Followers

Wednesday, May 02, 2012

கோவிக் கண்ணனுக்கு சில விளக்கங்கள்!

கோவிக் கண்ணனுக்கு சில விளக்கங்கள்!

சிலர் நினைப்பது போல் நித்தியானந்தா பிரச்னையை வைத்து மத மாற்றம் செய்ய நினைக்கிறேன் என்ற கருத்து சில இந்து பதிவர்களால் முன் வைக்கப்படுகிறது. இது முதலில் தவறான புரிதல். நடக்கும் ஒரு தவறை கண்டுகொள்ளாமல் விட்டால் இது தொடர்தையாகும். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரப் போவதாக நித்தியானந்தா சமீபத்தில் அறிவித்திருக்கிறார். இது தெடர்கதையாகும்போது பலருக்கும் தனது மதத்தின் மீது வெறுப்பு ஏற்பட்டு இன்னும் அதிகமாக இஸ்லாம் விரிவடையத்தான் வாய்ப்பிருக்கிறது. தின மலர் பின்னூட்டங்களில் 'தான் ஒரு இந்து என்று சொல்லிக் கொள்ளவே வெட்கப்படுவதாக' பல சகோதரர்கள் குமுறியிருக்கிறார்கள். இதற்கு முன்பு கூட முன்பை விட இஸ்லாம் உலக அளவில் விரிவடைந்து கொண்டே வருகிறது. தமிழகத்திலும் எந்த நூற்றாண்டை விடவும் இந்த நூற்றாண்டில் இஸ்லாத்தை ஏற்போரின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது. கிறித்தவ மதத்தைப் போல் பணபலமோ நிர்வாக பலமோ வெளி நாட்டு உதவியோ இல்லாமல் அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. எனவே நித்தியானந்தாவை வைத்துதான் இஸ்லாத்தை பரப்ப வேண்டும் என்ற பரிதாப நிலையில் இஸ்லாம் இல்லை என்பதையும் கூறிக் கொள்கிறேன். அது எனது நோக்கமும் அல்ல என்பதையும் கூறிக் கொள்கிறேன்.

அடுத்து நான் இந்து மத வேதங்களையோ அல்லது கடவுள்களையோ கிண்டலோ கேலியோ செய்து இந்து மத ஆர்வலர்களை வேதனைப் படுத்தவும் விரும்பியதில்லை. அது அவர்களின் நம்பிக்கை அதைப் பற்றி கருத்து சொல்ல எனக்கு உரிமை இல்லை. ஆனால் அவர்கள் மதமே சொல்லாத சில அநாச்சாரங்கள் மதத்தின் பெயரால் நடக்கும் போது அதை தட்டிக் கேட்பதும் அதை எடுத்துச் சொல்வதும் சராசரி மனிதனின் கடமையாகிறது. தமிழன் என்ற முறையில் மற்றொரு தமிழனுக்கு செய்யும் உபகாரமாகத்தான் இதை பார்க்கிறேன்.

'"இறைவன் அழிக்கப் போகிற அல்லது கடுமையாக தண்டிக்கப் போகிற கூட்டத்திற்கு ஏன் அறிவுரை கூறுகிறீர்கள்? என்று அவர்களில் ஒரு சாரார் கூறினர். அதற்கவர்கள் 'உங்கள் இறைவனிடமிருந்து விசாரணையின் போது தப்பிப்பதற்க்காகவும் அவர்கள் இறைவனை அஞ்சுவோராக ஆவதற்காகவும் அவர்களுக்கு அறிவுரை கூறுகிறோம்' எனக் கூறினர்.
-குர்ஆன் 7:164


இந்த வசனத்தின் படி நாளை மறுமையில் இறைவன் கோவிக் கண்ணனைப் பார்த்து 'வேதங்களையும் தூதர்களையும் சிறந்த அறிவாற்றலையும் வசதி வாய்ப்புகளையும் தந்திருந்தும் என்னை உரிய முறையில் வணங்கவில்லையே ஏன்?' என்று கேட்பதாக வைத்துக் கொள்வோம் அதற்கவர் 'இறைவா! சுவனப்பிரியன் பல ஆண்டுகள் இணையத்தின் மூலம் தொடர்பில் இருந்தார். பல பின்னூட்டங்களால் கருத்துகளை பரிமாறிக் கொண்டோம். ஒரு முறை கூட 'இது தவறு! இது சரி' என்று என்னிடம் சொன்னதில்லை. உண்மைகளை தெரிந்து கொண்டே மறைத்து விட்டார். அவர் உரிய முறையில் சொல்லியிருந்தால் நானும் உன்னை வணங்க வேண்டிய முறையில் வணங்கியிருப்பேன்' என்று என் மீது வழக்கு தொடர்ந்தால் நான் மாட்டிக் கொள்ளக் கூடாது அல்லவா! அதற்கான முன்னேற்பாடுதான் இது போன்ற பதிவுகள்.

நான் சொல்ல வருவது 'கோவிலின் பூசாரியை பதிவு எழுதி தாக்கினேன்: கோவில் கூடாது என்பதற்காக அல்ல... கோவில் கொடியவர்களின் கூடாரமாக ஆகி விடக் கூடாது' என்பதற்காகத்தான்.

----------------------------------------

அடுத்து நபிகள் நாயகம் அவர்கள் அன்னை ஜைனபை திருமணம் செய்து கொண்டது எந்த வகை நியாயம் என்பதற்கு முன்பே நான் விளக்கம் கொடுத்தும் 'விளக்கம் கொடுக்கவில்லை' என்று கூறுவதால் ஏகத்துவம் இணைய தளத்தில் அளித்த விளக்கத்தை அப்படியே தருகிறேன். பார்த்துக் கொள்ளுங்கள்.

அவதூறுகளும்... விளக்கங்களும்...

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது ஐம்பத்தி ஆறாம் வயதில் ஜஹ்ஷ் என்பவரின் மகள் ஸைனப் (ரலி) அவர்களை மணந்து கொண்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல மனைவியரை மணந்து கொண்டதற்காக செய்யப்படும் விமர்சனத்துடன் இந்தத் திருமணம் விஷேசமாகவும் எதிரிகளால் விமர்சனம் செய்யப்படுவதுண்டு. நபிகள் நாயகம் (ஸல) அவர்களைக் காமுகராகச் சித்தரிக்க இந்தத் திருமணத்தை அவர்கள் சான்றாகக் கூறுகின்றனர்.

இதில் மாற்றாரின் மீது ஆத்திரப்படுவதில் நியாயமில்லை. நம்மவர்களே இத்திருமணத்திற்கு கொச்சையான கற்பனைக் கதையை உருவாக்கி ஏடுகளில் எழுதி வைத்திருப்பதால் அதனடிப்படையில் இத்திருமணம் கடுமையாக விமர்சனம் செய்யப்படுகின்றது. எனவே இது குறித்து முழுவிபரங்களையும் தெளிவாக அறிந்து கொள்வது அவசியமாகும்.

'உக்காழ்' எனும் அரேபியச் சந்தையில் அடிமையாக விற்கப்பட்ட ஹாரிஸாவின் மகன் ஜைத் (ரலி) அவர்களை கதீஜா (ரலி) அவர்கள் விலை கொடுத்து வாங்கினார்கள். சிறுவரான அவர் கதீஜா (ரலி) அவர்களிடம் வளர்ந்து வந்தார். கதீஜா(ரலி) அவர்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை மணந்தவுடன் அந்த அடிமைச் சிறுவரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வழங்கி, நீங்கள் விரும்பினால் இந்த சிறுவரை அடிமையாகவே வைத்துக்கொள்ளலாம்! நீங்கள் விரும்பினால் இவரை விடுதலை செய்து விடலாம் என்று கூறிவிட்டார்கள்.

அதன் பின்னர் அவர், நபிகள் நாயகம் (ஸல்) அவாகளின் பணியாளராக இருக்கலானார். இந்த நிலையில், தம் மகன் மக்காவில் அடிமையாக இருப்பதை அறிந்த 'ஹாரிஸா'வும் அவரது சகோதரர் 'கஃபு' என்பாரும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்தனர். தம் மகனை விடுதலை செய்யுமாறும், அதற்குரிய விலையைத் தந்துவிடுவதாகவும் கூறினார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'உங்களுடன் வருவதற்கு 'ஜைத்' ஒப்புக் கொண்டால் நீங்கள் தாராளமாக அவரை அழைத்துச்செல்லலாம். எனக்கு நஷ்ட ஈடு எதுவும் நீங்கள் தர வேண்டியதில்லை. அவர் உங்களுடன் வர விரும்பாவிட்டால் அவரை உங்களுடன் அனுப்ப இயலாது' என்று கூறிவிட்டனர்.

இதன் பிறகு ஜைது (ரலி) அவர்களிடம், வந்தவர்கள் பேசிப்பார்த்தனர். 'முஹம்மது என்னை மிகவும் சிறந்த முறையில் நடத்துகிறார். அவரை விட்டு என்னால் வர இயலாது' என்று ஜைத் திட்டவட்டமாக மறுத்து விட்டார். இந்தச் சந்தர்ப்பத்தில் 'ஜைத் இனிமேல் என் மகனாவார். அவர் இனி அடிமை இல்லை. நான் அவருக்கு முன் இறந்து விட்டால் என் சொத்துக்களுக்கு அவர் வாரிசாவார். எனக்கு முன் அவர் இறந்து விட்டால் அவருக்கு நான் வாரிசாவேன்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறிவித்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் ஜைதுக்கும் உறவை புரிந்துக்கொண்ட அவரது தந்தை மகிழ்வுடன் திரும்பிச் சொன்றார். இந்த நிகழ்ச்சி நடக்கும் போது முஹம்மது (ஸல்) அவர்கள் நபியாக நியமிக்கப்பட்வில்லை (ஆதாரம் : அல் இஸாபா)

அன்றிலிருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நபியாக நியமிக்கப்பட்ட பின் மதீனா வந்து இரண்டு ஆண்டுகள் வரை 'ஜைது இப்னு முஹம்மது' (முஹம்மதுவின் மகன் ஜைத்) என்றே ஜைத் குறிப்பிடப்பட்டார்.
.
'அவர்களை அவர்களின் தந்தையர் பெயராலே குறிப்பிடுங்கள்' (அல்குர்ஆன் 33:5) என்ற வசனம் அருளப்படும் வரை 'முஹம்மதின் மகன் 'ஜைத்' என்றே அவரைக் குறிப்பிட்டு வந்தோம்' என்று இப்னு உமர் (ரலி) அறிவிக்கும் செய்தி புஹாரி, முஸ்லீம் என்ற நபிமொழிக் கிரந்தங்களில் காணப்படுகின்றது.

சொந்த மகன் போலவே ஜைதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது இருபத்தி ஐந்தாம் வயது முதல் தமது ஐம்பத்தி ஐந்தாம் வயது வரை வளர்த்து வந்தார்கள். ஜைது அவர்களின் எல்லாக் காரியங்களக்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே பொறுப்பாளராக இருந்தார்கள். அது போல் ஜைத் அவர்கள் தமது எல்லாக் காரியங்களுக்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையே சார்ந்து இருந்தார்கள் என்பதை தெளிவு படுத்தவே இந்த விபரங்கள்.

நபிகள் நாயகம் (ஸல) அவர்கள் தம்முடைய தந்தையின் சகோதரி 'உமைமா' என்பாரின் மகள் 'ஜைனப்' அவர்களை, அதாவது தமது சொந்த மாமி மகளை ஜைதுக்கு ஹிஜ்ரி முதல் ஆண்டில் திருமணம் செய்து வைத்தார்கள் மிகவும் உயர்ந்த குலம் என்று பொருமை பாராட்டிய தமது குலத்துப் பெண்ணை தமது மாமி மகளை ஒரு அடிமைக்கு திருமணம் செய்து வைப்பதென்பது அன்றைய சமூக அமைப்பில் கற்பனை செய்தும் பார்க்க முடியாததாகும்.

ஜஹ்ஷ் உடைய மகள் ஜைனபுக்கும், ஹாரிஸாவின் மகன் ஜைதுக்கும் நடந்த இத்திருமணம் என்ன காரணத்தாலோ ஓராண்டுக்கு மேல் நீடிக்கவில்லை. அடிக்கடி அவர்களிடையே பிணக்குகள் ஏற்படலாயின. குடும்ப அமைதியே குலைந்து போகும் நிலை உருவாயிற்று. கடைசியில் ஜைனபைத் தலாக் கூறும் நிலைக்கு ஜைது (ரலி) ஆளானார்கள். இது பற்றி திருக்குர்ஆனும் குறிப்பிடுகின்றது.

'அல்லாஹ் எவருக்கு பேரருள் புரிந்தானோ அவரிடம் - எவருக்கு பேருபகாரம் செய்து வருகிறீரோ அவரிடம் 'உம் மனைவியைத் (தலாக் கூறாது) தடுத்துக்கொள்! அல்லாஹ்வை அஞ்சிக்கொள்!' என்று (நபியே) நீர் கூறினீர். அல்லாஹ் வெளிப்படுத்தக்கூடிய ஒன்றை உம்முடைய மனதினில் மறைத்துக்கொண்டீர். மக்களுக்கு நீர் அஞ்சினீர்! அல்லாஹ்வே நீ அஞ்சுவதற்கு மிகவும் தகுதி வாய்ந்தவன். (அல்குர்ஆன் 33:37)

ஜைது தம் மனைவி ஸைனபைத் தலாக் கூற விரும்பியதும் அது பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் அவர் ஆலோசனைக் கலந்தும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'தலாக் கூற வேண்டாம்!' என்று அவருக்கு போதித்ததும் இந்த வசனத்தில் தெளிவாக கூறப்படுகின்றது.

இதே வசனத்தின் இறுதியில் 'அல்லாஹ் வெளிப்படுத்த கூடிய ஒன்றை உம் மனதிற்குள் மறைத்து கொண்டீர்! மக்களுக்கு அஞ்சனீர்! ஏன்று இறைவன் கடிந்துறைக்கின்றான். தம் உள்ளத்தில் மறைத்து கொண்ட விஷயம் என்ன? என்பது இந்த வசனத்தில் தெளிவாக கூறப்படவில்லை. அதைக் கண்டுபிடிக்க முயன்ற அறிவிளிகள் எவ்வித ஆதாரமுமின்றி பல்வேறு கதைகளைப் புனைந்து தம் திருமறை விரிவுரை நூல்களில் எழுதி வைத்துள்ளனர்.

ஜைது வெளியே சென்றிருந்த போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜைனபை பார்க்க கூடாத கோலத்தில் பார்த்து விட்டார்களாம். அவர்களின் சொக்க வைக்கும் பேரழகை கண்டவுடன் அவர்களை அடைந்து விட வேண்டும் என மனதுக்குள் எண்ணினர்hகளாம். ஜைத் தலாக் கூற முன் வந்ததும் 'தலாக் கூற வேண்டாம்' என்று வாயளவில் கூறிவிட்டு மனதுக்குள் 'அவர் தலாக் கூற வேண்டும்' அதன் பிறகு தாம் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டார்களாம். இதைத்தான் இந்த வசனத்தில் இறைவன் குறிப்பிடுகின்றானாம். இப்படிப் போகிறது கதை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் மனதில் எண்ணியது இது தான் என்று அல்லாஹ்வும் சொல்லவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் சொல்லவில்லை. ஜைனபை பார்க்கக்கூடாத கோலத்தில் பார்த்ததாக நபிகள் நாயகம் (ஸல) அவர்களும் சொல்லவில்லை. ஜைனபும் சொல்லவில்லை. இப்படி ஒரு சம்பவம் நடந்ததாக எந்த அறிவிப்பாளர் வரிசையும் கிடையாது. ஒரு ஆதாரமுமின்றி இவ்வாறு எழுத எப்படித் துணிந்தார்கள்? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உள்ளத்தில் மறைந்திருந்த எண்ணத்தை நபிகள் நாயகம் (ஸல) அவர்களின் உள்ளத்தில் ஊடுருவி அறிந்தார்களா? அல்லது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கடந்தகால வாழ்வில் ஏதேனும் களங்கத்தை கண்டு அதனடிப்படையில் இவ்வாறு அனுமானம் செய்தார்களா? நபிகள் நாயகம் (ஸல) அவர்களைக் களங்கப்படுத்த வேண்டுமென்பதற்காகவே இஸ்லாத்தின் எதிரிகள் இந்த கதையை புனைந்துள்ளனர் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

இந்தக் கதை எவ்வளவு பொய்யானது என்பதைத் தக்க சான்றுகளுடன் நாம் அறிந்து கொள்ள வேண்டும். அதன் பின்னர், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் உள்ளத்தில் மறைத்துக் கொண்ட மர்மம் என்ன? என்பதையும் கண்டறிய வேண்டும். அவற்றை விரிவாகக் காண்போம்.

ஜைது (ரலி) அவர்கள் ஸைனப் (ரலி) அவர்களை திருமணம் செய்த போது ஜைனப் (ரலி) அவர்களின் வயது முப்பத்தி நான்கு அல்லது முப்பத்தி ஐந்து இருக்கலாம். நேரடியாக இது பற்றிக் கூறப்படாவிட்டாலும் கிடைக்கின்ற குறிப்புகளை வைத்து இதை நாம் முடிவு செய்ய இயலும்.

அது வருமாறு :
ஜைத் (ரலி) அவர்களும், ஜைனப் (ரலி) அவர்களும் ஒரு ஆண்டு அல்லது அதைவிட சற்று அதிகம் இல்லறம் நடத்தியுள்ளனர் என்ற விபரம் கிடைக்கிறது. (பார்க்க இப்னு கஸீர் 33:37 வசனத்தின் விளக்கவுரை) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜைனபைத் திருமனம் செய்த போது ஜைனபுடைய வயது முப்பத்தி ஐந்து (பார்க்க : அல் இஸாபா) ஜைனப் (ரலி) அவர்களின் இந்த முப்பத்தி ஐந்து வயதில் ஜைதுடன் வாழ்ந்த ஒரு ஆண்டைக் கழித்தால் ஜைதுடன் திருமனம் நடந்த போது ஜைனபின் வயது 34 ஆகத்தான் இருக்க முடியும். ஏனென்றால் ஜைது தலாக் கூறியவுடம் (இத்தா முடிந்ததும்) உடனேயே நபிகள் நாயகம் (ஸல்) திருமணம் செய்ததை அல்குர்ஆன் 33:38 வசனம் தெளிவாகக் குறிப்பிடுகின்றது.

ஜைனப் (ரலி) அவர்களுக்கு 34 வயதில் தான் முதல் திருமணம் நடந்திருக்கும் என்பதும் நம்புவதற்கு சிரமமானது, சாத்தியக் குறைவானது. ஜைதை மணப்பதற்கு முன் அவர்களுக்கு வேறு கணவருடன் வாழ்ந்து விதவையாகி இருக்க வேண்டும் அல்லது தலாக் கூறப்பட்டிருக்க வேண்டும். 34 வயது வரை முதல் திருமணம் நடக்காமிலருக்கும் அளவுக்கு வரதட்சனை போன்ற கொடுமைகள் அன்றைய சமுதாயத்தில் இருந்திருக்கவில்லை. வேறு காரணங்களும் இல்லை. இந்த அனுமானம் தவறாகவே இருந்தாலும் ஜைதைத் திருமணம் செய்யும் போது ஜைனப்பின் வயது 34 என்பது நிச்சயமான ஒன்று. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைத் திருமணம் செய்யும் போது 35 என்பது அதைவிடவும் நிச்சயமானது. இந்த அடிப்படையைக் கவனத்தில் கொண்டு அந்தக் கதையின் தன்மையை நாம் அலசுவோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மாமி மகளாகிய ஜைனப் (ரலி) அவர்கள் சிறு வயது முதல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் குடும்பத்தில் ஒருவராக வளர்கிறார். ஜைனப் (ரலி) பதினைந்து வயதில் பருவமடைந்தார்கள் என்று வைத்துக்கொண்டால் அந்தச் சந்தர்ப்பத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வயது 37, எவ்வாறெனில் நபிகள் நாயம் அவர்கள் ஜைனபுடைய 35 வயதில் அவரை திருமணம் செய்த போது நபிகள் நாயகம் (ஸல) அவர்களின் வயது 56.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் 37வது வயதில் (56 வயதில் நாடுவதை விட அதிகம் பெண்கள் நாடக்கூடிய 37வது வயதில்) பருவ வயதிலிருந்த ஜைனப் (ரலி) அவர்களை சர்வ சாதாரணமாகப் பார்க்கும் வாய்ப்பை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெற்றிருந்தார்கள். மாமி மகள் என்ற நெருக்கமான உறவு அந்த வாய்ப்பை மேலும் அதிகமாக்கியிருந்தது. அவர்கள் நபியாக ஆன பின்னரும் பெண்களின் ஆடைகள் பற்றியும் அன்னிய ஆண்கள் முன்னிலையில் அலங்கரித்துக்கொள்ளலாகாது என்பது பற்றியும் இறைக் கட்டளை இறங்காத மக்கா வாழ்க்கை முழுவதும் ஜைனப் அவர்களைச் சர்வ சாதாரணமாகப் பார்க்கும் வாய்ப்பு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வாய்த்திருந்தது.

நபிகள் நாயகம் (ஸல்) அவாகள் மக்காவில் வாழ்ந்த தமது ஐம்பத்தி மூன்றாம் வயது வரை ஜைனபைப் பார்த்திருக்கிறார்கள். 17 வயது ஜைனபப் பார்த்திருக்கின்றார்கள். 20 வயதிலும் பார்த்திருக்கிறார்கள். 25 வயதிலும் பார்த்திருக்கிறார்கள். பெண்களின் அழகு பிரகாசிக்கக்கூடிய 15 முதல் 30 வயது வரையிலான பல்வேறு பருவங்களில் ஜைனபைப் பார்த்துப் பேசிப் பழகி இருக்கிறார்கள்.

இந்தச் சந்தர்ப்பங்களில் எல்லாம் ஜைனபின் அழகில் சொக்கிவிடாத நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், 34 வயதை ஜைனப் அடையும் போது அதுவும் இன்னொருவருக்கு மனைவியாக இருக்கும் போது அவரது பேரழகில் சொக்கி விட்டார்கள் என்பதை அறிவுடைய எவரேனும் ஏற்க முடியுமா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் 50 வயது வரை அவர்களுக்கு கதீஜா (ரலி) மனைவியாக இருந்தார்கள். கதீஜா (ரலி) அவர்களின் மரணத்திற்குப் பின்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மனைவியின் பால் தேவையிருந்தது. கதீஜா (ரலி) மூலம் பிறந்த குழந்தைகளைப் பராமரிப்பதற்காகவாவது அவர்களுக்கு மனைவி அவசியமாக இருந்தது. ஜைனபின் பேரழகில் மயங்கி விட்டார்கள் என்பது உன்மையானால் கதீஜா (ரலி) அவர்களின் மரணத்திற்குப் பிறகாவது ஜைனப்பை மணந்திருக்கலாமே! அதற்கு தடை எதுவும் இருக்க வில்லை. இன்னும் சொல்வதென்றால் கதீஜாவுக்குப் பின் மணந்த ஸவ்தா (ரலி) அவர்களைவிட – அயிஷா (ரலி) அவர்களைவிட அதிக சிரத்தையுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் குழந்தைகளைக் கவனித்து கொள்ள இவர்களுக்கல்லவா அக்கரை அதிகமிருக்கும். சொந்த மாமி மகள் என்ற உறவு இவர்களுக்க மட்டும் தான் இருந்தது.

'நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைத் திருமணம் செய்ய ஜைனப் (ரலி) அவர்கள் விரும்பாதிருந்திருக்கலாம், அதன் காரணமாக அந்தச் சந்தர்ப்பத்தில் அவர்களை மணக்காதிருந்திருக்கலாம் அல்லவா? என்ற சந்தேகம் எழக்கூடும். அந்த சந்தேகத்தையும் பின் வரும் சான்று அகற்றி விடுகின்றது.
.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது வளர்ப்பு மகனாகிய ஜைதை மண முடித்துக்கொள்ளுமாறு ஜைனபிடம் கேட்டார்கள். ஒரு முன்னால் அடிமை என்பதாலும், தான் குரைஷி குலத்தைச் சேர்ந்தவர் என்பதாலும் அவரைத் திருமணம் செய்ய ஜைனப் (ரலி) மறுத்து வீடுகிறார்கள். உடன் பின் வருமாறு இறை வசனம் இறங்கியது.

'அல்லாஹ்வும் அவன் தூதரும் ஒரு விஷயத்தை முடிவ செய்து விட்டால் முஃமினான எந்த ஆணுக்கும், முஃமினான எந்தப் பெண்ணுக்கும் தங்கள் காரியங்களில் சுய விருப்பம் கொள்ள உரிமை இல்லை. யார் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்கின்றாரோ அவர் பகிரங்கமான வழி கேட்டிலேயே இருக்கிறார். (அல் குர்ஆன் 33:36). இந்த வசனம் அருளப்பட்ட பிறகே ஜைனப் (ரலி) அவர்கள் ஜைதை திருமணம் செய்ய சம்மதிக்கிறார்கள். இப்னு அப்பாஸ் (ரலி) எனும் நபித்தோழரால் அறிவிக்கப்படும் இச்செய்தி இப்னு ஜரீர், இப்னு கஸீர் ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.

இந்த நிகழ்ச்சியின் மூலம், ஆரம்பம் முதலே ஜைத் (ரலி) அவர்களை மணந்து கொள்ள ஜைனப் (ரலி) விரும்பவில்லை என்பதும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வற்புறுத்தலுக்காகவே, தமக்கு பிடிக்காதவரை மணந்து கொள்ள முன் வருகிறார்கள் என்பதும் தெளிவாகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வற்புறுத்தலுக்காக தமக்கு விருப்பமில்லாத இன்னொருவரைத் திருமணம் செய்ய முன்வந்த ஜைனப் (ரலி) அவர்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்திருந்தால் மறுத்திருக்க முடியாது. ஜைது (ரலி) விவாகரத்துச் செய்ததும், ஜைனப்(ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைத் திருமணம் செய்ததும், ஜைனப் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை மணந்து கொள்ள ஆரம்ப காலத்தில் மறுத்திருக்க மாட்டார்கள் என்பதை உறுதி செய்கின்றது.

இன்னொரு கோணத்தில் சிந்திக்கும் போது அந்த கதை பொய்யானது என்பதைத் தெளிவாக உணரலாம். ஜைனபைப் பார்க்கத் தகாத நிலையில் நபிகள் நாயகம் அவாகள் பார்த்து ஆசைப்பட்டார்கள் என்றால், அந்தக் கதையை அன்றைய மக்கள் நன்றாகவே அறிவர். (அவர்களில் யாரும் அறியா விட்டால் இதை எழுதி வைத்த நூலாசிரியர்களுக்குத் தெரிய முடியாது)

இந்தச் செய்தியை ஜைத் அவர்களும் நிச்சயமாக அறிந்திருப்பார்கள். அவ்வாறு அறிந்திருந்தால் அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவாகளின் மீதும் ஆத்திரப்பட்டிருப்பார்கள். அவர்கள் கொண்டு வந்த மார்க்கத்தையும் சந்தேகித்திருப்பார்கள். அப்படியெல்லாம் எதுவும் நடக்காதது மட்டுமின்றி, தம் மனைவியைத் தலாக் கூறுவது சம்பந்தமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடமே ஆலோசனைக் கேட்கிறார்கள். அதன் பின்பும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் முன்னர் நடந்தது போலவே நடக்கின்றார்கள். அவர்களின் நம்பிக்கையில், அன்பில், நடத்தையில், எதிலும் எந்த மாற்றமும் ஏற்படவே இல்லை. இதுவும் அந்த கதை பொய் என்பதை உறுதிப்படுத்துகின்றது.

இந்தக் கதை பொய்யானது என்று தெளிவான பின், மற்றொரு சந்தேகம் நீக்கப்பட வேண்டியுள்ளது. 'உமது உள்ளத்தில் ஒரு விஷயத்தை மறைத்து வைத்திருந்தீர்!' மனிதர்களுக்கு அஞ்சினீர்!' என்று அல்லாஹ் குறிப்பிடுவது எதை? இந்த கேள்விக்கு விடைகாண வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், தமது உள்ளத்தில் எதையோ மறைத்தார்கள் என்பது உன்மையே. அது எது என்பதை அவர்களும் சொல்லவில்லை. அல்லாஹ்வும் சொல்லவில்லை. இதனாலேயே இப்படிக் கதை கட்டி விட்டு விளக்கம் என்ற பெயரால் களங்கத்தை ஏற்படுத்திவிட்டனர்.

கதைகளை அடிப்படையாகக் கொண்டு அதை தீர்மானிப்பதைவிட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பரிசுத்த வாழ்வையும், இது போன்ற கட்டங்களில் சகஜமாக மனித உள்ளங்கள் எவ்வாறு இயங்கும் என்பதையும் அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் உள்ளத்தில் மறைத்து வைத்த எண்ணம் எது வென்பது தெளிவாகும். இதற்குப் பெரிய ஆராய்ச்சியோ, ஆதாரமோ தேவைப்படாது. ஓவ்வொருவருக்கும் ஏற்படும் அனுபவங்களே அதை அனுமானிக்கப் போதுமானதாகும்.

ஜைத் (ரலி) அவர்கள் இயல்பிலேயே கொஞ்சம் முன்கோபியாக இருந்தார்கள். ஜைனப்பைத் திருமணம் செய்வதற்கு முன் உம்மு ஐமன் என்ற பெண்ணை ஜைத் (ரலி) திருமணம் செய்திருந்தார்கள். இவ்விருவருக்கும் 'உஸாமா' என்ற மகன் பிறந்தார். ஜைதைப் போலவே உஸாமாவையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிகவும் நேசித்தார்கள். அதன் பின்னர் ஜைத் (ரலி), ஜைனப்பைத் திருமணம் செய்தார். ஜைனபைத் தலாக் கூறிவிட்டு உக்பாவின் மகள் உம்முகுஸ்ஸூமைத் திருமணம் செய்தார். அவ்விருவருக்கும் இரண்டு குழந்தைகள் பிறந்ததும் உம்முகுஸ்ஸூமையும் தலாக் கூறினார் ஜைத். அதன் பிறகு அபூலகபின் மகள் 'துர்ரா' என்பவரைத் திருமணம் செய்தார் (ஆதாரம் : அல் இஸாபா)

இந்த விபரங்களை இங்கே கூறுவதற்கு காரணம் ஜைத் (ரலி) அவர்களின் முன் கோபத்தை எடுத்துக் காட்டவே. ஒரே சமயத்தில் நான்கு மனைவியரை மணக்கலாம் என்று மார்க்கம் சலுகை அளித்திருந்தும், ஒரே சமயத்தில் இத்தனை பேரையும் அவர் மணக்க வாய்ப்பிருந்தும் ஒருவர் பின் ஒருவராக ஜைத் (ரலி) அவர்கள் தொடர்ந்து தலாக் விட்டுக் கொண்டிருந்தது அவர்களின் முன் கோபத்தை நமக்கு எடுத்துக் காட்டுகிறது.

ஜைனப் (ரலி) அவர்களோ ஆரம்பத்திலிருந்து ஜைதை விரும்பவில்லை. அவர்களது சுபாவத்திலும் தமது குரைஷிக் குலம் பற்றிய உயர்ந்த எண்ணம் இருந்தது. அவ்விருவருக்குமிடையே சுமூகமான உறவு ஏற்படாமல் போனதற்கு இவ்விருவரின் முரண்பட்ட இந்த சுபாவமே காரணமாகியது. இதையெல்லாம் கவனமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கவனிக்கிறார்கள். அவ்விருவரின் சுபாவங்களும் ஒத்துப்போகாது என்பதை அறிகிறார்கள். இருவரும் அடிக்கடி சண்டையும் சச்சரவும் செய்து அமைதி இழந்து போவதை விட அவ்விருவரும் பிரிந்து விடுவது நல்லது என்று எண்ணுகிறார்கள். இது போண்ற நிலையைக் காணும் ஒவ்வொரு மனிதரும் இவ்வாறே எண்ணுவார். ஆனாலும் அவர் தலாக் விடுவதாகக் கூறியவுடன் அவர்களால் அதை வெளிப்படையாக ஆதரிக்க முடியவில்லை. அவ்விருவரும் பிரிந்து விடுவது தான் அவ்விருவருக்கும் நல்லது. (தாம் திருமனம் செய்வதற்காக அல்ல) என்று எண்ணினாலும் அதை வெளிப்படையாகச் சொல்ல தயங்குகிறார்கள். கணவன் மனைவியரிடையே பிளவு ஏற்பட, தான் காரணமாகிவிட்டோம் என்று மக்கள் எண்ணுவார்களோ என்று அஞ்சுகிறார்கள். இது தான் உன்மையில் நடத்திருக்க முடியும். இதனடிப்படையில் இந்த வசனத்தைக் காண்போம்.

'உன் மனைவியைத் தலாக் கூறாது தடுத்து கொள்! ஏன்று கூறினீர். அல்லாஹ் வெளிப்படுத்தக்கூடிய ஒன்றை உம் மனதில் மறைத்துக் கொண்டீர். மேலும் மக்களுக்கு அஞ்சினீர். அல்லாஹ்வே நீர் ஆஞ்சுவதற்கு மிகவும் தகுதியானவன். (அல் குர்ஆன் 33:37)

ஒரு தம்பதியினரிடையே சேர்ந்து வாழ முடியாத நிலை ஏற்படும் போது அவ்விருவரும் பிரிந்து வாழ்வதே நல்லது என்று விரும்பக்கூடிய எந்த மனிதரும் வெளிப்படையாக அதை கூறத் துணிவது இல்லை. அவ்விருவரும் பிரிந்து வாழ்வது என்ற முடிவுக்கு வந்து விட்ட நேரத்திலும் அவ்விருவரும் பிரிந்து விடுவதே அவ்விருவருக்கும் நல்லது என்று மனப்பூர்வமாக விரும்புகின்ற ஒருவர், அதை மனதுக்குள் மறைத்து விட்டு அவ்விருவரும் சேர்ந்து வாழுமாறு தான் வாயளவில் உபதேசம் செய்வார். இது நடிப்பு என்றாலும் எந்த மனிதரும் பகிரங்கமாக அதை வெளிப்படுத்த துணிவதில்லை. அனுபவப் பூர்வமாக பலரும் இந்த நிலைமையைச் சந்திக்கின்றனர்.

இந்த இடத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் சராசரி மனிதனுக்கும் ஏற்படக்கூடிய ஒரு எண்ணம் தான் ஏற்பட்டதே தவிர, அடுத்தவர் மனைவியை ஆசைப்படக்கூடிய அளவுக்கு கீழ்த்தரமான எண்ணம் நிச்சயமாக ஏற்படவில்லை. அதற்கு எந்த ஆதாரமும் இல்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கடந்த கால பரிசுத்த வாழ்க்கையும், இந்தப் பொய்ச செய்திளை முற்றாக நிராகரித்து விடுகின்றது.

இனி விஷயத்துக்கு வருவோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஆலோசனைக்குப் பின்னரும் ஸைத் தம் மனைவியை விவாகரத்துச் செய்வதில் உறுதியாக இருந்து அதை செயல்படுத்தி விட்டார். இந்த நிலையில் ஸஜனப் (ரலி) அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குத் தானே மனைவியாக ஆக்கியதாக வல்ல அல்லாஹ் குறிப்பிடுகின்றான். அதன் காரணத்தையும் அவனே கூறுகின்றான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழ்ந்த பகுதியிலும் உலகில் பல்வேறு பகுதிகளிலும் போலியான உறவு முறை ஒன்று நடைமுறையில் இருந்து வந்தது. சந்ததியற்றவர்களும் அல்லது ஆண் சந்ததியற்றவர்களும், சில சமயங்களில் உதவாக்கரையான ஆண் சந்ததிகளைப் பெற்றவர்களும் பிறரது மகனை வளர்ப்பு மகனாக - சுவீகாரப் புத்திரனாக - எடுத்துக்கொள்வர். 'வளர்ப்பு மகன்' எனப் பிரகடனம் செய்யப்பட்டவர், பெற்ற மகனுக்கு இருப்பது போன்ற எல்லா உரிமைகளையும் பெற்றவராக கருதப்படுவார்.

வளர்த்தவர் இறந்துவிட்டால் அவரது சொத்துக்களுக்கு வளர்ப்பு மகன் வாரிசாவார். பெற்ற மகனுக்கு கிடைப்பது போன்ற அதே சொத்துரிமை, கூடுதல் குறைவின்றி அவருக்கும் கிடைத்து வந்தது. தந்தையின் பெயரைக் குறிப்பிட வேண்டிய கட்டங்களில் அவர் தமது தந்தையாக அவரை - வளர்த்தவரையே குறிப்பிட வேண்டும் என்பது நடைமுறையில் இருந்து வந்தது. 'தந்தை மகன்' எனும் உறவு அவ்விருவருக்குமிடையே உன்மையிலேயே ஏற்பட்டுவிடடதாக அவர்கள் நம்பினர்.

இதனால் இன்னும் சில சம்பிரதாயங்களும் ஏற்படுத்தப்பட்டன. வளர்ப்பு மகன் தன் மனைவியை விவாகரத்துச் செய்த பின், அல்லது அவன் இறந்த பின், அவனது மனைவியை வளர்ப்புத் தந்தை, திருமணம் செய்வது கூடாத ஒன்றாக கருதப்பட்டு வந்தது. ஏனெனில் அப்பெண் உன்மையிலேயே வளர்ப்புத் தந்தைக்கு மருமகளாகி விட்டதாக அவர்கள் நம்பி வந்தனர். இது போல் வளர்ப்புத் தந்தைக்கு மகள் ஒருத்தி இருந்தால் அவளை அவரது வளர்ப்பு மகன் திருமணம் செய்ய முடியாது. ஏனெனில் அவ்விருவரும் உடன் பிறந்தவர்களாகிவிட்டனர் என்பது இவர்களது நம்பிக்கை.

போலித்தனமான இந்த உறவு முறையையும், முட்டாள் தனமான இந்த சம்பிரதாயங்களையும் தகர்க்க வேண்டுமென்பது இறைவனின் விருப்பம். தெளிவான - தீர்க்கமான சிந்தனை உடையவர்களின் பார்வையில் இது தகர்க்கப்பட வேண்டிய உறவாகவே இருந்தது. இறைவனுக்கு எதிரான நடவடிக்கையாக இறைவனாலும் இது கருதப்பட்டு வந்தது. இத்தகைய உறவுகளை அனுமதித்தால் அது ஏற்படுத்தக்கூடிய தீய விளைவுகள் ஏராளம். இதைத் தகர்க்தெறிவதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வளர்ப்பு மகனான 'ஜைது'டைய மனைவியை 'ஜைது' விவாகரத்து செய்தபின், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இறைவனே மணமுடித்து வைத்ததாகக் கூறுகின்றான். அது பற்றி இறைவன் கூறும் வசனங்களைப் பார்க்கும் முன், இந்த போலித்தனமான உறவுகள் தகர்க்கப்படவேண்டியவை தாம், என்பதற்கான காரணங்களை நாம் பார்ப்போம்.

முதல் காரணம் :
தந்தை மகன், அண்ணன் தம்பி போன்ற உறவுகள் இறைவனால் தீர்மானிக்கப்படுபவை. இறை நம்பிக்கையற்றவர்களின் வார்த்தையில் சொல்வதென்றால் இயற்கையானவை. இவன் தான் எனக்கு மகனாகப் பிறக்க வேண்டும் என்று எந்தத் தந்தையும் தீர்மானிக்க இயலாது. இவர்தான் எனக்கு தந்தையாக இருக்க வேண்டுமென்று எந்த மகனும் தீர்மானம் செய்ய முடியாது. எனக்கு அண்ணனாக இவர் தான் இருக்க வேண்டும் எனக்குத் தம்பியாக இவர் தான் இருக்க வேண்டும் என்றெல்லாம் எவரும் முடிவு செய்ய முடியாது. அது இறைவனின் தீர்மானப்படி நடக்கக்கூடியதாகும். (அல்லது இயற்கையின் நியதிப்படி நடக்கக்கூடியதாகும்)
இது போன்ற போலித் தனமான உறவு முறைகள் செயற்கையை - இயற்கையை போல் ஆக்கும் ஏமாற்று வேலையாக உள்ளது.

இரண்டாவது காரணம் :
யாருடைய உயிரணுவின் மூலமும், எவருடைய சினை முட்டை மூலமும் ஒருவன் பிறந்தானோ, அந்த இரத்த உறவை ரத்து செய்துவிட்டு ஒரு சம்மந்தமுமில்லாதவர்களைப் பெற்றோர் எனப் பிரகடனம் செய்வது இரத்த சம்மந்தத்தை அர்த்தமற்றதாக ஆக்கிவிடுகின்றது.
பத்து மாதம் சுமந்து பெற்ற தாயும், பாசத்தைப் பொழிந்து வளர்த்த தந்தையும், தாம் பெற்ற பிள்ளையை 'மகன்' என்று உரிமையுடன் அழைக்க முடியாமல் போவதைவிட வேறு கொடுமை என்ன இருக்க முடியும்? வசதி இல்லை என்ற காரணத்திற்காக வசதியான இடத்தில் நம் பிள்ளை வளரட்டுமே என்று சுவீகாரம் வழங்கினாலும், அதனால் அவர்கள் படும் வேதனையை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது.
எவ்வளவு கஷ்டம் வந்தாலும் நம் பிள்ளையை நாமே வளர்க்க வேண்டும் என்று இயல்பாகவே இருக்கின்ற நல்ல பண்பு நாளடைவில் மங்கி, யாராவது செல்வந்தர்கள் 'தத்து' எடுக்க மாட்டார்களா? ஏன்ற வியாபார நோக்கம் பெற்றோர்களிடமே மேலோங்கிவிடும். இதனால் இதை அடியோடு கிள்ளி எறிய வேண்டும் என்று இஸ்லாம் கருதியது.

மூன்றாவது காரணம்:
எவ்வளவு தான் பாசத்தை பொழிந்த ஒருவனை 'தத்து' எடுத்து வளர்த்தாலும், பெற்ற மகன் போல வளர்ப்பு மகன் தந்தை மீது உண்மையான பாசம் கொள்ள முடிhயது. வசதியான இடத்தில் வாழ வேண்டுமென்பதற்காக அவரைத் தந்தை என ஏற்கத் துணிந்தவனிடம் இதயப் பூர்வமான நேசத்தை எதிர்ப்பார்க்க முடியாது. இதனால் ஏற்படும் விளைவு என்ன?
வளர்ப்புத் தந்தைக்குப் பின், அவரது வாரிசாக போகிறோம் என்று கருதும் வளர்ப்பு மகன், அவர் சீக்கிரமாக சாகமாட்டாரோ? என்று எதிர்பார்ப்பான். சீக்கிரத்தில் சாகமாட்டேன் என்று அவர் பிடிவாதமாக வாழ்ந்து கொண்டிருந்தால் இவனே சாவூக்கு அனுப்பவும் தயங்கமாட்டான். இரத்த சம்மந்தம் இல்லாததாலும், இதயப்பூர்வமான நேசம் இல்லாததாலும். சுவீகாரத்தின் நோக்கமே வசதியான வாழ்க்கைப் பெறுவது தான் என்று ஆகிவிட்டதாலும் இதைத் தான் சுவீகாரப் புத்திரனிடம் எதிர்ப்பார்க்க முடியும்.

நான்காவது காரணம்:
ஒருவனுக்கு அண்ணன, தம்பி, அக்கா, தங்கை போன்ற ஆயிரம் உறவினர்கள் இருந்தாலும், அவன் இறந்த பின் அவனது சொத்துக்களை அவனது பெற்ற மகனே அடைவான். இவ்வாறு அவன் அடையும் போது, அவனது தந்தையின் அண்ணன் தம்பிகளோ, அக்கா தங்கைகளோ பொறாமைக் கண்ணுடன் பார்க்க மாட்டார்கள். தமக்கொல்லாம் கிடைக்காமல் இவனுக்கு கிடைத்துவிட்டதே என்று எண்ணமாட்டார்கள். எண்ணுவதற்கு எந்த நியாயமும் இல்லை. ஏனெனில் 'மகன்' என்ற உறவு மற்ற உறவுகளைவிட மேலானது என்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள்.
ஆனால் யாருக்கோ பிறந்தவன், திடீரென நுழைந்து 'மகன்' என்ற போலி உறவின் மூலம் சொத்துக்களை அடையும் போது வசதிகளை அனுபவிக்கும் போது இரத்த சம்பந்தமுடைய அவனுடைய அண்ணன் தம்பி போன்றவர்கள் பொறாமைக் கண்ணுடனேயே நோக்குவார்கள். இவ்வாறு நோக்குவதில் நியாயமும் இருக்கிறது. உண்மையிலேயே இந்த போலி மகனை விட உண்மையான சகோதர சகோதரிகள் நெருக்கமானவர்கள் அல்லவா?

ஐந்தாவது காரணம்:
மேற்கூறிய அதே காரணத்தினால் எப்பொழுது ஒருவன் யாரோ ஒருவனைத் தத்து எடுக்கின்றானோ அப்போதிருந்தே அவனது ஏனைய உறவினர்களை அவன் பகை;கும் நிலை உருவாகும். உறவினர்களைப் பகைத்து கொள்ள, இந்த சுவீகாரம் முக்கிய காரணமாகிவிடுகின்றது. ஒரு போலித் தனமான உறவுக்காக உண்மையான உறவுகளைத் துறக்க வேண்டுமா? என்று இஸ்லாம் கேட்கிறது.

ஆறாவது காரணம் :
தன் தந்தை அல்லாதவர்களைத் தந்தை, என ஒருவன் கூறுவது மனிதனது ரோஷ உணர்வை மழுங்கச் செய்து விடும். அப்துல்லாஹ்வுக்குப் பிறந்தவனை 'இப்ராஹீமுக்குப் பிறந்தவன்' என்று செல்லிப் பாருங்கள்! அதன் பின் அவனது எதிர் விளைவுகள் எப்படி இருக்கும் என்று கண்டு கொள்வீர்கள். தந்தை இல்லாத ஒருவனைத் தந்தை என்று கூறுவது தன்மான உணர்வுக்கு இழுக்கு என்று கருதுவதுதான் மனிதனின் இயல்பு.
எவனோ ஒருவனைத் தந்தை என்று – அதுவும் உண்மையான தந்தை போன்று - கருதுவதைவிட மானங்கெட்ட நிலை என்ன இருக்க முடியும்? மனித சமுதாயத்தில் இருந்து வருகின்ற - இருக்க வேண்டிய இந்த ரோஷ உணர்வை இது போன்ற போலித்தனமான உறவுகள் அடியோடு நாசப்படுத்தி விடுகின்றன.

இது போன்ற இன்னும் பல காரணங்களால் இந்த போலித் தனமான உறவை அடியோடு ஒழித்திட இறைவன் எண்ணுகிறான். வளர்ப்பு மகனுடைய முன்னால் மனைவியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இறைவனே மனைவியாக்கியதாகச் சொல்லி காட்டுகிறான். இது பற்றி இறைவன் கூறுவதை இப்போது பார்க்கலாம்.

'ஜைது, அவளை விவாக விலக்கு செய்துவிட்ட பின்னர் நாம் அவளை உமக்கு மணம் செய்வித்தோம். ஏனென்றால் முஃமீன்களால் சுவீகரித்து வளர்க்கப்பட்டவர்கள், தம் மனைவியரை விவாகரத்து செய்து விட்டால் அ(வர்களை வளர்த்த)வர்கள் அப்பெண்களை மணந்து கொள்வதில் யாதொரு தடையுமிருக்கக் கூடாது என்பதற்காக இது நடை பெற்றே தீர வேண்டியது அல்லாஹ்வின் கட்டளையாகும்' (அல்குர்ஆன் 33:37)

'எந்த மனிதனுக்கும் இரண்டு உள்ளங்களை அல்லாஹ் உண்டாக்க வில்லை. உங்கள் மனைவியரில் எவரையும் நீங்கள் தாயைப் போன்றவள் என்று கூறுவதால் அவர்களை அல்லாஹ் உங்கள் தாய்களாக ஆக்கமாட்டான். உங்களுடைய சுவீகாரப்புத்திரர்களை உங்களுடைய புதல்வர்களாக அல்லாஹ் ஆக்கவில்லை. இவையாவும் உங்களுடைய வாய்களால் சொல்லும் (வெறும்) வார்த்தைளேயாகும். அல்லாஹ் உண்மையே கூறுகின்றான். இன்னும் அவன் நேர் வழியையே காட்டுகிறான்' (அல்குர்ஆன் 33:4)

(எனவே) நீங்கள் (எடுத்து வளர்த்த) அவர்களை அவர்களின் தந்தைய(ரின் பெய)ர்களைச் சொல்லி (இன்னாரின் பிள்ளை யென) அழையுங்கள். அதுவே அல்லாஹ்விடம் நீதமுள்ளதாகும் (அல்குர்ஆன் 33:5)

உங்களில் சிலர் தம் மனைவியரைத் தாய்கள் எனக் கூறி விடுகின்றனர். அதனால் அவர்கள் இவர்களுடைய தாய்களாக ஆவதில்லை. இவர்களைப் பெற்றெடுத்தவர்கள் தாம், இவர்களுடைய தாய்கள் ஆவார்கள். எனினும் இவர்கள் சொல்லில் வெறுக்கத் தக்கதையும் பொய்யானதையுமே கூறுகின்றார்கள். (அல்குர்ஆன் 58:2)

உங்களுக்கு பிறந்த குமாரர்களின் மனைவியரையும் நீங்கள் விவாகம் செய்யலாகாது (அல்குர்ஆன் 4:23)

இந்த வசனங்களில் போலித்தனமான உறவுகளை இறைவன் அங்கீகரிக்கவில்லை என்பதையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜைனப்பை இதனாலேயே திருமணம் செய்தனர் என்பதையும் மிகத் தெளிவாக இறைவன் அறிவித்து விடுகிறான்.

இங்கே ஒரே ஒரு சந்தேகம் மட்டும் சிலருக்கு இன்னமும் இருக்கலாம். அந்த உறவுகள் தகர்க்கப்படத்தான் வேண்டும். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்து காட்டித் தான் தகர்க்க வேண்டுமா? வெறும் ஆணையிட்டால் அல்லது அதற்கு அனுமதி உண்டு என்று சொன்னாலே போதுமே! மற்றவர்கள் அதைச் செய்து விடுவார்களே! என்பதே அந்தச் சந்தேகம்.

மேலோட்டமான பார்வையில் இது நியாயம் போலத் தோண்றினாலும் சிந்திக்கும் போதே இது தவறு என்பது தெளிவாகும்.

திருமணத்தைப் பொருத்தவரை இவரைத் தான் திருமணம் செய்ய வேண்டுமென ஆணையிட முடியாது. அது தனிப்பட்ட நபர்களின் விருப்பத்தின்பாற்பட்டது. அனுமதிக்கத்தான் முடியும். அவர்களை மணம் செய்ய அனுமதி உண்டு என்று சொன்னவுடன் செய்து காட்ட முன்வரமாட்டார்கள். அனுமதிக்கப்பட்டவைகளை செய்து தான் ஆக வேண்டுமென்று கட்டாயம் எதுவுமில்லை.

காலம் காலமாக 'மகனுடைய மனைவி' என்றே நம்பி வந்திருக்கும் போது, சொந்த மருமகளாக அவளைக் கருதி வந்திருக்கும் போது, அனுமதிக்கப்பட்ட பின்னரும் கூட அவர்களை மணக்கத் தயங்கவே செய்வர். மனைவியாகப் பாவித்து உடலுறவு கொள்ள அவர்கள் உள்ளம் எளிதில் இடம் தராது. தங்கள் உள்ளத்தில் அப்படி ஒரு எண்ணத்தைத் தலைமுறை தலைமுறையாக வளர்த்துக் கொண்டு விட்டார்கள். சமுதாயம் பரிகாசிக்குமோ என்ற அச்சம் வேறு அவர்களின் தயக்கத்தை அதிகமாக்கும்.

உலகத்தின் விமர்சனத்தைப் பற்றிக் கவலைப் படாமல், பாரம்பரியத்துக்கு எள்ளளவும் இடம் தராமல் அதைச் செய்து காட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே தகுதியானவர்கள் என்று கருதியே இறைவன் இதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையே தேர்வு செய்தான். இதனால் சமுதாயத்தின் பலத்த எதிர்ப்புக்கு ஆளாக நேரிடும் என்பதையும் அதற்கடுத்த வசனத்தில் இறைவன் மறைமுகமாக சொல்கிறான்.

'இறைத்தூதர்கள் இறைவனின் செய்திகளை எடுத்துச்சொல்ல வேண்டும். அவனுக்கு அஞ்ச வேண்டும். அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்கும் அஞ்சக் கூடாது (அல் குர்ஆன் 33:39)

எவருக்கும் அஞ்சலாகாது என்று இங்கே இறைவன் குறிப்பிடுவதிலிருந்து 'அஞ்சுவதற்குரிய' ஒன்றாக இத்திருமணம் இருந்தது என்று அறியலாம்.

இதுவரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இந்த திருமணத்திற்கு சிலர் சொல்வது போல் அவற்றிற்கு காமவெறி காரணம் அல்லவென்பதை அறிவுடையோர் விளங்களாம். இறைவனே நன்கறிந்தவன்.

(நபிகள் நாயகம் - பல திருமணங்கள் செய்தது ஏன்? - என்றப் புத்தகத்திலிருந்து...)

-------------------------------------------------------

அடுத்து இஸ்லாத்தில் சாதிகள் உள்ளது என்றும் பெண்கள் வரதட்சணை கொடுமையால் அவதிப்படுகிறார்கள் என்றும் கோவிக் கண்ணன் அங்கலாய்த்திருக்கிறார் தனது பதிவில்.

குலங்களும் கோத்திரங்களும் படைக்கப்பட்டது ஒருவரையொருவர் புரிந்து கொள்வதற்காகவும் அறிந்து கொள்வதற்காகவுமே. ஒரு சீனனையும், ஒரு மலாய்காரனையும், ஒரு இந்தியனையும், ஒரு ஆப்ரிக்கனையும், ஒரு அமெரிக்கனையும அருகருகே நிறுத்தி வைத்தால் யாரும் சொல்லாமலே அவன் எந்த நாட்டுக் காரன் என்ற பதிலை எவரும் சொல்லி விடலாம். ஆனால் இந்த வேறு பாட்டை வைத்து நீ நெற்றியில் பிறந்தவன், நீ தொடையில் பிறந்தவன், நீ காலில் பிறந்தவன் நீ சூத்திரன், நீ கோவிலுக்குள் நுழையக் கூடாது, இரட்'டை குவளை முறை என்பதைத்தான் இஸ்லாம் தடுக்கிறது. நீங்கள் குறிப்பிட்டிருக்கும் சாதி பெயர்கள் எதுவுமே குர்ஆனிலோ ஹதீஸிலோ எந்த இடத்திலும் பார்க்க முடியாது.

'ஒரு கருப்பு அடிமை உனக்கு தலைவனாக ஆக்கப்பட்டாலும் அவனுக்கு கீழ்படிய வேண்டும்' என்ற ஹதீதையும் இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஐந்து வேளை தொழுகையில் தினமும் பல இனங்கள் ஒன்று சேர்வதால் 'மனிதம்' என்ற ஒன்றுதான் அங்கு வருமேயொழிய சாதி வேறுபாடு வருவதில்லை. இன்று தமிழகத்தில் உள்ள பழைய முஸ்லிம்களின் சாதி என்ன என்று யாரிடமாவது கேளுங்கள் எவருக்கும் தெரியாது. எத்தனை சட்டம் போட்டும் எத்தனை பெரியார்கள் வந்தும் சாதிக் கொடுமையும் தீண்டாமையையும் நம்மால் ஒழிக்க முடிந்ததா? ஆனல் இஸ்லாம் ஒரு தலைமுறையிலேயே அந்த மாற்றத்தை நடத்திக் காட்டும். நடத்திக் காட்டியிருக்கிறது.

மெக்காவில் இறைவனுக்காக கொடுக்கப்பட்ட முதல் அழைப்பொழியை இந்த உலகுக்கு கொடுத்தது பிலால் என்ற ஆப்ரிக்க அடிமைதான். இதுதான் இஸ்லாம்.

அடுத்து வரதட்சணை: இதற்கு மாற்றமாக பெண்ணுக்கு மஹர் கொடுக்க வேண்டும் என்கிறது இஸ்லாம். தர்ஹா வணக்கம் எப்படி இந்துக்களிலிருந்து முஸ்லிம்கள் காப்பி அடித்தார்களோ அது போல் வரதட்சணையையும் இந்துக்களிலிருந்து கடன் வாங்கிக் கொண்டனர் முஸ்லிம்கள். இந்த கூத்து இந்தியாவில் மட்டும்தான் நடக்கும். அரபு நாடுகளில் ஆண்களுக்கு அரசு திருமணத்துக்காக மஹர் பணம் கொடுத்து ஆண்களுக்கு உதவி செய்கிறது. இந்த நிலையை தமிழகத்தில் கொண்டு வர கடந்த 25 வருடங்களாக போராடி ஓரளவு வெற்றியும் கண்டுள்ளோம். எனது திருமணத்திற்கு எனது தாய்க்கு நான் எழுதிய கடிதத்தில் 'நான் மஹர் கொடுத்தே திருமணம் செய்து கொள்வேன். என்னை மீறி பெண் வீட்டாரிடம் நகைகளாகவோ பணமாகவோ வாங்கினால் அதற்கு இறைவனிடம் நீங்கள் தான் பதில் சொல்லியாக வேண்டும்' என்று எனது தாயாருக்கு கடிதம் எழுதினேன். ஏனெனில் பெண் பார்த்த பொழுது நான் சவுதியில் இருந்தேன். இவ்வளவு கடுமையாக நான் கடிதம் எழுதியதை இன்றும் கூட எனது தாயார் சொல்லிக் கொண்டிருப்பார். இந்த மாற்றத்தை என்னுள் ஏற்படுத்தியது நான் விளங்கிய குர்ஆனும் நபி மொழியும் தான். பல சகோதரர்கள் முன்பு வாங்கிய 10 லட்சம் 20 லட்சம் வரதட்சணைகளை இன்று பொது மேடையில் திருப்பி கொடுக்கும் நிகழ்ச்சிகளை தினமும் பார்க்கிறோம்.

நாகூர் தர்ஹாவுக்கு கூட்டம் வருவதில்லை என்று வருத்தப்பட்டு நீங்கள் பதிவு போடும் அளவில்தான் இன்றைய மாற்றங்கள் நடந்து வருகிறது. இதற்கெல்லாம் காரணம் நீங்கள் குறிப்பிடும் வஹாபிய வளர்ச்சி என்றால் மிகையாகாது. வஹாபியம் வளர்ந்தால் உண்மையான இஸ்லாம் மக்கள் மத்தியில் பரவும். வன்முறை குறையும்: முஸ்லிம்கள் படிப்பில் ஆர்வம் செலுத்துவார்கள்: தவறான சாதி புரிதல்கள் களையப்படும்: வரதட்சணை ஒழியும்: மூடப் பழக்கங்கள் ஒழியும்: மாற்று மதத்தவரிடையே இணக்கம் அதிகரிக்கும்: கடந்த இருபது வருடங்களுக்கு முந்தய நிலையையும் தற்போதய இஸ்லாமியரின் நிலையையும் நீங்கள் ஒப்பிட்டுப் பார்த்தீர்கள் என்றால் வஹாபியத்தின் அவசியம் எந்த அளவு தேவை என்பது உங்களுக்கும் விளங்கும்.

மற்றபடி தசரதன் ராமன் கதைகளையும் பதிவில் தொட்டிருந்தீர்கள். ராமனின் உண்மையான வரலாறை பல அறிஞர்கள் முன்பே எழுதியிருக்கிறார்கள். அதை திரும்பவும் நான் எழுதி உங்களை உஷ்ணப்படுத்த விரும்பவில்லை. உங்களுக்கு என்னை விட நன்றாக தெரியும் என்பதால் அந்த வரலாறுகளை படித்து மேலும் தெளிவு பெறுங்கள்.

பதிவு நீளமாகி விட்டதால் நீங்கள் கேட்ட மற்ற கேள்விகளுக்கும் நேரமிருப்பின் பின்னூட்டத்தில் பதிலளிக்கிறேன்.




23 comments:

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

ஸலாம் சகோ.சுவனப்பிரியன்,

மீண்டும் மீண்டும் மீண்டும் நெடிய விளக்கங்கள்... விரிவான பதில்கள்... நாம் நமது பணியை செவ்வனே நிறைவேற்றுகிறோம். இதனை படிப்பதும் புரிந்து கொள்வதும் இனி அவர்கள் வேலை..!

அவரின் ஹிந்துத்துவ-திராவிட நாத்திகமும்(?) ஆரிய-பார்ப்பனியமும் (நன்றி-டோண்டு) ஓருடல் ஈருயிராக கலந்த அந்த 'பதிவை' இப்போதுதான் படித்தேன்.

என்னே ஒரு சொதப்பல் குப்பை..!

அரைவேக்காடு கூட வேகாத ஒரு மகா மொக்கை பதிவு அது..!

சகோ.அஸ்மா தன் 'பயணிக்கும் பாதை' தளத்தில் வெளியிட்ட ததஜவின் சாதிவாரி கணக்கெடுப்பு பற்றிய பதிவில்... தமிழ்நாட்டு அரசால் இஸ்லாத்தில் புகுத்தப்பட்ட சாதி பாகுபாட்டை மேற்கோள் காட்டி... "சாதி இஸ்லாத்தில் இருக்கிறது" என்கிறார்..! என்னே ஒரு அறிவிலியாக உள்ளார்..!
இதுவாவது பரவாயில்லை... ஷியாவும் சந்நியும் சாதி என்கிறார்..! விழுந்து விழுந்து சிரிக்கத்தான் முடியும்..!

அங்கே சென்ற அவர், அதை காபி பேஸ்ட் பண்ணும் முன்னர் அவரின் கண்கள்... அப்பதிவின் கீழே திருவாளர் டோண்டு போட்ட கமெண்ட்டயும் அதற்கு நான் அளித்திருந்த பதிலடி பின்னூட்டத்தையும் காணாமல் இருந்திருக்க முடியாது..!

நன்கு உண்மை விளங்கிய பின்னர் தான் இந்த போக்கத்த வேலையை செய்யத்துணிந்து இருப்பார்.!

இருந்தும் இப்படி டோண்டுவின் கமெண்டை காப்பி அடித்து எழுதியதால்... இவரின் வந்நெஞ்சம் கொண்ட பொல்லாத குறிக்கோள் ஆகிய இஸ்லாமிய எதிர்ப்பு புலனாகிறது..!


சகோ.அஸ்மாவின் பதிவில்
நான் திரு.டோண்டு ராகவனுக்கு தந்த பதில்.... அவரின் பூணூல் போடாத சகோதரருக்கும் பொருந்தும்..!

///////////////////

திரு.டோண்டு ஐயங்கார் சார்,

///என 7 சாதியினராக முஸ்லிம்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.///

----யாரால்..?

மாநில அரசால்..! இஸ்லாமால் அல்லவே...!


{{இது போன்ற கேள்விகளுக்கு எல்லாம் வேலை இன்றி மேற்படி விஷயத்தை இந்த பதிவு இன்னும் கொஞ்சம் நன்றாக நறுக் என்று மண்டையில் ஓங்கி கொட்டியது போன்று தெளிவாக எழுதி இருக்கலாம். நிச்சயமாக இது ஒரு குறைதான் இப்பதிவுக்கு.}}

உங்களை ஐயர் என்று வகைப்படுத்தி உங்களுக்கு சாதி சான்றிதழலில் சொன்னது மாநில அரசா..? இல்லையே..!

நீங்கள் சார்ந்த பார்ப்பனிய ஹிந்து மத வர்ணாசிரம் அல்லவா..? பிறக்கும்போதே ஐயங்க்காராக அல்லவா பிறந்தீர்கள்..?

நாளையே, "சாதி என்ற இடத்தில் முஸ்லிம்கள் ஏதும் குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை" என்று அரசு ஆணை பிறப்பித்து விட்டால்,நாங்கள் மொத்த முஸ்லிம்களும் இஸ்லாத்தில் சாதி இல்லை என்பதால், அந்த ஆணைக்கு கட்டுப்பட தயார், "சாதி - இல்லை" என்று சாதி சான்றிதழில் மிக மிக சந்தோஷமாக எழுத..!

ஆனால்..... டியர் மிஸ்டர் டோண்டு அயங்கார் அவர்களே,

நீங்கள் இது போன்ற அரசு ஆணைக்கு அடிபணிய தயாரா..? உங்கள் ஐயங்கார் சாதியை விட்டொழிக்க தயாரா..? பூணூலை அறுத்து எறிய தயாரா..? சாதி வர்ணாசிரமத்தை விட்டொழிக்க தயாரா..? சாதிக்கு எதிராக பதிவு எழுத தயாரா..?


தவளை தன் வாயால் வந்து இப்படி கெடுகிறதே..!

////////////////////////////

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

அப்புறம்.....

நான் எனது தளத்தில்...
ஈழ போர் விதவைகளுக்கு தீர்வாக சிலதாரமணத்தை முன்வைத்ததை....
அபத்த சிந்தனை என்கிறார்..!

ஹா..ஹா..ஹா..

அதற்கு.... அவரின், "யாருமே சிந்திக்காத அதிநவீன" (?!?!?) மாற்று தீர்வு என்ன தெரியுமா..?

பல சொதப்பல் வரிகளுக்கு இறுதியில்.... அவர் கூறியது இதுதான்....

//////

அவர்களுக்கு மாற்று நல்ல வேலையும், விதவையை மணக்க வரும் இளைஞர்களும் அன்றி வேறெந்த தீர்வும் சிறப்பானதாக இருக்க முடியாது.

///////

பரவாயில்லை....

முன்பொருமுறை, வேறொரு 'மணியான' பதிவர் தன் துர்நாற்ற 'ஐடியாவாக'.... ஈழத்தில் மிகுதியாக விபச்சார விடுதிகள் திறக்கப்படல் வேண்டும் என்று தீர்வு சொல்லி இருந்தார்..! அந்த சாக்கடைக்கு இவர் எவ்ளவோ தேவலை..!

ஆனால், இந்தாளுக்கு தலையும் விளங்க வில்லை... காலும் விளங்க வில்லை... வயிற்றை தடவி... 'யானை உருவம் பானை போல இருக்கும்' என்று படம் வரைகிறார்.... அபத்தத்தின் சிகரமாக..!

ஈழத்தில் ரியல் பிரச்சினை என்ன என்று கூட அறியாதவராக உள்ளார்.

கேள்வி கேட்டால் பதில் எழுதுவோம்...
ஆனால்... இந்த மனிதர்....
http://pinnoottavaathi.blogspot.in/2011/12/blog-post_20.html
என் இப்பதிவின் (சந்ரு என்ற ஈழ பதிவரின் குற்றச்சாட்டுக்கு எழுதிய) பதிலுக்கு உரிய கேள்வியை கேட்கிறாரே..!

இப்படி ஒரு மனிதரை யாரேனும் எங்கேனும் கேள்வி பட்டதுண்டா..?
:-))

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

4 மாதத்துக்கு முந்திய மேற்சொன்ன அந்த பதிவில் முன்னர் நான் சொன்ன பதில்களை.....

இங்கே ஜஸ்ட் காப்பி பேஸ்ட் பண்றேன்...

அப்புறம் இதற்குரிய கேள்விகளை...
அவரின் இன்றைய பதிவில் சென்று படித்துக்கொள்ளுங்கள்.

தீர்வு-3
**********************************
விபச்சாரத்தின் பக்கமே செல்லாத விதவைகளுக்கு வாழ வழி..? இலங்கை போன்ற ஒரு நாட்டில், திடீரென லட்சக்கணக்கில் வேலைவாய்ப்பை ஏற்படுத்த இயலாது. அப்படியே இயன்றாலும், அவை வயிற்றுப்பசிக்கு மட்டுமே தீர்வாக அமையும். எனவே, விதவை மறுமணம் ஊக்குவிக்கப்படல் வேண்டும். ஆனால், சகோ.சந்ருவின் பதிவின் அடிப்படையில், மட்டக்களப்பு என்ற ஒரே ஒரு மாவட்டத்திலேயே 40,000க்கும் மேல் விதவைகள் இருந்தால்... ஈழம் முழுவதும் எத்தனை பேர் இருக்க வேண்டும்..? அத்தனை பேருக்கும் எப்படி தனித்தனி மாப்பிள்ளை கிடைப்பார்கள்..?

ஆக, இதுபோன்று பலவருடங்கள் போர் நடந்து முடிந்த ஒரு நாட்டில் ஆண்மக்கள் எண்ணற்றோர் மடிந்து ஆண்கள் எண்ணிக்கையில் வெகுவாக குறைந்து... விதவைகளும் முதிர்கன்னிகளுமாக பெண்மக்கள் மிகுதியாகி... இப்படியான ஒரு குழப்ப சூழல் ஏற்படுவது இயல்பே..! இதொன்றும் புதிய சூழல் இல்லை. 1400 ஆண்டுகால பழசுதான்..! இப்போது, மாப்பிள்ளை பற்றாக்குறை என்று இளம் விதவைகளை திருமணத்திலிருந்து தள்ளி வைக்க முடியாது. இந்நிலையில் விதவை மறுமணம் என்பதும் ஒரு பெண்ணுரிமை.

இப்படியான கட்டத்தில், "இந்த குழப்ப நிலைமையில் இதற்கு என்ன தீர்வு" என்றுதான் நாம் சிந்திக்க வேண்டும். போரில்லாத சகஜ நிலையில் உள்ள வாழ்க்கையின் வாழ்வியல் தீர்வை இங்கே சட்டமாகவோ மதச்சடங்காகவோ வலுக்கட்டாயமாக திணிக்கக்கூடாது. அது இயங்கியல் ரீதியாக நடவாது. அப்படிச்செய்வதால்தான் சகோ.சந்ரு தன் பதிவில் குறிப்பிட்டிருந்த குற்றங்கள் நடந்தன. நடக்கின்றன. நடந்தே தீரும்.

இதற்கு என்ன செய்யலாம்..? தமக்கு இன்னும் இளம் வயதும், செல்வமும், சம்பாரிக்கும் ஆற்றலும், உடல்திடமும், தாராள மனமும் கொண்ட ஈழத்து ஆண்கள் நிறைந்த மனதோடு தாமாக முன்வந்து வரதட்சினை சீர் போன்ற ஏதுமின்றி ஈழத்தமிழ் விதவைகளை அவர்களின் குழந்தைகளோடு எவ்வித நிபந்தனையுமின்றி முதல் தாரமாகவோ, இரண்டாம் தாரமாகவோ, மூன்றாம் தாரமாகவோ மணக்க முன்வரவேண்டும்..!

இதொன்றும் புதிய தீர்வு இல்லை. 1400 ஆண்டுகால பழசுதான்..! இதில் வரக்கூடிய ஒரே ஒரு பெரிய எதிர்ப்பு முதல் மனைவியிடமிருந்து வரலாம். தன் கணவனை போரில் இழக்காத அதிர்ஷ்டசாலிகளான அவர்கள், சமூகத்துக்காக பெருந்தன்மையுடன் தம் ஈழ சகோதரிகளுக்காக தம் வாழ்வை பகிர்ந்தளித்து விட்டுக்கொடுக்க வேண்டும்.!

அதாவது... ஈழப்பெண்களும் சமூகமும் மதத்தலைவர்களும் சட்டமும் பல 'சிலதார மணம்' செய்துகொள்ள பல ஆண்களை அனுமதிக்க வேண்டும்..!

ஈழத்தைவிட பன்மடங்கு பாதிக்கப்பட்ட நாடு இராக் என்பதை அறிவீர்கள். பல 'சிலதாரமணம்' இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டதாயினும், 1959-ம் வருடம் முந்தைய ஆட்சியாளர் அப்துல் கரீம் அல் காசிம் என்பவரால் இராக்கில் சட்டப்படி அது (polygamy) தடை செய்யப்பட்டு இருந்து வந்தது..!!! ஆனால், அந்த தடை இவ்வருடம் வேறு வழியே இன்றி நீக்கப்பட்டதோடு மட்டுமின்றி, ஒரு மனைவிக்கு மேல் விதவைகளை திருமணம் செய்யும் ஆண்களுக்கு எக்கச்சக்கமாக பொருளாதார நிதியுதவியை செய்ய இராக் அரசே முன்வந்துள்ளது..!!! காரணம்: அங்கே போரின் விளைவால் பத்து லட்சத்திற்கும் அதிகமான இளம் விதவைகள் உள்ளனர்.

இந்த இராக்கின் தீர்வு ஈழத்துக்கும் பொருந்தும்தானே..?

***********************************

அவருக்கு புரியும்படி சிம்பிளாக சொல்ல வேண்டும் என்றால்...

அஞ்சு ஆண், அஞ்சு பெண்...
போரில், மூன்று ஆண் ஒரு பெண் இறந்து விட்டனர்.

மீதி இருக்கும் இரண்டு ஆணுக்கு நான்கு பெண் இருக்கும் போது....

ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற விதிப்படி...
இரண்டுக்கு இரண்டுக்கு என்றாகி விட்ட நிலையில்....

மீதி உள்ள அந்த இரண்டு பெண்களுக்கு உங்கள் தீர்வு என்ன..?

இதுதான் நான் விடுத்த சவால்..!

தட்ஸ் ஆல்..!

இதுவரை வந்த ஒரே (ஐடியா தீர்வு) பதில்...

அந்த பெண்கள் இருவரும் விபச்சாரம் செய்ய வேண்டும் என்று...!

கொடுமை... கொடுமை...
இவர்களுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய நிலையில் நாம் இருக்கோமே..!

Maruthan said...

//இந்த வசனத்தின் படி நாளை மறுமையில் இறைவன் கோவிக் கண்ணனைப் பார்த்து 'வேதங்களையும் தூதர்களையும் சிறந்த அறிவாற்றலையும் வசதி வாய்ப்புகளையும் தந்திருந்தும் என்னை உரிய முறையில் வணங்கவில்லையே ஏன்?' என்று கேட்பதாக வைத்துக் கொள்வோம் அதற்கவர் 'இறைவா! சுவனப்பிரியன் பல ஆண்டுகள் இணையத்தின் மூலம் தொடர்பில் இருந்தார். பல பின்னூட்டங்களால் கருத்துகளை பரிமாறிக் கொண்டோம். ஒரு முறை கூட 'இது தவறு! இது சரி' என்று என்னிடம் சொன்னதில்லை. உண்மைகளை தெரிந்து கொண்டே மறைத்து விட்டார். அவர் உரிய முறையில் சொல்லியிருந்தால் நானும் உன்னை வணங்க வேண்டிய முறையில் வணங்கியிருப்பேன்' என்று என் மீது வழக்கு தொடர்ந்தால் நான் மாட்டிக் கொள்ளக் கூடாது அல்லவா! அதற்கான முன்னேற்பாடுதான் இது போன்ற பதிவுகள்.//

ச்சே...ச்சே... கோவி அப்படியெல்லாம் சொல்லமாட்டார். உங்களுக்கு சுவனத்தில் கன்னியர்கள் கன்பார்ம்டு...

Maruthan said...

//நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழ்ந்த பகுதியிலும் உலகில் பல்வேறு பகுதிகளிலும் போலியான உறவு முறை ஒன்று நடைமுறையில் இருந்து வந்தது. சந்ததியற்றவர்களும் அல்லது ஆண் சந்ததியற்றவர்களும், சில சமயங்களில் உதவாக்கரையான ஆண் சந்ததிகளைப் பெற்றவர்களும் பிறரது மகனை வளர்ப்பு மகனாக - சுவீகாரப் புத்திரனாக - எடுத்துக்கொள்வர். 'வளர்ப்பு மகன்' எனப் பிரகடனம் செய்யப்பட்டவர், பெற்ற மகனுக்கு இருப்பது போன்ற எல்லா உரிமைகளையும் பெற்றவராக கருதப்படுவார்.

வளர்த்தவர் இறந்துவிட்டால் அவரது சொத்துக்களுக்கு வளர்ப்பு மகன் வாரிசாவார். பெற்ற மகனுக்கு கிடைப்பது போன்ற அதே சொத்துரிமை, கூடுதல் குறைவின்றி அவருக்கும் கிடைத்து வந்தது. தந்தையின் பெயரைக் குறிப்பிட வேண்டிய கட்டங்களில் அவர் தமது தந்தையாக அவரை - வளர்த்தவரையே குறிப்பிட வேண்டும் என்பது நடைமுறையில் இருந்து வந்தது. 'தந்தை மகன்' எனும் உறவு அவ்விருவருக்குமிடையே உன்மையிலேயே ஏற்பட்டுவிடடதாக அவர்கள் நம்பினர்.

இதனால் இன்னும் சில சம்பிரதாயங்களும் ஏற்படுத்தப்பட்டன. வளர்ப்பு மகன் தன் மனைவியை விவாகரத்துச் செய்த பின், அல்லது அவன் இறந்த பின், அவனது மனைவியை வளர்ப்புத் தந்தை, திருமணம் செய்வது கூடாத ஒன்றாக கருதப்பட்டு வந்தது. ஏனெனில் அப்பெண் உன்மையிலேயே வளர்ப்புத் தந்தைக்கு மருமகளாகி விட்டதாக அவர்கள் நம்பி வந்தனர். இது போல் வளர்ப்புத் தந்தைக்கு மகள் ஒருத்தி இருந்தால் அவளை அவரது வளர்ப்பு மகன் திருமணம் செய்ய முடியாது. ஏனெனில் அவ்விருவரும் உடன் பிறந்தவர்களாகிவிட்டனர் என்பது இவர்களது நம்பிக்கை.

போலித்தனமான இந்த உறவு முறையையும், முட்டாள் தனமான இந்த சம்பிரதாயங்களையும் தகர்க்க வேண்டுமென்பது இறைவனின் விருப்பம்.///


//காலம் காலமாக 'மகனுடைய மனைவி' என்றே நம்பி வந்திருக்கும் போது, சொந்த மருமகளாக அவளைக் கருதி வந்திருக்கும் போது, அனுமதிக்கப்பட்ட பின்னரும் கூட அவர்களை மணக்கத் தயங்கவே செய்வர். மனைவியாகப் பாவித்து உடலுறவு கொள்ள அவர்கள் உள்ளம் எளிதில் இடம் தராது. தங்கள் உள்ளத்தில் அப்படி ஒரு எண்ணத்தைத் தலைமுறை தலைமுறையாக வளர்த்துக் கொண்டு விட்டார்கள். சமுதாயம் பரிகாசிக்குமோ என்ற அச்சம் வேறு அவர்களின் தயக்கத்தை அதிகமாக்கும்.//

நபிகளின் வழி ஏக உன்னதம். இது போன்றே தொடர்ந்து பதிவிடுங்கள். பலரும் நபிகள் குறித்து அறிந்து கொள்வார்கள்.

suvanappiriyan said...

திரு மருதன்!

//ச்சே...ச்சே... கோவி அப்படியெல்லாம் சொல்லமாட்டார். உங்களுக்கு சுவனத்தில் கன்னியர்கள் கன்பார்ம்டு... //

திருமணத்திற்கு முன்பும் திருமணத்திற்கு பின்பும் இன்று வரை எந்த ஒரு பெண்ணையும் நான் தீண்டியதில்லை (என் மனைவியைத் தவிர). இது எவ்வாறு சாத்தியப்பட்டது? உங்களை போன்ற சராசரி மனிதன்தான் நான். அனைத்து உணர்ச்சிகளும் ஒருங்கே அமையப் பெற்றவன். வெளி நாடுகளில் வசிக்கும் ஆண்களுக்கு வெளியூர்கள் சென்று வரும் ஆண்களுக்கு எத்தனை சந்தர்ப்பங்கள் அமையும் என்பதை சொல்லத் தேவையில்லை. இவ்வளவு வாய்ப்பு வசதிகள் இருந்தும் நான் ஏன் என் மனைவியிடம் மட்டும் இல்லற சுகத்தை பகிர்ந்து கொள்கிறேன். வேறு யாரும் பர்க்கா விட்டாலும் என்னை படைத்த இறைவன் என்னை எந்த நேரமும் கண்காணித்துக் கொண்டிருக்கிறான். நான் என் மனைவிக்கு துரோகம் செய்து வேறு ஒரு பெண்ணை படுக்கையில் பகிர்ந்து கொண்டால் என்னை மறுமையில் தண்டிப்பதாக இறைவன் குர்ஆனில் கூறுகிறான். அந்த தண்டனைக்கு பயந்து நான் எனது மனதை கட்டுப்படுத்திக் கொள்கிறேன். இவ்வாறு இறைவனுக்கு மதிப்பு கொடுத்ததால் அதற்கு பரிசாக சொர்க்கத்தில் நான் விரும்பும் அனைத்து சுகங்களையும் தருவதாகவும் வாக்களிக்கிறான்.

இறைவனுக்காக மனதை கட்டுப்படுத்திய நான் அந்த இறைவன் பரிசாக தருவதை ஏற்றுக் கொள்வதில் என்ன தயக்கம் இருக்க முடியும்? சந்தோஷமாக ஏற்றுக் கொள்வேன்.

suvanappiriyan said...

சலாம் சகோ ஆஷிக்!

அருமையான விளக்கங்கள். அலுவலக வேலையையும் பார்த்துக் கொண்டு பதிவும் எழுதுவதால் சற்று சிரமம். நான் கொடுக்க நினைத்த பல பதில்களை உங்கள் பின்னூட்டம் மூலம் கோவிக் கண்ணனுக்கும் டோண்டு ராகவனுக்கும் கொடுத்துள்ளீர்கள். எனது வேலையை சற்று மிச்சப்படுத்தியிருக்கிறீர்கள்.

வருகைக்கும் சிறந்த பின்னூட்டங்களுக்கும் நன்றி சகோ.

dondu(#11168674346665545885) said...

///என 7 சாதியினராக முஸ்லிம்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.///

----யாரால்..?

மாநில அரசால்..! இஸ்லாமால் அல்லவே...!//
அப்படியா, சாதிப் பெயர்களை அளித்தது இசுலாமியர்கள்தானே. அந்தரத்திலிருந்தா எடுத்து கொடுத்தது அரசு? இப்பிரிவினர் இசுலாமியரிடம் இல்லை என்பதா உங்கள் புரிதல்?

சாதிகள் தவிர்க்க முடியாதவை என நான் சொன்னதுதானே இங்கும் நடந்திருக்கிறது? அதை ஏற்றுத்தானே இசுலாமியரும் இப்போது இவ்வாறு நடந்து கொள்கின்றனர்?

அந்த 7 சாதிகளிலும் 1) தக்னி முஸ்லிம் 2) தூதுகோலா 3) லெப்பை, ராவுத்தர், மரைக்காயர் 4) மாப்பிள்ளா
என்ற நால்வர்தானே பிற்படுத்தப்பட்டவராக காணப்படுகின்றனர் என்பதும் நிஜம்தானே. அவர்கள் நிலைக்கு உங்கள் சமூகத்தில் யார் பொறுப்பாம்?

அப்புறம் என்ன இழவுக்கு இசுலாத்தில் சாதி இல்லை என ஒப்பாரி வைக்கிறீர். ஆக இட ஒதுக்கீட்டு பிச்சைக்காக இல்லாத சாதிகளையும் ஏற்பவர் நீங்கள் என்பதுதானே நிஜம்?

//நீங்கள் இது போன்ற அரசு ஆணைக்கு அடிபணிய தயாரா..? உங்கள் ஐயங்கார் சாதியை விட்டொழிக்க தயாரா..? பூணூலை அறுத்து எறிய தயாரா..? சாதி வர்ணாசிரமத்தை விட்டொழிக்க தயாரா..? சாதிக்கு எதிராக பதிவு எழுத தயாரா..?//
அட அவ்வளவுதானா உமது புரிதல்? எங்களுக்குத்தான் இட ஒதுக்கீடே இல்லையே, அது இல்லாமலே தலை நிமிர்ந்து முன்னேறுகிறோமே. என்னுடைய சாதியை விடச்சொல்லி எந்த ஜாட்டான் எங்களுக்கு கூறுவது?

டோண்டு ராகவன்

suvanappiriyan said...

திரு டோண்டு ராகவன்!

//சாதிகள் தவிர்க்க முடியாதவை என நான் சொன்னதுதானே இங்கும் நடந்திருக்கிறது? அதை ஏற்றுத்தானே இசுலாமியரும் இப்போது இவ்வாறு நடந்து கொள்கின்றனர்?

அந்த 7 சாதிகளிலும் 1) தக்னி முஸ்லிம் 2) தூதுகோலா 3) லெப்பை, ராவுத்தர், மரைக்காயர் 4) மாப்பிள்ளா
என்ற நால்வர்தானே பிற்படுத்தப்பட்டவராக காணப்படுகின்றனர் என்பதும் நிஜம்தானே. அவர்கள் நிலைக்கு உங்கள் சமூகத்தில் யார் பொறுப்பாம்?//

சமூக அமைப்பில் ஒருவரை அடையாளப் படுத்திக் கொள்வதற்காக குடும்ப பெயர் தொழில்பெயர் மொழி பெயரை வைத்து ஒருவரை அழைத்துக் கொள்வது எல்லா நாட்டிலும் உள்ள ஒரு வழமை. குதிரை வியாபாரம் செய்தவர்கள் ராவுத்தர்கள் என்றும் மரக்கலங்கள் போட்கள் செய்து வியாபாரம் செய்தவர்கள் மரைக்காயர் என்றும் உருது மொழி பேசுபவர்கள் தக்னி என்றும் புரோகித தொழிலை செய்தவர்கள் லெப்பை என்றும் முன்பு முஸ்லிம்கள் வழக்கு மொழியில் சொல்லி வந்தனர். ஆனால் அவர்கள் தங்களுக்குள் எவருமே தீண்டாமையை கடைபிடிப்பதில்லை. திருமண உறவு வைத்துக் கொள்வதிலும் எந்த தடங்கலும் இல்லை. குர்ஆனிலோ ஹதீஸிலோ இது போன்ற வார்த்தைகளை நீங்கள் பார்க்க முடியாது. பள்ளியில் தொழும் போதும் தோளோடு தோள் ஒட்டி இன்று வரை சகோதரர்களாகத்தான் பழகி வருகின்றனர்.

ஆனால் இந்து மதத்திலோ ஸ்மிருதிகளில் ஒவ்வொரு வருணத்தானுக்கு என்ன தொழில் என்றும் அவனது தகுதி என்ன என்றும் நிர்ணயிக்கப்பட்டு அது இன்று வரை வேத பாட சாலைகளில் பயிற்று விக்கவும் படுகிறது. தீண்டாமை இந்து மதத்தில் வணக்கத்தலங்களில் எந்த அளவு கடை பிடிக்கப்படுகிறது என்பதை சமீப காலம் வரை நாம் பார்த்து வருகிறோம். எனவே இஸ்லாமிய பிரிவுகளுக்கும் இந்து மத வர்ண பேதங்களுக்கும் மலைக்கும் மடுவுக்குமுள்ள வித்தியாசம். இதை தெரிந்து கொண்டே நீங்கள் மறுக்க கூடாது.

//அப்புறம் என்ன இழவுக்கு இசுலாத்தில் சாதி இல்லை என ஒப்பாரி வைக்கிறீர். ஆக இட ஒதுக்கீட்டு பிச்சைக்காக இல்லாத சாதிகளையும் ஏற்பவர் நீங்கள் என்பதுதானே நிஜம்?//

நாங்கள்தான் முஸ்லிம்கள் அனைவரையுமே பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கச் சொல்லி போராடி வருகிறோமே! அரசாங்கமாக சிலரை மேலாக்கியும் சிலரை கீழாக்கியும் வகைபடுத்தியுள்ளது. இது தவறு என்றும் இதை மாற்ற வேண்டியும் இன்றும் போராடி வருகிறோம்.

//என்னுடைய சாதியை விடச்சொல்லி எந்த ஜாட்டான் எங்களுக்கு கூறுவது?//

இதுதான் இந்து மதத்துக்கும் இஸ்லாத்துக்கும் உள்ள வித்தியாசமே! இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் இந்து மதத்தில் தீண்டாமை ஒழியப் போவதில்லை என்பதை உங்களின் பின்னூட்டமே காட்டிக் கொண்டிருக்கிறது.

dondu(#11168674346665545885) said...

//ஜைனப் (ரலி) அவர்களோ ஆரம்பத்திலிருந்து ஜைதை விரும்பவில்லை. அவர்களது சுபாவத்திலும் தமது குரைஷிக் குலம் பற்றிய உயர்ந்த எண்ணம் இருந்தது.//

//ஆனால் அவர்கள் தங்களுக்குள் எவருமே தீண்டாமையை கடைபிடிப்பதில்லை. திருமண உறவு வைத்துக் கொள்வதிலும் எந்த தடங்கலும் இல்லை.//

இரண்டையும் நீங்கள்தான் கூறுகிறீர்கள். நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சாதிகள் இருந்தே தீரும்.

பை தி வே, உங்கள் குடும்பத்தினர் சென்சஸ் சமயத்தில் எந்த சாதியுடன் அடையாளப்படுத்திக் கொள்ளப் போகிறீர்கள்? சாதி இல்லை எனக் கூற தில் இருக்கா? அவ்வாறு கூறிவிட்டால், பல முசல்மான்களது கோபத்துக்கு ஆளாக நேரிடுமே? எதுக்கும் யோசித்து சூதனமா நடந்துங்கப்பூ.

அன்புடன்,
டோண்டு ராகவன்

suvanappiriyan said...

சகோ சார்வாகன்!

1.(இஸ்லாமில்) சாதி இல்லை ஆனால் (முஸ்லிம்களிடம்) உண்டு.

திரு டோண்டுவுக்கு கொடுத்த பதிலில் இந்த கேள்விக்கான பதில் இருக்கிறது.

//2.பல தார மணத்தை ஆதரித்து பதிவிடுவேன் .ஆனால் என் வீட்டு பெண்களுக்கு செய்ய மாட்டேன்.ஊருக்குத்தான் உபதேசம்.//

பலதார மணம் என்பது ஒரு அனுமதிதானே யொழிய அது கட்டாய கடமை அல்ல என்ற அரிச்சுவடி பாடத்தை இன்னும் விளங்காமல் இருப்பது ஆச்சரியம்.

3.பிறமதங்களை விமர்சிப்பார்கள்,அவர்களை விமர்சித்தால் பொங்கி விடுவார்கள்.

இணையத்தில் அதிகமாக விமரிசிக்கப்பட்டது இஸ்லாம்தான். அனைத்திற்கும் பொறுமையாக பதில் கூறிக் கொண்டுதானே இருக்கிறோம்.

4.விரித்தான்,பிரித்தான் ,கிழித்தான்,ஒட்டினான்,வெட்டினான் என்றால் அறிவியல் கொண்டு வரும் ந்கைசுவைதான் பலரையும் குஷிப்படுத்திய ஒரே விடயம்.

ஐரோப்பாவும் அமெரிக்காவும் இன்னும் 20 வருடங்களில் இஸ்லாமிய மயமாகப்போவது நீங்கள் கூறிய குர்ஆனின் வசனங்களைக் கொண்டே. எழுதி வைத்துக் கொள்ளுங்கள். நான் சொல்வது நடக்கிறதா இல்லையா என்று......

5.சவுதி அரசுதான் உலகின் தலை சிறந்த அரசு.அவர்களின் பெண்களுக்கு ஓட்டுரிமை இன்மை,ஊர்தி ஓட்டும் உரிமை இன்மை என்பதை இந்தியாவிலும் இஸ்லாமிய பெண்களுக்கு நடைமுறைப் படுத்த ஏன் நம் சகோக்கள் போராட்டம் நடத்துவது இல்லை?

சவுதி அரசுதான் இஸ்லாமிய சட்டங்களை உரிய முறையில் பயன்படுத்துவதில் வெற்றி கண்டுள்ளது என்று வேண்டுமானால் சொல்லியிருப்பேன். பெண்கள் கருப்பு உடைக்கு மாறியது: வரதட்சணை ஒழிக்கப்பட்டது: தர்ஹா வணக்கம் பிசுபிசுத்துப் போனது: மூடப் பழக்கங்கள் ஒழிக்கப்பட்டது: புரோகிதம் ஒழிக்கப்பட்டது: என்று மாற்றங்கள் வந்து கொண்டிருக்கிறது. இன்னும் கொஞ்சம் பொறுங்கள். அனைத்து முஸ்லிம்களுமே குர்ஆன் ஹதீதின் படி வாழும் முறையை நம் காலத்திலேயே தமிழகத்தில் பார்க்கலாம்.

6. இன்னும் கல்லெறிந்து கொல்லுதல் ,தலை வெட்டிக் கொல்லுதல் போன்ற காட்டு மிராண்டித்தனங்களை ஆதரிப்பவர்கள் நாகரிக சமுதாயத்தால் ஒதுக்கப்பட வேண்டியவர்கள்.

நேற்று கூட ஒரு சிறுமியை கல்லூரி கட்டடம் கட்டுவதற்காக நரபலி கொடுக்கப்பட்டு போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நம் தங்கத் தமிழகத்தில்தான். இத்தகைய காட்டுமிராண்டிகள் இன்றும் உலகத்தில் இருக்கும் போது அது போன்ற சட்டங்கள் அவசியம் இருந்தே ஆக வேண்டும். சவுதியில் இப்படி ஒரு கொலையை செய்து விட்டு மனிதன் வெளியில் நடமாட முடியுமா? திமுக பெரிய இடத்துக்கும் இந்த கொலையில் தொடர்பு உண்டாம். முதலில் அங்கு சென்று உங்களின் உபதேசத்தை ஆரம்பியுங்கள். :-)

Nizam said...

டோண்டு ராகவன்@

//அப்புறம் என்ன இழவுக்கு இசுலாத்தில் சாதி இல்லை என ஒப்பாரி வைக்கிறீர்.// ஐயா இஸ்லாத்தில் இல்லை என்று சொல்லிதான் ஒப்பாரி வைக்க முடியும். பின்னா நிங்கா சார்ந்த இருக்கார நா சொன்னா உங்களுக்கு கோபம் வரும். அது நமக்கு தேவையில்லது.

//ஆக இட ஒதுக்கீட்டு பிச்சைக்காக இல்லாத சாதிகளையும் ஏற்பவர் நீங்கள் என்பதுதானே நிஜம்?// ஐயா பிச்சையும் வேண்டாம் எச்சையும் வேண்டாம் இதை நிங்களே வைச்சுங்கோ ஐயா. எங்களுக்கு உரிமைதான் வேனுங்கையா

//எங்களுக்குத்தான் இட ஒதுக்கீடே இல்லையே,// நிங்களும் உரிமைகாக போரடுங்களே. சகோதர எஸ்.வி.சேகர் உங்கள மாதிறி கேட்டுக்கிட்டு இருந்தார்.

//அது இல்லாமலே தலை நிமிர்ந்து முன்னேறுகிறோமே.// முற்றிலும் தவறு ஐயா எல்லா இடத்துலும் தலை நிமிர்தா தங்கள் குப்பை மற்றும் மலம் எடுக்கும் பணிகளில் தலை சாய்ந்துவிட்டதே ஆகையால் நிங்களும் நானும் சேர்ந்து இனி வருகின்றா சமுகத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவோம். சேர்ந்து தலை நிமறாலம்.

suvanappiriyan said...

திரு கோவி கண்ணன்!

//ஒரு ஷியா முஸ்லும் சுன்னி முஸ்லாமாகவோ, சுன்னி முஸ்லிம் ஷியா முஸ்லிமாக மாற வழியே இல்லாத உங்கள் மார்க்கத்தில் நீங்கள் சாதியைக் கடந்தவராக பிரகனப்படுத்துவது எவ்வாறு ?//

ஷியா சன்னி பிரிவு என்பது பிறப்பால் வந்தது அல்ல. யார் அரசு அமைப்பது என்பதில் போட்டியில் உருவான அமைப்பே இந்த இரு அமைப்புகளும். அந்த காலத்தில் தகவல் தொடர்பு சாதனங்கள் சரிவர இல்லாததால் செய்திகள் சென்று கால தாமதமானது. இதைப் பயன்படுத்திக் கொண்டு எகிப்திலிருந்து வந்த சில நயவஞ்சகர்கள் பிரிவுக்கு தூபம் போட்டார்கள். அதில் சிலர் பலியாகி விட்டனர். குi;ஆனிலோ ஹதீஸிலோ இந்த இரண்டு பெயரையும் உங்களால் பார்க்க முடியாது. எனக்கு தெரிந்தே இரண்டு ஷியாக்கள் சன்னிகளாக தங்களை மாற்றிக் கொண்டதை பார்த்துள்ளேன். குர்ஆனை சரியாக விளங்கியவன் பிரிவுகளில் இருக்க மாட்டான்

//சுவனப்பிரியன் விரும்பினால் தாய் மதம் திரும்பலாம், அவருடைய நண்பர் திரு டோண்டு இராகவனிடம் சொன்னால் டோண்டு இராகவன் சாரே நவீன இராமனுஜராக ஆகி சுவனப்பிரியனுக்கு பூணூல் அணிவித்து தீட்சைக் கொடுத்து பார்பனராக பிராமணராக மாற்றிக் கொள்வார், அவரும் சாதிக் கொடுமையிலிருந்து மீண்டு உயர் வகுப்பை அடைந்து , வைகுண்டத்திற்குச் செல்வார்.//

திரு டோண்டு ராகவன் மேல் உங்களுக்கு அப்படி என்ன சார் கோபம். என்னை அவர் சாதியில் சேர்த்தால் யார் வேண்டுமானாலும் அர்ச்சகராகலாம் என்று கண்டிஷன் வைப்பேன். கோவில்களில் பிராமணர்களுக்கு தனி மரியாதை செய்வதை கண்டிப்பேன். குப்பனையும் சுப்பனையும் அக்ரஹாரத்துக்குள் கூட்டி வந்து எனது பிள்ளைகளோடு விளையாட விடுவேன்: புஹாரி பிரியாணியை வாரா வாரம் சமைத்து அக்ரஹாரம் முழுவதும் முகல் பிரியாணி மணத்தை பரப்புவேன்: தெருவுக்கு ஒரு சாமி: சாதிக்கு ஒரு சாமி என்ற நிலையை மாற்றி 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற நிலைக்கு அக்ரஹாரத்தை மாற்ற முயற்ச்சிப்பேன். 'ஒனக்கு ஏன் ஓய் இந்த வேண்டாத வேலை.. முசல்மானை அக்ரஹாரத்துக்கு கூட்டி வந்து நாஸ்தி பண்ணிட்டேளே....' என்று அவாள் இவாளை பிடித்து உலுக்கும் போது சுவனப்பிரியன் அக்ரஹாரத்திலிருந்து எஸகேப்.....:-).

Anonymous said...

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்”

- திருக்குறள்


சாதி இரண்டொழிய வேறில்லை
சாற்றுங்கால் நீதி வழுவா நெறிமுறையில்
இட்டார் பெரியோர் இடாதோர் இழி குலத்தோர்
பட்டாங்கில் உள்ளபடி

- ஔவையார்

(டோண்டு உட்பட) பார்ப்பனர்களின் சாதி வெறிக்குத் திரைப்பட இயக்குநர் சீமானின் பதில் இதோ:

http://amizhtha.wordpress.com/page/42/

- வள்ளுவன்

Rajesh kumar said...

திரு சுவானப் பிரியன் அவர்களே ,
இந்து மதத்திலுள்ள நித்யானந்தா, சங்கராச்சாரி, ஜாக்கி வாசுதேவ், போன்ற கார்பரேட் சாமியார்களை தரம்பார்த்து ஒதுக்கும் புத்தியையும் மதமென்னும் பெயரில் கண்மூடித்தனமாக அவர்களை ஆராதிக்க தேவையில்லை என்னும் பகுத்தறிவையும் இந்துமதம் எங்களுக்கு வழங்கியுள்ளது. உலகெங்கிலும் தீவிரவாதச் செயலை செய்து அப்பாவிகளை கொன்று குவித்த இழிமகன் பின் லேடனுக்கே சிறப்பு வழிபாடு செய்யும் அளவிற்கு மத வெறியர்கள் இல்லை நாங்கள். எங்களுடைய சகிப்புத்தன்மையை ஏளனம் செய்யதீர்கள். உங்கள் இறைத்தூதர் செய்த கூத்துக்களை படித்தேன். 1400 வருடங்களுக்கு முன்பு செய்ததால் அவர் புனிதர். இன்று செய்திருந்தால் அவரது பெயர் "phedophile" .
உங்கள் மதத்ததில் உள்ள அழுக்குகளை கழுவுங்கள். பின்பு அடுத்தவர் மதத்தை விமர்சிக்கலாம்.

Rajesh kumar said...

திரு சுவானப் பிரியன் அவர்களே ,
இந்து மதத்திலுள்ள நித்யானந்தா, சங்கராச்சாரி, ஜாக்கி வாசுதேவ், போன்ற கார்பரேட் சாமியார்களை தரம்பார்த்து ஒதுக்கும் புத்தியையும் மதமென்னும் பெயரில் கண்மூடித்தனமாக அவர்களை ஆராதிக்க தேவையில்லை என்னும் பகுத்தறிவையும் இந்துமதம் எங்களுக்கு வழங்கியுள்ளது. உலகெங்கிலும் தீவிரவாதச் செயலை செய்து அப்பாவிகளை கொன்று குவித்த இழிமகன் பின் லேடனுக்கே சிறப்பு வழிபாடு செய்யும் அளவிற்கு மத வெறியர்கள் இல்லை நாங்கள். எங்களுடைய சகிப்புத்தன்மையை ஏளனம் செய்யதீர்கள். உங்கள் இறைத்தூதர் செய்த கூத்துக்களை படித்தேன். 1400 வருடங்களுக்கு முன்பு செய்ததால் அவர் புனிதர். இன்று செய்திருந்தால் அவரது பெயர் "phedophile" .
உங்கள் மதத்ததில் உள்ள அழுக்குகளை கழுவுங்கள். பின்பு அடுத்தவர் மதத்தை விமர்சிக்கலாம்.

Anonymous said...

kumar சொன்னது…


என்ன சகோதரரே இதற்க்கு கூடவா அவருக்கு அர்த்தம்
தெரியாமல் இருக்கும்?
நவீன பார்ப்பனர்கள் என்ற
வார்த்தை தெரியுமா? பிறப்பால் தலித் ஆக இருப்பார்கள்
இசைமேதை இளையராஜாவைப்போல.
ஆனால் பின்னாளில் வசதி வாய்ப்பு வந்ததும்
எல்லாவற்றையும் மறந்துவிடுவார்கள் அதே
அன்னாரைப்போலவே.தேனியிலோ,போடியிலோ
தேவர்களுக்கும் தலித்துகளுக்கும் கலவரம்
வெடிக்கும்போது பாரதிராஜா என்ற தேவர் கூப்பிடுவார்
இளையராஜா என்ற தலித்தை வா நாம் இருவரும்
இனைந்து ஒற்றுமையை உருவாக்குவோம் என்று.
அப்போது பொங்கி எழுவார் இளையராஜா என்கிற நவீன
பார்ப்பனர்.என்னிடம் கலக்காமல் இவர் எப்படி
பத்திரிகைக்கு பேட்டி அளிக்கலாம் என்று.
பிரச்னை அதுவல்ல.என் சாதி அநேகமாக
மறக்கப்பட்டுவிட்ட ஒன்று.அதை ஏனடா இப்போது
வெளி உலகத்திற்கு தெரியப்படுத்துகிறாய் என்பதுதான்
இங்கே ஆத்திரம் வர காரணம்.

Anonymous said...

பொது வாழ்க்கையில் யார் மீதுதான் வழக்கு இல்லை. இந்தியாவில் 3.50 லட்சம் கற்பழிப்பு வழக்குகள் உள்ளன. அதில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் இருக்கும். ஆனால் என் மீது போடப்பட்ட பாலியல் வழக்கில், எந்த பெண்ணின் பெயரும் இல்லை. அது பொய் வழக்கு. இந்து மத தாக்குதலாக இதை கருதுகிறேன். நான் பீடத்திற்குள் இருந்திருந்தால் இப்பிரச்னை வந்திருக்காது. நான் ஆன்மிக சேவை செய்வதால் பிரச்னை செய்கின்றனர். உலகிலேயே ஆன்மிக கருத்துகளை பரப்புவதில் நான்தான் முதலிடத்தில் உள்ளேன். மொத்தம் 10 ஆயிரம் மணி நேரம் பேசியுள்ளதால், இந்தாண்டு இறுதியில் கின்னஸிலும் இடம்பெறுவேன்.

நான் சைவ பிள்ளை!சைவ பிள்ளைமார் வகுப்பை சேர்ந்தவர்களைதான் மதுரை ஆதீனமாக நியமிக்கப்படுவது மரபு. ஆனால் நித்தியானந்தா முதலியார் வகுப்பை சேர்ந்தவர் என சர்ச்சை எழுந்தது. இதை மறுத்த நித்யானந்தா,""நான் பரம்பரை சைவ பிள்ளைமார் வகுப்பை சேர்ந்தவன். இதை இங்கு வந்துள்ள எனது தாத்தா, பெரியப்பாவிடமே கேளுங்கள்,'' என்றார். தாத்தா, பெரியப்பா கூறுகையில், ""நாங்கள் சைவ பிள்ளைமார் வகுப்பை சேர்ந்தவர்கள். தொழில் அடிப்படையில் முதலியார், செட்டியார் என்று பெயருக்கு பின்னால் சேர்த்துக் கொள்வோம்,'' என்றனர்.

மதுரை ஆதீனம் கூறுகையில், ""289,290வது ஆதீனமாக இருந்தவர்கள் தொண்டை மண்டல முதலியார் வகுப்பை சேர்ந்தவர்கள். ஆனால் அடிப்படையில் அவர்கள் பரம்பரை சைவ பிள்ளை. அதுபோல்தான் நித்தியானந்தாவும் தொண்டை மண்டல முதலியார்,'' என்றார்.

சீடருக்கு கை நழுவிய பதவி!"இவ்வளவு சர்ச்சைகளுக்கு பிறகும், இளைய ஆதீனமாக பதவி வகிக்க வேண்டுமா' என நிருபர்கள் கேட்டதற்கு, நித்யானந்தா கூறியதாவது:
எனக்கு பதவி வேண்டாம் என நான்கு முறை ஆதீனத்திடம் கூறினேன். எனக்கு பதிலாக, எனது சீடர் ஞானசொரூபானந்தாவை நியமிக்குமாறு கேட்டேன். இவர் துபாயில் ஓட்டல் மேனேஜ்மென்ட்டாக பணிபுரிந்து ஆண்டுக்கு ரூ.25 லட்சம் சம்பாதித்தவர். பணத்திற்காக
ஆசைப்படாதவர். ஆனால் இவரை ஆதீனம் ஏற்கவில்லை. நான்தான் பொறுப்பேற்க வேண்டும் என்றார். அவர் கூறினால் இப்போதே விலகிவிடுகிறேன். நான் பொறுப்பேற்றதை வி.எச்.பி., தலைவர் அசோக்சிங்கால், ரவிசங்கர்ஜி, மாதாஅமிர்தானந்தமயி, காஞ்சி ஜெயந்திரர் மற்றும் 40 சமூக, ஆன்மிக தலைவர்கள், சைவ வேளாளர் அமைப்பினர் ஆதரித்துள்ளனர் என்றார்.
-தின மலர்
02-05-2012

suvanappiriyan said...

கோவி கண்ணன்

//திரூ கண்ணன் கோவி, நீங்கள் என்ன தான் சமாளிசாலும் அவர் கேட்ட கேள்வில அர்த்தம் இல்லாமலில்லை உங்களால பதில் சொல்ல முடியவில்லை என்பதும் உண்மை தான்.//:-))))))))))

//நான் பார்பனர்களை பிராமணர் என்று சொல்வது கிடையாது, எனவே பார்பனர் கொடுக்கும் சூத்திரப் பட்டமும் எனக்கு செல்லாது, முசல்மான்கள் உங்களை காஃபிர் என்று தான் சொல்லுவார்கள். நீங்கள் என்ன இறை நம்பிக்கையற்றவரா ? ஒவ்வொருவரும் பிறரை மட்டம் தட்ட எதோ ஒரு எழவை வைத்திருப்பார்கள், இதுல எவன யோக்கியம் என்று சொல்ல முடியும் ?//

ஹா...ஹா..ஹா... பார்ப்பணர் என்றால் என்ன? பிராமணர் என்றால் என்ன? இரண்டுக்கும் என்ன வித்தியாசம் கொஞ்சம் சொல்லுங்களேன். :-)

அடுத்து 'காஃபிர்' என்ற சொல் அசிங்கமான வார்த்தையோ அருவருப்பான வார்த்தையோ அல்ல. 'இறை மறுப்பாளன்' என்ற தமிழ் வார்த்தையை அரபி படுத்தினால் 'காஃபிர்' என்ற பொருளைக் கொடுக்கும். முஸ்லிமாக இருந்த ஒருவன் ஏக இறைவனை மறுத்து நாத்திகத்துக்கு சென்றால் இஸ்லாமிய பார்வையில் அவனும் 'காஃபிரே'. ஆனால் 'சூத்திரன்' என்பதை வேத புத்தகங்களிலேயே ஏற்றி வைத்திருக்கிறீர்கள். இன்று வரை வேத பாடசாலைகளிலே பயிற்று வித்தும் வருகிறீர்கள். இவ்வாறு இருக்க 'காஃபிரும்' 'சூத்திரனும்' எவ்வாறு ஒன்றாக முடியும்?
//எனவே பார்பனர் கொடுக்கும் சூத்திரப் பட்டமும் எனக்கு செல்லாது//,

உங்களுக்கு இந்த பட்டத்தை கொடுத்த உங்கள் மதம் உங்களின் அனுமதியை கேட்பதில்லை சார். நீங்கள் அனுமதித்தாலும் அனுமதிக்கா விட்டாலும் பிராமணர்கள் பார்வையில் நீங்கள் சூத்திரன்தான். ஏனெனில் வேதத்தின் ஸ்மிருதிகள் அதைத்தான் சொல்கிறது. இன்று வரை அந்த சட்டங்களை போற்றி பாதுகாத்தும் வருகிறீர்கள்

//வஹாபிகள் மிகவும் மதவெறியோடு தான் நடந்து கொள்கிறார்கள், போகிற போக்கைப் பார்த்தால் இவர்களில் ஒருவர் கூட தற்கொலையாளியாக மாறி எங்காவது குண்டு வைப்பார் என்கிற அச்சமும், வருத்தமும் உண்டு, அவர்கள் கொஞ்மேனும் தெளிவடைய மாட்டார்களா என்கிற நப்பாசை தான்.//

இப்படி ஒரு ஆசை வேறு இருக்கிறதா? மாலேகானிலும் ஹைதராபாத்திலும் நீங்களே குண்டு வைத்து கொண்டு முஸ்லிம்களை கைது செய்த விபரம் தெரியாதா? நேர்மையான அதிகாரி ஹேமந்த் கர்கரே வந்ததால் உண்மை வெளி வந்தது. அவரையும் பாகிஸ்தானிய கூலிகளை வைத்து தீர்த்து கட்டியாகி விட்டது. ஆரிய மூளை அல்லவா! எதையுமே கச்சிதமாக செய்து முடிக்கும்.

தற்கொலையையும் அப்பாவிகளை கொல்வதையும் இஸ்லாம் தடுப்பதால் இதனை மேற்கொள்ளும் எவனும் வஹாபியாக இருக்க மாட்டான். ஆர் எஸ் எஸ்ஸாக வேண்டுமானால் இருக்கலாம்..
?

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

@திரு.டோண்டு ராகவன்,

///அட அவ்வளவுதானா உமது புரிதல்?///---இதை நான் சொல்லி இருக்க வேண்டும்..!

///என்னுடைய சாதியை விடச்சொல்லி எந்த ஜாட்டான் எங்களுக்கு கூறுவது?///---இதைத்தான்....இதைத்தான்.... சாதிவெறி.... என்று நான் சொல்லிக்கொண்டு இருக்கேன்..!

அதை உங்களால் விட்டொழிக்க முடியாது....
ஆனால், எங்களால் விட்டொழிக்க முடியும்..!

///இட ஒதுக்கீட்டு பிச்சைக்காக இல்லாத சாதிகளையும் ஏற்பவர் நீங்கள் என்பதுதானே நிஜம்?///

---ஆண்டாண்டு காலமாக எங்களை கீழ் சாதி என்று அடக்கி ஓட்டாண்டி ஆக்கி வைத்து இருந்ததற்கு பிராயச்சித்தம் தான் இந்த முஸ்லிம்கள் கோட்டா. அதையும் சுதந்திரம் அடைந்த பின்னர் தந்திரமாக பின் தங்கிய வகுப்பு என்று பிரித்துப்போட்டு பத்து சதவீதத்தை அபேஸ் பண்ணியது யார்..?

இன்றைய இந்திய முஸ்லிம்களின் நிலை தலித்துகளின் நிலையை விட மோசம் என்று ரங்கநாத் மிஸ்ரா & ராஜேந்திர சச்சார் கமிஷன்கள் இந்திய அளவில் பலவருடம் ஆய்ந்துவிட்டு அறிக்கை சமர்ப்பித்து உள்ளார்கள். அது செயல்படுத்தப்படாமல் பரணியில் கிடப்பில் போடப்பட்டதற்கு காரணம் யார் என்று சொல்லவும் வேண்டுமா..?

இந்த உரிமையை கோரி போராடி வருகிறோம்..!

///சாதிப் பெயர்களை அளித்தது இசுலாமியர்கள்தானே. அந்தரத்திலிருந்தா எடுத்து கொடுத்தது அரசு? இப்பிரிவினர் இசுலாமியரிடம் இல்லை என்பதா உங்கள் புரிதல்? ////

---உங்களுக்கு ஒன்று சொல்கிறேன்...

எனது சாதி 'இன்னதுதான்' என்று எனது 15-வது வயதில்... முதலில் சாதியை எனக்கு எழுதியவர் பட்டுக்கோட்டை வட்டாட்சி அலுவலர்தான். பெயரை பார்த்துவிட்டு என்னிடம் 'முஸ்லிமா' என்று கேட்டார்.
'ஆம்' என்றேன்.
'ராவுத்தரா மறைக்காயரா என்ன சாதி' என்றார்.
'தெரியவில்லை' என்றேன்.
அப்புறம் அவரே யோசித்து ஒரு பெயரை (?) தெரிவு செய்துவிட்டு சொன்னார். அதற்கு முன்னர் அந்த சாதி பெயரை என் வாழ்நாளில் நான் கேட்டதே கிடையாது..!

ஆகவே, எனது சாதி(?)யை எனக்கு 'இன்னதுதான்; என நிர்ணயித்தது அரசுதான்..! அந்த அரசு அலுவலர்தான்..!

எனது கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் அதை நான் உபயோகப்படுத்த அவசியமே இல்லாமல் இறைவன் எனக்கு அருள்புரிந்து விட்டான்..! இறைவனுக்கே புகழனைத்தும்.

///எங்களுக்குத்தான் இட ஒதுக்கீடே இல்லையே///

---ஹா...ஹா....ஹா.... இதைத்தான் "தவளை தன் வாயால் கெடும்" என்றேன்....


15% இருக்கும் முஸ்லிம்கள் அரசு வேலையில்... சுமார் 1 % - 4 % இருக்கின்றனர்..! அதனால் முஸ்லிம்கள் போராடுகிறோம்..!

ஆனால்....


சுமார் 3.5% இருக்கும் நீங்கள்... அரசு வேலைகளில்... 35 % - 65% இருக்கீகளே ஐய்யா.............

அப்புறம்....


உங்களுக்கு இடஒதுக்கீடு கோரி போராட நீங்கள் என்ன கேனையர்களா...?

மரைக்காயர் said...

//எங்களுக்குத்தான் இட ஒதுக்கீடே இல்லையே, அது இல்லாமலே தலை நிமிர்ந்து முன்னேறுகிறோமே. என்னுடைய சாதியை விடச்சொல்லி எந்த ஜாட்டான் எங்களுக்கு கூறுவது?

டோண்டு ராகவன்//

பெரீவரே, தலை நிமிர்ந்து முன்னேறுகிற உங்கள் சாதியினர் பின்னர் எதற்காக சங்கம் அமைத்து 15% இட ஒதுக்கீடு கேட்டு கோரிக்கை வைத்தார்களாம்? உங்களுக்கு நினைவில்லை என்றால் இந்தச் சுட்டியில் பார்க்கவும் ( http://tamil.oneindia.in/news/2005/12/27/brahmins.html ) ஒருவேளை அவாளெல்லாம் வேற சாதியோ?

நல்லடியார் said...

எல்லாவற்றையும்விட, இந்தத் திருமண உறவில் குறைகாண்பதாக இருந்தால் நான்கு மனைவிகளுள் ஒருவரேனும் குறைகண்டிருக்கக்கூடும். ஆனால், அத்தகைய நிகழ்வுகள் எதுவும் நடக்கவில்லை. சக்களத்திகளே விரும்பிச் சகித்துக் கொண்டிருந்த உத்தம நபியின் உன்னத இல்லற வாழ்வைக் குறைசொல்லும் தகுதி யாருக்கும் இல்லை.

suvanappiriyan said...

சலாம் நல்லடியார்!

நீண்ட நாட்களுக்கு பிறகு வருகை. சௌக்கியமா...