் நமக்கு தாழ்த்தப்பட்டவங்கற முத்திரை மறையாது என்று உணர்ந்த பிறகு தான் மதம் மாற முடிவு செய்தோம்.

ஆசிரிய: நீங்க படிச்சவங்கன்னு சொன்னீங்க; அதுவரைக்கும் படிச்சிருக்கீங்க?

உமர்செரீப்: பி.ஏ. வரை படிச்சிருக்கேன்.

ஆசிரியர்: எந்தக் காலேஜில்?

உமர்செரீப்: ஸ்ரீவைகுண்டம் காலேஜ்ல.

ஆசிரியர்: சரி, இவ்வளவு படிச்சிருக்கீங்க. உங்களுக்கு சலுகைகள்லாம் கிடைச்சிருக்குமே!

உமர்செரீப்: ஆமா கிடைச்சது.

ஆசிரியர்: உங்களுக்கு தாழ்த்தப்பட்டவங்க அப்படீங்கறதனாலதான் இந்த சலுகையெல்லாம் கிடைச்சது. அப்போ இந்தச் சலுகையெல்லாம் கிடைக்காதுன்னு தெரிஞ்சு தானே மாறுனீங்க?

உமர்செரீப்: ஆமா! தெரிஞ்சு தான் மாறுனோம். சலுகை கிடைக்காட்டிலும் பரவாயில்லை தாழ்த்தப்ப்ட்டவன் என்கிற முத்திரையில்லாம இருந்தால் போதும் என்று மாறினோம்.

இப்போது ஏன் இந்த முடிவு?

ஆசிரியர்: இதுக்கு முன்னால் இந்தக் கொடுமைகள்லாம் அனுபவிச்சுக்கிட்டுதானே இருந்தீங்க? இப்ப எப்படி திடீர்னு இந்த முடிவுக்கு வந்தீங்க?

உமர்:
நாங்கள் கொடுமை அனுபவிச்சாலும் பரவாயில்லை எங்க வருங்கால சந்ததியாவது நல்லா இருக்கட்டுமென்றுதான் இந்த முடிவுக்கு வந்தோம். வருங்கால சந்ததி மற்றவர்களோடு சரி சமமாக மானத்தோட இருக்கணும்னுதான் இந்த முடிவுக்கு வந்தோம்.
ஏது மரியாதை?

ஆசிரியர்: நீங்க பி.ஏ., வரைக்கும் படிச்சிருக்கீங்களே அதுக்காகவாவது கிராமத்தில் மரியாதை காட்டமாட்டார்களா?

உமர்: எங்கே காட்டுறங்க? இல்லையே!

ஆசிரியர்: உங்க சாதியாரைத் தவிர, பிற சாதியார் மரியாதை காட்டறாங்களா?

உமர்:
எங்க காட்டறாங்க?. வெள்ள வேட்டி, வெள்ள சட்டை மோட்டுகிட்டு போனாலே, அதோ போறான் பாரு வெள்ள வேட்டி கட்டிக்கிட்டு, படிச்சுப்புட்டானாம் அப்படீன்னு கிண்டல் செய்றாங்க. டிபார்ட்மெண்டில கூட படிச்சாலும் பட்டம் பெற்றாலும் துவேஷம் தான் பண்றாங்க.
ஆசிரியர்: இங்க பொருளாதாரத்தில் எப்படி? தொழில் முறை என்ன?

உமர்: இங்க பெரும்பாலும் விவசாயம் பண்றாங்க; எல்லாருக்குமே சொந்ததைடங்கள் இருக்கு.

ஆசிரியர்: நீங்க யாராவது தினக் கூலிகளாக இருக்கீங்களா?

உமர்: தினக்கூலிகளும் பத்து இருபது பேர் இருக்காங்க. அவங்கலும் மதம் மாறியிருக்காங்க.

துவேஷமே காரணம்

ஆசிரியர்:
மற்ற கிராமத்திலே இருக்கிற தாழ்த்தப்பட்டவங்களை விட, குறிப்பா திருநெல்வேலி பக்கத்தில் இருக்கிறவங்க படிப்புத்துறையில் முன்னேறுனவங்க பொருளாதாரரீதியில் - எடுத்துக்கிட்டாலும் மற்றவங்களைவிட நல்ல நிலையில் இருக்கிறீங்க. அப்படி இருந்தும் உங்களுக்கு இந்த எண்ணம் தோண வேண்டிய அவசியமென்ன?

உமர்:
துவேஷம் தான் காரணம். மனித உரிமை தான் வேண்டும். படிப்பு பரவப்பரவ மக்களுக்கு பகுத்தறிவு உண்டாகுது. அப்போது இதுல இருக்கிறதனால என்ன நன்மைன்னு சிந்திக்கிறாங்க. நம்மை மனுசனா மதிக்காத சாதியில ஏன் இருக்கணும்? நம்மை மதிக்கிற மதத்துக்கு போயிடலாமேன்னு நினைக்கிறாங்க.

ஆசிரியர்: நீங்க பெரியார் கூட்டங்களையெல்லாம் கேட்டிருக்கீங்கள்ள, அந்தக் கொள்கையில் நம்பிக்கை உண்டா?

உமர்: ஆமா!

ஆசிரியர்:
இருந்தாலும் நீங்க இளைஞர்கள், உங்க சமுதாயத்தில் இருக்கிற பெரியவங்க என்ன நினைக்கிறாங்க? அவங்க மதம் மாற ஆதரவா இருந்தாங்களா?

உமர்: நாங்க எந்தப் பெரியவங்களையும் அணுகவில்லை; எல்லாம் இளைஞர்கள் தான். ஆனா எங்க ஊர் பெரியவங்களும் மதம் மாறியிருக்காங்க.

ஆசிரியர்: இங்கு மொத்தம் எத்தனை குடும்பங்கள் மதம் மாறியிருக்கு?

உமர்: மொத்தம் 300 குடும்பத்தில் 210 குடும்பங்கள் மதம் மாறியிருக்காங்க.

ஆசிரியர்: ஒரு குடும்பத்துக்கு எத்தனை பேர்?

உமர்: சராசரி 5 பேரு.

ஆசிரியர்: அப்ப ஒரு ஆயிரம் பேர் இருக்கும்.

உமர்: ஆமாம்!

முக்கியமானவரை மறப்பதா?

ஆசிரியர்: இப்ப சாதாரணமா தீண்டாமையினால தொந்தரவு, சுயமரியாதையில்லாம நடத்தப்படுவது, நமக்கு படிச்சும் கவுரவம் இல்லை – இது மாதிரி தொந்தரவு இருக்குது.
இந்து மதத்தில் தீண்டாமையெல்லாம் அனுசரிக்கிறது இல்லைன்னு சங்கராச்சாரி சொல்றாரே?. மதாச்சாரியார்கள் அப்படி சொல்லியும் நடைமுறையில் இங்க இருக்கறவங்க கடைபிடிக்கறதில்லையேன்னாலும் - நமக்கு சங்கராச்சாரி தானே முக்கியம்! அவுங்கள விட்டுட்டு எப்படி போறதுன்னு நீங்க நினைக்கலியா?

உமர்: இந்து மதம்னு ஒண்ணு இருக்கத்தான் செய்யுது; இல்லேன்னு சொல்லல. இங்கே தாழ்த்தப்பட்டவங்களுக்கு எந்தப் பயனும் கிடையாது. தாழ்த்தப்பட்டவன் இந்துவா இருக்கிறதில அர்த்தமேயில்லை.
ஏன்னா, அவங்க ‘சாதி இந்து’ன்னு வைச்சுக்கிறாங்களே தவிர ‘அரிஜன்’ என்பதை அப்படியே தான் வைச்சிருக்காங்க. அதை மாத்தலியே.
அவங்க அன்னைலேயிருந்து இன்னைய வரைக்கும் ஒரு ‘அரிஜனை’ இந்துவா ஏத்துகிறதில்ல.
ஆக முடியாது
இவன் தான் அவங்களோட போயிடுறானே தவிர இவனை அவுங்க ஒத்துக்கறதில்ல. இங்கே கலவரம் நடக்குதுன்னா சாதி ‘இந்து’க்களுக்கும் ‘அரிஜனனு’க்கும் தான் சண்டைன்னு சொல்றானே தவிர இந்துக்கும் இந்துக்கும் சண்டேன்னு சொல்றதில்ல. அப்படியிருக்கும் போது எப்படி ‘அரிஜன்’ இந்து ஆக முடியும்?

ஆசிரியர்: சமஸ்கிருதத்தில் சாதி இந்துக்களுக்கு வர்ணஸ்தர்கள் மற்றவர்களுக்கு ஈழவர்களையும் சேர்த்து அவர்ணஸ்தர்கள் என்று சொல்கிறார்கள். அந்த அவர்ணஸ்தர்களுக்கும் கீழே எல்லோருக்கும் கீழே கடைசியாக தாழ்த்தப்பட்டவர்கள் பட்டியலை வைத்துள்ளனர்.
இப்ப சங்கராச்சாரியார் துக்ளக் பேட்டி மற்ற செய்திகளை எல்லாம் பார்த்து விட்டு தலைவர்கள்லாம் வந்தாங்களே, உங்களை வந்து பாக்கலியா?

உமர்: சந்திக்கலிங்க.

ஆசிரியர்: வாஜ்பேயி எல்லாம் வந்தாரே, வந்து பாக்கலியா? நியாயமாக உங்கள தானே வந்து சந்திக்க வேண்டும்?

உமர்: அவரு ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்தோட போனாரே தவிர எங்களை வந்து சந்திக்கல. மதம் மாறாதவர்களைக் கூட போய்ச் சந்திக்கல. ஒரு கூட்டத்தைப் போட்டாங்க! இஸ்லாம் மதத்தைப் பத்தி தாக்கித் தாக்கி பேசினாங்க.

'மதம் மாறாதே' 'மதம் மாறாதே'!

'அரபு நாட்டுப் பணத்துக்கு அடிமையாகாதே'

அப்படீன்னு இன்னும் மோசமான வார்த்தைகளால திட்டினாங்க. அப்புறம் முடிச்சுட்டு போயிட்டாங்க.

ஆசிரியர்: மற்றவங்க யாரும் சந்திக்கலயா?

உமர்: வாஜ்பேயை நாங்களா போய் சந்திச்சோம். "இந்த மதக் கொடுமையினால் தான் நாங்க மதம் மாறினோம். இருக்கிறவங்களுக்காவது கொடுமையில்லாம நடத்துவீங்களான்னு? கேட்டோம்.

ஆசிரியர்: அதுக்கு என்ன சொன்னாரு?

உமர்: அவரு உடனே பேச்சை முடிச்சிக்கிட்டு போயிட்டாரு. போயி அங்க என்ன சொல்லி விட்டாருன்னா, "இஸ்லாம் மதத்துக்கு போனவங்கள்லாம் தாய் மதத்துக்குத் திரும்பப் போறாங்கன்னு" சொல்லிட்டுப் போயிட்டார்.

இஸ்லாம் மதத்துக்கு மாறியது ஏன்?

ஆசிரியர்: சரி இந்து மதத்தில் கொடுமையிருக்கிறதினாலே மதம் மாறினீர்கள். எத்தனையோ மதங்கள் இருக்க ஏன் இஸ்லாம் மதத்துக்கு மாறினீர்கள்?

உமர்: இந்து மதத்தை விட்டா கிறிஸ்தவ மதம் இருக்கிறது. நாங்கள்லாம் இஸ்லாம் மதத்துக்கு மாறனும்கிறதுக்கு முன்னாடி ஒரு 50 குடும்பங்கள் கிறிஸ்தவர்களாக மாறினார்கள்.

கிறிஸ்தவ மதம் மாறினால்....

ஆசிரியர்: எத்தனை வருஷத்திற்கு முன்பு?

உமர்: சுமார் 20 வருஷத்திற்கு முன்னாடி, அங்க தாழ்த்தப்பட்டவன் தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவனாக இருக்கிறானே தவிர தாழ்த்தப்பட்டவன் நாடார் கிறிஸ்தவனுக்கு பெண் கொடுப்பதே நாடார் கிறிஸ்தவன். தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவனுக்குப் பெண் கொடுப்பதோ இல்லை. அங்க சாதி அப்படியே இருக்கிறது. ஆனால் இஸ்லாம் மதம் அப்படி இல்லை. யார் ஒருவன் அல்லாவைத் தொழுகிறானோ அவன் எல்லாமே முஸ்லிம் தான். அங்க தீண்டாதவன் என்ற வித்தியாசம் கிடையாது.

'ஒன்றே குலம்! ஒருவனே தேவன்!'

15 comments:

Anisha Yunus said...

நல்லதொரு பதிவு சகோ. என்ன செய்தாலும் ’அரிஜனம்’ என்னும் பட்டப்பெயரை தங்கள் வேதப்புத்தகத்திலிருந்தும் கல்லாகிப்போன மனதிலிருந்தும் எடுக்கவே மாட்டார்கள். ஆனால் மதத்தின் பெயரால் வெறியூட்டி அவர்களின் வாழ்வையும் பாழ் செய்யாமலும் விட மாட்டார்கள்!!!!

Aashiq Ahamed said...

சகோதரர் சுவனப்பிரியன்,

அஸ்ஸலாமு அலைக்கும்,

தாங்கள் தருமி ஐயா அவர்களின் "Why i am not a Muslim" பதிவில் பின்னூட்டம் இடுவதாக தெரிகின்றது. இப்னு வராக்கின் அந்த புத்தகம் குறித்து பல தளங்கள் தங்கள் மறுப்புகளை கொடுத்திருக்கின்றன. ஆனால் இவையெல்லாம் கண்டுக்காமல் சிலர் போவது தான் வருத்தம்.

போகட்டும், இறைவன் என்ன நாடுகின்றானோ அது தான் நடக்கும். சொல்வதை மட்டும் சொல்லிக்கொண்டே இருப்போம்.

உதாரணத்துக்கு, இப்னு வராக் அவர்களின் புத்தகத்திற்கு ஒரு மறுப்பு கீழே, உங்களுக்கு உபயோகமாக இருக்கும்...

http://www.islamawareness.net/FAQ/warraq1a.html

எனக்கும் தருமி அவர்களுக்கும் நடந்த உரையாடல் கீழ்காணும் லிங்கில் (நான் தளம் தொடங்குவதற்கு முன்பு நடந்த வாதம்) ..ஏன் நான் அவர் தளத்தில் பின்னூட்டம் இடுவதில்லை என்பதற்கான விளக்கமும் அந்த உரையாடலின் இறுதியில் உள்ளது...

http://dharumi.blogspot.com/2009/09/blog-post.html

நன்றி,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
மனதை நெருடும் ஒரு விழிப்புணர்வு பதிவு. நன்றி சகோ.சுவனப்பிரியன்.

//எனவே தவறு எங்கு நடக்கிறதோ அங்கு தான் சார்வாகன் போன்றவர்களின் சேவை இருக்க வேண்டுமே யொழிய ஒரே வடிகாலான இஸ்லாத்தை குறை கூற முனைவது ஒடுக்கப்பட்டவர்களை மேலும் மேலும் அதள பாதாளத்தில் தள்ளுவதாகவே முடியும்.//--இதை இனியாவது அவர் உணர்வாரா..?

ஏனெனில், சாதியை முற்றிலும் ஒழித்துவிட்டால்... அதே வினாடி 'ஹிந்து மதம்' என்ற ஒன்றே அழிந்துவிட்டிருக்குமே..? அதை எப்படி சகோ.சார்வாகன் செய்ய முன்வருவார்..?

சாதியை ஒழிக்க கடைசிவரை முட்டி மோதி பார்த்துவிட்டு, முடியாமல் தோற்றுப்போய், ஈ.வே.ரா.பெரியாரே கடைசியில் "எல்லாரும் இஸ்லாமிய மதத்துக்கு மாறுங்கள்" என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டாரே..?

'அவர் மட்டும் ஏன் மாறவில்லை' என்று கேட்போருக்கான பதில்...

"அவர் நாயக்கராக இல்லாமல், தாழ்த்தப்பட்ட சாதியில் மட்டும் பிறந்திருப்பாரேயானால்... எப்போதோ மதம் மாறி இருந்திருப்பார்...!"

suvanappiriyan said...

//ஆனால் மதத்தின் பெயரால் வெறியூட்டி அவர்களின் வாழ்வையும் பாழ் செய்யாமலும் விட மாட்டார்கள்!!!!//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ. அன்னு!

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம்! சகோ.ஆஷிக்

//போகட்டும், இறைவன் என்ன நாடுகின்றானோ அது தான் நடக்கும். சொல்வதை மட்டும் சொல்லிக்கொண்டே இருப்போம்.//

தருமி தெளிவு பெறுகிறாரோ இல்லையோ தளத்துக்கு வரும் மற்றவர்கள் தெளிவு பெறட்டுமே என்ற நோக்கம்தான்.

//எனக்கும் தருமி அவர்களுக்கும் நடந்த உரையாடல்...//

முன்பே படித்திருக்கிறேன். வினவு தளத்திலும் பார்த்தேன். சிறப்பாக வாதித்திருக்கிறீர்கள். கூடவே சிறந்த ஆங்கில அறிவும் வாதத்தை மேலும் மெருகூட்டுகிறது.. மேலும் சிறப்படைய பிரார்த்திக்கிறேன்.

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம்! சகோ.ஆஷிக்

//ஏனெனில், சாதியை முற்றிலும் ஒழித்துவிட்டால்... அதே வினாடி 'ஹிந்து மதம்' என்ற ஒன்றே அழிந்துவிட்டிருக்குமே..?//

இவர்களின் மத புத்தகங்களில் சாதியை வலியுறுத்தும் வசனங்களை இன்னும் வைத்துக் கொண்டு 'சாதிகளை ஒழிப்போம்' என்று சொல்வது கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்பதுபோல் இருக்கிறது.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

தருமி!

//உங்கள் மதம் சொல்லும் சுவனத்தின் மீது எனக்கும் ரொம்ப பிரியமா போச்சு! இருக்காதே பின்ன ..?//

அப்போ என்ன பிரச்னை சார்! நம் அனைவரையும் படைத்தவர் கர்த்தர் ஒருவர்தான் என்று உளமாற நம்புங்கள். ஏசு நாதர் அந்த கர்த்தரால் அனுப்பப்பட்ட தூதர்: இந்த தூதர்களில் கடைசியாக அனுப்பப்பட்டவர் முகமது நபி. அவ்வளவுதான். எப்படியோ பாதி கிணறு தாண்டி விட்ட மாதிரி தெரிகிறது. சந்தோஷம்.

//ஆனாலும் உங்களை மாதிரி ’அதற்கு’ மட்டுமே பிரியனாக இருப்பதை விடவும் இன்னும் கொஞ்சம் அதிகமாக நீங்கள் வெறுக்கும் சினிமா, பாட்டு, இசை, ஓவியம், இலக்கியம், நூல்கள், போன்ற பல விஷயங்களும் அதோடு மத அறிவும் எனக்குப் பிரியமான விஷயங்களாக இருக்கின்றவே .//

ஓவியம், இலக்கியம், நூல்களை நான் வெறுக்கவில்லையே! ஏனெனில் இவற்றை இஸ்லாமும் வெறுக்கவில்லை.

suvanappiriyan said...

தருமி!

//நம் மூதாதையர் கிறித்துவத்திற்கும், இஸ்லாமிற்கும்) மாறியது = இக்கரைக்கு அக்கரை பச்சை!

நாலாவது ஐந்தாவது தலைமுறையினரான நமக்குக் கிடைத்த மத உணர்வுகளும், மத அறிவும் நம் முன்னோருக்கு நிச்சயமாக இருந்திருக்க முடியாது. அவர்களுக்கு வாசிக்கும் திறமையே எந்த அளவோ? எல்லாம் காதால் கேட்டு சமூகத்திற்காக மாறிய மாற்றங்கள்.//

உங்கள் கருத்தை அப்படியே ஒத்துக் கொள்கிறேன். ஆனால் எடுத்த முடிவு சரியான முடிவு என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஏனெனில் இன்னும் எத்தனை காலம் ஆனாலும் இந்து மதத்தில் சாதிகள் ஒழியப் போவதில்லை.

'காக்காய் உட்கார பனம் பழம் விழுந்த கதைதான். ஆனாலும் பாருங்க.... பனம் பழம் மிகவும் ருசியாகவே இருக்கிறது. மற்ற பழங்களும் பனம் பழம் போல் முன்பு ருசியாகத்தான் இருந்தது. ஆனால் பயிரிட்ட பலர் சரியாக தண்ணீர் பாய்ச்சாமலும், அளவுக்கதிகமாக உரங்களை போட்டதாலும்(வேதங்களில் மனிதக் கரம் புகுதல்) பழத்தின் வீரியத்தையே குறைத்து விட்டனர். இதை நான் பல முறை ஆதாரத்துடன் சுட்டிக்காட்டியும் இருக்கிறேன்.

suvanappiriyan said...

சார்வாகன்!

//100,000 riyals if the victim is a Muslim man
50,000 riyals if a Muslim woman
50,000 riyals if a Christian or Jewish man
25,000 riyals if a Christian or Jewish woman
6,666 riyals if a Hindu man
3,333 riyals if a Hindu woman.
The amount of compensation is based on the percentage of responsibility.
Blood money is to be paid not only for murder, but also in case of
unnatural death, interpreted to mean death in a fire, industrial or road
accident, for instance, as long as the responsibility for it falls on the
causer.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மன்னிப்பது நல்லது என்றாலும் ஆனால் மத ரீதியாக உயிரின் விலை நிர்ணயித்து உள்ளது எனக்கு சரியாக படவில்லை.//

ஒரு வகையில் மனித உயிர்களில் பாரபட்சம் காட்டப்படுவதாக இந்த ஷரியத் சட்டம் இருப்பது உண்மைதான். இதை இஸ்லாமிய கண்ணோட்டத்தோடு பார்ப்போம். ஒரு முஸ்லிம் வட்டி வாங்கக் கூடாது. 'வட்டியை உண்போர் மறுமை நாளில் சைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள்' -குரஆன் 2:275 வட்டி எவ்வளவு கடுமையான தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படுகிறது என்பதை மேற்கண்ட வசனம் நமக்கு தெளிவுபடுத்துகிறது. அதே போல் ஒரு முஸ்லிம் தனது வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை ஏழைகளுக்கு ஒதுக்க வேண்டும். ஒருவர் முஸ்லிமாக இருப்பதனால் தனது வருமானத்தில் குறிப்பிட்ட தொகையை அரசுக்கு செலுத்துகிறார். தன்னிடம் உள்ள சேமிப்புகளை அவர் வட்டிக்கும் விடுவதில்லை. இதனால் செல்வம் ஒருவரிடமே குவிந்தில்லாமல் பலருக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது.

ஆனால் ஒரு இந்துவோ கிறித்தவரோ யூதரோ அரசுக்கு பணம் கட்ட வேண்டியதில்லை. தனது சேமிப்பை தாராளமாக வட்டிக்கும் விடலாம். இங்கு சவுதியில் முழு நேர தொழிலாகவே வட்டிக்கு விட்டு உழைக்காமல் சம்பாதிக்கும் பல இந்து நண்பர்களை பார்த்திருக்கிறேன். இந்து நண்பர் பார்வையில் வட்டிக்கு விடுவது அவர் மதத்தைப் பொறுத்தவரை தவறில்லை.

எனவே ஒரே சம்பளத்தில் வேலை செய்யும் ஒரு இந்துவும் ஒரு முஸ்லிமும் பலனடைவதில் சேமிப்பதில் வித்தியாசப்படுகிறார்கள். ஒரு நிறுவனத்தில் 10 வருடம் வேலை செய்து அந்த இருவரின் சேமிப்பையும் கணக்கிட்டால் முஸ்லிமின் சேமிப்பு குறைவாகவே இருக்கும். ஏனெனில் மதக் கட்டளைகளால் அவர் தனது வருமானத்தில் குறிப்பிட்ட தொகையை ஏழை வரியாக அரசுக்கு செலுத்துகிறார். இந்த நேரத்தில் ஒரு விபத்தில் அந்த இருவரும் இறந்தால் இருவருக்கும் சமமாக பணம் பங்கிடுவது நியாயமாகுமா?

அதே போன்றுதான் பெண்களும். ஒரு குடும்ப தலைவன் இறந்தால் அவனது வருமானத்தை நம்பியிருக்கும் பிள்ளைகள் மனைவி தாய் தந்தை போன்றோர் பாதிப்படைவர். ஆனால் ஒரு பெண் இறந்தால் அந்த குடும்பத்துக்கு அவளால் வருமான இழப்பு ஏற்படுவதில்லை. ஏனெனில் பெண்களுக்கு உணவு உடை இருப்பிடம் கொடுப்பது கணவனின் மற்றும் தந்தையின் கடமையாகிறது. எனவேதான் இங்கும் தேவையை அனுசரித்து இழப்பீட்டுத் தொகை வழங்கப்படுகிறது.

ஒரு மரத்தை சாய்த்தால் கூட அதற்கு 1000 ரியால் (12000 ரூபாய்) அபராதம் இங்கு. (பா.ம.க ராமதாஸ் கவனிக்க :-))

இது போன்று விபத்துகளுக்கு சம்பந்தப்பட்டவர்கள் பணம் செலுத்த வேண்டும் என்ற ஏற்பாடு நம் நாட்டில் கூட கிடையாது. இந்திய அரசுதான் இழப்பீட்டுத் தொகை தருகிறது என்பதையும் இங்கு கவனிக்க வேண்டும்.

அடுத்து பாகிஸ்தான் போன்ற நாடுகளில் நடக்கும் கூத்துகள் அவர்கள் இஸ்லாத்தை விளங்காததனால் வருவது. எப்படி இந்து மதத்தின் பெயரை பயன்படுத்தி மோடி காலத்தை ஓட்டுகிறாரோ அதைப் போல. இஸ்லாமிய சட்டத்தை கூடியவரை முறையாக பயன் படுத்தி இன்று வரை சிறந்து ஆட்சி செய்யும் சவுதியை ஏன் மறந்து விடுகிறீர்கள்? இங்கு நமது இந்து நண்பர்கள் குடும்பத்தோடு 10 வருடம் 20 வருடம் என்றெல்லாம் சந்தோஷமாக இருக்கிறார்களே! எனவே இஸ்லாம் வளர்ந்தால் இந்து மதத்துக்கு ஆபத்து என்பதெல்லாம் வர்ணாசிரமத்தை காக்க பாடுபடுவர்கள் பரப்பும் பிழையான செய்தி.

George said...

//அப்போ என்ன பிரச்னை சார்! நம் அனைவரையும் படைத்தவர் கர்த்தர் ஒருவர்தான் என்று உளமாற நம்புங்கள். ஏசு நாதர் அந்த கர்த்தரால் அனுப்பப்பட்ட தூதர்: இந்த தூதர்களில் கடைசியாக அனுப்பப்பட்டவர் முகமது நபி. அவ்வளவுதான். எப்படியோ பாதி கிணறு தாண்டி விட்ட மாதிரி தெரிகிறது. சந்தோஷம்.//
திரு சுவனம், புரியவில்லை எனக்கு,
இயேசுவை நாங்கள் இறைமகனாக நினைத்தால் உங்களுக்கு ஏன் கஷ்டமாக இருக்கிறது. அவரை நாங்கள் கடவுளாக வணங்குவதில் இஸ்லாமியர்களுக்கு என்ன கிழிந்து விட்டது.

suvanappiriyan said...

திரு ஜார்ஜ்!

//திரு சுவனம், புரியவில்லை எனக்கு,
இயேசுவை நாங்கள் இறைமகனாக நினைத்தால் உங்களுக்கு ஏன் கஷ்டமாக இருக்கிறது. அவரை நாங்கள் கடவுளாக வணங்குவதில் இஸ்லாமியர்களுக்கு என்ன கிழிந்து விட்டது.//

இதே கேள்வியை 'நான் ஏன் முஸ்லிமாக இல்லை' என்ற தலைப்பில் கிறித்தவரான தருமி 10 பதிவுகளை போடும்போது அங்கும் நீங்கள் கேட்டிருக்க வேண்டும். இவை எல்லாம் சாதாரண உரையாடலைப் போன்றதே! விருப்பமுள்ளவர்கள் படிக்கிறார்கள். விருப்பமில்லாதவர்கள் வேறு பதிவு பக்கம் சென்று விடுகிறார்கள்.

'ஏசு கலிலியோவில் வந்து தேவனுடைய ராஜ்ஜியத்தின் சுவிசேஷத்தைப் பிரசிங்கித்தார்.'-மாற்கு 1:14

பின்பு இயேசு கலிலியோ எங்கும் சுற்றித் திரிந்து அவர்களுடையே ஜெப ஆலயங்களில் உபதேசித்து ராஜ்ஜியத்தின் சுவிசேஷத்தைப் பிரசிங்கித்தார்' -மத்தேயு 4;23

இங்கு ஏசு தேவனுடைய சுவிசேஷத்தைப் பிரசிங்கித்ததாக கூறுகிறார். அந்த சுவிசேஷம் பைபிளில் இல்லையே. எங்கு நோக்கினாலும் பவுலுடைய வார்த்தைகள்தான் இருக்கிறதேயொழிய ஏசுவுடைய உபதேசங்களை பார்க்க முடியவில்லை. திட்டமிட்டு அதை மறைத்து விட்டார்கள். மேலும் தன்னை கடவுள் என்று ஏசு எந்த இடத்திலும் கூறவும் இல்லை.

'அவர்கள் இறைவனையன்றி தமது மத போதகர்களையும், பாதிரிகளையும், மர்யமின் மகன் ஏசுவையும் கடவுளாக்கினர்.ஒரே இறைவனை வணங்குமாறுதான் அவர்கள் கட்டளையிடப்பட்டனர்.'-குர்ஆன் 9:31

குர்ஆனும் ஏசு ஒரு தூதர்தான் என்று கூறுகிறது. நட்பின் அடிப்படையில் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் கேட்கிறோம். நீங்கள் ஏசுவை கடவுளாக எதன் அடிப்படையில் வணங்குகிறீர்கள்? சொன்னால் நானும் தெரிந்து கொள்வேன் அல்லவா!

George said...

அவரிடம் நான் அவரது பதிவை படித்த பிறகு கேட்டு கொள்கிறேன். முதலில் நீங்கள் பதில் சொல்லுங்கள். ஏன் என்றால், அதிகமாக இஸ்லாமியர்கள் தானே ஊளை இட்டு கொண்டிருகிறீர்கள்
//இங்கு ஏசு தேவனுடைய சுவிசேஷத்தைப் பிரசிங்கித்ததாக கூறுகிறார். அந்த சுவிசேஷம் பைபிளில் இல்லையே. எங்கு நோக்கினாலும் பவுலுடைய வார்த்தைகள்தான் இருக்கிறதேயொழிய ஏசுவுடைய உபதேசங்களை பார்க்க முடியவில்லை. திட்டமிட்டு அதை மறைத்து விட்டார்கள். மேலும் தன்னை கடவுள் என்று ஏசு எந்த இடத்திலும் கூறவும் இல்லை.//
இருந்துவிட்டு போகட்டுமே, அதனால் இப்போது என்ன கெட்டுவிட்டது, அதற்காக கிறிஸ்தவர்கள் அல்லவா கவலை பட வேண்டும். அவர்களை விட அதிகமாக நீங்கள் நீங்கள் ஏன் வருத்தப்பட வேண்டும், உங்கள் வேலைகளை பார்த்துகொண்டு இருக்கலாமே, அல்லாவே குரானில் சொல்லி இருக்கிறார் அல்லவா. (109:6.) உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்.” என்று.
சரி, இயேசுவை கடவுளாக வணங்குவதால் நாங்கள் எந்த விதத்தில் கெட்டு போய்விட்டோம் என்று சொல்ல வருகிறீர்கள்.

//நீங்கள் ஏசுவை கடவுளாக எதன் அடிப்படையில் வணங்குகிறீர்கள்? சொன்னால் நானும் தெரிந்து கொள்வேன் அல்லவா! //
முகமதுவை எந்த அடிப்படையில் கடவுளின் தூதராக ஏற்று கொண்டு அவரை பின்பற்றி வருகிறீர்களோ, அதே அடிப்படையில் தான் நாங்களும் இயேசுவை கடவுளாக ஏற்றுக்கொண்டு வணங்கி கொண்டிருக்கிறோம்.

Basheer Ahamed said...

இஸ்லாத்தை கூட்டாக ஏற்ற ஒரு தாழ்த்தப்பட்ட கிராமத்துக்கு பேட்டி எடுப்பதற்காக ஜீனியர் விகடன் சென்றிருந்தது. அங்கு கல்லூரியில் படிக்கும் மாணவனிடம் 'நீங்கள் இஸ்லாத்துக்கு சென்றதால் என்ன மாற்றம் வந்து விடும் என்று நினைக்கிறீர்கள்?' என்று கேட்டனர். 'எந்த மாற்றம் வருகிறதோ இல்லையோ! இனி என்னை விட வயதில் சிறியவன் எல்லாம் என்னை 'டேய் சரவணா!' என்று கூப்பிடமாட்டார்கள். 'ரஹீம் பாய்' என்றுதான் கூப்பிடுவார்கள். அது ஒன்று போதும்' என்று சொன்னதைப் படித்து என் கண்கள் கலங்கி விட்டது. எந்த அளவு மனதால் பாதிக்கப்பட்டு இருந்தால் இந்த வார்த்தைகள் வரும்!... en kannum than sagothara....

Basheer Ahamed said...

பிராமணர்கள் அல்லாத மற்றவர்களை சூத்திரன் என்று சொல்லும் இந்து மதம், அதே இனத்திலிருந்து இஸ்லாத்தை "தழுவிய" என்னை சொல்ல மனம் வருமா? சொல்லத்தான் முடியுமா? சொல்லத்தான் விடுவோமா?
"இது இஸ்லாத்தால் எங்களுக்கு கிடைத்த பேறு" அல்லவா....
... Allahu Akbar... U made me cry brother

suvanappiriyan said...

Thanks for your comments Mr Basheer.