(1658-ஆம் ஆண்டு ஔரங்கசீப் ஹிந்துஸ்தானத்தின் சக்ரவர்த்தியாக முடிசூட்டப் பெற்றார். அல்லது முடிசூட்டிக் கொண்டார். ஔரங்கசீபிற்கு இளம் வயதில் ஆசிரியராக இருந்த முல்லா சாஹேப் என்பவருக்கு, ஔரங்கசீப் எழுதிய கடிதம் இது. ஔரங்கசீப் சக்ரவர்த்தியாக முடிசூட்டப்பட்ட பிறகு முல்லா சாஹேப், ‘தனக்கு ஔரங்கசீபின் அரச சபையில் கௌரவ பதவியும், சன் மானமும் தர வேண்டும்’ – என்று கோரியிருந்தார். அதற்குப் பதில்தான் ஔரங்கசீபின் இந்தக் கடிதம்.) – துக்ளக் / 30.04.2008
"கற்றவரே!
நீர் என்னிடமிருந்து எதிர்பார்ப்பது என்ன? நான் உங்களை என்னுடைய அரசவையில் ஒரு முக்கிய பதவியில் அமர்த்தவேண்டுமென்று உங்களால் நியாயமாக எதிர்பார்க்க முடியுமா? ஒன்று சொல்கிறேன், நீங்கள் எனக்கு எப்படிக் கல்வி போதித்திருக்க வேண்டுமோ, அப்படிச் செய்திருந்தால் உங்களுக்கு நான் பதவியைத் தருவது போன்ற நியாயமான காரியம் வேறு எதுவுமே இருக்க முடியாது.
ஏனென்றால் நான் ஒரு விஷயத்தை நிச்சயமாக ஒப்புக்கொள்வேன். ஒரு குழந்தை தன்னுடைய தந்தைக்கு எவ்வளவு கடமைப் பட்டிருக்கிறதோ, அந்த அளவுக்குத் தனக்கு முறையான கல்வியைப் போதித்த ஆசிரியனுக்கும் கடமைப்பட்டிருக்கிறது. ஆனால், நீங்கள் எனக்குப் போதித்த முறையான கல்வி என்பது எங்கே இருக்கிறது?
ஐரோப்பாவை ஒன்றுமில்லாத ஒரு சூன்யப் பிரதேசம் என்று போதித்தீர்கள், போர்ச்சுகீஸிய நாட்டு மாபெரும் மன்னரைப் பற்றியோ, அவருக்கு அடுத்த ஹாலந்து மன்னரைப் பற்றியோ, இங்கிலாந்து மன்னரைப் பற்றியோ, நீர் எமக்கு ஒரு விபரமும் கூறவில்லை, பிரான்ஸ் முதலிய ஐரோப்பிய நாட்டு மன்னர்களை எல்லாம் நமக்கு அடங்கிய, மிகச் சிறிய குறுநில மன்னர்கள் என்று கூறினீர்கள். ஹிந்துஸ்தான் மன்னர்களின் பெயரைக் கேட்டாலே உலகத்தில் எந்த நாட்டு மன்னனும் நடுங்கினான் என்று கதை கட்டினீர்கள். எங்கள் பரம்பரையைப் புகழ வேண்டும் என்பதற்காக, உலகத்தில் உள்ள மற்ற நாடுகள் எல்லாம் நமக்கு அடங்கியவையே என்று கூறினீர்கள். ஆஹா…! வியந்து பாராட்டப்பட வேண்டிய சரித்திர அறிவு!
எனக்கு நீங்கள் என்ன கற்றுக் கொடுத்திருக்க வேண்டும்? – உலக நாடுகளில் எல்லாம் என்ன நடக்கிறது? அந்த நாடுகளின் பலம் என்ன? அவர்களின் போர் முறைகள் என்ன? மதக்கோட்பாடுகள் என்ன? ராஜதந்திரங்கள் என்ன? – இவற்றை எல்லாம் எனக்கு நீங்கள் கற்றுக் கொடுத்திருக்க வேண்டாமா? உண்மையான சரித்திரத்தை எனக்குக் கற்றுக் கொடுத்து, பல நாட்டு மன்னர்களின் வாழ்வையும் தாழ்வையும், அவர்களது எழுச்சியையும் வீழ்ச்சியையும் நான் உணரும்படி செய்திருக்க வேண்டாமா? எவ்விதமான தவறுகளால் அல்லது எதிர்பாராத நிகழ்ச்சிகளால், அங்கே புரட்சிகள் தோன்றின – அந்த சாம்ராஜியங்கள் அழிந்தன – என்றெல்லாம் நீங்கள் எனக்குச் சொல்லிக் கொடுத்திருக்க வேண்டாமா?
உங்களிடமிருந்து என்னுடைய முப்பாட்டனார்களின் பெயர்களைக்கூட அறிந்து கொள்ளவில்லை. ஹிந்துஸ்தான் சாம்ராஜியத்தை ஸ்தாபித்த புகழ்பெற்ற என்னுடைய முன்னோர்களைப் பற்றிக்கூட உங்களிடமிருந்து நான் ஒன்றும் தெரிந்து கொள்ளவில்லை. இந்த மாபெரும் சாம்ராஜியத்தை ஸ்தாபித்த அவர்களுடைய சரித்திரத்திற்கும், நீங்கள் எனக்குக் கற்பித்ததற்கும் – அவ்வளவு பெரிய இடைவெளி இருந்திருக்கிறது.
ஒரு மனிதன் தன்னுடைய இளம் வயதில் நல்ல விஷயங்களைக் கற்றுக் கொண்டால், அந்த நினைவு வாழ்நாள் முழுவதும் நிலைத்து, அவனைப் பெரும் சாதனைகளைச் செய்யத் தூண்டும் என்பது உங்களுக்குத் தெரியாது போலும்!
காரண காரியங்களை மட்டுமே பார்க்கும் மனப்பக்குவத்தை ஏற்படுத்தக் கூடிய தத்துவங்களை நீங்கள் எனக்குப் போதித் திருந்தால் – மனதை ஒரு நிதானத்தில் அடக்கி வைக்கப் பயன்படும் அரிய தத்துவங்களை எனக்கு நீங்கள் போதித்திருந்தால் – அதிர்ஷ்டத்தினால் தாக்கப்பட்டு, செல்வத்தில் திளைத்தாலும் சரி – துரதிஷ்டத்தினால் தாக்கப்பட்டு தோல்வியைத் தழுவினாலும் சரி – இரண்டுக்குமே மயங்காத மனோதைரியத்தை அளிக்கக் கூடிய தத்துவங்களை நீங்கள் எனக்குப் போதித்திருந்தால் – நாம் யார்? உலகத்தின் மேன்மை என்ன? எப்படி இந்த பூமி இயங்குகிறது? – என்பதை எல்லாம் நான் உணர்ந்து கொள்ள உதவி செய்யும் வகையில் நீங்கள் எனக்குக் கல்வி போதித்திருந்தால் – இப்பொழுதும் சொல்கிறேன் – இந்த மாதிரி விஷயங்களையும் தத்துவங்களையும் நீங்கள், எனக்கு கற்றுக் கொடுத்திருந்தால், நான் உங்களுக்கு மிகவும் கடமைப்பட்டவனாக இருந்திருப்பேன். அலக்ஸாண்டர், அவனுடைய குரு அரிஸ்டாடிலுக்கு எவ்வளவு கடமைப்பட்டிருந்தானோ, அதைவிட உங்களுக்கு நான் கடமைப்பட்டிருப்பேன். அலெக்ஸாண்டர், அரிஸ்டாடிலுக்குச் செய்ததற்கும் மேலாக உங்களுக்குச் செய்திருப்பேன், நன்றி காட்டியிருப்பேன்.
சதா என்னை முகஸ்துதி செய்து கொண்டே இருந்ததற்குப் பதிலாக, ராஜபரி பாலனத்துக்குத் தேவையான விஷயங்களை எனக்கு நீங்கள் கற்றுக் கொடுத்திருக்க வேண்டாமா? குடிமக்களுக்கு அரசன் செய்யவேண்டிய கடமைகள் என்ன? அரசனுக்குக் குடிமக்கள் செய்யவேண்டிய கடமைகள் என்ன என்பதை எல்லாம் சொல்லிக் கொடுத்திருக்க வேண்டாமா? என் வாழ்க்கைப் பாதையில் ஒரு கட்டத்தில் என்னுடைய பதவிக்காகவும், உயிருக்காகவும் கூட, என்னுடைய உடன் பிறந்த சகோதரர்களுடனேயே நான் வாள் எடுத்துப் போரிட நேரிடும் என்பதையும் உணரும் அளவுக்கு, நீங்கள் போதித்த கல்வி அமைந்திருக்க வேண்டாமா?
ஒரு நகரத்தை எப்படிக் கைப்பற்றுவது? ஒரு போர்ப் படையை எப்படி நடத்திச் செல்வது – என்பதை எல்லாம் நான் அறிந்து கொள்வதில் நீங்கள் அக்கறை காட்டினீர்களா?
பயனுள்ள விஷயங்களை ஏதாவது நான் இப்போது அறிந்து வைத்திருந்தால், அதற்காக நான் மற்ற பலருக்குக் கடமைப்பட்டிருக்கிறேன் – நிச்சயமாக உமக்கல்ல!
போங்கள்! நீங்கள் எந்தக் கிராமத்திலிருந்து வந்தீர்களோ, அந்தக் கிராமத்திற்கே போய் சேருங்கள்! நீங்கள் யார்? எங்கிருந்து வந்தீர்கள்? என்ன ஆனீர்கள்? என்பதை யெல்லாம் எவருமே தெரிந்து கொள்ளவேண்டாம்."
- ஔரங்கசீப்
---------------------------------------------------------------
ஒளரங்கஜேப் அவர்கள் தனது கைகளாலேயே எழுதிய புனித குர்ஆனின் பிரதிகளில் ஒன்றைத்தான் நாம் பார்க்கிறோம்.

http://en.wikipedia.org/wiki/File:Aurangzeb_Handwritten_Quran.jpg
---------------------------------------------------------------
ஒளரங்கஜேப்பின் ஆட்சி காலத்தில் நமது நாடு ஆப்கானிஸ்தான் வரை எல்லையாக இருந்தது. அந்த அளவு நமது நாட்டை விரிவாக்கம் செய்து ஒரே குடையின் கீழ் ஆட்சியைக் கொண்டு வந்தார். ஆனால் இன்று நாமோ ஒவ்வொரு பகுதியாக இழந்து வருகிறோம். ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஷ் என்று அனைத்தும் இன்று நம் கையை விட்டு சென்று விட்டது.

http://en.wikipedia.org/wiki/Aurangzeb
அகண்ட பாரதத்தை தனது வாழ்நாளில் பல போர்களை சந்தித்து உருவாக்கிய ஒளரங்கஜேப்புக்கு: நமது நாட்டை வெகுவாக நேசித்து கிட்டதட்ட ஐம்பது ஆண்டு காலம் ஆட்சி செய்த ஒரு மன்னருக்கு நமது பாடநூல்கள் தரும் விளக்கம் இவர் ஒரு மத வெறியர்.
அந்தமான் சிறையில் வெள்ளையர்களுக்கு மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்து 'இனி ஆங்கிலேயர்களை எதிர்த்து எந்த கூட்டமோ கோரிக்கையோ வைக்க மாட்டேன்' என்று மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்த சாவர்கருக்கு நமது பாராளுமன்றத்தில் அவரது புகைப்படத்தை திறந்து மரியாதை செய்கின்றனர். இது தான் நமது பாரதம்.