Followers

Thursday, July 18, 2019

அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் | பகுதி – 13

அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் |
பகுதி – 13
நீர்மேல் குமிழிபோல் உருவாக்கப் பெற்ற இந்த ‘ஆரிய நாகரிகம், ஆரியப் படையெடுப்பு’ என்ற குமிழியை ‘மனித உற்பத்தி நூல்’ வல்லவர்கள் தங்கள் ஆராய்ச்சியால் சிதைத்துவிட்டார்கள். எப்படியென்றால் ஆசியாவிலும் ஐரோப்பாவிலுமுள்ள மக்கள் பல்வேறு வகுப்புகளைச் சேர்ந்தவர்களே என்றும், ஆரியர் ஒரு சிறு வகுப்பார்தான் என்றும் மனித உற்பத்தி ஆராய்ச்சியாளர்கள் கூறினார்கள்.
இதனால் ஆசியாவிலும் ஐரோப்பாவிலும் பரவியிருந்த மாபெரும் ஆரிய வகுப்பினர் ஒரு சிறிய கூட்டமாகக் குறைந்து விட்டார்கள். ஆரியரின் பூர்வீக நாட்டைப் பற்றி பாஸ்கி என்ற ஆராய்ச்சியாளர் பால்டிக் கடலோரம் என்றும், இத்தாலி ஆசிரியர் செர்ஜி ஆசிய கண்டத்தைச் சேர்ந்தவர்களென்றும், அவர்கள் ஐரோப்பா மீது படையெடுக்கும் போது காட்டுமிராண்டிகளாயிருந்தார்கள் என்றும் கூறுகிறார். ஆனால் மனித உற்பத்தி சாஸ்திர வல்லுநரான டாக்டர் ஹாடன், ஐரோப்பிய மக்களின் பூர்வ வரலாற்றைப் பற்றி 1991-ல் எழுதிய நூலில் இந்த “ஆரியர்’’ என்ற பேச்சையே எடுக்கவில்லை. எனவே ஐரோப்பாவைப் பொறுத்தவரை ‘ஆரிய நாகரிகம், ஆரியப் படையெடுப்பு’ என்ற கற்பனை புதைக்கப்பட்டு விட்டதெனலாம்.
ஒருவருக்கொருவர் கொள்வினை கொடுப்பினை இல்லாத எண்ணிறந்த வகுப்புகளைக் கொண்ட தற்கால இந்து சமூகத்தில் உயர்ந்த ஜாதிகள் எனப்படுவோர் தங்களை ஆரியர் என்று கூறிக்கொள்கிறார்கள். ஆரியர் படையெடுத்து வந்து இந்திய மக்களை நாகரிகப்படுத்தினார்களென்று ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்கள் கற்பனை செய்து கூறிய போது, அது தங்களுக்குப் பெருமை தருவதென்று இந்த மேல் ஜாதிக்காரர்கள் அந்தக் கற்பனையை உற்சாகத்துடன் ஆதரிக்க முற்பட்டனர். இப்படித் தங்களை ஆரியர் என்று சொல்லிக்கொள்கிற இந்த மேல் வகுப்பினர் தங்கள் நரம்புகளில் சாதாரணச் சிவப்பு ரத்தமல்ல, நீல நிறமான ஆரிய ரத்தமே ஓடுகிறதென்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இது உண்மையா என்பதைத் தற்கால முறைப்படி ஆராய்ச்சி செய்யலாமே? என்றால் மற்றெல்லாரையும் விட இந்த ‘மேல் ஜாதிக்காரர்கள்’தான் அவ்வித ஆராய்ச்சியைப் பலமாய் ஆட்சேபிக்கிறார்கள்.
வேதங்களிலே, ஆரியர் இந்தியா மீது படையெடுத்து வந்ததாக ஒரு குறிப்பேனும் காணப்படவில்லை. மேலும் தஸ்யூக்கள் அதாவது திராவிடர்கள் பட்டணங்களிலும் ஊர்களிலும் மரத்தினால் கட்டப்பெற்ற மாடமாளிகைகளில் வாழ்ந்திருந்தனர். இரதங்கள், குதிரைகள், ஆடு, மாடுகள் முதலியன அவர்களிடம் ஏராளமாயிருந்தன. ஆரியர்கள் அதைப்பற்றிப் பொறாமைப்பட்டு, திராவிட நகரங்களைக் கொள்ளையடிக்க நினைத்ததுண்டு என்று வேதங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
திராவிட நாட்டு நிலையை உணராதாருக்கு 1940-ல் திருப்பதியில் நடைபெற்ற 10-வது அகில இந்திய கீழ்நாட்டுக் கலை மாநாட்டின் வரவேற்புக் குழுத்தலைவராக இருந்த, திருவாளர் T.A. இராமலிங்க செட்டியார் அவர்களின் சொற்பொழிவு விளக்கமளிக்கும் என்ற நம்பிக்கையுடன் அவர்களின் விரிவுரையைக் கீழே பிரசுரிக்கின்றோம்.
“ஜெர்மனியில் இன்று ஆரியர்கள் உயர்ந்தவர்கள் என்றும், உலகத்துக்கே அவர்கள் நாகரிகத்தை ஏற்படுத்தப் போவதாகவும், மற்றவர்கள் தங்களுக்குக் கட்டுப்பட்டவர்களென்றும் சொல்லி வருவது யாவர்க்கும் தெரியும். இதனால் மிகவும் பயங்கர முடிவு ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை .
இந்து சமவெளிப் பிரதேசத்திலும், மொஹஞ்சதாரோ பிரதேசத்திலும் வெட்டி எடுக்கப்பட்ட பண்டைக்காலத்துச் சின்னங்களிலிருந்து, ஆரிய நாகரிகத்திற்கு முன் ஒரு நாகரிகமிருப்பது நன்கு விளங்கும்.
மேற்கு ஆசியாவில், மத்திய தரைக்கடல் ஓரமாகவும் வட இந்தியாவிலும்தான் பண்டைய நாளையில் சிறந்த நாகரிகமடைந்த மக்களிருந்து வந்தனர் என்று சொல்லப்படுமானால், இந்தியாவில் ஆரியர்கள் வரவால் நாகரிகம் புகுத்தப்பட்டதென்று சொல்வதில் ஏதேனும் அர்த்தம் இருக்க முடியுமோ? என்பது யோசிக்க வேண்டியதாகும்.
நாகரிகம் தெற்கேயிருந்து வடக்கு நோக்கியோ, அல்லது கிழக்கிலிருந்து மேற்குத் திக்கை நோக்கியோ அல்லது அதற்கு நேர் எதிராகவோ பரவியிருக்கக்கூடும்.
பழைய கால நிர்ணய நூல் பிரகாரம் பார்த்தால், ஆரியர்கள் இந்தியாவுக்கு மிகப் பிந்திய காலத்திலே வந்திருக்கிறார்கள் என்று சொல்ல வேண்டியதாயிருக்கிறது.
தென்னிந்தியாவின் பழக்க வழக்கங்களை நம்பினால் தெற்கே ஓர் உபகண்டமிருந்ததாகவும், அதன் பெரும் பாகத்தைக் கடல் கொண்டுவிட்டதாகவும். அப்பாகங்களில் உலகிலே தலை சிறந்ததாகக் கருதப்படும் நாகரிகம் இருந்து வந்ததாகவும் தெரிய வருகிறது.
தமிழ்க் கலைகள், மக்கள் சுதந்திரத்தோடு இருந்து வந்ததாகவும், மக்கள் எத்தகைய துன்பத்தையும் கண்டறியாதவர்கள் என்றும் கூறுகின்றனர்.
பழைய பெருமையைக் குறித்துப் பேசுவதில் பலனில்லை என்று நாம் கருதுகிறோம்.
நமது முன்னோர்கள் கலையாச்சாரத்தைக் குறித்தோ, மொழியைக் குறித்தோ சிறிதும் கவனம் செலுத்தியதில்லை தெற்கே எங்கும், பழைய நாகரிகத்தைக் கண்டறியக் கூடிய நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஆரியர்கள்தான் குரு, சமஸ்கிருத மொழிதான் உயர்ந்த மொழி என்று கொண்டதால்தான், மற்றவை மூலமாக ஏதாவது கற்றுக் கொள்ளலாம் என்பது அடியோடு புறக்கணிக்கப்பட்டது.
இதைக் குறித்து ஏதோ, அங்கொருவர் இங்கொருவர் ஆட்சேபிக்கிறார்களேயல்லாது, சமீப காலம் வரை யாரும் பலமாகத் தங்கள் ஆட்சேபணைகளைத் தெரிவிக்கவேயில்லை. இந்தியாவில் உள்ள பலதிறப்பட்ட ஜாதிகள் கலந்து விட்டனவென்றாலும், ஜாதியில் உள்ள உயர்வு தாழ்வு ஒரு சிலரைத் தாங்கள்தான் சுத்தமான ஆரிய வம்சத்தினர் என்றும், சமஸ்கிருதம்தான் உயர்ந்த மொழியென்றும் மற்ற மொழிக்கும், கலைக்கும், நாகரீகத்திற்கும் தாங்கள்தான் பாதுகாப்பாளர் என்றும் சொல்லும்படி செய்து வருகின்றது.
இந்த நிலையை இப்படியே விட்டுக்கொண்டு போனால், இதனால் வரும் பலன் மிக்க பயங்கரமாயிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை .
தென்னிந்தியாவில் சமஸ்கிருதத்தைப் புகுத்தச் செய்த முயற்சிகள் எல்லாம், பிரிட்டிஷ் ஆட்சி நிலைக்கும் வரை வெற்றி பெறவில்லை.
பிரிட்டிஷ் ஆட்சி இந்நாட்டில் வேரூன்ற ஆரம்பித்த பிறகுதான், சமஸ்கிருத மொழியாளர்கள் (ஆரியர்கள்) நிர்வாகிகளாகவும், வழக்கறிஞர்களாகவும், நீதிபதிகளாகவும் வரமுடிந்தது; அவர்களால், தங்கள் ஸ்மிருதியைப் புகுத்த முடிந்தது. அதன் பின்தான் ஸ்மிருதியில் கண்டதே சட்டமாயிற்று.
இதனால் நான் ஏதாவது துவேஷம் கற்பிப்பதாகக் கொள்ளலாகாது.
இந்நாட்டின் பழக்கவழக்கங்கள், ஒழுங்குமுறைகள் என்னவென்பது அவர்களுக்குத் தெரியவில்லை. சில சமயங்களில் தாங்கள் புகுத்தும் முறைகள் சிறந்தவை என்று நம்பி விடுவதும் உண்டு.
ஸ்மிருதி புகுத்தப்பட்டதினால் வந்த பலனை அறிய ஒரே ஒரு உதாரணம் போதும் என்று கருதுகிறேன். அதாவது சொத்துக்கு உரிமை கொண்டாடுவதற்குச் சிரார்த்தம் என்பதே என்ன என்று தெரியாத மக்களுக்குக் காட்டுப் பிண்டம் (சிரார்த்தத்தில் ஒரு வகைச் சடங்கு) எடுப்பதை ஆதாரமாக வைத்து நீதி வழங்கப்படுகிறது. இன்னும் வினோதம் என்னவென்றால், ஒரு பார்ப்பனன் ஒரு பார்ப்பனரல்லாத பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டால் செல்லத் தக்கதென்றும், ஒரு பார்ப்பனரல்லாதான் ஒரு பார்ப்பனப் பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டால் செல்லத்தகாதென்றும் கூறுவதாகும்.
(தொடரும்)


5 comments:

vara vijay said...

Good suvi. What about ARABIA MAYAI. They also display the same mentality.

Dr.Anburaj said...


ஆரிய ஆதிக்கம் ஒழிக்கப்பட வேண்டும்.ஆனால் அரேபிய வல்லாதிக்கம் அரேபிய அடிமைத்னம் கொண்டாடப்பட வேண்டும். இதுதான் சுவனப்பிரியன் நிலைப்பாடு.

அண்ணாத்துரை ஒரு நாலாம் தர எழுத்தாளா். அவரைப்பற்றி ஒரு கருத்தை பதிவு செய்யக் கூட அவருக்கு தகுதியில்லை. எனவே அண்ணாத்துரை முதலியாா் குறித்து எந்த பதிவையும் செய்ய விரும்பவில்லை.

Dr.Anburaj said...

தமிழ் ஹிந்துஎனற் இணையத்தில் உள்ள ஒரு கட்டுரை.
திராவிட அரசியலின் மூன்று பரிமாணங்கள்
இந்த முறை ராஜராஜன் சோழன் குறித்து அவதூறாகப் பேசிய இயக்குனர் பா.ரஞ்சித்தை குறிவைத்து திராவிட சிந்தனையாளர்கள் அடிப்பதை நீங்கள் கவனிக்கலாம். ரஞ்சித் தமிழக அரசியல் களத்தால் கைவிடப்பட காரணமென்ன என்பது தமிழக அரசியலின் வேர் ஒளிந்திருக்கும் இடத்தை கவனித்தால் மட்டுமே புரியும்.

நீதிக்கட்சி – திராவிடர் கழகம் – திமுகழகம் இது மூன்றினுடைய பரிமாணங்களை ஆழமாக உள்வாங்காதவர்களே இவற்றிற்கு ஒரே நிறம் தருவார்கள். ஆனால் இவை உடைத்து பகுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

நீதிக்கட்சி இங்கு சொல்ல வந்த அரசியல் என்ன? பிராமணர் அல்லாத உயர்ஜாதிகளிடம் மட்டுமே அதிகாரம் இருக்க வேண்டும் என்பதுதான் அதன் நோக்கம். அது ஒரு போதும் இந்து மத எதிர்ப்பு, தீண்டாமை ஒழிப்பு போன்றவற்றை முன்னிறுத்தியது இல்லை. காங்கிரஸ் தீண்டாமை ஒழிப்பு, ஆலயநுழைவு, சமபந்தி போஜனங்களை வெகு பிரசித்தமாக பிரச்சாரம் செய்து செயல்படுத்தியும் காட்டி வந்த நேரத்தில் நீதிக்கட்சியின் ஆட்சி நடந்து கொண்டிருந்தது. அதைப்பற்றி அதன் தலைமை பீடத்தின் கருத்தென்ன இருந்தது? அதனுடைய பிராமண எதிர்ப்பு என்பது கூட தங்களை புரட்சியாளனாக காட்டிக் கொண்டு சமூக அடுக்கில் கீழ்நிலையில் இருந்தவர்களை அதிகாரத்திடம் நகர்த்தவிடாமல் தாங்கள் கைப்பற்றிக் கொள்வது மட்டும்தான் நோக்கம்.

நீதிக்கட்சி மெல்ல தேய்ந்து அழிந்து போகும் நேரத்தில் பெரியார் திராவிட இயக்கத்தை உண்டு செய்கிறார். பெரியார் அதிதீவிர இந்து மத வெறுப்பை பரப்ப ஆரம்பிக்கிறார். பிராமணர் அல்லாதார் என்கிற ஆயுதம்தான் முக்கியம் என்பதை தீவிரமாக நம்பினார். அதற்கு ஒரே காரணம் அதிகாரம் பிராமணர் அல்லாத, சமூக அடுக்கில் மேல்-இடைநிலை ஜாதிகளிடம் மட்டுமே அது இருக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து அவர் பிராமணிய எதிர்ப்பை மட்டுமே முன் வைத்தார். பெரியார் கலப்பு திருமணத்தால் எந்த பலனும் கிடையாது நாமெல்லோரும் சூத்திரர் எனவே பிராமணருக்கும் நமக்கும் இடையில் நடக்கிற திருமணம்தான் கலப்புத் திருமணம் ஆனால் அதனாலும் ஜாதி ஒழியாது என்று சொன்னார். பிராமணர்கள் அதே மரியாதையோடு இருக்கிறார்கள் கோவிலில், ஆனால் எங்களையும் பஞ்சமரையும் ஒன்றென ஆக்கிவிட்டார்கள் என்று வருத்தப்படுகிறார்.

இன்றும் பெரியாரியம் யாருக்கு ஒரு முகமூடி என்பதை அரசியல் எதார்த்தம் சொல்லும். பிற்படுத்தப்பட்ட எழுச்சியும், அதிகாரமும் பட்டியல் ஜாதிகளுக்கு உறுத்தக்கூடாது என்ற ஏற்பாடு மட்டுமே பிராமண வெறுப்பு பேசுகிற திராவிடத்தின் மைய நோக்கம்.

Dr.Anburaj said...

அதற்காக பெரியார் மீண்டும் மீண்டும் சொன்னது

“தமிழர்களின் வரலாறே பார்ப்பன அடிமை வரலாறு ..
திருவள்ளுவன், இளங்கோ, தொல்காப்பியன் எல்லோருமே பார்ப்பன அடிமை.

திருக்குறள் தங்க தட்டில் வைக்கப்பட்ட மலம்,

சிலப்பதிகாரம் பெண்ணடிமை நூல், தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி என்று ஏகவாதங்களை வீசினார். தமிழர்களுக்கு ஒரு பெருமை மிகு வரலாறு இருப்பதையோ அல்லது அவர்கள் அதை பேசுவதையோ வெறுத்தார். அது அவர்களை சிந்திக்க வைத்தால் இந்து மத வெறுப்பையும்,பிராமண விரோதத்தையும் கட்டமைத்து தான் நினைக்கிற அரசியலை எழுப்ப முடியாது என்று நினைத்தார்.

ஆனால் திமுக இதில் முற்றிலும் வேறான சிந்தனை கொண்டது. நீதிக்கட்சியின் ஐரோப்பிய சிந்தனை, திராவிட கழகத்தின் ஒருவகையான மறுத்தல் வாதத்தை விட்டு அது விலகி நடந்தது.

சோழன், பாண்டியன், சேரனை இணையற்ற திராவிட பெருமன்னர்களாக முன்னிறுத்தியது. திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை, தொல்காப்பியம் ஆகியவற்றை தன் மனம் போன போக்கில் நாத்திக நூல், தமிழர் மானம் என்றெல்லாம் யாருமே படிக்க மாட்டார்கள் என்ற தீர்க்கமான சிந்தனையில் வலிமையாக பிரச்சாரம் செய்தது. கம்பனின் ராமனை மட்டும் புறக்கணித்தது.

அண்ணா மிக நுணுக்கமாக மறைமலையடிகளின் தனித்தமிழ் சைவ அரசியலை உள்ளே இழுத்தார். “மறைமலையடிகள் சமயத் துறையில் – சைவத்தில் நம்பிக்கை வைத்திருந்தாரே உங்களுக்கு அது சம்மதமா? என்று சிலர் கேட்கக்கூடும். அன்பும் அருளும் சைவம் என்றால் – நான் மிகச் சிறந்த சைவன். ஆண்டவன் ஒருவனே என்பதுதான் சைவம் என்றால் – நான் மிகச் சிறந்த சைவன்” (மேடைப் பேச்சு – 24.08.1958 – #அண்ணா)”

ஆக அன்று திமுக இன்று சீமான் பேசுவது போல இன்னும் சிறப்பாகவே பேசியது. தமிழர் ஆட்சி ஒப்பற்ற பேராட்சி ஆனால் பிராமணியம் சதி செய்து ஒழித்துவிட்டது என்று முன் வைத்தது. இன்று அதை மாற்றி சீமான் தெலுங்கர்கள் ஒழித்துவிட்டார்கள் என்கிறார். ஆனால் வரலாறு என்னவோ யாராவது தண்ணீர் தரமாட்டார்களா என்று சாவின் நொடியில் இழுத்துக் கொண்டிருக்கிறது இந்த நொடி வரை😁

நீலம் சஞ்சிவி ரெட்டியினை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தினால் காமராஜர் உட்கட்சி பிரச்சனையில் விவிகிரியை நிறுத்தினார் இந்திரா காந்தி.ராஜாஜி கூட கடுமையாக கண்டித்தார் அதை. அப்போது இந்திரா வேட்பாளரை முதலமைச்சர் கருணாநிதி ஆதரித்தார். அப்போது பெரியாரிடம் காமராஜர் சொன்னதாக சொல்வார்கள் – “கங்கை வென்றான்,கிடாரம் வென்றான்” என்பார்களே இதுதானா? அது என கேட்டாராம்

Dr.Anburaj said...

காரணம் திமுக எல்லா மேடைகளிலும் திராவிட தோள்களை பார்த்தீர்களா? சேரன் செங்குட்டுவன் வீரத்தை கேளீர், ஈழம் சென்று கங்கை வென்று, கிடாரம் கொண்ட சோழனின் வீரத்தை பாரீர் என்றெல்லாம்தான் பேசிக் கொண்டிருந்தது. கருணாநிதியின் துண்டு ஒரு ராஜாவை போல தரையில் கிடக்கும். அவர் தன்னை ஆரூர் சோழன் என்று நம்பினார். தன்னை ராஜராஜன் என்று அவர் வலுவாக நம்பினார். ஆ.ராஜா தஞ்சை கோவில் விழாவிலேயே ‘என் தலைவர் ராஜராஜசோழன், தளபதி ஸ்டாலின் ராஜேந்திர சோழன்’ என்றே பேசியிருக்கிறார்.

நீதிக்கட்சியின் ஐரோப்பிய சிந்தனை முறை, திராவிடர் கழகத்தின் மறுப்பரசியல் வழியில் திமுக செல்லவில்லை; அது தமிழின் விழுமியங்களை போலியாக திரித்து தங்கள் வசதிக்கு ஏற்றாற்போல நம்பியது. அதை பரப்பியது. நீதிக்கட்சி இந்து மதத்திற்கு விரோதமாக இல்லை, ஆனால் தி.க/திமுகவின் இந்து மத விரோத கருத்துகள் மிஷனரி, இஸ்லாமிய மதமாற்றும் அரசியலுக்கு பயன்பட்டன. பிற்படுத்தப்பட்ட அதிகார எழுச்சி, ஆபிரஹாமிய மதமாற்ற குழுக்கள் மட்டுமே இன்றும் பெரியார் என்கிற முகமூடியை வேறு வேறு காரணத்திற்காக நீட்டித்துக் கொண்டிருக்கின்றன.

இந்த அரசியலை அதன் மைய வேரிலிருந்தே வந்த சீமான் தெலுங்கர் எதிர்ப்பு என்றும், ரஞ்சித் திராவிட-தமிழ்தேசிய எதிர்ப்பு என்றும் உடைப்பது மிகப்பெரிய அச்சுறுத்தலை திராவிட சித்தாந்திகளுக்கு ஏற்படுத்தியுள்ளது. திருமாவளவன் திராவிடத்தோடு சமரசம் செய்துகொள்வார். அவர் இவர்களைப் போல பிராமணியம், கொஞ்சநாளாக ராமதாஸ் என்று பேசி கடந்துவிடுவார். ஆனால் ரஞ்சித் நீதிகட்சியில் இருந்து துவங்குவதை இவர்களால் ஏற்க முடியவில்லை.

ரஞ்சித்திடம் பெரியார் முகமூடியை போடு இல்லையென்றால் நீ ஜாதி வெறியன் என்ற லாவணியை பாட ஆரம்பித்திருக்கிறார்கள். இது மெல்ல விவாதமாவது தமிழகத்தின் தலையாய தேவை என்பது உண்மை. ஆரோக்கியமாக மாற்றத்தை நோக்கி நகர்வோம். பார்ப்போம்.